இரு வடிவான இருப்பு பல வகையான எழுத்து

பிரேம், பிரேதா என இரு எழுத்துருவம் கொண்ட தமிழின் பின்நவீனத்துவ படைப்பாளியுடன்
ஒரு கலைந்துரையாடல்
(கலைந்த உரையாடல்)

பதிவும் எழுத்தும்
இலக்கிய ஆய்வாளர் க. ஜவகர்
கவிஞர். அருள் வளவன்,

கேள்வி: எப்போது எந்தச் சமூக, அரசியல் பின்னணியில் எழுத வந்தீர்கள்?

பதில்: சாதி வெறியும், சமயப் பித்தும் கொண்ட ஒரு குடும்பத்தில் வளர்ப்புப் பேரனாக நான் இருந்தேன். பத்து வயது வரை எனது அம்மை, அப்பனுடன் நான் வாழவில்லை. அப்பா மனநிலை பாதிக்கப்பட்டு தினம் தினம் ஒரு அவமானத்தை வரவாகப் பெற்றவர். கண் பார்வையில் குறைபாடு கொண்டிருந்த தையல்காரர், பின்னாளில் முழுமையாகப் பார்வையிழந்து 20 ஆண்டுகள் புற இருளில் வாழ்ந்தவர். மனத்தடுமாற்றம், பார்வையின்மை இரண்டுடனும் அவர் இந்தியாவின் சில நகரங்களில் தையல் வேலை செய்வார். அம்மாவோ வீட்டு வேலை, இட்டலிக் கடை என வயிற்றுப் பாட்டை கவனித்துக் கொண்டார். அகமதாபாத், பெங்களூரு என அப்பா ஒரு அலைகுடியாக என் அம்மாவையும் அலைக்கழித்தார். நான்கு பிள்ளைகள் பிறந்த பின் அவர் அலைவதை நிறுத்திக் கொண்டார். ஆனால் காடாறு மாதம் வீடாறு மாதம் என வாழ்ந்து எங்கள் நெற்றியில் அவமதிப்பின் கோடுகளைக் கீறிவிட்டார். என் தாய் வழித் தாத்தா ஒரு மந்திரவாதி, மருத்துவர், லிங்காயத வீரசைவர். அவருடைய முதல் பேரன் என்கிற வகையில் என் மீது அளவற்ற பாசத்தைக் கொட்டிப் என்னைப் பாழடித்தார். அவர் பற்றி தெரிந்து கொள்ள எனது “மகாமுனி” கதையை நீங்கள் படிக்க வேண்டும். மரமேறி, மதுக்கடை நடத்தி, மக்கள் தலைவர் சுப்பையா, எதுவார் குபேர் போன்ற புதுவைத் தலைவர்களுடன் பழக்கம் கொண்டவராக இருந்தார். பின்பு கள்ளுக்கடையை விட்டு மருந்துக் கடையும், மளிகைக் கடையும் வைத்து லிங்காய கிராமணியார் என சுத்துப் மக்களிடம் பெருமை பெற்றவர். நாடி பிடித்து உனக்கு இது இப்படி இருக்கிறது என்பதைச் சொல்லி மருந்து கொடுத்து விடுவார் அல்லது செய்முறையைச் சொல்லி அனுப்பி வைப்பார். தினம் 10, 20 பேர் வீட்டு வாசலில் நிற்பதை நான் பார்த்திரு்கிறேன். காலையில் அவருடன் பூசை செய்ய குட்டி பூசாரியாக நான் 2 வயதிலிருந்து 13 வயது வரை இருந்தேன்.
இரண்டரை வயதில் எழுதப் படிக்க கற்றுக் கொடுத்த என் தாய் மாமன் பிரஞ்சுக் கல்வி பெற்றவர், ஆசிரியர் வேலைக்குச் செல்ல ஏக்கம் கொண்டிருந்த அவருக்கு தீங்காக வந்து அமைந்தவர் அவருடைய அண்ணன். ஒரு பிரஞ்சு மத்மசோலை காதலித்து தாய்மை அடையச் செய்ததால் பெரும் கலவரம் ஏற்பட்டு தன் பிரஞ்சுக்கார காதலியுடன் இறப்பில் ஒன்று சேர்ந்தார். அது முதல் தாய் மாமனுக்கு ஆசிரியர் வேலை பறிபோனது. ஆனால் இரவுப் பாடசாலை நடத்தி தன் ஆசிரியத் தாகத்தைத் தணித்துக் கொண்டார். அவர் எனக்கு தமிழும் பிரஞ்சும் படிக்கக் கற்றுக் கொடுத்த போது இரண்டரை மூன்று வயது. அவரை பாடசாலையில் மாமா என்று நான் கூப்பிடக்கூடாது, முசே என்றுதான் கூப்பிட வேண்டும். மதாம், முசே, எக்கோல், கிரயோங், ஒப்பித்தால் எனப் பேசிய கடைசி தலைமுறை எனது. தமிழைப் படிக்கக் கற்றுக் கொண்ட நான் பிரஞ்சைக் கற்றுக் கொள்ளவில்லை. பிரஞ்சுக் குடியுரிமை பெற்ற உறவினர்களைக் கொண்ட குடும்பம் என்பதால் பிரான்ஸ் செல்வது ஒரு மரபுரிமையாக இருந்தது. ஆனால் எனக்கு பிரான்ஸ் செல்வது பிடிக்க வில்லை. நான் வெறிகொண்ட முருக பக்தனாக, காளி உபாசகனாக இருந்தேன். பார்த்துப் பார்த்து பத்திகளை எழுதிவிட்டு பிரஞ்சை கற்காமல் இருந்தேன்.

இரண்டு தெருக்களைக் கொண்ட எங்கள் ஊரில் தினத்தந்தி படிக்க நான் தேவைப் பட்டேன். பாக்கிஸ்தானுடன் இந்தியா போர் செய்த காலத்தில் நான் செய்தி வாசிப்பாளனாக மாறியிருந்தேன். அச்சில் இருப்பவற்றுடன் இல்லாதவற்றையும் சேர்த்துப் படிக்கும் பழக்கம் வந்த போது நான் கதை விடும் காளிதாசனாக புனைவு கட்டும் புஷ்பராஜனாக மாறியிருந்தேன். ஏழாம் வகுப்பு படிக்கும் போது புதுவையைத் தமிழ்நாட்டுடன் இணைக்க ஏற்பாடு நடந்தது. கம்யூனிஸ்ட் கட்சி அதனை எதிர்த்து தொடர் போராட்டம் நடத்தியது. எனது தாத்தாவும், மாமாவும் ஆண்டி கம்யூனிஸ்டுகள், சாதி வெறியர்கள். அதனால் நான் மெல்ல கம்யூனிஸ்டாக, சாதி அமைப்பை வெறுப்பவனாக மாறினேன்.
கிராமணி, படையாட்சி எனக் கலந்து கிடந்த உறவினர்கள் பஞ்சம சாதிகள் மீது வெறுப்பைக் கொண்டிருந்தனர். ஆனால் தாத்தா வழி எனக்கு அருந்ததிய பாட்டி ஒருவர் இருந்தார். தோப்பு ஒன்றில் அவர் தனித்து வாழ்ந்து வந்தார். அவர் என்னை கம்யூனிஸ்டாக ஆக்கினார் என்றுதான் சொல்ல வேண்டும். பெரியாரில் தொடங்கி மார்க்சிய லெனினியத்தில் வந்து முட்டி நின்ற போது கவிதை போல ஒன்று பெருக்கெடுத்து ஓடியது. பிரேமி என பிரியமாக அழைத்த ஒரு தோழிக்காக நான் “ஏசுவே ஏழை எங்களைக் காக்கவா, பாசமே கொண்டு பாவிகள் எங்களை மீட்கவா” எனப் பாடல்கள் எழுதத் தொடங்கி பின் புரட்சிகர நாடகத்திற்காக “வேர்வை சிந்தி உழைத்தாலும் வேளா வேளைக்குச் சோரில்லை, பார்வை தொடும் தூரம் மட்டும் இருளைத் தவிர வேறில்லை” என்ற பாடல்களை எழுதி பாரதி, பாரதிதாசனைக் கடந்து காமராசன் கவிதைகள் வழி வேறு ஒரு இடம் அடைந்தேன். என் மேல் பாசம் கொண்ட இருவர் பிரஞ்சுக் கவிதைகளை அறிமுகம் செய்து அது போல எழுதிப் பார் என்ற போது “வெள்ளையம்மா வந்ததடி உன் களைக்கு ஆபத்து” எனக் கிரணம் வரை வந்து சேர்ந்தேன். மற்றவை தமிழிலக்கிய வரலாறு, அது பற்றி நான் கூறத் தேவையில்லை. கி.மு (கிரணத்திற்கு முன்) கி.பி (கிரணத்திற்குப் பின்) என அந்த வரலாற்றை எழுத இயலும், ஆனால் அது ஒரு நாவலாக வரக்ககூடும்.

கேள்வி: ரமேஷ் உடன் எப்போது சேர்ந்து எழுதினீர்கள்? அதன் பின்புலத்தைக் கூறுங்கள்?


பதில்: ரமேஷ் என்ற பெயரை இப்போது சொல்லும் போது இரக்கம், துயரம், அவமானம் என சில உணர்வுகள் மேலோங்கி வருகின்றன. நாங்கள் தொடக்கத்தில் சேர்ந்து எழுதவில்லை. அவர் தனியாக, நான் தனியாக எழுதிக் கொண்டிருந்தோம். 1978-80 கால கட்டத்தில் புதுவையின் வ.உ.சி பள்ளியில் படித்த போது கடைசி பெஞ்ச் மாணவராக அவர் அறிமுகம். பின் 1981-82 இல் புதுவைக் கல்வே காலேஜ் படிப்பின் போது இரண்டாம் பிரிவு வகுப்பில் அவர் இருந்தார். அது வெறும் தலையசைப்பு பழக்கம் மட்டுமே. பிறகு படிப்பை விட்டு ஒரு ஆண்டு பதுங்கிக் கிடந்த காலம் எனக்கு வந்தது. (முழு விவரம் நாவலில் காண்க). அப்போது புதுவை ரொமெய்ன் ரோலான்ந் நூலகத்தில் இருவரும் கவிஞர்களாகச் சந்தித்துக் கொண்டோம். நான் காமராசன் கவிதைகளைப் படித்துக் கொண்டிருந்த போது ரமேஷ் ஈரமான ரோஜாவே என்னைப் பார்த்து மூடாதே என்ற மெட்டுக்கு தன் போக்கில் புதிய பாடல் எழுதிக் கொண்டிருந்தார், அது 1982-83 காலப்பகுதி.
சாரு நிவேதிதா (அறிவழகன்), அமரந்தா அறிமுகம் கிடைத்து கிரணம் இதழ் எனது (பிரேதா) காப்பியங்களுக்காகவே நடத்தப் பட்ட போது ரமேஷ் முகம் சுண்டிப் போய் இருந்ததைப் பார்த்து “அதீத சுய இன்பக்காரனின் நிழலுருவங்கள்” என்ற நெடுங்கவிதை ஒன்றை சல்வோதர் தலியின் பாதிப்புடன் மாறி மாறி எழுதி கிரணத்தில் சேர்த்தோம். அதுதான் கதை , மற்றவை…

கேள்வி: ரமேஷிடமிருந்து விலகி எப்போது தனியாக எழுதத் தொடங்கினீர்கள்? அது குறித்துச் சொல்லுங்கள்?


பதில்: 2005-7 கால கட்டம் அது. மாலதி கவிஞர் மாலதி மைத்ரியாக தன் எழுத்தின் வழியாக அறியப்பட்ட பின், பரவலான கவனிப்பைப் பெற்ற பின் ரமேஷ் தனது வன்முறையை, சாதி வெறியை வெளிக் காட்டத் தொடங்கினார். 2002-க்குப் பிறகு நான் புலம் பெயர்ந்து போசனம் தேடும் கவிஞனாக அலைக்கழிக்கப் பட்டபோது அது நடந்தது. என் மகளுக்காக நான் ஊதியம் பெறும் பணியைச் செய்ய வேண்டியிருந்தது. முதல் கட்டத்தில் மாலதி மைத்ரி எங்களை பட்டினியிலிருந்து காப்பாற்றினார். 1996-க்குப் பிறகு நான்தான் பொருளாதார மையமாக செயல்பட வேண்டியிருந்தது. எங்களது கூட்டு வாழ்வு பற்றி எங்களை விட அதிகமாக தமிழிலக்கிய வட்டம் அறிந்து வைத்திருந்தது. தின வாழ்வின் வன்முறை எங்கள் குடி தேவியாம் மகளைப் பாதித்த போது தாள முடியாத வாதையாக மாறியது. பிறகு….என்ன…. அதுவும் இலக்கியமறிந்தவர்கள் அனைவரும் அறிந்ததே. எனது அம்பேத்கரிய அரசியலை அவர் இழிவாகப் பேசியது மீண்டும் சந்திக்கவே முடியாத நிலையை ஏற்படுத்தி உள்ளது. படிப்பதைக் கற்பதை அறவே வெறுத்த ரமேஷ் என்னிடம் பேசுவதை வைத்தே தன்னை ஒரு உலக மகா இலக்கியவாதியாக உருப் பெருக்கிக் கொண்டார். இன்று வரை கூட அவர் அப்படித்தான் இருக்கிறார். தான் ஒரு மகா கவி என்றும் அதனால் எந்தப் பணியும் இன்றி உண்டாட்டு ஊண்துவை அடிசில் என வாழ்வது தனது உரிமை என்றும் புலம்பித் திரிவது ஒரு நோயாக மாறியிருந்தது. மாலதி மைத்ரி, எங்கள் மகள் இருவரும் அவரது ஆண்திமிர் வன்முறைக்கு ஆளான போது நான் நோய் வாய்ப்பட்டு நொந்து தில்லியில் தனிமையில் அழுது கொண்டிருந்தேன். 2007 நல்ல ஒரு ஆண்டாக அமைந்தது, வன்முறையில் இருந்து விடுதலை கிடைத்தது.

