இரு வடிவான இருப்பு பல வகையான எழுத்து

பிரேம், பிரேதா என இரு எழுத்துருவம் கொண்ட தமிழின் பின்நவீனத்துவ படைப்பாளியுடன்
ஒரு கலைந்துரையாடல்
(கலைந்த உரையாடல்)

பதிவும் எழுத்தும்
இலக்கிய ஆய்வாளர் க. ஜவகர்
கவிஞர். அருள் வளவன்,

கேள்வி: எப்போது எந்தச் சமூக, அரசியல் பின்னணியில் எழுத வந்தீர்கள்?

பதில்: சாதி வெறியும், சமயப் பித்தும் கொண்ட ஒரு குடும்பத்தில் வளர்ப்புப் பேரனாக நான் இருந்தேன். பத்து வயது வரை எனது அம்மை, அப்பனுடன் நான் வாழவில்லை. அப்பா மனநிலை பாதிக்கப்பட்டு தினம் தினம் ஒரு அவமானத்தை வரவாகப் பெற்றவர். கண் பார்வையில் குறைபாடு கொண்டிருந்த தையல்காரர், பின்னாளில் முழுமையாகப் பார்வையிழந்து 20 ஆண்டுகள் புற இருளில் வாழ்ந்தவர். மனத்தடுமாற்றம், பார்வையின்மை இரண்டுடனும் அவர் இந்தியாவின் சில நகரங்களில் தையல் வேலை செய்வார். அம்மாவோ வீட்டு வேலை, இட்டலிக் கடை என வயிற்றுப் பாட்டை கவனித்துக் கொண்டார். அகமதாபாத், பெங்களூரு என அப்பா ஒரு அலைகுடியாக என் அம்மாவையும் அலைக்கழித்தார். நான்கு பிள்ளைகள் பிறந்த பின் அவர் அலைவதை நிறுத்திக் கொண்டார். ஆனால் காடாறு மாதம் வீடாறு மாதம் என வாழ்ந்து எங்கள் நெற்றியில் அவமதிப்பின் கோடுகளைக் கீறிவிட்டார். என் தாய் வழித் தாத்தா ஒரு மந்திரவாதி, மருத்துவர், லிங்காயத வீரசைவர். அவருடைய முதல் பேரன் என்கிற வகையில் என் மீது அளவற்ற பாசத்தைக் கொட்டிப் என்னைப் பாழடித்தார். அவர் பற்றி தெரிந்து கொள்ள எனது “மகாமுனி” கதையை நீங்கள் படிக்க வேண்டும். மரமேறி, மதுக்கடை நடத்தி, மக்கள் தலைவர் சுப்பையா, எதுவார் குபேர் போன்ற புதுவைத் தலைவர்களுடன் பழக்கம் கொண்டவராக இருந்தார். பின்பு கள்ளுக்கடையை விட்டு மருந்துக் கடையும், மளிகைக் கடையும் வைத்து லிங்காய கிராமணியார் என சுத்துப் மக்களிடம் பெருமை பெற்றவர். நாடி பிடித்து உனக்கு இது இப்படி இருக்கிறது என்பதைச் சொல்லி மருந்து கொடுத்து விடுவார் அல்லது செய்முறையைச் சொல்லி அனுப்பி வைப்பார். தினம் 10, 20 பேர் வீட்டு வாசலில் நிற்பதை நான் பார்த்திரு்கிறேன். காலையில் அவருடன் பூசை செய்ய குட்டி பூசாரியாக நான் 2 வயதிலிருந்து 13 வயது வரை இருந்தேன்.
இரண்டரை வயதில் எழுதப் படிக்க கற்றுக் கொடுத்த என் தாய் மாமன் பிரஞ்சுக் கல்வி பெற்றவர், ஆசிரியர் வேலைக்குச் செல்ல ஏக்கம் கொண்டிருந்த அவருக்கு தீங்காக வந்து அமைந்தவர் அவருடைய அண்ணன். ஒரு பிரஞ்சு மத்மசோலை காதலித்து தாய்மை அடையச் செய்ததால் பெரும் கலவரம் ஏற்பட்டு தன் பிரஞ்சுக்கார காதலியுடன் இறப்பில் ஒன்று சேர்ந்தார். அது முதல் தாய் மாமனுக்கு ஆசிரியர் வேலை பறிபோனது. ஆனால் இரவுப் பாடசாலை நடத்தி தன் ஆசிரியத் தாகத்தைத் தணித்துக் கொண்டார். அவர் எனக்கு தமிழும் பிரஞ்சும் படிக்கக் கற்றுக் கொடுத்த போது இரண்டரை மூன்று வயது. அவரை பாடசாலையில் மாமா என்று நான் கூப்பிடக்கூடாது, முசே என்றுதான் கூப்பிட வேண்டும். மதாம், முசே, எக்கோல், கிரயோங், ஒப்பித்தால் எனப் பேசிய கடைசி தலைமுறை எனது. தமிழைப் படிக்கக் கற்றுக் கொண்ட நான் பிரஞ்சைக் கற்றுக் கொள்ளவில்லை. பிரஞ்சுக் குடியுரிமை பெற்ற உறவினர்களைக் கொண்ட குடும்பம் என்பதால் பிரான்ஸ் செல்வது ஒரு மரபுரிமையாக இருந்தது. ஆனால் எனக்கு பிரான்ஸ் செல்வது பிடிக்க வில்லை. நான் வெறிகொண்ட முருக பக்தனாக, காளி உபாசகனாக இருந்தேன். பார்த்துப் பார்த்து பத்திகளை எழுதிவிட்டு பிரஞ்சை கற்காமல் இருந்தேன்.

இரண்டு தெருக்களைக் கொண்ட எங்கள் ஊரில் தினத்தந்தி படிக்க நான் தேவைப் பட்டேன். பாக்கிஸ்தானுடன் இந்தியா போர் செய்த காலத்தில் நான் செய்தி வாசிப்பாளனாக மாறியிருந்தேன். அச்சில் இருப்பவற்றுடன் இல்லாதவற்றையும் சேர்த்துப் படிக்கும் பழக்கம் வந்த போது நான் கதை விடும் காளிதாசனாக புனைவு கட்டும் புஷ்பராஜனாக மாறியிருந்தேன். ஏழாம் வகுப்பு படிக்கும் போது புதுவையைத் தமிழ்நாட்டுடன் இணைக்க ஏற்பாடு நடந்தது. கம்யூனிஸ்ட் கட்சி அதனை எதிர்த்து தொடர் போராட்டம் நடத்தியது. எனது தாத்தாவும், மாமாவும் ஆண்டி கம்யூனிஸ்டுகள், சாதி வெறியர்கள். அதனால் நான் மெல்ல கம்யூனிஸ்டாக, சாதி அமைப்பை வெறுப்பவனாக மாறினேன்.
கிராமணி, படையாட்சி எனக் கலந்து கிடந்த உறவினர்கள் பஞ்சம சாதிகள் மீது வெறுப்பைக் கொண்டிருந்தனர். ஆனால் தாத்தா வழி எனக்கு அருந்ததிய பாட்டி ஒருவர் இருந்தார். தோப்பு ஒன்றில் அவர் தனித்து வாழ்ந்து வந்தார். அவர் என்னை கம்யூனிஸ்டாக ஆக்கினார் என்றுதான் சொல்ல வேண்டும். பெரியாரில் தொடங்கி மார்க்சிய லெனினியத்தில் வந்து முட்டி நின்ற போது கவிதை போல ஒன்று பெருக்கெடுத்து ஓடியது. பிரேமி என பிரியமாக அழைத்த ஒரு தோழிக்காக நான் “ஏசுவே ஏழை எங்களைக் காக்கவா, பாசமே கொண்டு பாவிகள் எங்களை மீட்கவா” எனப் பாடல்கள் எழுதத் தொடங்கி பின் புரட்சிகர நாடகத்திற்காக “வேர்வை சிந்தி உழைத்தாலும் வேளா வேளைக்குச் சோரில்லை, பார்வை தொடும் தூரம் மட்டும் இருளைத் தவிர வேறில்லை” என்ற பாடல்களை எழுதி பாரதி, பாரதிதாசனைக் கடந்து காமராசன் கவிதைகள் வழி வேறு ஒரு இடம் அடைந்தேன். என் மேல் பாசம் கொண்ட இருவர் பிரஞ்சுக் கவிதைகளை அறிமுகம் செய்து அது போல எழுதிப் பார் என்ற போது “வெள்ளையம்மா வந்ததடி உன் களைக்கு ஆபத்து” எனக் கிரணம் வரை வந்து சேர்ந்தேன். மற்றவை தமிழிலக்கிய வரலாறு, அது பற்றி நான் கூறத் தேவையில்லை. கி.மு (கிரணத்திற்கு முன்) கி.பி (கிரணத்திற்குப் பின்) என அந்த வரலாற்றை எழுத இயலும், ஆனால் அது ஒரு நாவலாக வரக்ககூடும்.

கேள்வி: ரமேஷ் உடன் எப்போது சேர்ந்து எழுதினீர்கள்? அதன் பின்புலத்தைக் கூறுங்கள்?


பதில்: ரமேஷ் என்ற பெயரை இப்போது சொல்லும் போது இரக்கம், துயரம், அவமானம் என சில உணர்வுகள் மேலோங்கி வருகின்றன. நாங்கள் தொடக்கத்தில் சேர்ந்து எழுதவில்லை. அவர் தனியாக, நான் தனியாக எழுதிக் கொண்டிருந்தோம். 1978-80 கால கட்டத்தில் புதுவையின் வ.உ.சி பள்ளியில் படித்த போது கடைசி பெஞ்ச் மாணவராக அவர் அறிமுகம். பின் 1981-82 இல் புதுவைக் கல்வே காலேஜ் படிப்பின் போது இரண்டாம் பிரிவு வகுப்பில் அவர் இருந்தார். அது வெறும் தலையசைப்பு பழக்கம் மட்டுமே. பிறகு படிப்பை விட்டு ஒரு ஆண்டு பதுங்கிக் கிடந்த காலம் எனக்கு வந்தது. (முழு விவரம் நாவலில் காண்க). அப்போது புதுவை ரொமெய்ன் ரோலான்ந் நூலகத்தில் இருவரும் கவிஞர்களாகச் சந்தித்துக் கொண்டோம். நான் காமராசன் கவிதைகளைப் படித்துக் கொண்டிருந்த போது ரமேஷ் ஈரமான ரோஜாவே என்னைப் பார்த்து மூடாதே என்ற மெட்டுக்கு தன் போக்கில் புதிய பாடல் எழுதிக் கொண்டிருந்தார், அது 1982-83 காலப்பகுதி.
சாரு நிவேதிதா (அறிவழகன்), அமரந்தா அறிமுகம் கிடைத்து கிரணம் இதழ் எனது (பிரேதா) காப்பியங்களுக்காகவே நடத்தப் பட்ட போது ரமேஷ் முகம் சுண்டிப் போய் இருந்ததைப் பார்த்து “அதீத சுய இன்பக்காரனின் நிழலுருவங்கள்” என்ற நெடுங்கவிதை ஒன்றை சல்வோதர் தலியின் பாதிப்புடன் மாறி மாறி எழுதி கிரணத்தில் சேர்த்தோம். அதுதான் கதை , மற்றவை…

கேள்வி: ரமேஷிடமிருந்து விலகி எப்போது தனியாக எழுதத் தொடங்கினீர்கள்? அது குறித்துச் சொல்லுங்கள்?


பதில்: 2005-7 கால கட்டம் அது. மாலதி கவிஞர் மாலதி மைத்ரியாக தன் எழுத்தின் வழியாக அறியப்பட்ட பின், பரவலான கவனிப்பைப் பெற்ற பின் ரமேஷ் தனது வன்முறையை, சாதி வெறியை வெளிக் காட்டத் தொடங்கினார். 2002-க்குப் பிறகு நான் புலம் பெயர்ந்து போசனம் தேடும் கவிஞனாக அலைக்கழிக்கப் பட்டபோது அது நடந்தது. என் மகளுக்காக நான் ஊதியம் பெறும் பணியைச் செய்ய வேண்டியிருந்தது. முதல் கட்டத்தில் மாலதி மைத்ரி எங்களை பட்டினியிலிருந்து காப்பாற்றினார். 1996-க்குப் பிறகு நான்தான் பொருளாதார மையமாக செயல்பட வேண்டியிருந்தது. எங்களது கூட்டு வாழ்வு பற்றி எங்களை விட அதிகமாக தமிழிலக்கிய வட்டம் அறிந்து வைத்திருந்தது. தின வாழ்வின் வன்முறை எங்கள் குடி தேவியாம் மகளைப் பாதித்த போது தாள முடியாத வாதையாக மாறியது. பிறகு….என்ன…. அதுவும் இலக்கியமறிந்தவர்கள் அனைவரும் அறிந்ததே. எனது அம்பேத்கரிய அரசியலை அவர் இழிவாகப் பேசியது மீண்டும் சந்திக்கவே முடியாத நிலையை ஏற்படுத்தி உள்ளது. படிப்பதைக் கற்பதை அறவே வெறுத்த ரமேஷ் என்னிடம் பேசுவதை வைத்தே தன்னை ஒரு உலக மகா இலக்கியவாதியாக உருப் பெருக்கிக் கொண்டார். இன்று வரை கூட அவர் அப்படித்தான் இருக்கிறார். தான் ஒரு மகா கவி என்றும் அதனால் எந்தப் பணியும் இன்றி உண்டாட்டு ஊண்துவை அடிசில் என வாழ்வது தனது உரிமை என்றும் புலம்பித் திரிவது ஒரு நோயாக மாறியிருந்தது. மாலதி மைத்ரி, எங்கள் மகள் இருவரும் அவரது ஆண்திமிர் வன்முறைக்கு ஆளான போது நான் நோய் வாய்ப்பட்டு நொந்து தில்லியில் தனிமையில் அழுது கொண்டிருந்தேன். 2007 நல்ல ஒரு ஆண்டாக அமைந்தது, வன்முறையில் இருந்து விடுதலை கிடைத்தது.

கேள்வி: கிரணம் இதழ் தமிழ்ச் சிற்றிதழில் வெளியில் மிகவும் முக்கியமான பங்களிப்பைச் செய்திருக்கிறது. கிரணத்திற்கு முன்பு, பின்பு தமிழ் எழுத்தின் போக்கு என்பது மாறியது முதன்மையானது. அந்தவகையில் கிரணம் குறித்துச் சொல்லுங்கள்?


பதில்: பிரேதா என்ற பெயரே பலரை அதிர்ச்சியடைய வைத்து வெறுப்பை உருவாக்கியது. அதில் வெளிவந்த பின்நவீன காப்பியங்கள் தமிழில் அது வரை இல்லாத பித்தின் பெருக்கு, சிதைவின் அரசியல், நுண் வன்முறைகள், உடலரசியல் பற்றிய சிக்கல்களை மொழியாக்கின. பிரேதாவின் பிரதிகள் என்ற தொகுப்பில் அது பற்றி விரிவாக எழுதியிருக்கிறேன். ஆம், பிரேதாவின் பிரதிகள் தமிழிலக்கியத்தில் பல மாற்றங்களைக் கொண்டு வந்தது.

கேள்வி: மாற்று அரசியல், மாற்று வாழ்க்கை நிலைப்பாட்டில் நீங்கள் முன்னெடுத்தது தமிழ்ச்சூழலில் முக்கியமான புரட்சியென்றே சொல்லலாம். கம்யூனைப் போன்றதே அது? இதனால் தமிழ்ச் சூழலில் பெரிய எதிர்ப்பு வந்தது? அதைப்பற்றிச் சொல்லுங்கள்?

பதில்: மாற்று என்றாலே பொது மரபில் துயரம்தான், மார்க்ஸ்-எஞ்செல்ஸ்- ஜென்னி எனத் தொடங்கி பல மாற்று வாழ்வு முறைகள் துயரமாக முடிந்துள்ளன. எனக்கும் துயரம் நிகழ்ந்தது. ஆனால் மாற்று வாழ்தல் முறை தோல்வி அடையவில்லை. நாங்கள் சரியில்லை… அவ்வளவுதான்…அது மட்டுமல்ல மரபான வாழ்தலும் கூட வன்முறையும் கொடுமைகளும் கொண்டது தானே…

கேள்வி: இந்த மாற்று வாழ்தல் புதிய சிந்தனையுடைய அடுத்த தலைமுறையினர் பலருக்கும் ஆதர்சமாக இருந்தது. ஆனால் இதை ஏன் தொடரமுடியாமல் போனது உங்களால்? இதைப்போன்ற கம்யூன் அடிப்படையிலான மாற்று வாழ்தலை இங்கு தொடர்வதற்கான சாத்தியங்கள் குறித்து உங்கள் கருத்தென்ன?

பதில்: நிச்சயம் தொடர முடியும். மாற்று வாழ்தல் என்றாலே பாலின பால்நிலை பற்றிய கற்பிதங்களை உருவாக்கிக் கொள்ளும் அறிவுக் குறைபாட்டால் சிக்கல் எழுகிறது. தாய்மை, தந்தைமை , மகள், மகன், அண்ணன், தம்பி, தோழமை என பல வகை உறவுகள் கொண்ட கூட்டு வாழ்தல் வழியாக இனி வரும் தலைமுறையினர் இன்பியல் குடில்களை உருவாக்க முடியும். பாலியலை ஒழுக்கம், அறம் என்பதின் அடிப்படையாக, மையமாக வைத்தால் நிச்சயம் வன்முறையே உருவாகும்.

கேள்வி: அயோத்திதாசர் தொடங்கிவைத்த அறப்போராட்டம் நூலில், “ மார்க்சிஸ்டுகள், கம்யூனிஸ்டுகள் மனித சமத்துவம், மனிதார்த்த அறநிலையில் மற்றவர்கள் போலன்றி வேறுவகை அறிவுமுறை கொண்டவர்கள் என்பதால், கலை, இலக்கியம், அழகியல் வகையிலும் வேறுபட்டவர்களாக இருந்தாக வேண்டும். தனிமனித, பாலிணை உறவுகளிலும் ஆதிக்கச் சமூகத்தின் வரையறைகளை ஏற்காமல் மாற்று வாழ்வியலைத் தேர்ந்து கொண்டவர்களாக இருப்பார்கள்” என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். அப்படியெனில் சமூகப் பண்பாட்டு அதிகார நிறுவனங்களால் கட்டமைக்கப்பட்ட பால்நிலைகளைக் கடந்த பால் பன்மை கொண்ட வாழ்வும் கலை இலக்கியச் செயல்பாடுகளும் விடுதலை அரசியலின் பகுதிதான் என்று கூற முடியுமா?


பதில்: நிலவுடைமை, பாசிசச் சமூகத்தில் பாலுணர்வு, பாலின்பம் என்பதையே உடலை அவமதிப்பதிகாவும் தண்டிப்பாதாகவுமே உள்ளது. மாற்றம் கொண்ட சமூகத்தில் தனிமனிதர்கள் தமக்குள் உடலையும் மனதையும் கொண்டாடிக் கொள்வதற்கான ஒன்றாக பால்நிலை மாறும். பால்பன்மையும் மனித உடலையும் மனத்தையும் கொண்டாடுவதாகவும் மதிப்பதாகவும் மாறும். அவ்வகையில் தற்போதுள்ள பாலின்பம் பற்றிய மதிப்பீடுகள் அனைத்தும் தகர்ந்து வேறு வடிவம் பெறும்.

கேள்வி: பால்பன்மையை தமிழில் முதன்முதலாக அழகியல் மற்றும் கவிதையிலில் எழுதியது நீங்கள். மற்ற எழுத்துக்கள் பிறழ்வாக, குற்றவுணர்வாக, நோய்க்கூறாகமுன்வைத்தன. ஆனால் இன்று குயர் எழுத்து விடுதலையின் அரசியலாகத் தீவிரமடைந்து வருகிறது. இச்சூழலில் உங்களின் எழுத்து முன்னோடியாக இருக்கிறது. இதுபற்றிக் கூறுங்கள்?

பதில்: பாலினப் பன்மைத்தன்மை என்பது இருபால் தன்மைபோலவே இயல்பானது. அதற்கென அரசியலும் அழகியலும் உள்ளன என்பதைத்தான் இந்த எழுத்துக்கள்முன்வைக்கின்றன. எனது கிரணம் காப்பியங்களில் விரிவான தளத்தில் இவை பதிவாகியுள்ளன. தற்போது பலர் அதை எழுதுகிறபோது அது இயக்கமாகவும் தனித்த இலக்கிய வகைமையாகவும் மாறும். அதிலிருந்து பெரும் படைப்புகளும் தோன்றும். ஆனால் ஒற்றைப் பண்பாட்டுச் சமூகத்தில் இவை அனைத்துமே விளிம்பில்தான் வைக்கப்படும். அப்போது பெரும் அழகியல் உத்திகளோடு பால்பன்மை வெகுமக்கள் கலை இலக்கியத்தில் ஊடுருவும். அதிலிருந்து பெரும் கலைஞர்களும் உருவாக முடியும்.

கேள்வி:
தமிழ்ப் படைப்பு, ஆய்வுவெளியில் உங்கள் எழுத்தும் ஆய்வும் உள்ளார்ந்த பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் உங்கள் எழுத்துகளைப் புறக்கணிக்கும் போக்கு இருக்கிறது. இதை எவ்வாறு பார்க்கிறீர்கள்?

பதில்: அது பற்றி நீங்கள்தான் கூற வேண்டும். ‘புகலிட’ வாழ்வின் காரணமாக இடைவெளி அதிகமானது ஒரு காரணம். மற்றபடி நான் அதிகமாக எழுதிக் கொண்டே இருக்கிறேன். காலச்சுவடு, எதிர் வெளியீடுகளில் வெளி வந்த எனது நூல்கள் அதிகம் வாசிக்கப்படுகின்றன. எழுதுகிறவர்கள் எனது எழுத்துகளைப் புரிந்து கொள்வதில் சிக்கல் அடைகின்றனர். அவர்களின் நுண்ணுர்வு வேறு, எனது எழுத்துகள் வேறு. ஜமாலன் போன்ற எழுத்துப் புலன் கொண்டவர்கள்தான் எனது எழுத்துகள் பற்றி எழுத முடியும். மற்றவர்கள் வாசிக்க மட்டுமே முடியும்.

கேள்வி: இந்தியச் சூழலில் விடுதலை அரசியல் என்பது அம்பேத்கரிய நெறியில் இருந்து, தலித் விடுதலை அரசியலை, தலித் தலைமையை மையமாகக் கொண்டே செயல்பட முடியும் என்று சொல்லி வருகிறீர்கள். இது மிகமுக்கியமான, அடிப்படையான ஒன்று. ஆனால் விடுதலையை முன்வைக்கும் பிற இடதுசாரிச் சிந்தனையாளர்கள் இதனை ஒரு நெருடலாகக் கருதுவதுபோல் இருக்கிறது. சாதியத்தின் கூறுகள்தான் இதற்குக் காரணமா?

பதில்: இந்தியச் சமூக மனம் சாதியால் நொதித்துக் கிடக்கிறது. தமிழின் பொது உளவியல் சாதியை மையமாக வைத்துச் செயல்படுகிறது. அரசியல் களம் உள்ளார்ந்த தலித் வெறுப்பால் குமைந்து கொண்டிருக்கிறது. சாதி வெறியின்றி ஒருவர் “அம்பேத்கரும் அவர் தம்மமும்” போன்ற அறிவிலிவாத நூலை 1000 பக்கத்தில் எழுத முடியுமா.

கேள்வி: சமீபத்தில் கோணங்கியின் செயல்பாடுகள் குறித்து தமிழ் எழுத்துவெளியில் சலசலப்பு ஏற்பட்டது. எழுத்தாளர்கள் கட்டற்ற பலியல் சுரண்டல்வாதிகள் என்ற கருத்தும், தன்பால் ஈர்ப்பாளர்கள் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது. எதிர்ப்பாலியல் சுரண்டலும் எழுத்தாளர்கள் மத்தியில் தொடர்ந்து நடக்கிறது. இங்கு விவாதம் என்னவெனில், பாலியல், பண்பாட்டுக் கருத்தாக்கம், மீறல், எதிர்ப்பாலியல், குயர், ஒழுக்கவிதிகள் இப்படிப் பல முரண்கள் இணைந்திருக்கின்றன? இதை எவ்வாறு பார்ப்பது?

பதில்: பாலியல் சுரண்டல் என்பது அனைவரும் செய்கிற ஒன்று. ஒரு சமூகம் எப்படியுள்ளதோ அதே வகை இலக்கியவாதிகள்தான் அவர்களுக்கு அமைவார்கள். கோணங்கி மீதான குற்றச் சாட்டு விசாரணைக்கு முன்பே தண்டனை வழங்கப்பட்டதாக மாறியுள்ளது. பெண்கள் மீதான பாலியல் வன்முறையை பெருமிதமாகக் கொண்டாடிக் கொண்டிருக்கும் கும்பல்கள் இங்கு உள்ளன. கோணங்கி சிக்கல் இரண்டு வகையில் உருவாகிறது. அது ஆண்பாலிச்சை மற்றும் உரிமை மீறல் என்ற கொக்கிகளைக் கொண்டது. பால் பன்மையை வெறுக்கும் ஒரு சமூகத்தில் அது ஒரு ஆயுதமாக மாறி மாற்றுச் சிந்தனை, எழுத்து மீதான தாக்குதலுக்கு உதவுகிறது. இது பற்றி விரிவாகக் கட்டுரைதான் எழுத வேண்டும்.

கேள்வி: தமிழ் நவீனத்துவ, விடுதலை அரசியலின் முகமாக அயோத்திதாசரை முன்னெடுக்கும்போது பெரியார் அயோத்திதாசரை எதிரிடையாகப் பார்க்க இயலுமா? அம்பேத்கர், அயோத்திதாசர், பெரியார் இணைப்புடள் மார்க்சியத்தையும் எவ்வாறு இணைத்துக் காணமுடியும்?

பதில்: அயோத்திதாசர் ஒரு அற்புதம், பின்நவீன முறையியலை அப்போதே அவர் கையாண்டு விடுதலைக் கருத்தியலை உருவாக்கி இருக்கிறார். பெரியார் பின்னர் அவரிடமிருந்து சில கூறுகளை எடுத்துக் கொண்டு இடைநிலைச் சாதிகளின் அரசியலை கட்டுகிறார். அவருடையது இடைநிலைச் சாதி அரசியல்தான். அம்பேத்கரிய அரசியலை ஏற்றால் பெரியார் அதில் உள்ளடங்கி விடுவார். மார்க்சியம் அம்பேத்கரியத்தை புரிந்து கொண்டு செயல்படுமென்றால் இந்திய விடுதலை அரசியலை முன்னெடுக்க முடியும். இன்றைய அரசியல் மட்டுமல்ல உளவியலும் மார்க்சிய- அயோத்திதாசர்-பெரியார்-அம்பேத்கரிய-பெண்ணிய இணைப்புகளைக் கொண்டதாக அமைய வேண்டும்.

கேள்வி: காலனிய நீக்கம் என்பதன் பேரில் காலனிய காலத்துக்கு முந்தைய நிலைமைக்குத் திரும்புதல், பழைய பண்பாட்டை மீட்டெடுத்தல் எனும் நிலைகளில் சாதிய, மதவாதப் போக்குகள் மீட்டுருவாக்கம் செய்யப்படும் ஆபத்தும் இருக்கிறது. இதை எவ்வாறு அணுகுவது? ஆக்கபூர்வமான வழிகள் உண்டா?

பதில்: பழமையை மீட்டல் எனச் சொல்லி பௌத்தம் மீட்கப்படும் எனில் மத அரசியல் அதனை ஏற்குமா? பழைய சமத்துவ இனக்குழு வாழ்வை மீட்டெடுக்க இயலுமா. அனைத்தும் தற்காலம் சார்ந்ததாக இருக்க வேண்டும். எந்தப் புராணிகமும் அழிவையே கொண்டு வரும்.

கேள்வி:
தனியுடைமையும், பாலின ஏற்றத்தாழ்வும் வர்க்க முரண்பாட்டிற்கு அடிப்படை என்கிறார் எங்கெல்ஸ். நாம் விரும்பினாலும் குடும்ப நிறுவனத்தில் பரஸ்பர சமத்துவத்தை, நேசத்தைக் கொண்டுவரமுடியாது. ஏனெனில் அது சமூக அதிகாரக் கட்டமைப்பு என்கிறார் அவர். குடும்பம் கருத்துருவ அரசு இயந்திரத்தின் பகுதியாக இயங்குகிறது என்கிறார் அல்தூசர். இந்தியா போன்ற நாடுகளில் இதன் தாக்கம் மிக வலிமையாக இருக்கிறது. அதனால்தான் பெரியார், அம்பேத்கர் இருவரும் ஆணாதிக்கத்தின் வீழ்ச்சியை முதன்மைப் படுத்தினர். பெரியார் தீவிரவாதப் பெண்ணியத்தை முன்வைத்து குடும்ப நிறுவனத்திற்குள் பெண்கள் செல்லக்கூடாது தேவையில்லை என அழுத்தமாகவே வலியுறுத்தினார். மாற்றுவாழ்க்கை, மாற்று அரசியலை முன்வைத்து நீங்கள் இயங்கியுள்ளீர்கள். இந்தியாவில், ஆணாதிக்கப் பண்பாட்டு உளவியல் வன்முறை இயல்பாக்கம் செய்யப்பட்டுள்ளது , இந்தப் பின்னணியில் குடும்ப நிறுவனத்தை ஆணாதிக்கமும் அதிகாரமுமற்றதாக மாற்றுவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றனவா? அல்லது குடும்ப நிறுவனத்தைக் கலைக்க முடியுமா? அல்லது இதற்கு மறுதலையாகக் கம்யூன் வாழ்வியலை மாற்று வாழ்முறையை முன்வைக்க முடியுமா? இதற்கான சாத்தியங்கள் என்ன?

பதில்: இனப்பெருக்கம் இருக்கும் வரை ஏதோ ஒரு வடிவில் குடும்பம் இருக்கலாம். ஆனால் கம்யூன் மற்றும் குழு வாழ்வு என்பதை முயற்சி செய்வதில் என்ன தவறு இருக்கிறது. சிக்கல் ஏற்பட்டால் பிறகு மாற்றிக் கொள்ளலாம்.

கேள்வி: மார்க்சியம், நவீனத்துவம், பின்நவீனத்துவம், பெரியாரியம், அம்பேத்கரியம், பெண்ணியம், தலித்தியம் எனப்பல கோட்பாட்டுக் கருத்தியல் நிலைகளில் இயங்கிய நீங்கள் பௌத்த நெறியை முன்வைத்தீர். ஆனால் தற்போதோ இசுலாத்திற்கு மாறுவதாகச் சொல்கிறீர்கள். இதன் கருத்தியல், கோட்பாட்டியல் காரணிகளைக் கூறமுடியுமா?

பதில்: பௌத்த முறையியல் எப்போதும் என்னுள் இருக்கும். இஸ்லாத்தை ஏற்பது ஒரு முன்னெடுப்பு, பிறகு அது பற்றி விரிவாக எழுத இருக்கிறேன்..

கேள்வி: இன்றைய தமிழ்ச் சூழலில் மார்க்சியவாதிகள் பின்னவீனத்துவத்தை எதிரிடையாக பார்க்கிறார்கள் ஆனால் உண்மையில் ஃபூக்கோ, தெரிதா போன்றவர்கள் தங்களை பின் மார்க்சியவாதிகள் என்று கருதிக் கொண்டார்கள்  ஆனால் இங்கு அவ்வாறு இல்லை. இதுதான் மார்க்சியம் எதிர்கொள்ளும் சவால் என்று நீங்கள் சொல்கிறீர்களா?

பதில்:
1988-89-ல் நிறப்பிரிகையில் பின்நவீனத்துவப் பார்வையை முன்வைத்து மார்க்சியத்தை வாசிப்பது என்ற நிலையில்தான் நான் முதலில் தொடங்கினேன்.  இதுவே முதல் கட்ட முரண்பாடுடனான உரையாடல். பின்னவீனத்துவம் குறித்த உரையாடல் தமிழில் குறைவாகவே இருந்தது. அவ்வாறு வந்ததும் கூட இலக்கியப் பின்நவீனத்துவம் என்ற தளத்திலான செயல்பாடு குறைவாகவே இருந்தது. இலக்கியத்தில் வடிவமற்ற தன்மை, பரிசோதனை முயற்சிகள் என்ற நிலையில் நான் எழுதினேன். இலக்கியம் சார்ந்த தளத்தில் இது தொடக்க நிலையில் இருந்தாலும் இதனுடைய அரசியல் தளத்தில், தெளிவாகவும் வலிமையாகவும் உறுதியாகவும் இந்தப் பின்னவீனத்துவ மாதிரியை நான் முன்வைத்தேன்.  பின் நவீனத்துவம் என்பதே பின் மார்க்சியம்தான். இந்த நிலையில் தான் மார்க்சியம் சார்ந்த, மார்க்சியம் கடந்த ஒரு தன்மையை நான் முன் வைத்தேன்.
மார்க்சியம் கடந்த மார்க்சியம் சார்ந்த நிலைப்பாட்டில் இருந்து உலகத்தை அணுகுதல் என்று நான் பேசினேன்.  புரட்சியை நோக்கிய உளவியல் பிரச்சனைகள் என்ற கட்டுரையும் அதனை அடிப்படையாகக் கொண்டதுதான். இம்மாதிரியான உரையாடல் அப்போது எடுக்கப்படவில்லை. மனிதார்த்த பொருண்மை நோக்கு  என்று நான் சொல்ல வந்தது materialism is again a kind of Human centre.  
எல்லாம் மொழியால் கட்டப்பட்டது. மனித அறிவு என்பது மொழியின் மூலமாகவே கட்டப்பட்டது. நாம் புரிந்து கொள்ளக் கூடிய உலகம் மனிதர்களுக்கானதுதானே தவிர எல்லாவிதமான உண்மைகளைப் பற்றியதும் எல்லாவிதமான பொருண்மைகளைப் பற்றியது அல்ல. இது சிக்கலான ஒன்று.
இது பின்பு லெக்கானின் பொருண்மையில் இருக்குன்னு தெரிந்துகொண்டேன். அரசியல் பின்நவீனத்துவம் என்பதுதான் நான் தொடர்ந்து வலியுறுத்துவது. அதனால்தான் முழுக்க முழுக்க அரசியல் சார்ந்த எழுத்து பின் நவீனத்துவ எழுத்து என்ற முறையில் எனது இயக்கம் இருக்கிறது. இதில்தான் அடையாள அரசியல், பின்காலனியம், பெண்ணியம் தலித் அரசியல் என்று ஒரே சமயத்தில் பன்மைத்துவமான போக்குகளை முன்வைக்க முடியும். ஒரே சமயத்தில் இவ்வாறான பல்வேறு விதமான அழுத்தங்களை உள்ளடக்கிய கூட்டுத்தொகுதிதான் இன்றைய அரசியல். 
ஏதாவது ஒரு அரசியல் மட்டுமே மையமாக இருக்க முடியாது. 
பொருளாதாரம், அரசியல், சமூகம், பண்பாடு, பண்பாட்டு நடைமுறைகள், மதம், பாலினம், சாதி, இனம், வர்க்கம், நிறம் இவை இல்லாமல் பண்பாட்டு அடையாளங்கள்,  இவற்றோடு தனிமனித,  தனி மனிதர்களுக்கு இடையிலான உறவுகள், அத்துடன் இந்தியா போன்ற நாடுகளில் இருக்கக்கூடிய குடும்பம், குடி, இனம் முதலிய கூறுகள், இவற்றுடன்  அறிவியல் தொழில்நுட்பம், இயந்திரங்கள், தகவல் தொடர்பு சாதனங்கள், உலகளாவிய  தொடர்புகள் இவையெல்லாம் சேர்ந்துதான் ஒரு  செயலை தீர்மானிக்கிறது. அத்தோடு அந்தச் செயலை ஆக்கபூர்வமானதாகவோ அழிவானதாகவோ மாற்றுகிறது. இவற்றுள் எந்த ஒன்றில் பிரச்சனை வருகிறதோ அதை நாம் அணுகியாக வேண்டும்.

இவை எல்லாமே ஒன்றுடன் ஒன்று இணைந்ததாகவே இருக்கின்றன. உலகமயமாதல் இந்தியாவில் வரும் போது அது பொருளாதாரம் சார்ந்த ஒன்று மட்டும் அல்ல. வாழ்வியல் சார்ந்தது, சூழலியல் சார்ந்தது இனக்குழு வாழ்வியல் இனக்குழு உரிமை சார்ந்தது. வெளியே இருக்கிறவர்கள் எவ்வாறு பார்க்கிறார்கள் என்றால் இந்த உலகமயமாதல் தனக்கு இன்பமயமான கொண்டாட்டமான ஒன்றாக பார்க்கிறார்கள். இவர்களுடைய நுகர்வு சார்ந்த பார்வையும் இதனால் பாதிக்கப்படுகிறது. அவர்களுடைய பார்வையும் ஒன்றாக இருக்க முடியாது. இந்தியாவைப் பொறுத்த வரையில் சாதி, இனம் இரண்டும் முக்கியமானவையாக இருக்கின்றன. இனவெறுப்பும் சாதி வெறுப்பும் இங்கே இருக்கின்றன. பொருளாதார சிக்கலைப் பேசும் போது பாலினத்தின் இடம் என்ன என்பது பற்றி பேசுவதும் மிகவும் முக்கியமான ஒன்று.

பாலினத்தின் இடம் என்ன என்பது பற்றி பேசவில்லை என்றால் அந்த அரசியல் வன்முறைதான். அப்படி இல்லையெனில் ஒரு அரசியல் மற்றதின் மீது ஆதிக்கம் செலுத்துவதாக மாறிவிடும். தேசியம் பேசுபவர்கள் ஜாதி ஒழிப்புக்கு எதிரானவர்களாக இருக்கிறார்கள். பகுத்தறிவை பொறுத்தவரையில் இங்கு இன்னும் அது politics ஆக இருக்கிறது, மேற்கைப் பொருத்தவரையில் அது ஒரு அப்ரோச்சாக மாறிவிட்டது.இந்தியாவை, தமிழ்நாட்டை பொறுத்தவரையில் பகுத்தறிவு என்பது மிக முக்கியமான ஒன்று Cultural Domainஆக இருக்கிறது. பகுத்தறிவு அரசியலாகவே இருக்கிறது. இங்கே Gender, பாலினம் பற்றிய பேச்சை பகுத்தறிவுவாதிகள் விட்டு விடுகிறார்கள். அதைப்போல சாதிய விடுதலைப் பார்வையில் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையைப் பேசுவதில்லை. அப்புறம் தன்னாட்சி, தனிமனித சுதந்திரம், தனிமனித உரிமை என்று வரும்போது முடியாட்சி, நகர அரசு, தந்தைமைய Patriarchy  பார்வை நிலையில் இருந்து தனிமனிதர்களை அணுகுகிறார்கள். இந்தப் பார்வையில் இருந்தே Gender, Sexuality  இவைகளை அணுகுகிறார்கள். Sexuality என்பது அடையாளம் சார்ந்த ஒன்று. இவ்வாறு அவர்கள் அணுகும் போது ஏதாவது ஒரு பழைய முறையில் இருந்து அதைப் பார்க்கிறார்கள். இதெல்லாம் மிகவும் சிக்கலானது. மார்க்சியம் இங்கு வருகின்ற பொழுது பழங்குடியின அரசியல் வரவில்லை.  கட்சியாக மாறும்போது. அது ஒரு நகர மையம் சார்ந்த ஒன்றாகவே வருகிறது. அம்பேத்கரிய, தலித்திய அரசியலை அதன் முழு இயக்கத்தோடு அணுகுவதில்லை . பிறகு இயற்கை சார்ந்த வாழ்க்கை. இயற்கை சார்ந்த வாழ்க்கையை நாம் எவ்வாறு பார்க்கிறோம். மனித மையவாத நோக்கில் இருந்து பார்க்கிறோம்.  மனிதர் இயற்கையின் ஒரு பகுதியே. மார்க்சியத்தைப் பொறுத்தவரையில் அதன் அடிப்படையான அம்சமே இயற்கையும் மனித உறவுமே. இதைப் புரிந்து கொள்ளாத மாக்சியவாதிகள், நவீனத்துவம், இயந்திரமயமாக்கல், தொழில்மயமாக்கல் என்று பேசிக் கொண்டிருப்பார்கள். இவை மார்க்சியத்தில் எதற்காக, எப்படிச் சொல்லப்பட்டிருக்கின்றன என்பதை விவாதிக்க வேண்டும். இதை விவாதிப்பதில்லை. ஏனெனில் அவர்கள் அரசு மையவாதிகளாக இருக்கிறார்கள்.  இயந்திரமும் அரசும் மையமாக இருக்கின்றன. இரண்டு மையமாக இருக்கின்ற போது பெரிய மூலதனமாக ஆகிறது. இங்கு மூலதனம் என்பது சமூக மூலதனமாக ஆகிறது. சமூகத்தினுடைய அல்லது ஸ்டேட் கேப்பிட்டலாகப் பார்க்கிறார்கள்.  வளமை என்பதை மையப்படுத்தி பார்க்கின்ற போது முதலாளித்துவத்தின் அடிப்படையோ அல்லது ஆதிக்க அரசியலின் அடிப்படையோ எதுவோ அதுவே அரசின் அடிப்படையாகிறது. 
அரசைப் பற்றித்தான் மார்க்சியம் பேசுகிறது. மனித உடல் , இயற்கை வளம் அல்லது உயிர் வாழும் மண்டலம் இவற்றை  மார்க்சியம் பார்க்கும் முறை எவ்வாறு என்றால் இயற்கையை தனக்கான ஒன்றாக பார்ப்பது, சுரண்டுவது என்பதை மார்க்சியம் மறுக்கிறது. வளமை என்ற பெயரில் இயற்கையைச் சுரண்டுவதை மாக்சியம் எதிர்க்கிறது. முதலாளித்துவம் முதலில் இயற்கையைச் சுரண்டுகிறது பிறகு மனித உடல்ளை நசுக்குகிறது, அல்லது தனது அதிகாரத்தை மனித உடல்கள்மீது  செலுத்துகிறது இன்று மார்க்சிய அடிப்படை கூறுகிறது. இதை கட்சி மார்க்கியவாதிகள் முதலாளித்துவத்திற்கு உரியதாக, முதல் உருவாக்கமாக மாற்றுகிறார்கள்.  அப்பொழுது என்னவாகிறது என்றால் காலனியத்தினுடைய பண்பைப்போல பேரரசுக்கும் பேரதிகாரமாக மாறும் செயல்திட்டமாக அது மாறுகிறது. கட்சி மார்க்சியம் ஒரு தேசத்தை கட்டமைக்கிறது. அந்த தேசத்தின்மூலமாக பிரதேசங்களில் சுரண்டுவதாக, ஏன் போரையே உருவாக்குகிறது. அப்போது சோவியத்தினுடைய பெரிய திட்டம் என்னவென்றால், மார்க்சியத்தினுடைய உடல் அரசியலையும் இயற்கையின் அரசியலையும் விட்டுவிட்டு இவற்றை முழுமையாகப் புறந்தள்ளிய இயந்திரத்தனமான உயர்தொழில்நுட்ப சமூகமாக மாறுகிறது. சோசலிசம் வீழ்ச்சியடையவில்லை. ஏனெனில் சோசலிசம் என்பது அமையவே இல்லை. 

சோசியலிச உருவாக்கத்திலேயே சிக்கலாகிவிட்டது.  பல தேசங்களுடையதாக பல நாடுகள் உடையதாக அது ஆகி விடுகிறது.  மீந்திருப்பது போர், ராணுவம் மட்டுமே. இதை மார்க்சியத்தின் சிக்கலாகப் பார்க்க முடியாது. மார்க்சியம் அங்கே என்ன தோல்வி அடைந்தது அல்லது என்ன மாறியது என்றால் மனித வாழ்க்கைக்கும் இயற்கைக்கும் இடையில் இருக்கக்கூடிய சமநிலை உறவு குலையும் போது State Capitalஆக மாறும் இடத்தில் நகர்கிற நிகழக்கூடிய ஒரு உடைப்பு. சோவியத்தினுடைய சிதைவு அல்லது உடைப்பு என்று சொன்னால் அது செர்னோபில்லினுடைய அடுத்த கட்டம்தான். செர்னோபில்மூலமாக பல ஆயிரம் கிலோமீட்டர் பகுதிகள் வாழ முடியாத பகுதியாக மாறும்போது, அதனுடைய தாக்கமும் பின்னால் வந்த அரசியல் உடைப்பும் ஏறக்குறைய அதனுடைய பின் விளைவாகவே மாறுகின்றன.  இதுதான் முதல்கட்ட சமூக அடையாளத்தின் உடைவாக மாறுகிறது. இந்தப் பேரழிவு முன்னேறிய சமூகம் என்ற கற்பித்தத்தை, கற்பனையை அல்லது அப்படி உருவாக்கப்பட்ட கருத்தை தகர்க்கிறது. 

பெரிய வளர்ச்சி என்பது பெரிய அழிவாக மாறும்போது முன்னேறிய சமூகம் என்ற அடையாளம் தகரும் போதுதான் அது தகர்கிறது. உண்மையான தகர்வு என்பது முன்னேறிய சமூகம் என்பதின் தகர்வுதான். அந்த அளவில் சோவியத் என்பதை மார்க்சியத்தின் முழுமையான மையமாகப் பார்க்க முடியாது. ஒரு கட்சி இருக்கிறது. கட்சியின் அரசியல் மாறுகிறது. மொழி, தேசிய இனங்களின் அடிப்படையில் பல்வேறு பல்வேறு நாடுகளாகப் பிரிகிறது. இவற்றை மட்டுமே மையமாகக் கொண்டு சோவியத்தையும் மார்க்சியத்தையும் ஒரே சிக்கலாக நாம் பார்க்க வேண்டிய தேவையில்லை. அப்படி ஒரு சார்பில் பார்க்கக் கூடியது சமூகத்தின் ஓரிடத்தில் நிகழக்கூடிய பிரச்சனையை உலகத்தின் முழுப் பிரச்சினையாக மாற்றக் கூடியதாக மாற்றும் முயற்சியாக அது மாறும். 

இந்தியாவிற்குள் அல்லது மற்ற நாடுகளில் உள்ள சிக்கல்களை மார்க்சியத்தின் இயங்கியல் பார்வை மூலமாக, அல்லது மார்க்சியத்தின் மூலம் உருவாகி இருக்கக்கூடிய அறிவியல் மற்றும் பொருண்மைப் பார்வையின் மூலமாக நாம் ஆராய்கிறோம்.  இந்த அறிவியல் மற்றும் இயங்கியல் பொருண்மை பார்வையைத்தான் நாம் மார்க்சியம் என்கிறோம். இன்று உலகச் சமூகங்களின்  சிக்கல், ஏக்கம், தேவைகள், எதிர்பார்ப்பு இவைகளுக்கான ஆக்கபூர்வமான தீர்வை நோக்கிய கனவுதான் விடுதலை அரசியல் சாந்த கனவு. இதே வகையில் அழிவுக்கான கனவுகளும் உள்ளன.  மார்க்சியத்தின்  மதம் குறித்த விமர்சனப் பார்வை என்பது மதம் இல்லாத ஒரு உலகைப்பற்றிய கனவை உருவாக்கி மக்களை அழித்தன என்பது.

இப்போது பேரரசுகள், பெரிய மூலதனம், உலகமயமாதல், முன்னேற்றம் எனும் பெரிய கனவுகள் உலகின் பெரும்பான்மை சமூகங்களை, மக்களை அழிக்கின்றன. இயற்கையும் உயிர் மண்டலமும் அழிக்கப்படுகின்றன. விளிம்பு நிலை அதிகமாவதும் வாழ்க்கைச் சூழல் துயரம் நிரம்பியதாக மாறுவதும் இயற்கை அழிக்கப்படுவதும் நடக்கிறது. இயற்கை அந்த  வளத்தை ஒருசமூகம் தனக்குப் பயன்படுத்துவதல்ல சிக்கல். அதுகூட முதல்கட்டம்தான். நாட்டு மக்களே பயன்படுத்த முடியாத சூழல்.  இயற்கை வளம் என்று சொல்வதே தவறானது. இயற்கை, சமநிலையில் நாம் ஒருவராக இருக்கிறோம். ஒரு சமூகம் எந்த இயற்கைச் சூழலில் இருக்கிறதோ அந்த இயற்கையோடு உறவுபடுத்தி ஓரளவு சார்ந்து வாழ வேண்டும். ஆனால் இன்றைய சூழலில்  ஒரு சமூகத்திற்காக அதாவது ஐரோப்பிய  அல்லது வெள்ளைச் சமூகங்களுக்காக ஒட்டுமொத்த உலகச் சமூகங்களும் ஒட்டுமொத்த உலக இயற்கையும் நசுக்கப்படுகிறது, பிழிந்தெடுக்கப்படுகிறது. அவர்கள் சொல்லுகின்ற வளர்ச்சி அல்லது வளம் என்ற கருத்தாத்தால் மொத்த சமூகங்களும் சுரண்டப்படுகின்றன உயிராற்றல் அற்றதாக மாற்றப்படுகின்றன. இது மிகப்பெரிய சுரண்டல். இதில் மார்க்சியம் மட்டுமே முக்கியம் இல்லை. இது ஒரு பொதுவான சுரண்டல்.

மார்க்சியம் இல்லையென்றாலும் கூட இந்த ஒடுக்கு முறைக்கு எதிரான அரசியல் புரட்சிகர அரசியலாகவோ மற்றும் சார்ந்த அரசியலாகவோ  இருக்கும். இதைத்தான் நாம் மக்கள் அரசியல் என்கிறோம். மக்கள் அரசியல் என்பதற்கு அறிவியல் வேண்டும் உலக வரலாறு வேண்டும் தற்கால பொருளியல் வேண்டும். இதுவெல்லாம் சேர்ந்து வருகிறபோது மார்க்சியம் என்கிற ஒரு அறிவுச் சூழல் உருவாகிறது. மார்க்சியம் என்பது இரண்டு நூற்றாண்டுகளுக்கான மாற்றுச் சிந்தனைகளின் மொத்த அடையாளம். ஒரு இடத்தில் தொடங்கியது இல்லை. அது ஒரு மொழியியல் இல்லை. அதாவது ஒரு கூறை மட்டும் எடுத்து விளக்கிவிட்டுப் போவது அல்ல. அது ஒரு discipline இல்லை Multidiscipline. வரலாறு, மானிடவியல் , சமூகவியல், பொருளாதார உறவுகள், காலனியம் பற்றியது, அடிமைச் சமூகங்களைப் பற்றியது. பல்வேறு தரவுகளின் அடிப்படையிலானது,   பகுத்தறிவுத்தன்மையிலானது.

பகுத்தறிவு என்பது அறிவின் அடிப்படையில் ஒன்றை விளக்குவது. அது புதியதென்பதைவிட தொடர்ந்து புரட்சிகர சிந்தனையாகப் பயன்படுத்தப்படுகிறது.  அடிப்படைகளை நோக்கிய கேள்வியாக அது இருக்கிறது.  மனிதநேயம், பொருள்முதல்வாதம் போன்றவை வரலாற்றின் தொடக்க கட்டத்தில் இருந்து இருக்கலாம். இந்தியாவில் பௌத்தம் இருந்தது. கிரேக்கத்தில் டெமாக்ரடிக்ஸ், எபிக்கோரியன், ஸ்டாயிக், இதில் பொருள்முதல்வாதிகள் இருந்தார்கள். அணுக்கொள்கைவாதிகள் இருந்தார்கள். பொருள் முதல் வாதம் என்பது மிகவும் பழையது. ஸ்டாயிக் சிந்தனையில் மனிதர்களை மையமாக வைத்து கருத்துமுதல்வாதத்தை முன்வைக்கும் மீவியற்கைக்கு எதிரான கருத்துக்கள் இந்தப் பொருள் முதல்வாதத்தில் இருக்கின்றன. இவ்வாறு ஒவ்வொரு பகுதிகளிலும் இருந்த பொருள் முதல்வாத கருத்துக்கள் 18, 19 ஆம் நூற்றாண்டுகளில் ஒன்றாக திரள்கின்றன. இதன் விளைவைத்தான் இன்று நாம் உலகமயமாதல் என்கிறோம். அதுமட்டுமல்ல உலக அறிவு என்றும் சொல்கிறோம். இதை நாம் மறுக்க முடியாது. இந்த உலகளாவிய அறிவு(Global Knowledge) என்பது எல்லாச் சமூகங்களிலும் ஊடுருவி இருக்கிறது. எல்லாச் சமூகங்களும் இந்த உலக மையத்திற்குள்தான் உறவு கொண்டிருக்கின்றன. எதுவும் தனிமைப்பட்டுப் போகவில்லை தனித்தும் இயங்கவில்லை. ஒரு வகையில் அது சுரண்டப்படுகிறது அல்லது பாதிக்கப்படுகிறது அல்லது அந்த இடத்தை அது ஊடுருவி இருக்கிறது. ஊடுருவும் போது அடிமைத்தன்மை என்று சொல்வது, உழைப்பை கற்றுக் கொள்வதன் மூலமாக அங்கே அறிவு இருக்கிறது. தொழில்மயமாக்குதல் என்பது உழைப்பவர்களை தொழில்மயமாக்குதல் என்பதுதான். 

இயந்திரத்தைப் பயன்படுத்துவதன் மூலமாக உருவான இயந்திர மயமான ஒரு சமூகம் அந்த இயந்திரத்தைப் பயன்படுத்தும் அறிவின் மூலம் பாட்டாளி சமூகம் அறிவுடையதாக மாறுகிறது. உழைப்பும் அறிவுமாக மாறுகிறது. மார்க்சியமும் அதன் பின்பகுதியாகிய இருபதாம் நூற்றாண்டின் விடுதலை சார்ந்த  கட்டுடைப்பு (Deconstruction), உடல் அரசியல் (Body Politics) உயிர் அரசியல் (Biopolitics), பாலின அரசியல் (Gender Politics) இவை எல்லாவற்றையும் சரியாக நடைமுறையில் சொல்ல வேண்டுமென்றால் கம்யூனிசம் சார்ந்ததே. நாம் எல்லோரும் கம்யூனிஸ்ட். நாம் அனைவரும் கம்யூனிஸ்ட்டாக உரிமை இருக்கிறது. ஒரு கம்யூனிஸ்டுக்கு மார்க்சியமே நூலகம். ஒரு கம்யூனிஸ்டுக்கு மார்க்சியம் போதாமை உடையதாக இருக்கலாம். தரவுகள் புதியதாக மாறலாம். கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட்டாகவும் இருக்கிறார். ஆனால் கம்யூனிசம் உருவாவதற்கான மொழி மார்க்சியமே. கம்யூனிசம் ஒரு அறிவுத் தோற்றவியல் (Epistemology). ஒரு பார்வை.

இந்தப் பார்வைக்கு மார்க்சியம் அடிப்படையாகிறது. கம்யூனிசம் மார்க்சியத்திலிருந்து தொடங்குகிறது.  ஒரு கம்யூனிஸ்டுக்கு, மார்க்சியத்தில் முரண்பாடு வருகின்றபோது புதிய இயங்கியல் மூலமாக அதை விளக்குகிறோம் ஒரு அறிவியலாக.இது பின்நவீனத்துவ அறிவு. இது பின்நவீனத்துவ நடைமுறை. பின் நவீனத்துவம் என்பது இலக்கியப் பின்நவீனத்துவம் என்பது 1950,1960 களில் இலக்கியத்தின் பரிசோதனை முயற்சியாக வந்தது. Postmodern condition. பின்நவீன நிலை எனும்போது லியோதார் வரும்போது பின்நவீனத்துவ அறிவின் இடம் என்ன என்பதெல்லாம் வருகிறது. இன்று காரணங்கள், காரணங்களுக்கு அப்பாலான பின்நவீனத்துவச் சமூகம் என்ற லியோதார் உருவாக்கிய கருத்தாக்கம் 1970-71இல் வருகிறது. சமூகம் நவீனத்துவம் கடந்த நிலைக்கு வருகிறது என்ற பார்வை அதில் உள்ளது. பகுத்தறிவு வெளியேற்றம் நிகழ்கிறது. பெருங்கதையாடல் என்பது ஒரு அறிவு தன்னைத் தானே விளக்கிக் கொள்கிறது, அறிவு என்று தன்னைத்தானே சொல்லிக் கொள்கிறது என்ற நிலையிலிருந்து பின்நவீனத்துவ விமர்சனம் தொடங்குகிறது. இதனுடைய இன்னொரு பகுதி கட்டுடைத்தல். இவை எல்லாவற்றையும் சேர்த்து பின்நவீனத்துவம், பின்நவீனத்துவ அரசியல் என்கிறோம். பின்நவீனத்துவ அரசியலில் ஒரு கம்யூனிஸ்ட், பெண்ணியவாதியாக, காலனிய எதிர்ப்பு வாதியாக, பின்காலனித்துவவா வாதியாக, எல்லாவற்றையுமே இணைத்துப் பார்க்க கூடிய இயங்கியல்வாதியாக, தூய்மையிலிருந்து வெளியேறக்கூடிய, தூய்மை இல்லாத ஒரு சிந்தனையாளராக மாற வேண்டும். 

தமிழ் அடையாளம் என்பதும், தமிழ் சமூகம் அந்த அடையாளத்தோடு போராடுவதை புரிந்து கொள்கிறோம் என்றால், அந்தச் சமூகம் உலக சமூகத்தோடு உறவு கொள்ள வேண்டும். எதுவுமே பியூரிட்டி அல்லது தனித்தன்மை என்று இல்லை. தனித்தன்மை என்பதை விட ஒரு சமூகம் தன்னைத் தூய்மையாக வைத்துக் கொள்கிறது, கலப்பு நிகழவே கூடாது என்பது எல்லாம் விலக்கக்கூடிய பண்பே.  பாசிசத்தின் வடிவமே. உலகம் அடையாளங்களை அங்கீகரிப்பதன் மூலமாக, coexistence சகவாழ்வின்மூலமாக  எதிர்காலத்தில் அடையாளங்கள் கலப்பதுதான். புதிய அடையாளம் என்பது hybridity கலப்பின் வழியாகவே என்பதுதான்.  கலப்புதான் இங்கு அனுமதிக்கப்பட வேண்டும். அடையாளங்கள் அழிக்கப்படுவது இல்லாமல் அடையாளங்கள் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும். கலப்பதன் மூலமாகவே அடையாளங்கள் கரைகின்றன.  இயக்கமாகவே ஒன்றோடு ஒன்று கலந்து புதிய அடையாளமாக மாறும். பாசிசம் அடையாளங்களை அழிக்கிறது. 

