பிரபஞ்ச விகாசத்தின் சாயலாய் ஒளிர வேண்டிய மனித மனங்கள்-சூன்யத்தின் உறைவுகளாய்(ச்) சமைந்து சவப்பேழைகளாய்(ப்) புதைந்து நிற்கும் அவலம் நம் கணங்கள். சகல திசைகளையும் உட்குடைந்து வியாபிக்கும் அகக் கதிர்வீச்சு இன்று அந்தக நார்க் குவியல்களாய் சிக்கலுற்று எஞ்சியது என்பது அவலம் கனலும் நிஜம். உறைந்துபோன படிமங்களால் தன்னைச் சுற்றி சுவர் சமைத்துக்கொண்ட இந்த நூற்றாண்டு மனிதனின் உயிர்த்தல் பற்றிய கேள்விகள் கூட புதுப்பிக்கப்படாமல் பின்னமுற்றுக் கிடக்கின்றன. இந்த மயான வெளியில்தான் இன்றைய ஒவ்வொரு கலைஞனும் அனாதை பிம்பமாய் உறைந்து நிற்க வேண்டியிருக்கிறது. நிர்ணயங்களின் குமிழ்களுக்குள் அடங்காமல் பிரவகித்து மறையும் நிஜங்களின் பிரமாண்டம் கண்டு அதிசயிக்கும் அதே கணத்தில் மட்கிப்போன மாமிசத் திரளின் புழுக்களாய் சலனித்துக் கிடக்கும் மனிதக் கூட்டத்தின் விரூபம் கண்டு உயிரழுகிச் சொட்ட வாதையுறுதலும் நேர்கிறது. சவத்தன்மைக்கு எதிரான கலகம் மட்டுமே இன்றைய கலைகள் என்பது நிஜ கலைஞன் ஒவ்வொருவனுக்கும் தெரிந்தே இருக்கிறது. நிர்மாணங்கள் அனைத்தையும் சிதைப்பதைத் தவிர கலைகளின் இக்கண இயக்கம் வேறேதும் இல்லை என்பதை நாம் என்றோ உணர்வுற்றுத் தெளிந்துவிட்டோம். ஆனால் தமிழ்ச் சூழலில்- இன்னும் பரவலாய் இந்தியச் சூழலில் உக்ரம் என்பதும் முற்றான கலகம் என்பதும் இல்லாத ஒன்றாக எஞ்சி நிற்கிறது. மூர்க்கமான ஆய்வுகளே கலைகளின் திசையியக்கம் என்பது இன்னும் பரவலாய் இந்தியச் சூழலில் உக்ரம் என்பதும் முற்றான கலகம் என்பதும் இல்லாத ஒன்றாக எஞ்சி நிற்கிறது. மூர்க்கமான ஆய்வுகளே கலைகளின் திசையியக்கம் என்பது இன்னும் தெளிவுறாத நிலையில் பிரேதங்களின் குறிகளைச் சுவைத்து(த்) தணியும் தத்துவ விசாரங்களே இன்னும் அறிவார்த்த(த்) தளங்களில் இடம் பிடித்துக் கொண்டிருக்கின்றன. சவத்தனவே வாழ்க்கையான ஒரு அமைப்பில் உயிர்ப்புள்ள தத்துவங்கள் சலனம் கொள்ள முடியாது என்பது சரித்திர உண்மை என்றாலும் உலகின் பிறபாகங்களில் அவற்றிற்கான குவிமையங்கள் இருந்தே வந்திருக்கின்றன. வீர்யமான கலைப்படைப்புகளும் உக்ரமான மனோவயக் கலகங்களும் முற்றிலுமே இல்லாத சூழல் என்று நாம் தமிழ்ச் சூழலைக் கூற வேண்டும். இங்கிருந்து உலகளவில் கூறக்கூடிய ஒரு நவீனத்தையோ ஒரு கவிதையையோ நிச்சயம் நவீன சிந்தனையுள்ள யாரும் முன் மொழிய முடியாது. இதற்கான காரணங்கள் இரண்டொரு தொடர்களில் விளக்கக் கூடியவை இல்லை. அனைத்தையும் சிதைத்துச் சிதைத்து பிரபஞ்ச நிஜத்தை நோக்கி இயங்கக் கூடிய அதீத கலா இயக்கம் இந்திய மனோ நிலையில் என்றுமே கிடையாது. உலக அளவிலேயே கடைசி இரண்டு நூற்றாண்டு அளவிலான தத்துவ நோக்குகளே மனித மையம் கொண்ட சிந்தனைகளை முன் வைத்தன. மகோன்னதங்களை நோக்கிய விகசிப்பே நிஜமான மனிதத் தேடுகைகள் என்பதை அகம் புறம் அனைத்துமாகக் கொண்டு இயங்கும்- இயங்க எத்தனிக்கும் ஒரு கலை இலக்கிய ஆய்வுக் கூடமே ‘கிரணம்’ உலக கலகக்காரர்கள் அனைவரையும் சக ஜீவன்களாகக் கொண்டும்-கலைஞர்களைத் தவிர வேறு யாரையும் மனிதர்களாகவே கணிக்காத வெறியோடு