கேள்வி: கிரணம் இதழ் தமிழ்ச் சிற்றிதழில் வெளியில் மிகவும் முக்கியமான பங்களிப்பைச் செய்திருக்கிறது. கிரணத்திற்கு முன்பு, பின்பு தமிழ் எழுத்தின் போக்கு என்பது மாறியது முதன்மையானது. அந்தவகையில் கிரணம் குறித்துச் சொல்லுங்கள்?


பதில்: பிரேதா என்ற பெயரே பலரை அதிர்ச்சியடைய வைத்து வெறுப்பை உருவாக்கியது. அதில் வெளிவந்த பின்நவீன காப்பியங்கள் தமிழில் அது வரை இல்லாத பித்தின் பெருக்கு, சிதைவின் அரசியல், நுண் வன்முறைகள், உடலரசியல் பற்றிய சிக்கல்களை மொழியாக்கின. பிரேதாவின் பிரதிகள் என்ற தொகுப்பில் அது பற்றி விரிவாக எழுதியிருக்கிறேன். ஆம், பிரேதாவின் பிரதிகள் தமிழிலக்கியத்தில் பல மாற்றங்களைக் கொண்டு வந்தது.

கேள்வி: மாற்று அரசியல், மாற்று வாழ்க்கை நிலைப்பாட்டில் நீங்கள் முன்னெடுத்தது தமிழ்ச்சூழலில் முக்கியமான புரட்சியென்றே சொல்லலாம். கம்யூனைப் போன்றதே அது? இதனால் தமிழ்ச் சூழலில் பெரிய எதிர்ப்பு வந்தது? அதைப்பற்றிச் சொல்லுங்கள்?

பதில்: மாற்று என்றாலே பொது மரபில் துயரம்தான், மார்க்ஸ்-எஞ்செல்ஸ்- ஜென்னி எனத் தொடங்கி பல மாற்று வாழ்வு முறைகள் துயரமாக முடிந்துள்ளன. எனக்கும் துயரம் நிகழ்ந்தது. ஆனால் மாற்று வாழ்தல் முறை தோல்வி அடையவில்லை. நாங்கள் சரியில்லை… அவ்வளவுதான்…அது மட்டுமல்ல மரபான வாழ்தலும் கூட வன்முறையும் கொடுமைகளும் கொண்டது தானே…

கேள்வி: இந்த மாற்று வாழ்தல் புதிய சிந்தனையுடைய அடுத்த தலைமுறையினர் பலருக்கும் ஆதர்சமாக இருந்தது. ஆனால் இதை ஏன் தொடரமுடியாமல் போனது உங்களால்? இதைப்போன்ற கம்யூன் அடிப்படையிலான மாற்று வாழ்தலை இங்கு தொடர்வதற்கான சாத்தியங்கள் குறித்து உங்கள் கருத்தென்ன?

பதில்: நிச்சயம் தொடர முடியும். மாற்று வாழ்தல் என்றாலே பாலின பால்நிலை பற்றிய கற்பிதங்களை உருவாக்கிக் கொள்ளும் அறிவுக் குறைபாட்டால் சிக்கல் எழுகிறது. தாய்மை, தந்தைமை , மகள், மகன், அண்ணன், தம்பி, தோழமை என பல வகை உறவுகள் கொண்ட கூட்டு வாழ்தல் வழியாக இனி வரும் தலைமுறையினர் இன்பியல் குடில்களை உருவாக்க முடியும். பாலியலை ஒழுக்கம், அறம் என்பதின் அடிப்படையாக, மையமாக வைத்தால் நிச்சயம் வன்முறையே உருவாகும்.

கேள்வி: அயோத்திதாசர் தொடங்கிவைத்த அறப்போராட்டம் நூலில், “ மார்க்சிஸ்டுகள், கம்யூனிஸ்டுகள் மனித சமத்துவம், மனிதார்த்த அறநிலையில் மற்றவர்கள் போலன்றி வேறுவகை அறிவுமுறை கொண்டவர்கள் என்பதால், கலை, இலக்கியம், அழகியல் வகையிலும் வேறுபட்டவர்களாக இருந்தாக வேண்டும். தனிமனித, பாலிணை உறவுகளிலும் ஆதிக்கச் சமூகத்தின் வரையறைகளை ஏற்காமல் மாற்று வாழ்வியலைத் தேர்ந்து கொண்டவர்களாக இருப்பார்கள்” என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். அப்படியெனில் சமூகப் பண்பாட்டு அதிகார நிறுவனங்களால் கட்டமைக்கப்பட்ட பால்நிலைகளைக் கடந்த பால் பன்மை கொண்ட வாழ்வும் கலை இலக்கியச் செயல்பாடுகளும் விடுதலை அரசியலின் பகுதிதான் என்று கூற முடியுமா?


பதில்: நிலவுடைமை, பாசிசச் சமூகத்தில் பாலுணர்வு, பாலின்பம் என்பதையே உடலை அவமதிப்பதிகாவும் தண்டிப்பாதாகவுமே உள்ளது. மாற்றம் கொண்ட சமூகத்தில் தனிமனிதர்கள் தமக்குள் உடலையும் மனதையும் கொண்டாடிக் கொள்வதற்கான ஒன்றாக பால்நிலை மாறும். பால்பன்மையும் மனித உடலையும் மனத்தையும் கொண்டாடுவதாகவும் மதிப்பதாகவும் மாறும். அவ்வகையில் தற்போதுள்ள பாலின்பம் பற்றிய மதிப்பீடுகள் அனைத்தும் தகர்ந்து வேறு வடிவம் பெறும்.

கேள்வி: பால்பன்மையை தமிழில் முதன்முதலாக அழகியல் மற்றும் கவிதையிலில் எழுதியது நீங்கள். மற்ற எழுத்துக்கள் பிறழ்வாக, குற்றவுணர்வாக, நோய்க்கூறாகமுன்வைத்தன. ஆனால் இன்று குயர் எழுத்து விடுதலையின் அரசியலாகத் தீவிரமடைந்து வருகிறது. இச்சூழலில் உங்களின் எழுத்து முன்னோடியாக இருக்கிறது. இதுபற்றிக் கூறுங்கள்?

பதில்: பாலினப் பன்மைத்தன்மை என்பது இருபால் தன்மைபோலவே இயல்பானது. அதற்கென அரசியலும் அழகியலும் உள்ளன என்பதைத்தான் இந்த எழுத்துக்கள்முன்வைக்கின்றன. எனது கிரணம் காப்பியங்களில் விரிவான தளத்தில் இவை பதிவாகியுள்ளன. தற்போது பலர் அதை எழுதுகிறபோது அது இயக்கமாகவும் தனித்த இலக்கிய வகைமையாகவும் மாறும். அதிலிருந்து பெரும் படைப்புகளும் தோன்றும். ஆனால் ஒற்றைப் பண்பாட்டுச் சமூகத்தில் இவை அனைத்துமே விளிம்பில்தான் வைக்கப்படும். அப்போது பெரும் அழகியல் உத்திகளோடு பால்பன்மை வெகுமக்கள் கலை இலக்கியத்தில் ஊடுருவும். அதிலிருந்து பெரும் கலைஞர்களும் உருவாக முடியும்.

கேள்வி:
தமிழ்ப் படைப்பு, ஆய்வுவெளியில் உங்கள் எழுத்தும் ஆய்வும் உள்ளார்ந்த பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் உங்கள் எழுத்துகளைப் புறக்கணிக்கும் போக்கு இருக்கிறது. இதை எவ்வாறு பார்க்கிறீர்கள்?

பதில்: அது பற்றி நீங்கள்தான் கூற வேண்டும். ‘புகலிட’ வாழ்வின் காரணமாக இடைவெளி அதிகமானது ஒரு காரணம். மற்றபடி நான் அதிகமாக எழுதிக் கொண்டே இருக்கிறேன். காலச்சுவடு, எதிர் வெளியீடுகளில் வெளி வந்த எனது நூல்கள் அதிகம் வாசிக்கப்படுகின்றன. எழுதுகிறவர்கள் எனது எழுத்துகளைப் புரிந்து கொள்வதில் சிக்கல் அடைகின்றனர். அவர்களின் நுண்ணுர்வு வேறு, எனது எழுத்துகள் வேறு. ஜமாலன் போன்ற எழுத்துப் புலன் கொண்டவர்கள்தான் எனது எழுத்துகள் பற்றி எழுத முடியும். மற்றவர்கள் வாசிக்க மட்டுமே முடியும்.

கேள்வி: இந்தியச் சூழலில் விடுதலை அரசியல் என்பது அம்பேத்கரிய நெறியில் இருந்து, தலித் விடுதலை அரசியலை, தலித் தலைமையை மையமாகக் கொண்டே செயல்பட முடியும் என்று சொல்லி வருகிறீர்கள். இது மிகமுக்கியமான, அடிப்படையான ஒன்று. ஆனால் விடுதலையை முன்வைக்கும் பிற இடதுசாரிச் சிந்தனையாளர்கள் இதனை ஒரு நெருடலாகக் கருதுவதுபோல் இருக்கிறது. சாதியத்தின் கூறுகள்தான் இதற்குக் காரணமா?

பதில்: இந்தியச் சமூக மனம் சாதியால் நொதித்துக் கிடக்கிறது. தமிழின் பொது உளவியல் சாதியை மையமாக வைத்துச் செயல்படுகிறது. அரசியல் களம் உள்ளார்ந்த தலித் வெறுப்பால் குமைந்து கொண்டிருக்கிறது. சாதி வெறியின்றி ஒருவர் “அம்பேத்கரும் அவர் தம்மமும்” போன்ற அறிவிலிவாத நூலை 1000 பக்கத்தில் எழுத முடியுமா.

கேள்வி: சமீபத்தில் கோணங்கியின் செயல்பாடுகள் குறித்து தமிழ் எழுத்துவெளியில் சலசலப்பு ஏற்பட்டது. எழுத்தாளர்கள் கட்டற்ற பலியல் சுரண்டல்வாதிகள் என்ற கருத்தும், தன்பால் ஈர்ப்பாளர்கள் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது. எதிர்ப்பாலியல் சுரண்டலும் எழுத்தாளர்கள் மத்தியில் தொடர்ந்து நடக்கிறது. இங்கு விவாதம் என்னவெனில், பாலியல், பண்பாட்டுக் கருத்தாக்கம், மீறல், எதிர்ப்பாலியல், குயர், ஒழுக்கவிதிகள் இப்படிப் பல முரண்கள் இணைந்திருக்கின்றன? இதை எவ்வாறு பார்ப்பது?

பதில்: பாலியல் சுரண்டல் என்பது அனைவரும் செய்கிற ஒன்று. ஒரு சமூகம் எப்படியுள்ளதோ அதே வகை இலக்கியவாதிகள்தான் அவர்களுக்கு அமைவார்கள். கோணங்கி மீதான குற்றச் சாட்டு விசாரணைக்கு முன்பே தண்டனை வழங்கப்பட்டதாக மாறியுள்ளது. பெண்கள் மீதான பாலியல் வன்முறையை பெருமிதமாகக் கொண்டாடிக் கொண்டிருக்கும் கும்பல்கள் இங்கு உள்ளன. கோணங்கி சிக்கல் இரண்டு வகையில் உருவாகிறது. அது ஆண்பாலிச்சை மற்றும் உரிமை மீறல் என்ற கொக்கிகளைக் கொண்டது. பால் பன்மையை வெறுக்கும் ஒரு சமூகத்தில் அது ஒரு ஆயுதமாக மாறி மாற்றுச் சிந்தனை, எழுத்து மீதான தாக்குதலுக்கு உதவுகிறது. இது பற்றி விரிவாகக் கட்டுரைதான் எழுத வேண்டும்.

கேள்வி: தமிழ் நவீனத்துவ, விடுதலை அரசியலின் முகமாக அயோத்திதாசரை முன்னெடுக்கும்போது பெரியார் அயோத்திதாசரை எதிரிடையாகப் பார்க்க இயலுமா? அம்பேத்கர், அயோத்திதாசர், பெரியார் இணைப்புடள் மார்க்சியத்தையும் எவ்வாறு இணைத்துக் காணமுடியும்?