கேள்வி:
இந்த இடத்தில் பண்பாட்டு அடையாளம் என்பதை எவ்வாறு பார்ப்பது?

பதில்:
ஏகாதிபத்தியத்தின் ஒரேஒரு தன்மையுடையதாக்கல் என்ற அடக்குமுறை  பின்நவீனத்துவத்தின் முக்கிய விவாதம். ஒற்றைத் தன்மை என்பது தன்னைத்தானே நிறுவிக்கொண்ட ஒரு அதிகார அமைப்பு. அதில் பேரரசு,  ஏகாதிபத்திய வன்முறை முதலிய அதிகாரங்கள் இருக்கின்றன. இந்த வன்முறை உலகத்தில் உள்ள எல்லா அடையாளங்களையும்  மற்றமையாகவும் ஏகாதிபத்தியமாகவும் ஆக்குகிறது. அப்போது அடையாளங்களின் தனித்தன்மை என்பதை முதலில் அங்கீகரித்தல்தான். அடையாளங்கள் இருக்கின்றன என்பதை அங்கீகரிப்பதுதான் அடையாள அரசியல். காலனியாதிக்கத்திற்கு எதிராக ஒரு சமூகம் தன்னுடைய அடையாள அரசியலை முன்வைக்கிறது. இது எதிர்ப்பின் ஒரு பகுதி. அடையாளம் தூய்மையானதாக மாறுமா என்றால் மாற முடியாது ஏனென்றால் அது ஏற்கனவே அடக்குமுறைக்கு உட்பட்டதாக மாறுகிறது. அந்த அடக்கு முறையின் அறிவை அது எடுத்துக் கொள்ளும். அதுதான்  பின்காலனித்துவம். காலனிய அதிகார அறிவின் மூலமாக ஒடுக்கப்பட்ட சமூகமும் தன்னை வளர்த்துக் கொள்கிறது. அரசியல் ரீதியாக தன்னை மேம்படுத்திக் கொள்கிறது அல்லது அரசியல் கருவியாக அது மாறுகிறது. அடையாளத்தை நிறுவும் எதிர் அரசியலாக அது மாறுகிறது. அப்போது அந்த இடத்திலேயே அது வேறு ஒரு அடையாளத்தை நோக்கிப் போகிறது. 

கேள்வி:
அப்போது அடையாள அரசியல் வன்முறையாக மாறாதா? 
பதில்:
இல்லை. காலனியமயமாக்கல் என்று வருகின்றபோது, ஒரு அடையாளம் இன்னொரு அடையாளத்தின் மூலமாகவே எதிர்கொள்ளப்படும். இங்கே அடையாளம் என்பது முன்னே நிற்கும்.  முன்னே நிற்கும் அடையாளம் தன்னை எக்கியூப் செய்துகொள்வதன்மூலமாக வேறொரு இடத்தில் இருக்கக்கூடிய அடையாளத்தை அது அங்கீகரிக்கிறது. உலக அளவில் எல்லா அடையாளங்களையும் அங்கீகரிக்கிறது. இது coexistence ஆக மாறுகிறது. இவ்வாறு இல்லாமல் ஒரு அடையாளம் இன்னொரு அடையாளத்தின் மீது அதிகாரம் செலுத்துகின்ற பொழுது அது காலனிய அதிகார அடையாளமாகிறது. இன்றைக்கு உள்ள அடையாள அரசியல் என்பது காலனியமயமாக்குகின்ற ஒற்றை அடையாளம் என்கிற அதிகாரத்துக்கு எதிரான அரசியல். எனவே இன்று அடையாள அரசியல் என்பது ஒரு மாற்றத்தை நோக்கியது. முதலில் அடையாளத்தை முன்வைத்தல், வேறுபடுத்திக் காட்டல் என்பது முக்கியமானது. நான் வேறுபட்டு இருக்கிறேன், வெளிப்படுத்துகிறேன் என்கிறபோது அது அதிகாரத்துக்கு எதிரான அரசியல் ஆகிறது. இந்த அடையாள அரசியல் தன்னைத் தகவமைத்துக் கொள்ளவேண்டும் என்றால் பிற அடையாளங்களுடன் கட்டாயம் உறவாட வேண்டும். அப்படி இல்லாமல் அது தனிமைப்படுகிறது என்றால் அது மீண்டும் சர்வாதிகாரமாக மாறும். அப்போது உலக அளவில் இருக்கக்கூடிய அடையாளங்கள் அனைத்தும் உலக அரசியலோடு உறவு கொள்ள வேண்டும். உலகத்தன்மை அதே நேரத்தில் சுதந்திரமான என்கிற நிலை அது.

கேள்வி:
அப்படி மற்றதுடன் கலக்கும்போது இதன் அடையாளம் போய்விடாதா?
பதில்: 
ஆம் போய்விடும். கலத்தல் நடக்கும். அடையாளம் என்பது மாறிக்கொண்டே இருப்பது.  அடையாளம் நிரந்தரமானதல்ல. புதிய அடையாளம் அறிதல்முறை, மொழி,  புதிய பண்பாட்டுக்  கட்டமைப்பு இதெல்லாம் வரும்போது புதிய அடையாளம் உருவாகும்.   உலகத்தில் எந்த ஒரு அடையாளத்தையும் தொடக்கத்திலிருந்து வந்ததாகவும் எல்லாவற்றுக்கும் புனித ஆதாரமாகவும் சொல்ல முடியாது. அப்படிப் புனித ஆதாரம் என்று எதுவும் இல்லை. அந்தக் கட்டம் முடிந்துவிட்டது. இவ்வாறான நவீனத்துவத்துக்கு முந்தைய அடையாளம் என்ற பார்வை இன்று இல்லை. அப்படி ஒரு சமூகம் இருந்தால் அது காலனிய மயமாக்கப்பட்டதைப்போலத்தான் இருக்கும். காலனியமயமான சமூகம் தன்னை அரசியல்ரீதியாக நிலைநிறுத்திக் கொள்ளும்போது கலப்பாக அது தன்னை உருவாக்கிக்கொள்ளும்.  ஆப்பிரிக்காவில் ஒவ்வொரு நாடும் கலப்பாகவே இருக்கிறது. 

கேள்வி:
பழங்குடிகளும் இந்தக் கலப்பின மாற்றத்திற்கு வந்தாகவேண்டுமா?

பதில்:
பழங்குடி என்று சொல்ல முடியாது. இனக்குழு மற்றும் நவீனம் இரண்டும் கலந்தது. அது உலகமயமான இனக்குழுத்தன்மையுடன் இருக்கும்.  மற்றதோடும் இணைந்தே இருக்கும். ஒரே அடையாளத்தை உலகமயமாதல் என்பது பிற அடையாளங்களை  மற்றமையாக ஆக்கி எல்லாவற்றையும் அழிப்பதாகவும் ஒழிப்பதாகவும் இருக்கும்.
மற்ற அடையாளங்களுக்கு அர்த்தமில்லை என்று சொல்வது பாசிசம். இதுதான் அதிகாரத்தை நிர்ணயிக்கிறது. தன்னுடைய அடையாள அரசியலை வன்முறையாக்குகிறது. அடையாள அரசியல் வன்முறையாக மாறும் இடம் இதுவே. அடையாளத்திற்கான கட்டுமானம் என்ன என்பதை ஒரு சமூகம் விளக்குகிறது.  மொழித் தூய்மை, சமயத்தூய்மை, பண்பாட்டு நடைமுறைகள்சார் தூய்மை, சடங்குசார் தூய்மை இவற்றின் மூலமாக எந்தத் தூய்மை வருமோ அது உள்மொழியாக ஆக மாறுகிறது. அவ்வாறு மாறும்போது இயக்கமற்றதாக, அறிவற்றதாக, அறிவு மறுப்புச் சமூகமாக அந்தச் சமூகம் மாறும். அப்போது இதன் அரசியல் பொருளாதாரத்தை உலகச் சமூகம் சுரண்டும். இந்தியாவில் மதத்தின் அடிப்படையிலான அடையாளத்தை உருவாக்கல் என்பதும் இவ்வாறானதாக இருக்கிறது. 

ஒரு சமூகம் தன்னை அரசியல், பொருளியல், அறிவியல் இவற்றோடு உறவாடாமல் பண்பாட்டுத்தளத்தில் மட்டுமே வைக்கின்றபோது பண்பாட்டுத் தேசியமாக மதத்தேசியமாக அது இருக்கும். அப்போது அது உலகளவிலான அத்துமீறலுக்கு உள்ளாகும். பண்பாட்டு மையம் , பண்பாட்டு வெறி அல்லது மத மையம், மதவெறி எதுவாக இருப்பினும் இவ்வாறுதான் இருக்கும். 

பண்பாட்டின் இயங்கியல் வரையறை என ஒன்று இருக்கிறது. பண்பாடு என்பது அந்தச் சமூகத்தில் இருக்கக்கூடிய பொருள்கள்,  உற்பத்தி உறவுகள், அறிவியல், அறிவுத்துறை அனைத்தையுமே பரவலாக்குதல்தான் பண்பாடு. அதற்கு எதிராக பழமையை நோக்குதல் என்பது குறியியல்ரீதியான பின்னோக்கிச் செல்லுதல்தான். அப்போது என்ன நடக்கிறது என்றால், ஏற்றத்தாழ்வு வருகிறது. அடுக்குமுறை, அடக்குமுறை, மேலாதிக்கம் உருவாகிறது.
சாதி, பாலினம், இனம், மதம் என எல்லாவித அதிகாரப் படிநிலைகளும் உருவாகின்றன. இதைவிடக் கொடுமையான சமூகப் பாசிசம் உருவாகிறது. அது வருகிறபோது வன்முறை சார்ந்த அழித்தொழிப்பு, உயிர்மறுப்பு சார்ந்ததாக மாறுகிறது. எனவே இங்கு அடையாள அரசியல் என்பது அடையாளத் தூய்மையாக்குதல் அல்ல. தூய அடையாளத்தை மீட்டெடுப்பதோ, தூய அடையாளம் என்ன என்பதைப் பார்ப்பதோ அல்ல. இயக்கமுள்ள அடையாளத்தை பெறுவதற்கான உரிமை.  எனக்கு ஒரு இனம் இருக்கிறது. ஆனால், நான் நவீன அறிவைக் கற்றுக் கொள்வேன். உலகத்தோடு என்னால் உறவு கொள்ள முடியும். இன்று உலக அளவிலான உறவு என்பது சமூகங்களுக்கு இல்லை.  பொருளாதாரத்திற்குத்தான் இருக்கிறது.  அரசுகளும் பொருளாதார நிறுவனங்களும்தான் உலகமயமாகின்றனவே தவிர, அறிவு, பண்பாட்டு உலகமயமாதல் என்பது இல்லை. ஏனெனில் உலகமயமாதல் என்பது மையம் இல்லாதது. அறிவியல் சார்ந்த மனித நடத்தை என்பது உலகம் சார்ந்தது, உலகத்தன்மை சார்ந்தது. அது நமக்கு வரவில்லை.
நமக்கு மட்டுமல்ல பல சமூகங்களுக்கும் அது வரவில்லை. மனித உரிமை,  தனிமனித உரிமை, பல்வேறு பாலினம் சார்ந்த உரிமை, Gender sensitivity , மாற்று உளவியல்,  ஆதிக்கத் தன்மையற்ற – பல்வேறு தன்மைகளை எல்லாவகையிலும் கொண்டாடுகிற- தனிமனித இருப்பை உன்னதப்படுத்தக்கூடிய- பெருமதிப்புடையதாக இருக்கக்கூடிய  இவையெல்லாம்தான் உலகமயமானது. இதற்கெல்லாம் எந்தச் சமூகமும் தனியாக உருவாகவில்லை. உலக அளவில் பல தத்துவங்கள் ஒன்றாகித்தான் வருகிறது.  இதைத்தான்  அடிப்படையில் உலகத் தேசியம் என்கிறோம். உலகத்தேசியம் மற்றும் கம்யூனிசம் என்கிறோம். பண்பாட்டுக் கம்யூனிசம் என்பது இது. உண்மையான உலகமயமாதல் என்பது அறிவு, அறிவாற்றல் முதலிய எல்லாம் எல்லாச் சமூகங்களுக்கும் சென்று சேர வேண்டும் என்பதுதான். அனைவருக்குமான பங்கைப் பெறுவதற்கான ஒரு உரிமை இதெல்லாம்தான் உலகமயமாதல். 

இவ்வாறு இல்லாததனால்தான் பொருளாதார உலகமயமாதல் என்ற  ஒரு தன்மை இன்றைக்கு இருக்கிறது. மூலதனம் உள்ள சமூகம் இன்று தொழில்நுட்பரீதியாக மேம்பட்டு இருக்கிறது. இந்தத் தொழில்நுட்ப முழுமை அடிமை அரசியலை நோக்கியதாக இருக்கிறது. அமெரிக்காவின் பொருளாதாரம் அடிமைத் தொழிலை அடிப்படையாகக் கொண்டது. ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரம் காலனியத்தை அடிப்படையாகக் கொண்டது. இதனால் சமநிலையற்ற போக்கு நிலவுகிறது. எனவே உலக அளவில் ஒரே மாதிரியான அரசியல், பொருளாதாரம் இல்லை. இந்த நிலையில் வாழ்தலுக்கான வளர்ச்சித் திட்டம் என்பது அவர்களுக்கான வளர்ச்சிதானேயொழிய எல்லோருக்குமானது அல்ல. 

வளர்ச்சி அடைந்த சமூகம் வளர்ச்சியைப் பற்றிப் பேச வேண்டிய தேவை என்ன இருக்கிறது. வளர்ச்சி என்றால் எது வளர்ச்சி, எதை வளர்த்த வேண்டும். இந்தியா, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் வளர்ச்சி என்பது என்ன? என்பவை முக்கியமானவை.  

கடந்த ஒரு நூற்றாண்டில் பெரிய அழிவுகள் நடந்திருக்கின்றன. இன்றைக்கு உயிர் வாழ்தல் சார்ந்த, மனித மதிப்பு, மனித கண்ணியம் சார்ந்த, வாழும் உரிமை இவையெல்லாம் முக்கியம். மனிதர்கள் வாழும் இடம் முக்கியம். வாழ்வு மகிழ்வானதாக இருக்க ஒவ்வொருவரும் அனுபவிக்கும் கொடுமைகள் இல்லாமல் இருக்க வேண்டும். நோய்த்தன்மை இல்லாத சூழல், வாழ்வு தேவை. இவையெல்லாம்தான் இன்றைய அரசியல். ஒரு சமூகத்தினுடைய வளர்ச்சிக்கு இன்னொரு சமூகத்தை, வாழ்வைச் சுரண்டுவது என்பது இருக்கிறது. இது இருக்கும்வரை அவர்களின் அரசியல் நிற்காது. முரண்பாடு, போராட்டம் இருக்கும். இனிமேல் என்ன நிகழவேண்டும் என்பதல்ல சிக்கல். எனவே சமூகத்தின் உள் சிக்கல்களைத்தான் பேச வேண்டும். மார்க்சியம் இதைத் தெளிவாக சொல்கிறது. வர்க்கப் போராட்டம், அடையாளம் என்பது அந்தந்த தேசத்திற்கு அந்தந்த சமூகத்திற்கு உரியதாக அவற்றுக்கு ஏற்றதாகத்தான் இருக்கும் என்கிறது. அது மார்க்சியச் செயல் திட்டத்திலேயே இருக்கிறது. ஒரு நாட்டினுடைய உற்பத்தி உறவுகள், அவற்றுக்கு இடையில் உள்ள முரண்பாடுகள், அந்த முரண்பாடுகளைக் கையாளும் முறை இவையெல்லாம் அந்த நாட்டின் சமூக, பொருளாதாரச் சூழல்களுக்கேற்ப அமையும்.

முதலில் நாம் கருத்தியல் ரீதியாக, பார்வை ரீதியாக வேறுபடுகிறோம். ஏனெனில் அறிவு என்பதே முதலில் வேறுபடுத்திப் பார்ப்பதுதான். நாம் அறிவியலை நோக்கிப் போகிறோம். அந்த அறிவியலில் இருந்து புதிய அறிதல் முறையை உருவாக்குகிறோம். இந்த அறிதல் முறை அறவியல் மற்றும் மனிதப் பார்வையைக் கொடுக்கிறது. இந்த இடத்தில் கம்யூனிசம் மனித நலம் சார்ந்த செயல் திட்டங்களைப் பார்க்கிறோம். இது ஒரு தேசியக் கட்டுமானமாகக் கூட இருக்கலாம். ஒரு சமூகத்தை உருவாக்குதல், தேசத்தை உருவாக்கல் என்பவை எல்லாம் கம்யூனிசத் திட்டம் இல்லாமல் செய்ய முடியாது. நவீன தேசம் என்பதற்கான  உந்து சக்தி அல்லது வழிகாட்டு நெறிமுறையே கம்யூனிசம்தான். கம்யூனிச திட்டம் இல்லாமல் ஒரு தேசம் உருவாக முடியாது. அது இல்லையென்றால் பாசிசமாகவே அது இருக்கும். 

கம்யூனிசம் ஏதோ வெளியில் இருக்கக்கூடிய அழிவு சக்தி இல்லை. அது போர் அல்லது ஆயுதமாக வருகிறது என்பதல்ல. போர் இயந்திரமோ, இராணுவமோ, படையோ அல்ல. 

கம்யூனிசம் என்பது சட்டத்துறையில் இருப்பது. நீதித்துறையில், நிர்வாகத் துறையில், அரசு இயந்திரத்துறையில், தேசக்கட்டமைப்பில் இருப்பது. கம்யூனிசம் சமூகத்தின் அனைத்து உறுப்புகளிலும் இருப்பது. நவீன சமூகத்தின் உந்து சக்தியே கம்யூனிசம் தான். கம்யூனிசத்தில் இருந்து குறைவதை வைத்தே நாம் சோசலிசம், ஜனநாயகம், Liberal democracy சுதந்திர ஜனநாயகம் என்றெல்லாம் சொல்கிறோம். பிரான்சிஸ் ஃபுகுயாமா  (Francis Fukuyama, The End of History and the Last Man) போன்றோர் கம்யூனிசம் இனி உருவாக முடியாது. சுதந்திர ஜனநாயகம்தான் வளர்ச்சியடைந்த அல்லது மேம்பட்ட ஒன்று என்கிறார்கள். ஏனென்றால் அதில் சுதந்திரத்தன்மை, சமத்துவம் முதலின இருக்கின்றன,  மனித உரிமைகள் பாதுகாக்கப்பட்டிருக்கின்றன என்கிறார் அவர்.

இந்த சுதந்திரம், சமத்துவம், ஜனநாயகம் எல்லாம் எங்கிருந்து வருகின்றன. இவையெல்லாம் கம்யூனிசத்தின் செயல் திட்டமே. கம்யூனிசத்தின் குறைதல் அல்லது கம்யூனிசத் திட்டத்தின் விகிதாச்சாரம் நவீனத்துவம். அமெரிக்காவின் கோட்பாடு வேறு. ஆனால் அரசியல் சட்டம் என்ன சொல்கிறது. சமத்துவம், நீதி, மகிழ்வான மனித வாழ்வு, சுதந்திரம் இதை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. இது கம்யூனிசத்தின் செயல்திட்டமே. இது ஏற்கெனவே இருந்த கிரேக்க சமூகத்தின் அடிமை நகரமல்ல. இது சுதந்திரமுடையவர்களின் தேசம். இது சுதந்திரமான தேசம். இது அடிமையற்றவர்களின் தேசம். கோட்பாட்டில் கம்யூனிசச் செயல் திட்டம் இருக்கு. ஆனால் அந்தச் சமூகம் அடிமைகளை வைத்திருக்கிறது. 1776 இல் இருந்து உருவான தேசம் இது. இதுதான் ஜனநாயக அடிப்படையில் உருவான சுதந்திரக் குடியரசு. இந்தக் குடியரசென்பது வெள்ளை மையமாக இருக்கிறது. ஆப்பிரிக்கக் கருப்பின மக்களை மனிதர்களாக எடுத்துக்கொள்ளாததால் human dignityயை கண்ணியத்தை அவர்களுக்குக் கொடுக்கவில்லை.  மனித மகிழ்வு, சுதந்திரம், நீதி என்பவையெல்லாம் அவர்களுக்குத் தேவையில்லை என்பதெல்லாம் வெள்ளைமையவாதம்தான். சுதந்திரமடைந்தவர்களின் சமூகத்தில் அடிமைத்தனம் ஏன் இருக்கிறது என்பதுதான் கேள்வி.

புவியியல் ரீதியாகக் குறிப்பிட்ட இடத்தில் இருந்த அடிமைத்தனம் 18,19 நூற்றாண்டில் உலகம் முழுமைக்கும் ஆயிற்று. ஐரோப்பாவில், பிரிட்டனில் அடிமைத்தனத்தை ஒழிக்கத் தொடங்கினார்கள். 1820களில் ஏறக்குறைய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கைக்கு முன்பு அடிமைத்தன்மையை ஒழிக்கிறார்கள். ஆனால் அமெரிக்கா 1865 வரைக்கும் அதற்கான  போர் செய்ய வேண்டியிருந்தது ஒருநூற்றாண்டுக்கும் மேல். இன ஒதுக்குதலுக்கு 1965, 1968,1970 களில்தான் அமெரிக்கச் சமூகம் அரசியல் ரீதியாக இனச் சமத்துவ உரிமைக்கு வருகிறார்கள். முரண்பாடற்ற சமூகம் என்று இல்லை அது.  ஆனால் எதை நோக்கி அந்தச் சமூகம் அமைக்கப்படுகிறது என்றால், சுதந்திரம், சமத்துவம், நீதி முதலியவற்றை நோக்கியது. எல்லாமே சுதந்திரம் என்பதை அடிப்படையாகக் கொண்டது. ஒரு கம்யூனிச சர்வாதிகாரம் அல்லது பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தில் (proletarian dictatorship) சுதந்திரம் இல்லையென்றால், சுதந்திரம் இல்லை என்று சொல்கிறோம், ஆனால் அதுதான் சுதந்திரம் என்று சொல்வதில்லை. இங்கே சுதந்திரம் என்பதைப்பற்றிய தொடர்ந்து கேள்விகள்தான் இருக்கின்றன. இது கம்யூனிச மனநிலை, கம்யூனிசம் ஆகிறநிலைதான் இருக்கிறது. காந்தியைக் கடந்த காந்தியம் என்பதும் அம்பேத்கரியம் என்பதும் கம்யூனிசத்தை நோக்கியது. எல்லாவற்றையும் இதனோடுதான் உரையாடுகிறோம். 
எங்கெல்லாம் நீதியற்ற சமத்துவமற்ற போக்கு இருக்கிறதோ அதை எல்லாம் கம்யூனிசம் நோக்கிய பார்வையில் இருந்துதான் நாம் அணுகுகிறோம். கம்யூனிசமே அளவுகோலாக இருக்கிறது. நீதி, அறம் என்பவை மனித சமூகத்தின் முக்கியமான கட்டமைப்புகள். அப்படி இல்லையென்றால் எல்லா வன்முறைகளும் நியாயப்படுத்தப்படும். அதுதான் வன்முறைகளின் வரலாறு. இதனால்தான் நாம் தேசமாக குடியாட்சிச் சமுகமாக இருக்கவேண்டுமென்பது முக்கியமானதாகிறது. இல்லையென்றால் நாம் தேசம், குடியாட்சி என்று பேச வேண்டிய அவசியம் இல்லை. ஒவ்வொரு மனிதர்களையும் நிராயுதபாணியாக்கி, போராட முடியாதவர்களாக, போர் செய்ய முடியாதவர்களாக மாற்றி அவர்கள் மேல் ஒரு அரசாக, எந்திரமாகச் செயல்பட்டு கொலை, வாழ்வழிப்பின் வழியாக நிறுவப்படும் அமைப்பாக இது மாறுகிறதெனில் அது வன்முறைகளின் அடிப்படையிலானது. ஒவ்வொரு அரசும்  தனிமனித உயிர், உடலைக் கொலைசெய்யும் அதிகாரத்தை நிறுவியிருக்கு.

19-ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட புரட்சி அரசின் அழித்தொழிப்புகளுக்கு எதிரானதாக அமைந்தது. புரட்சியென்பது அரசோ,  மன்னராட்சியோ, இராணுவமோ எதுவாயினும் நம்மை அழித்தொழிப்பதற்கான உரிமையில்லை என்று அதன் வன்முறைக்கு எதிரான அரசியல். அதிகாரத்தின் ஒடுக்குமுறையும் அதற்கு எதிரான புரட்சியும் சேர்கிறபோது அது இறப்பின் சுழற்சியாக மாறுகிறது. அதிகாரம் அழித்தொழிப்புக்கான உரிமையை எடுத்துக் கொள்ளும்போது அதற்கு எதிரான போராட்டத்தில் மக்கள் அழிவு, இறப்பு நிகழும். இது தவிர்க்க முடியாத சிக்கல்தான். அப்போது இன்றைக்குப் புதிய மனித அடையாளம். அதாவது புதிய கருத்தியலைச் சொல்கிறோம். இன்றைக்கான கருத்தியலாக்கத்தை புதிய மொழி, புதிய குறியீடுகளால் உருவாக்குகிறோம். இந்தக் கருத்தியல்களின் வழியாக பாசிசத்துக்கு எதிரான, மேம்பட்ட வாழ்வுக்கான நிலையை அடையதல் முதன்மையானது. இந்த இடம் முக்கியமானது. கம்யூனிசம், பின்நவீனத்துவ பார்வை, பின்நவீனத்துவ அறம், பின்நவீனத்துவ மற்றமை, பன்மைத்துவம், அனைத்தையும் உள்ளடக்கித்தன்மை இவையெல்லாமே பின்நவீனத்துவ அரசியல் கலைச்சொற்களே. இந்த இடத்தில் மார்க்சியம், கம்யூனிசம், பின்  கோட்பாடுகள் (Post theories ) எல்லாம் வருகின்றன. முதலாளித்துவம் என்பது பின்நவீனத்துவ உத்தியைக் கொண்டது. அதற்கு நிறைய முறைகள் இருக்கின்றன. பின்நவீனத்துவம், பின்நவீனத்துவ கம்யூனிசம், பின்நவீனத்துவ உரிமை எல்லாம் ஒரே இடத்தில் இல்லை. ஆனால் ஒரு தொடர்புறவு இருக்கத்தான் செய்கிறது. இதையெல்லாம் ஏதாவது ஒரு பெயரால் அழைக்க வேண்டுமெனில் கம்யூனிசம் என்று சொல்லலாம். ஏன் நான் கம்யூனிஸ்டாக இருக்கக் கூடாது. இந்த இடத்தில்தான் நான் அடிக்கடி சொல்வது கம்யூனிஸ்ட் என்பது  A process of Becoming. நான் என்னவாக மாறுகிறேனோ அது உருவாதல் நிலை. நான் என்பது தனியாக இல்லை. நான் எதுவாக மாறவேண்டும். எதை நோக்கிச் செல்கிறோமோ அதுவாக மாறவேண்டும். அந்த இடத்தில் கம்யூனிசப் பார்வை, கம்யூனிச உளவியல் வருகிறது. கம்யூனிஸ்ட் அல்லாதவர், கம்யூனிசத்துக்கு எதிரானவர் என்றால் அவர் வன்முறையை ஏற்கக் கூடியவராகவும் வன்முறையைச் செலுத்தக்கூடியவராகவும் மாறுகிறார். ஆனால் கம்யூனிசப் பார்வையுடன் வருகிறவர்கள் தங்கள்மேல் வரும் வன்முறையை எதிர்ப்பதோடு தங்கள்மூலமாக வன்முறை உருவாக்காமலும் இருப்பார்கள். இந்த இரண்டுக்கும் இடையில் இருக்கும்போது ஒரு பிளவு இருக்கும். இதுதான் கம்யூனிச உளவியல். அதனால் நடைமுறைப் படுத்தமுடியாத, நடைமுறையில் இல்லாத ஒன்றை எப்படி கோட்பாடாக வைப்பது என்றால், வாழ்வு என்பது பல்வேறு குறியீடுகள், கற்பனைகளாலானது. அறிவியல் என்பது எல்லாவற்றையும் மாற்றமுடியும் என்பது. ஒவ்வொன்றையும் உருவாக்க முடியும் என்பது. பாசிசத்தை, அறிவியலை, உலகமயத்தை உருவாக்க முடியும் என்றால் கம்யூனிசத்தையும் உருவாக முடியும். எல்லாமே ஒருவித மாற்றத்துக்கான திட்டம்தான். ஒவ்வொரு தனிநபரையும் உருவாக்குவதற்கான திட்டம்தான். 

கேள்வி:
இதுபோன்ற உலகத்தன்மையிலான பார்வையை நாம் முன்வைக்க முடியுமென்பது முக்கியமானது. ஆனால் இந்தியாவில், தமிழகத்தில் இவ்வாறான பார்வைகளை முன்னெடுக்க இயலாமல் இருப்பதற்கான தடைகள் என்னவென்று நீங்கள் நினைக்கிறீர்கள்? இதன் இன்னொரு பகுதியாக மார்க்சியக் கருத்தியலைக் கொண்டுள்ளவர்கள் இந்த நிலையை இங்கு எப்படி எதிர்கொள்கிறார்கள்? காந்தி, அம்பேத்கர், பெரியார் முதலிய சிந்தனைகளுடன் உலகளாவிய பார்வையை இணைத்து நோக்க வேண்டும் என்கிறீர்கள். இதையெல்லாம் எவ்வாறு பார்ப்பது?

பதில்:
மாறுபடும் கேள்விகளுடன் மார்க்சியம் என்ற என்னுடைய நூலே இதைப்பற்றியதுதான். மார்க்சியம் என்பது எல்லாவிதக் கேள்விகளுடன் உரையாடுகிறது. தெரிதாவின் கட்டுடைப்பு என்பது மொழிசார்ந்த கட்டமைப்பை விளக்கிச் சொல்வது. இந்தப் பாரவையுடன் மார்க்சியத்தை இணைத்து உரையாடல் செய்யலாம். மார்க்சிய உளவியலை லெக்கானுடன் இணைத்து நோக்கலாம். மொழி, அறிவு என்பதில் எந்தெந்த இடத்தில் metaphysics, எந்தெந்த இடத்தில் logocentric  இருக்கிறது என்பதைப் பார்க்கிறோம். ஒரு மொழி ஏற்றத்தாழ்வை உருவாக்குகிறது. ஒரு அமைப்பு ஏற்றத்தாழ்விலிருந்து ஆரம்பிக்கிறது என்பது தெரிதியன் புரிதல்முறை. ஒரு திட்டமாக வந்துவிட்டபிறகு அந்த ஆய்வுமுறையை ஏற்க வேண்டும். ஃபூக்கோவின் உடல் (body), விளிம்பு (Marginality)மற்றும் அதிகாரம்(Power), நுண்ணரசியல் (Micropolitics) முதலிய கருத்தாக்கங்கள் வருகின்றன. கம்யூனிசச் சமூகத்தின் மதிப்பீடுகள் கம்யூனிச சமூகத்திற்கும் பாசிசச் சமூகத்துக்கும் ஒரேமாதிரி இருக்கும்போது அதை மாற்ற வேண்டும். அதாவது உடல்மீதுள்ள ஒரேமாதிரியான விதிகள், அதிகாரம், உழைப்பைப் பிழிந்தெடுப்பது என்று இருப்பதை மாற்ற வேண்டும். அடக்குமுறைச் சமூகத்தின் அதே கூறுகளைக்கொண்டு புதிய சமூகத்தைக் கட்டமுடியாது. எனவே ஃபூக்கோவின் நுண்ணரசியலைப் பேசியாக வேண்டும். இந்தியாவுக்கு வரும்போது அம்பேத்கரியத்தின் மூலமாகவே செயல்படுத்த முடியும். இந்தியாவில் சாதி, மதம், இனம் இவைகளே மொத்தச் சிக்கலுக்கும் அடிப்படைகள் என்று மார்க்ஸ் சமூக அறிஞராக மூன்று பத்திகளில் சொல்லியிருக்கிறார். இதை மறந்துவிட்டு மார்க்சியத்தைப் பேசமுடியாது. அம்பேத்கரின் ஆய்வுகள் இந்தச் சிக்கல்களையே அடிப்படையாகக் கொண்டவை. எனவேதான் இந்தியாவுக்கு வரும்போது அம்பேத்கரியத்தை முன்னெடுக்கிறோம்.
பிறகு இன்னொன்று காந்தியம். இது சிக்கலான ஒன்று. நிறைய உருவகங்கள், குறியீடுகள், சடங்குகள் இருக்கும். இருந்தாலும் இந்தியச் சமூகத்தில் அரசியல் மயமாதல், போரற்ற மாற்றம், முதலாதிக்கம் -பொருளுற்பத்தி – இயந்திரமயமாக்கல் இவைசார்ந்த அந்நியப்பட்ட வாழ்முறைக்கு எதிராக உழைப்பு சார்ந்த இயற்கை சார்ந்த செயல் திட்டங்கள் இருக்கின்றன. அதில் கம்யூன் அமைப்பு இருக்கு. 19, 20 ஆம் நூற்றாண்டில் உருவான புதிய கம்யூனிசச் சமூகத்தின் கூறுகள் இங்கே என்ன இருக்கின்றன என்று பார்க்க வேண்டும். 
அவ்வாறு பார்க்கும்போதுதான் இடைநிலையில் இருப்பவர்களை அரசியல் மயப்படுத்தல் வருகிறது. உடல்ரீதியாக யாரும் நல்லவர், தீயவர் என்று இல்லை. கருத்தியல் நிலைப்பாட்டிற்கு, கருத்தியல் புரிதலுக்கு ஒருவர் வரமுடியுமென்றால் அதற்கு இடைப்பட்ட சமூகவியல்பார்வை
காந்தியத்தில் இருக்கிறது. 

கேள்வி:
உங்கள் கிரணம் கவிதைகள் பிரமிள் பாதிப்புடன் எழுதப்பட்டதாகச் சொல்லப்பட்ட போது நீங்கள் அதனை எவ்வாறு எதிர் கொண்டீர்கள்?
பதில்:
தமிழில் அதுவரை எழுதப்பட்ட அனைத்து வகைக் கவிதைகளையும் வாசித்து பிடித்தவைகளை மனதில் வைத்து அப்படி இருக்கக்கூடாது என எழுதப்பட்டவைதான் கிரணம் காப்பியங்கள். பிரமிள் உலகமும் பிரேதாவின் உலகமும் நேரெதிரானவை. அவருடையவை அப்பாலை, உன்னத மனித நிலை, புனித கற்பிதங்கள் போன்றவற்றைத் தம் உள்ளடக்கமாகக் கொண்டவை. எனது எழுத்துகள் சாராம்சம், புனிதம், மனித மையவாதம் போன்றவற்றை மறுதளித்த மொழி வழி மனித நிகழ்நிலையை அடிப்படையாகக் கொண்டவை. அனார்க்கிச நிகழ்த்துநிலை கவிதைகள் எனது. அதனால்தான் பிரமிள் என் கவிதைகளை வசையால் எதிர் கொண்டார். ஆபாசம் என்றார், பாலியல் பிறழ்ச்சி என்றார். தேவதேவன் கிரணம் காப்பியங்கள் பற்றி வியந்து எழுதியபோது அவரைக் கடிந்து வசை மொழிந்தார்.
கேள்வி:
எழுத்தாளர்களின் எழுத்தாளர் என்றும் பல வகைமைகளில் எழுதுகிறவர் என்றும் அடையாளம் உங்களுக்கு இருந்தும் உங்களைப் பற்றி குறிப்பிடுவது தவிர்க்கப்படுவது ஏன், நீங்கள் களத்தில், தலித் அரசியலில் நேரடியாக வெளிப்படையாக ஈடுபடுவது காரணமாக இருக்குமா?

பதில்: என் எழுத்துகள் பற்றி எழுதும் அளவுக்குத் தமிழில் கோட்பாட்டு நுட்பம் கொண்டவர்கள் குறைவு, எனது எழுத்துகளை வாசித்து அதன் கருத்தியல் தரவுகளை அடிப்படையாக வைத்து எழுதுகிறவர்கள் கூட எனது அரசியலில் இருந்து விலகி இருப்பவர்கள். நீங்கள் தலித் அரசியலில் நேரடியாக ஈடுபடுகிறீர்கள் அதனால் உங்கள் கவிதைகளை இனி குறிப்பிட்டு யாரும் எழுதமாட்டார்கள் என கவலையுடன் சில நண்பர்கள் குறிப்பிடுவது ஒரு பகுதி உண்மையே. ஆனால் எனது நூல்கள் தொடர்ந்து வெளிவருகிறன்றன, வாசிக்கப்படுகின்றன. ஜமாலன் போன்ற பின்நவீன நுட்பம் அறிந்தவர்கள்தான் எனது எழுத்துகள் புனைவுகள் பற்றி எழுத முடியும், மற்றவர்களால் இயலாது, அதனால் ஒன்றும் குறைந்து விடப் போவதும் இல்லை.

கேள்வி: இனி வெளிவரப்போகும் உங்கள் எழுத்துகள் பற்றிக் கூறுங்கள். சொல் எரிந்தவனம், புறாத்தோட்டம் தொகுதிகளில் உள்ள கவிதை வகைமைகளை தொடர்ந்து எழுதுவீர்களா?
பதில்: 2019 முதல் எனது கவிதைகள் எனது புனைவெழுத்துகள், கதையெழுத்துகள் தொடர்ந்து வெளிவருகின்றன. நிகழ்த்து நிலை கவிதைகள் எனக்குப் பிடித்தமானது. வேறொருவராக இருந்து எழுதப்படும் கவிதைகள். அவை இனி ஆண்டுக்கு ஒரு தொகுதி வெளிவரும். இந்த ஆண்டு இது வரை முற்றுப் பெறாமல் இருந்த நெடுங்கதைகளும் எழுத்தாக்க எழுத்துகளும் (நாவல்கள்) வெளி வர உள்ளன. அம்பேத்கர் பற்றிய விரிவான ஒரு நூல் உருவாகி வருகிறது. திரைக்கான எழுத்து எனது எழுத்தில் புதிய ஒரு இணைப்பு, அது புதிய களங்களை நோக்கி என்னைச் செலுத்தும் என நினைக்கிறேன்.

கேள்வி: தமிழ் ஈழம் என மொழித் தேசம் உருவாவதை பின்நவீனத்துவ நிலையில் இருந்து ஆதரித்து எழுதிய நீங்கள், போர் முறை அரசியலை மறுத்து எழுதுகிறீர்கள். இது முரண்பாடாக உள்ளது.
பதில்: மொழி, இன, மண் சார் அடையாளங்களின் அடிப்படையில் ஒரு நாடு, தேசம் தனித்துச் செல்லவும் வாழவும் விரும்பினால் அதனை மறுப்பது பெரும் வன்முறை. அதே சமயம் மொழி, இனம், மண் சார் உணர்வுகளின் அடிப்படையில் மக்களை ஆயுதமுடையவர்களாக்கி போரில் ஈடுபடுத்திக் கொன்றொழிப்பதும் பெரும் வன்கொடுமை. விடுதலைப் புலிகள் இயக்கம், படை இதனைச் செய்தது. நான் போர் முறை அரசியலை எதன் பெயராளும் ஆதரிப்பதும் ஒப்புவதும் இல்லை. ஆனால் போரும், மோதலும் அரசுகளால் உருவாக்கப்பட்டு, மக்கள் மீது திணிக்கப்படுகின்றவை என்பதை நான் பல கட்டுரைகளில் விளக்கியும் இருக்கிறேன். விடுதலைப் புலிகள் மட்டுமல்ல எல்லா போராளிக் குழுக்களுமே பெரும் பிழை செய்திருக்கிறார்கள். இனி அந்தப் பிழை நடக்கக்கூடாது. தமிழ் ஈழம் பிறகு எப்படி உருவாகும்? தேவையெனில் மக்கள் அதனைப் போரின்றி உருவாக்கிக் கொள்ளும் சூழல் உலக அரசியலில் உருவாகலாம்
கேள்வி: இவ்வளவு காலம் அம்பேத்கரிய பௌத்தராக உங்களை அறிவித்திருந்தீர்கள். தற்போது இஸ்லாத்தைத் தழுவி உங்கள் புதிய பெயரை அறிவித்திருக்கிறீர்கள். இது எதிர்பாராத ஒன்றாக உள்ளது. இதற்கான காரணம்?
பதில்: ஆம், நான் இஸ்லாத்தை எனது மார்க்கமாக ஏற்று அல் ஷாபாஸ் ஆஷிக் என்ற பெயரை அறிவித்திருக்கிறேன். இந்தியச் சமூகமும் அரசியலும் அச்சுறுத்தும் வடிவத்திற்கு மாறியுள்ளது, இன்னும் கடுமையாக மாறலாம். சாதிவெறியும் தற்போது நவீன தொழில் நுட்ப உதவியுடன் கொடு வடிவம் பெற்றுள்ளது. இனியும் ஹிந்து அடையாளத்தில் இருப்பதை நான் விரும்பவில்லை, அது எனது உளஅமைப்பை மிகுந்த உளைச்சலுக்கும் வலிக்கும் உள்ளாக்குகிறது. நான் அடிப்படையில் எனது அடையாளத்தை மாற்றி அமைக்க வேண்டும். அதற்குப் பௌத்தம் பொருந்தாது. பத்து அவதாரங்களில் ஒன்றாகப் புத்தனைத் தன்வயப்படுத்தியுள்ள சானாதன-ஹிந்து பெரு மரபு பௌத்தத்தைச் செயல்பாடற்றதாக, ஒரு அமைதி அமைப்பாக மாற்றி விட்டது. ஆனாலும் நான் என்றும் பௌத்த அறம் மற்றும் மெய்விளக்க முறைக்கு மாணவனாகவே இருப்பேன். இஸ்லாம் எனக்கு கம்யூனிஸ்டாகவும், தலித் அரசியலில் இயங்குபவனாகவும் இருக்க அனுமதிக்கிறது. எனக்கான வேறு உளவியல் காரணங்களும் உள்ளன. அது பற்றி விரிவாக தனி நூல் ஒன்றை எழுத இருக்கிறேன். நான் உலக சமயங்கள் அனைத்தைப் பற்றியும் விரிவாகவே வாசித்து அறிந்திருக்கிறேன். அதில் மால்கம் எக்ஸ் கண்ட இஸ்லாத் எனக்கு அணுக்கமாக உள்ளது. பிலாலின் அல்லாஹ் அக்பர் குரல் என்னை அறியாமல் உள்ளே ஒலித்துக் கொண்டே இருக்கிறது. இனி நான் யார் முன்னும் தலை வணங்கத் தேவையில்லை, எனக்குக்கீழாகவோ, எனக்கு மேலாகவோ யாரும் இல்லை… அரசும், அதிகார அமைப்புகளும் எனக்கு வெறும் சொற்களே. எனது “கனவில் பெய்த மழையைப் பற்றிய இசைக்குறிப்புகள்” கதையில் ஒலிக்கும் அல்லாஹ் என்ற அடைக்கள ஒலி… நான் மனத் தடுமாற்றமும் வலியும் கொண்டவனாக எழுதாத நேரங்களில் இருந்து அலைக்கழிகிறேன்… எனது வாழ் நாளில் சாதியற்ற இந்தியச் சமூகத்தைப் பார்க்கப்போவதில்லை, சமநீதி மனித அமைப்பில் ஒரு நாள் இருந்து மடியப் போவதில்லை… பெண்ணிய நிகழ்நிலையில் நான் பங்கு பெற்று கரையப் போவதில்லை ஆனால் அவற்றிற்காவே எனது உள்ளமும் உடலும் ஏங்கிக் கிடக்கிறது… எழுதி வாழ என்னை உந்தும் தலித் அரசியலும் என்னை ஊக்கப்படுத்தும் தோழர் தொல். திருமாவளவனும் எனக்குப் பித்துப் பிடிக்காமல் பார்த்துக் கொள்கிறார்கள். ஆனால் தனிமையில் நான் அல்லாஹ் என்றே அடைக்களமாக முடிகிறது. அதற்கு நான் ஓவியர் ரஃபிக் அகமதுக்கு நன்றி சொல்ல வேண்டும். பிஸ்மில்லா கானின் ஷெனாய் என்னைச் சில மணிநேரங்கள் உறங்க வைக்கிறது…அவரை 2005 இல் அவர் முன் தரையில் அமர்ந்து கேட்டதும் அவர் கைப்பற்றி அன்பைத் தெரிவித்ததும் துயருற்ற காலங்களில் நினைவில் வந்து என்னைக் குழந்தையாக்குகிறது….நுஸ்ரத் ஃபத்தே அலிகானின் குரல் என்னை ஒவ்வொரு நாளும் விழிக்க வைக்கிறது…

பிரேதாவின் பிரதிகள்

ஆண் மொழியினூடாக ஆண் மையம் சிதைக்கும் எழுத்து

யவனிகா ஸ்ரீராம்  

பாண்டிச்சேரியில் எளிய குடும்பத்தில் பிறந்து இலக்கியத்தின்பால் வாசிப்பு, படைப்பு எனத் தீவிரமான ஈடுபாடுகளை வளர்த்து 1987 – இல் பிரேதா என அறியப்பட நேர்ந்த பிரேம் சமூக வாழ்வுப் பின்னணியின் பொது யதார்த்தங்களிலிருந்து விலகி வந்தவர் அல்லது தூக்கி எறியப்பட்டவர் எனச் சொல்வது பொருத்தமானது. தனது இளம் வயதிலேயே பல்வேறு மனித சமூக இருப்புகள், அதன் விளைவுகள், வேட்கைகள், தாபங்கள் யாவற்றையும் நுண்ணுணர்வுத் தளத்தில் வைத்து ஆராய்ந்து அதற்கான விடைகளைப் பொதுவெளிகளில் அயராது தேடிச் சலித்துப் போனவர் என்ற அளவில், நிறுவனமயப்படாத ஏற்கனவே சொல்லப்பட்ட வாழ்வின் கற்பிதங்களிலிருந்து ஒரு தனியான மொழியைத் துவக்கியவர் என்றும் சொல்ல முடியும். பொது வாழ்வின் சம்பிரதாயக் கூறுகள் யாவற்றையும் அடையாளமாக ஏற்க மறுத்து வித்தியாசமான இருப்பையும் விடுதலைக்கான மாற்றையும் பண்பாடாகவும் இறைமையாகவும் வகுத்துக் கொண்டவர் என்பதை அவருடைய தொடர்ந்த படைப்புகளின் வழியாகவும்  பிரேம்-ரமேஷ் என இரட்டைப் பெயரில் எழுதப்பட்டவை வழியாகவும்  நம்மால் ஊகித்து உணர முடிகிறது.

 பின்பற்றவே இயலாத வாழ்வதிர்வுகளை இயல்பாக மேற்கொண்டு உறைந்தும் மொண்ணைத் தனமாகவும் ஆகிப்போனப் பொதுவாழ்வைத் தன் மொழியால் ஊடுருவியவர் என்று சொல்வதும்கூட அவரின் இருப்பு மற்றும் சொல்லாடல்களின் வழியாகத்தான். இப்படியாகத் தமிழ் நிலத்தின் இலக்கியம் மற்றும் அரசியல் வரலாற்றோடு உலகளவிலான மாற்றங்கள், ஆதிக்க கருத்தியல் பெருக்கம், தத்துவாதிகள், மனித உளவியல் ஆய்வாளர்கள், உற்பத்தி உறவின்வழி ஆதிச் சமூகத்திலிருந்து இன்றைய ஏகாதிபத்தியம் வரைக் கட்டமைக்கப்பட்ட யதார்த்த வரலாறு, இந்திய நவீனத்துவப் போக்குகள் என அனைத்து மாற்றங்களையும் இலக்கியம் வழியேயான ஆய்வாக மாற்றிப் படைப்புகளாகவும் தந்துகொண்டிருக்கும் பிரேம் (பிரேதா) எழுத்துகளை தமிழின் தீவிரமான இலக்கியப் பக்கங்களில் அடிக்கடிச் சந்திப்பவர்கள் அவரை நண்பராகவும்  வழிகாட்டியாகவும் உரையாடிக் கொள்பவராகவும் ஆய்வாளராகவும் படைப்பாளிகளாகவும் உணர்ந்திருக்கிறார்கள்.

பிரேம் (1965) தனது 21-ஆவது வயதில் பிரேதா என்ற பெயருடன் எழுதி  கிரணம் இதழில் வெளிவந்த இப்படைப்புகளை எனது 25 – ஆவது வயதில் வாசித்தபோது அதிர்ச்சியோடு, பேசப்படாத மறைமுக உலகின் துயரார்ந்த, வலி மிகுந்த குரல்களின் தாபங்களையும் இருண்ட சுரங்கப்பாதைகளில் மறைந்து திரியும் ஒடுக்கப்பட்ட குற்றவாளிகளின் நடத்தையும் பாலியல் இச்சையையும் உளவியல் தன்மைகளையும் அத்துடன் இணைந்த சமூக விசித்திரங்களையும் மனத்தடையற்று எப்படி இவரால் பதிவுசெய்ய முடிந்தது என ஆச்சரியம் அடைந்தேன். ஒரு வகையில் தடை செய்யப்பட்டு மறைமுகமாக உலவும் பிரதிகளின் வலையில் சிக்கிக் கொண்டேனோ என்றுகூட அச்சம் ஏற்பட்டது.

நான் அப்போது தமிழில் இன்னதென வகைப்படுத்த முடியாத பல்வேறு படைப்பாளிகளின் படைப்புகளை ஒழுங்கு முறையற்று வாசித்துக் கொண்டிருப்பவனாக இருந்தேன். பல ஆதர்ச எழுத்தாளர்கள், தர்க்கவியலோடு கதைச் சொல்பவர்கள், வானம்பாடிகளின் கவிதைகள், ‘கணையாழி’ என வாசித்துக் கொண்டிருந்த சூழலில் கிரணம் எழுத்துக்களின் கவித்துவ மொழி அதிக நுட்பங்களைக் கோரி என்னை வேறொரு பக்கம் நகர்த்தியது. இதற்கிடையே பிரமிள், பசுவய்யா, கலாப்ரியா, விக்கிரமாதித்தியன், பிரம்மராஜன், தேவதேவன் என்று, எனது கவிதை வாசிப்பு கூடிக்கொண்டிருந்தது. அவ்வப்போது பல்வேறு கவிதை மொழிபெயர்ப்புகளையும் வாசிக்க வாசிக்க பலவித தாக்கங்கள் ஏற்பட்டிருந்தன. ஆனாலும் கிரணம் எழுத்துக்களின் அச்சமற்ற வெளிப்பாடுகள், மனித நொய்மைகளின் இருப்பு, முறைதகாப்பால் இயல்புகளின் ஒப்புதல், அதீதன், ஆத்மார்த்தி, பிரேதா, பிரேதன், அரூபசைத்ரீகன், பிரபஞ்சனா, இருள் நகரம் என்ற பெயரடைகள் என்னை வினோத உணர்நிலை களுக்குள்ளும் கனவுகளுக்குள்ளும் இழுத்துப் போயின.

அவற்றின் உத்திகளும் வடிவங்களும் பேசு பொருளும் என்னை இதுவரை வாசித்து வந்தப் படைப்புகளிலிருந்து வெளியேற்றியது என்றுகூடச் சொல்லலாம். நான் நம்பிவந்த மத்தியதர வர்க்க மதிப்பீடுகள், காதல், தந்தைமை, வீரம், குலப்பெருமை, தாய்மை, லட்சியம், தேசியம் போன்றவற்றின் கதையாடல்கள்; தத்துவம், வாய்மை, மெய்மை, அறம், தெய்வீகம், ஆன்மீகம், விஞ்ஞானம், பொருளாதாரம், ஞானம், ஆன்மா, மேதமை என்பவைப் பற்றிய அறிதல்களும் வாழ்முறையுடனான அவற்றிற்கான உறவும் எனக்கு சிறுவயதிலிருந்தே சிக்கலுக்குரியதாக இருந்தபடியால் கிரணம் காவியங்களில் வெளிப்பட்ட பட்டவர்த்தனமான இருப்பின் அலறல் மிக நெருக்கமானதாய் தோன்றியிருக்க வேண்டும்.

மீண்டும் ஒருமுறை கிரணம் காவியங்களை மறுவாசிப்பிற்கு உட்படுத்தியபோது மொழிவழியான தர்க்க ஒழுங்கின் சிதைவுகளைக் காண நேர்ந்தது. பெருகிப் போதிக்கும் மேதமைச் சொல்லாடல்களைக் கேலிச் செய்து பேசப்படாத பிரதிகளை அதிர்வுடன் முன்வைக்கும் கலகமாக தமிழின் மொழிப் பிராந்தியத்திற்குள் ஊடுருவி நிற்கும் கிரணம் எழுத்துக்களை நான் வலியோடு கண்டடைந்தேன்.

தீர்க்க முடியாத மனித சலனங்களின் அதிகாரம் எப்படி சாதி, மத, சமயம் மற்றும் அரசாளுமைக் கருத்தியலாக இலக்கிய வடிவம் கொண்டது என்பதை, இன்று வரை வாசித்து வரும் எனக்கு கிரணம் காவியங்களின் இளம்பருவ பாலியல் பதற்றம் அதே சமயம் மூர்க்கத்தனமான அனுமதி பெறாத குற்ற வெளிப்பாடுகள் சமூகவெளிக்குள் மொழியாகப் புழங்கியது குறித்த ஆச்சிரியம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

இத்தொகுப்பினை வரலாற்றுப் பின்னணியோடு அதன் சமூக உறவுகளையும் ஆராய்ந்து  இவை வெளிப்பட்ட  காலம் படைப்பாளியின் பின்புலம், இவற்றின் தர்க்கம், அரசியல் எனப் பிரித்து இவற்றின் இடத்தைக் கேள்விக்குட்படுத்தும் ஒருவர் அக்காலத்தின் மற்றையப் பிரதியோடு வைத்து ஒரு ஒப்பாய்வும் செய்வாரேயானால் ஆளுமைப் பிரதிகளுக்கும் அடிமை மற்றும் விளிம்பு நிலைச் சொல்லாடல்களுக்கும் இடையே நீடித்திருக்கும் பெரும் பிளவை உணர்ந்து கொள்வார்.

அத்தோடு இன்று பின்நவீனத்துவப் பிரதியியல் ஆய்வாளராக  அறியப்படும் கிரணம் படைப்பாளியின் இளம்வயது தொடக்கத்தோடு இன்றளவு வரையிலான அவரின் நீட்சியையும் அவர் ஒப்பிட்டுப் புரிந்துக்கொள்ள முடியும்.

கிரணம் எழுத்துக்களை ஒருவித மார்க்சியப் புரிதலோடு வைத்துப் பார்க்கும்போது அவை உளவியல் தளத்துக்குள் நுழைவதையும் உளவியல் மற்றும் புனைவுத் தளத்துக்குள் வைத்துப் பார்க்கும்போது மார்க்சிய அழகியலுக்கப்பால் நகர்ந்து விடுவதையும் ஒருவேளை மார்க்சிய கண்ணோட்ட்த்தில் கை எடுக்கப்படாமல் விடுபட்ட குறிப்புகளாகவும், அதன் அறவியலுக்குள் ஒளிந்து திரியும் மறைக்கப்பட்ட கடைநிலை இருப்புகளாகவும் தென்படுவதை ஒரு யூகமாக முன் வைக்கலாம்.

 பொருள்களுக்கப்பால் மனித இருப்பின் கீழ்மைகளை, அவமானத்திற்கு உட்படுத்தா வண்னம் மெய்மைகளாக்கி தர்க்கத்துக்கு வசப்படுத்தும் இப்பிரதிகள் உலகை வேறொரு ஆரம்பத்திலிருந்து புரிந்துகொள்ள வாசகரைப் பாவனைப்படுத்துகின்றன.

வளர்ந்தும் சிதைந்தும் பயணப்படும் மனித உடலை அதன் இருப்பிலிருந்து விலக்கித்  தன்னிச்சையான அதன் விடுபடல்களை ஒடுக்கி, கோட்பாட்டின் பொருண்மை உருவிலிகளாகவும் அதற்கும் அடங்காத நிலையில் அதைச் சமூக மையத் தளத்தில் வைத்துக் கொன்றழிப்பதாகவும் இருக்கும். தத்துவ கருத்தியல் மேல் எப்போதும் ஒரு விசாரணையாக தமது மொழிதல்களைப் பகிர்ந்து கொள்ளும் பிரேம் அதனைத் தனது கிரணம் படைப்புகளிலேயே தொடங்கியிருக்கிறார் என்பது இப்படைப்புகளை மீண்டும் நூல் வடிவில் கொண்டு வருவதற்கான முக்கியத்துவத்தை உண்டாக்குகிறது.இன்றைய சொல்லாடல்களில் காணப்படும் தன்னிலை இருப்பிற்கான அடையாளங்கள், வேண்டுதல்களின் பாவனைகள், நிராகரிப்பின் குதூகலம், பீதியூட்டும் அபிப்பிராயங்கள், மறந்துபோவதன் அலட்சியம், அனுபவ மறுப்பு, நிலைத்தவற்றின் மீதான சோம்பல், கிளர்ச்சியூட்டும் கனவுகள், அதன் புலன்கள், வேட்கை, தாபங்கள் ஆகியவற்றோடு சமூக தன்னிலைக்கான தான்-ஐ உரசிப் பார்த்து சுயத்தன்னிலைக்கான தான்- ஐ வெளிக்குள் சோதனையாக உலவவிடுதல் அல்லது சமூகம் தான்-இல், தர்க்கம் ஏற்படுத்தி தனது இருமையின் இடத்தை உறுதி செய்தல் போன்றவை வரலாற்று ரீதியான பல தாக்கங்களின் மேலேயே நவீனத்துவ உச்சங்களாகவும் சிதைவுகளாகவும் வெளிப்படுகின்றன.

மறைமுக விடுதலையானது இரகசியத்தின் அறமாகவும் பொது வெளியின் தர்க்கங்களைச் சிதைத்தல் பகிரங்கத்தின் அறமாகவும் தமிழிலக்கியச் சொல்லாடல்கள் மாற்றம் பெற்று இன்றைய மொழி பற்றிய பல்வேறு நுட்பமான ஆய்வுகளைத் தாண்டியும் பிரேமின்  படைப்பு ஆக்கம் பெறுகிறது.