இயங்கும் அன்னியர்களின் நிலவறையே ‘கிரணம்’. அனைத்து மதிப்பீடுகளுக்கும் அப்பால் பிரபஞ்ச நுண்ணுணர்வு என்ற உச்சத்தை நோக்கிய முயக்கமே இதன் ஒவ்வொரு சலனமாகிறது. உலக அளவிலான கலைப் படைப்புகளும் படைப்புகளிலிருந்து பிளவுபடாத வாழ்க்கையுமே இதன் ஆதர்சன கனலாக ஒளிரும். இதற்கொன்று தனியான நோக்கங்களோ சாதனைகளோ அவலங்களோ இல்லை. உலக எதிர்க் கலைஞர்கள் நிகழ்த்திய-நிகழ்த்திக் கொண்டிருக்கும்-நிகழ்த்தப் போகும் கலகங்களின் சிறு அதிர்வே இதன் உயிர்ப்பு. தமிழ்ச் சூழலில் நிகழ்வதென்பது சரித்திர விபத்து. ‘கிரணம்’ எதிர் மதிப்பீடுகளின் ஆய்வுக் கூடமாகவும் கலக சிருஷ்டிகளின் சித்ரகூடமாகவும் இருக்கும் என்பது இந்த நேரத்தில் கூறப்பட வேண்டியது. பிற-இதன் இயக்கத்தின் போக்கில் உணர்த்தப்படும்… –பிரேம்
அறிக்கையால்
அலைந்த காலம்
இந்த ஒரு பக்க அறிக்கை அல்லது
இதழுக்கான அறிவிப்பு எழுதப்பட்ட ஆண்டு 1987. இதனைத் தன் அழகிய கையெழுத்தால் படியெடுத்தது
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னோடிகளில் ஒருவரான தோழர் பொதினி வளவன். இதனை நான்
எழுதிய போது எனது வயது 22. எனது பெரும் ஆக்கங்கள்
பல பிரேதா என்ற பெயரில் எழுதப்பட்ட போது எனது வயது 17-20 என இருந்தது. ஆனால் 21 வயதுக்குப்
பிறகுதான் இதுபோன்ற எழுத்துகளை வெளியிட முடியும் என்று சொல்லிக் கொண்டிருப்பார் சாரு
நிவேதிதா என இன்று உலகப் புகழ் பெற்றுள்ள தமிழ் எழுத்தாளர். அவர் அப்போது புதுச்சேரியில்
இல்லம் கொண்டிருந்தார். தில்லியில் பல ஆண்டுகள் வேலையில் இருந்து 1000-1500 நூல்களுடன்
புதுவையின் பொறியியல் கல்லூரிக்கு பணிமாற்றம் செய்து கொண்டு வந்திருந்தார். அமரந்தா
என்ற பெயரில் இன்று பல மொழிபெயர்ப்புகளைச் செய்துவரும் எழுத்தாளர் அப்போது சம்யுக்தா
என்ற பெயரில் மொழிபெயர்ப்புகள் செய்து வந்தார். முனியாண்டி,
அறிவழகன், சாரு நிவேதிதா என ஒரே நாளில் மூன்று பெயர்களில் புழங்கி வந்த சாரு நிவேதிதா
நண்பர் ஆபிதீன் கடிதங்களில் ரவி என்ற பெயரில் உலவி வந்தார். கிரணம் இதழ், அதனை இதழ்
எனச் சொல்வது பொருந்தாது என்றாலும் இதழ் என்ற வடிவில்தான் அது வெளிவந்தது. அது வெளி
வந்த போது சாரு மீண்டும் தில்லிக்குத் திருப்ப வேண்டியிருந்தது. அதற்கு முன்
1984-86 காலகட்டமாக இருக்கலாம் இனி தில்லிக்குத் திரும்பவேண்டியதில்லை என்ற ஆறுதலோடும்,
திட்டங்களோடும்தான் அவர் குடும்பத்துடன் புதுவையில் குடியேறியிருந்தார். ஆனால் அவருடைய
திட்டங்கள், சம்யுக்தாவின் முடிவுகள் அனைத்தும் தகர்ந்து வேலையை விட்டு அச்சகம் வைத்து
புதுவையிலேயே வாழலாம் என்ற முடிவை எடுத்து அதற்காகப் பல மாதங்கள் உழைத்து உடைபட்டு
மீண்டும் இருவரும் தில்லி திரும்பியிருந்தனர். இருவருமே அலுவலக தட்டச்சு உதவியாளர்களாக
இருந்தார்கள் (அப்படியே அவர்களை நான் பார்த்திருக்கிறேன்). அந்தக் காலகட்டம் பற்றித்
தனியே எழுதுவேன். இப்போது நான் சொல்ல வருவது, பெரும் இடிபாடுகளுடன் அலைச்சலும் அல்லலும்
கொண்ட ஒரு காலகட்டத்தில் “கிரணம்” என்ற பெயரில் நான் பத்திரிகை நடத்தப் போகிறேன் என