பதில்: அயோத்திதாசர் ஒரு அற்புதம், பின்நவீன முறையியலை அப்போதே அவர் கையாண்டு விடுதலைக் கருத்தியலை உருவாக்கி இருக்கிறார். பெரியார் பின்னர் அவரிடமிருந்து சில கூறுகளை எடுத்துக் கொண்டு இடைநிலைச் சாதிகளின் அரசியலை கட்டுகிறார். அவருடையது இடைநிலைச் சாதி அரசியல்தான். அம்பேத்கரிய அரசியலை ஏற்றால் பெரியார் அதில் உள்ளடங்கி விடுவார். மார்க்சியம் அம்பேத்கரியத்தை புரிந்து கொண்டு செயல்படுமென்றால் இந்திய விடுதலை அரசியலை முன்னெடுக்க முடியும். இன்றைய அரசியல் மட்டுமல்ல உளவியலும் மார்க்சிய- அயோத்திதாசர்-பெரியார்-அம்பேத்கரிய-பெண்ணிய இணைப்புகளைக் கொண்டதாக அமைய வேண்டும்.

கேள்வி: காலனிய நீக்கம் என்பதன் பேரில் காலனிய காலத்துக்கு முந்தைய நிலைமைக்குத் திரும்புதல், பழைய பண்பாட்டை மீட்டெடுத்தல் எனும் நிலைகளில் சாதிய, மதவாதப் போக்குகள் மீட்டுருவாக்கம் செய்யப்படும் ஆபத்தும் இருக்கிறது. இதை எவ்வாறு அணுகுவது? ஆக்கபூர்வமான வழிகள் உண்டா?

பதில்: பழமையை மீட்டல் எனச் சொல்லி பௌத்தம் மீட்கப்படும் எனில் மத அரசியல் அதனை ஏற்குமா? பழைய சமத்துவ இனக்குழு வாழ்வை மீட்டெடுக்க இயலுமா. அனைத்தும் தற்காலம் சார்ந்ததாக இருக்க வேண்டும். எந்தப் புராணிகமும் அழிவையே கொண்டு வரும்.

கேள்வி:
தனியுடைமையும், பாலின ஏற்றத்தாழ்வும் வர்க்க முரண்பாட்டிற்கு அடிப்படை என்கிறார் எங்கெல்ஸ். நாம் விரும்பினாலும் குடும்ப நிறுவனத்தில் பரஸ்பர சமத்துவத்தை, நேசத்தைக் கொண்டுவரமுடியாது. ஏனெனில் அது சமூக அதிகாரக் கட்டமைப்பு என்கிறார் அவர். குடும்பம் கருத்துருவ அரசு இயந்திரத்தின் பகுதியாக இயங்குகிறது என்கிறார் அல்தூசர். இந்தியா போன்ற நாடுகளில் இதன் தாக்கம் மிக வலிமையாக இருக்கிறது. அதனால்தான் பெரியார், அம்பேத்கர் இருவரும் ஆணாதிக்கத்தின் வீழ்ச்சியை முதன்மைப் படுத்தினர். பெரியார் தீவிரவாதப் பெண்ணியத்தை முன்வைத்து குடும்ப நிறுவனத்திற்குள் பெண்கள் செல்லக்கூடாது தேவையில்லை என அழுத்தமாகவே வலியுறுத்தினார். மாற்றுவாழ்க்கை, மாற்று அரசியலை முன்வைத்து நீங்கள் இயங்கியுள்ளீர்கள். இந்தியாவில், ஆணாதிக்கப் பண்பாட்டு உளவியல் வன்முறை இயல்பாக்கம் செய்யப்பட்டுள்ளது , இந்தப் பின்னணியில் குடும்ப நிறுவனத்தை ஆணாதிக்கமும் அதிகாரமுமற்றதாக மாற்றுவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றனவா? அல்லது குடும்ப நிறுவனத்தைக் கலைக்க முடியுமா? அல்லது இதற்கு மறுதலையாகக் கம்யூன் வாழ்வியலை மாற்று வாழ்முறையை முன்வைக்க முடியுமா? இதற்கான சாத்தியங்கள் என்ன?

பதில்: இனப்பெருக்கம் இருக்கும் வரை ஏதோ ஒரு வடிவில் குடும்பம் இருக்கலாம். ஆனால் கம்யூன் மற்றும் குழு வாழ்வு என்பதை முயற்சி செய்வதில் என்ன தவறு இருக்கிறது. சிக்கல் ஏற்பட்டால் பிறகு மாற்றிக் கொள்ளலாம்.

கேள்வி: மார்க்சியம், நவீனத்துவம், பின்நவீனத்துவம், பெரியாரியம், அம்பேத்கரியம், பெண்ணியம், தலித்தியம் எனப்பல கோட்பாட்டுக் கருத்தியல் நிலைகளில் இயங்கிய நீங்கள் பௌத்த நெறியை முன்வைத்தீர். ஆனால் தற்போதோ இசுலாத்திற்கு மாறுவதாகச் சொல்கிறீர்கள். இதன் கருத்தியல், கோட்பாட்டியல் காரணிகளைக் கூறமுடியுமா?

பதில்: பௌத்த முறையியல் எப்போதும் என்னுள் இருக்கும். இஸ்லாத்தை ஏற்பது ஒரு முன்னெடுப்பு, பிறகு அது பற்றி விரிவாக எழுத இருக்கிறேன்..

கேள்வி: இன்றைய தமிழ்ச் சூழலில் மார்க்சியவாதிகள் பின்னவீனத்துவத்தை எதிரிடையாக பார்க்கிறார்கள் ஆனால் உண்மையில் ஃபூக்கோ, தெரிதா போன்றவர்கள் தங்களை பின் மார்க்சியவாதிகள் என்று கருதிக் கொண்டார்கள்  ஆனால் இங்கு அவ்வாறு இல்லை. இதுதான் மார்க்சியம் எதிர்கொள்ளும் சவால் என்று நீங்கள் சொல்கிறீர்களா?

பதில்:
1988-89-ல் நிறப்பிரிகையில் பின்நவீனத்துவப் பார்வையை முன்வைத்து மார்க்சியத்தை வாசிப்பது என்ற நிலையில்தான் நான் முதலில் தொடங்கினேன்.  இதுவே முதல் கட்ட முரண்பாடுடனான உரையாடல். பின்னவீனத்துவம் குறித்த உரையாடல் தமிழில் குறைவாகவே இருந்தது. அவ்வாறு வந்ததும் கூட இலக்கியப் பின்நவீனத்துவம் என்ற தளத்திலான செயல்பாடு குறைவாகவே இருந்தது. இலக்கியத்தில் வடிவமற்ற தன்மை, பரிசோதனை முயற்சிகள் என்ற நிலையில் நான் எழுதினேன். இலக்கியம் சார்ந்த தளத்தில் இது தொடக்க நிலையில் இருந்தாலும் இதனுடைய அரசியல் தளத்தில், தெளிவாகவும் வலிமையாகவும் உறுதியாகவும் இந்தப் பின்னவீனத்துவ மாதிரியை நான் முன்வைத்தேன்.  பின் நவீனத்துவம் என்பதே பின் மார்க்சியம்தான். இந்த நிலையில் தான் மார்க்சியம் சார்ந்த, மார்க்சியம் கடந்த ஒரு தன்மையை நான் முன் வைத்தேன்.
மார்க்சியம் கடந்த மார்க்சியம் சார்ந்த நிலைப்பாட்டில் இருந்து உலகத்தை அணுகுதல் என்று நான் பேசினேன்.  புரட்சியை நோக்கிய உளவியல் பிரச்சனைகள் என்ற கட்டுரையும் அதனை அடிப்படையாகக் கொண்டதுதான். இம்மாதிரியான உரையாடல் அப்போது எடுக்கப்படவில்லை. மனிதார்த்த பொருண்மை நோக்கு  என்று நான் சொல்ல வந்தது materialism is again a kind of Human centre.  
எல்லாம் மொழியால் கட்டப்பட்டது. மனித அறிவு என்பது மொழியின் மூலமாகவே கட்டப்பட்டது. நாம் புரிந்து கொள்ளக் கூடிய உலகம் மனிதர்களுக்கானதுதானே தவிர எல்லாவிதமான உண்மைகளைப் பற்றியதும் எல்லாவிதமான பொருண்மைகளைப் பற்றியது அல்ல. இது சிக்கலான ஒன்று.
இது பின்பு லெக்கானின் பொருண்மையில் இருக்குன்னு தெரிந்துகொண்டேன். அரசியல் பின்நவீனத்துவம் என்பதுதான் நான் தொடர்ந்து வலியுறுத்துவது. அதனால்தான் முழுக்க முழுக்க அரசியல் சார்ந்த எழுத்து பின் நவீனத்துவ எழுத்து என்ற முறையில் எனது இயக்கம் இருக்கிறது. இதில்தான் அடையாள அரசியல், பின்காலனியம், பெண்ணியம் தலித் அரசியல் என்று ஒரே சமயத்தில் பன்மைத்துவமான போக்குகளை முன்வைக்க முடியும். ஒரே சமயத்தில் இவ்வாறான பல்வேறு விதமான அழுத்தங்களை உள்ளடக்கிய கூட்டுத்தொகுதிதான் இன்றைய அரசியல். 
ஏதாவது ஒரு அரசியல் மட்டுமே மையமாக இருக்க முடியாது. 
பொருளாதாரம், அரசியல், சமூகம், பண்பாடு, பண்பாட்டு நடைமுறைகள், மதம், பாலினம், சாதி, இனம், வர்க்கம், நிறம் இவை இல்லாமல் பண்பாட்டு அடையாளங்கள்,  இவற்றோடு தனிமனித,  தனி மனிதர்களுக்கு இடையிலான உறவுகள், அத்துடன் இந்தியா போன்ற நாடுகளில் இருக்கக்கூடிய குடும்பம், குடி, இனம் முதலிய கூறுகள், இவற்றுடன்  அறிவியல் தொழில்நுட்பம், இயந்திரங்கள், தகவல் தொடர்பு சாதனங்கள், உலகளாவிய  தொடர்புகள் இவையெல்லாம் சேர்ந்துதான் ஒரு  செயலை தீர்மானிக்கிறது. அத்தோடு அந்தச் செயலை ஆக்கபூர்வமானதாகவோ அழிவானதாகவோ மாற்றுகிறது. இவற்றுள் எந்த ஒன்றில் பிரச்சனை வருகிறதோ அதை நாம் அணுகியாக வேண்டும்.

இவை எல்லாமே ஒன்றுடன் ஒன்று இணைந்ததாகவே இருக்கின்றன. உலகமயமாதல் இந்தியாவில் வரும் போது அது பொருளாதாரம் சார்ந்த ஒன்று மட்டும் அல்ல. வாழ்வியல் சார்ந்தது, சூழலியல் சார்ந்தது இனக்குழு வாழ்வியல் இனக்குழு உரிமை சார்ந்தது. வெளியே இருக்கிறவர்கள் எவ்வாறு பார்க்கிறார்கள் என்றால் இந்த உலகமயமாதல் தனக்கு இன்பமயமான கொண்டாட்டமான ஒன்றாக பார்க்கிறார்கள். இவர்களுடைய நுகர்வு சார்ந்த பார்வையும் இதனால் பாதிக்கப்படுகிறது. அவர்களுடைய பார்வையும் ஒன்றாக இருக்க முடியாது. இந்தியாவைப் பொறுத்த வரையில் சாதி, இனம் இரண்டும் முக்கியமானவையாக இருக்கின்றன. இனவெறுப்பும் சாதி வெறுப்பும் இங்கே இருக்கின்றன. பொருளாதார சிக்கலைப் பேசும் போது பாலினத்தின் இடம் என்ன என்பது பற்றி பேசுவதும் மிகவும் முக்கியமான ஒன்று.