ஆனாலும் அவற்றிலிருந்து உருவாகும் வெளி பற்றிய மௌனம் தமிழ் நிலத்தின் ஆதார பண்பாட்டில் தன்னை மறைத்துக்கொள்ள முயற்சிக்கிறதா, இல்லை மொழியின் உலக அலைச்சலின் கீழ் சர்வதேசிய தன்மை அடையச் சாதகம் கொள்கிறதா என்பதெல்லாம் சூழலில் பல சாதகமான படைப்புகள் வரும்போதுதான் இதை ஒட்டிய பேசு பொருளாக்க ஆய்வாளரால் முடியும்.

தமிழில் மொழியியல் பிரதிகளை அனுபவத்தின் சூட்சுமமாக மாற்றி தர்க்கத்தைக் குலைக்காமல் மேலதிக நுட்பங்களை எட்டியவர்கள் என்ற முறையில் பிரமிள், மௌனி போன்றவர்களை நாம் கூறும்போது படிமங்களின் வீச்சும் வாசகக் கூருணர்வும் இணைந்த ஒரு புள்ளியாகத்தான் நாம் அதை எடுத்துக் கொள்ள முடியும்.

நாளடைவில் பிரமிளோ, மௌனியோ தங்களது படைப்பில் இறந்து விடுகிறார்களா அல்லது ஒரு தலைமுறை வாசகர் முற்றிலுமாய் அற்றுப் போய்விடுகிறார்களா என்பதுதான் புதிராய் இருக்கிறது. இதுவே பிரதியில் அனுபவத்தைச் சூட்சுமமாக்கி தர்க்கப்படுத்தும் முயற்சிக்குக் கிடைக்கும் தோல்வியாக இருக்கிறது.

கிரணம் கவிதைகளின் படைப்பாளி தமது அனுபவத்தைச் சூட்சுமம் ஆக்காமல் பகிரங்கமாக்கித் தர்க்கத்தைக் குலைப்பது அல்லது யூகத்தில் விடுவதை அன்றைய மௌனி முதற்கொண்டான கவித்துவ மொழி ஆளுமைகளுக்கு ஒரு எதிரான செயல்பாடாய் கருதியிருக்க வேண்டும் என்பது என் எண்ணம்.

முற்றிலும் பிரேமிளோ மௌனியோ இன்னும் சில இலக்கிய நுண்ணறிவு கொண்டவர்களோ சஞ்சரிக்க முடியாத நிலப்பகுதிகளின் இருளை நோக்கிப்  படிமவியல் மற்றும் மிகை யதார்த்த வழி குவிந்திருக்கும் கிரணம் காவியங்கள் வழி அதீதன், ஆத்மார்த்தி, பிரேதா, பிரேதன், அரூபசைத்ரீகன், பிரபஞ்சனா என்கிற தத்துவத்திற்கு அகப்படாத மொழிச் சட்டகங்களை அல்லது ஒரு இயந்திரவியலை கொலை மற்றும் தற்கொலைகளின் நிலவெளியாக சிருஷ்டிப்பதன் மூலம் அறிவின் பயங்கரத்திலிருந்து விளிம்பின் மொழியை பிரேதாவின் பிரதிகள்  படைப்பாளி தன் பிரக்ஞைக்குட்பட்டே மீட்டெடுக்க முனைந்திருக்கிறார் என்பது அக்காலத்தில் நிகழ்த்திய ஒரு இலக்கிய வெளியேற்றம் என நாம் சுவீகரிக்க முடியும்.

கனவுகளின் மொழி ஒருவித பித்து நிலையை அடையும்போது எல்லா எதிர்மறைக் கூறுகளும் பொது வெளியைத் தகர்த்தபடி தனக்கான ஞாபகத்தை அதன் சிதைவிலிருந்தே புதியதாக வடிவமைத்து விடுகிறது என்பதுதான் பிரேதவின் படைப்பில்  நமது கண்டு பிடிப்பாகிறது. கிரணம் காவியங்களின் இடையே காணப்படும் உரைநடை இழைகளில் தோன்றும் படிமங்களும் உலகங்களும் இன்றைய பல இளம் கவிஞர்களின் படைப்பில் அறிந்தோ, அறியாமலோ எளிய கண்டு பிடிப்புகளாக தொடர்ந்து வெளிப்படுகின்றன.

மனித சமூகத்தின் அனைத்து இயங்கு தளங்களையும் மொழி ஒரு நீதிபதியைப் போல தீர்மானித்துக் கட்டமைத்திருக்கிறது. மொழியின் மேலதிகமான கையிருப்பினை உடையவர் தனக்கு கீழ் மொழியின் தகவலறிவற்றவர்களை வசக்கி, தான் ஒரு அதிகாரமாக செயல்படவே வரலாறு, பண்பாடு, நிர்வாகம், நன்னடத்தை, சமூக நலம் என்று ஒரு சட்டகத்தை மொழிக்குள் இறுக்கிக் கட்டுகிறார். இச்சட்டத்தை அரசியல் ரீதியாகக் கைப்பற்றும் ஒரு அமைப்பு அதன் நலன்களையும் கைப்பற்றிக் கொண்டு தன்னை முன்னிறுத்தியே ‘உயர்ந்தோர் மாட்டே உலகு’ என்ற விதியை முன்மொழிகிறது. ஆக மொழியின் மேலான பண்பு நடத்தைகளைக் கைக்கொள்ள முடியாத வாய்ப்பற்ற அடையாளமற்ற மனிதக் கீழ்மைகள் போன்றவை ஆதிக்கத்தையும் அதன் நலன்களையும் மொழியின் கைக்கூலியான அரசியலைப் பயன்படுத்திப் பெறமுடியாமல் இன்னும் கற்றுத் தேறவேண்டிய சமூக வளர்ச்சியற்ற பண்பற்றத் தொகுதிகளாக தன்னளவில் இருத்தி வைக்கப்படுகின்றன என்பதுதான் உயர்ந்தோர் காட்டும் உலக அறவியல், சமூக விளிம்புகளின் சலனங்களைக் கண்காணித்து உடல் ரீதியாக கொன்றழிக்கும் சுட்சுமங்கள் இன்று அறிவிற்கு அப்பாற்பட்டு மூன்றாம் உலகங்களில் உலவிக் கொண்டிருக்கின்றன.

ஏறக்குறைய ஏகாதிபத்தியம் அல்லது அமெரிக்கவியம் என்பது பல்வேறு இந்திய இன, சாதிய, பன்மைத்துவத்துக்கு கீழ் அதிகார உளவியலாகவும் கோரிக்கையின் ஏக்கமாகவும் வடிவம் கொள்ள துவங்கியிருக்கும் வேளையில் பிரேமின் பல கட்டுரைகள் நமக்குச் சமகாலத்தை இழுத்துப்பிடித்து கண்முன் நிறுத்துகின்றன. 1987 வாக்கில்  உறைந்துபோன, ஏராளமான கட்டமைப்புகளைச் சிதைத்து மாற்று வழியில் ஒரு புனைவு நாடகத்தைத் தனது கிரணம் காவியத்தின் வழி அவர் நிகழ்த்திக் காட்டுகிறார்.  அதன் நான்கு இதழ்களில் வெளிப்பட்ட தலைப்புகள் ‘உருவிலிகளின் மயானத்தில்’, ‘எலும்புக் கூடுகளைப் பற்றிய சில ஆராய்ச்சியுரைகள்’ ‘கபாலங்களைப் பற்றிச் சில வதந்திகளும் திறக்கப்படாத அறைகளும்’, ‘நிழல் நெரிசல்’, ‘கண்ணாடியின் முகங்கள்’,  என்பதாக வகைமைப் பட்டிருக்கின்றன.

எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது. அதை முதன்முதலாக என் நண்பர்களோடு, குறிப்பாக செல்மா பிரியதர்ஷன், இனியன் போன்றவர்களுடன் வாசிக்க நேர்ந்தபோது அதன் உரையாடலின் கீழ் எங்களை வெளிப்படுத்த முடியாத பல இரகசியங்களைப் பகிர்ந்து கொண்டோம். அவற்றை இலக்கியப் பிரதிகளாக இனம் கண்டு கொண்டபோது ஒருவித துணிச்சலும் குற்ற உணர்வின் வடிகாலும் ஏற்பட்டது. மற்றபடி அதன் தலைப்புகளை இதுவரையிலும் வேறு எந்தப் பதிவிலும் நாங்கள் காண முடியவில்லை.

ஒரு வகையில் சொல்வதனால் இவற்றை நவீனத்துவத்தை முடிவுக்குக் கொண்டுவந்த பிரதிகள் என்று சொல்லலாம். அல்லது பின்நவீனத்தைத் தர்க்கத்துக்கு வசப்படுத்திய பிரதி என்றும் நாம் கூடுதலாக முன்வைக்கும்போது அதன் கவிதைகளில் தென்படும் சர்ரியலிசத் தன்மைகள் கடந்த 37 ஆண்டுகளில் மாற்றம் பெற்று நடைமுறை யதார்த்தங்களாய் இன்று நம்முன் நிமிர்ந்து கொண்டிருப்பதைக் காண நேர்கிறது.

பாலியல் கனவுகளின் இளம் பிராய நடத்தைகள் மனத்தடையற்று பதிவாகி இருக்கும் கிரணம் எழுத்துகள் அதீதன், ஆத்மார்த்தி, அரூப சைத்ரீகன், பிரேதா, பிரேதன் போன்ற சொல்லப்படாத உருவிலிகளுக்குள் நடந்த உரையாடலாய் இருப்பது நவீனத்துவ கவிதையியலைத் தாண்டிய புதிய உத்தியாய் இருப்பதை மறுவாசிப்பில் உணர முடிந்தது.

சமஸ்கிருதச் சொற்களை அதன் உள்ளார்ந்த பொருளிலேயே பயன்படுத்தத் தெரிந்திருக்கும் படைப்பாளி கவித்துவத்தின் மொழிச் சிக்கனம் மற்றும் ஆழ்மன அடுக்குகளில் படிந்து கிடக்கும் பரவசங்களின் மீதான ஆர்வங்களை ஒரு வீச்சாக எழுப்ப வேண்டும் என்கிற அளவில் அவற்றைப் பயன்படுத்தி இருக்கக்கூடும். ஆனால் அவற்றைத் தமிழ்ப்படுத்தி இணைக்க முயன்றாலும்கூட வீர்யம் குறைவுபடாது. என்பதே எப்போதும் புதியதாகத் தோற்றமளிக்கும் கிரணம் கவிதைகளின் படைப்பாக்க வெற்றி.

சிதைவுண்ட, பிளவுண்ட, பிறழ்வு மற்றும் வாதைகள், வலிகள் என ஆண், பெண் உடல்களின் கதறல் ஒலிக்கும் கிரணம் இதழில் வந்த இக்காவியங்கள் முழுமையாக நூல் வடிவம் பெறும் போது அதன் மொழியானது, வாசிப்பில் என்ன சிக்கலைக் கொண்டு வந்தாலும் அது தரும் அதிர்வுகள் உடலின் பிரக்ஞைக்காக மனம் அலையும் வெளியின் மர்மங்கள், பசி, காமம், என்ற இயல்பூக்கத்தின் மீதான வேட்கை, விழைவு, தாபங்களை இறுகப் பற்றிக்கொண்டு கலாச்சார, பொருளாதார, அரசியல் கண்காணிப்பிலிருந்து வெளியேறும் உடலின் அறக் கோரிக்கைகள் வழியாக இயங்கி ஒரு இளம் படைப்பாளி முதல் நெருக்கடி கொண்ட மனதின் விடுதலைக்காக ஏங்கும் எவரொருவரையும் அது பகிரங்கமாக பிரதிநிதிப் படுத்துவதைப் புதிய அறமாக நாம் பார்க்க முடியும்.

அந்த வகையில் தமிழ் இலக்கிய உலகத்திற்கு கிரணம் காப்பியங்கள்  அளித்துள்ள மாற்றுப் பார்வை மிக முக்கியமானது. அது இப்போது பிரேதாவின் பிரதிகள்  என்ற பெயரில் எதிர் வெளியீடாக வெளிவருவது தற்கால நவீன தமிழ்க் கவிதையின் பாய்ச்சலுக்கு மேலுமான ஒரு உந்துதலாக இருக்கும் என்பது என் போன்றவரின் நம்பிக்கை.

எழுதிச் செல்லும் விதியின் கை- பிரேம்

ஓர் அறிக்கை:

கிரணம்-1 , அக்டோபர் 1987

பிரபஞ்ச விகாசத்தின் சாயலாய் ஒளிர வேண்டிய மனித மனங்கள்-சூன்யத்தின் உறைவுகளாய்(ச்) சமைந்து சவப்பேழைகளாய்(ப்) புதைந்து நிற்கும் அவலம் நம் கணங்கள். சகல திசைகளையும் உட்குடைந்து வியாபிக்கும் அகக் கதிர்வீச்சு இன்று அந்தக நார்க் குவியல்களாய் சிக்கலுற்று எஞ்சியது என்பது அவலம் கனலும் நிஜம். உறைந்துபோன படிமங்களால் தன்னைச் சுற்றி சுவர் சமைத்துக்கொண்ட இந்த நூற்றாண்டு மனிதனின் உயிர்த்தல் பற்றிய கேள்விகள் கூட புதுப்பிக்கப்படாமல் பின்னமுற்றுக் கிடக்கின்றன. இந்த மயான வெளியில்தான் இன்றைய ஒவ்வொரு கலைஞனும் அனாதை பிம்பமாய் உறைந்து நிற்க வேண்டியிருக்கிறது. நிர்ணயங்களின் குமிழ்களுக்குள் அடங்காமல் பிரவகித்து மறையும் நிஜங்களின் பிரமாண்டம் கண்டு அதிசயிக்கும் அதே கணத்தில் மட்கிப்போன மாமிசத் திரளின் புழுக்களாய் சலனித்துக் கிடக்கும் மனிதக் கூட்டத்தின் விரூபம் கண்டு உயிரழுகிச் சொட்ட வாதையுறுதலும் நேர்கிறது. சவத்தன்மைக்கு எதிரான கலகம் மட்டுமே இன்றைய கலைகள் என்பது நிஜ கலைஞன் ஒவ்வொருவனுக்கும் தெரிந்தே இருக்கிறது. நிர்மாணங்கள் அனைத்தையும் சிதைப்பதைத் தவிர கலைகளின் இக்கண இயக்கம் வேறேதும் இல்லை என்பதை நாம் என்றோ உணர்வுற்றுத் தெளிந்துவிட்டோம். ஆனால் தமிழ்ச் சூழலில்- இன்னும் பரவலாய் இந்தியச் சூழலில் உக்ரம் என்பதும் முற்றான கலகம் என்பதும் இல்லாத ஒன்றாக எஞ்சி நிற்கிறது. மூர்க்கமான ஆய்வுகளே கலைகளின் திசையியக்கம் என்பது இன்னும் பரவலாய் இந்தியச் சூழலில் உக்ரம் என்பதும் முற்றான கலகம் என்பதும் இல்லாத ஒன்றாக எஞ்சி நிற்கிறது. மூர்க்கமான ஆய்வுகளே கலைகளின் திசையியக்கம் என்பது இன்னும் தெளிவுறாத நிலையில் பிரேதங்களின் குறிகளைச் சுவைத்து(த்) தணியும் தத்துவ விசாரங்களே இன்னும் அறிவார்த்த(த்) தளங்களில் இடம் பிடித்துக் கொண்டிருக்கின்றன. சவத்தனவே வாழ்க்கையான ஒரு அமைப்பில் உயிர்ப்புள்ள தத்துவங்கள் சலனம் கொள்ள முடியாது என்பது சரித்திர உண்மை என்றாலும் உலகின் பிறபாகங்களில் அவற்றிற்கான குவிமையங்கள் இருந்தே வந்திருக்கின்றன. வீர்யமான கலைப்படைப்புகளும் உக்ரமான மனோவயக் கலகங்களும் முற்றிலுமே இல்லாத சூழல் என்று நாம் தமிழ்ச் சூழலைக் கூற வேண்டும். இங்கிருந்து உலகளவில் கூறக்கூடிய ஒரு நவீனத்தையோ ஒரு கவிதையையோ நிச்சயம் நவீன சிந்தனையுள்ள யாரும் முன் மொழிய முடியாது. இதற்கான காரணங்கள் இரண்டொரு தொடர்களில் விளக்கக் கூடியவை இல்லை. அனைத்தையும் சிதைத்துச் சிதைத்து பிரபஞ்ச நிஜத்தை நோக்கி இயங்கக் கூடிய அதீத கலா இயக்கம் இந்திய மனோ நிலையில் என்றுமே கிடையாது. உலக அளவிலேயே கடைசி இரண்டு நூற்றாண்டு அளவிலான தத்துவ நோக்குகளே மனித மையம் கொண்ட சிந்தனைகளை முன் வைத்தன. மகோன்னதங்களை நோக்கிய விகசிப்பே நிஜமான மனிதத் தேடுகைகள் என்பதை அகம் புறம் அனைத்துமாகக் கொண்டு இயங்கும்- இயங்க எத்தனிக்கும் ஒரு கலை இலக்கிய ஆய்வுக் கூடமே ‘கிரணம்’ உலக கலகக்காரர்கள் அனைவரையும் சக ஜீவன்களாகக் கொண்டும்-கலைஞர்களைத் தவிர வேறு யாரையும் மனிதர்களாகவே கணிக்காத வெறியோடு இயங்கும் அன்னியர்களின் நிலவறையே ‘கிரணம்’. அனைத்து மதிப்பீடுகளுக்கும் அப்பால் பிரபஞ்ச நுண்ணுணர்வு என்ற உச்சத்தை நோக்கிய முயக்கமே இதன் ஒவ்வொரு சலனமாகிறது. உலக அளவிலான கலைப் படைப்புகளும் படைப்புகளிலிருந்து பிளவுபடாத வாழ்க்கையுமே இதன் ஆதர்சன கனலாக ஒளிரும். இதற்கொன்று தனியான நோக்கங்களோ சாதனைகளோ அவலங்களோ இல்லை. உலக எதிர்க் கலைஞர்கள் நிகழ்த்திய-நிகழ்த்திக் கொண்டிருக்கும்-நிகழ்த்தப் போகும் கலகங்களின் சிறு அதிர்வே இதன் உயிர்ப்பு. தமிழ்ச் சூழலில் நிகழ்வதென்பது சரித்திர விபத்து. ‘கிரணம்’ எதிர் மதிப்பீடுகளின் ஆய்வுக் கூடமாகவும் கலக சிருஷ்டிகளின் சித்ரகூடமாகவும் இருக்கும் என்பது இந்த நேரத்தில் கூறப்பட வேண்டியது. பிற-இதன் இயக்கத்தின் போக்கில் உணர்த்தப்படும்… –பிரேம்

அறிக்கையால் அலைந்த காலம்

இந்த ஒரு பக்க அறிக்கை அல்லது இதழுக்கான அறிவிப்பு எழுதப்பட்ட ஆண்டு 1987. இதனைத் தன் அழகிய கையெழுத்தால் படியெடுத்தது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னோடிகளில் ஒருவரான தோழர் பொதினி வளவன். இதனை நான் எழுதிய போது எனது வயது 22.  எனது பெரும் ஆக்கங்கள் பல பிரேதா என்ற பெயரில் எழுதப்பட்ட போது எனது வயது 17-20 என இருந்தது. ஆனால் 21 வயதுக்குப் பிறகுதான் இதுபோன்ற எழுத்துகளை வெளியிட முடியும் என்று சொல்லிக் கொண்டிருப்பார் சாரு நிவேதிதா என இன்று உலகப் புகழ் பெற்றுள்ள தமிழ் எழுத்தாளர். அவர் அப்போது புதுச்சேரியில் இல்லம் கொண்டிருந்தார். தில்லியில் பல ஆண்டுகள் வேலையில் இருந்து 1000-1500 நூல்களுடன் புதுவையின் பொறியியல் கல்லூரிக்கு பணிமாற்றம் செய்து கொண்டு வந்திருந்தார். அமரந்தா என்ற பெயரில் இன்று பல மொழிபெயர்ப்புகளைச் செய்துவரும் எழுத்தாளர் அப்போது சம்யுக்தா என்ற பெயரில் மொழிபெயர்ப்புகள் செய்து வந்தார்.   முனியாண்டி, அறிவழகன், சாரு நிவேதிதா என ஒரே நாளில் மூன்று பெயர்களில் புழங்கி வந்த சாரு நிவேதிதா நண்பர் ஆபிதீன் கடிதங்களில் ரவி என்ற பெயரில் உலவி வந்தார். கிரணம் இதழ், அதனை இதழ் எனச் சொல்வது பொருந்தாது என்றாலும் இதழ் என்ற வடிவில்தான் அது வெளிவந்தது. அது வெளி வந்த போது சாரு மீண்டும் தில்லிக்குத் திருப்ப வேண்டியிருந்தது. அதற்கு முன் 1984-86 காலகட்டமாக இருக்கலாம் இனி தில்லிக்குத் திரும்பவேண்டியதில்லை என்ற ஆறுதலோடும், திட்டங்களோடும்தான் அவர் குடும்பத்துடன் புதுவையில் குடியேறியிருந்தார். ஆனால் அவருடைய திட்டங்கள், சம்யுக்தாவின் முடிவுகள் அனைத்தும் தகர்ந்து வேலையை விட்டு அச்சகம் வைத்து புதுவையிலேயே வாழலாம் என்ற முடிவை எடுத்து அதற்காகப் பல மாதங்கள் உழைத்து உடைபட்டு மீண்டும் இருவரும் தில்லி திரும்பியிருந்தனர். இருவருமே அலுவலக தட்டச்சு உதவியாளர்களாக இருந்தார்கள் (அப்படியே அவர்களை நான் பார்த்திருக்கிறேன்). அந்தக் காலகட்டம் பற்றித் தனியே எழுதுவேன். இப்போது நான் சொல்ல வருவது, பெரும் இடிபாடுகளுடன் அலைச்சலும் அல்லலும் கொண்ட ஒரு காலகட்டத்தில் “கிரணம்” என்ற பெயரில் நான் பத்திரிகை நடத்தப் போகிறேன் என சாரு நிவேதிதா அறிவித்த போது எனக்குப் படபடப்பு அதிகமானது. எனது சில படைப்புகளை தன் கையெழுத்தில் படியெடுத்து பத்திரிகைகளுக்கு புகழுரைகளுடன் அனுப்பி வைத்து அவர்கள் இந்த நெடுங்கவிதைகளை தனி நூலாத்தான் வெளியிட வேண்டும் பத்திரிகையில் வெளியிட இயலாது எனத் தெரிவிப்பார்கள், தெரிவிக்காமல் மறந்து போவார்கள். “லயம்” என்றொரு பத்திரிகைக்கு அனுப்பி விட்டு என்னிடம் தெரிவித்தார், ஏன் சாரு அந்தப் பத்திரிகைக்கு என வருந்திவிட்டு மறந்தும் போனேன். யாரும் நெடுங்கவிதைகளை வெளியிடவில்லை எனக் கடும் கோபத்தில் இருந்தார் சாரு நிவேதிதா. அந்த சமயத்தில் “எக்சிஸ்டென்ஷியலிமும் பேன்சி பனியன்களும்“ நாவலின் முதல் கட்ட எழுத்து அவர் கையில் இருந்தது. நான் அவரை முதன் முதலாகச் அவரது அலுவலகத்தில் சந்தித்த அன்று என் கையில் அந்த ஃபூல்ஸ்கேப் பக்க நோட்டைக் கொடுத்து பார்த்துக் கொண்டிருங்கள் என்று சொல்லி விட்டு தட்டச்சு, சுருக்கெழுத்து வேலையில் இருந்தார். இடையில் ஒரு டீ, மீண்டும் அவர் தட்டச்சு நான் படிப்பு. மதிய உணவை அவரும் சம்யுக்தாவும் பிரித்த போது நான் புறப்படுகிறேன் என்று எழுந்தேன். கிளம்பரிங்களா, அதெல்லாம் இல்லை உங்களுக்கும் சாப்பாடு இருக்கிறது என்ற பொழுது நெகிழ்ந்துதான் போனேன். அவர்கள் இருவரும் பல காலம் என்னை நெகிழ வைத்துக் கொண்டே இருந்தார்கள். ஆனால் அவரை நான் அன்று நெகிழ வைத்தேன். சாப்பிடும் பொழுதும் நோட்டுப் புத்தகத்தை புரட்டிப் படித்தபோது சாப்பிடுங்க பிறகு படிக்கலாம் என்றார். இல்ல இன்னும் கொஞ்சம் பக்கம்தான் இருக்கு போறதுக்கு முன்ன முடிக்கனும் இல்லையா? என்றேன். என்னது படிச்சி முடிச்சிட்டிங்களா? அவர் முகத்தில் அன்று கண்ட ஒளியும் ஒலியும் பல ஆண்டுகள் தொடர்ந்தது. அன்று மாலை வரை அவருடன் இருக்கவேண்டி வந்தது. அதற்குப் பிறகு அது பல ஆண்டுகள் தொடர்ந்தது. இந்தப் பகுதியை விரிவாக எழுதினால் நல்லது, அந்த பாத்திரம் என்ன ஆனது எனப்பேசியும் சிலவற்றைச் சொல்லி எழுதியும், எழுதிச் செல்லும் விதியின் கையாக நாவல் வளர்ந்தது. இறுதியாகத் தொகுத்து வகுத்து முன்னுரை எழுதிக் கொடுத்த போது  எக்சிஸ்டென்சலிசமும் பேன்சி பனியனும் வெளிவந்து பிளாக் பஸ்டராகி, தினமலர் விருது கிடைத்து….  அது ஒரு தனிக்கதை,

இப்போது நான் சொல்ல வந்தது தன் நாவலும் எழுத்தும் வெளிவர வாய்ப்பற்ற காலத்தில் எனது எழுத்துகளைச் சுமந்து கொண்டு தில்லி வந்து 10 இதழ்களில் இவற்றையெல்லாம் வெளியிட்ட பின் நிறுத்திவிடலாம் என்று ஒரு கடிதம் எழுதினார் சாரு நிவேதிதா. பிரேதாவின் எழுத்திலிருந்த ஒரு கற்பனை இதழ் “கிரணம்”, அதுவே அச்சு இதழுக்குப் பெயரானது. மிதிலா அச்சகத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டது “இதழ் அச்சு வேலை செய்து தரலாம், ஆனால் அச்சகத்தின் பெயர் அதிலிருக்காது” ஏன் அப்படி? பெயர் கிரணத்தில் இருந்தால் அச்சகம் இருக்காது! அப்படித்தான் அன்று நிலை, கடைசி இதழ்வரை அச்சக்தின் பெயர் இதழில் பதிவாகவே இல்லை என்று நினைவு.  அது பற்றி “கச்சேரி நினைவுகள்” என்ற தலைப்பில் தனிக்கதை எழுதலாம்.

முதல் இதழுக்குத் தலையங்கம், அறிமுகம் என ஒன்றை ஆசிரியர்தானே எழுத வேண்டும், எழுதுங்கள் சாரு என்ற போது, இல்ல நீங்கதான் எழுதனும் என்றார். அப்போது ஒரு வீடியோ கடையில் வேலை செய்துகொண்டிருந்தேன். பகலில் எழுதி முடித்துவிட்டு விற்க வைத்திருந்த மிர்ச் மசாலா (கேதன் மேத்தா) படத்தைக் கள்ளத்தனமாகப் பிரித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். மாலை வந்த தோழர் பொதினி வளவனிடம் எழுதியதைக் கொடுத்தேன். இரவுக்குள் அது அச்சு போன்ற கையெழுத்தில் இரு பக்கங்களானது. எனது கிறுக்கல் கையெழுத்தை என்னிடம் வைத்துக் கொண்டு, நற்படியை அடுத்த நாள் அஞ்சலில் சேர்த்தேன் தில்லி முகவரிக்கு.

இதழ் வெளிவந்த போது தலையங்கம் அனைவரையும் ஆத்திரமூட்டியது, அப்படியே சிலரை ஆனந்தப் படுத்தியது. டாடாயசம், சர்ரியலிசம் உருவானபோது பாரிஸ் நகரில் யாரோ ஒரு ஆள் இப்படித்தான் எழுதி இருப்பார் என்ற மிதப்பில்தான் நான் அன்று அதனை எழுதினேன். அது தமிழிலக்கியத்தை மாற்றத் தொடங்கியது, உடன்பாட்டிலும் பெரும் வெறுப்பிலும் இலக்கிய தொழிற்சாலை தனது புதிய உற்பத்தியைத் தொடங்கியது. புதுச்சேரி வட்டம் என்ற பெயருடன் தமிழக இலக்கியப் பேச்சு ஒரு புதிய அடையாளத்தை உருவாக்கியது, ஒற்றைக் கிரணத்தை “நிறப்பிரிகை“ செய்து பலவண்ணங்களில் செய்து வெளியிட தோழர்கள் வந்தார்கள்..  அது இன்று புதிய  போக்குகளாய்ப் பரவிக் கிடக்கிறது.

இன்று அந்த அறிக்கையைப் படித்துப் பார்க்கிறேன். எனக்குப் பிடிக்கவில்லை. அதில் சொல்லப் பட்டவைகளைத்தான் செய்து கொண்டிருக்கிறேன். ஆனால் அந்த அறிக்கை பிடிக்கவில்லை. சொற்குற்றமா, பொருட் குற்றமா, உங்குத்தமா, எங்குத்தமா? யார நான் குத்தஞ்சொல்ல? என அது என் முன் கிடக்கிறது. அதனைப் பதிப்பித்த சாரு நிவேதிதாவுக்கு அது பிடிக்காமல் போனது. அவர் நாவலுக்கு நான் எழுதிய முன்னுரையும் பின்னாளில் பிடிக்காமல் போனது… அது ஒரு பெரிய கதை.

நான்தான் பொடியன் அவர் என்னை விட பன்னண்டு பதிமூணு வயசு பெரியவர் இல்லையா சொல்லித் திருத்தியிருக்கலாம். இது போல எழுதினால் வேலையெல்லாம் கிடைக்காது என்று சொல்லிக் கொண்டே எனது ஐந்து நெடும் புனைவுக் கவிதைகளை அச்சாக்கி விட்டார். கிரணம் இதழ்களில் வெளிவந்ததை விட இரண்டு மூன்று மடங்கு தடிமனான படைப்புகள் நாலு ஐந்து கையெழுத்துப் படியாக இருந்தது. ஐந்தாவது இதழில் பெரும் படைப்பு ஒன்று வெளிவரும் என்ற அறிவிப்பு வெளியாகி இருந்தது, ஆனால் வெளியாக வில்லை. புதைக்கப்பட்ட பிரிதிகளாகவும், எரிக்கப்பட்ட ஏடுகளாகவும் அவை மறைந்து போயின. மாலதி மைத்ரி வந்து அதில் ஒன்றை மட்டும் மீட்டு அச்சாக்கினார், தனக்கு வீட்டுமனை வாங்க வைத்திருந்த பணத்தில். எழுதத் தெம்புள்ளவன் கவிஞன் எரிக்கத் தெம்புள்ளவன் மகாகவிஞன் என்ற ஆணவத்தில், அகங்காரத்தில்,  மமதையில் அலைந்த காலம் அது. இல்லையென்றால் உடன் எழுத வந்த ஒருவரே இதனையெல்லாம் எரித்துவிடலாம் என்று சொன்னபோது, எரிந்து போகட்டும் என விட்டிருப்பேனா?

இன்று மமதை அழிந்து அலைச்சல் மட்டுமே மிஞ்சியிருக்கிறது. அதீதன், ஆத்மார்த்தி, பிரேதா, பிரேதன், அரூப சைத்ரீகன், அரூப தர்சினி என்ற சொல்லுயிரிகள் என்னுடன் உரையாட வரும் போது சற்றுக் கோபமாகச் சொல்கிறார்கள். எங்களையும் எரித்திருந்தால் இப்படி அலைந்திருக்க மாட்டாயே என. அவர்களுக்கும் கூட அந்த அறிக்கை பிடிக்கவில்லையாம் அப்போது. ஏன் சொல்லவில்லை என்று கேட்டால் யார் சொல்லி நீ கேட்பாய், சொன்ன பேச்சைக் கேட்கும் ஆளாக இருந்தால் இப்படியா எழுதிக் கொண்டிருப்பாய்? எனப் பதில் வருகிறது.

மீண்டும் அந்த அறிக்கையைப் படித்துப் பாருங்கள். சமஸ்கிருத மயமான வாக்கியங்கள். தமிழுக்குத் தேவைற்ற இறுமாப்பு எல்லாம் இருந்தாலும், இந்த மருந்தும் வேலைசெய்திருக்கிறதே! சொல் அதுவே சிறந்த செயல், அஞ்சாமல் சொல் அதுவே சிறந்த வாழ்க்கை. என்ன நான் சொல்வது சரிதானே?

[ஒரு கமுக்கக் குறிப்பு: எழுத்து வழியாக மட்டுமே அறிந்திருந்த சிலர் சாரு நிவேதிதா, பிரேதா என்ற பெயர்களைப் பெண்கள் என நினைத்திருந்ததாகப் பிறகு சொல்லிச் சிரிப்பார்கள். ஜே.ஜே சில குறிப்புகள் பற்றிய சிறு வெளியீட்டைக் கொடுத்துப் படிக்கக் கொடுத்த ஒர் அரபிந்தோ ஆசிர நண்பர் மறுநாள் இது ஆண் எழுத்தாளரா பெண் எழுத்தாளரா என்று என்னிடம் கேட்டார். இது ஆண்தான் ஆண்மட்டுமே இப்படி பிடிக்காத ஒரு நூலுக்கு தனி ஒரு நூலை எழுதி வெளியிடவும் முடியும் என்றேன். அவர்தான் ஒரு நாள் சாரு நிவேதிதாவை ரோமன் ரோலான் நூலகத்தின் முன் வைத்து அதோ நிற்கிறாரே அவர்தான் என அறிமுகப்படுத்தினார் (1983-1984). இரண்டு பேர் இருக்கிறார்கள் அதில் யார் என்றுன், மீசை முறுக்கிவிட்டபடி பேசிக்கிட்டு இருக்காரே அவர்தான் என்றார். அவர் அன்று நீலக் கோடு போட்ட பேன்ஸி பனியன் அணிந்திருந்தார். அவருடன் நின்றவர் ஒரு ML தோழராம், அவர் மழித்த முகத்துடன் இருந்தார். நான் அரபிந்தோ நண்பரிடம் சொன்னேன். ஒருவர் சாரு, மற்றவர் நிவேதிதா. நண்பர் அன்று என்னை அவருக்கு அறிமுகப்படுத்தி வைக்க வில்லை. பிறகு சில நாட்கள் சென்ற பின்தான் அவரிடம் நானே சென்ற பேசினேன். அன்று பையில் ஜே.ஜே சில குறிப்புகள் அட்டையுடன் இருந்தது. அதனை வாங்கி ஆவலுடன் புரட்டிப் பார்த்தேன். ஏனெனில் எங்கள் நூலகத்தில் புத்தகம் வாங்கியதும் நூல் அட்டையைக் கிழித்து விட்டு கெட்டி அட்டையில் பைண்ட் செய்துதான் அடுக்கில் வைப்பார்கள். அன்று அவருடைய சிறு வெளியீட்டை நான் படித்தது பற்றிப் பேசினேன், அவருடைய முகத்தில் ஒளிஒலியும். ஒரு நாவலைப் படிப்பதே பெரிய விஷயம், அது பற்றி எழுதி தனி வெளியீடாக இலவசமாகத் தருவது என்றால்? ஆம், தமிழ் அன்று அவருக்குச் சோறு போடவில்லை, அவர்தான் தமிழுக்குச் சோறு போட்டு வளர்த்துக் கொண்டிருந்தார். வளர்ந்த பின் திருப்பிச் செய்ய வேண்டியது நன்றிக் கடன் இல்லையா?]  

(வதந்திகளின் வாசனை:  சிறுபத்திரிகைகளைப் பழி தீர்க்க பிரேதா என்ற பெயரில் எழுதி அனுப்பியது சாரு நிவேதிதாதான். பழமலை என்ற பாட்டாளிக் கவிஞர் என்னை முதன் முதலாகச் சந்தித்த போது சும்மா சொல்லுங்க “உங்க வயசுக்கு இத நீங்க எழுத முடியாது, சாரு நிவேதிதா எழுதி உங்க பேருள போடுறாரு சரிதானே?” என்று பாசத்துடன் கேட்டார். “ஆமாம் இதில் உள்ள ஒவ்வொரு வரியும் அவர் கையால் எழுதப் பட்டதுதான்” என்றேன். பாத்திங்களா ? அவர் முகத்தில் அக்கினிக் குண்டத்தின் அடர்த்தியான வெளிச்சம். “எனது புரியாத கையெழுத்தை புரியும் படி ஒவ்வொரு வரியாய் எழுதி அச்சகத்துக்குத் தருவது அவர்தான்.” பழமலை பல்லைக் கடித்துக் கொண்டு நிலக்கிழார் சிரிப்பைச் சிரித்தார். நல்லா பேசிறிங்க.)

பாரிஸ் நகரில் நடப்பதாய் பாவனை
பாரி முனையின் வெயில் கால வேதனை
தலைநகரில் இருந்து வந்த இருள்நகர் எழுத்து
எரிக்கப்பட்ட ஏடுகள் பல எஞ்சி நின்றவை சில

சிவகாமி: எழுத்து ஆளுமை, செயல்பாட்டு முன்னோடி

செயல்வழி நிகழும் கோட்பாடு

பிரேம்

இந்தியச் சமூகங்களில் கடந்த இரு நூற்றாண்டுகளில் நிகழ்ந்த மாற்றங்கள் யாவும் இந்தியச் சமூகங்களால் விரும்பப்படாத,  உள்வாங்கப்படாத  புறக்காரணிகளின் வழியாக நிகழ்ந்துள்ளன என்பதை அறிய நேரும்போது முதலில் நமக்கு அதிர்ச்சியும் சுயவெறுப்பும் தோன்றக்கூடும்.

இந்தியா என்ற தேசத்தை, அதன் கருத்தியலான தேசியத்தை காலனிய அரசும், காலனியப் பொருளாதார அமைப்பும் கட்டித்தந்தது போலவே இந்தியாவின் நவீன குடிமைச் சமூகத்தையும் காலனிய அமைப்பே கட்டித் தந்தது.

நவீன அரசு, நவீன இயந்திர உற்பத்தி முறை, நவீன அறிவு என்பவை இந்தியச் சமூகத்தின் கூட்டு நினைவில் புறக்காரணிகளாகவும் மற்றொரு வகையில் அடக்குமுறை கட்டமைப்புகளாகவுமே பதிவாகியிருந்தன. தம் காலத்திய வாழ்வின் கூறுகள் யாவும் புறத்திலிருந்து தம் மீது திணிக்கப்பட்டவை என்ற உணர்வு இந்தியச் சமூகத்தின் பொது அடையாளத்தை உருவாக்கப் பயன்பட்டுள்ளது. இந்த முரண் அடையாளத்தின் பகுதிகளான இந்தியத் தேசியம், தேசபக்தி, இந்தியப் புராதன அடையாளம், இந்திய வரலாறு என ஒவ்வொன்றும் சனநாயக மாற்றத்திற்கு எதிரான சமூக உளவியலின் உருவாக்கங்களாகவே அமைந்தன.

காலனிய ஆதிக்கத்திற்கு எதிரான ஒன்றிணைப்பு, விடுதலை அரசியல், புதிய சமூகக் கட்டமைப்புக்கான இயக்கங்கள் என்ற வடிவில் உருவாகி இருக்கவேண்டிய இந்திய நவீன அரசியல் இதற்கு முற்றிலும் எதிராக சாதியமைப்பையும், பெண்ணொடுக்குமுறையையும் நியாயப்படுத்ததும் இந்துமையத் தன்மையுடையதாக, மதவாதத் தேசியமாக வடிவம் கொண்டது.

காலனிய கால உருமாற்றங்களைப் பயன்படுத்தி  புதிய சமூகத்திற்கான அரசியலைக் கட்டுவதற்குப் பதிலாக புராதன, சாதியாதிக்க அமைப்பை மீட்டெடுக்கும் சதித் திட்ட அரசியலாக  தேசிய அரசியல் மாறியது.  இந்து என்ற மத அடையாளமும் இந்து தேசியம் என்ற அரசியல் அடையாளமும் ஒன்றுடன் ஒன்று பிணைந்தன, பின் தம்மளவில் இரு குழுக்களாகப் பிரிந்து இயங்கத் தொடங்கின.

1831-ல் பெண்ணெரிக்கும் வழக்கமான ‘சதி’ தடைசெய்யப்பட்டபோது பிரிடிஷ் அரசுக்கு எதிரான  சனாதன சபா, சனாதன தர்ம சபா என்ற  பெயர்களில் அமைப்புகள் செயல்படத் தொடங்கின. இந்த அமைப்புகளே பின்னாட்களில் சுதந்திரப் போராட்ட அமைப்புகளாக தம்மை உருமாற்றிக்கொண்டன.  இந்திய ஆண்மைய, ஆணாதிக்க சமய அதிகாரம் இந்திய அரசியலின் மற்றொரு வடிவமான காலனிய எதிர்ப்பையும் தனதாக்கிக் கொண்டதன் தொடக்கம் இது. சாதி அமைப்பை, பெண்ணொடுக்குமுறையைக் கேள்விக்குட்படுத்தும்  நவீன நிறுவனங்களைத் தன்வயப்படுத்தி மீண்டும் பழைய மரபான (சனாதன) ஆதிக்கத்தை நிறுவுவதே இந்த அமைப்புகளின் அடிப்படைத் திட்டம்.

அதாவது நவீன அரசியல் இயந்திரம்,  ஆயுத அரசியல், இயந்திர உற்பத்தி முறை, நகர அமைப்புகள் கொண்ட இந்தியத் தேசம் ஒரு பருண்மை, ஆனால் சாதி அதிகாரம் கொண்ட, பெண்ணடிமைத்தனம் நிலை பெற்ற இந்தியச் சமூகம் நடப்பு. இந்த அரசியல் உளவியல் ஆணாதிக்க,  ஆண்மையச் சமூக உளவியலுடன் உள்ளீடான இணைப்பு கொண்டதுடன், சாதி அதிகாரத்தை இயல்பான சமூக ஒழுங்கு என்று போற்றக்கூடியது.  மொத்தத்தில் விடுதலை, சமத்துவம், சமஉரிமை, சமநீதி, அடிப்படை மனித உரிமைகள் என்ற நவீன விடுதலைக் கருத்தியல்கள் எதுவுமற்ற ஒரு அமைப்பைக் கட்டியெழுப்புவதே இதன் செயல் திட்டம். இந்தச் செயல்திட்டம் இந்திய மரபாக, சமூகப் புனித விதியாகப் படிந்து கிடப்பது, இது நவீன ஜனநாயக அரசியலுக்கு எதிரானது. 

இதனையே அண்ணல் அம்பேத்கர் “நாம் உருவாக்கும் அரசியல் ஜனநாயகம்  சமூக ஜனநாயகமாக மாறாமல் இந்தியா சுதந்திர நாடாக மாறமுடியாது” என்று குறிப்பிட்டார். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற கொள்கைகளைத்  தம் பண்பாடாகக் கொண்டிராத ஒரு நாடு தன்னை தேசமாக உருவாக்கிக்கொள்ள முடியாது என அழுத்தமாக அறிவித்தார். “பல சாதிகளாகப் பிரிந்துகிடக்கும் மக்கள் எப்படி ஒரு தேசமாக முடியும்? சாதி அமைப்பு தேச விரோதத் தன்மை கொண்டது.” என்ற அவரது  அறிவிப்பு  இந்தியா நவீன அமைப்பாக மாறுவதற்கான அடிப்படை நிபந்தனையை முன் வைக்கிறது. 

இதனை  முழுமையான பொருளில் முன்வைக்கும் அரசியல்தான் தலித் அரசியல் என்ற ஒடுக்கப்பட்டோர் விடுதலை அரசியல். விடுதலைக்கு எதிரான சாதிய மனம் விடுதலை அரசியலை முன்னெடுக்காது.  இது மாற்றங்களுக்கு எதிரான இந்திய உளவியலாகச் செயல்படுவதுடன்,  அனைத்து விதமான வன்முறைகளையும் ஒடுக்குதல்களையும்  இயல்பான சமூக விளைவுகளாகக் காணும் தன்மை கொண்டது.

சாதி உளவியல் நவீனத்தன்மை, விடுதலை இயக்கவிதிகள் இரண்டுக்கும் எதிரானது. இந்தியச் சமூகத்தின் சரிபாதியான பெண்கள்,  மூன்றில் ஒரு பங்கான ஒடுக்கப்பட்ட மக்கள் என்ற இரு சமூக இருப்புகளையும் புறத்தே நிறுத்தி, எதிர்நிலைப்படுத்தித் தன் அடையாளத்தைக் கட்டிக்கொள்வது.

இந்த அடையாளம் தனித்த அரசியல் அதிகாரமாக, ஒன்றுதிரண்ட பாசிசமாக மாறுவதற்குத்  தொடர்ந்து முயற்சி செய்தபடி இருக்கும். ஆனால் உலகவயமான, நவீன அரசியல்  அமைப்பின் அடிப்படைகளைக் கொண்ட தலித் அரசியலும், பெண்ணிய அரசியலும்தான் இதனை உள்ளிருந்தபடி எதிர்த்து உடைத்தபடியிருப்பவை.  

தலித் அரசியலும் பெண்ணிய அரசியலும் தம் முழுமையான விடுதலையை அடைவதைவிட வன்கொடுமை கொண்ட முற்றதிகாரத்திற்கெதிரான இந்தப் போராட்டத்திலேயே தமது பெரும்பகுதி ஆற்றலைச் செலவிட்டு வருகின்றன. இவை தம்மளவிலேயே எதிர்ப்பின் வடிவங்கள் என்பதாலேயே பெண்-தலித் என்ற உடல்-உயிர் இருப்புகள் மீதான  தாக்குதல்களும், சிதைவுகளும், வன்கொடுமைகளும் தொடர்ந்து  நிகழ்த்தப்படுகின்றன.

 இருப்பும் எதிர்ப்பும் இணைந்த, துயரும் கலகமும்  கலந்த இந்த  அரசியலின் இயக்க முறையைப் புரிந்துகொண்டு அத்துடன் தம்மை இணைத்துக்கொள்ளாத  இந்திய மாற்று அரசியல் இயக்கங்கள் அனைத்தும் அதனால்தான் விடுதலை நோக்கிய எந்த நகர்வையும் செய்யாததுடன், மாற்றம் பற்றிய செயல்திட்டமற்ற துணை ஆதிக்கச் சக்திகளாகத் திரண்டு நிற்கின்றன.

விடுதலைக்கான அனைத்து அரசியல்,  சமூக முன்னெடுப்புகளும் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலில் இருந்தே தொடங்க முடியும் என்பதை இன்று வரை ஒப்புக்கொள்ளாத மாற்று அரசியல் அமைப்புகள், இயக்கங்கள் அனைத்தும் இணைந்து உருவாக்கிய தீய விளைவுகள்தான்  இன்றுள்ள உடல் நீக்கம் பெற்ற அரசியலும், மனித நீக்கம் செய்யப்பட்ட பொருளாதர அமைப்பும்.

இதன் வன்கொடுமைகளை முழுவடிவில் புலப்படுத்தி, மாற்றத்திற்கான உண்மையான தொடக்கத்தை முன் வைக்கும் செயல்திட்டமாக உருவாகியிருப்பது  தலித் பெண்ணியம். இந்த நூலில் உள்ள கட்டுரைகள் தலித் பெண்ணியத்தை  நுண் அளவில் தொடங்கி, பெருந்திட்டங்கள் வரை விவரித்துச் செல்கின்றன.

புலப்படாதவைகளாக வைக்கப்பட்ட வரலாற்று உடல்களை இன்றைய அரசியலின் மையத்தில் கொண்டு வைத்துக் கேள்விகளை எழுப்புவதன் வழியாக அனைத்து விதமான அரசியல், சமூக, மரபு வடிவங்களின் அறத்தோற்றங்களையும் உடைத்து தலித் பெண்ணியத்தின் இடத்தை நிறுவுகின்றன இக்கட்டுரைகள்.

 விடுதலைக்கான கருத்தியல்கள் எனச் சொல்லிக்கொள்ளும் அனைத்துக்குள்ளும் உள்ள சாதி மற்றும் ஒடுக்கப்பட்ட உடல்கள் பற்றிய மௌனம், மறதி பற்றிய தொடர் கேள்விகளை எழுப்புவதன் மூலம் சமூக அமைப்பின் அடிப்படைச் சிக்கல்களை வெளிக்கொண்டு வந்துவிடுகின்றன தலித் பெண்ணியத்தை விளக்கும் இக்கட்டுரைகள்.

அதன் அடுத்த கட்டமாக மாற்றத்திற்கான செயல்திட்டங்களை விரிவான புள்ளிவிவரங்களுடன் முன் வைக்கின்றன. உலக அளவிலான பெண்ணிய உரையாடல்களையும், விவாதங்களையும் கணக்கில் கொண்டாலும் இந்தியப் பெண் உடல்- பெண் மனம் என்பதில் மையம் கொண்டு தன் கருத்தாக்க முறையை அமைத்துக் கொள்வதால்  இக்கட்டுரைகள் ஒரே சமயத்தில் அரசியல் சொல்லாடலாகவும் அரசியல் செயல்பாடாகவும் வடிவம் பெற்றுவிடுகின்றன.

அரசியல் செயல்பாட்டாளர், பெண்ணிய எழுத்தாளர் என்ற இருவகை அடையாளத்துடன் இயங்கும் தோழர் ப.சிவகாமி உருவாக்கிவரும்  எழுத்துகள் நீண்ட ஒரு போரட்டத்தின் தொடர் மொழிச் செயல்பாடுகளாக இருந்து வருகின்றன.

‘பழைய கழிதலும்’ நாவல் தலித் அரசியல் கவனம் கொள்ளவேண்டிய உள் முரணை பெண்ணிய அரசியலாக முன் வைக்கிறது.  ‘ஆனந்தாயி’ நாவல் ஆண் அடையாளத்தின் வன்முறைகளை உடல், மொழி, மனம் என்ற அனைத்துத் தளங்களிலும் விவரித்து குடும்பம் என்ற அமைப்பை கட்டுடைப்புச் செய்கிறது, அதிகாரத்தின் நுண்கொடுமைகளையும் வரைபடமாக்கித் தருகிறது.  ‘குறுக்கு வெட்டு’ நாவல் மனம், உடல், பாலியல் மதிப்பீடுகள் பற்றிய கட்டமைப்பை இழைபிரித்துக் கேள்விக்குள்ளாக்குகிறது.  ‘உண்மைக்கு முன்னும் பின்னும்’ நாவல் மாற்று அரசியல் என்றால் என்ன, மாற்று அரசியலில் தனிமனிதர்களின் இடம் என்ன, கருத்தியலுக்கும் செயல்பாட்டுக்கும் இடையிலான உறவு என்ன என்ற ஈவிரக்கமற்ற ஆய்வினைச் செய்கிறது.  இலக்கியச் சொல்லாடல்களாக உள்ள போது கருத்தியல் அமைதி குலைக்கும் தன்மை கொண்ட சிவகாமியின் எழுத்துகள் அரசியல் சொல்லாடலாக மாறும்போது செயல்படும் தன்னிலைகளை உருவாக்க முயல்கின்றன.

“மேம்பட்ட சமூகத்தை உருவாக்க, பெண்கள் ஒவ்வொரு நிலையிலும் கடுமையாகப் போராடினர். இன்றைய பல சமூகச் சட்டங்களுக்கு அவர்களின் போராட்டங்களே அடிப்படை. புதிய பொருளாதாரச் சூழல் தோற்றுவித்த கருத்தியல்களை, பெண்கள் படிப்படியாக வளர்த்தெடுத்து சமூக மேன்மைக்கான மாற்றங்களைக் கொணர்ந்தனர்.” என்ற பின்புலத்துடன்தான் அவரது கருத்தியல் திட்டங்கள் முன் வைக்கப்படுகின்றன.

“இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நாடெங்கும் பல்வேறு பெண்கள் அமைப்புகள் தோன்றிச் செயல்படத் துவங்கிய பிறகும் அவர்கள் நடவடிக்கைகளில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான பெரிய மாற்றங்கள் ஏற்படவில்லை. இன்னமும் பெண்கள் இயக்கங்கள் எதிர்ப்பு அரசியலையே பிரதானமாகக் கொண்டு செயல்படுவது ஏன்?” என்ற   கேள்விக்கு அவர் அளிக்கும் பதில் “புழக்கத்திலுள்ள பெண் விடுதலைக் கோட்பாடுகள் யாவும் சாதிமத அடிப்படைகளைத் தகர்க்காது வர்க்க முரண்களை அடிப்படையாகக் கொண்டு சீர்த்திருத்தங்களை விழைபவை.” 

இதனைக் கடந்த ஒரு அரசியலைத் “தலித் பெண்ணியம் என்பது சாதி-மத-வர்க்க அடிப்படையிலான ஆணாதிக்கத்தை வேரறுப்பது. பால்பேதமற்றது, எல்லா உயிர்களும் சம சமூக மதிப்பு உடையன என்பதை ஏற்றுக் கொள்வது.” என அடையாளப்படுத்துகிறார் அரசியல், எழுத்து என்ற இரு தளங்களில் இயங்கும் பெண்ணிய ஆளுமையான சிவகாமி.

பெண்ணிய அரசியலில் ஒவ்வொரு சொல்லும் செயலாகவும், ஒவ்வொரு செயலும் அரசியலாகவும் மாறும் தன்மை கொண்டது. “இதை இயல் அல்லது தத்துவம் என்று வரையறுப்பதைக் காட்டிலும், மிக நுண்ணியக் கூறுகளாகப் பகுத்து, அவைகளுக்கு செயல்வடிவம் தந்து, உடனடியான களப்பணியில் இறங்குவதே சிறந்தது…” எனச் செயலுக்குள் இழுத்துச் செல்லும் எழுத்துகளாக இயங்குகின்றன  இவை.

தமிழவனின் புதிய புனைகதை -ஜமாலன்

‘ஷம்பாலா’   அரசியல் குறியீட்டு நாவல்

 ஜமாலன்

“கலைகள் எப்போதும் பூரணமான விளக்கத்தை நிராகரிக்கின்றன.  எந்த எதிர்கால அரசும் கூட கலையைக் கைது செய்யமுடியாது” (ஷம்பாலா, ப. 210)

“உலகம் முழுவதும் எதேச்சதிகாரப் போக்குள்ளவர்கள் தேர்தல்மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள்.  ஜனநாயகப் பண்புகளைத் தோண்டி புதைக்கும் நபர்களும் இயக்கங்களும் வெற்றி பெற்று வருகிறார்கள்.  தங்களுக்கு கஷ்டம் கொடுத்தாலும் மக்கள் அந்த எதேச்சதிகாரிகளைத் தேர்ந்தெடுப்பதை விளக்கிக் கூறுவதற்கு இன்றைய அறிவுத்துறை வளரவில்லை போலுள்ளது.”  (ஷம்பாலா, ப. 127)

“கலைகள் எப்போதும் பூரணமான விளக்கத்தை நிராகரிக்கின்றன.  எந்த எதிர்கால அரசும் கூட கலையைக் கைது செய்யமுடியாது” (ஷம்பாலா, ப. 210)

தமிழவனின் புதிய நாவல் ஷம்பாலா (2019)  ஓர் அரசியல் நாவல் என்ற துணைத் தலைப்புடன் வெளிவந்துள்ளது. அரசியலைப் பல குறியீடுகள் வழிப் பேசும் ஒரு அரசியல் குறியீட்டு நாவல்.  அரசியல் குறியீடுகள் மற்ற குறியீடுகளைவிடச் சமூக முக்கியத்துவம் வாய்ந்தவை.  ஜார்ஜ் ஆர்வெல்லின் “விலங்குப்பண்ணை” என்ற நாவல் உலக அளவில் மிக முக்கியமான அரசியல் நாவலாகப் பேசப்பட்ட ஒன்று.  முழுக்க எதேச்சதிகார அமைப்பு குறித்த பல குறியீடுகளைக் கொண்ட நாவல். ஒரு விலங்குப் பண்ணையாக எதேச்சதிகார சமூகத்தையும், அந்த சமூகத்தின் அதிகாரத்தில் உள்ள கட்சியையும் குறியீடாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல்.  அந்நாவலின் ஆசிரியரான ஜார்ஜ் ஆர்வெல் குறித்துப் பல சந்தேகங்கள் உள்ளன. அவர் அமெரிக்க உளவுத்துறையோடு இணைந்து செயலாற்றியவர் என்றும் ரஷ்ய சோஷலிச சமூகத்திற்கு எதிராக எழுத வைக்கப்பட்டவர் என்பது போன்றன. அந்நாவல்கூடச் சமத்துவச் சமூகத்தை (சோஷலிஸ்ட் சொசைட்டி) ஒரு விலங்குப் பண்ணையாக உருவகித்து எழுதப்பட்டது என்பதும், அது உலக அளவில் முதலாளியச் சக்திகளால் கொண்டாடப்பட்டதும் வரலாறாகச் சொல்லப்படுகிறது. அது ஒரு குறியீட்டு நாவல் என்பதைவிட ஒரு அங்கத கதை என்று சொல்லலாம்.  தமிழவனின் ஷம்பாலா நாவலோ பல அரசியல் குறியீடுகளைக் கொண்டு எழுதப்பட்டுள்ளது.  உலக அளவில் நிகழ்ந்த பல அரசியல் நிகழ்வுகள் நாவலில் வெவ்வேறு வடிவங்களில் பேசப்பட்டுள்ளது.

தொடர்ந்து உலக, இந்திய, தமிழக அரசியலைக் கவனித்துவரும் ஒரு படைப்பாளியின் தற்கால அரசியல் குறித்த ஒரு புனைவாக  அமைந்துள்ளது இந்நாவல்.  உலக அளவிலும் குறிப்பாக இந்தியாவிலும் பெருகிவரும் வலதுசாரி பாசிச அரசியல் குறித்துக் கவனம் குவியச் செய்கிறது இந்நாவல். அதனை அங்கதமாக்காமல், நாவலுக்குள் நிகழும் நிகழ்வுகளில் உள்ளிருத்தியும், நாவல் நடப்பியல்-யதார்த்தம் மற்றும் புனைவு-யதார்த்தம் இரண்டு முறைகளிலும் எழுதப்பட்டுள்ளது. யதார்த்தச் சித்தரிப்புகளும், யதார்த்த மீறிய நிகழ்வுகளுமாக.