சாரு நிவேதிதா அறிவித்த போது எனக்குப் படபடப்பு அதிகமானது. எனது சில படைப்புகளை தன்
கையெழுத்தில் படியெடுத்து பத்திரிகைகளுக்கு புகழுரைகளுடன் அனுப்பி வைத்து அவர்கள் இந்த
நெடுங்கவிதைகளை தனி நூலாத்தான் வெளியிட வேண்டும் பத்திரிகையில் வெளியிட இயலாது எனத்
தெரிவிப்பார்கள், தெரிவிக்காமல் மறந்து போவார்கள். “லயம்” என்றொரு பத்திரிகைக்கு அனுப்பி
விட்டு என்னிடம் தெரிவித்தார், ஏன் சாரு அந்தப் பத்திரிகைக்கு என வருந்திவிட்டு மறந்தும்
போனேன். யாரும் நெடுங்கவிதைகளை வெளியிடவில்லை எனக் கடும் கோபத்தில் இருந்தார் சாரு
நிவேதிதா. அந்த சமயத்தில் “எக்சிஸ்டென்ஷியலிமும் பேன்சி பனியன்களும்“ நாவலின் முதல்
கட்ட எழுத்து அவர் கையில் இருந்தது. நான் அவரை முதன் முதலாகச் அவரது அலுவலகத்தில் சந்தித்த
அன்று என் கையில் அந்த ஃபூல்ஸ்கேப் பக்க நோட்டைக் கொடுத்து பார்த்துக் கொண்டிருங்கள்
என்று சொல்லி விட்டு தட்டச்சு, சுருக்கெழுத்து வேலையில் இருந்தார். இடையில் ஒரு டீ,
மீண்டும் அவர் தட்டச்சு நான் படிப்பு. மதிய உணவை அவரும் சம்யுக்தாவும் பிரித்த போது
நான் புறப்படுகிறேன் என்று எழுந்தேன். கிளம்பரிங்களா, அதெல்லாம் இல்லை உங்களுக்கும்
சாப்பாடு இருக்கிறது என்ற பொழுது நெகிழ்ந்துதான் போனேன். அவர்கள் இருவரும் பல காலம்
என்னை நெகிழ வைத்துக் கொண்டே இருந்தார்கள். ஆனால் அவரை நான் அன்று நெகிழ வைத்தேன்.
சாப்பிடும் பொழுதும் நோட்டுப் புத்தகத்தை புரட்டிப் படித்தபோது சாப்பிடுங்க பிறகு படிக்கலாம்
என்றார். இல்ல இன்னும் கொஞ்சம் பக்கம்தான் இருக்கு போறதுக்கு முன்ன முடிக்கனும் இல்லையா?
என்றேன். என்னது படிச்சி முடிச்சிட்டிங்களா? அவர் முகத்தில் அன்று கண்ட ஒளியும் ஒலியும்
பல ஆண்டுகள் தொடர்ந்தது. அன்று மாலை வரை அவருடன் இருக்கவேண்டி வந்தது. அதற்குப் பிறகு
அது பல ஆண்டுகள் தொடர்ந்தது. இந்தப் பகுதியை விரிவாக எழுதினால் நல்லது, அந்த பாத்திரம்
என்ன ஆனது எனப்பேசியும் சிலவற்றைச் சொல்லி எழுதியும், எழுதிச் செல்லும் விதியின் கையாக
நாவல் வளர்ந்தது. இறுதியாகத் தொகுத்து வகுத்து முன்னுரை எழுதிக் கொடுத்த போது எக்சிஸ்டென்சலிசமும் பேன்சி பனியனும் வெளிவந்து பிளாக்
பஸ்டராகி, தினமலர் விருது கிடைத்து…. அது ஒரு
தனிக்கதை,
இப்போது நான் சொல்ல வந்தது தன்
நாவலும் எழுத்தும் வெளிவர வாய்ப்பற்ற காலத்தில் எனது எழுத்துகளைச் சுமந்து கொண்டு தில்லி
வந்து 10 இதழ்களில் இவற்றையெல்லாம் வெளியிட்ட பின் நிறுத்திவிடலாம் என்று ஒரு கடிதம்
எழுதினார் சாரு நிவேதிதா. பிரேதாவின் எழுத்திலிருந்த ஒரு கற்பனை இதழ் “கிரணம்”, அதுவே
அச்சு இதழுக்குப் பெயரானது. மிதிலா அச்சகத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டது “இதழ் அச்சு
வேலை செய்து தரலாம், ஆனால் அச்சகத்தின் பெயர் அதிலிருக்காது” ஏன் அப்படி? பெயர் கிரணத்தில்
இருந்தால் அச்சகம் இருக்காது! அப்படித்தான் அன்று நிலை, கடைசி இதழ்வரை அச்சக்தின் பெயர்
இதழில் பதிவாகவே இல்லை என்று நினைவு. அது பற்றி
“கச்சேரி நினைவுகள்” என்ற தலைப்பில் தனிக்கதை எழுதலாம்.