பாலினத்தின் இடம் என்ன என்பது பற்றி பேசவில்லை என்றால் அந்த அரசியல் வன்முறைதான். அப்படி இல்லையெனில் ஒரு அரசியல் மற்றதின் மீது ஆதிக்கம் செலுத்துவதாக மாறிவிடும். தேசியம் பேசுபவர்கள் ஜாதி ஒழிப்புக்கு எதிரானவர்களாக இருக்கிறார்கள். பகுத்தறிவை பொறுத்தவரையில் இங்கு இன்னும் அது politics ஆக இருக்கிறது, மேற்கைப் பொருத்தவரையில் அது ஒரு அப்ரோச்சாக மாறிவிட்டது.இந்தியாவை, தமிழ்நாட்டை பொறுத்தவரையில் பகுத்தறிவு என்பது மிக முக்கியமான ஒன்று Cultural Domainஆக இருக்கிறது. பகுத்தறிவு அரசியலாகவே இருக்கிறது. இங்கே Gender, பாலினம் பற்றிய பேச்சை பகுத்தறிவுவாதிகள் விட்டு விடுகிறார்கள். அதைப்போல சாதிய விடுதலைப் பார்வையில் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையைப் பேசுவதில்லை. அப்புறம் தன்னாட்சி, தனிமனித சுதந்திரம், தனிமனித உரிமை என்று வரும்போது முடியாட்சி, நகர அரசு, தந்தைமைய Patriarchy  பார்வை நிலையில் இருந்து தனிமனிதர்களை அணுகுகிறார்கள். இந்தப் பார்வையில் இருந்தே Gender, Sexuality  இவைகளை அணுகுகிறார்கள். Sexuality என்பது அடையாளம் சார்ந்த ஒன்று. இவ்வாறு அவர்கள் அணுகும் போது ஏதாவது ஒரு பழைய முறையில் இருந்து அதைப் பார்க்கிறார்கள். இதெல்லாம் மிகவும் சிக்கலானது. மார்க்சியம் இங்கு வருகின்ற பொழுது பழங்குடியின அரசியல் வரவில்லை.  கட்சியாக மாறும்போது. அது ஒரு நகர மையம் சார்ந்த ஒன்றாகவே வருகிறது. அம்பேத்கரிய, தலித்திய அரசியலை அதன் முழு இயக்கத்தோடு அணுகுவதில்லை . பிறகு இயற்கை சார்ந்த வாழ்க்கை. இயற்கை சார்ந்த வாழ்க்கையை நாம் எவ்வாறு பார்க்கிறோம். மனித மையவாத நோக்கில் இருந்து பார்க்கிறோம்.  மனிதர் இயற்கையின் ஒரு பகுதியே. மார்க்சியத்தைப் பொறுத்தவரையில் அதன் அடிப்படையான அம்சமே இயற்கையும் மனித உறவுமே. இதைப் புரிந்து கொள்ளாத மாக்சியவாதிகள், நவீனத்துவம், இயந்திரமயமாக்கல், தொழில்மயமாக்கல் என்று பேசிக் கொண்டிருப்பார்கள். இவை மார்க்சியத்தில் எதற்காக, எப்படிச் சொல்லப்பட்டிருக்கின்றன என்பதை விவாதிக்க வேண்டும். இதை விவாதிப்பதில்லை. ஏனெனில் அவர்கள் அரசு மையவாதிகளாக இருக்கிறார்கள்.  இயந்திரமும் அரசும் மையமாக இருக்கின்றன. இரண்டு மையமாக இருக்கின்ற போது பெரிய மூலதனமாக ஆகிறது. இங்கு மூலதனம் என்பது சமூக மூலதனமாக ஆகிறது. சமூகத்தினுடைய அல்லது ஸ்டேட் கேப்பிட்டலாகப் பார்க்கிறார்கள்.  வளமை என்பதை மையப்படுத்தி பார்க்கின்ற போது முதலாளித்துவத்தின் அடிப்படையோ அல்லது ஆதிக்க அரசியலின் அடிப்படையோ எதுவோ அதுவே அரசின் அடிப்படையாகிறது. 
அரசைப் பற்றித்தான் மார்க்சியம் பேசுகிறது. மனித உடல் , இயற்கை வளம் அல்லது உயிர் வாழும் மண்டலம் இவற்றை  மார்க்சியம் பார்க்கும் முறை எவ்வாறு என்றால் இயற்கையை தனக்கான ஒன்றாக பார்ப்பது, சுரண்டுவது என்பதை மார்க்சியம் மறுக்கிறது. வளமை என்ற பெயரில் இயற்கையைச் சுரண்டுவதை மாக்சியம் எதிர்க்கிறது. முதலாளித்துவம் முதலில் இயற்கையைச் சுரண்டுகிறது பிறகு மனித உடல்ளை நசுக்குகிறது, அல்லது தனது அதிகாரத்தை மனித உடல்கள்மீது  செலுத்துகிறது இன்று மார்க்சிய அடிப்படை கூறுகிறது. இதை கட்சி மார்க்கியவாதிகள் முதலாளித்துவத்திற்கு உரியதாக, முதல் உருவாக்கமாக மாற்றுகிறார்கள்.  அப்பொழுது என்னவாகிறது என்றால் காலனியத்தினுடைய பண்பைப்போல பேரரசுக்கும் பேரதிகாரமாக மாறும் செயல்திட்டமாக அது மாறுகிறது. கட்சி மார்க்சியம் ஒரு தேசத்தை கட்டமைக்கிறது. அந்த தேசத்தின்மூலமாக பிரதேசங்களில் சுரண்டுவதாக, ஏன் போரையே உருவாக்குகிறது. அப்போது சோவியத்தினுடைய பெரிய திட்டம் என்னவென்றால், மார்க்சியத்தினுடைய உடல் அரசியலையும் இயற்கையின் அரசியலையும் விட்டுவிட்டு இவற்றை முழுமையாகப் புறந்தள்ளிய இயந்திரத்தனமான உயர்தொழில்நுட்ப சமூகமாக மாறுகிறது. சோசலிசம் வீழ்ச்சியடையவில்லை. ஏனெனில் சோசலிசம் என்பது அமையவே இல்லை. 

சோசியலிச உருவாக்கத்திலேயே சிக்கலாகிவிட்டது.  பல தேசங்களுடையதாக பல நாடுகள் உடையதாக அது ஆகி விடுகிறது.  மீந்திருப்பது போர், ராணுவம் மட்டுமே. இதை மார்க்சியத்தின் சிக்கலாகப் பார்க்க முடியாது. மார்க்சியம் அங்கே என்ன தோல்வி அடைந்தது அல்லது என்ன மாறியது என்றால் மனித வாழ்க்கைக்கும் இயற்கைக்கும் இடையில் இருக்கக்கூடிய சமநிலை உறவு குலையும் போது State Capitalஆக மாறும் இடத்தில் நகர்கிற நிகழக்கூடிய ஒரு உடைப்பு. சோவியத்தினுடைய சிதைவு அல்லது உடைப்பு என்று சொன்னால் அது செர்னோபில்லினுடைய அடுத்த கட்டம்தான். செர்னோபில்மூலமாக பல ஆயிரம் கிலோமீட்டர் பகுதிகள் வாழ முடியாத பகுதியாக மாறும்போது, அதனுடைய தாக்கமும் பின்னால் வந்த அரசியல் உடைப்பும் ஏறக்குறைய அதனுடைய பின் விளைவாகவே மாறுகின்றன.  இதுதான் முதல்கட்ட சமூக அடையாளத்தின் உடைவாக மாறுகிறது. இந்தப் பேரழிவு முன்னேறிய சமூகம் என்ற கற்பித்தத்தை, கற்பனையை அல்லது அப்படி உருவாக்கப்பட்ட கருத்தை தகர்க்கிறது. 

பெரிய வளர்ச்சி என்பது பெரிய அழிவாக மாறும்போது முன்னேறிய சமூகம் என்ற அடையாளம் தகரும் போதுதான் அது தகர்கிறது. உண்மையான தகர்வு என்பது முன்னேறிய சமூகம் என்பதின் தகர்வுதான். அந்த அளவில் சோவியத் என்பதை மார்க்சியத்தின் முழுமையான மையமாகப் பார்க்க முடியாது. ஒரு கட்சி இருக்கிறது. கட்சியின் அரசியல் மாறுகிறது. மொழி, தேசிய இனங்களின் அடிப்படையில் பல்வேறு பல்வேறு நாடுகளாகப் பிரிகிறது. இவற்றை மட்டுமே மையமாகக் கொண்டு சோவியத்தையும் மார்க்சியத்தையும் ஒரே சிக்கலாக நாம் பார்க்க வேண்டிய தேவையில்லை. அப்படி ஒரு சார்பில் பார்க்கக் கூடியது சமூகத்தின் ஓரிடத்தில் நிகழக்கூடிய பிரச்சனையை உலகத்தின் முழுப் பிரச்சினையாக மாற்றக் கூடியதாக மாற்றும் முயற்சியாக அது மாறும். 

இந்தியாவிற்குள் அல்லது மற்ற நாடுகளில் உள்ள சிக்கல்களை மார்க்சியத்தின் இயங்கியல் பார்வை மூலமாக, அல்லது மார்க்சியத்தின் மூலம் உருவாகி இருக்கக்கூடிய அறிவியல் மற்றும் பொருண்மைப் பார்வையின் மூலமாக நாம் ஆராய்கிறோம்.  இந்த அறிவியல் மற்றும் இயங்கியல் பொருண்மை பார்வையைத்தான் நாம் மார்க்சியம் என்கிறோம். இன்று உலகச் சமூகங்களின்  சிக்கல், ஏக்கம், தேவைகள், எதிர்பார்ப்பு இவைகளுக்கான ஆக்கபூர்வமான தீர்வை நோக்கிய கனவுதான் விடுதலை அரசியல் சாந்த கனவு. இதே வகையில் அழிவுக்கான கனவுகளும் உள்ளன.  மார்க்சியத்தின்  மதம் குறித்த விமர்சனப் பார்வை என்பது மதம் இல்லாத ஒரு உலகைப்பற்றிய கனவை உருவாக்கி மக்களை அழித்தன என்பது.

இப்போது பேரரசுகள், பெரிய மூலதனம், உலகமயமாதல், முன்னேற்றம் எனும் பெரிய கனவுகள் உலகின் பெரும்பான்மை சமூகங்களை, மக்களை அழிக்கின்றன. இயற்கையும் உயிர் மண்டலமும் அழிக்கப்படுகின்றன. விளிம்பு நிலை அதிகமாவதும் வாழ்க்கைச் சூழல் துயரம் நிரம்பியதாக மாறுவதும் இயற்கை அழிக்கப்படுவதும் நடக்கிறது. இயற்கை அந்த  வளத்தை ஒருசமூகம் தனக்குப் பயன்படுத்துவதல்ல சிக்கல். அதுகூட முதல்கட்டம்தான். நாட்டு மக்களே பயன்படுத்த முடியாத சூழல்.  இயற்கை வளம் என்று சொல்வதே தவறானது. இயற்கை, சமநிலையில் நாம் ஒருவராக இருக்கிறோம். ஒரு சமூகம் எந்த இயற்கைச் சூழலில் இருக்கிறதோ அந்த இயற்கையோடு உறவுபடுத்தி ஓரளவு சார்ந்து வாழ வேண்டும். ஆனால் இன்றைய சூழலில்  ஒரு சமூகத்திற்காக அதாவது ஐரோப்பிய  அல்லது வெள்ளைச் சமூகங்களுக்காக ஒட்டுமொத்த உலகச் சமூகங்களும் ஒட்டுமொத்த உலக இயற்கையும் நசுக்கப்படுகிறது, பிழிந்தெடுக்கப்படுகிறது. அவர்கள் சொல்லுகின்ற வளர்ச்சி அல்லது வளம் என்ற கருத்தாத்தால் மொத்த சமூகங்களும் சுரண்டப்படுகின்றன உயிராற்றல் அற்றதாக மாற்றப்படுகின்றன. இது மிகப்பெரிய சுரண்டல். இதில் மார்க்சியம் மட்டுமே முக்கியம் இல்லை. இது ஒரு பொதுவான சுரண்டல்.

மார்க்சியம் இல்லையென்றாலும் கூட இந்த ஒடுக்கு முறைக்கு எதிரான அரசியல் புரட்சிகர அரசியலாகவோ மற்றும் சார்ந்த அரசியலாகவோ  இருக்கும். இதைத்தான் நாம் மக்கள் அரசியல் என்கிறோம். மக்கள் அரசியல் என்பதற்கு அறிவியல் வேண்டும் உலக வரலாறு வேண்டும் தற்கால பொருளியல் வேண்டும். இதுவெல்லாம் சேர்ந்து வருகிறபோது மார்க்சியம் என்கிற ஒரு அறிவுச் சூழல் உருவாகிறது. மார்க்சியம் என்பது இரண்டு நூற்றாண்டுகளுக்கான மாற்றுச் சிந்தனைகளின் மொத்த அடையாளம். ஒரு இடத்தில் தொடங்கியது இல்லை. அது ஒரு மொழியியல் இல்லை. அதாவது ஒரு கூறை மட்டும் எடுத்து விளக்கிவிட்டுப் போவது அல்ல. அது ஒரு discipline இல்லை Multidiscipline. வரலாறு, மானிடவியல் , சமூகவியல், பொருளாதார உறவுகள், காலனியம் பற்றியது, அடிமைச் சமூகங்களைப் பற்றியது. பல்வேறு தரவுகளின் அடிப்படையிலானது,   பகுத்தறிவுத்தன்மையிலானது.