உலகெங்கிலும் வலதுசாரிவாதம் கோலோச்சும் இன்றைய சூழலில், அதற்கான உளவியல், சமூகவியல் சார்ந்த அரசியலை ஆராய முற்படுகிறது இந்நாவல்.  வலதுசாரிவாதம் ஜனநாயக அரசமைப்பிற்குள் நுழைந்து ஒரு சட்டவாத-பாசிச அரசாக மாறிக்கொண்டிருக்கும் சூழலில், அதன் உள்ளார்ந்துள்ள உலக ஆதிக்கம் பற்றிய கனவைப் பேசுகிறது.  அக்கனவிற்கான ஒரு ஆன்மீக மையமாக அமைந்த இடமே “ஷம்பாலா”.

நாவலின் பெயர் “ஷம்பாலா”.  ஷம்பாலா என்பது ஒரு தொன்மம்.  உலக அரசாட்சியின் மையமான அதிகாரம் நிறைந்த இடம்.  இது குறித்து நாவலின் இறுதி அத்தியாயத்தில் தண்டி பத்லா என்கிற சாமியரால் விளக்கப்படுகிறது.  நாவலில் ஷம்பாலா என்பது ஒருவகை ஆன்மீக அரசியலின் குறியீடு.  அது புத்த லாமாக்களால் கொண்டாடப்படும் திபேத்தில் உள்ள ஒரு மலைச்சிகரம்.  புத்த கருணையின் வடிவமாக உள்ள ஷம்பாலா, உலக அதிகாரத்தை கருணைக்கு எதிரான கொலைவெறி மூர்க்கத்தின் வழி பெற்றுவிடலாம் என்று நம்பவைக்கப்படுவதே இந்ந நாவலின் நகைமுரண். நாவலில் ஷம்பாலா குறித்துப் பேசப்படுவது மிகக்குறைவுதான்.  மதமும், ஆன்மீகமும், அரசியலும் கலந்து நவீன சாமியார்கள் எப்படி அதிகாரத்தோடு கைகோர்த்துக் கொண்டு, அரசை ஆட்டுவிக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்தும் ஒரு குறியீடு.

இதுபோன்ற குறியீடுகள்தான் ஆன்மீகத்தை அரசியலாக மாற்றும் ஒரு மர்மமான பகுதியாக, திரைமறைவில் இயங்குவதாக உள்ளது.  ஆக, ஷம்பாலா என்பதே நாவலின் மையப்படிமம்.  உலக அதிகாரம் பெற அதீத மனித உருவாக்கம் நிகழ வேண்டும்.  அந்த அதிமனிதன் உருவாக்கமே நாவலின் புனைவு-யதார்த்தமாக, நாவலுக்குள் உள்ள பாத்திரமான எழுத்தாளன் அமர்நாத்தால் எழுதப்படும் நாவலாக எழுதிக் காட்டப்பட்டுள்ளது.

நாவல் ஒரே நேரத்தில் ஒரு புராணிகத் தன்மைக் கொண்ட உலக அதிகாரத்திற்கான வேட்கை செறிந்துள்ள ஆன்மீக ஆற்றல் மையத்தையும், பரவிவரும் உலக அரசாட்சிக்கான மதம் சார்ந்த வேட்கையையும் புனைவாக்கிக் காட்டுகிறது.  நாவலின் நாயகராக உள்ள அமர்நாத் தொடர்ந்து அரசால் கண்காணிக்கப்படுவதும், அவரை கண்காணிக்கும் உத்திகளும் மிக நுட்பமாக நாவலில் பகடி செய்யப்படுகிறது.  

அமர்நாத் ஒரு எழுத்தாளர்.  தன்னை ஒரு இடது தாராளவாதியாகக் கருதிக்கொண்டு எழுதுபவர்.  அவரை “சிந்தனை போலிஸ்” என்ற ஒரு வகை போலிஸ் மோப்பம் பிடிக்கிறார்கள்.  எப்படி என்றால் அவர் சிறுநீர் கழித்தபின் அவரது கழிப்பறையில் உள்ள கழிப்பிடத்தை முகர்ந்து, அந்த மோப்பம் வழி அவரது சிந்தனையை அறிய முற்படுகிறார்கள்.

இப்படி உளவுத்துறை முழுக்க எழுத்தாளர்களை, சிந்தனையாளர்களை கண்காணிப்பதும், அப்படி கண்காணிப்பதன் வழியாக சில உத்திகளைப் பயன்படுத்தி அவர்களது சிந்தனைகளை கட்டுப்படுத்துவதுமே நாவலின் நடப்பியல் யதார்த்த பகுதி.  

நாவலில் இரண்டு யதார்த்தங்கள் உள்ளன.   மேலே சுட்டியுள்ளதைப் போல ஒன்று நடப்பியல்-யதார்த்தம்.  வழக்கமாக நாம் வாசிக்கும் நாவல்களில் நிகழும் நடப்பியல் சார்ந்த கதையாடல்.  மற்றொன்று, இந்நாவலில் வரும் புனைவு-யதார்த்தம்.  அந்தச் சிந்தனை போலிஸ் அமர்நாத்தைக் கட்டுப்படுத்த துவங்கியவுடன் அவருக்குள் உருவாகும் ஒரு புனைவு யதார்த்தமே நாவலின் மற்றொரு கதை.  இவ்விரண்டு கதைகளும் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டவை.  அதாவது நடப்பியலில் எழுத்தாளர்கள் அரசால் அச்சுறுத்தப்படுவதற்கான நடவடிக்கையாக உளவுப்பார்த்தல், அவர்களைக் கைது செய்தல், வழுக்காடுதல் என்பது ஒரு புறம். 

இதெல்லாம் நடப்பதற்கான அரசு உருவாக்கம் நிகழ்வது மறுபுறம். இந்நிகழ்வுகளே மற்றொரு புனைகதையாக நாவலில் எழுதப்படுகிறது.  அந்தப் புனைவு-யதார்த்தம் இன்றைய அரசியலின் நடப்பியல் யதார்த்தமாக உள்ளது. சங்கத்தமிழ் அல்லது தொல்காப்பிய முறையியலில் சொன்னால் ஒன்று அகத்தில் உருவாகும் கதை, மற்றது புறத்தில் நிகழும் கதை.  இந்த அக புற விளையாட்டு இரண்டு அக-புற யதார்த்தங்களாக இந்நாவலில் எழுதப்பட்டுள்ளது.

யதார்த்தமும், புனைவும் கண்ணாமூச்சி ஆட்டத்தை நிகழ்த்துவதாக நாவல் வாசிப்பில் சுவராஸ்யத்தையும், சிரத்தையையும் கூட்டுகிறது. சொல்லப்பட்ட அரசியல் சார்ந்த செய்திகள், குறிப்புகள் கவனத்துடன் உருவாக்கப்பட்ட பதிவுகளாக உள்ளன. ஒரு சிறுவன் கிணற்றில் பிணமாக மிதக்கிறான்.  அவனது உடல் முஸ்லிம், இந்து என்கிற மதம் சார்ந்த கதையாடலுக்குள் நுழைந்து வதந்தியாகப் பரவுகிறது.  இப்படி எல்லாவற்றையும் மதக் கண்கொண்டு பார்க்கும் நிலைக்குக் காரணமாக அமைவது ஷம்பாலா போன்ற தொன்மங்கள் உருவாக்கும் அரசியல் அதிகாரம் இதில் விவரிக்கப்படுகிறது.

ஊடகங்கள் எப்படி அரசுக்கு விலைபோயின என்பதையும் நாவல் விட்டு வைக்கவில்லை.  அமர்நாத்தின் நண்பரான சுரேஷ் என்ற எழுத்தாளர் கைது செய்யப்பட்டு நீதிமன்றம் கொண்டுவரப்படுகிறார்.  அதை ஒரு செய்தியாகக்கூட காட்ட ஊடகங்கள்  முன்வராத நிலை  உள்ளதை நாவல் காட்டுகிறது.

நாவலுக்குள் வரும் புனைவு-யதார்த்தம் ஒரு கிராமத்தில் பிறந்த முரட்டுச் சிறுவன், தனது தாய் இறந்துவிட்டாள் என்று கூசாமல் பொய் சொல்லி ஆசிரியரிடம் தப்ப நினைக்கும் சிறுவன், குஸ்தி பயில்கிறான், ஓவியக்கலை படிக்கிறான், அவன் விரும்பிய பெண்ணால் “ஹெல்பர் பல்பர்” என்றும் “ஹிட்லர் பட்லர்” என்றும் அழைக்கப்படுகிறான்.  எப்பொழுதும் அவனுள் ஒரு கோரப் புலி ஒன்று உறங்கிக்கொண்டு உள்ளது. அது அவனைச் சில வேளைகளில் அவனே அறியாத பல அசாத்தியங்களைச் செய்ய வைக்கிறது.  உள்ளுறங்கும் புலிதான் அவனது ஆன்மீக மையமாக உள்ளது.  அதைச் சாமியார்கள் உசுப்பேற்றி அவனது திறமையாகக் கூறி அவனை அதி-மனிதனாக (சூப்பர்-மேன்) மாற்ற முயல்கிறார்கள்.  பிற்காலத்தில் அரசியிலில் நுழைந்து குறுகிய காலத்தில் இணை அமைச்சராகி, சாமியாரின் ஆசியுடன் எதிர்காலத்தில் தலைமைக்கு வரக்கூடியவனாகக் காட்டப்படுகிறான்.  

இயல்பில் வெற்றி என்கிற அதிகார வெறிகொண்ட, கருணையற்ற, தனது போட்டியாளர்கள் மேல் வன்மம் கொண்டு பலிவாங்கும் அவன், ரத்த உறவு, பாசம், காதல் உள்ளிட்ட எந்த ஒரு உணர்வுகளையும் தனது முன்னேற்றத்திற்கான ஒன்றாக பாவிக்கும் குணம் கொண்டவனாக இருக்கிறான்.  ஹார்வேர்டில் படித்த முதல்வர் தனது அறிவாற்றலை முழுக்கத் தனது அதிகாரத்தை நிலைநிறுத்தும் சக்திகளுக்குப் பயன்படுத்த, அவருக்கு நம்பிக்கைக்கு உரிய உள்வட்ட ஆளாக மாறுகிறான்.

அவன் அமைச்சர் பொறுப்பைப்பெற முதலமைச்சரின் அடியாளாக, ஏவலாளாக அனைத்து வேலைகளையும் செய்கிறான்.  அவனது பெயர் ஹிட்லர்.  அதாவது வரலாற்றில் உருவான முதல் ஹிட்லர் யாரென்றே அறியாத இரண்டாவது ஹிட்லர் அவன்.  

ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் மார்க்சியம் முன் அனுமானித்த முதலாளித்துவ பொருளாதார நெருக்கடி உலகில் வரும்போதெல்லாம், இப்படியான ஒரு ஹிட்லரை அந்த முதலாளிய உற்பத்தி முறையே உருவாக்கி விடுகிறது.  தற்போது உலக அளவில் நிலவும் பொருளாதார மந்தம் உருவாக்கியுள்ள எண்ணற்ற ஹிட்லர்களின் ஒரு குறியீடே இந்நாவலில் வரும் 32 இட்லி தின்ற மேஸ்திரியின் மகனான ஹிட்லர்.  பொருளாதாரப் பெருமந்தம் முதலாளித்துவத்தின் தவிர்க்கமுடியாத விதி.  காரணம் சரக்குகளின் மிகை உற்பத்தி உருவாக்கும் தேக்கநிலை, சந்தை நிறைவு ஆனபின் புதுச்சந்தை தேடுதல் என்பதற்காக அது ஜனநாயக அரசை ஒரு எதேச்சதிகார அரசாக மாற்றி அந்நிய நாடுகளை நோக்கிப் படை எடுத்து புதிய சந்தை உருவாக்கத்தை நிகழ்த்தும்.

 அப்படியான ஒரு அரசியல் நிகழ்வே நெப்போலியன், ஹிட்லர், முசோலினி ஆகியோரின் தோற்றத்தை உருவாக்கியது.  இன்று அந்தப் பெருமந்தம் உலக முதலாளியச் சந்தைகளாக மூன்றாம் உலக நாடுகளை சூறையாடத் துவங்கியுள்ளது.  இந்நிலையில் பேச்சில் சுதேசி, செயலில் விதேசியாக ஒரு எதேச்சதிகார அரசு உருவாக்கம் உலக அளவில் நிகழ்கிறது. இதன் ஒரு கருத்தியல் விளைவே வலதுசாரி எழுச்சி.  இந்த எழுச்சிக்கான அரசியல்-உளவியலைப் புனைவாக்க முயன்றதே இந்நாவலின் வெற்றி.  தமிழவனின் கோட்பாட்டு வாசிப்பு அதற்கான பின்புலத்தைத் தருகிறது.  நாவல் பல நுட்பமான நிகழ்வுகள் குறித்தும் அதன்பின் உள்ள சமூக உளவியலை வெளிப்படுத்துவதாக உள்ளது.

நாவலைக் கோட்பாட்டு அடிப்படையில் வாசித்தால், நுண் (மைக்ரோ) அரசியல் மற்றும் பாரிய (மேக்ரோ) அரசியல் தளத்தில் இரண்டு வடிவங்களாக எழுதப்பட்டுள்ளது எனலாம்.  பொதுவாக நாவல் தரும் வாசிப்பு இடதுசாரிகள் மேக்ரோ அரசியலைப் பேசிக்கொண்டிருக்கிறார்கள், ஆனால், வலதுசாரிகள் மைக்ரோ அரசியலை நடைமுறைப்படுத்துகிறார்கள் என்ற விரிவான குறிப்பு நாவலில் உள்ளது   (ப. 190).

 ராபர்ட் என்கிற வினாயக் எப்படி வலதுசாரி அரசியலுக்குள் போய், தீவிர மதவாதியாக மாறி, ஒரு சாமியாரிடம் பயிற்சிபெற்று, பிறகு அந்த சாமியாரின் தம்பி செய்த கொலையை ஏற்று சிறை சென்று, அங்கு ஒரு சமண அதிகாரியால் மனம்மாறி புத்தக வாசிப்பாளனாகி, மதவாதத்தை எதிர்ப்பவனாக மாறுகிறான்.  புத்தக வாசிப்பு மனதை எப்படி பண்படுத்தும் என்பதைச் சொல்லும் இப்பகுதிகள் கவித்துவமாக எழுதப்பட்டுள்ளது. வலதுசாரிவாதம் எப்படி ஒரு நுண் அரசியலாக கண்ணுக்குத் தெரியாமல் உள்ளார்ந்து இயங்கி ஒரு பெரும் படையைக் கட்டமைத்துள்ளது என்பதை நாவல் விவரிக்கும் பகுதிகள் மிக முக்கியமானவை.  

வலதுசாரி இந்துத்துவ மதவாத பாசிசம் இந்தியாவில் எப்படி வெற்றிவாகை சூடுகிறது என்பது நமக்குப் புரியாத பகுதி.  அதற்கு காரணமாக அமைந்த அவர்களது இந்துத்துவ உடல் உருவாக்கம் எப்படி, உடற்பயிற்சி என்பதில் துவங்கி வலுவான உடலை உருவாக்குதல், அறிவும், மனமும் ஆரோக்கியமான உறுதியான உடலுக்கு எதிரானது என்று அறிவு எதிர்ப்பு சிந்தனையையை கொஞ்சம் கொஞ்சமாக சமூகத்தின் பொதுச் சிந்தனையாக, பொதுபுத்தியாக கட்டமைத்தது என்பதை நாவல் விவரிக்கிறது.  இது அரசியலில் முட்டாள் தனம் உடலுறுதி என்கிற பாசிச உறுதிப்பாடாகக் கேலோச்சத் துவங்கியதை விவரிக்கிறது.

 உலக ஆன்மீக மையம் என்ற நவீனத் தொன்மமாகக் கட்டப்பட்ட புண்ணிய பூமி என்கிற இந்தியாவில், ஹிட்லர் என்ற ஜெர்மானிய பாசிசவாதி, சமூகத்தின் அறிவற்ற மூடத்தனத்தால் அதாவது உடலுறுதி என்ற 60 இஞ்ச் மார்பு உள்ளது, யோகம் செய்தல், உடலை வலுப்படுத்துதல் ஆகிய ஊடகத் தொன்மங்கள் வழி எப்படி உருவாக்கப்படுகிறது என்பதைப் புனைவாக்கிக் காட்டுகிறது நாவல்.  அரசியல் திரைமறைவு வேலைகள் எப்படி இயல்பானதாக நிகழ்த்தப்படுகிறது என்பதையும் சுட்டிக்காட்டுகிறது.

நாவலின் மையப்படிமம் சிந்தனை போலிஸ்.  இந்த சிந்தனைப் போலிஸ் மிக நுட்பமாக உருவாக்கப்பட்டுள்ள ஒரு குறியீடு.  இவர்கள் புறத்தில் சிந்தனையை கண்காணிப்பவர்களாக இருந்தாலும், அகத்தில் இவர்கள் சிந்தனை தணிக்கை செய்யும் தன்னிலையாக வடிவமைகிறார்கள்.  அதாவது ஒவ்வொருவரது உடலிற்குள்ளும் சிந்தனை போலிஸ் என்கிற தணிக்கை செய்யவும், சிந்தனையை, உணர்வை கட்டுப்படுத்தவும், தனக்கு ஏற்ப மாற்றியமைக்கவும் ஆன ஒரு நனவிலியே இந்தச் சிந்தனை போலிஸ். 

இந்நனவிலி் எப்படி ஒவ்வொரு உடலுக்குள்ளும் உருவாக்கப்படுகிறது என்பதை உள்ளுறையாகக் கொண்டு எழுதப்பட்ட பிரதியே நடப்பியல்-யதார்த்த பிரதி.  இதன் மறுதலையாக உருவாகுவதே மேக்ரோ லெவலில் ஆன அரசியல்.  ஆக பாசிசத்தின் இரண்டு தளங்களுமே இந்நாவலின் மையப்பிரதியின் அமைப்பாக பொருந்தியுள்ளது.  

சிந்தனை போலிஸ் எப்படி நமது தன்னிலைக்குள் ஊடுறுவி நம்மை முழுக்க அதிகாரத்திற்கு ஏற்புடைய தன்னிலைகளாக கட்டமைக்கிறார்கள் அல்லது நமது எதிர்ப்பை எப்படி நீர்த்துப் போகச் செய்கிறார்கள் என்பதை இந்நாவல் சிறப்பாகக் காட்சிப்படுத்துகிறது.  அமர்நாத்தின் மகள் அவர்களது கண்முன்னால் உள்ளபோதே காணவில்லை என புகார் அளித்ததாகக்கூறி, தொடர்ந்து அவரது மனதை புதிருக்குள் நுழைத்து, பெரும் மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறார்கள். தினமும் தொலைபேசியில் அவருக்கு உங்கள் மகளை காணவில்லை என நீங்கள் புகார் அளித்துள்ளீர்கள் என தகவல் அனுப்புவது மட்டுமே அவர்கள் பணி.  ஆனால், மகள் காணாமல் போகலாம் என்கிற ஊகத்தை அளித்து அவளை பாதுகாப்பதற்கான அவரது முழுமையான செயல், அறிவு, உணர்வை அதைநோக்கி திருப்பிவிடுவார்கள்.   ஒரு பொய்த் தகவலை உண்மையென நம்பவைப்பது,  நிகழ்வதில் உண்மை எது பொய் எது என்று பிரித்தறியும் பகுத்தறிவை இல்லாததாக்குவது பாசிசம் செய்யும் உளவியல் ஒடுக்குமுறையாகும். அதை நுட்பமாக இந்நாவல் வெளிப்படுத்துகிறது. அவரது தினவாழ்வே சிந்திக்க முடியாத அந்த நகரச் சூழுலில் சிக்கிவிடுகிறது.   அவர் முன் இல்லாமலேயே  அவர்கள் இவருடன் தன்னிலையில் அமர்ந்துகொண்டு கண்காணிக்கத் தொடங்கிவிடுகிறார்கள்.  இந்தக் கண்காணிப்பு  விளையாட்டை ஒருவரது கற்பனை மனத்தளத்தில் உருவாக்கி தமது தனிப்பட்ட வாழ்வை  அனைவரும் காணும்படி பொதுப்பார்வையில் நிகழ்த்துவதான தன்னிலையாக மாற்றிவிடுகிறார்கள்.  இது சிந்திப்பவர்களுக்கான கண்காணிப்பு உத்தி, சிந்திக்காத பொதுமக்களுக்கு ஊடகங்கள் வழியாகக் கண்காணிப்பு நிகழ்த்தப்பட்டு, தன்னிலை வடிவமைப்பு  செய்யப்படுகிறது.   

பிரஞ்சு மார்க்சிய திரைப்பட இயக்குநரான லூயி புனுவல் முதலாளியத்தின் இத்தகைய கண்காணிப்புப் பேயுருக்கள் (surveillance phanthom) குறித்து விரிவாகக் காட்சிப்படுத்தப்பட்ட திரைப்படம் ஒன்றை எடுத்தார்.  அப்படத்தில் குழுந்தை வீட்டில் உள்ளபோதே காணாமல் போய்விட்டது என்று புகார் கொடுத்து காவல்துறை தேடிக் கண்டுபிடித்து விளளையாடுவார்கள். முதலாளியத்தின் பேயுருக்களே இந்தச் சிந்தனை போலிஸ்.  இவை எல்லோரையும் அதனதன் அளவில் பிடித்தாட்டும் ஒன்றாக மாறியுள்ளது.  இன்றைய வாழ்வு பாசிசம் கையளித்துள்ள அதன் கண்காணிப்புக் கட்டுப்பாட்டுக்குள் நிலவும் ஒன்றாக மாறியுள்ளது.

அனைவரும் இந்தச் சிந்தனைப்போலிஸ் என்கிற நனவிலி கொண்டவர்களாக மாற்றப்பட்டுள்ளோம். இதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று: இலக்கியம், எழுத்து என அனைத்து அறிவுசார் துறைகளும் படைப்பு, உள்ளொளி என்பதை முதன்மைப்படுத்தி, அதன் வழியாக கோட்பாடற்ற அறிவு எதிர்ப்பு மரபைக் கட்டியமைத்துள்ளது.  இந்த இலக்கியக் குழுக்களின் நுண் அரசியலுக்கும் இத்தகைய பாசிச உருவாக்கப் பாரிய அரசியலுக்கும் உள்ள உறவை இந்நாவல் தனது உள்ளார்ந்த குறியீட்டு கதை வழி நுட்மாக விவரிக்கிறது.    எழுத்தாளர்களும், பதிப்பகங்களும், வாசகர்களும் ஒரு வலைப்பின்னலாக இப்பாசிச விஷத்திற்கு  இரையாக்கப்படுகிறார்கள்.  ஒரு பிரிவினர்  விளைபொருளாக அனைத்தையும்  மாற்றி விஷத்தை பரப்புகின்றனர். இவற்றை இந்நாவல் தன் கதைவழியாக நுட்மாக புலப்படுத்துகிறது, ஒரு வகையில் விளக்குகிறது.

 உலகத் தன்மை கொண்ட இந்த நாவல் பொதுவான வலதுசாரி பாசிசத்தின் தோற்ற மூலத்தைத் தேடுகிறது.  அதற்குள் உள்ள தமிழ் நாவல் அக-புற ஊடாட்டத்தில் அதன் அரசியல், கருத்தியல் ஆகியவற்றை அகழ்ந்து முன்வைக்கிறது.  பிரஞ்சு சிந்தனையாளரான ஜீ்ல் தெல்யுஸ் மறைவுக்குப் பின் வெளிவந்த அவரது மிக முக்கியமான அறிக்கை ஒன்று எதிர்காலச் சமூகம் கண்காணிப்பும் கட்டுப்படுத்தலும் ஆன சமூகமாக மாறப்போகிறது என்பதை விவரிக்கிறது.  அக்கட்டுரை இறையாண்மை என்பதன் வரலாறு எப்படி ஒரு மனித உடலை, சமூகத்தை கண்காணிப்பதிலிருந்து, கட்டுப்படுத்தலை நோக்கிச் செலுத்துகிறது என்பதை விவரிக்கிறது.  இன்றைய அரசுகளின்  இறையாண்மையே கட்டுப்படுத்துவதையும், கண்காணிப்பதையும் கொண்டே வலிமை பெறுகிறது, நிலைபெறுகிறது என்பதை இந்நாவல் நிகழ்வுகளின் வழி விளக்கிக் காட்டுகிறது.  

இன்றைய அரசு, பாசிசத்தையே சட்டபூர்வமாக  மாற்றுவதற்கான பல அரசியல் சித்துவேலைகளைச் செய்கிறது என்பதை  ஆச்சயர்ப்படும் விதத்தில் இந்நாவல் வெளிப்படுத்துகிறது. மதுசூதன் என்ற போலிஸ் அதிகாரியின் கதை இதனை விளக்கும் பகுதியாக அமைகிறது.  யார், என்ன செய்கிறார்கள் என்பதை  அறியாமலேயே  பாசிச அரசியலுக்குள் ஒவ்வொருவரும் உள்ளிழுக்கப்படுவதைக் குறிநிலைப்படுத்தும் நிகழ்வு அது. 

இந்நாவலில் கவனத்திற்குரிய பகுதிகள் இவை: மதமும் சாமியார்களும், ஆன்மீகமும் வலதுசாரிவாதத்தின் மைய வடிவமாக இருக்கிறார்கள்.  இரண்டு கதைகளில் எது உண்மை எது புனைவு என்ற சிக்கலை உருவாகிறது.  பாத்திர அறிமுகங்கள் குறித்த விபரங்கள் துண்டு துண்டாக அமைகிறது.  பாத்திரங்களை  வழக்கமான நாவல் பாணியில் ஒரு அறிமுகம் செய்யாமல், அந்த பாத்திரம் யாரால் நோக்கப்படுகிறதோ, அவரது உணர்விற்கு ஏற்ப அறிமுகப்படுத்துகிறது. அதாவது நாவலுக்குள் ஒருவர் மற்றவரைப் பார்ப்பது குறித்து, ஒரு நோக்குநிலை வர்ணனையை வெளிப்படுத்துதல். இவை வாசிப்பில் புதியதொரு உணர்வைத் தருகின்றன.   

வேதகால ராக்கெட் குறித்த பகடி,  1930-களில் சமஸ்கிருத பண்டிதர்களுக்கு ஹிட்லருடன் இருந்த உறவு, மொழி அடையாளமாக வெளிப்படும் உளவியலை சிந்தனைப் போலிஸ் அமைப்பு  ஒரு உளவியல் நோய்க் குறியாகக்கொண்டு (symptoms) ஆய்வது, அதற்கென அவர்கள் வைத்துள்ள சொல் தொகுப்பு ஆய்வுமுறை, எழுத்தாளர்களைக் கண்காணித்தல் சிறிது சிறிதாக நனவிலி இயக்கமாக மாறி மனப்பிறழ்ந்த நிலைக்குத் தள்ளப்படுதல் என தற்கால நிகழ்வுகளால் நாவல் நிறைந்துள்ளது.   

நாவலின் மிக முக்கியமான பகுதி சிறுபான்மையினர், பெரும்பான்மையினர் குறித்த உளவியல் கட்டமைப்பு.  இந்தியாவின் மிகப்பெரும் ஆபத்து இது.  சிறுபான்மை மதம் சார்ந்த ராபர்ட் வினாயக்காக மாறுதல் இந்தப் பிரச்சினையை விளக்கும் நிகழ்வு. ராபர்ட் ஒரு கிறித்துவ கிராமத்தில் பிறந்து வளர்கிறவன், இந்த கிராமத்தில் கிறித்துவர்கள் பெரும்பான்மையினர்,  அந்தச் சூழலில் அவன் இந்து நண்பன் ஒடுக்கப்படுகிறான். அவனது வீடு இடிக்கப்படுகிறது, அதனால் பாதிக்கப்பட்டு ராபர்ட் வினாயக்காக மாறுகிறான். இன்று பெரும்பான்மை அரசியல் எப்படி சிறுபான்மையினரைச் சோதனை எலிகளாக மாற்றி வினாயக வழிபட்டை நிகழ்த்தி, ஒரு பேரச்சத்தைக் கட்டமைக்கிறார்கள் என்பதை விளக்கும் பகுதி இது.  சிறுபான்மையினர், பெரும்பான்மையினர் மன அமைப்பில் ஏற்படுத்தும் சிக்கல் குறித்த இப்பகுதி முக்கியமானது. 

வலதுசாரிகள் சுனாமி போன்ற துயர நிகழ்வுகளின் பொழுது  உதவுதல் என்ற பெயரில் வேர்க்கால் மட்டத்தில் பணியாற்றுகிறார்கள்.   அவர்கள் இலவச அடியாள் படைகளாக பயன்படுகிறார்கள். பெரும்பான்மை சமூகத்தில் இருந்து சில  இளைஞர்களை மூளைச்சலவை செய்து மதவாத அமைப்புகள் அதிகாரத்திற்கான பகடைக் காய்களாகப் பயன்படுத்துகிறார்கள். மனிதர்களிடம் காணப்படும் இயல்பான சேவை மனப்பான்மை, கருணை, இரக்கம் ஆகியவற்றை உடல்-உயிர் முதலீடுகாளாக்கி அவர்களையே தங்கள் ஆயுதங்களாகப் பயன்படுத்துகிறது வலதுசாரி அரசியல். வலதுசாரி ஊடகங்கள்-கதைகள்-வாசிப்பின் இடத்தில் காட்சியை முன்வைக்கின்றன.  பல பொய் மதவாதக் கதைகளைக் கட்டிப் பரப்புகின்றன. இந்த ஊடகப் பொய்கள்தான்  உலகை ஒரு மீ-யதார்த்த, மெய்நிகர் நிலைக்குக் கொண்டு செல்கின்றன, அது அறியாமை நிறைந்த மக்களின் உண்மை உலகாக மாறுகிறது. உண்மைகளைக் கட்டும் பொய்மைகளை பற்றிய, பொய்மைகள் நிகழ்வுகளாக மாறும் அரசியல் பற்றிய புனைவெழுத்தாக இந்நாவல் எழுதப்பட்டுள்ளது. அரசியல் புனைவுகளை அறிவதற்கான வாசிப்பாக இது அமைகிறது. தமிழில் இவ்வகை எழுத்துகள் வாசிக்கப்படுவதும், விவாதிக்கப்படுவதும் மிகவும் தேவையான ஒன்று.

[ஷம்பாலா : ஓர் அரசியல் நாவல்  (2019)  தமிழவன்,  சிற்றேடு  (விலை: 250, பக்.: 216)]

(புத்தகம் பேசுது, மே 2020)

பன்மெய்களும் பன்மைகளும் பேசப்பட

பன்மெய்களும் பன்மைகளும் பேசப்பட

பன்மெய் ஒருவர் சொல்வதை மற்றவர் கேட்டு அறியும் படிநிலை அமைப்பைக் காப்பதற்கான பத்திரிகை அல்ல. பல்வேறு போக்குகளும் நோக்குகளும் பாய்ந்தும் வெட்டியும் செல்லும் பன்முகப்பட்ட குரல்களின் உரையாடல் வெளி.

உண்மைகள் பலவாக உள்ளன என்பதைச் சொல்வது மட்டுமல்ல, உண்மைக்கு உள்ள பன்முகத்தன்மையையும் உண்மைகள் உருவாக்கப்படுவதன் பன்மையான வழிமுறைகளையும் உரையாடலுக்கு உட்படுத்துவது  இதன் நோக்கம்.

அறிவின் பல்வேறு சாத்தியங்களை முடக்கி தனக்கானதாகக் கையகப்படுத்திக் கொண்டுள்ள ஆதிக்கத் தன்மை கொண்ட பால், நிறம், இனம், வர்க்கம், தேசியம், சர்வதேசியம், பிராந்தியம், சாதி, மதம் என்பனவற்றிலிருந்து அறிவையும் சிந்தனையையும் விடுவிப்பதற்கான பன்முகப்பட்ட உரையாடல்களை உருவாக்குவதற்கான மற்றொரு தளமே பன்மெய்.

தனது அறிவை மட்டும் மையப்படுத்தும் எந்த ஒரு அமைப்பும் மற்றவற்றின் மீது வன்முறையை செலுத்துவதன் வரலாற்றை நினைவு கொண்டபடி ஒவ்வொரு அறிவும் தன்னை விளக்குவதற்கான தேவையை அடையாளம் காண இந்த மொழிவெளியை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

விடுதலை நோக்கிய முனைப்பும் விடுதலைக்   கான மொழியும் சாத்தியப்படும் தளம்தான் மாற்று அறிவு என  ஏற்றுக் கொண்டவர்களுக்கிடையிலான உரையாடலாகவே இவை அமையும் என்பதை நாம் மறைக்கத் தேவையில்லை. முரண்களுக்கு இடையில் உள்ள போராட்டத்தை ஏற்றுக்கொள்வதுடன் வேறுபாடுகளுக்கு இடையில் உரையாடல்களும், இணக்கமும், இணையான பரிமாற்றமும் அமையும் என்பது பன்மை நவீனத்துவத்தின் பொதுப்புரிதலாக அமைவதால் மாறுபட்ட கேள்விகளுடன் நம் காலத்திற்கான அரசியலை அணுக நாம் தயங்கத் தேவையில்லை.

தலித் அரசியல், பெண்ணிய அரசியல், சிறுபான்மை அரசியல், பன்மை அடையாள அரசியல், சூழலியல் அரசியல் என்பவற்றை ஏற்ற விடுதலைக் கருத்தியலின் தேவையைத் தொடர்ந்து நாம் பேச இருக்கிறோம்.

அடக்குமுறைக்கு எத்தனை வடிவங்கள் உள்ளனவோ அதைப்போல விடுதலைக்கும் பல்வேறு வடிவங்கள் உள்ளன, விடுதலைக்கான அறிவும் மொழியும் வேறுபட்ட வடிவங்களை, இயக்க முறைகளைக் கொண்டுள்ளன என்பதை நாம் ஏற்கும் போது ‘பன்மெய்’ அரசியலின் தளங்கள் விரிவடைகின்றன.

உலக முதலாளியம், போர்வெறி அறிவியல், புவிச்சூழல் அழிக்கும் நுகர்வுப் பொருளாதாரம், இன, மொழி, மத தன்னாட்சி உரிமைகளை மறுக்கும் உலக வல்லாண்மை, அச்சுறுத்தும் ஆயதமைய அரசியல் என நம் காலத்தின் பெருங்கேடுகளை அறிந்து கொள்வது மட்டுமின்றி அவற்றை எதிர்த்து உயிர்வாழ்ச் சூழலுக்கான அரசியல் சொல்லாடல்களை, செயல்பாடுகளை உருவாக்க வேண்டியது விடுதலைக்கான அறிவுசார்  செயல் பாட்டின் தேவையாக உள்ளது.

அத் தேவையை ஏற்ற விடுதலைக் கருத்தியல்கள் ஒவ்வொன்றும் மாறுபட்ட பார்வைகளை, விளக்க முறைகளை, தீர்வுகளைக் கொண்டிருந்தாலும் தமக்குள் உரையாடலை, ஒப்பீட்டு அறிதலை அனுமதித்து வளர்த்துக் கொள்வதன் வழியாகவே இனி தம்மை நியாயப்படுத்திக் கொள்ள முடியும். இவை நீண்ட காலத் திட்டங்களையும் நீடித்த அரசியல் செயல்பாடுகளையும் உள்ளடக்கியது என்பதை ஏற்றுக் கொள்வதன் வழியாகப் பன்மெய் தனது எளிய பக்கங்களை அதற்கு வழங்க இருக்கிறது.

விடுதலைக் கருத்தியல்களை ஏற்கும் அனைவரும் உரையாடலைத் தொடங்கவும், தொடரவும், இடையீடு செய்யவும், சரி பார்க்கவும், திருத்தங்கள்  வழங்கவும் என இதன் பக்கங்கள் திறக்கப்படு கின்றன. பன்மெய் சொல்லாடல்கள், செயல்பாடுகள் மற்றும் மாற்று அறிவுருவாக்கங்  களுக்கானது நமது தளம். மாறுபடுதலுக்கான உரிமையை தொடர்ந்து  வலியுறுத்தும் மற்றொரு களம்.

எங்களை விற்கவும் வாங்கவும் யாரையும் அனுமதிக்க முடியாது- மாலதி மைத்ரி

எங்களை விற்கவும் வாங்கவும் யாரையும் அனுமதிக்க முடியாது

“ஈழப்போரை தடுத்து நிறுத்தக்கோரி டெல்லியில் பிப்ரவரி 2009-இல் ஈழத்தமிழர் தோழமைக் குரல் என்ற அடையாளத்துடன் நடத்தப்பட்ட போராட்டம் எந்த அரசியல் கட்சிப் பின்புலமும் இல்லாமல் உணர்வெழுச்சியின் அடிப்டையில் இணைந்த படைப்பாளிகள், மாணவர்கள், திருநங்கைகள்இ மீனவர்கள், வழக்கறிஞர்கள், மனித உரிமை போராளிகள்  ஒருங்கிணைந்து நடத்தியது.”

அதனால்தான் “உணர்வெழுச்சியில் கொதித்திருந்த போராளிக் குழுவினர் சென்னையில் ரயில் ஏறியதிலிருந்து டில்லியிலிருந்து திரும்பும் வரை தங்கள் போராட்ட உடைகளையோ, முழக்கங்களையோ, தட்டிகளையோ எதோ ஒரு பெரும் சக்தியால் உந்தப்பட்டது போல, அகற்றாமலே இருந்தனர்.” அதே ஈழத் தமிழர் தோழமை அமைப்பினர்தான் “டில்லியிலிருந்து திரும்பியும் தொடர்ந்து தங்கள் பகுதிகளில் வெவ்வேறு போராட்ட வடிவங்களில் பங்கு கொண்டும்,  கைதாகியும், சிறை சென்றும் தங்கள் உணர்வுகளையும், எதிர்ப்பையும் காட்டியபடி இருந்தார்கள்.”

 நாங்கள் எல்லோரும் உணர்வெழுச்சியும் மனத்துயரும் கொண்டு இதில் ஈடுபட்டிருந்த போது இவை அனைத்தையும் முன்திட்டத்துடன் லீனா மணிமேகலை என்ற ஒருவர் தன் படத்தின் 30 நொடிக் காட்சியாகவும் அப்படத்தை  உருவாக்க தனக்கு உரிமையும் தகுதியும் உள்ளது என்று நிறுவுவதற்கான முன்னோட்டமாகவும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

அதில் உள்ளது வன்முறை, அவமதிப்பு என்பதைச் சுட்டிக் காட்டினால் “ஈழத்தமிழர் தோழமைக் குரல் காட்சிகள் உட்பட எல்லாமும் நான்  யூ-ட்யூபில் இருந்து டவுன்லோட் செய்தவையே!   ஓபன் சோர்ஸ்  காலத்தில்,  இதையெல்லாம் விளக்கமாக எழுதிக்கொண்டிருக்க வேண்டிய” தேவை இல்லை எனத் திமிர்த்தனத்துடன் பதில் அளிக்கிறார்.

எங்களையெல்லாம் வெறும் செம்மறியாட்டு மந்தைகள் என நினைத்துக்கொண்டு இவர் செயல்பட்டதைத்தான் நான் கண்டித்திருக்கிறேன். அதற்கு அவர் “தான் அழைத்துச் சென்ற செம்மறி ஆடுகள் போல” எங்களை நாங்களே சித்திரிப்பதாகச் சொல்கிறார். இதுபற்றி தன்னைக் கேள்வி கேட்க யாருக்கும் உரிமையில்லை, அப்படிக் கேள்வி கேட்பது “படைப்பாளிகளின் வன்மம்” என்கிறார். அதில் எங்கள் அறியாமை வெளிப்படுவதாகவும் அது வெட்கக்கேடானது என்றும் சொல்கிறார். தமிழின் அரசியல் சார்ந்த படைப்பாளிகளை என்ன வேண்டுமானாலும் சொல்லலாம், எப்படியும் பயன்படுத்தலாம் “திரைப்படத்துறையில் உள்ள எங்களை உங்களால் என்ன செய்ய முடியும்?” என்ற மதம் பிடித்த குரல்தான் இது.  இதனை முன் நின்று கேட்கும் படைப்பாளியான ஒரு மக்கள் களப்போராளியை “மனநோய் மருத்துவரிடம் அழைத்து” செல்ல வேண்டும் என்கிறார். இதுதான் இவரது உண்மையான குணம், இதில் உள்ளது ஆதிக்கச் சாதித்திமிர், வர்க்கத்திமிர் மட்டுமல்ல, விளிம்புநிலை அரசியல் சார்ந்தவர்களை பழிதீர்க்கும் அதிகாரத்திமிரும் கூட.

இது போன்ற ஆதிக்கக் கைக்கூலிகள் தங்களையும் கலைஞர்கள் என்று கூறிக்கொண்டு செய்து கொண்டிருக்கும் சதி வேலைகளை அனைவரும் புரிந்து கொள்ள சாட்சியாக உள்ளதுதான் டாடா நிறுவனம் பழங்குடியினரையும் பெண்களையும் ஒளிமயமான வாழ்வை நோக்கிக் கொண்டு செல்வதாகச் சொல்லி பிரச்சாரம் செய்யும் “தேஜஸ்வினி” 3 நிமிட விளம்பரம். இதில் டாடா என்ற முதலாளிக் குழுமம் தான் சொல்ல விரும்பியதைச் சொல்வது அல்ல பிரச்சினை. பெண்களின் குரலை ஒலிக்கிறேன் என்று கூறிக் கொண்டு ஒருவர் இதனைச் செய்து தருவதுதான் பச்சை ஏமாற்றுத் தனம். தனக்கான இந்த பிம்பத்தை பெண்கள் பற்றிய படம் எடுப்பதன் மூலம் உருவாக்கிக் கொண்டு அதனை விற்பதுதான் திட்டமிட்ட சதிவேலை.

செங்கடல் படத்திற்காக மீனவச் சமூகத்தைப் பயன்படுத்திக் கொண்டதுடன் அதில் அவர்களின் வாழ்வை இழிவாகப் பதிவு செய்து, ஈழத்தமிழர் தோழமைக் குரல் காட்சியை இணைத்து அது யுடியூபில் கிடைத்தது என்பது எல்லாம் இந்த டாட்டாவின் “தேஜஸ்வினி” கலிங்காநகர் விளம்பரப் படத்தின் மூலம் திட்டமிட்ட சுரண்டலாக, ஏமாற்று வேலைகளாக மாறுகின்றன.  தான் செய்வது விளம்பரம் செய்து ஊதியம் பெறுவதுதான் என்பது போன்ற சித்தரிப்பை இவர் உருவாக்க நினைக்கிறார்.  தற்பொழுது இந்திய கடல்சார் மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வும் வாழ்வாதாரமும் அழிக்கப்படும் சூழலில் இது ஒரு எரியும் பிரச்சினை.  இதனை எதிர்த்து உயிர்களைப் பணயம் வைத்து மக்கள் போராடி வருகின்றனர். வங்காளத்தின் சிங்கூர், நந்திகிராம் மக்கள் டாடா தொழிற்சாலை தங்கள் மண்ணைப் பறித்துக் கொண்டதை எதிர்த்து பெரும் போராட்டம் நடத்தி துரத்தியடித்தனர். இந்தச் சூழலில்தான் இவர் செய்தது பச்சைத் துரோகம் என்றும் பழங்குடிப் பெண்களைப் பயன்படுத்தி அவர்களுக்கு எதிரான கருத்துக்களைச் சொல்ல வைப்பது கேடுகெட்ட தந்திரம் என்றும் சொல்கிறோம். அதே கோபத்துடன்தான் ஈழத்தமிழர் தோழமைக் குரல் போராட்டத்தில் கலந்து கொண்ட அனைவரையும் ஆட்டு மந்தைகள் என நினைத்துக் கொண்டு தன் படத்திற்குப் பயன்படுத்திக் கொண்டதையும் கண்டிக்கிறோம். அதனால்தான் “உன் திரைப்படத்தை அங்கு திரையிட்டாயா? அந்த மக்களுக்கு காண்பித்தாயா? என்ற கேள்விகள்” இவர் திரித்துக் காட்டுவதுபோல சிறுபிள்ளைத் தனமானவை அல்ல. “நானும் கலைஞர்தான், கவிஞர்தான்” என்று சொல்லிக் கொண்டு எங்கள் மக்களையும் அவர்களின் போராட்டங்களையும் இழிவு படுத்துவதை இனி அனுமதிக்க முடியாது என்பதற்கான கண்டனக்குரல். கானக உயிர்களைப் படம் பிடிப்பது போல செங்கடல் “ஆவண மற்றும் திரைப்படத்துக்கு” மீனவ மக்களைப் பயன்படுத்திவிட்டு நான் என்ன செய்திருக்கிறேன் என்பதை உங்களுக்கெல்லாம் காட்ட வேண்டுமா எனக் கேட்கும் திமிர்தனத்தை இனி அனுமதிக்க முடியாது என்பதற்கான எதிப்புக் குரல்.

இதுபோல் ஈழத்தில் முன்னாள் போராளிகள் மற்றும் மக்களை வைத்து எடுக்கப்பட்ட “வெள்ளைவேன் கதைகள்” ஆவணப்படத்தில் பேட்டியளித்தவர்களின் முகங்களை மறைக்காமல் திரையிட்டதற்கும் அவர்களின் அனுமதி பெறாமலேயே இலங்கைக்கு வெளியே திரையிட்டதற்கும் புலம்பெயர் தமிழர்கள் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்து வருகிறார்கள். கனடாவில் புலம்பெயர்ந்த பெண் படைப்பாளிகள் வெள்ளைவேன் திரையிடலுக்கான ஸ்பான்ஸரையும் டிவிஐ  தொலைக்காட்சியில் லீனாவின் நேர்க்காணல்  ஒளிப்பரப்பையும் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதற்குப் பழித்தீர்க்க சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஜனவரி 3,4-இல் நடைப்பெற்ற பெண்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் புலம்பெயர்ந்த,  ஈழப்படைப்பாளிகள், செயல்பாட்டாளர்கள் மீது நிகழ்ச்சியின் இரண்டாம் நாள் லீனா திட்டமிட்ட வன்முறைகளை நிகழ்த்தினார்.  இந்த மரண வியாபாரி எங்களைப் பார்த்து நீங்கள் யார் கேள்வி கேட்பதற்கு என்கிறார். இன்று நீதி கேட்க குரலற்ற ஈழத்தமிழர்கள் மற்றும் தமிழக மீனவர்கள் தன்மீது வழக்குத் தொடுக்க இயலாத நிலையில் உள்ளனர் என்ற ஏளனம் இந்த விளம்பரப்பட முதலாளியிடம் பொங்கி வழிகிறது.

பூகோள, அரசியல், பொருளாதார, இன, மொழி அடிப்படையில் அனாதையாக்கப்பட்டு அழித்தொழிக்கப்படும் ஈழத் தமிழர்கள் மற்றும் தமிழக மீனவர்களை வைத்து ஆவணப்படம் எடுத்து விற்ற ரத்தப் பணத்தில் கொழிக்கும் லீனா மணிமேகலை அந்த மக்களைப் பொருட்படுத்தி படத்தைப் போட்டு காண்பித்து அனுமதி பெற வேண்டிய தேவை தனக்கு இல்லை என ஆணவத்துடன் கூவுகிறார்.  எழுத்தாக இருந்தாலும் படமாக இருந்தாலும் ஆவணப்படுத்தலின் போது  பங்களிப்பவர்களின் அனுமதி பெற வேண்டும் என்பது அடிப்படை அறம் மற்றும் நியதி. அவை திரிக்கப்பட்டு பயன்படுத்துவது அதைவிட கடுமையான மனித உரிமை மீறல்.  உலக கார்ப்பரேட் முதலாளிகளின் கைகூலிகளும் உளவு நிறுவனங்களும் மட்டும்தான் இந்த விதியை மீறிச் செயல்பட்டு வருகின்றன.

 இனி இது போன்ற அரசியல் அதிகாரச் சதித்திட்டம் கொண்ட கைக்கூலிகள் கேமராவுடன் வரும்போது  எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதைத்தான் இதன் மூலம் அனைவருக்கும் தெரிவிக்க வேண்டியுள்ளது.

– மாலதி மைத்ரி

கண்டனத்தில் உங்கள் குரலையும் பதிவு செய்யுங்கள்

லீனா மணிமேகலை ஈழத்தமிழர் தோழமைக் குரல், ஈழத்தமிழர், மீனவச் சமூகம், மற்றும் பழங்குடியினரின் போராட்டங்களை அவமதிப்பதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். அதனை வெளிப்படுத்தி அவரது உண்மை உருவத்தையும் ஆதிக்க அரசியல் குணத்தையும் புலப்படுத்தியதற்காக பெண்ணுரிமைப் போராட்டத்தை தன் வாழ்வாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஒரு படைப்பாளியை மனநோய் மருத்துவரிடம் அழைத்துச் செல்வேன் எனத் திமிர்த்தனத்துடன் கூச்சலிடுவதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

 

சுகிர்தராணி

பொன். சந்திரன், PUCL

தனலஷ்மி, PUCL

இன்பா சுப்ரமணியன்

ஒவியர் காந்திராஜன்

லஷ்மி சரவணக்குமார்

பிரேம்

மகேஷ், அகில இந்திய பாரம்பரிய மீனவர் சங்கம்

கு. பாரதி , புரட்சிக் கயல்

மாறன்

பாஸ்கர்

வழக்கறிஞர் லிங்கன்

விமலா, புதுச்சேரி மீனவப் பெண்கள் இயக்கம்

பெரியாண்டி

பொம்மி

மஞ்சுளா

காஞ்சனா

அன்பு தவமணி

சுரேஷ்

ராமசாமி

செல்வக்குமார பாண்டி

பா. ஜெயபிரகாசம்

இன்குலாப்

கோவை. ஞானி

பேரா. சரஸ்வதி

தாமரை

தமிழ்நதி

பாமா

பிரபஞ்சன்

ஜமாலன்

தமிழவன்

பரமேஸ்வரி

பஞ்சாங்கம்

வறீதையா கான்ஸ்தந்தீன்

வழக்கறிஞர் ரஜினி

அ. யேசுராசா

தீபச்செல்வன்

அ.இரவி

பரணி கிருஷ்ணரஜனி

ஜெரோம்

கல்பனா

சக்கேஷ் சந்தியா

லேனா குமார் ,  யாதுமாகி பதிப்பகம்

திருப்பூர் குணா , பொன்னுலகம் பதிப்பகம்

எழுத்தாளர் வளர்மதி

கீற்று நந்தன், கீற்று இணையதளம்

இரா. முருகவேள் , எழுத்தாளர், ஆவணப்பட இயக்குனர்

ம. புஷ்பராயன், அணு சக்திக்கெதிரான மக்கள் இயக்கம்

கண. குறிஞ்சி , மக்கள் நலவாழ்வு இயக்கம்.

பொதினி வளவன், இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை, விடுதலை சிறுத்தைகள் கட்சி

 

 

 

பின்னிணைப்பு

(தோழர் பொன். சந்திரன்,  தனலஷ்மியின் கண்டன கருத்துரை)

லீனா மணிமேகலை அவர்கள் ஒரு தோழர் எழுப்பும் கேள்விகளையும் விளக்கங்களையும் ஒரு மன நோயாளியின் கூற்று என்னும் வகையில் மாலதியின் விமர்சனங்களை எதிர்கொள்வது வன்மையாக கண்டிக்கத் தக்கது.

2009 ஆண்டு மார்ச் மாதம் ஈழத் தமிழர் தோழமைக் குரல் என்னும் பதாகையின் கீழ் படைப்பாளிகளும் மாணவர்களும் மீனவ நண்பர்களும் திரு நங்கைகளும் மனித உரிமை ஆர்வலர்களும் ஒன்றிணைந்து தில்லியில் நடத்திய போராட்டங்களையும் பரப்புரைகளையும் எண்ணி மகிழ்ந்து பெருமையடைகிறேன்.  அந்தப் பயணம் எங்களைப் பொறுத்த வரையில் பல புதிய அரிய அனுபவங்களை தந்தது என்றால் மிகையில்லை.  இதைப்பற்றி மற்றொரு சந்தர்ப்பத்தில் விரிவாக பகிர்ந்து கொள்கின்றேன்.

பயணம் தொடுங்குவதற்கு முன்பே இந்த முயற்சி மீது பல விமர்சனங்கள், குறிப்பாக லீனா மணிமேகலை மீது கூறப்பட்டன.  இருப்பினும் படைப்பாளிகளுடன் கரம் இணைத்துக் கொண்டு மனித உரிமை ஆர்வலர்கள் இதில் அவசியம் பங்கு கொள்ள வேண்டுமென நண்பர் சுந்தர் காளி போன்றவர்கள் வற்புறுத்திய காரணத்தாலும் ஈழத் தமிழர் மீது தொடுக்கப்பட்டிருந்த போர் நிறுத்தப்படுவதற்கு நம்மால் இயன்ற பங்களிப்பை செய்ய வேண்டும் குறிப்பாக தில்லியில் இதற்கான அழுத்தத்தை தருவதற்கான நடவடிக்கையில் பங்கு பெற வேண்டும் என்ற நோக்கத்திலும் தில்லி பரப்புரையில் பங்கு கொண்டோம்.  அவரவர்கள் இயன்றவரை இதற்கான செலவிற்கான பங்களிப்பையும் செய்தோம். பங்கு பெற்ற மாணவர்களின் செலவை ஈடுசெய்ய சிலரிடமிருந்து நன்கொடை பெறப்பட்டதை அறிவித்தார்கள்.  பயணத்தின் இறுதியில் வரவு செலவு கணக்கையும் தீர்த்துக் கொண்டோம் என்றுதான் நினைக்கிறேன்.

பரப்புரைப் பயணத்திற்குப் பிறகு பங்குபெற்றவர்கள் சிலர் மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள் ஆரோக்கியமற்ற நிலையில் இருந்ததை அவ்வப்போது நாங்கள் உணர்ந்தபோதும் விமர்சனங்களின் ஆழத்திற்கு சென்று அலசும் அவகாசமும் மன உவப்பும் இல்லாததிருந்ததால் அவற்றை நாங்கள் பொறுட்படுத்தவில்லை.

லீனா மணிமேகலையின் திரைப்பட முயற்சிகளில் ஈழச்சிக்கல் பற்றிய அவருடைய அணுகுமுறை விமர்சிக்கப்படுகிறது  ஆனால் அவருடைய படைப்புகளைப் பார்க்காமல் விமர்சிப்பது தவறு என்பதால் அதைப்பற்றி இங்கே எதுவும் குறிப்பிடவில்லை.

தில்லி பரப்புரையின் போது பதிவு செய்யப்பட்ட காட்சிகளை அவருடைய திரைப்படத்தில் லீனா பயன்படுத்தியிருப்பது உண்மையானால் அந்தச் செய்தியை அத்திரைப்படத்தில் வெளிப்படையாக பதிவு செய்து நன்றி தெரிவித்திருக்க வேண்டும். அந்தக் காட்சியை படமாக்கத்தான் தில்லி பரப்புரை மேற்கொள்ளப்பட்டது என்றால் என்னால் நம்ப முடியவில்லை.

மற்றபடி திரைத்துறையில் அவருடைய வணிக நோக்கத்தைப் பற்றியும் எனக்கு பரிச்சயமில்லாத செய்திகளைப் பற்றியும் கருத்துக்கூற முடியவில்லை.  ஆனால் இலக்கியத் துறையில் பயணிக்கும் சக தோழியர்களைப் பற்றி விமர்சனம் என்னும் பெயரில் தரமின்றி வெளியிடும் அவதூறுகள் தம்மையும் தாம் சார்ந்த உயரிய கொள்கைகளையும் சிறுமைப் படுத்தும் என்பது மட்டும் உறுதி.

ஒருவர் மீது ஒருவர் வைக்கக் கூடிய விமர்சனங்களை ஆக்கவகையில் எதிர்கொள்ளாமல் அவதூறுகளை அள்ளி வீசுவது வரவேற்கத்தக்கதல்ல.  லீனாவின் செயல் ஆதிக்க சாதி உணர்வோடு கார்பரேட் நிறுவனங்களுக்கு ஊழியம் செய்யும் நடவடிக்கை என்னும் மாலதியின் குற்றச்சாட்டு லீனாவை நிலைக் குலைய வைக்கலாம். ஆனால் அவற்றை ஆக்க வகையில் மறுப்பதற்குப் பதிலாக மாலதியை மனநோயாளி என்று வர்ணிப்பதை விமர்சன உலகம் ஏற்றுக் கொள்ள இயலாது.  லீனாவின் இந்த அணுகுமுறை கண்டிக்கத்தக்கது.

லீனாவும் மாலதியும் ஊடகங்கள் மூலமாக அல்லாமல் நேரடியாகப் பேசிக்கொண்டால் மேலும் ஆரோக்கியமாக பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன்.  “ஆளைப் பேசாதே அரசியல் பேசு” என்று ஒரு முதிய பெண் தொழிலாளித் தோழர் ஒருவர்  மார்க்சிய அறிஞர் எஸ்.என். நாகராசனிடம் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் கூறிய அறிவுரையை நினைத்துப் பார்க்கிறேன்.

இந்த உரையாடலில் மாலதி நாங்கள் உங்களோடு உறுதியாக நிற்கிறோம்.

அன்பு

பொன். சந்திரன் – தனலட்சுமி.

ஆண் வன்முறையின் அரசியல் மற்றும் பெண்மீதான வன்கொடுமை -மாலதி மைத்ரி

ஆண் வன்முறையின் அரசியல் மற்றும்

பெண்மீதான  வன்கொடுமை

(ஷோபா சக்திக்கு வாய்த்துவிட்ட இரண்டு வாய்ப்புகள்)

                                                                                                        மாலதி மைத்ரி

வல்லினம்.காம் கேள்வி-பதில் பகுதியில் நான் சிலருடைய எழுத்துக்களைப் படிப்பதில்லை என்று தெரிவித்திருந்தேன். அதற்கு என்ன காரணம் என்று கேட்கப்பட்ட பொழுது எனது நிலைப்பாட்டை சுருக்கமாகப் பதிவு செய்திருந்தேன்.

அதன் ஒரு பகுதி இவ்வாறு அமைந்திருந்தது.