முதல் இதழுக்குத் தலையங்கம்,
அறிமுகம் என ஒன்றை ஆசிரியர்தானே எழுத வேண்டும், எழுதுங்கள் சாரு என்ற போது, இல்ல நீங்கதான்
எழுதனும் என்றார். அப்போது ஒரு வீடியோ கடையில் வேலை செய்துகொண்டிருந்தேன். பகலில் எழுதி
முடித்துவிட்டு விற்க வைத்திருந்த மிர்ச் மசாலா (கேதன் மேத்தா) படத்தைக் கள்ளத்தனமாகப்
பிரித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். மாலை வந்த தோழர் பொதினி வளவனிடம் எழுதியதைக்
கொடுத்தேன். இரவுக்குள் அது அச்சு போன்ற கையெழுத்தில் இரு பக்கங்களானது. எனது கிறுக்கல்
கையெழுத்தை என்னிடம் வைத்துக் கொண்டு, நற்படியை அடுத்த நாள் அஞ்சலில் சேர்த்தேன் தில்லி
முகவரிக்கு.
இதழ் வெளிவந்த போது தலையங்கம்
அனைவரையும் ஆத்திரமூட்டியது, அப்படியே சிலரை ஆனந்தப் படுத்தியது. டாடாயசம், சர்ரியலிசம்
உருவானபோது பாரிஸ் நகரில் யாரோ ஒரு ஆள் இப்படித்தான் எழுதி இருப்பார் என்ற மிதப்பில்தான்
நான் அன்று அதனை எழுதினேன். அது தமிழிலக்கியத்தை மாற்றத் தொடங்கியது, உடன்பாட்டிலும்
பெரும் வெறுப்பிலும் இலக்கிய தொழிற்சாலை தனது புதிய உற்பத்தியைத் தொடங்கியது. புதுச்சேரி
வட்டம் என்ற பெயருடன் தமிழக இலக்கியப் பேச்சு ஒரு புதிய அடையாளத்தை உருவாக்கியது, ஒற்றைக்
கிரணத்தை “நிறப்பிரிகை“ செய்து பலவண்ணங்களில் செய்து வெளியிட தோழர்கள் வந்தார்கள்..
அது இன்று புதிய போக்குகளாய்ப் பரவிக் கிடக்கிறது.
இன்று அந்த அறிக்கையைப் படித்துப்
பார்க்கிறேன். எனக்குப் பிடிக்கவில்லை. அதில் சொல்லப் பட்டவைகளைத்தான் செய்து கொண்டிருக்கிறேன்.
ஆனால் அந்த அறிக்கை பிடிக்கவில்லை. சொற்குற்றமா, பொருட் குற்றமா, உங்குத்தமா, எங்குத்தமா?
யார நான் குத்தஞ்சொல்ல? என அது என் முன் கிடக்கிறது. அதனைப் பதிப்பித்த சாரு நிவேதிதாவுக்கு
அது பிடிக்காமல் போனது. அவர் நாவலுக்கு நான் எழுதிய முன்னுரையும் பின்னாளில் பிடிக்காமல்
போனது… அது ஒரு பெரிய கதை.
நான்தான் பொடியன் அவர் என்னை
விட பன்னண்டு பதிமூணு வயசு பெரியவர் இல்லையா சொல்லித் திருத்தியிருக்கலாம். இது போல
எழுதினால் வேலையெல்லாம் கிடைக்காது என்று சொல்லிக் கொண்டே எனது ஐந்து நெடும் புனைவுக்
கவிதைகளை அச்சாக்கி விட்டார். கிரணம் இதழ்களில் வெளிவந்ததை விட இரண்டு மூன்று மடங்கு
தடிமனான படைப்புகள் நாலு ஐந்து கையெழுத்துப் படியாக இருந்தது. ஐந்தாவது இதழில் பெரும்
படைப்பு ஒன்று வெளிவரும் என்ற அறிவிப்பு வெளியாகி இருந்தது, ஆனால் வெளியாக வில்லை.