பகுத்தறிவு என்பது அறிவின் அடிப்படையில் ஒன்றை விளக்குவது. அது புதியதென்பதைவிட தொடர்ந்து புரட்சிகர சிந்தனையாகப் பயன்படுத்தப்படுகிறது.  அடிப்படைகளை நோக்கிய கேள்வியாக அது இருக்கிறது.  மனிதநேயம், பொருள்முதல்வாதம் போன்றவை வரலாற்றின் தொடக்க கட்டத்தில் இருந்து இருக்கலாம். இந்தியாவில் பௌத்தம் இருந்தது. கிரேக்கத்தில் டெமாக்ரடிக்ஸ், எபிக்கோரியன், ஸ்டாயிக், இதில் பொருள்முதல்வாதிகள் இருந்தார்கள். அணுக்கொள்கைவாதிகள் இருந்தார்கள். பொருள் முதல் வாதம் என்பது மிகவும் பழையது. ஸ்டாயிக் சிந்தனையில் மனிதர்களை மையமாக வைத்து கருத்துமுதல்வாதத்தை முன்வைக்கும் மீவியற்கைக்கு எதிரான கருத்துக்கள் இந்தப் பொருள் முதல்வாதத்தில் இருக்கின்றன. இவ்வாறு ஒவ்வொரு பகுதிகளிலும் இருந்த பொருள் முதல்வாத கருத்துக்கள் 18, 19 ஆம் நூற்றாண்டுகளில் ஒன்றாக திரள்கின்றன. இதன் விளைவைத்தான் இன்று நாம் உலகமயமாதல் என்கிறோம். அதுமட்டுமல்ல உலக அறிவு என்றும் சொல்கிறோம். இதை நாம் மறுக்க முடியாது. இந்த உலகளாவிய அறிவு(Global Knowledge) என்பது எல்லாச் சமூகங்களிலும் ஊடுருவி இருக்கிறது. எல்லாச் சமூகங்களும் இந்த உலக மையத்திற்குள்தான் உறவு கொண்டிருக்கின்றன. எதுவும் தனிமைப்பட்டுப் போகவில்லை தனித்தும் இயங்கவில்லை. ஒரு வகையில் அது சுரண்டப்படுகிறது அல்லது பாதிக்கப்படுகிறது அல்லது அந்த இடத்தை அது ஊடுருவி இருக்கிறது. ஊடுருவும் போது அடிமைத்தன்மை என்று சொல்வது, உழைப்பை கற்றுக் கொள்வதன் மூலமாக அங்கே அறிவு இருக்கிறது. தொழில்மயமாக்குதல் என்பது உழைப்பவர்களை தொழில்மயமாக்குதல் என்பதுதான். 

இயந்திரத்தைப் பயன்படுத்துவதன் மூலமாக உருவான இயந்திர மயமான ஒரு சமூகம் அந்த இயந்திரத்தைப் பயன்படுத்தும் அறிவின் மூலம் பாட்டாளி சமூகம் அறிவுடையதாக மாறுகிறது. உழைப்பும் அறிவுமாக மாறுகிறது. மார்க்சியமும் அதன் பின்பகுதியாகிய இருபதாம் நூற்றாண்டின் விடுதலை சார்ந்த  கட்டுடைப்பு (Deconstruction), உடல் அரசியல் (Body Politics) உயிர் அரசியல் (Biopolitics), பாலின அரசியல் (Gender Politics) இவை எல்லாவற்றையும் சரியாக நடைமுறையில் சொல்ல வேண்டுமென்றால் கம்யூனிசம் சார்ந்ததே. நாம் எல்லோரும் கம்யூனிஸ்ட். நாம் அனைவரும் கம்யூனிஸ்ட்டாக உரிமை இருக்கிறது. ஒரு கம்யூனிஸ்டுக்கு மார்க்சியமே நூலகம். ஒரு கம்யூனிஸ்டுக்கு மார்க்சியம் போதாமை உடையதாக இருக்கலாம். தரவுகள் புதியதாக மாறலாம். கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட்டாகவும் இருக்கிறார். ஆனால் கம்யூனிசம் உருவாவதற்கான மொழி மார்க்சியமே. கம்யூனிசம் ஒரு அறிவுத் தோற்றவியல் (Epistemology). ஒரு பார்வை.

இந்தப் பார்வைக்கு மார்க்சியம் அடிப்படையாகிறது. கம்யூனிசம் மார்க்சியத்திலிருந்து தொடங்குகிறது.  ஒரு கம்யூனிஸ்டுக்கு, மார்க்சியத்தில் முரண்பாடு வருகின்றபோது புதிய இயங்கியல் மூலமாக அதை விளக்குகிறோம் ஒரு அறிவியலாக.இது பின்நவீனத்துவ அறிவு. இது பின்நவீனத்துவ நடைமுறை. பின் நவீனத்துவம் என்பது இலக்கியப் பின்நவீனத்துவம் என்பது 1950,1960 களில் இலக்கியத்தின் பரிசோதனை முயற்சியாக வந்தது. Postmodern condition. பின்நவீன நிலை எனும்போது லியோதார் வரும்போது பின்நவீனத்துவ அறிவின் இடம் என்ன என்பதெல்லாம் வருகிறது. இன்று காரணங்கள், காரணங்களுக்கு அப்பாலான பின்நவீனத்துவச் சமூகம் என்ற லியோதார் உருவாக்கிய கருத்தாக்கம் 1970-71இல் வருகிறது. சமூகம் நவீனத்துவம் கடந்த நிலைக்கு வருகிறது என்ற பார்வை அதில் உள்ளது. பகுத்தறிவு வெளியேற்றம் நிகழ்கிறது. பெருங்கதையாடல் என்பது ஒரு அறிவு தன்னைத் தானே விளக்கிக் கொள்கிறது, அறிவு என்று தன்னைத்தானே சொல்லிக் கொள்கிறது என்ற நிலையிலிருந்து பின்நவீனத்துவ விமர்சனம் தொடங்குகிறது. இதனுடைய இன்னொரு பகுதி கட்டுடைத்தல். இவை எல்லாவற்றையும் சேர்த்து பின்நவீனத்துவம், பின்நவீனத்துவ அரசியல் என்கிறோம். பின்நவீனத்துவ அரசியலில் ஒரு கம்யூனிஸ்ட், பெண்ணியவாதியாக, காலனிய எதிர்ப்பு வாதியாக, பின்காலனித்துவவா வாதியாக, எல்லாவற்றையுமே இணைத்துப் பார்க்க கூடிய இயங்கியல்வாதியாக, தூய்மையிலிருந்து வெளியேறக்கூடிய, தூய்மை இல்லாத ஒரு சிந்தனையாளராக மாற வேண்டும். 

தமிழ் அடையாளம் என்பதும், தமிழ் சமூகம் அந்த அடையாளத்தோடு போராடுவதை புரிந்து கொள்கிறோம் என்றால், அந்தச் சமூகம் உலக சமூகத்தோடு உறவு கொள்ள வேண்டும். எதுவுமே பியூரிட்டி அல்லது தனித்தன்மை என்று இல்லை. தனித்தன்மை என்பதை விட ஒரு சமூகம் தன்னைத் தூய்மையாக வைத்துக் கொள்கிறது, கலப்பு நிகழவே கூடாது என்பது எல்லாம் விலக்கக்கூடிய பண்பே.  பாசிசத்தின் வடிவமே. உலகம் அடையாளங்களை அங்கீகரிப்பதன் மூலமாக, coexistence சகவாழ்வின்மூலமாக  எதிர்காலத்தில் அடையாளங்கள் கலப்பதுதான். புதிய அடையாளம் என்பது hybridity கலப்பின் வழியாகவே என்பதுதான்.  கலப்புதான் இங்கு அனுமதிக்கப்பட வேண்டும். அடையாளங்கள் அழிக்கப்படுவது இல்லாமல் அடையாளங்கள் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும். கலப்பதன் மூலமாகவே அடையாளங்கள் கரைகின்றன.  இயக்கமாகவே ஒன்றோடு ஒன்று கலந்து புதிய அடையாளமாக மாறும். பாசிசம் அடையாளங்களை அழிக்கிறது. 

கேள்வி:
இந்த இடத்தில் பண்பாட்டு அடையாளம் என்பதை எவ்வாறு பார்ப்பது?

பதில்:
ஏகாதிபத்தியத்தின் ஒரேஒரு தன்மையுடையதாக்கல் என்ற அடக்குமுறை  பின்நவீனத்துவத்தின் முக்கிய விவாதம். ஒற்றைத் தன்மை என்பது தன்னைத்தானே நிறுவிக்கொண்ட ஒரு அதிகார அமைப்பு. அதில் பேரரசு,  ஏகாதிபத்திய வன்முறை முதலிய அதிகாரங்கள் இருக்கின்றன. இந்த வன்முறை உலகத்தில் உள்ள எல்லா அடையாளங்களையும்  மற்றமையாகவும் ஏகாதிபத்தியமாகவும் ஆக்குகிறது. அப்போது அடையாளங்களின் தனித்தன்மை என்பதை முதலில் அங்கீகரித்தல்தான். அடையாளங்கள் இருக்கின்றன என்பதை அங்கீகரிப்பதுதான் அடையாள அரசியல். காலனியாதிக்கத்திற்கு எதிராக ஒரு சமூகம் தன்னுடைய அடையாள அரசியலை முன்வைக்கிறது. இது எதிர்ப்பின் ஒரு பகுதி. அடையாளம் தூய்மையானதாக மாறுமா என்றால் மாற முடியாது ஏனென்றால் அது ஏற்கனவே அடக்குமுறைக்கு உட்பட்டதாக மாறுகிறது. அந்த அடக்கு முறையின் அறிவை அது எடுத்துக் கொள்ளும். அதுதான்  பின்காலனித்துவம். காலனிய அதிகார அறிவின் மூலமாக ஒடுக்கப்பட்ட சமூகமும் தன்னை வளர்த்துக் கொள்கிறது. அரசியல் ரீதியாக தன்னை மேம்படுத்திக் கொள்கிறது அல்லது அரசியல் கருவியாக அது மாறுகிறது. அடையாளத்தை நிறுவும் எதிர் அரசியலாக அது மாறுகிறது. அப்போது அந்த இடத்திலேயே அது வேறு ஒரு அடையாளத்தை நோக்கிப் போகிறது. 

கேள்வி:
அப்போது அடையாள அரசியல் வன்முறையாக மாறாதா? 
பதில்:
இல்லை. காலனியமயமாக்கல் என்று வருகின்றபோது, ஒரு அடையாளம் இன்னொரு அடையாளத்தின் மூலமாகவே எதிர்கொள்ளப்படும். இங்கே அடையாளம் என்பது முன்னே நிற்கும்.  முன்னே நிற்கும் அடையாளம் தன்னை எக்கியூப் செய்துகொள்வதன்மூலமாக வேறொரு இடத்தில் இருக்கக்கூடிய அடையாளத்தை அது அங்கீகரிக்கிறது. உலக அளவில் எல்லா அடையாளங்களையும் அங்கீகரிக்கிறது. இது coexistence ஆக மாறுகிறது. இவ்வாறு இல்லாமல் ஒரு அடையாளம் இன்னொரு அடையாளத்தின் மீது அதிகாரம் செலுத்துகின்ற பொழுது அது காலனிய அதிகார அடையாளமாகிறது. இன்றைக்கு உள்ள அடையாள அரசியல் என்பது காலனியமயமாக்குகின்ற ஒற்றை அடையாளம் என்கிற அதிகாரத்துக்கு எதிரான அரசியல். எனவே இன்று அடையாள அரசியல் என்பது ஒரு மாற்றத்தை நோக்கியது. முதலில் அடையாளத்தை முன்வைத்தல், வேறுபடுத்திக் காட்டல் என்பது முக்கியமானது. நான் வேறுபட்டு இருக்கிறேன், வெளிப்படுத்துகிறேன் என்கிறபோது அது அதிகாரத்துக்கு எதிரான அரசியல் ஆகிறது. இந்த அடையாள அரசியல் தன்னைத் தகவமைத்துக் கொள்ளவேண்டும் என்றால் பிற அடையாளங்களுடன் கட்டாயம் உறவாட வேண்டும். அப்படி இல்லாமல் அது தனிமைப்படுகிறது என்றால் அது மீண்டும் சர்வாதிகாரமாக மாறும். அப்போது உலக அளவில் இருக்கக்கூடிய அடையாளங்கள் அனைத்தும் உலக அரசியலோடு உறவு கொள்ள வேண்டும். உலகத்தன்மை அதே நேரத்தில் சுதந்திரமான என்கிற நிலை அது.

கேள்வி:
அப்படி மற்றதுடன் கலக்கும்போது இதன் அடையாளம் போய்விடாதா?
பதில்: 
ஆம் போய்விடும். கலத்தல் நடக்கும். அடையாளம் என்பது மாறிக்கொண்டே இருப்பது.  அடையாளம் நிரந்தரமானதல்ல. புதிய அடையாளம் அறிதல்முறை, மொழி,  புதிய பண்பாட்டுக்  கட்டமைப்பு இதெல்லாம் வரும்போது புதிய அடையாளம் உருவாகும்.   உலகத்தில் எந்த ஒரு அடையாளத்தையும் தொடக்கத்திலிருந்து வந்ததாகவும் எல்லாவற்றுக்கும் புனித ஆதாரமாகவும் சொல்ல முடியாது. அப்படிப் புனித ஆதாரம் என்று எதுவும் இல்லை. அந்தக் கட்டம் முடிந்துவிட்டது. இவ்வாறான நவீனத்துவத்துக்கு முந்தைய அடையாளம் என்ற பார்வை இன்று இல்லை. அப்படி ஒரு சமூகம் இருந்தால் அது காலனிய மயமாக்கப்பட்டதைப்போலத்தான் இருக்கும். காலனியமயமான சமூகம் தன்னை அரசியல்ரீதியாக நிலைநிறுத்திக் கொள்ளும்போது கலப்பாக அது தன்னை உருவாக்கிக்கொள்ளும்.  ஆப்பிரிக்காவில் ஒவ்வொரு நாடும் கலப்பாகவே இருக்கிறது. 