“அ. மார்க்ஸ், ஷோபாசக்தி, யோ. கர்ணன் இவர்கள் மூன்று பேரும் அடிப்படையில் ஈழ விடுதலைக்கு எதிரானவர்கள்.  இலங்கையில் புலிகளால்தான் ஆயுதக் கலாச்சார வன்முறை உருவானதாக வரலாற்றைத் திரித்துக் கொண்டிருப்பவர்கள். புஷ்பராஜா, புஷ்பராணியின் நூல்களே இவர்களின் பொய்களுக்கு எதிராகச் சாட்சி சொல்லுகின்றன.  முள்ளிவாய்க்காலுக்குப் பின்னும் புலிகள் பாசிசம் என்று பேசும் காங்கிரஸ், சி.பி.எம், சுப்பிரமணியசாமி, சோ, என்.ராம் நிலைப்பாடுதான் இவர்களின் அரசியல் நிலைப்பாடு என்றால் இவர்களின் அரசியல் பிழைப்புவாத அரசியலாகத்தான் இருக்க முடியும். தமிழச்சி பிரச்சினையில் ஷோபாசக்தியின் புரட்சியாளர் வேடம் கலைந்துவிட்டது. யோ. கர்ணன் பிரபாகரனை விமர்ச்சிக்கிறேன் என்று அவரது மகள் மனைவியை அவமானப்படுத்தி எழுதியதை மன்னிக்க முடியாது. இவர்கள் பன்முகப் பார்வையற்று ஈழ விடுதலைப் போராட்டத்தைத் திரும்பத் திரும்ப புலிகளின் தவறுகளால் மட்டுமே நிகழ்ந்த வன்முறையாக எழுதி வருகிறார்கள்.”

இதற்கு எதிர்வினையாக ஷோபா சக்தி, “மாலதி மைத்ரியின் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் நான் கடுமையாக மறுக்கின்றேன். அவரது வார்த்தைகள் எவ்வித உண்மைகளும் அரசியல் அடிப்படையுமற்றவை மட்டுமல்லமால் அவர் தன்னெஞ்சறிய உரைக்கும் கள்ளச் சொற்களவை.” எனத் தொடங்கி நீண்ட ஒரு பதிலை பதிவு செய்திருந்தார்.

1.ஆண் வன்முறையின் அரசியல்

அவரது பதிலை முதலில் ஒரு தன்னிலை விளக்கமாகத்தான் வாசித்தேன். அவர் சொல்பவற்றில் உண்மையும் நேர்மையும் இருக்கும் என்றால் அதனை ஏற்றுக் கொண்டு வருத்தம் தெரிவிக்க எனக்கு தயக்கம் இல்லை. ஏனெனில் நான் தெரிவித்திருந்த கருத்துகள் எனது தனிப்பட்ட விருப்பு வெறுப்பு சார்ந்தவை அல்ல, இனவிடுதலை அரசியல், பெண்ணுரிமை அரசியல் என்ற இருதளங்களில் அமைந்த மிகமுக்கியமான கேள்விகளுடன் தொடர்புடையவை.

 இவை இரண்டிலும் ஒருவர் கொண்டுள்ள நிலைப்பாடும் அவை தொடர்பான சிக்கலின்போது அவர் மேற்கொள்ளும் செயல்பாடும், சொல்லாடல் முறையும் அவரின் தன்மை மற்றும் அரசியல் வடிவத்தை உறுதி செய்பவை. அந்த வகையில் தன் செயல்பாடுகள் மூலம் மட்டுமின்றி தன் வன்மையான பேச்சுமுறையாலும் ஷோபாசக்தி  மீண்டும் நான் சொன்னவற்றை உறுதி செய்திருக்கிறார்.

“எவ்வளவு எளிதாக அடிப்படையில் நான் ஈழவிடுதலைக்கு எதிரானவன் என அவர் தீர்ப்பிட்டுவிட்டார்!” என்று கேள்வி கேட்டு “தான் ஈழவிடுதலையை நேசிக்கும் ஒருவன்” என்று சொல்லப் போகிறார் என்று எதிர்பார்த்தால் “புலிகள் அமைப்பு  ஒழிந்தாலும் அவர்கள் புதைக்காமல் விதைத்து விட்டுப்போன பிற்போக்குக் கருத்தியலும் அவர்களது பாஸிசச் சிந்தனைகளும் எம்மிடையேயிருந்து வேரோடு அழியும்வரை நாங்கள் புலிகளின் பாஸிச அரசியலையும், அந்த அரசியலின் நீட்சியாக அவர்கள் எமது மக்களை வதைத்ததையும் ஓயாமல் சுட்டிக் காட்டக் கடமைப்பட்டவர்களாகயிருக்கின்றோம்.   ஈழத் தமிழ்ச் சமூகத்தில் மறுபடியும் புலிகளைப் போன்றதொரு பாஸிச சக்தி தலையெடுக்கவே கூடாது. இது எங்களுக்கு   உணர்வு சார்ந்த பிரச்சினை மட்டுமல்ல, எங்களது உயிர் சார்ந்த பிரச்சினை.” என்று வன்முறையை மறுக்கும் ஒருவர் சொல்ல முயல்வது போன்ற     வடிவத்தில் தமிழ் இன அடையாளம், தமிழீழ அரசியல் இரண்டையும் “பிற்போக்குக்   கருத்தியல், பாஸிசச் சிந்தனை” என்று   தீர்மானமாகச் சொல்லி அவை “வேரோடு அழியும்வரை” நாங்கள்  செயல்படுவோம் என்று அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்திருக்கிறார். வேரோடு அழித்தல் என்ற “சமாதான அமைதி அரசியலை” சிங்கள, மகிந்த இனவெறி அரசு செய்து முடித்து பெருமை கொண்டாடிக் கொண்டுள்ள நிலையில் பாசிசத்துக்கு எதிரானவர், ஜனநாயக-மனித உரிமைகளை மதிப்பவர் எனத் தன்னைச் சொல்லிக் கொள்ளும் ஒருவர் வைத்திருக்கும் திட்ட வரைவு இப்படி உள்ளது, “எமது மக்களிடையே சனநாயகக் கலாசாரம் மீண்டும் மலர்வதற்கு இந்தச் சிந்தனைகளை அழித்தொழிப்பது அடிப்படை நிபந்தனையாகிவிடுகிறது.”

 அழித்தொழிப்பது, வேரோடு அழித்தல், புலிகள் அமைப்பு ஒழிந்தது, மீண்டும் தலையெடுக்கவே கூடாது என்பவை அச்சுறுத்தும் அரசியல் வன்சொற்கள். குடிமைச் சமூகத்தின் தனிமனிதர்கள் இவற்றைப் பயன்படுத்துவதற்கும் களப்போராளி என்று சொல்லிக் கொள்ளும் ஒருவர் சொல்வதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. ஜனநாயகம் மீண்டும் மலர்வதற்கு சிந்தனைகளில் மாற்றம் தேவை என்று சொல்ல இயலாத ஒருவர், அழித்தொழிப்பது என்பதை முன்மொழிவார் எனில் அதன் பொருள் அந்தச் சிந்தனை உள்ள மக்களை அழித்தொழிப்பது என்பதுதான். “அவர்கள் புதைக்காமல் விதைத்துவிட்டுப்போன” என்று தெளிவாகச் சொல்லும் ஒருவர் மக்களிடம் அந்தக் கருத்து உள்ளது என்பதை பதிவு செய்துவிட்டு அதனை வேரோடு அழித்தல் என்பதன் மூலம் எதனைக் குறிப்பிடுகிறார் என்பது தெரிய வரும்பொழுது மிகுந்த அச்சமே ஏற்படுகிறது. “புலிகளின் கருத்தியல் என்பது எங்களுக்கு வெறுமனே கருத்தியல் மட்டுமல்ல. அந்தக் கருத்தியல் செயலாக மாறி எங்களது ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்று போட்டிருக்கின்றது. எங்களது மக்கள் மத்தியிலிருந்து சனநாயகக் கலாசாரத்தை முப்பது வருடங்கள் நீக்கி வைத்திருந்தது.” என்ற வாக்கியத்தில் உள்ள செயலாக மாறிய கருத்தியல் என்ற இடத்தை “வேரோடுஅழித்தல்” என்ற கருத்தியல் எடுத்துக் கொள்கிறது.

 “மக்கள்தான் புலிகள் புலிகள்தான் மக்கள்” எனக் கண்ணை மூடிக்கொண்டு வாயை மட்டும் அகலத் திறந்து கோஷம் போடுவதற்கு நானொன்றும் புலிகளின் புகழ் வெளிச்சத்தில் என்னை நிறுத்திக்கொள்ள முயலும் சொரணை கெட்ட எழுத்தாளன் கிடையாது.” என்று பதிவு செய்துள்ள இவர் கூறும் “விதைத்துவிட்டுப் போன கருத்தியல்” எது? மக்கள் மத்தியில் “புலிகளின் புகழ் வெளிச்சம்” எப்படி நிலவ முடிகிறது? கண்ணைத் திறந்து வைத்துக் கொண்டு சொல்லப்படும் திட்டமிடப்பட்ட  பொய்கள் தமிழ் இன அரசியலை மட்டுமல்ல தமிழ் மக்களின் வாழ்வுரிமைகளையே அழித்தொழிப்பதற்கான சதித்திட்டங்களாக மாறியுள்ளன.

இனப்படுகொலை மூலம் தமிழ் மக்களைக் கொன்றழித்த மகிந்த ராணுவம் “புலிகளும் மக்களும் ஒன்று” என்று கூறி அப்பெருங்கொடுமையைச் செய்து முடித்தது. மீந்துள்ள மக்களையும் அது அவ்வாறே அடையாளப்படுத்தி வருகிறது. இந்த அச்சுருத்தும் சூழலில் மக்கள் தங்கள் தமிழ் இன அரசியல் கோரிக்கையையும் விடுதலைப் புலிகள் முன்மொழிந்து சென்ற தமிழீழ அரசியலையும் கைவிட்டு விட்டதாகவும் சிங்கள இனத் தேசியத்தின் இறையாண்மையை ஏற்றுக் கொண்டதாகவும் ஒரு வெளித் தோற்றத்தை தற்காலிகமாக ஏற்படுத்தியிருக்க முடியும். ஆனால் நடந்தது வேறு விதமாக உள்ளது. மாகாண சபை தேர்தலில் (2013) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 38-க்கு 30 இடங்கள் பெறுவதற்கேற்ப  மக்கள் வாக்களித்துள்ளனர்.

 விடுதலைப் புலிகளை தமிழ்த் தேசியத்தின் பிரதிநிதிகளாக ஏற்றுக் கொண்டுள்ள இக்கூட்டணியை மக்கள் புறக்கணித்து மகிந்த கூலிப்படைக்கு வாக்களித்திருப்பார்களேயானால் மக்கள் புலிகள் இயக்க வரலாற்றை வெறுத்தொதுக்கிவிட்டதாக பொருள்பட்டிருக்கும். இந்த நிலையில் தமிழீழம் பற்றிய மக்கள் கருத்துக் கணிப்பு, பொதுவாக்கெடுப்பு நடந்தால் அதன் தீர்ப்பும் தமிழீழ ஆதரவாகவே அமையக்கூடும். புலிகள் பற்றி மக்கள் கொண்டுள்ள உணர்வு இருவகைப்பட்டுள்ளது. புலிகள் தோல்வியடைந்தது பற்றிய கோபம், தங்களைக் காக்க இயலாத நிலையை அடைந்ததுடன் நிராதரவாக விட்டுச் சென்றதன் ஏமாற்றம், வலி இரண்டும் இணைந்த அவலம் நிறைந்த நினைவு. இவை வரலாற்று நினைவாக மீந்திருக்கும், வேரோடு அழிக்கவோ, விதைகூட இல்லாமல் அழிக்கப்படவோ இயலாத ஒன்று. இந்த நிலையை “புலிகளின் புகழ் வெளிச்சத்தில் தங்களை நிறுத்திக்கொள்ள முயலும் சொரணை கெட்ட மக்கள்” என்று விளக்கம் தரக்கூடியவர்கள் “மக்கள் மத்தியிலிருந்து சனநாயகக் கலாசாரத்தை” இன்னும் முப்பது வருடங்கள் நீக்கி வைத்திருக்கவே வழிசெய்கிறார்கள்.

ஷோபா சக்தி தன்னை ஜனநாயக கலாச்சாரவாதி, பாசிசத்திற்கு எதிரானவர், வன்முறையை ஏற்காத ஒரு எழுத்தாளர் என்று அடையாளப்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறார் என்பதை கவனத்தில் கொண்டுதான்  இவற்றை நான் தொடக்க நிலையில் குறிப்பிட்டிருக்கிறேன். இனி அவருடைய உண்மையான அடையாளம் என்ன என்பதை பார்க்கலாம்.

“இந்த எதிர்வினையை, எனது வழமைக்கு மாறாக மிகவும் மென்மையான தொனியிலேயே எழுதியிருக்கின்றேன்.” என்பது அவருடைய எச்சரிக்கை.  அவரது வழமை என்ன? வழமைக்கு மாறான  மிகவும் மென்மையான தொனி எது? என்பவை அழுத்தமாகப் பதியவைக்கப்பட்டுள்ளன.  இதில் தெளிவாக வெளிப்படும் ஆண் வன்முறையின் அரசியல் மிரட்டக்கூடிய ஒன்று.

 பாசிசத்தை எதிர்ப்பதுதான் தன் வாழ்க்கைப் பணி என்று சொல்லவரும் ஒருவருடைய வழமை இப்படிப் பதிவாகிறது, “நான் நான்கு வருடங்களிற்கு முன்பாக முள்ளிவாய்க்கால் பெற்றெடுத்த ‘கண்ணீர்’ போராளியல்ல, ‘சோசலிஸ தமிழீழம்’ என்ற புலிகளின் அழைப்பைக் கேட்டு முப்பது வருடங்களிற்கு முன்பாக அவர்களோடு இணைந்த களப்போராளி.”

 கண்ணீரும் துயரமும் அரசியலுக்கு உதவாதவை, போராளியாக அதுவும் களப்போராளியாக இருப்பவர்கள் (இருந்தவர்கள்) மட்டும்தான் அரசியல்பேச உரிமை உடையவர்கள் என்று மிகவும் மென்மையான தொனியில் இவர் சொல்லித் தருகிறார். சில ஆண்டுகள் களத்தில் இருந்த இவருக்கு உள்ள இந்த உரிமை வாழ்நாள் முழுதும் களத்தில் இருந்து மடிந்தவர்களுக்கு இல்லாமல் போவது எப்படி? இவர் தன்னை வெளியேற்றிக் கொண்டு தனது புதிய அரசியலைத் தொடங்க எந்த வகை பொதுமன்னிப்பு அடிப்படையாக இருக்கிறதோ, அதே அறத்தின் அடிப்படையில்தான் புலிகளுக்கும் அவர்களின் தளமாக இருந்த மக்களுக்கும் கால அவகாசம் தரப்பட்டிருக்க வேண்டும். இதனைத் தர மறுத்த கொடிய அரசபயங்கரவாதம்தான் புலிகளின் பாசிசம் பற்றி மாய்ந்து மாய்ந்து வகுப்பு எடுத்துக் கொண்டிருக்கிறது. தங்களை முன்னாள் களப்போராளிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள் தன்னார்வத்துடன் இதற்குச் சாட்சிகளாக வந்து சொல்பவை எல்லாம் யாராலும் கேள்வி கேட்க முடியாத உண்மைகளாகி விடுக்கூடும். கண்ணீர்ப் போராளிகளுக்கும் மக்களுக்கும் வரலாற்றில் இடமில்லை என்பதை யார்தான் மறுக்க முடியும்?

புலிகள் மக்களுக்கு எதிரான அடக்கு முறைகளில் ஈடுபட்டார்கள் என்று சந்தேகம் இன்றி உறுதிபடக் கூறும் ஷோபா சக்தி போன்றவர்கள் அவற்றை விசாரிக்வோ, அவர்கள் தரப்பை விசாரித்து அறியவோ கால அவகாசம் தராமல் தீர்ப்பை வழங்கி இயக்கத்தினரையும் மக்களையும் இல்லாமலாக்கியதை எந்த வகை நீதியில் சேர்க்கிறார்கள்?  அதுவும் இனப்படுகொலையில் ஈடுபட்ட அரசாங்கமே விசாரணை நடத்தி, தீர்ப்பை எழுதி, மேல்முறையீட்டுக்கான காலஅவகாசம் தராமல் கொலை தண்டனையையும் நிறைவேற்றி விட்டு, “தலைமையின் முட்டாள்தனமான நம்பிக்கைகளிற்காக புலிகள் ஈழமக்களைப் பலியிட ஒருபோதும் தயங்கியதில்லை” அதனால் “இனிப் பலியிட யாரும் இல்லாத அளவிற்கு அனைவரையும் வேரோடு அழித்து விட்டோம்” என்று சொல்லும்போது கொண்டாடி மகிழ எந்த அறம் இடமளிக்கிறது?

இல்லாமல் போனவர்கள் வன்முறையாளர் என்று ஓயாமல் பேசுவதன் மூலம் வெற்றியடைந்த படுகொலையாளர்கள் சாதனையாளர்களாக, வரலாற்று நாயகர்களாக மாற்றப்படுகிறார்கள். இதனையே “முள்ளிவாய்க்காலுக்குப் பின்னும் புலிகள் பாசிசம் என்று பேசுவதில் உள்ள அரசியல்” என்கிறேன். பாசிசத்தை அழித்து மக்களுக்கு விடுதலை அளித்த மகிந்த ராணுவத்தை தமிழர்கள் கைதொழ வேண்டும் என்பதும் அதில் அடங்கியுள்ளது.

  புலிகள் மட்டுமல்ல ஈழ விடுதலை இயக்கம் என்று செயல்பட்ட அனைத்து இயக்கங்களும் வன்முறை சார்ந்த போர் வழியிலேயே செயல்பட்டுள்ளனர். அரச பங்கரவாதம் இவற்றைப் பெருக்க பல சதிகளைத் தீட்டி செயல்படுத்தியுள்ளது. உலகின் எந்தப் போராளி இயக்கத்தின் நடவடிக்கைகளும் வெளிப்படையாகவோ முழுமையாகவோ பதிவானது இல்லை. விடுதலைப் புலிகள்மீது மட்டுமின்றி ஈழவிடுதலை பற்றிப் பேசிய அனைத்து இயக்கங்கள் பற்றியும் குற்றச்சாட்டுகள் உள்ளன.

பாதிக்கப்பட்டவர்களும் பார்வையாளர்களும் நிகழ்வுகளைப் பற்றி பலவாறு பதிவு செய்துள்ளனர்.

“இந்தியப் படையினரைவிடவும் சுதாகர் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப். இனர் அதிக அட்டகாசங்களை யாழ்ப்பாணத்தில் நிகழ்த்தியிருந்தார்கள். கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவு என்று இவர்கள் எந்த விதத்திலும் இந்தியப் படையினருக்கு சளைக்காமல் கோரதாண்டவம் ஆடியிருந்தார்கள்.”

“ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் மாணிப்பாய் பகுதிக்கு இராணுவப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தவர் நிசாம். அவரின் சொந்தப் பெயர் பிரபா. இணுவிலைச் சேர்ந்தவர்.  சித்திரவதைக்கும் கொலைகளுக்கும் பேர்போனவர். விடுதலைப் புலிகளையும் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களையும் விடுதலைப் புலிகளின் குடும்ப உறுப்பினர்களையும் கொலைசெய்வதில் இவர் மக்கள் மத்தியில் மிகவும் அச்சத்துடன் நோக்கப்படும் ஒரு மனிதராகவே இருந்தார். அதுவும் கலை நயத்துடன் விதம் விதமாக மிகவும் கொடூரமாகக் கொலைகள் செய்வதில் மிகவும் வல்லவராக இவர் நோக்கப்பட்டு வந்தார். இந்தியப் படையினரின் காலத்தில் மட்டும் இவர் 87 விடுதலைப் புலி ஆதரவாளர்களைக் கொலை செய்ததாகப் பெருமைப்பட்டுக்கொள்வார். மண்வெட்டியால் தலையை வெட்டிக் கொலை செய்வதில் இவர் மிகவும் பிரபல்யமானவர். வெட்டப்பட்ட தலை தனியாகக் கிடந்து துடிப்பதையும் பார்த்து ரசிப்பாராம். வெட்டப்பட்ட தலை தனியாகக் கிடந்து துடிப்பதை இவரது கோஷ்டியில் இருப்பவர்கள் மற்றய ஈ.பி.ஆர்.எல்.எப். இனரிடம் விபரிப்பதில் அலாதி குஷி அடைவார்களாம். இவரது கொலைகள் பற்றிக் குறிப்பிடும் ஊடகச் செய்திகள், இவரால் கொலை செய்யப்பட்ட 87 நபர்களுள் சுன்னாகத்தைச் சேர்ந்த கஜன் என்பவர் மாத்திரமே விடுதலைப் புலி உறுப்பினர் என்றும், மற்றய 86 பேரும் அப்பாவிகள் என்றே குறிப்பிடுகின்றன. தனது சகோதரியின் கணவனையும் புலிகள் இயக்க ஆதரவாளர் என்று குற்றம் சுமத்தி இவர் சுட்டுக்கொன்றது பற்றி இவரது தோழர்கள் பெருமைப் பட்டுக்கொள்வார்கள்.” (ஈழத் தமிழருக்கு எதிராக தமிழ் அமைப்புக்கள் மேற்கொண்ட அடாவடித்தனங்கள்: அவலங்களின் அத்தியாயங்கள்- 32, தமிழ்வின்) –நிராஜ் டேவிட்

“எண்பதுகளின் இறுதியில் இந்திய அமைதிப்படை இலங்கையில் இருந்தது. இந்தியாவில் நம்பிக்கைக்குரிய சில ஆட்களை வைத்துவிட்டு இலங்கையில் இருந்து முகுந்தன் (உமா மகேஷ்வரன்)  இயங்கி வந்தார். 1985-க்குப் பிறகு அவர் இலங்கை பாதுகாப்பு அமைச்சர் அதுலத் முதலியோடு நெருக்கமாக இருந்து இந்தியாவுக்கு எதிரான சில வேலைகளைச் செய்து வந்தார். முகுந்தன் ஜே.வி.பி-யோடும் சந்திரிகாவின் கணவர் விஜய குமாரதுங்காவோடும் நெருக்கமாக இருந்தார். விஜய குமாரதுங்காவின் பாதுகாவலர்கள் பிளாட் அமைப்பைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். ஜேவிபியின் ஆட்கள் விஜய குமாரதுங்காவின் ஆட்கள் சிலரைத் தாக்கியபோது அந்த தாக்குதல்களில் பிளாட் அமைப்பைச் சேர்ந்தவர்களும்கூட பங்கு கொண்டிருந்தனர். இது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. முகுந்தன் இது தன்னுட்டைய அரசியல் தந்திரோபாயம் என்று கூறுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.”

“முகுந்தன் மாலத்தீவில் பிளாட் ஆட்கள் வெற்றி பெற்றுவிட்டதாகச் சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் இந்த தாக்குதலுக்குப் பிறகு பிளாட் அமைப்பின் மூத்த உறுப்பினர்களுக்கு சந்தேகம் வந்தது. இயக்கமே பின்னர் முகுந்தனைக் கொலை செய்வதாக முடிவெடுத்த்து. 1989 ஜூலை 16ந் தேதி வெள்ளவத்தை என்ற இடத்தில் உமா மகேஸ்வரன் தன்னுடைய பாதுகாவலர் ராபின் என்பவரால் கொல்லப்பட்டார்.” வெற்றிச்செல்வன்,  பிளாட் அமைப்பின் முன்னாள் டெல்லி பிரதிநிதி.   (பிப்ரவரி 18, 2012. சன்டே இந்தியன் பேட்டியில்)

“என்னை மீட்டவர்கள் ‘பிளாட்’ அமைப்பினர் என்பதால், நான் அவர்களுடன் வேலை செய்தேன். சந்ததியாரும் சென்னையில்தான் இருந்தார். நான் தங்கியிருந்த இடத்துக்கு அடிக்கடி வந்து போவார். ஒரு கட்டத்தில் ‘பிளாட்’ தலைவர் உமா மகேஸ்வரனோடு சந்ததியாரும் நானும் முரண்பட்டோம். அமைப்பிலிருந்து விலகி  சுதந்திரமாக இருக்க விரும்புவதாகக்  கூறி வெளியேறினேன். திடீரென்று ஒருநாள் சந்ததியார் காணாமல்  போனார்.  அவருக்கு என்ன நடந்தது என்று இன்று வரை எனக்குத் தெரியாது.  ஆனால், ஊகிக்க முடிந்தது!”

“தாயக விடுதலைக்காக எந்த அமைப்பை நம்பி இளைஞர்கள் வந்தார்களோ, அந்த அமைப்புகளின் தலைமைகளாலேயே இளைஞர்கள் வேட்டையாடப்பட்டார்கள். இதில் அருவருப்படைந்து அன்றைக்கு ஒதுங்கியவன்தான் நான். அதன் பின்னர் எந்த ஓர் அமைப்பையும் நான் ஆதரிக்கவில்லை. அதே நேரம் சிங்களப் பேரினவாதிகளுக்கு எதிராகவும், ஈழ மக்களின் விடுதலைக்காகவும் தொடர்ந்து எழுதியும் பேசியும் வந்தேன்!”-  டேவிட் (Tamil Eelam Freedom Struggle உள்ளிட்ட சில நூல்களை ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதியுள்ளார்.) ஆனந்த விகடன் 4 செப்டம்பர், 2013.

ஈழ விடுதலைக்காக போராடுவதாக சொன்ன ஈ.பி.ஆர்.எல்.எப், பிளாட், டொலோ, ஈ.என்.டி.பி. தற்போதைய கருணாவின் இயக்கம் உட்பட அனைத்து இயக்கங்களும் ஆயுத்ததால்தான் பேசிக் கொண்டார்கள். இதில் புலிகள் மட்டும் ஹிட்லராகவும் பிற போராளிக் குழுக்கள் மகாத்மாக்களாகவும் எப்போது எந்த கொள்கை அடிப்படையில் மாறினார்கள். புலிகளின் கொலைப்பட்டியலை மட்டுமே எப்போதும் கைவசத்தில் வைத்திருப்பவர்கள், பிற இயக்கங்களின் கொலை பட்டியலுக்கு எப்படி  பாவமன்னிப்பு வழங்கினார்கள்?

புஷ்பராஜாவும் புஷ்பராணியும் புலிகளின் கொலைகளை அதிகமாகப் பேசித் தங்கள் இயக்கம் மற்றும் பிற இயக்கங்களின் கொலைகளை அதற்குக் கீழே அடுக்கி பிற இயக்கங்களின் கொலைகளை பிரச்சனையாகப் பேசாமல் தவிர்க்க முடிந்தது. ஆனால் இன்னமும் புலிகளின் யுத்தக் குற்றங்களைப் பட்டியலிட்டு அடுக்கி ராஜபக்சேவின் இனப்படுகொலையை சிறியதாக்கி காட்டும் முனைப்பில் உள்ளவர்களின் அரசியல் என்ன?

 இந்திய அமைதிப்படை ஈழத்தில் தமிழர்களைக் கொன்று குவித்த பிறகும் புஸ்பராஜா இந்திய அரசின் விருந்தினராக இந்திய ராணுவ விமானத்தில் ராவுடன் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் பறந்து பேச்சுவார்த்தை நடத்தியதையோ,  ஈ.பி.ஆர்.எல்.எப் தேர்தல் அலுவலகத்துக்கு பின்புறம் இயங்கிய வதைமுகாம்களின் வன்முறைகள் பற்றியோ இவர்கள் கேள்வி கேட்டதில்லை.  புஷ்பராஜா நூலில் ஈ.பி.எல்.ஆர்.எபின் வன்முறைகளுக்கு மன்னிப்பு கேட்டுவிட்டார் என்பதால் நாம் கைக்குலுக்கிக் கொள்ளலாம்.  ஆனால் முஸ்லிம்களின் மீதான வன்முறைகளுக்கு பலமுறை மன்னிப்பு கேட்ட பிறகும்  புலிகளை பயங்கரவாதிகள் என ஒதுக்கி வைத்து அழித்தொழிக்க வேண்டும்.

“துணுக்காய் வதைமுகாம், கந்தன் கருணைப் படுகொலை, யாழ்ப்பாணக் கட்டாய இடப்பெயர்வு, முஸ்லீம் மக்களைத் துரத்தியது, குழந்தைகளைத் துப்பாக்கி முனையில் இயக்கத்தில் இணைத்தது, முள்ளிவாய்க்காலில் மூன்று இலட்சம் மனிதக் கேடயங்கள் என்பவை எல்லாம் ஒன்றும் கதையல்ல, புலிகள் வேறு மக்கள் வேறு என்பதற்கான துயரமான ஆனால் வலுவான வரலாற்றுச் சான்றுகள் இவை.” என ஷோபா சக்தி குறிப்பிட்டிருக்கும் இந்தத் துயரச் சான்றுகளில் மற்றொரு பகுதியை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். புலிகளின் அனைத்து வெற்றிக்கும் நானும் எனது படையும்தான் காரணம் என்று பெருமையுடன் பதிவு செய்திருக்கும் கருணா அம்மான் இந்த தாக்குதல்கள், வெளியேற்றங்களில் முதன்மைப் பங்காற்றியதாகத் தகவல்கள் உள்ளன. அத்துடன் “முள்ளிவாய்க்காலில் மூன்று இலட்சம் மனிதக் கேடயங்கள்” இருந்தபோது ராணுவத்திற்கு வரைபடங்களை உருவாக்கித் தந்ததில் இன்றைய அமைச்சருக்கு முக்கிய பங்கிருந்தது என்பதும் பதிவான செய்திகள். இவர்கள் மன்னிக்கப்பட உரியவர்கள் எனில் சிலர் மட்டும் வேரோடு அழிக்கப்பட உகந்தவர்கள் எனத் தீர்ப்பு வழங்க ஷோபா சக்திக்கு எந்த மனிதவுரிமை அரசியல் சொல்லிக் கொடுத்தது?

எனக்கும் புலிகள் மற்றும் பிற போராட்டக் குழுக்கள் மீது விமர்சனங்கள் இருக்கின்றன. புலிகள் அமைப்பில் உள்ள குழந்தை போராளிகள் மட்டுமல்ல உலகெங்கிலும் உள்ள விடுதலை போராட்டக் குழுக்களிலிருந்தும் குழந்தைகள் மீட்கப்பட்டு சுந்திரமான இயல்பான வாழ்க்கைக்கு திரும்ப வேண்டுமென்பது எனது கோரிக்கை. சென்ற ஆண்டில் வடகிழக்கு மாநில போரட்டக்குழு உறுப்பினர்களுடன் பேசும்போதும் அவர்களிடம் முதலில் குழந்தை போராளி குழுவைக் கலையுங்கள் என்று கோரிக்கை வைத்தேன். “குழந்தைப் போராளிகள் விரும்பியே படிக்கப் போகாமல் போராளிகளாக சேர வருகிறார்கள்” என்று நியாமற்ற வாதத்தை அவர்கள் முன்வைத்தார்கள். எனக்கு அதில் உடன்பாடில்லை. ஆனாலும் “இவர்கள் பாஸிட்டுகள், தனிநாடு கேட்க உரிமையில்லாதவர்கள். அந்த மாநில மக்கள் இந்தியாவின் காலடியில்தான் கிடக்க வேண்டும்”  என்று சொல்ல நியாயம் இருப்பதாகத் தெரியவில்லை. பாலஸ்தீன விடுதலை இயக்கமும் ஹமாசும் தீவிர வலதுசாரித்தனம் இல்லாத, குழந்தைப் போராளிகளைக் கொண்டிருக்காத சோஷலிச போராட்டக் குழுக்களா? உலகெங்கிலும் தற்போது உள்ள 90 சதவீத விடுதலைப் போராட்டக் குழுக்களும் வலதுசாரி கருத்தியலுடைய, இனக்குழு மற்றும் மத அடையாளம் கொண்ட குழுக்களாகவே உள்ளன. அதனால் அவர்கள் வல்லரசுகளின் கீழும் இனவெறி அரசுகளின் கீழும் அடிமையாகவே கிடக்கவேண்டும் என்றும் அவர்களை வேரோடு அழிக்க வேண்டும் என்று கூறுவதுதான் ஜனநாயக அறமா?

இந்தப் பின்னணியில்தான் ஷோபாசக்தி ஈழவிடுதலைக்கு எதிரானவர் என்ற எனது கருத்து  உறுதியாகிறது.  புலிகள் அழிந்த பின்னும் புலிகளின் பாசிசம் பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருப்பதன் மூலம் மாபெரும் இனப்படுகொலையாளர்களின் குற்றங்கள், கொடூரங்கள் பொதுவெளியில் பேசப்படாமல் மறைக்கும் அரசியல் தந்திரம் முன்னெடுக்கப்படுகிறது.  இலங்கை அரசின் மீது சர்வதேச சமூகம் சுதந்திரமான விசாரணையை மேற்கொண்டு ராஜபக்சே தண்டிக்கப்பட வேண்டுமென்றும், தமிழ் ஈழத்திற்கான பொதுவாக்கெடுப்பு சர்வதேச கண்காணிப்புக் குழுவின்முன் நடத்தப்பட வேண்டுமென்றும் இதுவரை ஷோபா சக்தி போன்றவர்கள் பேசியதில்லை.

2. பெண் மீதான  வன்கொடுமை

 “தமிழச்சி பிரச்சினையில் ஷோபாசக்தியின் புரட்சியாளர் வேடம் கலைந்துவிட்டது” என்று நான் குறிப்பிட்டது தமிழச்சி பற்றி வலைதளங்களில் ஷோபா சக்தி பரவவிட்ட வன்கொடுமை கொண்ட வார்த்தைகளையும் பேச்சுக்களையும் முன் வைத்தது. தற்போது தமிழச்சியின் பதிவுகளைப் (வதந்திகளை) பிரித்து எடுத்து தீவிரமாக்கி எனக்கெதிராக மறுபதிவு செய்து என்மீதும் தமிழச்சி மீதும் மீண்டும் ஒரு வன்கொடுமையை செய்திருப்பதன் மூலம் தனது ஆண் திமிரை, தடித்தனத்தை தயக்கமின்றி இவர் காட்டிக் கொண்டிருக்கிறார்.  இவை நான் சொன்னவை அல்ல ஒரு பெண்ணே சொன்னவை. அவர் உங்களையும் உங்கள் நண்பர்களைப் பற்றியுமே இப்படி, அப்படிப் பேசியவர் அதனால் அவர் மீது நான் நடத்திய சொல் வன்முறைகள் நியாயமானவை என இவர் சொல்ல வருவதும், உங்களைப் பற்றிக்கூட என்னால் இதுபோல வதந்திகளைப் பரப்பமுடியாதா என்று எச்சரிக்க முயல்வதும் இதன் உள்ளான பகுதிகள். பெண்கள் மீதான பலவித வன்கொடுமைகளை எதிர்த்த செயல்பாட்டில் இணைந்து தொடர்ந்து இயங்கிவரும் எனக்கு திமிர்கொண்ட சில போலீஸ்காரர்கள் பாதிக்கப்பட்ட பெண்களிடம் நடந்து கொள்வதையும் பேசுவதையும் இது நினைவுபடுத்துகிறது.

 ஒரு பெண் இப்படி உங்களைப் பற்றி சொன்னார் எனச் சில வார்த்தைகளை ஒரு ஆண் சொல்லிக் காட்டுவது இழிந்த திமிர் கொண்ட ஆண் வன்முறை. ஒரு பெண்ணைப் பற்றி அவருடைய அனுமதியின்றி  தகவல்களை வெளியிடுவதை  தண்டனைக்குரிய குற்றமாக இன்று இந்தியப் பெண்கள் பாதுகாப்புச் சட்டம்கூட வரையறுத்துள்ளது. ஆண் திமிர் கொண்ட வன்முறையை பெருமையாகப் பதிவு செய்துள்ள இவர் இதனையும் தனது வழமைக்கு மாறாக மென்மையாகவே செய்திருக்கிறேன் என்று விளக்கம் தரக்கூடும். ஆண் பெருமைகொண்ட ஒருவரைப்  பொறுத்தவரை களப்போராளியாக இருப்பது, பெண்கள் மீதான வன்கொடுமைகள், வார்த்தைக் கொடுமைகள் இழைப்பது எல்லாமே சாகசக் கதைகளாக மாறிவிடும்போது, பெண்கள் மட்டும் கண்ணீர் போராளிகளாக இருந்துவிட நேர்வது வரலாற்றுக் கொடுமைதான்.

 

காந்தி: துவக்கமுறு தோல்வியின் பாதை- ஜனகப்பிரியா

காந்தி: துவக்கமுறு தோல்வியின் பாதை

ஜனகப்பிரியா

பிரேமின்காந்தியைக் கடந்த காந்தியம் ஒரு பின்நவீனத்துவ வாசிப்புநூல் பற்றிய கருத்துரை

(காந்தியைக்  கடந்த  காந்தியம்  ஒரு  பின்நவீனத்துவ  வாசிப்பு    பற்றிய    நூலாய்வரங்கம் 7-12-2013 சனிக்கிழமை மதுரையில் நடந்தது. ஒருநாள் நிகழ்ச்சியாக அமைந்திருந்த இக்கருத்தரங்கை மாற்றுப்பண்பாட்டுச் சிந்தனைக் களம் ஏற்பாடு செய்திருந்த்து. நண்பர் பெரியசாமிராஜா நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்புகளைச் செய்திருந்தார்.  அந்நிகழ்ச்சியல் வாசிக்கப்பட்ட கட்டுரை)

1.

        இருபதாம் நூற்றாண்டின் ஆதிக்கப்பரப்பிற்கும் நவீன அதிகார அடர்த்திக்குமான நிகழ் மோதல்கள் அழித்தொழிப்புகள் போன்றவையே பெயர் மாறும் அரசியலாக அரங்கேறின. சமூகத்தின் மிகக்குறுகிய பகுதியினருக்கு ஏற்றம்தரும் திட்டங்கள் போலிஸ், இராணுவம் எல்லோருக்குமானது என்ற பாவனையோடு கூடிய நீதியமைப்புகள் போன்றவற்றோடு ஜனநாயகம், சமத்துவம், விடுதலை போன்ற கருத்தியல்களும் வளர்கின்றன. நவீன மனிதச் சிந்தனை அமைப்பும் அறிவியல் தொழில்நுட்பப் பெருக்கமும் கொள்கிற உறவின் விளைவாக உற்பத்திக் கருவிகளை மேலும் தம்வயப்படுத்திக்கொள்கிற மூலதனத்திரட்சியும் மூளை மற்றும் உடல்சார்ந்த ஆற்றல்கள் தாமே முன்வந்து மூலதனம் வரைகிற சட்டகங்களிலுள்ள முன்நிபந்தனையற்றுத் தம்மைப் பொருத்திக்கொள்வதும் தொடர்கிற காலவெளிப்பரவல்.

        உற்பத்திப்பெருக்கத்தின் இணைவிளைவுகளான சந்தைப்படுத்துதலும் அதுசார்ந்த விளம்பர உத்திகளும் உருவாக்கிய நுகர்வுப்பண்பாட்டு வெளியை முற்றிலுமாகத் தம்வயப்படுத்துதலுக்கான முயற்சிகளில் உற்பத்தி ஆற்றல்களுக்கு ஏற்படும் இயலாமையினால் விளைகிற சோர்வினையும் மனஉளைச்சலையும் மார்க்ஸ் அந்நியமாதல் என்றழைத்தார். இந்த அந்நியத்தன்மையானது மனித விடுதலைக் கருத்தியலின் செயலாக்கத்திற்குத் தடையாகவும் சிலபோது உந்துவிசையாகவும் அமைகின்றது.

        மார்க்சிய கருத்தியலின் வெற்றிகளால் சிலநாடுகளிலமைந்த மாற்றமைப்புகளினுள் உருவான கோட்டுபாட்டு சிக்கல், கட்சி அமைப்புகளினுள் அதிகாரப்போட்டி, ஐயப்பாடுகள் குறைய இயலா உடமைஉணர்வுகள், அகவெளிப் பண்படாமை போன்ற காரணங்களால் சரிவுற்ற நிகழ்வுகள்  உறுதிப்படுத்துவது:      “வாழ்நிலைதான் சிந்தனையைத் தீர்மானிக்கிறது”  என்கிற மார்க்ஸின் வாசகம் இன்னும் அர்த்தச்செறிவுள்ளதே, ஆயினும் ஐரோப்பியச் சூழலில் தோன்றிச் சரிந்த வெற்றிகளின் நிழல்கூட அந்நிய சமூகவெளியில் படரவில்லை என்பது துயரமே.

        சூழல் உருவாக்கத்தில் அக, புறக் காரணிகளின் கூட்டுவினைபற்றிக் கோட்பாடாய் அறிந்தவற்றை நடைமுறைகளில் செயல்படுத்தும் கவனம் கொள்ளாமையினால் காந்தியச் சிந்தனைகள் பற்றிய புரிதலுக்கான அவசியம் உணரப்பட்டிருக்கவில்லை. ‘இந்திய விடுதலை’ என்பதை மிகையூட்டப்பட்ட புனைவாக அடுத்த தலைமுறைக்கு அடையாளப்படுத்தியதல் இடதுசாரிகளின் பங்களிப்பும் உண்டு. ‘இன்னொரு தளத்தில் காந்தியைத் திருவுருவாக்கி அவரது சமூக அரசியல் பொருளதார வாழ்நெறிகளைப் பக்திச் சொல்லாடலாக மாற்றியது பொதுவெளியில் நிகழ்ந்த இன்னொரு இழப்பு’  என்பார் பிரேம் .

        விடுதலை பெற்ற இந்தியா எத்தகைய சமூக அரசியல் பொருளியல் நெறிமுறைகளில் இயங்கவேண்டும் என்பதற்கான காந்தியின் விருப்பங்கள் அவரை மிகவும் மதித்தவர்கள் எனக் கருதப்பட்டவர்களால் எவ்வளவு கடுத்தமாக நிராகரிக்கப்பட்டன என்பதை ஆய்வாளர்கள் பலரும் பதிவு செய்துள்ளனர். காந்தியைப் பழமைவாதி, நவீன உலகம் பற்றிய புரிதலற்றவர் என விமர்சித்தவர்களால் முன்னெடுக்கப்பட்ட திட்டங்களின் மூலம் வளர்ந்த இந்தியச் சமூகம் அமிழ்ந்துள்ள இழிவின் அடர்த்தி அறிவார்ந்த வெளியில் காந்தியைத் தேடத்தூண்டுகிறது.

        கடந்தகால ஆட்சிமுறைப் பிறழ்வுகளினால் வளர்ச்சி கண்டுள்ள எந்திரமயமான பெருந்தொழில்கள், அவற்றால் உருவான பெருநகர்ப்புறங்கள், பல ஆயிரம் மைல்கள் கடந்து செல்லும் போக்குவரத்து சாதனங்கள், மனித வாழ்விடங்களை அழிக்கும் ஏவுகணைகள், அணுகுண்டுகள், போர்விமானங்கள், நீர்மூழ்கிக்கப்பல்கள், காடுகள் அழிப்பு, நதிகளைச் சீர்குலைத்தல், காற்றில் கடலில் நஞ்சு கலத்தல், பழங்குடியினரின் வாழ்விடங்களைச் சுரங்கங்களாக மாற்றுதல்,  மக்களை அகதிகளாக்குதல்,  எதிர்த்தவர்களை அழித்தொழித்தல், வேளாண்மையை உலக முதலாளிகளிடம் கையளித்தல், உருவும் பெயரும் மாற்றப்பட்ட நவீனக்கொள்ளை, விபச்சாரம் போன்றவற்றுக்கு அரச முத்திரையிட்டுப் பாதுகாத்தல் இவற்றினூடாக காந்தியின் நினைவிடங்களுக்கு வண்ணம் பூசுதல், மலர்வளையம் வைத்தல் போன்றவையும் தேசிய அலுவல் நடைமுறைகளாகத் தொடர்கின்றன.

        இந்தக் கவலை தரும் நிகழ் உண்மைகளினூடாக வளர்ந்துவரும் வாழ்வியல் அச்சுறுத்தலை இப்போது ஆளுகிறவர்களும் அதிகாரத்தைக் கையகப்படுத்த முயல்கிற வேறு குழுக்களும் மாற்றத்தை விழைகிற இடதுசாரிக்கட்சிகளும் மக்களின் உணர்தலுக்குள்ளாக்க முயலவில்லை என்ற அவதானிப்பால் இதுவரையிலான விடுதலைக் கருத்தியல்களை மீள் ஆய்வுக்குள்ளாக்கி சரியான மாற்றினை அறியும் வரலாற்றுத்தேவை உருவாகியுள்ளது.

               ‘காந்தி எனும் ஆளுமை நவீன தனிமனித நிலை சார்ந்தும் கூட்டுத் தன்னடையாளம் என விரிந்தும் கடந்த இரு நூற்றாண்டுகளில் எழுந்த மிகச்சிக்கலான கேள்விகளை அறியவும் அடையாளம் காணவும் விவரிக்கவும் களமளிக்கக்கூடியது’ இந்தக் களம்தான் இந்த நூலுக்கான மொழியமைப்பாக விரிகின்றது. இன்றைய வரலாற்றுச் சூழலில் தன்னுடைய, தான்வாழும் சமூகத்தினுடைய போதாமைகளையும் ஆற்றலின் எல்லைகளையும் விவரிக்க முனையும் நவீன அறிவையே தன்னுடைய விடுதலைக்கான அறத்திற்கு ஏற்ற உண்மையான அறிவுமுறை என அறியத் தொடங்கும்பொழுது, காந்தியமே தன் அருகாமைக்கு ஏற்ற துணை எனச் சிந்திக்க உதவுகிறது இந்த நூல்.

        ஏற்ற இறக்கங்களை இயல்பென ஏற்று இந்தியச் சமூகம் அதற்கேற்ற இயல்புணர்ச்சிகளையும் ஒத்திசைவுடன் பேணியதை உள்ளிருந்தெழும் இயல்முரண்களால் உருக்கொண்ட சில தனிமனித விலகல் உளவியலைச் சற்றே புனிதப்படுத்தியும் தனிமைப்படுத்தியும் வைத்திருக்கும் ஏற்பாடுகளுடன் சிலநூறு ஆண்டுகள் எதிர் அதிர்வுகள் ஏதுமின்றி இச்சமூகம் இயக்கம் கொண்டிருந்ததைப் பற்றிய பிரேமின் விவரிப்புகள் நிறைநதியின் நீரோட்டம் போன்ற அமைதி கொண்டவை. தன்னுடைய ‘தானை’ ஆளுகின்ற பண்பு காந்திக்கு ‘மதமரபு வழங்கிய கொடை என்கிற கடந்தகாலப் பொது மனஇயல்பிலிருந்து விலக்கி அது அவர் மேற்கொண்ட சோதனைகளின் வழியாகப் பெற்ற நிகர்பயன் என்கிற உண்மையை ‘நிகழ்த்து நிலை ஆன்மீகம்’ என்ற தொடரால் சுட்டி, ஆன்மீகம் என்பது வெறும் கருத்துநிலைப்படிவாக உலவுவதன்று, அது ஒரு செயல்முறை விளைவு என்ற புரிதலுக்கு உதவுகிறார் பிரேம்.

               நான் என் கண்முன் உள்ள எல்லாவற்றையும் எனதாகக் கொள்ளும் வேட்கையோடு வாழவேண்டுமா? இருத்தலின் பொருட்டான இன்றியமையாமைகளை மட்டும் பெற்று வாழ்வதில் நிறைவு கொள்கிறவனாக வாழவேண்டுமா? என்ற கேள்விகளை முன்வைத்து சிந்திக்க இந்நூல் உதவுகிறது. உலகளாவிய அடக்குதலும் ஆக்குதலுமான முரண்களிலிருந்து தம்மை விடுவித்துக்கொள்வதையும் பெருமூலதனத்திரட்சியுருக்கள் போர்த்தொழில் நுட்பத்தைத் தம்வயப்படுத்தி சந்தைப்படுத்துதலின் வழியாக நாடுகள் தமக்கான அசலான பாதுகாப்பு என்பதை ஆயுதங்களின் சேகரத்தில் உணர்கிற உலக உளவியலை வளர்த்துள்ள சூழலில் பதற்றங்கள் தணிந்த ஆசுவாசத்தை எதிர்நோக்கியுள்ள சமூகங்களுக்கு காந்தியம் நம்பிக்கையாக மாறமுடியம் என்பதை நூல் எளிமையாக விளக்குகின்றது.

        புரட்சிகளும் பெரும் சீர்த்திருத்தங்களும் தம் இருத்தலை ‘அரசவன்முறை’ என்பதன் நிழலிலேயே தொடர முயன்றன என்பதை வரலாறு காண வாய்த்திருக்கிறது. அரசு மக்களைத் தமதாகவும், மக்கள் அரசைத் தங்களுடையதாகவும், உணரமுடியாமற் செய்தது எது? என்ற கேள்வி காந்தியின் அகவெளியில் தொடர்ந்து எழுப்பப்பட்டதும், சமூகத்திற்காக உற்பத்தி செய்த மக்கள், தம் தேவைகளின் நியாயத்தைக்கூட உரக்கச் சொல்லமுடியாமற் போவது ஏன்? என்று அவர் சிந்தித்ததும், முன் அறியப்பட்ட கோட்பாடு எதனையும் சார்ந்ததன்று. மக்களின் மீதான உண்மையான அன்பும் எந்திரமயமான பெருவளர்ச்சி என்பது விளைவிக்கப் போகும் தீமைகளும்… உண்மையான “ஆட்சியறம்” என்பதை ஆளுகிறவர்கள் கண்டுணரவேண்டும் என்று விருப்பமாகத் தெளிந்தும், குழம்பியும், கண்டடைந்தும், தவறவிட்டும்… தொடர்ந்த காந்தியின் தேடுதல்தான் மாற்று விடுதலைக் கருத்தியலை அடையாளம் காண்பதற்கான வெளிச்சமாக எஞ்சியிருக்கிறது.

    காந்தி தான்கண்டறிந்த புதிய வாழ்வறத்தை நடைமுறைப்படுத்துதலில் உள்ள தடைகளை அவ்வப்போது கண்டறிந்து அவற்றை நீக்குவதற்கான வழிமுறைகளையும் அனுபவரீதியாக உணர்ந்து செயல்படுகிறார். தன்னுடைய முன்னகர்தலுக்கு உதவக்கூடியவையாக அவர் கருதிய நிலைகளை அடைவதற்கு புலனடக்கம், குறிப்பாக பாலுறவு தவிர்த்தல், அதற்கேற்ப உடலின் உறுப்புகளைத் தம் கட்டுப்பாட்டுக்குள் வைக்க ஏற்புடைய உணவுப்பழக்கம், பிரார்த்தனை, கடினஉழைப்பு  எனப்பல உபாயங்களைத் தன்வயப்படுத்தவும், அவற்றின் பயன்களை வெளிப்படையாக பொதுவெளியில் வைத்து விளக்கவுமான பண்பட்ட மனவெளியை தன்னுருவாக்கமாகவும் கூட்டுத்தன்னுருவாக்கத்திற்கானதாகவும் மாற்றினார். சில சமயங்களில் சில தோல்விகளையும் கண்டடைந்தார். எல்லாவற்றிற்கும் மேலாகத் தம் வாழ்வைத் திறந்த புத்தகமாக மாற்றியிருந்தார். “பிரம்மச்சர்யம் எனக்கு எளிதே. என் மனைவி காம இச்சையைத் தூண்டுவதில்லை. எனக்கு மனஉறுதி இல்லாததுதான் அல்லது என் காமஇச்சைதான் இதற்குத் தடையாக இருந்தது. காமஇச்சைக்கு நான் அடிமையாக இருக்கும் வரையில் மனைவியிடம் நான் உண்மையான அன்போடு இருக்கிறேன் என்பதற்கு மதிப்பே இல்லை” (சத்திய சோதனை : 247)

        காந்தி எல்லாவற்றையும் பொதுவெளியின் தேவையை முன்வைத்தே சிந்திக்கிறவராக இருக்கிறார் என்பதை நூல் பலஇடங்களில் எடுத்துரைக்கிறது. தென்ஆப்பிக்காவில் அவர் இருந்த காலத்தில் போர்யுத்தம், ‘சூலு கலகம்’ போன்றவற்றில் அரசியல்ரீதியான நியாயங்கள் எவை என்பதை உணராவிட்டாலும் போர், கலகம் என்பன ஏற்படுத்திய அழிவுகளும் அப்பாவி மக்களின் உடல்களுக்கு நேர்ந்த கொடுமைகளும்  அவருடைய மனித தார்மீகத்தை விழித்தெழ வைத்தன. மருத்துவச் சேவைகளில் ஈடுபட அமைப்புகளை உருவாக்கினார். பொதுக்  கடமையாற்ற பாலுறவு ஒரு பெரும் தடையாக அவருக்குத் தோன்றியது. பொதுச்சேவைக்கு குந்தகம் நேராதிருக்க உடற்சேர்க்கை இன்பம் துறத்தலை செயலுத்திகளில் ஒன்றாக மாற்றுகின்றார். அவர் மேற்கொண்ட அந்த  நடைமுறைகளின்போது அவர் தம்முடைய முப்பது வயதைக் கடந்துகொண்டிருந்தார் என்பது குறிக்கத்தக்கது. கூட்டுவாழ்க்கை முறையாக தென்ஆப்பிரிக்காவில் வாழ்ந்த இந்தியர்களின் சாதி மனநிலை கடந்த இயக்கத்திற்காக டால்ஸ்டாய் பண்ணை, ஃபீனிக்ஸ் குடியிருப்பு போன்ற முயற்சிகள் பிற்காலத்தில் இந்தியாவில் மேற்கொண்ட அரசியல் பணிகளுக்கு அனுபவங்களாகின.

        ‘1906 இல் சூலு இன மக்கள் மீது பிரிட்டிஷ் படையினர் நிகழ்த்திய வன்முறையை உடனிருந்து பார்க்க நேர்ந்தபிறகு சத்தியாக்கிரகம் பிரம்மச்சர்யம் ஆகிய அடிப்படையான இரு செயல்முறைக் கோட்பாடுகளைக் கட்டியமைக்கிறார்’ (ப : 68). பலசமயங்களில் தன் அறியாமையும் போதாமைகளையும் வெளிப்படுத்தி அவற்றைக் கடந்து செல்லும் வழிகள் எதுவெனத் தனியாகவும் கூட்டாகவும் விவாதித்துள்ளதையும் காணலாம்.

        ‘நேட்டாலில் சூலு மக்கள் கலகம் செய்கிறார்கள் என்ற செய்தி செய்தித்தாள்களில் வந்தது. சூலு மக்கள்மீது எனக்கு எந்த வெறுப்பும் இல்லை. அவர்கள் இந்தியர்களுக்கு எந்தத் தீமையும் செய்யவில்லை. அங்கு நடப்பது கலகம்தானா என்பதிலும் எனக்கு சந்தேகம் இருந்தது. ஆனால் பிரிட்டிஷ் பேரரசு உலகம் முழுமைக்கும் நன்மை புரியவே அமைந்திருக்கிறது என்று அப்போது நான் நம்பிக்கை கொண்டிருந்தேன். உண்மையான எனது ‘அரசு பக்தி’ பேரரசுக்குக் கெடுதல் வரவேண்டும் என மனதால் நினைப்பதைக்கூட தடுத்தது’. ( ப:66 )

             பிரேமின் மொழியில், “இனியான வாழ்வுரிமை அரசியல்” என்பது இயற்கையை அதன் முழுமையுடன் வழிபட்டு தன்னைத் தகவமைத்துக் கொள்வதைப் பயில்வதாக அமைவது. இந்த வாழ்வுரிமை அரசியலின் தொடக்கத்தை காந்தி தனது விடுதலை அரசியலின் ஒருபகுதியாகவும் ஆன்மீக வாழ்முறையின் அடிப்படையாகவும் வைத்து விளக்கியபோது அது காலப்பொருத்தமற்ற அறநெறிச்சொல்லாடலாக பெருங்கட்டமைப்பு அரசியல் தளத்தில் புறக்கணிக்கப்பட்டது” என்று காந்தியத்தை காங்கிரஸ், பாரதீய ஜனதா இன்ன பிற உடமைப்பெருக்க அணுகுமுறை கொண்ட கட்சிகள் மட்டுமின்றி கம்யூனிஸ்ட்டு அமைப்புகளும் நிராகரிப்பது சுட்டப்படுகிறது.

        ஏன் இந்தப் புறக்கணிப்பு? காங்கிரஸில் முன்னிலை வகித்த தலைவர்களின் உளவியலை இருவகையாகப் பிரிக்கலாம்.     ஐரோப்பிய கல்விமுறையை (மெக்காலே பிரபு ஆசைப்பட்டபடி உடலால் இந்தியராகவும் மூளையால் ஆங்கிலேயராகவும் இயங்கக்கூடியது) அதன்வழி உருவான வாழ்க்கை மதிப்பீடுகளை ஏற்று அவற்றின் வடிகாலாக உருவான அரசியலை ஏற்றுக்கொண்டது. மற்றொன்று இந்திய பழம்புராண மரபுகளின் வழி உருவான பகுத்தறிவுக்கொவ்வாத மதிப்பீடுகளை உயர்த்திப்பிடிக்கிற சமூகப் பொருளியல் சார்ந்த நிகழ்காலச் சிக்கல்களுக்குத் தீர்வுகாண இயலாத இந்துத்துவ அடிப்படைவாத உளவியல். முதல் வகையிலான உளவியல்கூறுகளடங்கிய ஆளுமைகளின் விருப்பமே நிகழ்காலத்திய அனைத்து விபரீதங்களுக்கும் காந்தியின் காலத்திலேயே காந்தியம் இந்திய ஆட்சி, அரசியல் வெளியில் நிராகரிக்கப்பட்டதற்கும் காரணமாகின்றது.

2.

        இருபதாம் நூற்றாண்டின் தொடக்கமானது அறிவியல் தொழில்நுட்பம் சமூகமாற்றம் போன்றவற்றால் புதியஉலகம் ஒன்றில் மனிதன் உந்தித் தள்ளப்பட்டான். அதுவரை எது அறிவு என்று கருதப்பட்டதோ அது அப்புதிய உலகில் அறிவல்ல என்றும், வெறும் பொதுப்புத்திதான் எனவும் கருதப்பட்டது. தொழில்நுட்பங்கள் மனிதனை ஒதுக்கிவிட்டு செயல்படுவதை மனிதன் அறிகிறான். இந்நிலை ஒரு பெரும் மனிதநஷ்டத்தை உருவாக்குவதால் இது ஒழுக்கவியல், கலாச்சாரவியல், உளவியல் சம்மந்தப்பட்ட நெருக்கடி என்று தெரிகிறது. மனிதனின் அழுகுரலோ பிரலாபங்களோ கேட்கப்படாத தூரத்தில் உலகம் இயங்க ஆரம்பித்துவிடுகிறது’. (தமிழவன்,அமைப்பிலும் அதன் பிறகும். பக்:7) அமைப்பியல்வாதம் மேற்கண்டவாறு கணிக்கிற சூழலில்தான் இநதியச் சூழலில் ஒருபுதிய வாழ்வறம் குறித்த சிந்தனை காந்திக்கு ஏற்படுகின்றது. அந்த ஆழ்ந்த அக்கறையின் வெளிப்பாடாக ‘இந்திய சுயராஜ்யம்’ என்ற நூல் (1909) வருகிறது.