புதைக்கப்பட்ட பிரிதிகளாகவும், எரிக்கப்பட்ட ஏடுகளாகவும் அவை மறைந்து போயின. மாலதி
மைத்ரி வந்து அதில் ஒன்றை மட்டும் மீட்டு அச்சாக்கினார், தனக்கு வீட்டுமனை வாங்க வைத்திருந்த
பணத்தில். எழுதத் தெம்புள்ளவன் கவிஞன் எரிக்கத் தெம்புள்ளவன் மகாகவிஞன் என்ற ஆணவத்தில்,
அகங்காரத்தில், மமதையில் அலைந்த காலம் அது.
இல்லையென்றால் உடன் எழுத வந்த ஒருவரே இதனையெல்லாம் எரித்துவிடலாம் என்று சொன்னபோது,
எரிந்து போகட்டும் என விட்டிருப்பேனா?
இன்று மமதை அழிந்து அலைச்சல்
மட்டுமே மிஞ்சியிருக்கிறது. அதீதன், ஆத்மார்த்தி, பிரேதா, பிரேதன், அரூப சைத்ரீகன்,
அரூப தர்சினி என்ற சொல்லுயிரிகள் என்னுடன் உரையாட வரும் போது சற்றுக் கோபமாகச் சொல்கிறார்கள்.
எங்களையும் எரித்திருந்தால் இப்படி அலைந்திருக்க மாட்டாயே என. அவர்களுக்கும் கூட அந்த
அறிக்கை பிடிக்கவில்லையாம் அப்போது. ஏன் சொல்லவில்லை என்று கேட்டால் யார் சொல்லி நீ
கேட்பாய், சொன்ன பேச்சைக் கேட்கும் ஆளாக இருந்தால் இப்படியா எழுதிக் கொண்டிருப்பாய்?
எனப் பதில் வருகிறது.
மீண்டும் அந்த அறிக்கையைப் படித்துப்
பாருங்கள். சமஸ்கிருத மயமான வாக்கியங்கள். தமிழுக்குத் தேவைற்ற இறுமாப்பு எல்லாம் இருந்தாலும்,
இந்த மருந்தும் வேலைசெய்திருக்கிறதே! சொல் அதுவே சிறந்த செயல், அஞ்சாமல் சொல் அதுவே
சிறந்த வாழ்க்கை. என்ன நான் சொல்வது சரிதானே?
[ஒரு கமுக்கக் குறிப்பு: எழுத்து
வழியாக மட்டுமே அறிந்திருந்த சிலர் சாரு நிவேதிதா, பிரேதா என்ற பெயர்களைப் பெண்கள்
என நினைத்திருந்ததாகப் பிறகு சொல்லிச் சிரிப்பார்கள். ஜே.ஜே சில குறிப்புகள் பற்றிய
சிறு வெளியீட்டைக் கொடுத்துப் படிக்கக் கொடுத்த ஒர் அரபிந்தோ ஆசிர நண்பர் மறுநாள் இது
ஆண் எழுத்தாளரா பெண் எழுத்தாளரா என்று என்னிடம் கேட்டார். இது ஆண்தான் ஆண்மட்டுமே இப்படி
பிடிக்காத ஒரு நூலுக்கு தனி ஒரு நூலை எழுதி வெளியிடவும் முடியும் என்றேன். அவர்தான்
ஒரு நாள் சாரு நிவேதிதாவை ரோமன் ரோலான் நூலகத்தின் முன் வைத்து அதோ நிற்கிறாரே அவர்தான்
என அறிமுகப்படுத்தினார் (1983-1984). இரண்டு பேர் இருக்கிறார்கள் அதில் யார் என்றுன்,
மீசை முறுக்கிவிட்டபடி பேசிக்கிட்டு இருக்காரே அவர்தான் என்றார். அவர் அன்று நீலக்
கோடு போட்ட பேன்ஸி பனியன் அணிந்திருந்தார். அவருடன் நின்றவர் ஒரு ML தோழராம், அவர்
மழித்த முகத்துடன் இருந்தார். நான் அரபிந்தோ நண்பரிடம் சொன்னேன். ஒருவர் சாரு, மற்றவர்
நிவேதிதா. நண்பர் அன்று என்னை அவருக்கு அறிமுகப்படுத்தி வைக்க வில்லை. பிறகு சில நாட்கள்
சென்ற பின்தான் அவரிடம் நானே சென்ற பேசினேன். அன்று பையில் ஜே.ஜே சில குறிப்புகள் அட்டையுடன்
இருந்தது. அதனை வாங்கி ஆவலுடன் புரட்டிப் பார்த்தேன். ஏனெனில் எங்கள் நூலகத்தில் புத்தகம்
வாங்கியதும் நூல் அட்டையைக் கிழித்து விட்டு கெட்டி அட்டையில் பைண்ட் செய்துதான் அடுக்கில்
வைப்பார்கள். அன்று அவருடைய சிறு வெளியீட்டை நான் படித்தது பற்றிப் பேசினேன், அவருடைய
முகத்தில் ஒளிஒலியும். ஒரு நாவலைப் படிப்பதே பெரிய விஷயம், அது பற்றி எழுதி தனி வெளியீடாக
இலவசமாகத் தருவது என்றால்? ஆம், தமிழ் அன்று அவருக்குச் சோறு போடவில்லை, அவர்தான் தமிழுக்குச்
சோறு போட்டு வளர்த்துக் கொண்டிருந்தார். வளர்ந்த பின் திருப்பிச் செய்ய வேண்டியது நன்றிக்
கடன் இல்லையா?]