கேள்வி:
பழங்குடிகளும் இந்தக் கலப்பின மாற்றத்திற்கு வந்தாகவேண்டுமா?

பதில்:
பழங்குடி என்று சொல்ல முடியாது. இனக்குழு மற்றும் நவீனம் இரண்டும் கலந்தது. அது உலகமயமான இனக்குழுத்தன்மையுடன் இருக்கும்.  மற்றதோடும் இணைந்தே இருக்கும். ஒரே அடையாளத்தை உலகமயமாதல் என்பது பிற அடையாளங்களை  மற்றமையாக ஆக்கி எல்லாவற்றையும் அழிப்பதாகவும் ஒழிப்பதாகவும் இருக்கும்.
மற்ற அடையாளங்களுக்கு அர்த்தமில்லை என்று சொல்வது பாசிசம். இதுதான் அதிகாரத்தை நிர்ணயிக்கிறது. தன்னுடைய அடையாள அரசியலை வன்முறையாக்குகிறது. அடையாள அரசியல் வன்முறையாக மாறும் இடம் இதுவே. அடையாளத்திற்கான கட்டுமானம் என்ன என்பதை ஒரு சமூகம் விளக்குகிறது.  மொழித் தூய்மை, சமயத்தூய்மை, பண்பாட்டு நடைமுறைகள்சார் தூய்மை, சடங்குசார் தூய்மை இவற்றின் மூலமாக எந்தத் தூய்மை வருமோ அது உள்மொழியாக ஆக மாறுகிறது. அவ்வாறு மாறும்போது இயக்கமற்றதாக, அறிவற்றதாக, அறிவு மறுப்புச் சமூகமாக அந்தச் சமூகம் மாறும். அப்போது இதன் அரசியல் பொருளாதாரத்தை உலகச் சமூகம் சுரண்டும். இந்தியாவில் மதத்தின் அடிப்படையிலான அடையாளத்தை உருவாக்கல் என்பதும் இவ்வாறானதாக இருக்கிறது. 

ஒரு சமூகம் தன்னை அரசியல், பொருளியல், அறிவியல் இவற்றோடு உறவாடாமல் பண்பாட்டுத்தளத்தில் மட்டுமே வைக்கின்றபோது பண்பாட்டுத் தேசியமாக மதத்தேசியமாக அது இருக்கும். அப்போது அது உலகளவிலான அத்துமீறலுக்கு உள்ளாகும். பண்பாட்டு மையம் , பண்பாட்டு வெறி அல்லது மத மையம், மதவெறி எதுவாக இருப்பினும் இவ்வாறுதான் இருக்கும். 

பண்பாட்டின் இயங்கியல் வரையறை என ஒன்று இருக்கிறது. பண்பாடு என்பது அந்தச் சமூகத்தில் இருக்கக்கூடிய பொருள்கள்,  உற்பத்தி உறவுகள், அறிவியல், அறிவுத்துறை அனைத்தையுமே பரவலாக்குதல்தான் பண்பாடு. அதற்கு எதிராக பழமையை நோக்குதல் என்பது குறியியல்ரீதியான பின்னோக்கிச் செல்லுதல்தான். அப்போது என்ன நடக்கிறது என்றால், ஏற்றத்தாழ்வு வருகிறது. அடுக்குமுறை, அடக்குமுறை, மேலாதிக்கம் உருவாகிறது.
சாதி, பாலினம், இனம், மதம் என எல்லாவித அதிகாரப் படிநிலைகளும் உருவாகின்றன. இதைவிடக் கொடுமையான சமூகப் பாசிசம் உருவாகிறது. அது வருகிறபோது வன்முறை சார்ந்த அழித்தொழிப்பு, உயிர்மறுப்பு சார்ந்ததாக மாறுகிறது. எனவே இங்கு அடையாள அரசியல் என்பது அடையாளத் தூய்மையாக்குதல் அல்ல. தூய அடையாளத்தை மீட்டெடுப்பதோ, தூய அடையாளம் என்ன என்பதைப் பார்ப்பதோ அல்ல. இயக்கமுள்ள அடையாளத்தை பெறுவதற்கான உரிமை.  எனக்கு ஒரு இனம் இருக்கிறது. ஆனால், நான் நவீன அறிவைக் கற்றுக் கொள்வேன். உலகத்தோடு என்னால் உறவு கொள்ள முடியும். இன்று உலக அளவிலான உறவு என்பது சமூகங்களுக்கு இல்லை.  பொருளாதாரத்திற்குத்தான் இருக்கிறது.  அரசுகளும் பொருளாதார நிறுவனங்களும்தான் உலகமயமாகின்றனவே தவிர, அறிவு, பண்பாட்டு உலகமயமாதல் என்பது இல்லை. ஏனெனில் உலகமயமாதல் என்பது மையம் இல்லாதது. அறிவியல் சார்ந்த மனித நடத்தை என்பது உலகம் சார்ந்தது, உலகத்தன்மை சார்ந்தது. அது நமக்கு வரவில்லை.
நமக்கு மட்டுமல்ல பல சமூகங்களுக்கும் அது வரவில்லை. மனித உரிமை,  தனிமனித உரிமை, பல்வேறு பாலினம் சார்ந்த உரிமை, Gender sensitivity , மாற்று உளவியல்,  ஆதிக்கத் தன்மையற்ற – பல்வேறு தன்மைகளை எல்லாவகையிலும் கொண்டாடுகிற- தனிமனித இருப்பை உன்னதப்படுத்தக்கூடிய- பெருமதிப்புடையதாக இருக்கக்கூடிய  இவையெல்லாம்தான் உலகமயமானது. இதற்கெல்லாம் எந்தச் சமூகமும் தனியாக உருவாகவில்லை. உலக அளவில் பல தத்துவங்கள் ஒன்றாகித்தான் வருகிறது.  இதைத்தான்  அடிப்படையில் உலகத் தேசியம் என்கிறோம். உலகத்தேசியம் மற்றும் கம்யூனிசம் என்கிறோம். பண்பாட்டுக் கம்யூனிசம் என்பது இது. உண்மையான உலகமயமாதல் என்பது அறிவு, அறிவாற்றல் முதலிய எல்லாம் எல்லாச் சமூகங்களுக்கும் சென்று சேர வேண்டும் என்பதுதான். அனைவருக்குமான பங்கைப் பெறுவதற்கான ஒரு உரிமை இதெல்லாம்தான் உலகமயமாதல். 

இவ்வாறு இல்லாததனால்தான் பொருளாதார உலகமயமாதல் என்ற  ஒரு தன்மை இன்றைக்கு இருக்கிறது. மூலதனம் உள்ள சமூகம் இன்று தொழில்நுட்பரீதியாக மேம்பட்டு இருக்கிறது. இந்தத் தொழில்நுட்ப முழுமை அடிமை அரசியலை நோக்கியதாக இருக்கிறது. அமெரிக்காவின் பொருளாதாரம் அடிமைத் தொழிலை அடிப்படையாகக் கொண்டது. ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரம் காலனியத்தை அடிப்படையாகக் கொண்டது. இதனால் சமநிலையற்ற போக்கு நிலவுகிறது. எனவே உலக அளவில் ஒரே மாதிரியான அரசியல், பொருளாதாரம் இல்லை. இந்த நிலையில் வாழ்தலுக்கான வளர்ச்சித் திட்டம் என்பது அவர்களுக்கான வளர்ச்சிதானேயொழிய எல்லோருக்குமானது அல்ல. 

வளர்ச்சி அடைந்த சமூகம் வளர்ச்சியைப் பற்றிப் பேச வேண்டிய தேவை என்ன இருக்கிறது. வளர்ச்சி என்றால் எது வளர்ச்சி, எதை வளர்த்த வேண்டும். இந்தியா, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் வளர்ச்சி என்பது என்ன? என்பவை முக்கியமானவை.  

கடந்த ஒரு நூற்றாண்டில் பெரிய அழிவுகள் நடந்திருக்கின்றன. இன்றைக்கு உயிர் வாழ்தல் சார்ந்த, மனித மதிப்பு, மனித கண்ணியம் சார்ந்த, வாழும் உரிமை இவையெல்லாம் முக்கியம். மனிதர்கள் வாழும் இடம் முக்கியம். வாழ்வு மகிழ்வானதாக இருக்க ஒவ்வொருவரும் அனுபவிக்கும் கொடுமைகள் இல்லாமல் இருக்க வேண்டும். நோய்த்தன்மை இல்லாத சூழல், வாழ்வு தேவை. இவையெல்லாம்தான் இன்றைய அரசியல். ஒரு சமூகத்தினுடைய வளர்ச்சிக்கு இன்னொரு சமூகத்தை, வாழ்வைச் சுரண்டுவது என்பது இருக்கிறது. இது இருக்கும்வரை அவர்களின் அரசியல் நிற்காது. முரண்பாடு, போராட்டம் இருக்கும். இனிமேல் என்ன நிகழவேண்டும் என்பதல்ல சிக்கல். எனவே சமூகத்தின் உள் சிக்கல்களைத்தான் பேச வேண்டும். மார்க்சியம் இதைத் தெளிவாக சொல்கிறது. வர்க்கப் போராட்டம், அடையாளம் என்பது அந்தந்த தேசத்திற்கு அந்தந்த சமூகத்திற்கு உரியதாக அவற்றுக்கு ஏற்றதாகத்தான் இருக்கும் என்கிறது. அது மார்க்சியச் செயல் திட்டத்திலேயே இருக்கிறது. ஒரு நாட்டினுடைய உற்பத்தி உறவுகள், அவற்றுக்கு இடையில் உள்ள முரண்பாடுகள், அந்த முரண்பாடுகளைக் கையாளும் முறை இவையெல்லாம் அந்த நாட்டின் சமூக, பொருளாதாரச் சூழல்களுக்கேற்ப அமையும்.

முதலில் நாம் கருத்தியல் ரீதியாக, பார்வை ரீதியாக வேறுபடுகிறோம். ஏனெனில் அறிவு என்பதே முதலில் வேறுபடுத்திப் பார்ப்பதுதான். நாம் அறிவியலை நோக்கிப் போகிறோம். அந்த அறிவியலில் இருந்து புதிய அறிதல் முறையை உருவாக்குகிறோம். இந்த அறிதல் முறை அறவியல் மற்றும் மனிதப் பார்வையைக் கொடுக்கிறது. இந்த இடத்தில் கம்யூனிசம் மனித நலம் சார்ந்த செயல் திட்டங்களைப் பார்க்கிறோம். இது ஒரு தேசியக் கட்டுமானமாகக் கூட இருக்கலாம். ஒரு சமூகத்தை உருவாக்குதல், தேசத்தை உருவாக்கல் என்பவை எல்லாம் கம்யூனிசத் திட்டம் இல்லாமல் செய்ய முடியாது. நவீன தேசம் என்பதற்கான  உந்து சக்தி அல்லது வழிகாட்டு நெறிமுறையே கம்யூனிசம்தான். கம்யூனிச திட்டம் இல்லாமல் ஒரு தேசம் உருவாக முடியாது. அது இல்லையென்றால் பாசிசமாகவே அது இருக்கும். 

கம்யூனிசம் ஏதோ வெளியில் இருக்கக்கூடிய அழிவு சக்தி இல்லை. அது போர் அல்லது ஆயுதமாக வருகிறது என்பதல்ல. போர் இயந்திரமோ, இராணுவமோ, படையோ அல்ல. 

கம்யூனிசம் என்பது சட்டத்துறையில் இருப்பது. நீதித்துறையில், நிர்வாகத் துறையில், அரசு இயந்திரத்துறையில், தேசக்கட்டமைப்பில் இருப்பது. கம்யூனிசம் சமூகத்தின் அனைத்து உறுப்புகளிலும் இருப்பது. நவீன சமூகத்தின் உந்து சக்தியே கம்யூனிசம் தான். கம்யூனிசத்தில் இருந்து குறைவதை வைத்தே நாம் சோசலிசம், ஜனநாயகம், Liberal democracy சுதந்திர ஜனநாயகம் என்றெல்லாம் சொல்கிறோம். பிரான்சிஸ் ஃபுகுயாமா  (Francis Fukuyama, The End of History and the Last Man) போன்றோர் கம்யூனிசம் இனி உருவாக முடியாது. சுதந்திர ஜனநாயகம்தான் வளர்ச்சியடைந்த அல்லது மேம்பட்ட ஒன்று என்கிறார்கள். ஏனென்றால் அதில் சுதந்திரத்தன்மை, சமத்துவம் முதலின இருக்கின்றன,  மனித உரிமைகள் பாதுகாக்கப்பட்டிருக்கின்றன என்கிறார் அவர்.