   ஐரோப்பிய சிந்தனை மரபை உயர்த்திப்பிடிக்கிற போக்கு அறவியலின் தொடக்கப்புலமாகக் கிரேக்கத்தைக்காண விழைகின்றது. கிரேக்க அறவியலின் காலமாகக் கருதப்படுகிற காலத்திற்கு (கி.மு.500 – கி.பி.500) சற்றே முன்னும் பின்னுமாக இந்தியச்சூழலில் சார்வாகம், மீமாம்சம், வைசேஷிகம், பௌத்தம், சமணம் ஆகியவை விதைக்க முயன்ற அறவியல் சிந்தனைகள் முக்கியமானவை. பின்னர் வந்த அறஇலக்கியங்களின் (சிலப்பதிகாரம் மணிமேகலை போன்ற) கருத்துப் புலப்படுத்துதல்களையும் சொல்லவேண்டும். இவற்றின் தொடர்ச்சியாக இருபதாம் நூற்றாண்டின் இந்திய அறவியல் சிந்தனையாகக் காந்தியின் இந்த (இந்தியசுயராஜ்யம்) நூலைக் கொள்ளலாம். தான் வாழும் காலத்திய தேசிய அரசுகளின் செயல்பாடுகளால் அன்பும் கருணையும் உலர்நத மனவெளிகளில் சகமனிதர்கள் அருகாமையில் அவற்றை உணரத்தக்க அமைதியை வளர்க்கும் காரணிகள் எவை என்பதைக் கண்டுணர்ந்து அதற்கான நடைமுறைகளைத் தம் வாழ்வின் வழியாக வெளிப்படுத்தினார். “இதற்காகப் பிறழ்வும், குற்றமும்,  போரும்,  அழிவுகளும் அற்ற சமூக வெளியை உருவாக்க உதவுகின்ற தன்னுருவாக்க, கூட்டுத்தன்னுருவாக்க முறையை ஆன்மீக அரசியலின் வழியே கண்டடைய முயன்றார்” என்று விளங்குவார் பிரேம்(பக்:32). மேலும் ‘இந்தத் தன்னுருவாக்க,  கூட்டுத்தன்னுருவாக்க அரசியலைப் புரிந்து கொள்வது நம் காலத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கும் வன்முறைகளையும் கொடூரங்களையும் புரிந்து கொண்டு அவற்றுக்கான மாற்றுகளைப் புரிந்து கொள்வதுமாகும்’ என்றும் பிரேம் கருதுகிறார்.

        ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட ‘இந்தியா’ என்கிற நிலவியல் வரைபடத்துள்ளமைந்த பிரேதசங்களிலும் காங்கிரஸ் கட்சி என்ற அமைப்பு மக்களின் சிலதேவைகளை ஆங்கிலேய நிர்வாகத்திடம் மனுச்செய்து பெறும் முயற்சிகளைதொடங்கியிருந்த காலத்தில் காந்தி தென்ஆப்பிரிக்காவிலிருந்து திரும்புகின்றார். உலகில் வேறெங்கும் ‘இல்லாச் சிறப்பாக’ மக்கள் ‘சாதி’ என்ற அடையாளத்தால் பிளவுபட்டு கீழ்,மேல் என்ற கற்பிதங்களினுள் அமிழ்ந்து சமூகக் கொடுமைகளுக்குள்ளாகியிருக்கின்ற நிகழ் உண்மையானது காந்தி வரும்வரை காங்கிரஸ் அமைப்பிற்குள் புறக்கணிக்கப்பட்டிருந்தது.

        ‘மனிதன் மரபொழுக்க நிலையைவிட்டு மனச்சான்றுக்கு முதன்மை இடம் தந்ததால்தான் அறவியல் சிந்தனைகள் தோன்றின’ என்ற சிந்தனைக்கேற்ப சாதி,  இனம்,  மதம்,  மொழி ஆகியவற்றால் வேறுபட்ட தனிமனிதர்களைக் கூட்டு வாழ்க்கைமுறை ஒன்றுக்குள் கொண்டுவரும் முயற்சியை ஒழுக்கவியல் போதனைகளால் மட்டும் சாத்தியப்படுத்திவிடமுடியாது அதற்கான ஒரு உளவியல் நடத்தையியல் கட்டமைப்பு தேவை. இதனை உருவாக்க காந்தி மேற்கொண்ட முயற்சிகளால் அவர் எதிர் கொண்ட சிக்கல்கள் பல, எடுத்துக்காட்டாக ஒன்று:

      “தீண்டாமைக்குட்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த தூதாபாய், அவரது மனைவி தநிபென், மகள் இலட்சுமி ஆகிய மூவரும் சபர்மதி ஆசிரமத்தில் தங்கியிருந்ததால், ஆசிரமம் நடத்தப் பணஉதவி செய்தவர்கள் உதவியை நிறுத்திக்கொண்டனர். தண்ணீர் எடுக்கவிடாமல் தடுக்கின்றனர்.” சமூகத்தடை ஏற்படும் நிலை உருவாகிறது. அப்படி ஏற்பட்டால், தீண்டாமைக்காட்பட்டோர் வசிக்கும் சேரிக்கே சென்று வசிக்கலாம் என்கிறார். கஸ்தூரிபாய் ‘தீண்டாமை’ என்பது இந்துமதம் அனுமதிக்கிற விதி என்று நம்புகிறார். அதனால், எதிர்ப்பு மனநிலையில் உள்ளார். காந்தி, “கஸ்தூரிபாய் விரும்பினால் தனிக்குடிசையில் வசிக்கலாம், இலட்சுமியின் குடும்பத்தை வெளியெற்ற முடியாது” என்கிறார். (பக். 86)

          காந்தி, மரபுகளை முற்றாக மறுப்பவரல்லர். முற்றாக ஏற்பவருமல்லர், புதிய மரபொன்றைத் தோற்றுவிக்க முயன்றவர். இந்த ஏற்பு – மறுப்பு – புத்துருவாக்கம் என்ற படிநிலை “முதலில் புறவிதிகளுக்கு வெளிப்படையாகக் கட்டுப்பட்டு நடப்பதால் வரும் நன்மையும் பின்னர் மனச்சான்று நிலைக்கு உள்ளூரப் பணிந்து நடப்பதால் ஏற்படும் நன்மையும் முறையே, கருத்தும் முரண்பட்ட கருத்துமாகத் தோன்றித் தம்முள் கலந்து தொகுப்பேற்பட்டு, புதிய சமுதாய அறவொழுக்கமாக உருவெடுக்கும்.” என்ற ஹெகலியச் சாய்வுள்ளதும் கூட.

        “பிரபுத்வ மதவியல் சார்ந்த கருத்துக்களிலிருந்து  மேலைத்தத்துவம் தன்னை விடுவித்துக்கொண்டு மேற்செல்ல வால்டேர், ரூஸோ, எர்டர்லெஸ்ஸிங், ஷில்லர், கதே போன்றவர்களின் அறிவொளிக்கால சிந்தனைகள் உதவின என்ற பார்வை ஒன்று உண்டு. ஆயினும், அவை தனிமனித சமூக ஆன்மீக நெருக்கடிகளுக்கும் மூலதனத்திரட்சியின் விளைவான பெருந்தீமைகள், அச்சுறுத்தல்கள் ஆகியவற்றிலிருந்து எதிர்காலச் சமூகங்களை நல்வழிப்படுத்தும் ஆற்றல்களைக் கொண்டிருக்கவில்லை. அதனால்தான் இன்று எழுந்துள்ள சிக்கல்களின் தீர்வுக்கான ஈர்ப்பு விசையாக மாறும் தகுதி காந்தியத்தில் உள்ளதா என வாசகரை நிதானம் கொள்ள வைக்கிறதாக நூல் தன் மொழியமைப்பால் நெருக்கம் கொள்கிறது. காந்தியத்தின் தன்மை ஒரு கவிதையாக நூலில்:

 ‘காந்தியத்திலும்

 எளிமை என்பதுதான் சிக்கலானது

கடினமானது

எளிமைகள் சிக்கலடைவதும்

இயல்புகள் அச்சமூட்டுவதும்

மனித அறிவுருவாக்கத்தின்

முரண்கள்’      (பக்: 133)

      காந்திக்கு உதவும் என நான் கருதுகிற வேதாகம வசனமான ‘வெளியிலிருந்து வருகின்ற எதுவும் மனிதனுள்ளே மாசுபடுத்துகிறதில்லை’ என்பது ‘துய்மைப்படுத்துகிறதுமில்லை’ என்கிற பின்னொட்டையும் உள்ளுறையாகக் கொண்டிருக்கிறது. அது ஒரு கருத்தியல் என்பது ஒருபுறமிருக்க, வரலாற்று நதியில் இன்றும் நீர்மேல் மிதவையாகத் தன் இருப்பை உணர்த்துகின்றது, காந்தியத்தின் வழியாகவும்.

3.

      ‘ஒரு முழுமையின் உள்ளுறுப்புகள் பல தளங்களில் தம்முன் உறவுகொண்டிருக்கும் பல்வேறு உறுப்புகளின் தொடர்புகளை அறிதலில்தான் அமைப்புபற்றிய அறிவு அடங்குகிறது’. -லூயி அல்தூஸர். (தமிழவனின் அமைப்பியலும் அதன்பிறகும்,பக்:10)

            “விடுதலை பெற்ற பாதை’ என்ற கற்பிதத்தோடு தீமைகளின் பாதையில் வெகுதுரம் வந்துவிட்ட பிறகு உண்மை என்கிற வெளிச்சத்தைச் சந்திக்க சற்றே பின்னோக்கிச் செல்ல நேர்ந்தால் தவறில்லை” என்ற புரிதலொன்று உண்டு. ‘வரலாற்றறைப் பின்னுக்கு நகர்த்துதல் இயலாது என்ற சொல்லாடலின் இணைவிளைவாக முன்னேற்றம், பின்னடைவு ஆகிய சொற்களின் உண்மைப்பொருளை வரையறுக்க இயலாது நிற்கிறது நிகழ்காலம்.

        நிகழ்கால மதீப்பீடுகளால் சிதைந்துகொண்டிருக்கிற வாழ்க்கையைப் போலவே மதீப்பீடுகளின் அழுத்தமிகையினால் மொழியும் தன்உள்ளார்ந்த பொருள் பிறழ்வுறுத்தலைச் சகித்துக்கொண்டு பயன்பாட்டுக்கானதாகச் சுருங்கிக்கொள்கிறது. மொழி அதிகாரத்திற்கான ஆற்றலுமாகும் என்பதைப் புரிந்து கொள்வதில் சூழலில் நேர்ந்த பிழையையும் முக்கியப்படுத்திக்கொள்ளவேண்டும். இப்பிறழ்வுறுதலால் நேர்ந்தவை மிகுதி.

கவனிக்க ஒன்றிரண்டு:

‘இந்திய வனங்களில்தான் இந்தியாவின் ஆன்மா உறைந்துள்ளது’  என்ற சூழலியல் சார்ந்த வாசகம். ‘நவீனத்தொழில் வளர்ச்சிக்கான சுரங்கத்திட்டப்பணிகளில் தக்கஇடங்களைக் கண்டறிந்து அவற்றை உடனடிப் பயன்பாட்டுக்கு மாற்றுவதும் தாமதமின்றி நடைபெறவேண்டும்’ என்ற திட்டக் கமிஷன் அறிக்கை வாசகத்தோடு எத்தகைய இசைவை அல்லது முரணைக் கொண்டுள்ளது?

‘இதுவரையிலான பன்னிரெண்டு ஐந்தாண்டுத் திட்டங்களிலும் பொதுச்சுகாதாரம், மருத்துவம், மனிதவள ஆற்றல் மேம்பாடு ஆகியவற்றுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு வருகிறது’ என்ற ஜனாதிபதியின் உரையில் கேட்கப்பட்டதும்.

“புற்றுநோயாளிகளின் விகிதம் அதிகரித்து வருவது கவலை தரத்தக்க விஷயம். இரத்தப் புற்றுநோய் கண்ட ஒருவர் தனக்குத் தேவைப்படும் மருந்திற்கான விலையாக மாதம் ஒன்றுக்கு 2500 டாலர் செலவு செய்யவேண்டும் என்கிறது நோவார்ட்ஸ் என்கிற ஸ்விட்ச்சர்லாந்து நிறுவனம்” போன்ற செய்திகள் வாசிக்கப்படுவதும்.

‘நாற்பது வயதை நெருங்கும் பெண்கள் கட்டாயம் மார்பகப் புற்றுநோய் உள்ளதா எனச் சோதனை செய்து கொள்ளவேண்டும்’ என்ற மத்திய அரசின் விளம்பரத்தைக் காண நேர்வதும்.

      இதற்குப்பிறகு தேசியம், சுதந்திரம், மக்கள் நலன், வளர்ச்சி, சோஷலிசம், சமத்துவம் போன்ற சொற்களின் நிகழ் பொருட்பெறுமதிகளை எண்ணிப்பார்க்க ‘காந்தியம், பழமை, நவீனமறுப்பு’ போன்ற சொல்லாடல்கள் தெளிவுபெறும்.

        தன் மக்களின் மீதான கொடுமைகள் பொருளாதரச் சுரண்டலோடு தனிமைப்படுத்துதல், ஒதுக்கிவைத்தல், இழிவுபடுத்துதல் போன்ற அம்சங்களை உட்கூறாகக்கொண்ட சாதியச் சமூகத்தின் 24 கோடி இந்துக்களுக்கு 6 கோடி தாழ்த்தப்பட்ட மக்கள் ஏவலர்களாக ஆக்கப்பட்டிருப்பதை மாற்றி அவர்களுக்கு முழுவிடுதலை பெற்றுத்தருவதற்கு அம்பேத்கருக்கு காந்தி என்ற அரசியல் குறியீடு தடையாக இருக்கிறது. அம்பேத்கரைப் பொறுத்தவரை காந்தி எப்பொழுதும் ஒரு வரலாற்றுத் தீமையாகவே தோற்றம் தந்தார்.

    தலித்மக்கள் சிறுபான்மையோருக்கான சட்டப்பாதுகாப்பைப் பெறுவதை தனித்தொகுதிகள் பெற்று தம் நலனை மேம்படுத்திக்கொள்வதைத் தடுக்கும் முறையில் காந்தி எரவாடா சிறையில் மேற்கொண்ட உண்ணாவிரதம் காந்தியின் பொதுநலம் சார்ந்த அரசியலில் ஒரு வரலாற்றைப்பிழை. ஆனாலும் தலித் அரசியலை நவீன இந்திய அரசியலில் மிக அடிப்படையான பகுதியாக ஒரு அரசியல் கருவியாக நிலைப்படுத்துவதில் காந்தி, காந்தியம் ஒரு குறிப்பிட்ட பங்காற்றியிருக்கிறது. இந்த வகையான உரையாடலில் காந்தியை அம்பேத்கர் புரிந்துகொள்ளவில்லை என்று சொல்லாமல் அம்பேத்கரை காந்தி புரிந்து கொள்ளவேண்டும் என்று சொல்வதுதான் காந்தியம். ஏனெனில்  காந்தியம் புரிதலை விரிவாக்குவதன் மூலம் மாற்றங்களுக்குக் களம் அமைக்கும் ஒரு உளவியல் அமைப்பு.” என்ற பிரேமின் எடுத்துரைப்பில் வரலாற்றுப் பொறுப்புணர்ச்சியும் இரு விடுதலைக் கருத்தியல்களைச் சமன் செய்யும் நேர்த்தியும் வெளிப்படுகின்றது.

        மூலதனப் பெருந்திரட்சியின் பெருந்தொழில் மற்றும் போர்த்தொழில் முன்னெடுப்புகள் அம்பேத்கரின் அவதானிப்பிற்குள் வந்திருந்தனவா? நகர்ப்புறங்களை நோக்கி தலித் மக்கள் இடம்பெயர்வதில் அவர் கொண்டிருந்த விருப்பம் சுரண்டல் சாதியக்கொடுமை ஆகியவற்றிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகளோடு தொடர்புள்ளதா?

  ‘உலகமயமாக்கல்’ என்ற விஷவிருட்சத்தின் நிழலில் வளர்ந்து இந்திய பெருவுடமையாளர்க்கும் ஆளுவோர்க்கும் பலன்தரும் பன்முக உற்பத்திக்கான உள்கட்டமைப்பு மற்றும் உற்பத்தி ஆற்றல்கள் ஆகியவற்றில் காந்தியத்தின் செயலூக்கத்தினால் நிகழவிருக்கும் தலைகீழ் மாற்றங்களை நிலைப்படுத்தும் வலிமை உருவாக்கத்தை இங்குள்ள சட்டங்களும் நீதியமைப்புகளும் அனுமதிக்குமா?

   காந்தியம் வரைகிற உற்பத்திமுறைகள் அதாவது எந்திரங்கள் விலக்கிய கைத்தொழில்கள், பாரம்பரிய (முற்றிலும் இரசாயனம் தவிர்த்த) வேளாண்மைக்குப் பின்புலமாக அமையும் பாரம்பரிய விதைகள் மீட்பு, கால்நடைகள் பெருக்கம், காடுகளை வளர்த்தல், நீராதாரங்கள் பராமரிப்பில் மக்கள் பங்கெடுப்பு, உணவுமுறைகளில் மாற்றம், தாய்மொழிக்கல்வி போன்றவற்றின் மீட்டுருவாக்கத்தில் அரசியல் கட்சிகளின் நிலை போன்றவையும் நிராகரிக்கவியலாக் காரணிகளாக அமைந்துள்ளன. மேலும் மக்களின் மனவெளியில் தங்கியுள்ள உயர்கல்வி, நவீனத்தொழில்நுட்பப் பயிற்சியின் வழி மிகுபொருளீட்டல், புதிய வாழ்க்கை முறை பற்றிய மயக்கங்களும் கற்பிதங்களும் கூடுதல் சிக்கல்கள்.

        அம்பேத்கரின் சமூகவிடுதலைக் கருத்தியலை ஏற்றுச் செயல்படும் இயக்கங்கள் காந்தியம் குறித்து உருவாக்கியுள்ள புரிதல்கள் எத்தகையவை?

        நவீன  அறிவியல் தொழில்நுட்பம் பெருந்தொழில் வளர்ச்சி ஆகியவை குறித்த இடதுசாரி அமைப்புகளின் புரிதல்கள் போன்ற கேள்விகள் நூலின் வரையறை கடந்தவையாக இருப்பினும் தவிர்க்க இயலவில்லை.

ஒர் இனிய கனவைக் குறித்த என் விடிகாலை உணர்வாக இதனை நான் உங்களோடும் நூலாசிரியரோடும் பகிர்ந்து கொள்கிறேன்.

இக்கட்டுரை எழுத உதவிய நூல்கள்:
1.         காந்தியின் சத்திய சோதனை
2.         அமைப்பியலும் அதன்பிறகும் – தமிழவன்
3.         இந்திய தத்துவம் ஒர்அறிமுகம் – தேவிபிரசாத் சட்டோபாத்யாய
4.         அறவியல் ஒர் அறிமுகம் – வில்லியம்லில்லி – தமிழாக்கம் கோ.மோ.காந்தி
5.         மார்க்ஸ் – அம்பேத்கர் – புதிய பரப்புகளுக்கான தேடுகை- பேரா.ந.முத்துமோகன்

முற்றுமுடிவானது அல்ல தேடலுக்கான துவக்கம் -ஜமாலன்

முற்றுமுடிவானது அல்ல தேடலுக்கான துவக்கம்

ஜமாலன்

PREM (2013)

பிரேமின் “காந்தியைக் கடந்த காந்தியம் ஒரு பின்நவீனத்துவ வாசிப்புநூல் பற்றிய கருத்துரை

ஜமாலன்

காந்தியைக்  கடந்த  காந்தியம்  ஒரு  பின்நவீனத்துவ  வாசிப்பு   பற்றிய    நூலாய்வரங்கம் 7-12-2013 சனிக்கிழமை மதுரையில் நடந்தது. ஒருநாள் நிகழ்ச்சியாக அமைந்திருந்த இக்கருத்தரங்கை மாற்றுப்பண்பாட்டுச்சிந்தனைக் களம் ஏற்பாடு செய்திருந்தது. நண்பர் பெரியசாமிராஜா நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்புகளைச் செய்திருந்தார்.  அந்நிகழ்ச்சியல் வாசிக்கப்பட்ட கட்டுரை)

நண்பர்களே அனைவருக்கும் வணக்கம்.

நண்பர் பிரேமின் காந்தியைக் கடந்த காந்தியம்  என்கிற முக்கியத்துவம் வாய்ந்த நூலினை முன்வைத்து நடத்தப்படும் இந்த நூலாய்வரங்கில் நேரில் கலந்துகொள்ளமுடியாத நிலைக்காக எனது வருத்தங்களை பதிய வைக்கிறேன்.

“இயேசுவும் முகமதும் கலை பற்றி எதுவும் எழுதவில்லை. இந்த வகையான உண்மையையும் அழகையுமே நான் தேடுகிறேன். அதற்காகத்தான் வாழ்கிறேன். அதற்காக உயிரைவிடவும் செய்வேன்.”  (A Morning with Gandhiji, Young India, 13-11-1924, 20-11-1924) இந்த நூலின் 40-ம் பக்கத்தில் எடுத்துக்காட்டப்பட்டுள்ள காந்தியின் இந்த வாசகங்களைத் திறப்பு வாக்கியமாகக் கொண்டு பிரேமின் காந்தியைக் கடந்த காந்தியம்  என்கிற இந்த நூலை உங்களுக்கு அறிமுகப்படுத்த முனைகிறேன். இதை ஏன் திறப்பு வாக்கியமாகக் கொள்கிறேன் என்பதை இந்த வாசிப்பினூடாக நீங்கள் புரிந்துகொள்ள முடியும்.

இந்நூலுக்குள் நுழைவதற்கு முன்பு, இதன் ஆசிரியர் பிரேம் பற்றிய எனது மனப் பதிவுகளாகச் சிலவற்றைக் குறிப்பிட விரும்புகிறேன்.

பிரேம் பற்றியும் பிரேமின் எழுத்துக்கள் பற்றியும் அறிமுகம் தேவை இல்லை. குறிப்பாகத் தொடர்ந்து அவரை வாசிக்கும் நமக்கு இந்த அறிமுகம் தேவையற்றதும்கூட. ஆனாலும் பிரேமுடனான கால் நூற்றாண்டு பழக்கத்தை முன்வைத்துச் சிலவற்றைச் சொல்ல இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்கிறேன். அதென்ன கால் நூற்றாண்டு என்று நீங்கள் யோசிக்கலாம். நூற்றாண்டுகளாக வரலாற்றைக் கதையாடுவது தமிழர்களான நமக்கு மிகவும் சுவராஸ்யமும் மகிழ்ச்சியும் தரக்கூடிய ஒன்று என்பதால்தான் 25 ஆண்டுகளை கால் நூற்றாண்டு என்று குறிக்கிறேன்.  நூற்றாண்டுகளுக்குக் குறைவான எந்த ஒரு நிகழ்வையும் நாம் வரலாறாகக் கருதுவதில்லை என்பதால், பிரேமின் நட்பு ஒரு வரலாற்றுத் தன்மைக் கொண்டது என்று சொல்வதற்கான முயற்சியாக. “வரலாறு முக்கியம் அமைச்சரே”  என்கிற புலிகேசி வடிவேலுவின் வசனம் நினைவிற்கு வருகிறது. தமிழ்ச் சமூகம் தன்னைக் கண்டடைந்த, கண்டடைந்து கொண்டிருக்கிற ஒரு கண்ணாடி வரலாறு என்பது.

பிரேமுடன் ஆன எனது தன்வரலாற்றுக் கதையாடலை கொஞ்சம் சொல்லி நூலுக்குள் நுழையலாம்.

1988 அல்லது 1989-லிருந்து பிரேமை எனக்கு தெரியும். அதற்கு முன்பாக பிரேம் அல்லது பிரேதா-பிரேதனை சந்திக்கும் ஆர்வம் கிரணம் வாசிப்பில் எனக்கு ஏற்பட்டிருந்தது. அப்பொழுது 83-ல் ஈழப்போர் ஆதரவில் துவங்கிய எனது அரசியல் ஈடுபாடுகள் மூன்றாவது அணி ஆதரவு அரசியலாக மாறி மார்க்சிய-லெனினிய-மாவோயிஸ வாசிப்புகளின் வழி அமைப்பியல், பின்-அமைப்பியல் என விரிந்துகொண்டிருந்த காலம். 88-ல் எனது முதுநிலை அறிவியல் படிப்பு முடிவதோடு அரசியல் இயக்கச் செயல்பாடுகள் நின்று அறிவுத்துறை ஈடுபாடுகளில் கவனம் குவித்த நேரத்தில்தான் ஒரு மதியவேளையில் பிரேமை குடந்தையில் சந்திக்கிறேன். முதல் சந்திப்பிலேயே எனது நீண்டநாள் தேடுதலாக அல்லது ஒரு கனவாக இருந்த ஒரு அனுக்கமான மனிதரைச் சந்தித்த நினைவு தட்டியது எனக்குள்.

இதை எழுதும் இந்தக்கணம் பிரேம் ஒரு சாம்பல்நிற பெரிய ஜீன்ஸ் சர்ட்டும் ஜீன்ஸ் பேண்டும் அணிந்து குடந்தை காந்திப் பூங்கா முனையில் ஒரு டீக்கடையில் தேநிர் அருந்தியபடி விவாதிக்கத் துவங்கியது காட்சியாகிறது. அக்காட்சியின் பசுமை மனதில் என்றும் நிழலாட தொடர்ந்து பார்க்கும் நேரங்களில் எல்லாம் அல்லது வாய்க்கும் நேரங்களில் எல்லாம் விவாதித்துக்கொண்டே இருக்கிறோம். ஆம்,  இன்றுவரை எங்களது உரையாடல்கள் ஓய்ந்தபாடில்லை.

பிரேம் பார்ப்பதற்கு இறுக்கமாகத் தெரிந்தாலும் மிகவும் அழகாகவும் நகைச்சுவையாகவும் பேசக்கூடியவர். தனது கருத்துக்களைத் தெளிவாகவும் சரியாகவும் முன்வைக்கத் தெரிந்தவர். பல நாட்கள் இரவுகள் விடிவது தெரியாமல் டீ  சிகரெட் இல்லாதபோது பீடி எனப் பேசிக்கழித்திருக்கிறோம். எப்போதும் ஒரே அலைவரிசையில் அமையக் கூடியவை எங்கள் பேச்சு. சந்தித்த சில நாட்களிலேயே நான் அவரை எனது சைக்கிளில் ஏற்றிக்கொண்டு பேசிக்கொண்டே 6 கி.மீ. உள்ள எங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்று அங்கும் பேச்சைத் தொடர்ந்து கொண்டிருந்தோம். இப்படி பல உரையாடல்கள் வழியாக நான் அவரிடம் கற்றவை ஏராளம். எப்போதும் எங்களுக்குள் ஒரு கருத்து உரையாடல் நிகழ்ந்துகொண்டே இருக்கும்.

அவரது எல்லா நூல்களையும் எழுத்துக்களையும் ஒரு முதல்வாசகனின் ஆர்வத்துடன் வாசித்துவிடுவேன். ஆரம்பத்தில் பிரேமின் எழுத்துக்கள் என்னை வசீகரித்து அவரைப்போலவே எழுதும்படியாகப் பழக நேர்ந்துவிட்டது என்று சில இலக்கிய நண்பர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர். இப்படிக் கூறுவது என்னை உயர்த்த அல்ல. பிரேமின் எழுத்து அத்தனை வசீகரமானது என்பதை சொல்லவே. வசீகரம் என்ற வார்த்தையை அதன் ஆழ்ந்த அடர்ந்த இலக்கியப் பொருளில் புரிந்துகொள்ளவேண்டும்.  அது  மௌனி தனது கதைகளில் பயன்படுத்தும் வசீகரம் என்பதைப் போன்றதே. அது ஒரு ஆழ்ந்த பாதிப்பு, பிரேமின் எழுத்துக்கள் எழுத்தை உருவாக்குபவை என்பதைச் சொல்லவே இதை இங்கு சுட்டிக்காட்டினேன்.

அவரது எழுத்துகள் வாசிப்பவரிடம் ஒரு எழுத்தை உற்பத்தி செய்தபடி இருக்கும். சில எழுத்துக்கள் வாசிப்பவரிடம் பேச்சை மட்டுமே உற்பத்தி செய்யும். பிரேமின் எழுத்துகள் எழுத்தை உற்பத்தி செய்யும் ஒரு ஆழந்த மற்றும் அகன்ற மொழிப்புலத்தைக் கொண்டவை. அவரது மொழி ஒருவகை நிகழ்த்துதல் தன்மை கொண்டது. உருவகங்கள் காட்சிப்படிமங்கள் என எழுத்து ஒரு பிம்பத்தைக் கட்டி எழுப்பும் தன்மை கொண்டது.

காந்தியைக் கடந்த காந்தியம் என்கிற நூலும் காந்தி பற்றிய ஒரு புதிய பிம்பத்தை நம்மிடம் கட்டமைக்கிறது. பிரேம் அடிப்படையில் ஒரு படைப்பாளியாக, கோட்பாட்டளராக, அரசியல் செயல்பாட்டாளராக, திறனாய்வாளராக, இலக்கிய வாசிப்பாளராக இருப்பதால் தனது பன்முக வாசிப்பால் இத்தகைய பிம்பத்தை நம்மிடம் உருவாக்க முடிகிறது. அவரது எழுத்தில் படைப்பின் தெறிப்புகள் ஒருங்கு கூடிவிடும்.

அரசியல், வரலாறு, தத்துவம், மானுடவியல் எல்லாம் பிணைந்த ஒரு சமூக-உளவியல் தளத்திலான பன்முக ஆய்வாக பன்மெய்களை உள்ளடக்கிய ஆய்வாக வெளிப்படக் கூடியதாக இருப்பதே அவரது எழுத்தின் தனித்தன்மை. சில புதிய சொல்லாக்கங்களை அவர் உருவாக்கி வெளிப்படுத்தும்போது அது புதியதொரு மொழிப்புலத்தில் பயணிக்கும் துகளைப்போன்று ஒரு புதிய வரைபடத்தை உருவாக்கும் சொல்லாட்சியாக இருக்கும். தமிழில்  எண்ணற்ற புதிய வார்த்தைகளை, புதிய வாக்கிய அமைப்புகளை அவரது எழுத்தில் கண்டுணர முடியும்.

உதாரணமாக உருவகப்பெருக்கம், முற்றொருமை, உருவழிதல், நிகழ்த்துநிலை ஆன்மீகம், மீயுயர் மெய்மை, வல்லாற்றல், மெய்நிகர் போன்ற சொல்லாட்சிகள். வெறுமனே அர்த்தங்கள் செறிந்தவையாக மட்டமில்லாமல் அந்த மொழி ஒரு இயக்கத்தன்மை கொண்டதாக இருக்கும். இதுவரை அவரது நூல்களில், குறிப்பாக நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரைத் தொகுப்பு, இசை உள்ளிட்ட பலவற்றைப்பற்றிய கோட்பாட்டுக் கட்டுரைகள் என எழுதப்பட்ட நூல்களில் இந்த “காந்தியைக் கடந்த காந்தியம்” என்பது வேறொரு புலத்தைச் சேர்ந்தது. அதாவது கணிப்பொறியில் வலைப்பின்னல் எனப்படும் கம்யுட்டர் நெட்வொர்க்கில் பயன்படும் டொமைன் போன்றது. அதாவது இதுவரையிலான அவரது எழுத்துக்களில் இந்த நூல் ஒரு புதிய டொமைனை உருவாக்கி உள்ளது. பிரேமின் எழுத்துக்கள் எப்போதும் புதிய டொமைன்களை உருவாக்கும் தன்மை கொண்டவைதான். நாம் அந்த டொமைனுக்குள் இணைக்கப்பட்டால், உடனடியாக நமது அறிவும் உணர்வும் செயல்படத்துவங்கும். அதற்குள் உள்ள மொழிப்புலத்தில் இயக்கம் கொள்ளும்போது ஒரு புதிய உணர்வுநிலையை, அறிதலைப் பெற்றுவிடுவோம். அப்படித்தான் காந்தி பற்றிய ஒரு புதிய அறிதலை இந்நூல் முன்வைக்கிறது.

காந்தி ஒரு மரபுவாதி என்கிற பழகிய அறிதலைக் கவிழ்த்து அவரை ஒரு நவீனத்துவத்தின் விளைபொருளாக முன்வைக்கிறது இந்நூல். காந்தி ஒரு இந்து மதவாதி என்று நம்பப்பட்டு வந்த கருத்தாக்கத்தைக் கொட்டிக் கவிழ்த்து அதற்குள் அவர் எப்படி கிறித்தவ, சமண, பௌத்த மதங்களின் அறிதலைப் பெற்று ஒரு புதிய இந்திய-இந்து மதம் ஒன்றைக் கட்ட முயன்றார் என்பதை விவரிக்கிறது. காதி என்பது அவரது உலுத்துப்போன கிராமிய மீட்டெடுப்புப் பழமைவாதம் என்பதை சிதைத்து அது எப்படி ஒரு உயிரோட்டமுள்ள தனிமனிதனை உழைப்பு என்கிற படைப்பிற்குள் நிறுத்தும் அந்நியமாதல் அற்ற பொருளாதாரம் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. பசுமை அரசியல், பெண்மைய அரசியல், தன்னுருவாக்க அரசியல், கூட்டுருவாக்க அரசியல், தலித் அரசியல், மதச்சார்பின்மை அரசியல் எனப் பலதளங்களில் காந்தி இந்திய அரசியல் சொல்லாடலை வெகுமக்கள் அரசியல் உளவியலாக மாற்றிய பாங்கை எடுத்துரைக்கிறது. காந்தியின் நன்நெறி அரிசியலை காந்திய விடுதலைக்கருத்தியலுக்கான மாற்று அரசியலாக, இடையீட்டு உரையாடலாகக் கண்டு விளக்குகிறது. காந்தியன் பெண்மையவாதம், பாலியல்நோக்கு, தீண்டாமைக்கு எதிரான நிலைபாடுகள் என அனைத்து பரிமாணங்களையும் கணக்கில் எடுத்து காந்தியம் என்பது இந்திய-மாற்று-அரசியலுக்கான உளவியலைக் கட்டமைத்ததை விவரிக்கிறது.

 காந்தி அம்பேத்கர் முரணை அலசி காந்தியின் மீதான விமர்சனத்தை முன்வைத்து, காந்தியம் அம்பேத்கரை உள்வாங்கவேண்டுமே ஒழிய அம்பேத்கர் காந்தியை உள்வாங்க வேண்டியதில்லை என்கிற அரிதான ஒரு இணைவுநிலை கருத்தை முன்வைக்கிறது. காந்தியம் உருவாகக் காரணமான காந்தி என்கிற தன்னுருவாக்கம் பற்றி விவரிக்கிறது.

பின்நவீனம் விமர்சனமாக முன்வைக்கும் நோஸ்டலாஜியா என்கிற தாய்மண் ஏக்கம், பழமைக்கு திரும்பும் ஏக்கமாக, தாய்நாட்டுக் கலாச்சாரத்தை விமர்சனமற்று ஏற்கும் ஒரு உணர்வாக காந்தியிடம் தென் ஆப்பிரிக்காவில் உருவாகி அதுவே இறுதிவரை அவரது ஆழ்மனமாகக் கட்டமைகிறது. இந்துமதத்தின்மீது கடும் விமர்சனங்களைக் கொண்ட காந்தி இறுதிவரை இந்துமத குறியமைப்பை விட்டு வெளியேராமல் அதன் உள்ளடக்கங்களை மட்டும் மாற்ற முயன்றார். தான் போதிப்பது ஒரு “புதிய இந்துமதம்” என்பதைக்கூட வெளிப்படையாக அறிவிக்க முடியாத நிலையில் இருந்தார். ஆனாலும், இந்து சனாதன தர்மத்தை, வர்ணாசிரமத்தை, சாதியத்தை அப்படியே ஏற்றுக்கொண்டு நடைமுறையில் சாத்தியப்படாத விளக்கங்களைத் தந்துகொண்டிருந்தார் என்பதை விளக்குகிறது இந்நூல். உண்மையில் ஒரு இலட்சிய இந்துமதமே அவரது ஆழ்மன உளவியலாக இருந்தது. அதை இந்தியச் சமூகத்தின் ஆழ்தள உளவியலாக மாற்றியதில் காந்தியின் பங்கு கணிசமானது என்பதை விமர்சனத்துடன் அணுகவேண்டும். இந்த ஆழ்தளம் காந்தியைப் புனிதக் குறியீடாக மாற்றியது. இதற்கு எதிரான தன்முனைப்பு காந்தி என்கிற புனித பிம்பத்தைச் சுட்டு கொன்றுவிட்டு காந்தி கட்டிய ஆழ்தள உளவியலைத் தனது அரசியலுக்கு பயன்படுத்திக் கொண்டது.

25 ஆண்டுகளாக ஒரு அந்நிய மண்ணில் இருக்கும் என்னால் அந்த நோஸ்டாலஜியா என்கிற பழமை அல்லது மரபு ஏக்க உணர்வின் தீவிரத்தை, வேகத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது.  காரணம் அரேபியாவில் வசிக்கும் இந்தியர்கள் மத உணர்வால் அதிகம் பீடிக்கப்படுகிறார்கள். காரணம் மதம் என்பது தாய்மண் பற்றிய ஒரு கலாச்சார ஏக்கம்,  தாய்நாட்டு அடையாளம், அல்லது தனது குடும்ப உணர்விற்கான ஒரு பதிலீடு. அரேபியாவில் வசிக்கும் இந்தியர்களிடம் இரண்டு விஷயங்களைப் பெரும்பான்மையாகக் காணலாம். ஒன்று தங்கள் மத அடையாளத்தை உறுதிப்படுத்துவது. விளையாட்டாக சொன்னால், தமிழர்கள் இந்துவாக இருந்தால் பிஜேபி-யிலும், முஸ்லிம்களாக இருந்தால் பி.ஜே (பி. ஜெயுனாலாபுதின்) குழவிலும் இணைந்து விடுவார்கள். இவர்களுக்கு மதம் என்பது ஒரு அறிவாக, அறிதலாக, புலனாக மாறிவிடுகிறது. காரணம் தாய்மண் குறித்த ஏக்கம். குடும்பமற்ற தன்மையின் ஏக்கம். தனது சொந்தநிலத்துடன் ஏற்பட்ட பிணைப்பு. தனது தனிமை. அந்நியனாக உணர்வதால் வரும் அடையாளச்சிக்கல். இதனைத் தேசபக்தி சிண்ட்ரோம் அல்லது தேசபக்தி நோய்ககுறி அல்லது தாய்ஏக்கம் அதாவது பிறந்தமண் ஏக்க இடிபலாக்க நோய்ககுறி என்றும் சொல்லலாம். காந்தி இதிலிருந்து மீண்டு தன்னை ஒரு மகா “ஆத்மாவாக” பதிலீடு செய்ததில்தான் தனது வெற்றியையும் தோல்வியையும் அடைகிறார்.

காந்தி என்ற குறியீடு புனித இந்து மதவாத தீர்க்கதரிசன பிம்பமாகவும், பயனற்ற காங்கிரஸ் அரசியல் பேரமாகவும் (சூப்பர் ஈகோ) மாற்றப்பட்டுவிட்டதால். காந்தியை விட்டுவிட்டு காந்தியத்தை மறுவாசிப்பு செய்து புத்தாக்கம் செய்யும் பணியை இந்நூல் செய்கிறது.

பிரேம் முன்னுரையில் சொல்வதைப்போல ஓவர் இண்டர்பிரட்டேஷனாக சில இடங்களில் தோன்றினாலும், வாசிப்பின் சுதந்திரம், பிரதியை மறுகட்டமைப்பு செய்வது விடுதலைக்கான அரசியலின் பகுதி என்றவகையில் சரியானதும் ஏற்புடையுதுமான ஒன்றே.

காந்தி தன்னுருவாக்க முனைப்பிலிருந்து கூட்டுருவாக்க நிலைக்கு நகர்ந்து செல்லும் வினையைப் பற்றிய ஒரு சமூக,அரசியல், உளவியல் ஆய்வு இது. இதில் காந்தியின் தன்னுருவாக்கம் காந்தியம் என்கிற கூட்டுருவாக்கமாக மாறிச்செல்லும் புள்ளிகள் நுணுக்கமாக, காந்தியின் வாழ்நிலையை ஆராய்ந்து மிகவும் கவனமாகவும், சமூக,அரசியல்,பொறுப்புணர்வுடனும் விடுதலை ஏற்பு அரசியல் அறிவுச் செயல்பாட்டுடனும் எழுதப்பட்டுள்ளது. இதில் விடுதலை ஏற்பு அரசியல் அறிவுச்செயல்பாடு என்பது முக்கியமானது, கவனத்தில் இருத்த வேண்டிய ஒன்று. இந்த நூல் அத்தகைய ஒரு செயல்பாட்டை முன்வைக்கிறது.

காந்தியை மகாத்மாவாகவோ அல்லது புனிதராகவோ அல்லது மத தீர்க்கதரிசியாகவோ முன்வைக்காமல் அவரது கோட்பாட்டுக் கருத்தாக்கங்கள் எப்படி எதிர்காலத்திற்கானதாக முன் அனுமானிக்கப்பட்டுள்ளது என்பதை நுட்பமாக வாசித்துக் காட்டும் நூல் இது. பிரேமின் மொழிப்புலம் காந்தியை மகாத்மாவாக ஏற்க மறுப்பதையும் இந்த நூலில் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

காந்தியின் ஆகப்பெரும் கனவாக நான் கருதுவது அவர் தன்னை ஒரு தீர்க்கதரிசியாக தனக்குள் உருவாக்கிக் கொண்ட வேட்கை பிம்பமே. அதாவது, காந்தி தனக்குள் தன்னை உருவகித்துக்கொண்ட பிம்பம்.  தான் ஒரு ஏசு அல்லது முகமதுநபி போன்று இந்தியாவிற்கான ஒரு தீர்க்கதரிசியாக மாறிவிட வேண்டும் என்பதே. இப்படி எண்ணுவது சுயநலம் சார்ந்த வேட்கை அல்ல. சகமனிதர்களின் துயரம் தாங்கமுடியாத மனதின் உக்கிரம் கொள்ளும் ஒரு பிம்பம். தானற்று பிறராகுதலால் உருவாகும் ஒரு சொல்லொன்னாத் துன்பநிலை. புத்தனுக்கு ஏற்பட்டதைப்போல, தன்னறிவு அற்ற நிலையில் உருவாகிப் படியும் வேட்கை. அந்த வேட்கை கொள்ளும் ஒரு பெருங்கனவு. அதில் உருவாகும் தன்னமைவு சமூகத்தை முன்னோக்கி நகர்த்தக்கூடியது. அது ஒரு திட்டமிட்ட செயல் அல்ல. தனது உள்மன அவசத்தில் ஒரு பேரமைதி கொண்ட மனதை உருவாக்கிக் கொள்ள முனைவது. காந்தியின் தன்னுருவாக்கம் பற்றி முதற்பகுதிகளில் விவரிக்கும் பிரேமின் இந்த நூல் இப்புள்ளிகளைத் தடம்காண முனைகிறது, அல்லது தடமாக விட்டுச்செல்கிறது.

நவீனத்துவச் சொல்லாடலில் காலாவதியாகிப்போன தீர்க்கதரிசி என்கிற பிம்பத்தை ஒரு அரசியல் செயல்பாட்டுக்களத்தில் நவீன சிந்தனைகளுடன் புத்தாக்கம் செய்ய முயன்றவர் காந்தி என்பதே எனது கருத்து. எனது “புராதனத்தாயாக விரும்பிய நவீனத் தந்தை- காந்தியின் உடலரசியல் பற்றி.” என்ற  கட்டுரையில் இந்தக் கருத்தாக்கத்தைதான் தொட்டுச்செல்ல முயன்றிருக்கிறேன். இந்த நூலை வாசித்தபின் அந்தக் கருத்து எனக்குள் உறுதிப்பட்டது மட்டுமின்றி, அது ஒரு மதிப்புக்கூடிய சொல்லாடலாக மாறியுள்ளது. பொதுவாக ஒரு மார்க்சிய இடதுசாரி என்ற வகையில் காந்தியின்மீது இருந்து ஒருவித குறைவான பார்வை (அதை ஏளனப்பார்வை என்றுக்கூடச் சொல்லலாம்) முற்றிலும் தகர்ந்துபோய்விட்டது.

காந்தி ஒரு இந்திய மதத்தைக் கட்டமைக்க முயன்றதைப் பற்றி பிரேம் இதில் விவரிக்கிறார். இந்துமதம் என்று காந்தி முன்வைத்தது இன்று நாம் புரிந்துகொண்டிருக்கும் மரபான இந்துமதம் அல்ல என்று தனது பின்நவீனத்துவ வாசிப்பில் சிதைவாக்கம் செய்து முன்வைக்கிறார். காந்தி ஒருவகையில் பிராமண மேலாதிக்க இந்துமதத்தைத் தனது  தந்திர மொழியில் கீழ்நிலையாக்கி, தலைகீழாக தாழ்த்தப்பட்டவர்களை உள்ளடக்கிய ஒரு இந்து சமதர்ம மதத்தை உருவாக்க முயன்றார். சமதர்மம் என்பதை சோசலிஷம் என்கிற ஆங்கிலச் சொல்லிற்கானதாக நான் இங்கு ஆளவில்லை. பிராமண இந்துமதத்தின் அடிப்படையான  “தர்மா” வில் இல்லாத சமநிலை என்பதை இணைத்து சம “தர்மம்” என்கிறேன். காந்தியின் இந்து மதம் அதாவது இந்திய மதம் நுட்பமாக பழமைவாத பிராமண இந்துமதத்தை ஒழித்துவிடும் என்றுணர்ந்த இந்துத்துவ அடிப்படைவாதச் சக்திகள் காந்தியைக் கொன்று தங்கள் தர்மத்தையும் மகாத்மாவையும் காத்தன என்பது வரலாறு. மகாத்மாவாகத் தொடர தான் இயற்கையாக இறக்கக்கூடாது என்று தனது மரணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தவர் காந்தி.

நண்பர் பிரேம் முன்வைக்கும் காந்தி பற்றிய பிம்பம் இந்தப் புள்ளியை வெட்டிச் சென்று காந்தியின் செயல்படு அரசியலான காந்தியம் என்கிற கோட்பாடு பற்றிய வரையறையைச் செய்ய முனைந்துள்ளது. அந்த வரையறையினை இந்திய அரசியல் எப்படித் தந்திரமாகக் காந்தியைப் புனித பிம்பமாக்கி காந்தியத்தை நிராகரித்துவிட்டது என்பதை இந்நூல் சுட்டிக்காட்டுகிறது. இன்றைய இந்திய அரசியலுக்குக் காந்தி என்ற பிம்பம் தேவை, ஆனால் காந்தியம் தேவையில்லை என்பதைச் சுட்டிக்காட்டுகிறார் பிரேம். ஆனால் விடுதலை ஏற்பு மாற்று அரசியல்வாதிகளுக்கோ காந்தியம் தேவை , காந்தி தேவையில்லை.

முன்னுரையில் பிரேம் “பின்நவீன, பெண்ணிய, மார்க்சிய உளப்பாங்கு உள்ளவன்” என்று தன்னை முன்வைக்கிறார். இதில் உளப்பாங்கு என்ற சொல்லாட்சி முக்கியமானது. ஒரு சிந்தனைமுறையை வழிகாட்டுதல் முறையாகக் கொண்டு ஒன்றை ஆராய்வது இயல்பானது. ஆனால் அந்த சிந்தனைகளைத் தனது உளப்பாங்காக கொள்வது என்பதே முக்கியமானது. இது ஒருவகையில் ஆதல் என்கிற “பிக்கமிங்” என்ற நிலை. பிரேமின் இந்த ஆதல் என்கிற நிலைதான் அவரது எழுத்துக்களின் ஒரு தனிச்சிறப்பான தன்மை என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

இன்று உலகமய குப்பைக் கூடங்களாக, கழிவுகளாக மாற்றப்பட்ட மூன்றாம் உலகில் காந்தியத்தின் பசுமை அரசியலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி அதை முதன்மைப் படுத்திக்காட்டுகிறார் பிரேம். இயந்திரங்கள் அற்ற சமூகத்தில் காந்தியத்தின் தேவைப்பற்றி பேசும் பகுதிகள் கொஞ்சம் கற்பனாவாதமாகத் தோன்றலாம். ஆனால், உலகம் அந்த நிலைக்கு நகரும் என்கிற ஊகத்தின் அடிப்படையில் அந்த கருத்தாக்கத்தை கவனத்துடன் பரிசீலிப்பது அவசியம் என்கிறார்.

நூல் பற்றிய அறிமுகத்தில் காந்தியம்-மார்க்சியம்-அம்பேத்கரியம் என்கிற இந்தியாவின் மூன்று முக்கிய முரண்கள் பற்றிப் பேசுகிறார். இன்று அம்பேத்கரியம் பொதுச்சிந்தனையில் ஒதுக்கப்பட்டுள்ளது. காந்தியம் புனிதப் பெருஞ்சொல்லாடலாக மூடப்பட்டுவிட்டது. மார்க்சியம் நீர்த்துப்போகச் செய்யப்பட்டு உள்ளது என்கிற அவதானிப்பு முக்கியமானது. இந்த முப்பெரும் கோட்பாடுகளை இணைத்து ஒரு புதிய வழிகாட்டும் அரசியல் நெறிமுறையை, வாழ்தலுக்கான கோட்பாட்டை உருவாக்க முனையும் மாற்றுச் சிந்தனையாளர்கள் கவனம் குவிக்க வேண்டிய பகுதி இது. பெரியார், காந்தி, அம்பேத்கர் இணைப்பு பற்றிப் பேசுவதில் உள்ள சிக்கல்கள் கூட ஆராயப்படவேண்டிய முக்கியப் புள்ளிகள்.

நூலின் முக்கியமான பகுதியான காந்தியின் தன்னுருவாக்க அரசியல் பகுதிகள் மிகவும் கவனத்துடன் உள்வாங்கப்பட்டு எழுதப்பட்டு உள்ளது. காந்தி உருவான வரலாற்றைச் சொல்லும் இந்த முதல் பகுதியில் ஒரு சமூக-அரசியல்-உளவியல் பார்வை விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது. இந்தியச் சமூகத்தின் முற்றுப் பெற்ற நிலைபற்றிய வர்ணனையில் துவங்கி, தனிமனிதர்கள் தேவையில்லை என்ற நிலைக்கு நகர்ந்து, கூட்டுநினைவு என்பதாக மாறும் காந்திய உளவியல்புகள் விவரிக்கப்பட்டுள்ளன. இந்திய தனிமனித உருவாக்க அரசியலில் காந்தி மற்றும் காந்தியத்தின் பங்களிப்புகள் பற்றிப் பிரேம் முன்வைக்கும் பார்வைகள் அசாத்தியமானவை. இந்தியாவில் அத்வைதம் கண்டுணர்ந்த தனிமனிதன் என்பதைக் காந்தி நவீன அரசியலில் மீட்டுருவாக்கம் செய்கிறார். சாமான்யர்களை சுதந்திர, சமஉரிமை, ஜனநாயக உணர்வுகொண்ட நவீனத்துவத்தின் தனிமனிதர்களாக கொள்கை, கோட்பாடு கொண்ட வரலாற்று அரசியல் தன்னிலைகளாக மாற்றியது காந்தியே.

காந்தி மிகைமனிதராக, அதிமனிதராக பல முரண்கொண்டவராக இருப்பதற்கான அவரது உளவியல் பின்னணிகளை விவரிக்கும் பிரேம் அதிலிருந்து அவர் தன்னை உருவாக்கிக்கொண்ட வரலாற்றை நுட்பமாக விவரித்துச் செல்கிறார். மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி “காந்தியாக” மாறிய அந்த தன்னுருவாக்க வரலாறு மிகவும் சுவராஸ்யமாகவும் அதே நேரத்தில் அதிக கவனத்துடனும் முன்வைக்கப்பட்டு உள்ளது.

நான் வாசித்த காந்தி பற்றிய நூல்களில் அதிகம் கவனம் கொள்ளாத ஒரு முக்கிய தடம் ஒன்றை சரியாகக் கண்டுணர்ந்து விவரிக்கிறார் பிரேம். இது அவரது அசாத்தியமான அறிவின், வாசிப்பின், சுயச்சிந்தனையின் பின்புலத்தில் உருவான ஒன்று. நவீனத்துவம் உருவாக்கிய தனிமனிதன் குற்றம் மற்றும் குற்றம் பற்றிய உணர்வு, அதாவது குற்றஉணர்வு என்பதின்மேல்தான் கட்டப்பட்டு உள்ளான். இதன் பின்புலம் மேற்கத்திய கிறித்துவத்தின் பாவமன்னிப்பு கருதுகோளே. மனிதப் பிறப்பே பாவத்தில்தான் உருவாகிறது என்பதே அதன் அடிப்படை. இந்தியச் சமூகத்தில் பாவமன்னிப்பு இல்லை, பரிகாரம் உண்டு. பாவமன்னிப்பு தனிமனித உணர்வோடு சேர்ந்தது என்றால், பரிகாரம் அந்த அமைப்பின் விதிகளோடு சேர்ந்தது. பரிகாரத்தில் அமைப்பு உளவியலே முதன்மையானது. காந்தி இந்த பரிகாரவாதத்தை நீக்கி உண்மையின் முன் நிர்வாணமாக நிற்பது என்கிற தனிமனித உளவியலை முன்வைக்கிறார். இது இந்திய மனிதனின் நவீன மனசாட்சியாக உருவமைகிறது. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு உண்மை உள்ளது, அதைக் கண்டுணர்வதே காந்தி முன்வைத்த சத்தியம்.

பிரேம் கூறும் இந்தியா போன்ற முற்றுப் பெற்றுவிட்டதான எண்ணத்தில் உள்ளஇ முழுமையடைந்துவிட்டதான மூடுண்ட ஒரு அமைப்பில் காந்திதான் குற்றஉணர்வு என்ற ஒரு புதிய மனப்புலத்தை வெளிப்படுத்திக் காட்டுகிறார். இதுதான் தனிமனிதனை அவனது எல்லாவித அமைப்புப் பாதுகாப்பிலிருந்தும் விலக்கித் தனியனாக ஆக்கி அச்சம் கொள்ள வைக்கும் ஒன்று. அந்த அச்சத்தின்முன் கடவுளும் அருகதையற்றவனாகிவிடுவான். அந்தத் தனிமையில் உணர்வது உண்மை, சத்தியம் மட்டுமே. காந்தி இந்த மனப்புலத்தைத் தனது வாழ்தலின்மூலம் இந்தியச் சமூகத்தில் கட்டமைத்தவர் என்பதே முக்கியம்.

காந்தியம் உருப்பெற்ற தளம் விளிம்பை மையத்திற்கும் மையத்தை விளிம்பிற்கும் நகர்த்தியது, இந்தக் குற்றணர்வுத் தளத்தை காந்தி மாற்றியமைத்தார். இதுவே அரசுமையவாதிகள், அடிப்படைவாதிகள் காந்தியை எதிர்க்கக் காரணம் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது இந்த நூல்.

காந்தி குறித்த எனது தனிப்பட்ட வாசிப்பில் காந்தி உண்மையைத் தேடும் தனது பயணத்தில் தனக்குள் இருந்த ஒரு நவீன மனிதனுடன் போராடிக் கொண்டேயிருந்தார். அவரது ஆளுமை ஒரு பிளவாளுமைத் தன்மை கொண்டது. அதாவது சீசாய்ட் தன்மை கொண்டது. தனக்குள் ஒரு தீர்க்கதரிசியை ஒரு மதபோதகரை பிம்பமாகக் கொண்டு சிந்தித்தவர் என்பதால் எப்போதும் மனிதனாக இருப்பதின் வாதையை உணர்ந்தவராக இருந்தார். மனிதனும் தீர்க்கதரிசியும் அரசியல்வாதியும் ராஜதந்திரியும் சாமான்யனும் எனச் சூழலின் ஆளுமைக்கு ஏற்ப ஒரு குறிப்பிட்ட பிம்பம் முன்னிலை வகிப்பதை அவரது வாழ்வின் பல செயல்பாடுகள் முன்பின் முரணாக அமைந்ததிலிருந்து புரிந்துகொள்ளலாம். பிரேம் இந்நூலில் இந்த முரண்பட்ட நிகழ்வுகளைச் சமூக-உளவியல் பின்னணியில் விவரிக்கிறார். ஒரு இடத்தில் காந்தியிடம் இருந்த இந்த மனப்பிறழ்ச்சித் தன்மையைக்கூடச் சுட்டிக்காட்டுகிறார்.

காந்தி இந்திய மரபிற்கு வெளியே தனிமனிதத் தேடல் அதாவது இறைவனை நேருக்கு நேராக அறிதல் என்கிற புதிய வழியை முன்வைத்தார். அதாவது நவீனத்துவ வழியை முன்வைத்தார். இந்தியக் குழு, சாதி அமைப்பிலிருந்து தனிமனிதனை பிரித்தெடுக்க முயன்றார். ஆனால் இந்திய மரபை அவர் மீறினாரா? என்பது விவாதத்திற்கு உரியது.  பிரேமின் இந்த வாசிப்பில் இந்திய மரபை அவர் பல இடங்களில் மீறியதைச் சுட்டிக்காட்டி உள்ளார். அவை இன்னும் ஆழ்ந்த உரையாடலுக்கு உரியவையாக உள்ளன.

காரணம், காந்தி ஒரு புதிய சிக்கலை அடைந்தார். அதாவது நவீனமனிதனை இந்திய மரபிற்குள் மறுவரையரை செய்வதன்மூலம் ஒரு புதிய தீர்க்கதரிசனத்தை ஒரு புதிய நவீன மதத்தை (புதிய என்பதும் நவீன என்பதும் ஒன்றல்ல. நவீன கருத்தியலுக்கான புதியமதம் என்பதே) உருவாக்க முயன்றார். அதன் உள்ளுரையாகவும் வெளிச்செயலாகவும் அவருக்கு ஆசிரமும் அரசியலும் அமைந்தன.  இந்த இரண்டிற்குள்ளும் ஒரு இணக்கமின்மை இருப்பது அவருக்குள் ஒரு இன்மையை போதாமையை உருவாக்கிக்கொண்டே இருந்தது. இந்தப் போதாமையைக் காந்தி எப்படித் தனது செயல்களின் வழியாக பதிலீடு செய்தார் என்பதை இந்நூலில் நுட்பமாக விவரிக்கிறார் பிரேம்.