(வதந்திகளின் வாசனை: சிறுபத்திரிகைகளைப் பழி தீர்க்க பிரேதா என்ற பெயரில் எழுதி அனுப்பியது சாரு நிவேதிதாதான். பழமலை என்ற பாட்டாளிக் கவிஞர் என்னை முதன் முதலாகச் சந்தித்த போது சும்மா சொல்லுங்க “உங்க வயசுக்கு இத நீங்க எழுத முடியாது, சாரு நிவேதிதா எழுதி உங்க பேருள போடுறாரு சரிதானே?” என்று பாசத்துடன் கேட்டார். “ஆமாம் இதில் உள்ள ஒவ்வொரு வரியும் அவர் கையால் எழுதப் பட்டதுதான்” என்றேன். பாத்திங்களா ? அவர் முகத்தில் அக்கினிக் குண்டத்தின் அடர்த்தியான வெளிச்சம். “எனது புரியாத கையெழுத்தை புரியும் படி ஒவ்வொரு வரியாய் எழுதி அச்சகத்துக்குத் தருவது அவர்தான்.” பழமலை பல்லைக் கடித்துக் கொண்டு நிலக்கிழார் சிரிப்பைச் சிரித்தார். நல்லா பேசிறிங்க.)
பாரிஸ் நகரில் நடப்பதாய் பாவனை பாரி முனையின் வெயில் கால வேதனைதலைநகரில் இருந்து வந்த இருள்நகர் எழுத்துஎரிக்கப்பட்ட ஏடுகள் பல எஞ்சி நின்றவை சில
பாட்டுப் புலவன் பாரதி தானும் சிக்கித் தமிழர்களையும் சிக்க வைத்த ஒரு இடம் உண்டு.
பாட்டுக்கு ஓர் புலவனா அல்லது பலரில்
அவனும் ஒரு புலவனா? என்கிற குற்றாலச் சண்டையை அப்புறமாக வைத்துக்கொள்ளலாம்.
மகாகவி என்றும் தேசிய கவி என்றும் தெய்வக் கவிதை என்றும் ‘எந்நாளும் அழியாத மாகவிதை’ என்றும் நவீன அழகியலுக்கோ, நவீன இலக்கிய நிகழ்நிலைக்கோ, நவீனத் தன்னிலை உருவாக்கத்திற்கோ ஒவ்வாத உதவாத (இது பின்நவீன விளக்கம் அல்ல) அடையாளங்களைத் தமிழ்க் கவிகளும் (நெடிலும் அதற்குள் அடக்கம்) எழுத்துக் கலைஞர்களும் (எழுத்து ஒரு கலை, அது ஒரு பயிற்சித் திறன்) பாவித்திரிகிற, காவித்திரிகிற, அணிந்து உழல்கிற ஒரு துயர் நிலையின் தொடக்கம் சுப்ரமணிய பாரதி எனச் சொன்னால் போச்சுது போச்சுது பாரத நாடு! போச்சுது நல்லறம்! போச்சுது வேதம்! “ என்று பொங்கி எழுந்து “இது பொறுப்பதில்லை தம்பி எரிதழல் கொண்டுவா இவன் கையை எரித்திடுவோம்” என ஓங்காரமிடும் கவிப்பித்தர்கள், காவியநாயகர்கள், மக்காகவிகள் சற்றே ஒதுங்கி நின்று கேட்டறிக!
உங்கள் உலகத்தரம் கொண்ட ஒப்பாரிகளையும், ஒப்பிலா லகரிகளையும் செவி செயல்படத் தொடங்கிய நாள் முதல் கேட்டும் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கும் என் போன்றோர் துயர்நிலையை எண்ணத்தில் கொண்டு “”ஈசன் நம்மைக் கைவிட மாட்டான்” என்று பொறுமையுடன் இதனைக் கேட்டருள்க.