இந்த சுதந்திரம், சமத்துவம், ஜனநாயகம் எல்லாம் எங்கிருந்து வருகின்றன. இவையெல்லாம் கம்யூனிசத்தின் செயல் திட்டமே. கம்யூனிசத்தின் குறைதல் அல்லது கம்யூனிசத் திட்டத்தின் விகிதாச்சாரம் நவீனத்துவம். அமெரிக்காவின் கோட்பாடு வேறு. ஆனால் அரசியல் சட்டம் என்ன சொல்கிறது. சமத்துவம், நீதி, மகிழ்வான மனித வாழ்வு, சுதந்திரம் இதை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. இது கம்யூனிசத்தின் செயல்திட்டமே. இது ஏற்கெனவே இருந்த கிரேக்க சமூகத்தின் அடிமை நகரமல்ல. இது சுதந்திரமுடையவர்களின் தேசம். இது சுதந்திரமான தேசம். இது அடிமையற்றவர்களின் தேசம். கோட்பாட்டில் கம்யூனிசச் செயல் திட்டம் இருக்கு. ஆனால் அந்தச் சமூகம் அடிமைகளை வைத்திருக்கிறது. 1776 இல் இருந்து உருவான தேசம் இது. இதுதான் ஜனநாயக அடிப்படையில் உருவான சுதந்திரக் குடியரசு. இந்தக் குடியரசென்பது வெள்ளை மையமாக இருக்கிறது. ஆப்பிரிக்கக் கருப்பின மக்களை மனிதர்களாக எடுத்துக்கொள்ளாததால் human dignityயை கண்ணியத்தை அவர்களுக்குக் கொடுக்கவில்லை.  மனித மகிழ்வு, சுதந்திரம், நீதி என்பவையெல்லாம் அவர்களுக்குத் தேவையில்லை என்பதெல்லாம் வெள்ளைமையவாதம்தான். சுதந்திரமடைந்தவர்களின் சமூகத்தில் அடிமைத்தனம் ஏன் இருக்கிறது என்பதுதான் கேள்வி.

புவியியல் ரீதியாகக் குறிப்பிட்ட இடத்தில் இருந்த அடிமைத்தனம் 18,19 நூற்றாண்டில் உலகம் முழுமைக்கும் ஆயிற்று. ஐரோப்பாவில், பிரிட்டனில் அடிமைத்தனத்தை ஒழிக்கத் தொடங்கினார்கள். 1820களில் ஏறக்குறைய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கைக்கு முன்பு அடிமைத்தன்மையை ஒழிக்கிறார்கள். ஆனால் அமெரிக்கா 1865 வரைக்கும் அதற்கான  போர் செய்ய வேண்டியிருந்தது ஒருநூற்றாண்டுக்கும் மேல். இன ஒதுக்குதலுக்கு 1965, 1968,1970 களில்தான் அமெரிக்கச் சமூகம் அரசியல் ரீதியாக இனச் சமத்துவ உரிமைக்கு வருகிறார்கள். முரண்பாடற்ற சமூகம் என்று இல்லை அது.  ஆனால் எதை நோக்கி அந்தச் சமூகம் அமைக்கப்படுகிறது என்றால், சுதந்திரம், சமத்துவம், நீதி முதலியவற்றை நோக்கியது. எல்லாமே சுதந்திரம் என்பதை அடிப்படையாகக் கொண்டது. ஒரு கம்யூனிச சர்வாதிகாரம் அல்லது பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தில் (proletarian dictatorship) சுதந்திரம் இல்லையென்றால், சுதந்திரம் இல்லை என்று சொல்கிறோம், ஆனால் அதுதான் சுதந்திரம் என்று சொல்வதில்லை. இங்கே சுதந்திரம் என்பதைப்பற்றிய தொடர்ந்து கேள்விகள்தான் இருக்கின்றன. இது கம்யூனிச மனநிலை, கம்யூனிசம் ஆகிறநிலைதான் இருக்கிறது. காந்தியைக் கடந்த காந்தியம் என்பதும் அம்பேத்கரியம் என்பதும் கம்யூனிசத்தை நோக்கியது. எல்லாவற்றையும் இதனோடுதான் உரையாடுகிறோம். 
எங்கெல்லாம் நீதியற்ற சமத்துவமற்ற போக்கு இருக்கிறதோ அதை எல்லாம் கம்யூனிசம் நோக்கிய பார்வையில் இருந்துதான் நாம் அணுகுகிறோம். கம்யூனிசமே அளவுகோலாக இருக்கிறது. நீதி, அறம் என்பவை மனித சமூகத்தின் முக்கியமான கட்டமைப்புகள். அப்படி இல்லையென்றால் எல்லா வன்முறைகளும் நியாயப்படுத்தப்படும். அதுதான் வன்முறைகளின் வரலாறு. இதனால்தான் நாம் தேசமாக குடியாட்சிச் சமுகமாக இருக்கவேண்டுமென்பது முக்கியமானதாகிறது. இல்லையென்றால் நாம் தேசம், குடியாட்சி என்று பேச வேண்டிய அவசியம் இல்லை. ஒவ்வொரு மனிதர்களையும் நிராயுதபாணியாக்கி, போராட முடியாதவர்களாக, போர் செய்ய முடியாதவர்களாக மாற்றி அவர்கள் மேல் ஒரு அரசாக, எந்திரமாகச் செயல்பட்டு கொலை, வாழ்வழிப்பின் வழியாக நிறுவப்படும் அமைப்பாக இது மாறுகிறதெனில் அது வன்முறைகளின் அடிப்படையிலானது. ஒவ்வொரு அரசும்  தனிமனித உயிர், உடலைக் கொலைசெய்யும் அதிகாரத்தை நிறுவியிருக்கு.

19-ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட புரட்சி அரசின் அழித்தொழிப்புகளுக்கு எதிரானதாக அமைந்தது. புரட்சியென்பது அரசோ,  மன்னராட்சியோ, இராணுவமோ எதுவாயினும் நம்மை அழித்தொழிப்பதற்கான உரிமையில்லை என்று அதன் வன்முறைக்கு எதிரான அரசியல். அதிகாரத்தின் ஒடுக்குமுறையும் அதற்கு எதிரான புரட்சியும் சேர்கிறபோது அது இறப்பின் சுழற்சியாக மாறுகிறது. அதிகாரம் அழித்தொழிப்புக்கான உரிமையை எடுத்துக் கொள்ளும்போது அதற்கு எதிரான போராட்டத்தில் மக்கள் அழிவு, இறப்பு நிகழும். இது தவிர்க்க முடியாத சிக்கல்தான். அப்போது இன்றைக்குப் புதிய மனித அடையாளம். அதாவது புதிய கருத்தியலைச் சொல்கிறோம். இன்றைக்கான கருத்தியலாக்கத்தை புதிய மொழி, புதிய குறியீடுகளால் உருவாக்குகிறோம். இந்தக் கருத்தியல்களின் வழியாக பாசிசத்துக்கு எதிரான, மேம்பட்ட வாழ்வுக்கான நிலையை அடையதல் முதன்மையானது. இந்த இடம் முக்கியமானது. கம்யூனிசம், பின்நவீனத்துவ பார்வை, பின்நவீனத்துவ அறம், பின்நவீனத்துவ மற்றமை, பன்மைத்துவம், அனைத்தையும் உள்ளடக்கித்தன்மை இவையெல்லாமே பின்நவீனத்துவ அரசியல் கலைச்சொற்களே. இந்த இடத்தில் மார்க்சியம், கம்யூனிசம், பின்  கோட்பாடுகள் (Post theories ) எல்லாம் வருகின்றன. முதலாளித்துவம் என்பது பின்நவீனத்துவ உத்தியைக் கொண்டது. அதற்கு நிறைய முறைகள் இருக்கின்றன. பின்நவீனத்துவம், பின்நவீனத்துவ கம்யூனிசம், பின்நவீனத்துவ உரிமை எல்லாம் ஒரே இடத்தில் இல்லை. ஆனால் ஒரு தொடர்புறவு இருக்கத்தான் செய்கிறது. இதையெல்லாம் ஏதாவது ஒரு பெயரால் அழைக்க வேண்டுமெனில் கம்யூனிசம் என்று சொல்லலாம். ஏன் நான் கம்யூனிஸ்டாக இருக்கக் கூடாது. இந்த இடத்தில்தான் நான் அடிக்கடி சொல்வது கம்யூனிஸ்ட் என்பது  A process of Becoming. நான் என்னவாக மாறுகிறேனோ அது உருவாதல் நிலை. நான் என்பது தனியாக இல்லை. நான் எதுவாக மாறவேண்டும். எதை நோக்கிச் செல்கிறோமோ அதுவாக மாறவேண்டும். அந்த இடத்தில் கம்யூனிசப் பார்வை, கம்யூனிச உளவியல் வருகிறது. கம்யூனிஸ்ட் அல்லாதவர், கம்யூனிசத்துக்கு எதிரானவர் என்றால் அவர் வன்முறையை ஏற்கக் கூடியவராகவும் வன்முறையைச் செலுத்தக்கூடியவராகவும் மாறுகிறார். ஆனால் கம்யூனிசப் பார்வையுடன் வருகிறவர்கள் தங்கள்மேல் வரும் வன்முறையை எதிர்ப்பதோடு தங்கள்மூலமாக வன்முறை உருவாக்காமலும் இருப்பார்கள். இந்த இரண்டுக்கும் இடையில் இருக்கும்போது ஒரு பிளவு இருக்கும். இதுதான் கம்யூனிச உளவியல். அதனால் நடைமுறைப் படுத்தமுடியாத, நடைமுறையில் இல்லாத ஒன்றை எப்படி கோட்பாடாக வைப்பது என்றால், வாழ்வு என்பது பல்வேறு குறியீடுகள், கற்பனைகளாலானது. அறிவியல் என்பது எல்லாவற்றையும் மாற்றமுடியும் என்பது. ஒவ்வொன்றையும் உருவாக்க முடியும் என்பது. பாசிசத்தை, அறிவியலை, உலகமயத்தை உருவாக்க முடியும் என்றால் கம்யூனிசத்தையும் உருவாக முடியும். எல்லாமே ஒருவித மாற்றத்துக்கான திட்டம்தான். ஒவ்வொரு தனிநபரையும் உருவாக்குவதற்கான திட்டம்தான். 

கேள்வி:
இதுபோன்ற உலகத்தன்மையிலான பார்வையை நாம் முன்வைக்க முடியுமென்பது முக்கியமானது. ஆனால் இந்தியாவில், தமிழகத்தில் இவ்வாறான பார்வைகளை முன்னெடுக்க இயலாமல் இருப்பதற்கான தடைகள் என்னவென்று நீங்கள் நினைக்கிறீர்கள்? இதன் இன்னொரு பகுதியாக மார்க்சியக் கருத்தியலைக் கொண்டுள்ளவர்கள் இந்த நிலையை இங்கு எப்படி எதிர்கொள்கிறார்கள்? காந்தி, அம்பேத்கர், பெரியார் முதலிய சிந்தனைகளுடன் உலகளாவிய பார்வையை இணைத்து நோக்க வேண்டும் என்கிறீர்கள். இதையெல்லாம் எவ்வாறு பார்ப்பது?

பதில்:
மாறுபடும் கேள்விகளுடன் மார்க்சியம் என்ற என்னுடைய நூலே இதைப்பற்றியதுதான். மார்க்சியம் என்பது எல்லாவிதக் கேள்விகளுடன் உரையாடுகிறது. தெரிதாவின் கட்டுடைப்பு என்பது மொழிசார்ந்த கட்டமைப்பை விளக்கிச் சொல்வது. இந்தப் பாரவையுடன் மார்க்சியத்தை இணைத்து உரையாடல் செய்யலாம். மார்க்சிய உளவியலை லெக்கானுடன் இணைத்து நோக்கலாம். மொழி, அறிவு என்பதில் எந்தெந்த இடத்தில் metaphysics, எந்தெந்த இடத்தில் logocentric  இருக்கிறது என்பதைப் பார்க்கிறோம். ஒரு மொழி ஏற்றத்தாழ்வை உருவாக்குகிறது. ஒரு அமைப்பு ஏற்றத்தாழ்விலிருந்து ஆரம்பிக்கிறது என்பது தெரிதியன் புரிதல்முறை. ஒரு திட்டமாக வந்துவிட்டபிறகு அந்த ஆய்வுமுறையை ஏற்க வேண்டும். ஃபூக்கோவின் உடல் (body), விளிம்பு (Marginality)மற்றும் அதிகாரம்(Power), நுண்ணரசியல் (Micropolitics) முதலிய கருத்தாக்கங்கள் வருகின்றன. கம்யூனிசச் சமூகத்தின் மதிப்பீடுகள் கம்யூனிச சமூகத்திற்கும் பாசிசச் சமூகத்துக்கும் ஒரேமாதிரி இருக்கும்போது அதை மாற்ற வேண்டும். அதாவது உடல்மீதுள்ள ஒரேமாதிரியான விதிகள், அதிகாரம், உழைப்பைப் பிழிந்தெடுப்பது என்று இருப்பதை மாற்ற வேண்டும். அடக்குமுறைச் சமூகத்தின் அதே கூறுகளைக்கொண்டு புதிய சமூகத்தைக் கட்டமுடியாது. எனவே ஃபூக்கோவின் நுண்ணரசியலைப் பேசியாக வேண்டும். இந்தியாவுக்கு வரும்போது அம்பேத்கரியத்தின் மூலமாகவே செயல்படுத்த முடியும். இந்தியாவில் சாதி, மதம், இனம் இவைகளே மொத்தச் சிக்கலுக்கும் அடிப்படைகள் என்று மார்க்ஸ் சமூக அறிஞராக மூன்று பத்திகளில் சொல்லியிருக்கிறார். இதை மறந்துவிட்டு மார்க்சியத்தைப் பேசமுடியாது. அம்பேத்கரின் ஆய்வுகள் இந்தச் சிக்கல்களையே அடிப்படையாகக் கொண்டவை. எனவேதான் இந்தியாவுக்கு வரும்போது அம்பேத்கரியத்தை முன்னெடுக்கிறோம்.
பிறகு இன்னொன்று காந்தியம். இது சிக்கலான ஒன்று. நிறைய உருவகங்கள், குறியீடுகள், சடங்குகள் இருக்கும். இருந்தாலும் இந்தியச் சமூகத்தில் அரசியல் மயமாதல், போரற்ற மாற்றம், முதலாதிக்கம் -பொருளுற்பத்தி – இயந்திரமயமாக்கல் இவைசார்ந்த அந்நியப்பட்ட வாழ்முறைக்கு எதிராக உழைப்பு சார்ந்த இயற்கை சார்ந்த செயல் திட்டங்கள் இருக்கின்றன. அதில் கம்யூன் அமைப்பு இருக்கு. 19, 20 ஆம் நூற்றாண்டில் உருவான புதிய கம்யூனிசச் சமூகத்தின் கூறுகள் இங்கே என்ன இருக்கின்றன என்று பார்க்க வேண்டும். 
அவ்வாறு பார்க்கும்போதுதான் இடைநிலையில் இருப்பவர்களை அரசியல் மயப்படுத்தல் வருகிறது. உடல்ரீதியாக யாரும் நல்லவர், தீயவர் என்று இல்லை. கருத்தியல் நிலைப்பாட்டிற்கு, கருத்தியல் புரிதலுக்கு ஒருவர் வரமுடியுமென்றால் அதற்கு இடைப்பட்ட சமூகவியல்பார்வை
காந்தியத்தில் இருக்கிறது. 