பிரேம் காந்தியின் நிகழ்த்துநிலை ஆன்மீகம் என்ற ஒன்றை விவரிக்கிறார். அதை ஒரு முன்நவீனத்துவ மதம் சார்ந்த சொல்லாடலுக்குள் வைக்காமல் நவீனத்துவ பகுத்தறிவுச் சொல்லாடலுக்குள்ளும் வைக்கமுடியாமல் பின்நவீன சொல்லாடலாக்க முனைகிறார். இது விரிவாக நூலில் விவரிக்கப்பட்டு உள்ளது, வாசகர்கள் இதனை வாசித்து அறிந்து கொள்ளலாம்.

காந்தியை நவீனத்திற்குள் வைத்து ஆராய்ந்து அவரது பின்நவீன நிலைக்கான தயாரிப்புகளாக இந்திய மரபை இணைக்க முயன்றதின் ஒரு வரைபடமாகவே துவங்குகிறது இந்நூல்.

“இறைமறுப்பாளருக்கு கடவுள் இறைமறுப்பாளராக இருக்கிறார்” என்ற காந்தியின் இவ்வாசகம் முக்கியமானது. கடவுளின் நீக்கமற நிறைந்த தன்மையை முன்வைப்பதன் மூலம் போதாமை என்பதை நிறைவு செய்யமுயல்கிறார். காந்தி தனது மதமாக அறிவித்தது உண்மையையே என்பதை அவரது குறிப்புடன் சுட்டுகிறார் பிரேம். ஆனால் உண்மை என்று காந்தி முன்வைப்பது சத்தியம் என்கிற இந்திய மரபில் உள்ள நித்தியம் அல்லது நிரந்தரம் சார்ந்த ஒரு கருத்தாக்கமே. உண்மை என்பது ஒரு சார்பியல் சார்ந்த நவீனச் சொல்லாடல் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். காந்தி சொன்னது நித்தியமான ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் உள்ள சத்தியம். அல்லது அதன் நவீன வடிவமாக உள்ள மனசாட்சி என்பதே. தனக்கு ஒருவன் உண்மையாக இருப்பதன்மூலம் மொத்த சமூகத்திற்கும் உண்மையானவனாக இருக்க முடியும் என்பதே. இந்த புள்ளிகளில் இன்னும் ஆழ்ந்த கவனம் செலுத்தப்பட வேண்டும். காந்தியின் மனித பிம்பம் நவீனத்துவ மனதும் மரபான உடலும் கொண்டது. மனது விகசிக்கவும் உடல் ஒடுங்கவுமானது.

காந்தி குற்ற உணர்வையும் போதாமையையும் இந்தியச் சமூகத்தில் முன்வைத்தார் என்பது ஒரு முக்கிய ஆய்வுப்புள்ளி என்றால், நவீனநிலையை இந்தியவயமாக்குவது காந்தியின் செயல்திட்டம் என்பதைக் கண்டறிந்தது பிரேமின் மற்றொரு முக்கிய ஆய்வுப்புள்ளி. அதாவது காந்தி தன்னையறியாமல் ஒரு இந்திய நவீனத்துவத்தை கட்டமைக்க முயன்றார் என்பதே. இங்குதான் காந்தியை முழுமையாக தலைகீழாக்குகிறார் பிரேம். அதாவது காந்தியைச் சிதைவாக்கம் செய்து, வெளியில் மரபாக தோன்றுவதற்குள் உள்ள நவீனத்துவ வேட்கை நிலையை வெளிப்படுத்திவிடுகிறார். ஆக காந்தி நவீனத்துவத்தின் எதிரி அல்ல. அல்லது ஒரு மரபான மதவாதி அல்ல. நவீனத்துவத்தின் மேற்கத்தியவாதத்தை அதன் பகுத்தறிவுக் கருத்தியலை நீக்கி இந்திய நவீனத்துவத்தை மரபான சிந்தனைகளிலிருந்து கட்ட முயன்றவர். இதில்தான் அவரது தேசியம் என்பதும் உள்ளது. இது விரிவான ஆய்விற்கு உரியது என்பதை மட்டும் பதிய வைப்போம்.

காந்திக்கும் அவரது தந்தைக்குமான உறவு பற்றிய அலசல். இதனைப் பல உளவியலாளர்கள் ஆராய்ந்துள்ளனர் என்ற போதிலும் இதனை பிரேம் காந்தியின் இணைமுரணாக முன்வைக்கிறார். இதில் பரவலாகப் பேசப்படும் பிராய்டை பயன்படுத்தி காயடிப்பு மனநிலை என்று ஆராயும் பணியைத் தவிர்த்திருப்பது ஆறுதலானது. காந்தியின் தந்தைக்கும் தாய்க்கும் இடையிலான உறவு காந்தியின் தன்னுருவாக்கத்தில் முக்கிய பங்காற்றி உள்ளது என்பதைக் கவனத்தில் இருத்திக்கொள்ள வேண்டும்.

காந்தி “ஆங்கில கல்விபெற்ற பிரிட்டிஷ்-இந்திய அறிவுத்திட்டத்தின் உற்பத்தி” என்பதைச் சொல்லும் பிரேமின் கருத்து முக்கியமானது. காந்தியின் தந்திர உத்திகள் மரபு-நவீனம் இரண்டிலும் இயங்க உருவானது பற்றிய விவரிப்பும் முக்கியமானவை. குழந்தை மன இயல்பில் உருவாகும் பிறழ்ச்சி பற்றிய விவரணைகளும் கூட.

பக்கம்–40-ல் காந்தி மரபு மீறலையும் மாற்று வழக்குகளையும் தெரிவு செய்பவராக இருந்தார் என்று சொல்லும் பிரேம் காந்திக்கு ஒரு சலுகை அளிப்பதாகவே தோன்றுகிறது. மாற்று வழக்குகளைத் தெரிவு செய்தவர் மரபை மீறினாரா? காந்தி ஒரு அத்வைதி சனாதனத்தில் நம்பிக்கை கொண்டவர். வர்ணாஸ்ரம தர்மத்தை ஏற்றுக்கொண்டவர் என அவரே அறிவித்து உள்ளார். பிரேமின் இந்த அறிவுச் சட்டகத்திற்குள் இவற்றையும் உள்ளடக்கிக் கூறுவதன் மூலமே காந்தியை முழுமையாக இந்த சட்டகத்திற்குள் அடக்க முடியும். நூலின் இறுதியில் குறிப்பாக அம்பேத்கர் பற்றிய ஆய்வில் இதனை விவாதிக்கிறார். காந்தியின் மீதான விமர்சனமாக முன்வைக்கும் அதே வேளையில், வளர்ந்து வந்த பேரபாயமான இந்துத்தவ மதவாத சக்திகளுக்கு இது ஒருவகை ஊக்கமளித்தலாக மாறும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

எனது வாழ்வே எனது செய்தி என்கிற காந்தியின் வாசகத்தை பிரேம் தலைகீழாக்குகிறார், செய்தி சொல்வதே வாழ்க்கை என்பதாக. ஒருவகையில் இந்தப் புள்ளி முக்கியமானது. தனது வாழ்வை ஒரு அரசியல், சமூக, மத ஆன்மீகச் செய்தியாக முன்வைப்பது. இதனை முகமது நபிகள் தனது இறுதிப் பேருரையில் அறிவித்த சுன்னா எனப்படும் “எனது வாழ்வே உங்களுக்கு வழிகாட்டி” என்பதோடு ஒப்பிடலாம். தன்னை முன்னுதாரணமாக்கிக் கொள்ளும் ஒரு வழிகாட்டும்முறை என்பது தன்னுணர்வுமிக்க தீர்க்கதரிசிகளுக்குச் சாத்தியமானதே. தீர்க்கதரிசிகள் வாழ்தல் புலத்தை கட்டமைப்பவர்கள் என்பதால் தமது வாழ்வை ஒரு செய்தியாக முன்னுதாரணமாக மாற்றி விடுகிறார்கள். அல்லது அவரது வழித்தோன்றல்களால் மாற்றப்பட்டு விடுகிறார்கள்.

நான் மிகவும் ரசித்த வரிகள் பிரேமின் படைப்புணர்விற்கு ஒரு சான்றாக இதை சுட்டலாம். பக்.80–ல் “காந்தியின் பரிசோதனை முடிந்து காந்தியின் மீதான பரிசோதனை தொடங்கும் இடம்” என்று சத்தியசோதனை முடிந்தவுடன் துவங்கும் அவரது அரசியல் வாழ்வு பற்றி சொல்லப்பட்டுள்ள வாசகம்.  காந்தியின் வரலாறு முடிந்து, வரலாற்றில் காந்தி உருவாகும் புள்ளியை அற்புதமாக, ரத்தினச் சுருக்கமாக சொல்லிவிடுகிறது. இது போன்ற இயங்கியல் முரணாக அமைந்த பல வாக்கியங்கள் இந்நூலில் மொழியழகை விரும்பும் இலக்கிய வாசகர்களுக்கு விரவிக் கிடக்கிறது.

பக். 87-ல் காந்தி உண்மையுடன் நடத்திய சோதனைகள் முடிந்து உண்மை காந்திக்கு வைக்கப்போகும் சோதனைகள் இங்கு தொடடங்கின என்கிறார் பிரேம். இதுவும் இலக்கிய ரசனையுடன் சொல்லப்பட்ட இயங்கியல் முரணை உள்ளடக்கிய ஒரு வாசகம். இத்தகைய வாக்கியங்களை திறப்பு வாக்கியங்கள் (key statement) எனலாம்.

“தேசபக்தி என்பது என்னைப் பொறுத்தவரை அனைத்து மக்களுக்குமான நல்வாழ்வு. அது ஆங்கில ஆட்சிவழியாகக் கிடைக்குமெனில் அதை தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறேன்.” இதுபோன்ற காந்தியின் வாசகங்களை பொறுத்தமான இடங்களில் பயன்படுத்தி அதை விவரிக்கும் பகுதிகள் முக்கியமானவை. காந்தி விடுதலை, தேசபக்தி பற்றி கொண்டிருந்த கருத்து இன்று சொல்லப்படும் இந்திய தேசபக்தி என்கிற மட்டைப்பந்தாட்ட தேசபக்தியோ, மாட்டை வெட்டாதே மனிதனை வெட்டு என்கிற இந்துத்துவ பாசிச தேசபக்தியோ அல்ல. சுயநலமற்ற மக்கள் நலத்தில் அக்கறைக் கொண்ட தன்முனைப்புவாதமற்ற தேசபக்தி. சகமனிதனின் துயரத்தை தனதானதாக ஆக்கிக்கொள்ளும் ஒரு வேட்கைப் பரவசநிலை.

காந்தியம் என்றால் என்ன என்பதை விவரிக்கும் பிரேம் “காந்தி வறுமை, அடித்தளமக்கள் வாழ்வாதாரம் என்பதை அரசியல் சொல்லாடலில் இணைக்கிறார் ” (பக்.98) என்றும் காந்தியம் என்பது அடிப்படை ஆன்மீகவிடுதலை, அடிமைத்தனத்திலிருந்து விடுதலை, ஏழ்மையிலிருந்து விடுதலை, மனமும் உடலும் ஆன்மாவும் இணைந்த சத்தியாக்கிரகம் என்று ஒரு கோட்பாட்டு சட்டகத்தைத் தருகிறார். இதன் அரசியல் சமூக விளைவாக அம்பேத்கர் இந்திய அரசியல் சட்டத்தை எழுத காந்தியம் களம் அமைத்துக் கொடுத்தது என்கிறார்.

காந்தியம் என்பது காந்தியின் உடல்மைய அரசியல், மனிதமைய ஆன்மீகம், அறமைய இறையியல், இயற்கைமையப் பொருளாதாரம் என்கிற நான்கு மையங்களைக் கொண்டது என்றும் விவரித்துச் செல்கிறது இந்நூல்.

பக்-136-ல் காந்தியும் மார்க்சும் வரலாற்றை வேறுவிதமாகப்பார்த்தாலும் இரண்டும் போரற்ற அமைதியான உலகம் என்ற ஒன்றையே முன்வைத்தனர் என்கிறார். மார்க்சின் வர்க்கமாதல் என்ற செயலின் முதல் நிலையாகக் காந்தியை முன்வைக்கிறார். அதாவது வர்க்கமயமாதல், வர்க்க அறமாதல் என்ற போக்கில். மார்க்ஸ் சொன்ன தத்துவவாதிகள் பற்றிய குறிப்பில் உலகை விளக்குதலும் மாற்றுதலும் ஒன்றாகிவிடுகிறது காந்திக்கு. விடுதலையை தேர்ந்தெடுத்தவருக்கு அடிமைநிலை ஒன்றும் செய்யாது என்கிற காந்தியத்தின் நிலை அது.

இந்திய சுயராச்சியம் என்ற காந்தியின் மிக முக்கியமான நூல் ஒரு கோட்பாட்டு நூலாக முன்வைக்கப்படுகிறது. சமீபத்தில் செம்பதிப்பாக வெளியிடப்பட்டுள்ள இந்த நூல் உலக அளவில் விவாதிக்கப்படுகிறது என்பது முக்கியம். காந்தியத்தை இந்த நூலைச் சிதைத்து வாசிப்பதன்மூலம் வெளிப்படுத்துகிறார் பிரேம். குறிப்பாக இந்த நூல் விவாதத்தை விரிவாக செய்து உள்ளார். காந்தியின் தன்னுருவாக்க வினையை சத்திய சோதனை நூலையும் கூட்டுருவாக்க வினையை ஹிந்த் சுவராஜ் என்கிற இந்தியத் தன்னாட்சி என்கிற நூலையும் கொண்டு விவரிக்கிறது இந்நூல்.

வளர்ச்சி குறித்த அரசியல் கருத்தாக்கம் மற்றும் உயர்தொழில்நுட்ப எதிர்ப்பில் காந்தியம் பின்நவீன வாசிப்பு செய்யப்பட்டுள்ளது. பகுத்தறிவின், நவீனத்துவத்தின், நவீன அறிவியலின், அதன் விளைபொருளான தொழில் நுட்பத்தின் கொடுங்கோன்மை, ஒற்றை உலகமான உலகமயப் பொருளாதாரத்தில் இந்த நூல் எதிர்த்து பாய்ச்சம் வெளிச்சம் பற்றி விவாதிக்கப்படுகிறது.

மனித உடலின் எல்லைகளை விரிவுபடுத்தியதால் வந்தகேடு. கால் என்பதை பல வாகனங்களாக மாற்றியது. இதன் தொடர்ச்சியாக போர் பொறியமைவுகள் கட்டமைக்கப்பட்டன. மனித உடல் ஒரு போர் எந்திரமாக கட்டமைக்கப்பட்டது. இந்த கேட்டை காந்தி முன்னுணர்ந்ததை விவரிக்கிறது இந்நூல். ஒருவன் தனது அருகில் உள்ள மனிதனுக்கு உதவிசெய்தால் போதும். ஆணவமே உலகம் முழுவதும் உதவி செய்வதான எண்ணத்தை உருவாக்குகிறது என்கிறார் காந்தி. பொதுநலம் என்பதன் பிம்பத்தையும் தன்மதிப்பு சுகத்தையும் கேள்விக்கு உட்படுத்தி உலகின் ஓரமைவாக்க கருத்தியலை அதன் பிம்பத்தை போட்டு உடைக்கிறார் காந்தி.

குறிப்பாக இந்த நூலின் வாசிப்பில் நாம் அல்லது நான் இடர்ப்படும் இடம், ஒரு காந்திய சார்புநிலை அல்லது காந்தியை விடுதலைக் கருத்தியலுடன் இணைத்துப் பார்த்து அவரது கோட்பாடுகளை ஆதரவாக அரவணைத்து செல்லும் ஒருபார்வை நூல்முழுவதிலும் இழையோடுகிறது என்பதே. அம்பேத்கர் பற்றிய பகுதிகளில் மட்டுமே இந்த நிலை மாறி விழிப்புக்குள்ளாகிறது பிரதி. மற்ற பகுதிகளில் காந்திய நிலையின் நியாயப்பாடுகளை முன்வைக்கிறது. சில இடங்கள் இயல்பாகவும், சில இடங்களில் இயல்புகடந்த வலிந்தேற்றலாகவும்.  காந்தியை பின்நவீன வாசிப்பின்மூலம் முன்நவீனச் சிந்தனைகளை பிரேம் மறுஉரை செய்கிறாரோ என்கிற எண்ணத்தை தவிர்க்க முடியவில்லை.

விஞ்ஞானம் பேரழிவை உருவாக்கியது என்பதும் இயற்கையை அழித்தது என்பதும் பிரேம் சொல்வதைப்போல போக்குவரத்து தொழில்நுட்பம் 100 ஆண்டுகளில் 3000 ஆண்டுகளுக்கான அழிவை சாதித்துவிட்டது என்பதும் மறுக்கமுடியாத உண்மை. இதை எந்த அளவிற்கு மறுக்கமுடியாதோ அதே அளவிற்கு இதற்கான மாற்று வாழ்தல் என்ன என்கிற கேள்வியும் உள்ளது. மாற்று வாழ்தல் என்பது இயற்கையோடு இணைந்து காலால் நடக்க முடிந்த எல்லைவரை நடந்து தொடர்புகொள்ளும் சிறுசூழல் அமைப்புகளில் மட்டுமே வாழ்வது. இது சாத்தியமா? என்கிற கேள்வி அர்த்தமற்றது. சாத்தியப்படுத்த முடியுமா? என்கிற கேள்வியும் அனர்த்தமானதே. காரணம் உலகம் உருவாகிவிட்டபின், அதற்கான குறியமைப்புகளில் இயங்கத் துவங்கியபின், மறுபடியும் புராதன வாழ்க்கமுறைக்கு செல்வது என்பது முற்றிலுமான மனப்பிறழ்ச்சிக்கு மொத்த சமூகமும் மாறி நினைவழிக்கப்பட்ட நிலையில் மட்டுமே சாத்தியம் என்று தோன்றுகிறது.

நாடோடிகள்கூட இடப்பெயர்ந்து அலைதலைத்தான் தங்கள் வாழ்புலமாகக் கொண்டார்கள். இன்றைய சமூகத்தில் நாடோடிகளுக்கான ஒரு தன்னிலை அமைப்பாக காந்தியின் இந்த தன்னாட்சிக் கோட்பாட்டை மறுஉரை செய்து பார்க்கலாம். ஆனால், அதற்கு முன்பாக காந்தியிடம் உள்ளடங்கியருந்த மதச்சார்புநிலையை குறிப்பாக இந்துமத உணர்வையும் இந்துமதம் என்று அவர் இன்றை இந்திய பெருமதத்தை குறிக்கவில்லை என்றாலும், அது இந்துத்துவா சக்திகள் வளர எந்த அளவிற்கு ஆழ்தள அமைப்பில் அல்லது மத நினைவூட்டலில் துணைபோய் உள்ளது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டியது அவசியம். காந்தியைப் பற்றிய எந்த ஒரு மறுவாசிப்பிலும் இதைக் கவனத்தில் கொள்வது அவசியம். இன்றைய பேரழிவு எந்திரமான இந்துத்துவ தீவிரவாத அமைப்புகள் கோரும் இந்தியனும் இந்து மதமும் ஒன்று என்பதுவே காந்தியின் நோக்கமாக இருந்தது. ஆனால் காந்தி இந்து என்பதை பன்மய நோக்கில் புத்தாக்கம் செய்தார். அவர்கள் அதை பிராமண மேலாதிக்க ஒற்றைமைய ஓரமைவாக்குகிறார்கள். குறிப்பாக பிராமண மேலாதிக்கமற்ற ஒரு இந்துமதமே காந்தியின் நோக்கமும் செயல்பாடும். அதுதான் அவரது உயிர் பறிக்க காரணமாக பிராமண சக்திகள் அமையும்படி வரலாறு நிகழ்த்திக்காட்டியது.

வாழ்நாள் முழுக்க இந்துமதத்தின் மேன்மைக்காக அதை நவீனப்படுத்தி அதன் கசடுகளைக் களைந்து புத்தாக்கம் செய்ய பாடுபட்ட காந்தி தனது மரணத்தின்மூலம் அதன் இந்துத்துவ கோரத்தை வெளிப்படுத்திக் காட்டிச் சென்றார். அந்தவகையில் காந்தி என்றும் வாசிப்பிற்கும் மறுவாசிப்பிற்கும் ஒரு மதச்சார்பற்ற உயரிய மதிப்பிற்கும் உரியவர்தான்.

காந்தியைக் கடந்த காந்தியம் என்ற தலைப்பிலேயே ஒரு விமர்சனம் உள்ளது. அது காந்தியம் காந்தியை கடந்த ஒன்று என்பதே. காந்தியின் இந்து மத உணர்வுகளை, இந்துமத ஆன்மீகப்பார்வையை, இந்துமதம்-இந்தியமதம் என்கிற இந்து உயர்நவிற்ச்சிப் பார்வையைக் கடந்து காந்தியம் என்கிற கோட்பாட்டை உரையாட இந்நூல் ஒரு துவக்கத்தை முன்வைத்துள்ளது.

நவீன உலகக்கட்டமைப்பின் அடிப்படையிலேயே அடிமைப்படுத்தலும் அழிவும் படிந்து கிடக்கிறது. ( பக். 153). அதனால் இயற்கையுடன் இணைந்த வாழ்வு இறைமையுடன் இணைந்த வாழ்வு என்கிற புராதன வாழ்முறையை அனுமானிக்கிறது காந்தியம். ”இந்தியா இந்த நவீன நாகரீகத்தை மறுத்துவிட்டு மெய்யான அறநெறிகளைக் கொண்டிருந்த தனது தொன்மையான வாழ்வியலுக்குத் ( ancient way of life ) திரும்பிச் செல்லுமென்றால் அந்த நொடியிலேயே அது விடுதலையடைந்து விடும்”  என்கிறார் காந்தி.

நவீன நாகரிகத்தைச் சமயத்தன்மையற்ற நாகரிகம் என்கிறார் காந்தி. சமயத்தன்மை என்பதே காந்தியின் அடிப்படைக் கருத்தியலாக இருந்துள்ளது. இயற்கை இறைமை இரண்டையும் இணைப்பது அதனால்தான். அவர் பகுத்தறிவை எதிர்த்து அதன் இருமை எதிர்வான சமயவாதத்தில் புகுந்துவிடுகிறார். சமயம் சரியா? தவறா? கடவுள் உண்டா இல்லையா? ஆன்மீகம், இறைமை போன்ற சொல்லாடல்களின் அரசியல் ஆகியவற்றின் கவனக்குவிப்புகள் இன்றி இவற்றைக் கையாளமுடியாது. இவை எல்லாம் முன்-நவீனக்கால சொல்லாடல்கள். காந்தி நவீனத்தை எதிர்க்க முன்நவீனக்கால கருவியான சமயத்தை கையில் எடுக்கிறார் என்கிற புள்ளியை கவனத்தில் கொள்ள வேண்டும். பின்நவீனம் மதம்போன்ற பெருங்கதையாடல்களை விமர்சிக்கிறது. அவ்வகையில் காந்தி ஒரு பின்நவீனத்துவர் அல்ல. ஆனால், இன்றை மையவாத கொடுங்கோன்மைக்கு எதிரான ஒரு பின்நவீனத்துவ வாசிப்பின் வழியாக காந்தியத்தை ஒரு சிறுசொல்லாடல் அமைப்பிற்குள் நிறுத்த முனைகிறது இந்நூல். அதனால் காந்தியத்தை ஒரு பின்நவீன ஆரம்பநிலைச் சொல்லாடலாக முன்வைக்கிறது.

நாடோடித்தன்மையும் குழுவாக வாழ்ந்த ஒரு பொற்கால நம்பிக்கையும் இணைக்கமுடியாது. வரலாற்றை மறுத்த காந்தி பண்டைய வரலாற்றை ஏற்கும் முரண்பாட்டை எப்படி பொருத்திப்பார்ப்பது? அதை உருவகம் என்பதாகச் சலுகை வழங்கிவிட முடியுமா? அது உண்மையில் உருவகமா? விடுதலை என்பது ஒவ்வொரு சமூகத்திலும் அன்றைய வரலாற்றுச் சொல்லாடலால் கட்டமைக்கப்படுவது. விடுதலை என்பதை எல்லா சமூகஅமைப்பிற்குமான ஒரு சொல்லாடலாக கொள்ளலாம். ஆனால் அதன் வடிவம், பொருள், இயக்கம், செயல்பாடு எல்லாம் ஒன்றாக இருப்பதில்லை.

இந்நூலின் குறிப்பான சில கவனக்குவிப்புப் பகுதிகளைப் பார்க்கலாம்.

பக். 157 ல் இந்தியாவில் தேசியவாதம் உருவானபோது அதில் இந்து மதவாதம் உள்ளடக்கமாக இருந்ததை சுட்டும் பகுதி முக்கியமானது.

பக்.158 ல் ஹிந்து சுவராஜ் புத்தகம் இந்துத்துவ வன்முறை இந்திய தேசியவாதத்திற்கு எதிரானதாகக் காந்தியால் முன்வைக்கப்பட்டது. காந்தி இந்துத்துவாவிற்கு எதிரான ஒரு கலாச்சார அடையாளமாக இந்திய  சுயராச்சியத்தை முன்வைத்தார்.

பக்-160 அம்பேத்கர், காந்தி இருவருக்கும் பயன்மதிப்பு மற்றும் நீதி குறித்து இருந்த  வேறுபாடு முக்கியமானது. அம்பேத்கர் இந்து மதத்தை பார்த்த விதமும் காந்தி பார்த்த விதமும் முக்கியமானவை. காந்தியின்நிலை இந்த இடத்தில்தான் சிக்கலடைகிறது என்கிற புள்ளியை சரியாகத் தொட்ட பிரேம் அதை விவரிக்காமல் காந்தியின் நிலைபாடுகளின் நியாயப்பாடுகளை அடுத்து விவரிக்கிறார். இந்த இடம் பிரேம் தனது அடுத்த பதிப்பிலாவது விரிவாக விவரிக்க வேண்டிய ஒன்று.

பக். 180-ல் 3 கேள்விகள் எழுப்பி பதில் சொல்லும் பகுதி மேற்கண்ட நாம் எழுப்பிய கேள்விகளை விவாதத்திற்கு உட்படுத்துகிறது. என்றாலும் அவை எல்லாவற்றையும் நவீன அறிவுவாதம் என்று ஒதுக்கிவிடுதல் மறுஆய்வு செய்யப்பட வேண்டும் என்கிற எண்ணத்தைத் தோற்றுவிக்கிறது.

காந்தியின் ஆத்மா பற்றிய விவாதத்தில் தர்க்கமுறையில் சொல்லுதலுக்கான சிக்கல்கள் உள்ளது. அதை பிரேம் இன்னும் ஆழமாக விளக்கவேண்டும். காந்தியின் ஆன்மா உடல் இணைமுரண்களை முரண்களற்றதாகக் காட்டும் பகுதிகளில் விடுபடுதல்கள் உள்ளது, அல்லது அப்பகுதிகள் முழுமையடையவில்லை. மீண்டும் ஆத்மா பற்றிய விளக்கத்தை மௌனமாக்கிச் செல்லும் ஒரு ஆன்மிகநிலையே உள்ளது. பகுத்தறிவால் அதை விளக்க வேண்டியதில்லை. அல்லது விஞ்ஞான சோஷலிஸத்தால் விளக்க வேண்யதில்லை. காந்தியக் கோட்பாடுகள் கொண்டே அதை விளக்க முயலலாம். அவற்றை உருவகமாகப் புரிந்து அழகியல், அரசியல் சொல்லாடலாக மாற்றுவது மீண்டும் ஒரு நம்பிக்கை அல்லது உணர்வு சார்ந்த ஒன்றாகவே எஞ்சுகிறது. மூன்று கேள்விகளும் மிக முக்கியமானவை, காந்தியின்மீது வைக்கப்பட்டவை. அவற்றை நவீன அறிவியல் கொண்டு விளக்க வேண்டியதில்லை. மாறாக அறம் நீதி போன்ற கருத்தமைப்புகளால் செய்யப்பட்டுள்ள விளக்கம் இன்னும் தர்க்கம்கூடியதாக இருக்க வேண்டும்.

பக். 192 – காந்தி இலங்கை உரைதான் மிகமிக முக்கியமானதாக நான் கருதுகிறேன். அதில்தான் காந்தி நேரடியாக இந்துத்துவ பழமை மீட்புவாதத்தை எதிர்த்து தனது குரலைப் பதியவைக்கிறார். அவர் மதமாக முன்வைப்பதை ஒரு தந்திர உத்தியாக பயன்படுத்துகிறார் எதிரியின் ஆயுதத்தைக் கொண்டே அவனைத்தாக்கி குழப்பமடைய வைக்கிறார். தான் ஒரு இந்து என்பதற்கான அறமதிப்பீட்டை உருவாக்குகிறார். அதன்பின் இந்து என்ற பெயரில் வரும் பழமைவாதத்தை மறுத்து சரியானது எனபதாக ஒரு புதிய இந்த தர்மத்தை முன்வைக்க முனைகிறார். அதில் தீண்டாமை இல்லை, பன்மையான மதங்களின் சமாதான சகவாழ்வு உண்டு. நவீனத்துவக் கேடுகளைக் களைவதற்கான பொருளாதார அமைப்பு உண்டு. ஆனால் அவை எல்லாம் எந்திரங்களற்ற தேவைக்கானதை உடல் உழைப்பில் மட்டும் அடைவது. சமூகத்தின் வளர்ச்சி என்ற குறியின் மேல்நோக்கிய அல்ல கீழ்நோக்கிய கோட்டை நேர்க்கோடாக்கி சமநிலையில் நிறுத்த முயல்வது. இவைதான் காந்தியம் என்றால் இந்துமத தாக்கம் கொண்ட அல்லது ஒரு உருவகமாக முன்வைத்த காந்தி என்பவரது வாழ்வை அது கடந்து சென்றுவிட்டது. இன்று நமக்கும் தேவை காந்தி அல்ல காந்தியமே. அல்லது பிரேம் முன்வைக்கும் உத்தியான காந்தியாதல் என்பது.

பக். 204 மாயவரம் பொதுக்கூட்டத்தில் பேசியது 1915. இந்துமதம் என்பதை வெளியிலிருந்து பார்க்கும் ஒரு பார்வை இதில் முன்வைக்கப்பட்டுள்ளது.

பக். 206 சாதி, வர்ணப்பிரிவினை பற்றிய காந்தியின் விளக்கம் தெளிவற்றதாகவும் குழப்பமாகவும் இருந்ததால் காந்தியச் செயல்திட்டம் என்பது தலித் விடுதலைக்கான அரசியலில் போதிய விளைவுகளை ஏற்படுத்தவில்லை என்கிற பிரேமின் வாதம் முக்கியமானது.

பக் 211 இந்த நூலின் மிக முக்கியமான ஒரு விவாதத்தை முன்வைக்கிறது. அது அம்பேத்கர் எப்படி காந்தியன் ஆன்மிக-அற-அரசியலை உள்வாங்கி தனது கருத்துக்களை வடிவமைத்துள்ளார் என்பது. காந்தியின் அரசியலில் ஏற்பட்ட பிழைகள் பற்றிய விமர்சனம் குறிப்பாக பூனா ஒப்பந்தம், இரண்டாம் வட்டமேசை மாநாட்டில் நடந்துகொண்டவிதம் ஆகியவை பற்றிய விமர்சனத்தை காந்தியம் உள்வாங்கி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதும் காந்தியையும் அம்பேத்கரையும் இணைப்பதற்கான முக்கிய தடையாக உள்ள அந்த இருள் பகுதிகள் வெளிச்சம் பாய்ச்சப்பட்டு விமர்சன, சுயவிமர்சனப் பாங்கில் ஒரு ஒத்திசைவிற்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பது முக்கியமான ஒரு கருத்தாக்கம்.

இது குறித்துப் பலரும் சுட்டிக்காட்டிய போதும் இந்துத்துவாவின் தாக்குதல் அச்சத்திற்கு உள்ளாக்கப்பட்டு உள்ள ஜனநாயகவாதிகள் பெரும்பான்மையான தாராளவாத இந்துக்கள், தலித் மற்றும் சிறுபான்மையினத்தவர்களான சீக்கியர்கள், கிறித்தவர்கள், இஸ்லாமியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், நாத்திகர்கள், மார்கசியர்கள், இடதுசாரிகள் அனைவரும் வலதுசாரியாக கருதிக்கொண்டிருந்த காந்தியத்தை இடதுசாரி சிந்தனை தளத்திற்குள் வைத்து ஒருங்கிணைப்பதன்மூலம் இந்துத்துவா முன்வைக்கும் இந்துமதக் குறியீடுகளை அதற்கான திரட்டல்களை வலுவிழக்கச் செய்துவிடமுடியும். அவர்களது ”இந்துமதப் பொற்காலம்” என்ற கருத்தின் பிற்போக்குச் சிந்தனைகளை உடைத்து தூளாக்கி சரியானதொரு இந்தியப் பொற்காலக் கனவை உருவாக்க முடியும். அதற்கு மார்க்சிய, அம்பேத்கரிய, காந்திய கருத்தியல் ஒன்றை உருவாக்கும் செயல்திட்டத்திற்கான அடிப்படைகளை இந்த நூல் அறைகூவுகிறது. காந்தியை நிராகரிக்கலாம் ஆனால் காந்தியத்தை ஏற்கலாம் என்கிற நிலைபாடே இந்தப் புத்தகம் முன்வைக்கும் புதிய செய்தி. காந்தி என்பது புனித பிம்பம். காந்தியம் என்பது எதிர்காலத்திற்கான மாற்று அரசியலை முன்வைக்கும் விடுதலைக்கருத்தியல். இதுதான் காந்தி பற்றிய பிரேமின் பின்நவீன வாசிப்பு முன்வைக்கும் கருத்தாக்கம்.

நண்பர்கள் இந்நூலை பொறுப்புடனும் கவனமாகவும் வாசிப்பதன்மூலமும் தொடர்ந்து உரையாடுவதன் மூலமும் விடுதலைக்கான அந்தப் புள்ளியை நோக்கி நகரலாம். அந்தவகையில் ஒரு செயல்திறன்மிக்க நூலாக இது உருவாகி உள்ளது. இதுவே இன்றைக்கான மாற்று அரசியலுக்கான தேடலின் முதல் புள்ளியாக இருக்கும். இது முற்றுமுடிவானது அல்ல. தேடலுக்கான துவக்கம் என்பதைச் சொல்லி வாய்ப்பினை தந்த அனைவருக்கும் கலந்துகொண்ட அனைவருக்கும் வணக்கத்தையும் நன்றியையும் சொல்லி முடிக்கிறேன்.

05-12-2013

ஒரு பிரதியியல் வாசிப்பு-பிரேம்

மாறுதல்களைக் கற்றறிதலும் கற்பித்தலும்  பண்படுத்தும் அரசியலின் ஒரு வகைமை
(குழந்தைகள் பெண்கள் ஆண்கள் நாவலை முன்வைத்து ஒரு பிரதியியல் வாசிப்பு)
 

பிரேம்

இலக்கியங்களின் பல்வேறு செயல்பாடுகளில் ஒன்றாகக் கற்பித்தல் என்ற செயல்பாடு என்றும் இருந்துகொண்டிருக்கிறது. ஒரு குறிப்பிட்ட காலத்திற்கான அறிவுருவாக்கத்திலும் அறிவுத்தேர்விலும் இலக்கியப் பிரதிகள் தெளிவான பங்கை அளிக்கின்றன. பல்வேறு அறிவுப் புலங்களுக்குள் எதனைத் தேர்ந்தெடுப்பது என்ற பகுத்தறிவு சார்ந்த கேள்வியை இலக்கியங்கள் நுண்தளத்தில் ஆய்வு செய்கின்றன. அழகியல், அறிவு, அறம் என்ற மும்மை உறவமைப்பில் அழகியல் என்பதில் தொடங்கி அறிவு குறித்த கேள்விகளை எழுப்பி  அவற்றிற்கு விளக்கங்கள் அளித்து அறம் குறித்த தேர்வுகளை நோக்கி ஒரு காலத்தின் மொழிப்புலத்தை இலக்கியம் நகர்த்துகிறது.

கருத்துருவ, கோட்பாட்டுச் சொல்லாடல்களும் கதையாடல்களும் இதனை அறிவுத்தளத்தில் தொடங்கி அறம், அழகியல் எனத் தம்மை விரிவுபடுத்திக் கொள்ளலாம். கலை-இலக்கியம் என்ற புனைவு சார்ந்த எடுத்துரைப்புகள் (Fictional Narratives) இதனைப் பன்மைத்தன்மை உடைய வடிவத்தில் நிகழ்த்திக்காட்டுவதன் மூலம் ஒற்றைத் தன்மை அற்ற கலப்பான கேள்விகளையும் அக்கேள்விகளுக்கான பல்வேறு பதில்கள் குறித்த தேர்வுகளையும் ஒரே தளத்தில் நிரவிக் காட்டுவனவாக செயல்படுகின்றன. செவ்வியல்-காப்பிய மரபுகள் அழகியல் என்பதில் தொடங்கி வாழ்வு, சமயம், அரசியல் சார்ந்த அனைத்து நெறிகளையும் பற்றிய சொல்லாடல் தொகுதிகளாகத் தம்மை அமைத்துக் கொள்கின்றன.

வரிமொழி மரபுகள் மட்டுமின்றி வாய்மொழி மரபுகள் மற்றும் நிகழ்கலை மரபுகள் அனைத்தும் ஒருவகையில் அறிவைப் பரப்புவனவாகவும் வாழ்வு குறித்த அனைத்துக் கூறுகளையும் பதிவுசெய்து வைப்பனவாகவும் பரப்புவனவாகவும் விளக்குவனவாகவும் செயல்படுகின்றன. அதனால்தான் இலக்கியம் என்பது அறிவுத்துறைகளில் ஒன்றாகவும் அறிவுருவாக்க முறைகளில் ஒன்றாகவும் தன்னை எப்போதும் வைத்துக்கொள்ள முடிகிறது.

நவீன கதைகூறல் முறைகளில் ஒன்றான நாவல்-நவீனம் என்ற கதை வடிவமும் தற்காலம் சார்ந்த பன்மைக் கேள்விகள் மற்றும் பன்மை பதில்கள் சார்ந்த மொழிக்கட்டமைவாகச் செயல்படுகிறது. மக்கள்மையத் தன்மை கொண்ட அரசியல் உருவாக்கிய கதைக்கூறல் என்ற வகையில் நாவல் தனிமனிதர் மற்றும் கூட்டமைவு (தனிமனிதர்- சமூக அமைப்பு, Individual-Social Structure) என்ற இருமைகளுக்கிடையிலான இயைபுகள், இணக்க மின்மைகள், முரண்கள் மற்றும் மோதல்களைப் பேசுவனவாக, விளக்குவனவாக அமைவது தவிர்க்க முடியாத ஒன்று. இதனை இன்னொரு வகையில் கூறுவதானால் நாவல் என்ற நவீன-நவீனத்துவ வடிவம் எப்போதுமே ஒரு முரண்பகுப்புச் செயல்பாடு (Critical and Analytical Function) கொண்டதாக முழுமையின்மைகளை எடுத்துரைப்பதாக  (Deliberation of Incompleteness) அமைவது தவிர்க்க முடியாததாக உள்ளது. இந்த முரண்பகுப்பு மற்றும் முழுமையின்மை சார்ந்த எடுத்துரைப்பு ஒருவகையில் ஜனநாயகத்தின் அடிப்படைகளில் ஒன்றான கற்றல்-கற்பித்தல் செயல்பாட்டின் ஒரு பகுதியாக அமைவது உண்டு. நவீன உளஅமைப்பை, நவீன அரசியல்-சமூக நடத்தையில்புகளை இந்தியச் சமூகங்களிடையே படிவிப்பதும் பழக்குவதும் அதனை நிறுவுவதும் மெய்ப்பிப்பதும் மிக மிகக் கடினமானச் செயல்பாடு. தமது எழுத்துக்கள் வழியாகப் பல்வேறு வகைகளில் இச்செயல்பாட்டில் பங்கெடுத்துக் கொள்வதையே அறிவார்த்த இந்திய இலக்கியப் படைப்பாளிகள் பலரும் தமது நவீன இலக்கியச் செயல்பாடாகக் கொண்டு இயங்கி வருகின்றனர்.

அவ்வகையில் சுந்தர ராமசாமி எழுதிய ‘குழந்தைகள் பெண்கள் ஆண்கள்’ நாவல் தன்னளவில் நவீன உளவியல்பு மற்றும் நவீன வாழ்வியல் குறித்த ஆய்வு நாவலாகவும் நவீனகால மாறுதல் நிலையின் சிக்கல்கள் குறித்த விளக்கமுறை நாவலாகவும் (Demonstrative Novel) அமைந்துள்ளது. நிகழ்வுகளைத் தொகுத்துக் கூறுவதை மட்டும் செய்யாமல் அவை குறித்த கேள்விகள், விளக்கங்கள் மற்றும் முன்-பின் சூழல்கள் ஆகியவற்றையும் தொகுத்துரைப்பதன் மூலம் இந்நாவல் ஒரு பொருளுரைப்பு நாவலாகவும் (Interpretative Novel) மற்றொரு தளத்தில் கருத்துகள் குறித்த நாவலாகவும் (Novel of Ideas) அமைந்திருக்கிறது.

இந்திய மரபுகளால் உருவாக்கப்பட்ட சமூக மனிதர்கள் தம்மை நவீன தனிமனிதர்களாகவும், பொதுஅறம் பேணும் சமூக மனிதர்களாகவும் மாற்றிக் கொள்வதில் உள்ள இடர்கள், போதாமைகள், சிக்கல்கள், உள்வய எதிர்ப்புகள் பற்றிய ஆவணப்படுத்தலை குடும்பம் என்பதை மையமாகக் கொண்டு தொடங்கி புதிய மதிப்பீடுகள், தலைகீழாக்கங்கள் ஆகியவற்றை எதிர்கொள்வதில் பல்வேறு இந்திய நிறுவனங்களும் சமூகப் பண்பாட்டு துணை மற்றும் இணையமைப்புகள் எதிர்கொள்ளும் நிலைகள் பற்றியதாக விரித்துச் செல்கிறது இந்நாவல். இன்னொரு வகையில் இந்த நாவலை சாதியப் படிநிலை மற்றும் ஆண் மையத்தன்மை கொண்ட, உள் வன்முறைகள் நிறைந்த இந்தியச் சமூகஉளவியல் குறித்த கேள்விகளைக் கையாளும் ஒரு இனவரைவியல் நாவலாகவும் வாசிக்க இயலும். அதனைவிட இந்நாவல் தன் கட்டமைப்பின் மூலம் பிராமண சமூகத்தை நவீன-சனநாயகம் ஏற்கும் ஒரு மாறுதலுற்ற சமூகமாக, பன்மைகளின் இடத்தில் குடிமைப் பண்புடன் வாழ்வதற்கான உளவியல்பினைக் கற்ற சமூகமாக மாற்றுவாற்கான பயிற்சியினை அளிக்கும் நாவலாகத் தன்னை அமைத்துக் கொள்கிறது.

சுயவிமர்சனம் மற்றும் தன்மதிப்பீடு என்பதன் மூலம் மாறுதல்கால நவீனத்தன்மையை ஒரு சமூகத்திற்குக் கற்பிக்கும் நாவலாக இது இயங்குகிறது. இதற்கு ஏற்ற வகையில் பன்மொழி, பன்மையான பண்பாடு, பன்மையான மதப் பின்னணிகள், பலசாதி வாழ்வியல் என்பவை இதில் கதைப்புலங்களாக அமைக்கப்படுகின்றன.  அத்துடன் பிரிடிஷ் ஆட்சி- இந்திய நாடு – சிற்றரசுகள்  என்னும் மூன்றடுக்கு அரசாட்சி நிலைத் தன்மையும் இதன் காலப்பின்னணியான 1937-39 என்பதும் இந்திய வாழ்தலின் தனிமனித-அரசியல் சிக்கல்ளைப் பற்றிப் பேச மிக விரிவான தளத்தைத் தரக்கூடியது. முரண் மற்றும் இணைகளின் தவிர்க்க முடியாத கூட்டிணைவுகளின் தளத்தில் இந்நாவலை அமைப்பதன் மூலம் கதைசொல்லும் குரலுக்குப் பன்மையான பகுத்துரைக்கும் தன்மையை இந்நாவல் வழங்குகிறது. இந்த பகுத்துரைக்கும் உரிமை மற்றும் வாய்ப்பினை இந்நாவலின் கதைசொல்லி மிக நேர்த்தியாகப் பயன்படுத்திக் கொள்வதன் வழியே இதனை ஒரு குடும்பக்கதை அல்லது  சிறுமிகள் மற்றும் சிறுவர்களைப்  பற்றிய கதை என்ற தளத்தில் இருந்து நவீன கோட்பாட்டுத் தேர்வுகள் குறித்த நாவலாக மாற்றியமைத்து விடுகிறார்.

இந்நாவலை வாசிப்பதற்கு முன்பிரதியாக ‘ஜே.ஜே: சிலகுறிப்புகள்’ நாவல் அமைகிறது என்பது எதேச்சையான உறவல்ல. கதைசொல்லியான பாலு மட்டுமின்றி அந்நாவலில் குறிப்பிடப்படும் எஸ்.ஆர்.எஸ், சம்பத், டாக்டர் கோவிந்த பிஷாரடி எனப் பல கதை உருவங்கள் இந்நாவலில்தான் விரிவாகத் தம்மை வெளிப்படுத்திக் கொள்கின்றனர். ஜே.ஜே: சில குறிப்புகளில் பாலு தன் குடும்பத்தோடு கோட்டயத்திலிருந்து நாகர்கோவிலுக்கு வந்தது ‘1939ஆம் வருடம் செப்டம்பர் மாதம் இரண்டாவது உலக மகாயுத்தம் அறிவிக்கப்பட்ட அன்றோ அதற்கு அடுத்த நாளோ’ என்று குறிப்பிட்டிருந்தேன்.  காலம் பற்றிய மயக்கம்!  இன்று அது இல்லை.” என இரண்டு கதைகளையும் சுந்தர ராமசாமி தன் முன்னுரை (அக்டோபர் 24,1998, நாகர்கோவில்) வழியே இணைத்து வைப்பதன் மூலம் ‘குழந்தைகள் பெண்கள் ஆண்கள்’ நாவலும் கதைசொல்லுதலின் கதையாக (Metafiction) கதைசொல்லியின் கதையாக (Story of the Storyteller)  மாறுவதற்கான விளிம்பில் வைக்கப்படுகிறது. ஆனால் எழுத்துக்கலைஞர் (Writer), ஒரு குறிப்பிட்ட எழுத்தை உருவாக்குவர்  (Author),  கதைசொல்பவர் (Storyteller), கதைசொல்லும் நிலை (Narrator) என்னும் உறவமைப்புகளை வரிசையை மாற்றியதன் மூலம் இந்நாவல் தன்னை ஒரு விளக்கமுறை நாவலாக அமைத்துக்கொள்வதால் நடப்பியல் நாவல், எதார்த்தவியல் நாவல் (Realistic Novel)  என்பது பற்றிய தமிழின் இலக்கியக் கருத்தாக்கங்களின் பிழைபட்ட நிலைப்பாட்டை மாற்றி விளக்கி விடுகிறது.

முன்பொருமுறை அழகியநாயகி அம்மாள் எழுதிய ‘கவலை’ என்ற கதை, தங்கர்பச்சான் எழுதிய ‘ஒன்பது ரூபாய் நோட்டு’ என்ற சாதிய வாழ்வு சாரந்த ‘எதார்த்தவியல்’ நாவல் பற்றிய பேச்சின்போது  ‘தமிழின் எதார்த்த வகை எழுத்துக்கள் என்பவை அனைத்தும் கவலைகளின் கதைகளே’ என இடைக்குறிப்பாக எழுதியிருந்தேன். அவற்றுடன் ‘குழந்தைகள் பெண்கள் ஆண்கள்’ நாவலையும் கவலைகளின் கதையாகக் குறிப்பிட்டு ‘லட்சுமி, ஆனந்தம், வள்ளி என்ற மூன்று பெண்களின் மூலம் குடும்பம்,சாதி,கலாச்சாரம் என்பவற்றின் பலிகேட்பு பற்றிய கதையாடல் இரண்டாம் தள வாசிப்பாக இந்நாவலில் உள்ளது. பெண்மைக்கும் இந்திய சாதிய, வன்கொடுமைக் கலாச்சாரத்திற்குமான முரணுறவு நினைவு கொள்ளப்படாமல்  இந்நாவலின் வாசிப்பு முழுமையடையாது’ (கவலைகளின் கதை, பிரேம், 2000:167) எனவும் குறிப்பிட்டிருந்தேன்.  இந்நாவலின் கதைசொல்லும் குரல் தன் வாசிப்பையும் இந்தக் கதையூடாக வைத்துச் செல்வதன் மூலம் இதனை நடப்பியல் என்ற தளத்தில் இருந்து பொருளுரைக்கும் நாவலாக மாற்றி விடுகிறது.

‘எனக்கு ரொம்ப குழப்பமா இருக்கு அக்கா’ என்றான் பாலு. ‘என்ன குழப்பம்?’ ‘எனக்கு ஒண்ணும் தெரியலை. யாரைக் கேட்டாலும் மாத்தி மாத்தி சொல்றா. எது உண்மை, எது பொய்ன்னு எனக்குத் தெரியணம்’ என்றான் பாலு.  சுகன்யா பாலுவை அணைத்துக்கொண்டாள். ‘இதுதாண்டா பெரிய ஆசை பாலு. இதைவிடப் பெரிய ஆசை எதுவுமே இல்லை’ என்றாள் அவள். (ப.634)  என எது உண்மை எது பொய் என்பது பற்றிய கேள்வியை நினைவுபடுத்திச் செயல்படுவதால் இந்நாவலை ஒரு கல்விப்புல நாவலாக வாசிக்கலாம். ‘சமூகம் பெரிய பங்கை ஆற்ற முற்படும்போது அத்துடன் சேர்ந்து இரண்டு முன்னேற்றங்களும் ஜனங்கள் மத்தியில் உருவாக வேண்டும். ஒன்று ஜனநாயக உரிமைகள் வலுப்படுவது. மற்றொன்று  சமத்துவம் முக்கிய குறிக்கோள் ஆவது.’ (ப.561) என நவீன வாழ்வின் அடிப்படை அறத்தை நினைவூட்டுவதால் இதனை இலக்கியத்தின் அடிப்படையான செயலான  ‘நீதி உரைத்தலை’ச் செய்யும் ஒரு அறவியல் நாவலாகவும் வாசிக்கலாம். இது போன்ற வாசிப்புகள் பலவற்றிற்கு  இணக்கமாக கோட்பாட்டு அடிப்படையில் இந்நாவல் தன்னை வடிவமைத்துக் கொண்டிருப்பதற்கு இதன் உருவாக்க காலமான தொண்ணூறுகள் முதன்மையான காரணமாக அமைகிறது என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். தலித்தியம் மற்றும் பெண்ணியம் என்ற இரு கோட்பாட்டுத் தளங்கள் தமிழின் அடிப்படை இலக்கியச் சொல்லாடல்களை மாற்றியமைத்ததுடன் புனைவு மற்றம் நினைவு சார்ந்த இயக்கங்களையும் மாற்றியமைத்தன. குழந்தைகள் பெண்கள் ஆண்கள் நாவலும் இந்த ‘மாறுதல்கால’ சொல்லாடலின் ஒரு பகுதியாகத் தன்னை அமைத்துக் கொள்வதன் மூலமும் பன்மொழி- பலபண்பாட்டு எடுத்துரைப்பின் வழியாகவும் பன்முக வாசிப்புக்கு உரியதாகத் தன்னை வைத்துக்கொள்கிறது.

இந்த வாசிப்பிற்கு முன்பிரதிகளாக ரவீந்திரநாத் தாகூரின் ‘கோரா’ (பங்க்ளா), சிவராமகரந்தின் ‘மரளி மண்ணிகே’ (கன்னடா) சந்துமேனோனின் ‘இந்துலேகா’ (மலையாளம்) ஆகிய நாவல்களை நான் எடுத்துக்கொள்கிறேன். இதற்கான காரணங்கள் மிக வெளிப்படையானவை: இந்த மூன்று நாவல்களும் இந்தியச் சமூகங்களில் பெண்களின் நிலை பற்றி ஆண்களால் எழுதப்பட்ட கதைகள்,  பெண்கள் தமக்கான இடத்தைப் பெறுவதற்கான நுண்ணிய போராட்டங்கள் பற்றியவை.

அத்துடன் குடும்பம், பண்பாடு, பெண்கள் நிலை பற்றிய நேரடிப் பேச்சுகளைக் கொண்டவை. தமிழில் இந்தச் சிக்கல்கள் பற்றியும் மாறுதல்களின் தேவை பற்றியும் எழுதப்பட்ட நாவல்கள் மிகுந்து காணப்பட்டாலும் அதற்கான கோட்பாட்டாக்கத்தை கதைக் கூற்றுக்குள் கொண்டுவந்து தன் அரசியல் இணைச்சொல்லாடலை ஒரு குடும்ப நாவலின் பகுதியாக வைத்துக்கொள்ளும் நாவல்கள் தமிழில் இல்லை. தோப்பில் முஹம்மது மீரானின் ‘சாய்வு நாற்காலி’ சாதி, குடும்பம், பெண்ணிலை, குடிமரபு, மதங்களின் அறிவழிக்கும் கொடுங்கோன்மை என்பன பற்றித் தீவிர தகர்ப்புகளைக் கொண்ட நாவல். ஆனால் அவை இணைத்தள வாசிப்பின் உள்பகுதியில் வைக்கப்பட்டு விட்டதால் நாடகக் குறியீட்டுத் தன்மை அதிகம் கொண்டதாக அந்நாவல் இறுக்கம் பெறுகிறது. குழந்தைகள் பெண்கள் ஆண்கள் நாவலோ சிக்கல்கள், ஒடுக்குமுறைகள், போதாமைகள் பற்றிய நிகழ்வுகளைச்  சித்திரிப்பது மட்டுமின்றி அவற்றைக் கோட்பாட்டாக்கம் செய்வதற்கான பேச்சையும் கொண்டிருக்கிறது.

‘முன்னெல்லாம் உங்களுக்கு சுகன்யாவை ரொம்பப் பிடிக்குமே அக்கா’ என்றாள் ஆனந்தம். ‘இப்பவும்தான். ஆனா அவ பேச்செல்லாம் இப்ப மாறிப்போச்சுடீ ஆனந்தம். உலகத்தைத் தூள்தூளாக்கிட்டுத்தான் ஒரு பக்கத்துல உட்காருவள் போலிருக்கே அவள்’ என்றால் லட்சுமி. (ப.489) மாறுதல் அடையும், எதிர்ப்பை வெளிப்படுத்தும் பெண்கள் பற்றிய பேச்சாக அமையும் இப்பகுதி சுகன்யா, வள்ளி, ரமணி, ஆனந்தம், லட்சுமி என்ற பெண்களை உள்ளடக்கியது. மாறுதல் குறித்து அச்சம் கொள்ளும் பெண்ணாக லட்சுமி,  மாறுதலை மென்மையாக உள்ளார்ந்து விரும்பும் பெண்ணாக ஆனந்தம். மாறுதலை, எதிர்ப்பைப் பரப்பும் பெண்ணாக சுகன்யா, மாறுதலுக்கு உள்ளாகும் பெண்ணாக வள்ளி, மாறுதலைக் கண்டு மயங்கி விடாத பெண்ணாக ரமணி விளக்கப்படுகின்றனர்.  இந்த உரையாடலின் பகுதிகள் மாறுதலுக்காக இந்தியப் பெண்கள் ஏங்கியிருப்பதையும் அதே சமயம் தயங்கி நிற்பதையும் புலப்படுத்துவதாக அமைகின்றன.