புராதனத்தை புதுமைக்குள் புகுத்தியும் புராதனமே புதுமைதான் என்றும் புதுமைகளை உருவாக்கும் பட்டறைக்குள் புகுந்து புதியன உருவாகாமல் பார்த்துக் கொண்ட சிலரில் பாரதி ஒருவர் என்பதைப் பற்றி காலவரிசைப் படுத்தப் பட்ட பாரதி படைப்புகள் பன்னிரு தொகுதிகளையும் பாரதி பாடல்கள் ஆய்வுப் பதிப்பையும் படித்தும் குடித்தும், பலவாறானும் ஆய்தும், தோய்ந்தும் நான் எழுதி வைத்த குறிப்புகளைக் கொண்டு “நல்லதோர் வீணை செய்தே” எனும் தன்மையத் தவிப்பு எங்கே கொண்டு செல்லும் எனக் கண்டறிந்து நானும் துயரே உற்றேன்.
“தசையினைத் தீசுடினும் சிவ சக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன்“ என்ற தெய்விக நிலையில் நான் சிக்கி இருந்த காலத்தில் உவப்பாக இருந்த பாரதியின் “நானும் ஒரு சித்தனே” என்ற நிலை நாள்பட நாள்பட ஒரு நோயென்று தெளிந்தேன். இதுவும் ஒரு பித்தமே என்று நுண்ணறிவால் கண்டு சொல்லும் பின்நவீனத் தெய்வீகர்களிடம் நான் கேட்பது, சுவைபுதிது நயம்புதிது’ வளம்புதிது சொற்புதிது எனத் தேடி அலையும் போது பித்தமும் புதிதாக இருக்க வேண்டும் எனப் புதிய பெயரில் புதிய உருவில் நானும் ஒரு பித்தனே என்று சொல்வதில் என்ன தவறு?
பக்கத்து ஊரிலுள்ள கவிகள் தாமும் படைக்கின்ற வரிபுதிதாய்க் கேட்டுக்கொண்டு பார் முழுதும் எழுதுகிற பலரில் ஒன்றாய்
பதம் பெற்று வாழ்வதற்கு அருள்வாய் நெஞ்சே!
-என்ற புதுப்பித்தம் பிடிப்பதில் ஒரு குற்றம்தான் உண்டோ?
வசன கவிதை
“வேதத்தின் கொள்கைகளை விளக்கும் பொருட்டாகவே பகவத் கீதை செய்யப்
பட்டது. ரிக் வேதத்திலுள்ள புருஷ ஸூக்தம் சொல்லுகிறது, ‘இஃதெல்லாம் கடவுள்’ என்று.
இக்கருத்தையொட்டியே கீதையிலும் பகவான், ‘எவன் எல்லாப் பொருள்களிலும் ஆத்மாவையும், ஆத்மாவில்
எல்லாப் பொருள்களையும் பார்க்கிறானோ அவனே காட்சியுடையான்’ என்கிறார்.
நீயும்
கடவுள், நீ செய்யும் செயல்களெல்லாம் கடவுளுடைய செயல்கள், நீ பந்தத்தில் பிறப்பதும்
கடவுளுடைய செயல். மேன்மேலும் பல தளைகளை உனக்கு நீயே பூட்டிக் கொள்வதும் கடவுளுடைய செயல்.
நீ முக்தி பெறுவதும் கடவுளுடைய செயல்.” என்று பாரதி போல நம்பும் பாக்கியம் எனக்கில்லாத
போது நான் என்ன செய்வது?
வேதியர் தெய்வம், வேதமும் தெய்வம்,
பூமித் தெய்வம், புத்தி தெய்வம், ஞானம் தெய்வம், ஞானியர் தெய்வம், நாடும் தெய்வம், எழுத்து தெய்வம், எழுது கோல்
தெய்வம், நானும் தெய்வம்… அப்பா சாமி இப்படியே போனால் நீயும் தெய்வம் என்று சொல்லி
முடித்துவிடலாம் எனத் தோன்றும், ஆனால் முடியாது, ஏன்? பிறகு வெள்ளைத் தாமரை பூவில் இருப்பவள் மட்டும்
அல்ல வெள்ளைக் கார சீமாட்டியும் தெய்வம், வெள்ளைக்காரர் நாடும் தெய்வம், வெள்ளையர்
ஆட்சியும் தெய்வம், வெள்ளையர் பாஷையும் தெய்வம் என அது நம்மை பாதாளத்தில்
தள்ளிவிடுமே (பாரதி பாஷையில்) அதனால் தெய்வம் நீ என்றுணர் அவ்வளவுதான். அதற்குப் பிறகு அறிவு தெய்வம், அழகு தெய்வம், அபினி
தெய்வம், பாரத நாடு பார்க்கெலாம் தெய்வம், நாளும் தெய்வம், நானே தெய்வம் என ஒரு
நோய்வலையில் ஆனந்தமாகச் சிக்கி “எத்தனைகோடி இன்பம் வைத்தாய் இறைவா?” எனப்பாடித்
திரியலாம் “பார்” போற்ற வாழலாம் என்ற பழப்பித்தத்தில் இருந்து நான் 2007 தப்பி
புதிய ஒரு பித்தத் தடத்தில் பயணிக்கப்
புறப்பட்டேன்,
பாரதியை மகாகவியென்றும் பாரதி
பாடல்களை பால்வீதி மண்டலமென்றும் நம்பிய காலங்களில்
“ஒற்றைச் சொல்லில் ஒரு காவியம் அது
உனக்குத் தெரிந்த திருவாக்கியம்
என்னை அழைக்க நீ ஒலிக்கும் சொல்லில்
இருக்கிறது பெண்ணே புது பாவியம்”
என சும்மா சுழற்றியடித்து சுகவனத்தில்
திரிந்த நாட்களை நான் இழந்து விட்டேன்.