கேள்வி:
உங்கள் கிரணம் கவிதைகள் பிரமிள் பாதிப்புடன் எழுதப்பட்டதாகச் சொல்லப்பட்ட போது நீங்கள் அதனை எவ்வாறு எதிர் கொண்டீர்கள்?
பதில்:
தமிழில் அதுவரை எழுதப்பட்ட அனைத்து வகைக் கவிதைகளையும் வாசித்து பிடித்தவைகளை மனதில் வைத்து அப்படி இருக்கக்கூடாது என எழுதப்பட்டவைதான் கிரணம் காப்பியங்கள். பிரமிள் உலகமும் பிரேதாவின் உலகமும் நேரெதிரானவை. அவருடையவை அப்பாலை, உன்னத மனித நிலை, புனித கற்பிதங்கள் போன்றவற்றைத் தம் உள்ளடக்கமாகக் கொண்டவை. எனது எழுத்துகள் சாராம்சம், புனிதம், மனித மையவாதம் போன்றவற்றை மறுதளித்த மொழி வழி மனித நிகழ்நிலையை அடிப்படையாகக் கொண்டவை. அனார்க்கிச நிகழ்த்துநிலை கவிதைகள் எனது. அதனால்தான் பிரமிள் என் கவிதைகளை வசையால் எதிர் கொண்டார். ஆபாசம் என்றார், பாலியல் பிறழ்ச்சி என்றார். தேவதேவன் கிரணம் காப்பியங்கள் பற்றி வியந்து எழுதியபோது அவரைக் கடிந்து வசை மொழிந்தார்.
கேள்வி:
எழுத்தாளர்களின் எழுத்தாளர் என்றும் பல வகைமைகளில் எழுதுகிறவர் என்றும் அடையாளம் உங்களுக்கு இருந்தும் உங்களைப் பற்றி குறிப்பிடுவது தவிர்க்கப்படுவது ஏன், நீங்கள் களத்தில், தலித் அரசியலில் நேரடியாக வெளிப்படையாக ஈடுபடுவது காரணமாக இருக்குமா?

பதில்: என் எழுத்துகள் பற்றி எழுதும் அளவுக்குத் தமிழில் கோட்பாட்டு நுட்பம் கொண்டவர்கள் குறைவு, எனது எழுத்துகளை வாசித்து அதன் கருத்தியல் தரவுகளை அடிப்படையாக வைத்து எழுதுகிறவர்கள் கூட எனது அரசியலில் இருந்து விலகி இருப்பவர்கள். நீங்கள் தலித் அரசியலில் நேரடியாக ஈடுபடுகிறீர்கள் அதனால் உங்கள் கவிதைகளை இனி குறிப்பிட்டு யாரும் எழுதமாட்டார்கள் என கவலையுடன் சில நண்பர்கள் குறிப்பிடுவது ஒரு பகுதி உண்மையே. ஆனால் எனது நூல்கள் தொடர்ந்து வெளிவருகிறன்றன, வாசிக்கப்படுகின்றன. ஜமாலன் போன்ற பின்நவீன நுட்பம் அறிந்தவர்கள்தான் எனது எழுத்துகள் புனைவுகள் பற்றி எழுத முடியும், மற்றவர்களால் இயலாது, அதனால் ஒன்றும் குறைந்து விடப் போவதும் இல்லை.

கேள்வி: இனி வெளிவரப்போகும் உங்கள் எழுத்துகள் பற்றிக் கூறுங்கள். சொல் எரிந்தவனம், புறாத்தோட்டம் தொகுதிகளில் உள்ள கவிதை வகைமைகளை தொடர்ந்து எழுதுவீர்களா?
பதில்: 2019 முதல் எனது கவிதைகள் எனது புனைவெழுத்துகள், கதையெழுத்துகள் தொடர்ந்து வெளிவருகின்றன. நிகழ்த்து நிலை கவிதைகள் எனக்குப் பிடித்தமானது. வேறொருவராக இருந்து எழுதப்படும் கவிதைகள். அவை இனி ஆண்டுக்கு ஒரு தொகுதி வெளிவரும். இந்த ஆண்டு இது வரை முற்றுப் பெறாமல் இருந்த நெடுங்கதைகளும் எழுத்தாக்க எழுத்துகளும் (நாவல்கள்) வெளி வர உள்ளன. அம்பேத்கர் பற்றிய விரிவான ஒரு நூல் உருவாகி வருகிறது. திரைக்கான எழுத்து எனது எழுத்தில் புதிய ஒரு இணைப்பு, அது புதிய களங்களை நோக்கி என்னைச் செலுத்தும் என நினைக்கிறேன்.

கேள்வி: தமிழ் ஈழம் என மொழித் தேசம் உருவாவதை பின்நவீனத்துவ நிலையில் இருந்து ஆதரித்து எழுதிய நீங்கள், போர் முறை அரசியலை மறுத்து எழுதுகிறீர்கள். இது முரண்பாடாக உள்ளது.
பதில்: மொழி, இன, மண் சார் அடையாளங்களின் அடிப்படையில் ஒரு நாடு, தேசம் தனித்துச் செல்லவும் வாழவும் விரும்பினால் அதனை மறுப்பது பெரும் வன்முறை. அதே சமயம் மொழி, இனம், மண் சார் உணர்வுகளின் அடிப்படையில் மக்களை ஆயுதமுடையவர்களாக்கி போரில் ஈடுபடுத்திக் கொன்றொழிப்பதும் பெரும் வன்கொடுமை. விடுதலைப் புலிகள் இயக்கம், படை இதனைச் செய்தது. நான் போர் முறை அரசியலை எதன் பெயராளும் ஆதரிப்பதும் ஒப்புவதும் இல்லை. ஆனால் போரும், மோதலும் அரசுகளால் உருவாக்கப்பட்டு, மக்கள் மீது திணிக்கப்படுகின்றவை என்பதை நான் பல கட்டுரைகளில் விளக்கியும் இருக்கிறேன். விடுதலைப் புலிகள் மட்டுமல்ல எல்லா போராளிக் குழுக்களுமே பெரும் பிழை செய்திருக்கிறார்கள். இனி அந்தப் பிழை நடக்கக்கூடாது. தமிழ் ஈழம் பிறகு எப்படி உருவாகும்? தேவையெனில் மக்கள் அதனைப் போரின்றி உருவாக்கிக் கொள்ளும் சூழல் உலக அரசியலில் உருவாகலாம்
கேள்வி: இவ்வளவு காலம் அம்பேத்கரிய பௌத்தராக உங்களை அறிவித்திருந்தீர்கள். தற்போது இஸ்லாத்தைத் தழுவி உங்கள் புதிய பெயரை அறிவித்திருக்கிறீர்கள். இது எதிர்பாராத ஒன்றாக உள்ளது. இதற்கான காரணம்?
பதில்: ஆம், நான் இஸ்லாத்தை எனது மார்க்கமாக ஏற்று அல் ஷாபாஸ் ஆஷிக் என்ற பெயரை அறிவித்திருக்கிறேன். இந்தியச் சமூகமும் அரசியலும் அச்சுறுத்தும் வடிவத்திற்கு மாறியுள்ளது, இன்னும் கடுமையாக மாறலாம். சாதிவெறியும் தற்போது நவீன தொழில் நுட்ப உதவியுடன் கொடு வடிவம் பெற்றுள்ளது. இனியும் ஹிந்து அடையாளத்தில் இருப்பதை நான் விரும்பவில்லை, அது எனது உளஅமைப்பை மிகுந்த உளைச்சலுக்கும் வலிக்கும் உள்ளாக்குகிறது. நான் அடிப்படையில் எனது அடையாளத்தை மாற்றி அமைக்க வேண்டும். அதற்குப் பௌத்தம் பொருந்தாது. பத்து அவதாரங்களில் ஒன்றாகப் புத்தனைத் தன்வயப்படுத்தியுள்ள சானாதன-ஹிந்து பெரு மரபு பௌத்தத்தைச் செயல்பாடற்றதாக, ஒரு அமைதி அமைப்பாக மாற்றி விட்டது. ஆனாலும் நான் என்றும் பௌத்த அறம் மற்றும் மெய்விளக்க முறைக்கு மாணவனாகவே இருப்பேன். இஸ்லாம் எனக்கு கம்யூனிஸ்டாகவும், தலித் அரசியலில் இயங்குபவனாகவும் இருக்க அனுமதிக்கிறது. எனக்கான வேறு உளவியல் காரணங்களும் உள்ளன. அது பற்றி விரிவாக தனி நூல் ஒன்றை எழுத இருக்கிறேன். நான் உலக சமயங்கள் அனைத்தைப் பற்றியும் விரிவாகவே வாசித்து அறிந்திருக்கிறேன். அதில் மால்கம் எக்ஸ் கண்ட இஸ்லாத் எனக்கு அணுக்கமாக உள்ளது. பிலாலின் அல்லாஹ் அக்பர் குரல் என்னை அறியாமல் உள்ளே ஒலித்துக் கொண்டே இருக்கிறது. இனி நான் யார் முன்னும் தலை வணங்கத் தேவையில்லை, எனக்குக்கீழாகவோ, எனக்கு மேலாகவோ யாரும் இல்லை… அரசும், அதிகார அமைப்புகளும் எனக்கு வெறும் சொற்களே. எனது “கனவில் பெய்த மழையைப் பற்றிய இசைக்குறிப்புகள்” கதையில் ஒலிக்கும் அல்லாஹ் என்ற அடைக்கள ஒலி… நான் மனத் தடுமாற்றமும் வலியும் கொண்டவனாக எழுதாத நேரங்களில் இருந்து அலைக்கழிகிறேன்… எனது வாழ் நாளில் சாதியற்ற இந்தியச் சமூகத்தைப் பார்க்கப்போவதில்லை, சமநீதி மனித அமைப்பில் ஒரு நாள் இருந்து மடியப் போவதில்லை… பெண்ணிய நிகழ்நிலையில் நான் பங்கு பெற்று கரையப் போவதில்லை ஆனால் அவற்றிற்காவே எனது உள்ளமும் உடலும் ஏங்கிக் கிடக்கிறது… எழுதி வாழ என்னை உந்தும் தலித் அரசியலும் என்னை ஊக்கப்படுத்தும் தோழர் தொல். திருமாவளவனும் எனக்குப் பித்துப் பிடிக்காமல் பார்த்துக் கொள்கிறார்கள். ஆனால் தனிமையில் நான் அல்லாஹ் என்றே அடைக்களமாக முடிகிறது. அதற்கு நான் ஓவியர் ரஃபிக் அகமதுக்கு நன்றி சொல்ல வேண்டும். பிஸ்மில்லா கானின் ஷெனாய் என்னைச் சில மணிநேரங்கள் உறங்க வைக்கிறது…அவரை 2005 இல் அவர் முன் தரையில் அமர்ந்து கேட்டதும் அவர் கைப்பற்றி அன்பைத் தெரிவித்ததும் துயருற்ற காலங்களில் நினைவில் வந்து என்னைக் குழந்தையாக்குகிறது….நுஸ்ரத் ஃபத்தே அலிகானின் குரல் என்னை ஒவ்வொரு நாளும் விழிக்க வைக்கிறது…