பெண்களுக்கான கல்வியின் தேவை, பெண்கள் தம் தனிஅடையாளத்தைப் பெறுவதற்கான போராட்டம் என்பவை பற்றி இப்பகுதி பேசுகிறது. ‘வள்ளி மேக்கப்பை கவனிக்கிறேளா அக்கா?  ‘அவளைப் பாக்கிறத்த கண்ணை மூடிக்க முடியுமா.  இப்ப அதுக்கு மனசு முழுக்க சுகன்யாதான். அவ இன்னிக்கு செய்யறதை இது நாளைக்குக் காப்பியடிக்கும்’ என்றாள் லட்சுமி.  சுகன்யா வேறு ஒரு பண்பாட்டு-அறிவுப் பின்புலம் கொண்ட, மாற்றத்தை ஏற்று அதனை நடப்புக்குக் கொண்டுவரும் பெண். வள்ளி அதனை விரும்பி ஏற்கும் பெண். வள்ளியென்ற இந்தப் பாத்திரத்திற்கு நேரும் துயரமான ஒரு முடிவு இந்நாவலின் இரு துன்பியல் நிகழ்வுகளில் ஒன்றாக மனதைத் துளைக்கக் கூடியது.  தான் விரும்பிய வாழ்வை அடைய முடியாமல் மீண்டும் தன்னடையாளமற்ற அடிமை நிலைக்கு இப்பாத்திரம் தள்ளப்படும்போது மாறுதல்களை விரும்பும் இந்தியப் பெண்களின் துயர முடிவாக அது அடையாளப்படுத்தப்படுகிறது. ‘நீ அவக்கிட்ட பேசிப்பாரு தெரியும். ஆம்பிளைகளை உழவுல கெட்டி அடிக்கணுமாம்.  நாக்கூசாமச் சொல்றா’ என்றாள் லட்சுமி.  ‘கபடம் தெரியாம இருந்தா இந்தக் காலத்துல பொழைக்க முடியுமா அக்கா? வள்ளிக்கு உள்ளும் புறமும் ஒண்ணு உலகம் பூரா வெள்ளை’ என்றாள் ஆனந்தம். ‘அவளை ஓசைப்படாம தளியல்ல கொண்டுபோய் சேத்துரணம். அப்பா பாடு, அண்ணா பாடு. எனக்கெதுக்கு வேண்டாத தலைவலியெல்லாம்’ என்றாள் லட்சுமி. ‘அங்க போனா படிதாண்ட விடமாட்டாளே அக்கா. இங்கே பெண்களுக்குத் தனி காலேஜ் இருக்கே. அதுல சேத்துவிடுவோமே. டாக்டர் ஆனி ஜோசப் சர்க்கார் ஆஸ்பத்திரியில கொழலை மாட்டிண்டு நிக்கறத்தப் பாக்க ஆசையா இருக்கு அக்கா’ என்றாள் ஆனந்தம். அதெல்லாம் அவாளுக்கு சரி. நமக்கு ஒத்து வராது.’ என்றாள் லட்சுமி. ‘ஆண்கள் எந்தெந்தக் காரியங்களைச் செய்யறாளோ அத்தனைக் காரியங்களையும் பெண்களாலேயும் செய்ய முடியும்னு வள்ளி சொல்றா அக்கா’ என்றாள் ஆனந்தம். ‘பெண்கள் நாலு எழுத்துப் படிச்சு முன்னுக்கு வரணும் அக்கா’ என்றாள் ஆனந்தம்.  ‘வள்ளி ரொம்ப புத்திசாலி அக்கா’ என்றாள் ஆனந்தம். ‘அதோட நின்னா சரி. அதுக்குன்னு ஒரு முரட்டுத் தைரியம் இருக்கே. அத நினைச்சாத்தான் எனக்கு அடிவயத்தைக் கலக்கறது.’ என்றாள் லட்சுமி. ‘நீங்க கிழிக்கிற கோட்டைத் தாண்டி ஒரு அடி எடுத்து வைக்க மாட்டா அவ. நான் கேரண்டி’ என்றாள் ஆனந்தம். ‘தாண்டி எடுத்து வைக்கமாட்டா. அந்தக் கோட்டையே அழிச்சிட்டு மடமடன்னு நடந்து போயிடுவள்’ என்றாள் லட்சுமி. ஆனந்தம் சிரித்தாள். ‘நீ சிரிச்சா, கூடக் கொஞ்சம் எனக்கு வயத்தைக் கலக்கும்’ என்றாள் லட்சுமி. (பக்.489,490)

இந்த வகையான பெண்நிலை பேச்சுக்கள் இந்நாவலை இணைநிலை கோட்பாட்டாக்கம் கொண்டதாக மாற்றிவிடுகிறது. நிகழ்வுகள், நடப்புகள் என்பவற்றோடு தன்னளவிலேயே விளக்கங்கள், கோட்பாட்டாக்கங்கள், பன்மையான நிலைப்பாடுகள், மதிப்பீடுகள் என்பவற்றைக் கொண்டிருப்பதன் மூலமே இந்நாவல் எனது பார்வையில் கற்றல் மற்றும் கற்பித்தல் வகை எழுத்தாக (Novel of Pedagogy) பொருள்படுகிறது. தமிழின் மேல்நிலைச் சாதிய உளவியல்புகளை (இதனைப் பிராமண-வெள்ளாள மையம் கொண்டது என அடையாளப்படுத்தலாம்) நிலைமறுத்து மாறுதல்களை ஏற்க வலியுறுத்தும் இலக்கியச் சொல்லாடல் என்ற வகையிலேயே குழந்தைகள் பெண்கள் ஆண்கள் நாவல் தன் நவீனத் தன்மையை உறுதி செய்கிறது.  தன் காலப்பின்னணியாக கடந்தகாலத்தைக் கொண்டிருப்பதால் இது  வரலாற்று ஆவணத்தன்மை (Archival Narrative) கொள்வதும், இதில் விவரிக்கப்படும் காலம், இடம், பொருள்கள் என்பவை இப்போது முற்றிலும் மாறிவிட்டதால் தன் தோற்ற அளவில் பழம்பொருள் சித்தரிப்புத்தன்மை (Portrayal of Antique marker) கொள்வதும் நாவலின் வாசிப்பைப் பன்முகக் குறியியல் தன்மை கொண்டதாக வைத்துக் கொள்கிறது. இவற்றின்  பின்னணியில்தான் நான் இந்நாவலின் வாசிப்பை விளக்க முனைகிறேன்.

இந்நாவலில் இடம்பெறும் இரு குடும்பங்களில் உள்ள நான்கு குழந்தைகள் குடும்ப உளவியல் அடிப்படையில் எதிர் இணைகளாக வைக்கப்படுவதன் மூலம் குழந்தைகள் சமூக மனிதர்களாக வளர்தலில் உள்ள சிக்கல்களும், சமூகவயப்பட்ட தனிமனிதர்களாக உருவாவதில் உள்ள இடையீடுகளும் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன. எஸ்.ஆர்.சீனிவாசஅய்யர்-லட்சுமி தம்பதிகளின் குழந்தைகளான ரமணி மற்றும் பாலு இருவரும் வறுமை என்பதை அறியாத, தம் குழந்தைகள் மீது மிகுந்த அக்கறை கொண்ட பெற்றோர்களை உடைய குழந்தைகள். இவர்களைக் கவனிக்கவும் பராமரிக்கவும் ஆனந்தம் மாமி, கௌரி என பாசமே உருவான இரு தன்னலம் கருதாத அப்பாவிப் பெண்கள். சாமு-சீதை தம்பதிகளின் குழந்தைகள் லச்சம் மற்றும் கோமு. வறுமையும் மனக்கசப்பும் கூடிய வீடு இவர்களுடையது. ஓயாத வெறுப்பும் பகையும் கொப்பளித்துக் கொண்டிருக்கும் குடும்பம். லச்சம், கோமு இவர்களின் துயரம் நிறைந்த வாழ்வைப் பார்வையாளர்களாக இருந்து கவனிக்கும் பாலு, ரமணி இருவருக்கும் அதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ளும் வயது இல்லை. எஸ்.ஆர்.எஸ் தன் சித்தப்பா மகன் என்ற அக்கறையுடன் சாமுவைத் தன் கடையில் வேலைக்கு வைத்து உதவிகள் செய்தாலும் குடும்பத்தின் பட்டினியைப் போக்க முடியாத நிலை. சாமுவின் குடிப்பழக்கம் இதற்குக் காரணமாக இருக்கிறது. சீதை தன்  வாழ்வின் அனைத்துத் துன்பங்களுக்கும் கணவன் சாமுவே காரணம் என்ற கருத்தைக் கொண்டவள். சாமுவோ தன் மனைவி குழந்தைகள் குறித்து எந்த பொறுப்போ அக்கறையோ அற்ற வெறும் கசப்புணர்வும் வெறுப்பும் மட்டுமே கொண்ட ஒரு ஆண்.

வாழ்வு என்பது எந்த நம்பிக்கையும் தராத தண்டனையாகவே சாமுவுக்குத் தோன்றுகிறது. சாமு ‘திருவனந்தபுரம் ஊட்டுப்புரையில் வளர்ந்த அலவலாதி.’ அந்த ‘புருஷனுக்கும் பெஞ்சாதிக்கும் தரித்திரம்தான் தலையில எழுதிருக்கு. நிழலு மாதிரி தொரத்திகிட்டே இருக்கும்.’ அவர்களுக்கு ‘பாளம் பாளமா தங்கத்தைக் கொடுத்தாலும் மறுநா பாத்தா கரியாயிடும்.’ சாமுவுக்கும் அவர் மனைவிக்கும் இடையில் உள்ள உறவு வெறும் வன்மம் மட்டுமே கொண்ட ஒன்று. ‘அவள் பீறிட்டு அலறும்படி பின்னால் இருந்து அவளைத் தாக்க வேண்டும் என்று அவருக்குத் தோன்றுவது’ என்பது இயல்பான ஒன்று. பின்னால் இருந்து என்பதில் உள்ள பயம் கலந்த வன்முறை கசப்பு நிறைந்த மணஉறவுகளின் குறியீடு. ‘கொன்னுடுவேன்’ என்று கையை ஓங்கும் சாமுவிடம் சீதை சொல்லும் பதில் ‘இப்படி சொல்லிண்டே இருக்கேளே தவிர செஞ்சு காட்ட மாட்டேங்கிறேளே.’ அவர் தன்னைக் கொல்லாமல் இருப்பதற்கும் சீதை சொல்லும் காரணம் ‘துன்பம் தீர விடமாட்டார்’ என்பது. இந்தக் கசப்பும் வெறுப்பும் கொண்ட குடும்பப் பின்னணியில் வளரும் லச்சம், கோமு இரு குழந்தைகளின் இருள் நிறைந்த எதிர்காலம் வாசிப்பின் ஒவ்வொரு தளத்திலும் நம்மை வந்து தாக்குவாதாக உள்ளது. லச்சம் மிகுந்த புத்திசாலித்தனமும் பல திறமைகளும் கொண்ட, பலவிதமான வேலைகளைச் செய்யக்கூடிய மிகையான ஆற்றல் உடைய ஒரு வளர்பருவச் சிறுவன்.

ஆனால் அவனுடைய வாழ்வு பாலியல் சுரண்டலுக்கு உட்பட்டு துயரத்தில் முடிகிறது. இந்த முடிவு குழந்தைகளின் வாழ்வு குறித்த பல அடிப்படை கேள்விகளை எழுப்பக் கூடியதாக உள்ளது. அவன் மீது கவிழும் வன்முறை முதலில் குடும்பத்தில் தொடங்குவது. ஆனால் அதைவிட சமூகத்தின் வெளியிடங்கள் அவனை நசிவுக்கு உட்படுத்துகின்றன. பரமேஸ்வரன் வைத்தியர் அவனைத் தன் பாலியல் முறைகேட்டிற்கு பயன்படுத்திக்கொள்வது என்ற நிகழ்வு இந்தியச் சமூகங்களில் ஆண்-பெண் குழந்தைகளின் மீது மிகக் கமுக்கமாய் நடைபெற்று வரும் வன்கொடுமைகள் மற்றும் சுரண்டல்கள் குறித்த பதிவாக அமைகிறது. (‘அந்தப் படுபாவி வைத்தியன் கூடத்தான் சதா கிடப்பு. இந்த ஊர்ல அந்தப் பாவி கெடுக்காத பிள்ளை கிடையாது.’ -ப.553).

வெளித்தெரியாத கொடுவன்முறையின் மற்றொரு எதிர்த்தளமாக அமைவது பாலுவின் மனச் சிக்கல்கள். பாலு வெளியுலகம் மறுக்கப்பட்ட ஒரு சிறுவன் (நவீனமடைய முனையும் ஒரு தனிமனிதன் ஆனால் வைதீக சமூகத்தின் அடைபட்ட உறுப்பினன்). இவனுடைய ஒவ்வொரு நாளும் வெளியுலகம் குறித்த எதிர்பார்ப்பில் கழிகிறது. தான் லச்சம் அண்ணன் போலச் சுதந்திரமாக ஊர் சுற்றி பல சாகசங்களைச் செய்து வாழ வேண்டும் என்பது அவனது எதிர்பார்ப்பு. ஆனால் தன் தந்தையின் கட்டுப்பாடுகள் அவனை மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாக்குகின்றன. அதே கட்டுப்பாடுகள் அவனது தமக்கை ரமணிக்கு பெரிய அளவில் துயரமாகத் தோன்றுவதில்லை. பாலு பள்ளிக்குச் செல்லாமல் இருப்பதில்தான் தனிமை உணர்வு சார்ந்த பல உளச்சிக்கல்கள் உருவாகின்றன. பாலு, லச்சம் இருவருக்குமே மற்ற சாதியைச் சேர்ந்த குழந்தைகளுக்கு உள்ளது போன்ற இயற்கைச்சுழல் மற்றும் உழைப்பு சார்ந்த வாழ்விடம் இரண்டும் இல்லாத நிலை பல வாழ்வியல் குறைபாடுகளை, உளவியல் சிக்கல்களை உருவாக்குகின்றன.

பாலுவின் தந்தை எஸ்.ஆர்.எஸ் தன் மகன் மீது கொண்ட அதிக அக்கறை மற்றும் எதிர்பார்ப்பு என்பதன் வழியாக அவனுக்கு அந்நியமாக ஆகிவிடுவதுடன் அச்சமூட்டும் ஒரு மனிதராக உருவம் கொண்டுவிடுகிறார். லச்சத்தின் தந்தை சாமு அவன் மீது அக்கறையோ அன்போ அற்றவராக அவனைக் கொடிய சொற்களாலும் வசைகளாலும் கொடுமைக்குள்ளாக்குகிறார். இரு தந்தைகளுமே மகன்களுக்கு அந்நியமாகி நிற்கின்றனர். இந்தியத் தந்தைகள் என்கிற பாத்திரம் கட்டுப்பாடு, அடக்குமுறை என்பவற்றின் உருவங்களாகச் செயல்படும் மரபான வன்முறை பற்றிய பல கேள்விகளை இப்பாத்திரங்கள் வழியாக இந்நாவல் முன்வைக்கிறது (இந்தக் கொடுந்தந்தை என்ற எதிர்ப்பார்வை நவீன முரண்படுத்தல்களில் ஒன்று, தொன்மைத்தன்மையோ நீண்ட மரபோ அற்றது, இதனை விரிவாக வேறுதளத்தில் நாம் ஆய்ந்தறிய வேண்டியுள்ளது). எஸ்.ஆர்.எஸ் கொடுந்தந்தை என்கிற நிலையில் தான் இருக்கக்கூடாது என்கிற தன்னினைவு கொண்டவர். ஆனால் ஒழுங்குபடுத்தல் மற்றும் முறைப்படுத்தல் என்பற்றின் மூலம் தன் குடும்பத்திற்குள் அச்சத்தை உருவாக்கும் ஒருவராகத் தோற்றம் தருகிறார் (இவர் தன் குடும்பத்தை நாகரிகப்படுத்தும் செயலை தன் வாழ்வின் முதல் கடமையாகக் கொண்டு செயல்படுபவர், பழமையின் ஒழுங்கற்ற தன்மைகொண்ட தன் மாமனாரின் ஒவ்வொரு செயலும் கூட இவருக்கு வெறுப்பையும் சீற்றத்தையும் ஏற்படுத்துகிறது). தன் பெண் குழந்தையான ரமணி பற்றிய பெருமை உணர்வு அவருக்கு இருக்கிறது. அவளின் படிப்பறிவுகுறித்த பெருமையாக அது வெளிப்படுகிறது. எஸ்.ஆர்.எஸ்  வாழ்வில் ஏற்படும் மூன்று நிகழ்வுகள் அவரைத் தன் குடும்பத்துடனும் குழந்தைகளுடனும் நெருக்கமாக வெளிப்படுத்திக்கொள்ளும் முதல் வாய்ப்பினை வழங்குகின்றன.

முதலாவது நிகழ்வு அவருடைய வியாபாரத் தொழிலை விட முடிவுசெய்வது. இரண்டாவது லச்சத்தின் துயரமான மரணம். மூன்றாவது நிகழ்வு ஆனந்தம் வீட்டை விட்டுச் செல்வது. இந்த நிகழ்வுகளுக்குப்பிறகு கோட்டயம் விட்டு தளியல் என்ற ஊருக்கு குடிபெயர்வது என்ற முடிவு எடுக்கப்பட்ட பின் அவர்களுக்கு ஒரு தெளிவு ஏற்படுகிறது. இந்தக் குடிபெயர்வுக்குப் பின் ‘தனிமைதான் பாலுவுக்குப் பெரிய பிரச்சினை என்று தோன்றுகிறது’ என்ற தெளிவும் ஒரு காரணமாக உள்ளது. இந்த மாற்றத்தை ஏற்கும் மனநிலை அவர்களுக்குள் நெருக்கத்தை ஏற்படுத்துகிறது. ‘அடுக்களைக்குள் முதல் தடவையாக அவரைப் பார்ப்பது எல்லோருக்கும் வினோதமாக இருந்தது’ என்ற குறிப்பின் மூலம் வீடு என்ற சுவர்களால் ஆன விதிமுறைகளில் சிலவற்றை மாற்றிக்கொள்ள, இடைவெளிகளைக் குறைத்துக்கொள்ள எஸ்.ஆர்.எஸ் தன்னைப் பக்குவப்படுத்திக்கொள்ள முனைவது பதிவாகிறது. லச்சத்தின் மரணம் பாலுவிடம் மட்டுமின்றி ரமணி, லட்சுமி, எஸ்.ஆர்.எஸ் அனைவரிடமும் பலமாற்றங்களைக் கொண்டு வந்துவிடுகிறது. பாலுவைத் தனியே வெளியில் அனுப்ப முதல்முறையாக எஸ்.ஆர்.எஸ் தன்னை ஆயத்தப்படுத்திக்கொள்கிறார்.

ரமணி வளர்ந்த பெண்ணைப்போல சமையல் செய்யப் பழகிக்கொள்கிறாள். பாலு தன் தந்தையிடம் அச்சம் இன்றி பேசத் தொடங்கிவிடுகிறான். லச்சத்தின் தங்கை கோமு  வீட்டுவேலை செய்து தன் வாழ்க்கையை நடத்த பயிற்சியெடுத்துக் கொள்கிறாள். குழந்தைகள் பெண்களாகவும் ஆண்களாவும் மாறத் தொடங்கி விடுகிறார்கள்.

பாலுவுக்கு மனம் சார்ந்த சிக்கல் என்பதெல்லாம் பெற்றோர்கள் தங்கள் மனச்சிக்கலை ஏற்றி உருவாக்கிக் காட்டிய தோற்றப்பிழை என்பது மெல்லத் தெளிவாகத் தொடங்குகிறது. எல்லா குழந்தைகளுமே இப்படி மிகையாக இருப்பவர்கள்தான் என்ற உண்மை இந்நாவலின் போக்கில் தெளிவுபடுத்தப்படுவதை நாம் குறிப்பாக பதிவு செய்யவேண்டும். சமூக ஒழுங்கு, இயல்பு நிலைகள் என்பவை வளர்ந்தவர்களின் விதிகளால் ஒருவகையில் நகர-அரசு விதிகளின் அடிப்படையில் குழந்தைகள் பெண்கள் என்பவர்களின் இருப்பை, வேறுபடும் தன்மைகளை மறுத்தும் மறந்தும் உருவாக்கப்பட்டவை என்பது குறித்த பதிவை இந்நாவல் செய்திருக்கிறது.

குழந்தைகளின் தனிப்பட்ட கற்பனை உலகம், அவர்களின் பாவனைகளால் நிகழ்த்தப்படும் மெய்யெனத் தோன்றும் நாடகங்கள், ஒவ்வொரு சொல்லுக்கும் செயலுக்கும் உள்ளாகக் குழந்தைகளுக்கென தேங்கியிருக்கும் வேறுபட்ட அர்த்தங்கள் குறித்த சில நுட்பமான பதிவுகள் இந்நாவலில் இடம்பெற்றுள்ளன. பாலு, ரமணி, லச்சம் இவர்கள் கட்டும் வீடு, அவர்கள் ஈடுபடும் நாடகத்தன்மை கொண்ட விளையாட்டு, ரமணியிடம் லச்சம் காட்டும் உறவுமுறை கடந்த மன நெருக்கம், (ரமணியும் வந்திருந்தால் எவ்வளவோ குதூகலமாக இருந்திருக்கும். இனி அவளைத் தன்னிடம் அதிகம் நெருங்க விடமாட்டார்கள். இன்று அவள் தன் கையைத் தொட்டதே பெரியம்மாவுக்கு எவ்வளவு உறுத்தலாக இருந்தது.) பாலுவுக்கு லச்சம் சொல்லும் மிகையான சாகசக் கதைகள், தன் சாதனைகள் பற்றிய கற்பனை கலந்த விவரிப்புகள், (இந்த உலகத்தில் அவனுக்குத் தெரியாத விஷயம் இல்லை. உலகத்தின் சகல ரகசியமும் இருளும் நிறைந்த குகைகளில் கண்களை மூடியபடி துழாவாமல் போகிறவன் அவன்.) லச்சம் தன் வயதுக்கு மீறி அறிந்து கொள்ளும் பெரியவர்களின் உலகம்  எனப் பல அடுக்குகளில் குழந்தைகள் என்ற சிக்கலான மனநிலை விளக்கப்படுகிறது. லச்சம் இறந்த பிறகு அவன் வீடு முழுக்க மறைவாகச் சேமித்து வைத்திருந்த பொருள்கள் பற்றி விவரிப்பு உள்மன அடுக்குகள் குறித்த குறியீடுகளாக விளக்கம் பெறக்கூடியது.

குழந்தைகள் என்ற நிலை ஒவ்வொரு சமூகத்திற்கும் உரிய ஒரு ‘நெகிழ்வு கொண்ட குறியீட்டுநிலை’ என்பதை நாம் நினைவு கொண்டால் குழந்தைமைநிலை குறித்த புனைவுகள் என்பது ஒரு சமூகம் தன்னைப் பற்றித் தானே உருவாக்கிக்கொள்வது என்பது புரியவரும். சமூகத்திற்குள் இருக்கும் அத்தனை நன்மை தீமைகளும் இணக்கங்களும் வன்முறைகளும் குழந்தைகளிடம் குறியீட்டு நிலையில் படிந்தும் வெளிப்பட்டும் இயங்குவதை பெரும்பாலான இலக்கிய, ஊடகச் சொல்லாடல்கள் ஏற்பது இல்லை என்பதுடன் அவற்றை மறைக்கவும் செய்கின்றன.

சாதி, வர்க்கம், இனம், பால்நிலை ஆதிக்கம் என்பவற்றின் செயல்பாடுகளை, அவற்றின் வன்முறைகளை நுண் அளவிலும் குறியீட்டு வடிவிலும் தொடர்ந்து தேக்கி வைப்பதும் நிகழ்த்திக் காட்டுவதும் குழந்கைள் உலகமே. இதிலிருந்து விலகிச் செயல்படும் குழந்தைகள் மனத்திரிபு கொண்டவர்களாகவும் ஒவ்வாமைக்கு உட்பட்டவர் களாகவுமே அடையாளப்படுத்தப்படுவார்கள். இவர்களில் சிலரே கலகம் செய்கிறவர்களாக, மாற்றுக் கருத்தியல் கொண்டவார்களாக மாறக்கூடியவர்கள். பெரியவர்கள் என்ற நம் கற்பனையும் கூட பல நேரங்களில் நம்மிலிருந்து விலகி நின்று நம்மை அச்சுருத்தும் நிலையை அடையும். புராதனப் பொதுவுடைமை பற்றிய நவீன கனவுக்கும் குழந்தைமை நிலைக்கும் உள்ள உறவை இன்னும் விரிவாக நாம் விளங்கிக்கொள்ள கலகம் செய்யம் குழந்தைகளின் கதைகள் நமக்கு உதவக்கூடும்.

டாக்டர் கோவிந்த பிஷாரடியின் பிள்ளைகளான சுகன்யா, ஸ்ரீதரன் இருவரும் இப்படிப்பட்ட குழந்தைகளாக இருந்து வளர்ந்தவர்கள் என்கிற குறிப்புடன் பாலு பற்றிய நிகழ்வுகள் தொடர்ந்து அடுக்கப்படுவதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஸ்ரீதரன் லண்டனுக்குச் சென்ற பின் அடையும் மாற்றங்களும் சுகன்யா வீட்டில் இருந்தபடியே அடையும் மாற்றங்களும் அடிப்படையான இந்திய மரபுகளுக்கு மாற்றானவை. “ஒரு தடிமன் புத்தகத்தின் மேலட்டையை சுகன்யாவிடம் காட்டி, ‘இது யாருடைய படம் என்பது தெரிகிறதா?’ என்று கேட்டார். ‘கார்ல் மார்க்ஸ்’ என்றாள். ‘இவன் ஒரு நாஸ்திகன். இவன் புத்தகம் நம் வீட்டிற்குள் வரலாமா?’ என்று கேட்டார்” அவர்களுடைய தந்தை, இது அவருக்கு மிகுந்த அதிர்ச்சியளிக்கும் ஒரு நிகழ்வு. இந்த அதிர்ச்சிதான் நவீன இந்தியக் குடும்பங்களுக்கான முதல் அதிர்ச்சி.

மரபான தந்தைகளுக்குத் தம் நவீன கால பிள்ளைகள் பற்றிய அச்சம் இந்தத் திருகலில்தான் தொடங்குகிறது. இந்த மாற்றம் பற்றிய அச்சம் நிறைந்த இந்திய உளவியலின் பல்வேறு வடிவ மாறுபாடுகள்தான் ஒழுக்கம், நீதி, தனிமனித மேன்மைகள் பற்றிய சொல்லாடல்களாக வெளிப்படு கின்றவை. மோதல்களுக்கும் முரண்பாடுகளுக்குமான அடிப்படைக் காரணங்கள் இந்த தளத்தில்தான் படிந்துள்ளன. “இவன் யூதன். நல்ல கண்ணியமான குடும்பத்தில் பிறந்தவன். தாயும் தகப்பனும் பக்திமான்கள். இவனும் நல்ல புத்திசாலி. நன்றாகப் படித்தான். ஆனால் அவனுடைய அப்பா செய்த பாவம். சிறு வயதிலேயே கெட்டுப்போய்விட்டான். மதம் கிடையாது. தெய்வம் கிடையாது. வசதியாக இருப்பவனெல்லாம் அயோக்கியன். தரித்திரம் பிடித்தவனெல்லாம் யோக்கியன் என்று பேச ஆரம்பித்துவிட்டான்.” என்று விளக்கம் அளிக்கும் பிஷாரடி தன் மகன் ஏற்றுக்கொண்ட கருத்தியல் குறித்த வெறுப்பையும் அச்சத்தையும் இப்படியாக வெளியிடுகிறார். ‘பகுத்தறிவாளர் மன்றத்தில் உறுப்பினராகிறேன்’ என்று குறிப்பிட்ட தன் மகனைப்பற்றி ஒரு மரபான தந்தையாக அவர் சொல்வது ‘எப்போது ஈஸ்வரன் இல்லை என்ற எண்ணம் வந்துவிட்டதோ அதன்பின் பாவம், புண்ணியம் ஒன்றும் கிடையாது.’ இந்த ஸ்ரீதரன் இப்போது ‘பழைய வாழ்க்கை முறையிலிருந்து எடுத்துக்கொள்ள ஒன்றுமேயில்லை என்ற முடிவுக்கு’ வந்திருப்பவன். அவனுக்கு இப்போது ‘மனதின் ஆரோக்கியமே அதன் சராசரித் தன்மையில்தான் இருக்கிறது.’ என்ற தெளிவும் வந்திருக்கிறது. ‘நம்ம மண்ணுலே ஒருத்தனுக்குக் கோபம் இல்லைன்னா அவன் மனுஷனே இல்லை.’ ‘உண்மையில் நியாயம் தர்மம் எல்லாம் ஆபத்தானதுதான்’ என புதிய மாற்றங்களுக்கான நியாயத்தைப் பேசும் செல்லப்பா மாற்றங்களின் மற்றொரு வடிவம்.

இந்த மாறுதல்களுக்கான உடைப்புகளின் பின்னணியில் பாலுவைப் பற்றிய அவன் தந்தையின் பயம் வேறு ஒரு தளத்தை அடைவதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். எஸ்.ஆர்.எஸ் மாற்றங்களை விரும்பக்கூடியவர்தான், ஆனால் அந்த மாற்றங்கள் தன் மேற்பார்வையில் நேர்க்கோட்டில் நிகழவேண்டும் என்ற எதிர்பார்ப்பை உடையவர். “அவனுடைய ஒரு சில விஷயங்கள் அவர்மனதில் அதீத முக்கியத்துவம் பெற்றுவிட்டன. அவனைப் பற்றிய அவர் எதிர்பார்ப்பு, குழந்தைகளில் பரிபூர்ண குழந்தையாக அவன் இருக்க வேண்டும் என்ற ஆசை, சதா அவனைக் கண்காணிக்கும்படி அவரை ஆக்கிவிட்டது. பாலுமீது அவர் குறை கண்டு கோபப்பட்டபோது மற்றவர்கள் திரும்பத் திரும்ப என்ன சொன்னார்கள்? சிறு குழந்தைதானே அவன் என்பதுதான் அது. அவன் சிறுகுழந்தை என்பது அவருக்குத் தெரியாதா? குழந்தை என்பது பெரியவர்களின் சிறிய உருவம் என்றுதான் அவர் புரிந்து கொண்டிருந்தாரா? அவனை உருவாக்கப் பிரயோகித்து வந்த மேற்பார்வைகள் எல்லாமே அவனை உருக்குலைக்கத்தான் பயன்பட்டதா என்ற கேள்வி அவரை அரித்துக்கொண்டிருந்தது.” இந்தக் கேள்விக்குப் பின்  ‘மேற்பார்வை இல்லாத வெறும் பார்வை அது’ என அவர் நடத்தையில், பார்வையில் அடைந்த மாற்றமும் ஒரு இடத்தில் சொல்லப்படுகிறது (ப.505).  இந்த மேற்பார்வை மற்றும் மேற்பார்வையற்ற தன்மை குறித்த தொடர் நிகழ்வுகள்,  இவற்றால் குழந்தைகள் மற்றும் பெண்களின் இருப்பிலும் இயக்கத்திலும் ஏற்படும் பாதிப்புகள், உருமாற்றங்கள் குறித்து இந்நாவல் அடுக்கடுக்காக விவரித்துச் செல்கிறது.

கதைசொல்லியின் கோட்பாட்டுப் பிரக்ஞை கொண்ட கதைமொழியின் காரணமாக ஒவ்வொரு பாத்திரமும் சிந்திப்பது பேசுவது அனைத்தும் விளக்கம் நிறைந்த வாக்குகளாக அமைகின்றன. குழந்தைகள் குறித்தான விளக்கங்களில் இந்த வாக்குகள் அதிகம் படிந்துள்ளன. “அவனைத் துன்புறுத்திக் கொண்டிருப்பது பயம். கற்பனையால் போஷிக்கப்பட்ட மனிதர்கள் சார்ந்த பயம். அவனுடைய மனிதர்கள் சாரந்த பயத்தின் மையத்தில் நீங்கள் இருக்கிறீரகள். உண்மையில் அவனுடைய பயமே நீங்கள்தான். நீங்கள் வேறு, பயம் வேறு என்று அவனுக்கு இல்லை. ஒன்றின் மறுபெயராக மற்றொன்று இருக்கிறது.”என்பன போன்று நீண்டு செல்லும் வாக்கியங்கள் ஒரு வகையில் நவீன சமூக-குடும்ப வெளியில் குழந்தைகள் குறித்த பொருட்படுத்தப்படாத தன்மைக்கும் உருவழித்த தன்மைக்கும் மாற்றான பேச்சுகளாக அமைகின்றவை. இது நவீன தனிமனித அடையாளங்களை ஒவ்வொரு தனி இருப்புக்கும் வழங்கும் மனிதஉரிமை சார்ந்த புரிதல்களால் இலக்கியத்திலும் பின் சமூகத்தளத்திலும் ஏற்பட்ட மாற்றத்தின் பதிவு.

குழந்தைகளும் கோட்பாட்டுத்தேர்வு உடையவர்கள் என்பதை “உன் இஷ்டப்படி நீ இரு என்று அப்பா என்னிடம் சொன்னால் சம்பத் மாமா மாதிரி ஜோரா இருப்பேன்.’ அவனைப் பொறுத்த வரையில் சம்பத் மாமா என்பது மிகச் சரியாகக் காரியங்கள் செய்யும் குணத்தின் குறியீடு.” (ப.448) என்ற வாக்கியங்கள் விளக்குகின்றன. அதே சமயம் குழந்தைகள் பற்றிய புரிதலில்தான் பெரியவர்கள் பற்றிய புரிதலும் தொடங்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டும்  இப்பகுதியை நினைவில் கொள்ள வேண்டும், “மனம் விட்டு கேட்டுக்கொள்கிறேன். எனக்கு எதுவும் தெரியும் என்று தயவு செய்து கற்பனை செய்து கொள்ளாதீர்கள். பாலு போல் நானும் ஒரு குழந்தை. ஒரு குழந்தையாகப் பாவித்து என்னிடம் சொல்லுங்கள்.” (ப.454) இந்த வகை சுட்டிக் காட்டுதலை தன் எடுத்துரைப்பின் உத்தியாக வெளிப் படையாக முன்வைக்கும் ‘குழந்தைகள் பெண்கள் ஆண்கள்’ நாவல் இதே வகையாகப் பெண்களைப் பற்றியும் பேசுகிறது, பெண்ணியத்தின் வரலாற்றுக் கேள்விகளை பண்பாட்டுத் தளத்தில் பொருத்தி பெண்களின் இருப்பு குறித்து பெண்களைக் கொண்டு பெண்வாக்குகளாகப் பேச வைக்கிறது.

இந்தியப் பெண்களின் இருப்பும் அடையாளமும் குடும்பம் சார்ந்தே அமைய வேண்டியவை, அவர்களுக்கென்று தனித்த கனவுகளும் நினைவுகளும் இருப்பதற்கான தேவை இல்லை என்ற பொதுநம்பிக்கையை நவீன இலக்கியச் சொல்லாடல்களும் ஒரு வகையில் உறுதிப்படுத்திக் கொண்டிருப்பதை நாம் கவனித்து வருகிறோம். குடும்பம், சாதி, சமயமரபுகள் என்பவற்றிற்குள் பெண்களின் நிலை பற்றிய கொடிய உண்மைகளைச் சொல்லும் ‘சாய்வு நாற்காலி’ போன்ற நாவல்கள் வரலாற்றில் இந்தியப் பெண்களின் இடம் பற்றியும் அவர்களின் மீதான நுண்மையும் பருண்மையுமான வன்முறைகளை பேசுவதற்கான மாதிரிகளை உருவாக்கித் தந்திருக்கின்றன. குழந்தைகள் பெண்கள் ஆண்கள் நாவலின் பதிவுகள் பெண்ணிய வாசிப்பிற்கான தளங்களைக் கொண்ட பெண்கள் பற்றிய பண்பாட்டுப் பகுப்புகளைக் கொண்டவை. பெண்களைப் பற்றிய பொதுவான மௌனங்களும் இருள்படுத்தல்களும் நீக்கப்பட்ட சொல்லாடலின் மூலம் இந்நாவல் பெண்களின் கருத்தியல் இடையீடுகளையும் அவர்களின் கனவுகள் மற்றும் தகர்வுகளையும் பதிவுசெய்கிறது. இந்நாவலில் இடம்பெறும் பெண்பாத்திரங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கருத்தியலுக்கான வரைபடமாக அமைக்கப்பட்டிருப்பது போன்ற தோற்றம் கொண்டுள்ளன.

லட்சுமி என்ற பாத்திரம் இந்நாவலில் கூடுதலான பக்கங்களில், அதிக விவரிப்புகளை எடுத்துக்கொண்ட ஒன்று. பாலு என்ற சிறுவனையும் அவனுடைய குடும்பத்தையும் மையப்படுத்தி இந்நாவல் திட்டமிடப்பட்டிருப்பதால் அவனுடைய தாய் என்ற வகையில் லட்சுமி பற்றி அதிகம் பேசப்படுவது இயல்பான ஒன்று. இந்த பாத்திரத்தை முன்வைத்து பெண்கள் சார்ந்த சில உளவியல் சிதைவுகளும் நசிவுகளும் சொல்லப்படுவது அதிக கவனத்திற்கு உரியது. லட்சுமியின் நினைவோட்டங்களாகக் கதைசொல்லப்படுவதன் மூலம் கதையின் கோணம் பெண்வயப் பார்வையில் அமைவதற்கான தளத்தை பல இடங்கள் அடைகின்றன (தாகூரின் காரே பைரே நாவலில் பிமலாவின் தன் பேச்சாக அமையும் பகுதிகள்  நினைவுக்கு வரும்). லட்சுமி ஒரு மனைவி என்ற வகையில் தன் ஆழ்மனக் காதல், ஏக்கங்கள், ஆசைகள் என்பவற்றை மெய்ப்பட வாழுவதற்கான நிலையில் இல்லை. இந்தியக் குடும்ப உறவில் காதல் மற்றும் சம நிலையிலான உணர்வு சார்ந்த பிணைப்புகள் என்பது இல்லாததும் தேவைப்படாததும் ஆகும்.

பல சமயங்களில் இவை தடைசெய்யப்பட்டதும் ஆக உள்ளது. லட்சுமி தன் கணவன் எஸ்.ஆர்.எஸ் மீது கொண்டிருப்பது ஒரு வித அச்சம். எந்த நேரத்தில் என்ன கடுமையான சொல் வருமோ என்ற அச்சம். ஒப்பீட்டு அளவில் தன் கணவன் பிற ஆண்கள் அளவுக்கு வன்முறை மற்றும் கொடுமையைச் செய்வதில்லை என்ற ஒரு ஆறுதல் மட்டும் லட்சுமிக்கு தன் கணவன் மீது ஒரு மரியாதையை உருவாக்கித் தருகிறது. மற்றபடி தன் கணவனிடம் இருந்து நெருக்கமோ காதலோ அவளுக்குக் கிடைப்பதும் இல்லை, அவள் தருவதும் இல்லை. லட்சுமியின் நீடித்த நோய் அவளை உடல் அளவிலும் மன அளவிலும் ஒதுங்கி இருக்க வைக்கிறது. அவளுடைய தொடர்நோய் திருமணம் நடந்து முதல் உறவுக்கும் முன் தொடங்கி வாழ்க்கை முழுதும் அவளைத் தொடர்ந்து வருகிறது. டாக்டர் பிஷாரடி அவளுடைய நிரந்தர மருத்துவராக இருக்கிறார் (வெளியிலிருந்து ஒரு ஆணின் வருகை வெரும் உடல் நோய்க்கான சிகிச்சை மட்டும் அல்ல). அதன் மூலம் அவளுக்கு வெளி உலகுடன் ஒரு தொடர்பு கிடைக்கிறது.

ஆனந்தம் லட்சுமியைக் கவனித்துக் கொள்கிற ஒரு பெண், ஆனந்தத்தின் இளமையும் அவளுடைய ஆதரவற்ற நிலையும் லட்சுமியின் குடும்பத்திற்கு உழைப்பு என்ற வகையில் பயன்படும் அதேசமயம் ஒரு இருண்மையான பாலியல் படிமமாகவும் குறியீட்டுக் கருவியாகவும் பயன்படுகிறது. இதனை லட்சுமி மறைவாக அனுமதிக்கவும் செய்கிறாள். நேரடியான உடல் சார்ந்த பரிமாற்றங்கள் நிகழப்போவதில்லை என்னும் உறுதிப்பாடு இருப்பதால் தன் கண்காணிப்புக்கு உட்பட்ட நிலையில் தன்னுடைய கணவனின் மனக்கிளர்ச்சியின் மறைவான தளத்தில் ஆனந்தத்தின் இருப்பை லட்சுமி அனுமதிக்கிறாள்.

லட்சுமியின் நோய், அவளுடைய தொடர்ச்சியான அந்நியப்பட்டநிலை இந்தியக் குடும்ப உறவுகள் மற்றும் ஆண்மையக் குடும்ப அமைப்பின் கொடுமையை விளக்குவதற்கான உருவகமாக தொடர்ந்து செயல்படுகிறது. ‘கணவரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? மனதை சதா அரித்துக்கொண்டிருக்கும்’ கேள்வி இது.  இதுதான் இந்தியப் பெண்கள் அனைவரையும்போல லட்சுமிக்கும்.  ‘ஒரு மனித ஜீவனுடன் கூடிவாழ்ந்ததால் மனம் தொகுத்து வைத்திருக்கும் ஊமைக்காயங்கள். வார்த்தைகள் மூலம் அந்தக் காயத்தை உணர வைக்க முடியுமா?’ இந்தியப் பெண்களின் கூடிவாழும் மரபான ஆச்சாரம் நிரம்பிய குடும்ப வாழ்க்கை பயமும் உடல் மற்றும் மனம் சார்ந்த ஊமைக் காயங்கள் மட்டுமே கொண்டது என்பது பற்றியும் அந்தக் கொடும்நிலை வார்த்தைகளில் வசப்படக் கூடியதில்லை என்பதையும் லட்சுமியின் மன ஓட்டங்கள் பூடகமாகப் பதிவு செய்து கொண்டே உள்ளன. ஆனால் அந்த அமைப்புக்கு வெளியே செல்வது குறித்த அச்சமும் தொடர்ந்து இருந்து கொண்டிருக்கிறது.

ஆனந்தமும், வள்ளியும் தமக்கான மனம் விரும்பும், சமமான ஆண்உறவுகளைத் தேர்ந்தெடுக்க முயலும்போது லட்சமியால் அதனை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. அது உள்ளார்ந்த அச்சத்தால் நிகழ்கிற வெறுப்பு. லட்சுமி அச்சம் என்பதை தன் உள்ளார்ந்த அடையாளமாகக் கொண்ட பெண்மையின் குறியீடு. அவளுக்குத் தன் பிறந்த வீட்டை நினைத்தால் வருத்தமும் துயரமும் ஏற்படுகிறது. தன் புகுந்த வீட்டை நினைத்தால் பயமும் படபடப்பும் ஏற்படுகிறது. “கிரகப்பிரவேசம் முடிந்ததும் பர்ணசாலையிலிருந்து இராவணன் கோட்டைக்குப் போன மாதிரி இருந்தது. எல்லாம் சட்டம், திட்டம், யோசனை, ஒழுங்கு, குத்தல், குதர்க்கம் என்றிருக்கும். வீடு பின் கட்டு முன் கட்டு என்று இரண்டாகப் பிரிந்து கிடந்தது. இடையில் ஒரு கண்ணுக்குத் தெரியாத காட்டாறு ஓடுவதுபோல் இருக்கும். முன் கட்டுக்குப் பெண்வாடையே ஆகாது.” ஆண்களைப் பற்றிய பயம், ஆண்களின் சட்டமும் கொடும் நியதிகளும் உருவாக்கிப் பரப்பும் கண்காணிப்பும் தண்டனையும் தொடர் வன்முறைகளும் அமைதியாக நியாயப்படுத்தப்பட்ட ஒரு உலகம்.

இந்த ஆண்கள் “பகவான் மாதிரி. எல்லா இடத்திலும் இருப்பார்கள். எந்த இடத்திலும் இருக்கவும் மாட்டார்கள்” (ப.339). ஆண்கள் என்பவர்கள் கணவன், தந்தை, மகன், உடன் பிறந்தவர்கள் எப்படியிருந்தாலும் “அவர்களுடைய நினைப்புக்கும் தன் நினைப்புக்கும் நிறைய வித்தியாசம் இருப்பது சில நாட்களிலேயே தெரிந்து விட்டது” லட்சுமிக்கு. அதனால் “எதைச் செய்தாலும் அது சரியாக இருக்குமா என்று சந்தேகம் வந்தவண்ணம் இருக்கும்” ஒருத்தியாக லட்சுமி மாறிவிடுகிறாள். ஒரு தாயும்கூட தன் மகனிடம் பயம் கொண்ட உறவையே பேண வேண்டும் என்றால் இந்திய மரபில் அன்பின் இடம் எது என்ற கேள்வி தொடர்ச்சியாக இந்நாவலில் பதிவாகிக் கொண்டே இருக்கிறது.

இதன் அடுத்த நகர்வுதான் சுகன்யா, வள்ளி போன்ற பெண்களின்  உருவாக்கம். “ஆண்கள் சார்ந்த வாழ்க்கை வேண்டவே வேண்டாம் என்று ஒருநாள் சுகன்யா சொன்னாள். சுகன்யா இதைச் சொன்னதும் வள்ளியின் மனம் அதிர்ந்தது.” வள்ளிக்கு “அந்த மன உலகத்திற்கான ஏக்கம் தன்னிடம் இருப்பது அவளுக்கு எப்படித் தெரிந்தது?” என்பது குறித்து வியப்பு ஏற்படுகிறது. இந்த ஏக்கம் பற்றிய கதையாக இந்த நாவலில் இடம் பெறும் பல பெண்களின் கதை அமைந்துள்ளது. ஆண்களைப் பற்றிய மரபான ஏற்புகள் உடைபட்ட  அவர்களின் “மனசு வகைப்படுத்தி வச்சிருக்கு இந்த ஆம்பிளைகளை. ஆண்கள் முரடர்கள், சாதுவான முரடர்கள், தந்திரமான முரடர்கள், சுயநலம் கொண்ட முரடர்கள், முரடர்களான முரடர்கள், சிரித்துக்கொண்டே இருக்கும் முரடர்கள்” (466). இந்த அறிவுத்தெளிவு அவர்களுக்குள் நிம்மதியின்மையை அமைதியின்மையை உருவாக்குகிறது. “பிறருடைய எண்ணங்கள்தான் என்னைத் தீர்மானித்துக் கொண்டிருக்கின்றன. என் உடல், மனம், உணர்ச்சி, உயிர் எதுவுமே என்னிடம் இல்லை. எதுவும் எனக்குச் சொந்தமும் இல்லை. எனக்குச் சொந்தமில்லாமல் பிறருக்குச் சொந்தமாக மட்டும்தான் நான் இருக்கிறேன்” (542) என்ற தன்னுணர்வு புதிய பெண் அடையாள உளவியலை உருவாக்க அடிப்படையாக அமைகிறது. இந்தப் பெண்அடையாளம் குறித்த சில வகைமைகளை நாம் இந்த நாவலிலிருந்து அடையாளம் காண முடிகிறது.

கோமதி லட்சுமியின் மூத்த தங்கை, ஒவ்வொரு நாளும் தேதியிட்டு அரைப்பக்கம் ஒரு பக்கம் என்று அன்று முடிகிற அளவுக்கு எழுதி பத்துப்பதினைந்து பக்கங்கள் சேரந்ததும் தன் அக்காவுக்கு அனுப்பிவிட்டு மீண்டும் மறுநாளே எழுதத் தொடங்கி விடும் ஒரு பெண். எழுத்து அவளுக்குத் தன் எண்ணங்களை வெளிப்படுத்த ஒரு கருவி. “எனக்குத் தெரியாததெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும்மென்று ரொம்ப ஆசை” என்னும் அவளுடைய விருப்பம் குடும்பத்தின் சுவர்களுக்குள் நசுங்கி விடுகிறது. கல்வியும் அறிவும் அவளுடைய விடுதலையின் தொடக்கமாக இருந்தும் அவை அவளுக்குத் தடைசெய்யப்படுகின்றன. சேவை செய்வதன் மூலம் தன் அடையாளத்தை மாற்றிக்கொள்ள முடியும் என்ற அவளுடைய மனத்தேர்வும் நடைமுறைப்படுத்த முடியாததாக இருக்கிறது. அவளுடைய மாறுதலுற்ற மனம், நடைமுறைகள் ‘கிறித்தவ மதத்தில் மாறிவிடுவாளோ என்ற’ சந்தேகத்தை அவளுடைய குடும்பத்தினருக்கு உருவாக்குகிறது.

அவர்களுடைய குடும்பத்தினரோ அவளுடைய சினேகிதிகளை சாதியையும் மதத்தையும் சொல்லித் திட்டிக் கொண்டிருப்பவர்கள். அதே சமயம் நோய் என்றால் அவர்களிடம் ‘ஓடி ஓடிப்போய் இலவச வைத்தியம் பெற்றுக்கொள்ள எந்த கூச்சமும் படாதவர்கள்.’ தன்னை மாறுதல் கொண்ட ஒரு வாழ்வின் பாத்திரமாக மாற்றிக்கொள்ளும் முயற்சியிலும் ஏக்கத்திலும் இருப்பவள் கோமதி, ஆனால் திருமணம் என்பதைத் தவிர அவளுக்கு விதிக்கப்பட்டது வேறு எதுவும் இல்லை. கல்யாணமே வேண்டாம் என்று அவள் சொல்லும்போது அவளுடைய எண்ணங்களைப் புரிந்து கொள்வதாகச் சொல்லும் அவளுடைய அக்கா லட்சுமிக்கும் கூட கோபம்தான் உண்டாகிறது. இத்தனைக்கும் மணவாழ்வு என்பதே ஒரு நோயாக மாறி அவளை வாட்டிக்கொண்டிருக்கிறது, இருந்தும் மரபை உடைத்துச் செல்வதை நினைக்கும் பொழுதே பயமும் கோபமும்தான் அவளைப் போன்றவர்களுக்கு உருவாகிறது.

கோமதி போன்றவர்களுக்கு விடுதலைக்கான ஆசை வாழ்வில் நீடித்த தண்டனையாக மாறிவிடும் வாய்ப்புகளே அதிகமாக உள்ளது. “என் கழுத்தில் தாலி கட்டுகிறவன் முட்டாளாகவோ முரடனாகவோ இருந்தால் நான் தற்கொலை செய்து கொண்டு விடுவேன்” என்பது அவளுடைய தீர்மானங்களில் ஒன்று, இந்த வகையான தேர்வுகளில் அவளுடைய போராட்டத்தின் தொடக்கம் படிந்திருக்கிறது, அது ஒரு நீடித்த போராட்டம், கண்ணுக்குப் புலப்படாத, ஆனால் பெண்களின் உயிரைப் பணயமாகக் கேட்கும் போராட்டம்.

வள்ளி, லட்சுமின் இரண்டாவது தங்கை இவளுடைய நடத்தைகள் மனவோட்டங்கள் அனைத்துமே அவளது சாதி மற்றும் குடும்பத்தின் மரபுக்கும் சட்டவிதிகளுக்கும் முரணாக அமைந்திருக்கின்றன. ஆனால் குடும்பம் மற்றம் சாதியின் கண்காணிப்புக்கும் தண்டனைக்கும் வெளியே சென்றுவிடும் ஆற்றலோ வலிமையோ அற்ற முதல்தலைமுறை பெண் அவள். ஸ்ரீதரனைத் தன் கருத்தியல் சார்ந்த தோழனாக, சமஉரிமையுடன் கூடிய வாழ்க்கைத் துணைவனாக தேர்ந்தெடுத்துக்கொண்ட போதும் சாதி என்பது அவளுடைய வாழ்க்கைத் தேர்வை உடைத்து, மூடுண்ட குடும்பம் என்ற ஒடுக்குதல் அமைப்புக்குள் அவளை முடக்கிப் போடுகிறது. பாசம் என்பதன் பெயரால் அவளுடைய தமக்கை லட்சுமி இந்த ஒடுக்குதலின் முதல் பொறுப்பாளியாக மாறிவிடுகிறாள்.

ஆனந்தம் ‘விதவை’ என்ற அடையாளத்துடன் பிறருக்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்திருக்கும் பெண். இவள் செல்லப்பாவை தன் வாழ்க்கைத் துணையாகத் தேர்ந்தெடுத்து, அவனுடைய அரசியல் செயல்பாட்டுக்காக அவனை நேசித்து அவனுடன் சேர்ந்து வாழவும் தன்னை ஆயத்தப் படுத்திக்கொள்கிறாள். இந்த சுதந்திரத்தை அவள் செயல்படுத்த முடிவதற்கு தோதாக அமைவது அவளுக்கு என்று குடும்பமோ உறவுகளோ இல்லாமல் இருப்பதுதான். அவளை மிகவும் நேசிப்பதாகச் சொல்லும் லட்சுமிக்கோ ஆனந்தத்தை ஆசிர்வதிக்க மனம் இல்லை. எஸ்.ஆர்.எஸ்  வள்ளி, ஆனந்தம் இருவருடைய சுதந்திரமான தேர்வுகளையும் மனதால் ஏற்றுக் கொள்கிற மாறுதலை மதிக்கும் அறிவு கொண்ட ஒரு ஆண். ஆனால் அதற்காக செயலில் எதையும் வெளிப்படுத்தும் ஆற்றலோ துணிவோ அற்ற முடங்கிப்போன ஒரு ஆண். அதற்கு மேல் போவதற்கான தயாரிப்பை அவருடைய கருத்தியல் தேர்வு அவருக்கு வழங்கவில்லை.

இந்தியப் பெண்களின் அடைபட்ட உளவியல் குறித்த மிக முக்கியமான ஒரு பதிவை சாவித்திரி என்ற பாத்திரத்தின் மூலம் இந்த நாவல் கையாளுகிறது. ‘டாக்டர் பிஷாரடியின் மனைவி சாவித்திரி நீண்ட காலமாக மன நோயாளியாக இருந்தாள்’ என்று தொடங்கும் விவரிப்பு ‘அவள் விரும்பினாலும் அவளால் பேச முடியாத’ நிலையைச் சொல்லித் தொடர்கிறது. நான்காவது தடவை கர்ப்பம் தரித்திருந்த காலத்தில் அவள் சொல்கிறாள் “குழந்தை இறந்து பிறக்கவேண்டும் என்பதுதான் என் பிரார்த்தனை. இல்லையென்றால் நான் அதைக் கொல்ல வேண்டியிருக்கும்.” அதேபோல் சாவித்திரிக்கு குழந்தை பிறந்து சில நாட்களிலேயே இறந்தும் போயிற்று. பிஷாரடிக்கு அப்போது ஏற்பட்ட நிம்மதியைக் கூச்சத்துடன் பிறருக்குத் தெரியாமல் அவர் மறைத்துக் கொள்கிறார். சாவித்திரியின் கையில் குழந்தை பட்டபாட்டை நினைத்தாலே அவருக்கு வயிற்றைக் கலக்குகிறது. அசோகமித்திரனின் மானசரோவர் கதையில் வரும் மனச்சிதைவுகொண்ட மனைவி தன் கணவன் மீது கொண்ட வெறுப்பினால் தன் நோய்ப்பட்ட மகனைக் கொல்வதை இங்கு நினைவு படுத்திக்கொள்வது கூடுதலாகச் சில அர்த்தங்களைத் தரும்.

ஸ்ரீதரன், சுகன்யா, அப்புக்குட்டன் என்ற மூன்று பிள்ளைகளும் மூன்றுவித மனிதர்களாக வளர்வதில் சாவித்திரியின் மனச்சிதைவுற்ற நிலையும் ஒருவிதத்தில் காரணமாக அமைந்து விடுகிறது. ஒரு தாயாகத் தன் பணிகளைச் செய்ய மறுக்கும் அதே சாவித்திரிதான் தன் வளர்ந்த மகன் ஸ்ரீதரன் தந்தைக்கு எதிராகக் கலகம் செய்கிறபோது அதனை மகிழ்ச்சியுடன் ஊக்குவிக்கிறாள். குடும்பம், ஆண் பெண் உறவுகள் பற்றிய கடுமையான இந்தியச் சிக்கல்கள் பற்றிப் பேச இந்நாவலின் பெண்பாத்திரங்கள் திட்டமிடப்பட்ட, மாதிரி வடிவங்களாக அமைக்கப்பட்டிருப்பதற்கும் இந்நாவல் ஒரு கோட்பாட்டு விளக்கக் கதையாடலாக இருப்பதற்கும் உறவு உள்ளது. இதனை வாசிக்க கோட்பாடு சார்ந்த வாசிப்பு  தேவையாகிறது.

மாறுதல்கால நவீனநிலை பற்றிய கதைசொல்லலாக இந்நாவல் அமைந்திருக்கிறது என்பதைப் பின்புலமாகக் கொண்டு இந்நாவலின் ஆண் பாத்திரங்களின் செயல்பாடுகள் மற்றும் சொல்லாடல்களை நாம் வாசிக்கும்போது இவை கருத்தியல் மற்றும் கோட்பாட்டு மோதல்கள், முரண்கள், இசைவுகள் மற்றும் இணக்கங்கள் பற்றியவை என்பது புரியவரும். இந்திய சமய மரபு, தேசிய அரசியல், காந்திய நம்பிக்கைகள், (செல்லப்பா), பகுத்தறிவு மரபு, நவீனத்துவ மதிப்பீடுகள்(ஸ்ரீதரன்), மார்க்சியக் கோட்பாடு (கருநாகப்பள்ளி ஜோசப்), ஜனநாயக நம்பிக்கைகள் (எஸ்.ஆர்.எஸ், சம்பத்) எனப் பல கருத்துக்களின் உரையாடலை கலப்பதன் மூலம் இந்நாவல் மாறுதல்காலச் சொல்லாடலுக்கான தளத்தினை அமைக்கிறது. அதே சமயம் நுண் அரசியல், பருண்மை அரசியல் இரண்டுக்கும் இடையிலான நேர் முரண் உறவை செயல்பாடு என்பதற்கு முனையாத பாத்திரங்களின் வழியாகக் காட்சிப் படுத்துகிறது. ஆண் என்னும் அடையாள வன்முறையை மறுத்து மாறுதல் அடையத் தயங்கும் இந்திய நவீன ஆண்நிலை பற்றிய கேள்விகளையும் இந்நாவல் தடம் காட்டிச் செல்கிறது. இந்நாவலின் குழந்தைகள் நாளை என்னவாகத் தம்மை மாற்றிக் கொள்கிறார்கள் என்பதைப் பற்றிய தெளிவாகாத புதிருடன் இந்நாவல் முடிவதன் மூலம் எதிர்கால அரசியல் பற்றிய முடிச்சுகளாக இந்நாலின் வாக்கியங்கள் இறுக்கமடைந்து நிற்கின்றன. தீண்டாமை என்ற மிக அடிப்படையான இந்தியச் சமூகஅரசியலின் இடம்பற்றிய இந்நாவலின் அமைதி தமிழ் கதைகளின் வாசிப்புகள் அனைத்தையும் மறுவாசிப்புக்கு உட்படுத்த வேண்டியதன் தேவையை வலியுறுத்தி நிற்கிறது.

இந்நாவலை நவீன மாறுதல்கள் குறித்த கல்விப்புல கதையெனச் சொல்வதற்கான மேலும் ஒரு சான்றுடன் இக்கட்டுரையை முடிக்கலாம். “எனக்கு எந்த சக்தியும் இல்லை. எந்தத் திறனும் இல்லை. என்னைப் பொம்மையாக வைத்து எல்லாரும் விளையாடுகிறார்கள் என்றாள் வள்ளி. தன் முகத்தை ஸ்ரீதரன் நேராகப் பார்க்க முடியாதபடி பக்கவாட்டில் திரும்பி உட்கார்ந்து கொண்டாள்.

நீ பொம்மை இல்லை. உனக்குள் தூங்கிக்கொண்டிருக்கும் சக்திகளுக்கு அளவில்லை. வானத்தைத் தொடும் ஜூவாலையை உன் மனதிற்குள்ளிருந்து எழுப்ப முடியும். கனலைக் கரியாக்கும் சிறையிலிருந்து வெளியே வா. நமக்கென்றொரு வாழ்க்கை இருக்கிறது. அந்த வாழ்க்கைக்கு ஈடுகொடுக்கும் போதுதான் நாம் யார் என்பது நமக்கே தெரியவரும். பிறர் பிடித்த பொம்மையாக இருப்பது கேவலம், அவமானம். அதைவிட மரணம் எவ்வளவோ மேல்’ என்றான் ஸ்ரீதரன்.” (ப.581)

குறிப்பு நூல்கள்:
சுந்தர ராமசாமி. குழந்தைகள் பெண்கள் ஆண்கள். நாகர்கோயில்: காலச்சுவடு,1998.
சிதைவுகளின் ஒழுங்கைமைவு: பின்நவீனத்துவப் பிரச்சினைப்பாடுகள். பெங்களூர்:காவ்யா,2000.