எவ்வளவு மகிழ்ச்சியான உலகம் அது! தேச
பக்தி 20 சதம், தெய்வ பக்தி 20 சதம், ஆரிய
தேசம் 20 சதம், அன்னைத் தமிழ் ஒரு 10
சதம், ஆதியில் இருந்த தேசம் 20 சதம், அன்னை மகாளி 10 சதம் என ஒரு வண்ணமயமான ஒரு கலவை அது. ஹிந்து
தர்மத்தால் நிலை பெற்ற தேசம், ஆரிய ராணியின் அருள் பெற்ற தெய்வீகம், இருந்தாலும்
சொல் புதிது, பொருள் புதிது, வளம் புதிது, சுவை புதிது… எல்லாம் புதிது என்ற கவித்
திமிர் கொண்ட ஜீவனாய் நவீன அரசியல் மண்டலத்தில் உலவவிட்டு சற்று
இடைவெளிக்குப் பின் தெய்வீக நிலம், தெய்வீகப் பாடல், தேசியத் தொன்மம், தெய்வமாக்கவிதை, தெய்வீகராகம், திகட்டாத பாடல் எனத்
தாந்திரிகமாக பின்நவீன உருவெடுத்து உய்கிற நிலை எனக்கு வாய்க்காமல் போனதே என்ற
வருத்தத்தில் ஏதேதோ எழுதுகிற நிலை எனக்கு நேர்ந்தே விட்டதோ?
சரி அதனைப் பற்றி ஒரு ரொபர்தோ பொலன்யோ
நாவலையோ சூலியோ கொர்த்தசார் நாவலையோ பிறகு
எழுதுகிறேன்.
அதற்கு முன் நான் பொதியாகச் சுமந்த அலைகிற குறிப்புகளில் இருந்து ஒரு சிறு பகுதி.
[முன் குறிப்பு : “தூய நன்மை, துல்லியமான
உண்மை, மீளமுடியாத வன்முறை” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுத வைத்திருந்த குறிப்புகளைத்
தற்செயலாகக் காண நேர்ந்தது. அதன் விளக்க முறை, புரிதல் முறை எனக்கு
முக்கியமாகப் பட்டது. அதன் ஒரு பகுதி இது.]
ஃபாசிசம் இருபதாம் நூற்றாண்டின் கொடிய
அரசியல் வடிவம். இதற்கு முன் இருந்த வன்கொடுமைகள் ஆதிக்க, அதிகார, அடக்கு
முறைகளின் மேலிருந்து கீழான அழுத்தமாக அமைந்தவை.
அவை நேரடி அரச, ஆயுதக் கொடுகோன்மை
வடிவங்கள்.
ஃபாசிசம் கீழிருந்து மேல் என்னும்
தர்க்கத்தில் இயங்குவது அதாவது மக்களுக்காக, மக்களால், மக்கள் நலனுக்காக என்ற
விதிமுறை இதன் அடிப்படையாக அமைகிறது.
நாடு, சமூகம், தேசம், இனம், மதம் என
ஏதாவது ஒரு அடையாளத்தின் கீழ் மக்களைத் திரட்டி அதன் முழு வலிமையையும் தலைமையின்
கீழ், தலைமை என்ற அமைப்பின் கீழ் குவித்து விடுவது. அதற்குப் பின் அனைத்து
வன்முறைகளும் கொடூரங்களும் அடக்குமுறைகளும் நியாயப்படுத்தப்படும்.
ஃபாசிசம் எதையும் உடன்பாட்டு முறையில்
விளக்காமல் எதிரிடைகளால் விளக்கும் . எதிரிகள்தான் நமது வாழ்வை, பெருமையைக்
குலைத்து வருகிறார்கள் , எதிரிகளை ஒழித்து இனிய வாழ்வை அடையலாம் என அது ஓயாமல்
சொல்லும்.
கடந்த காலப் பெருமைகள் பற்றி ஒயாமல்
பேசி அதனை இடைக்கால எதிர் சக்திகள் அழித்துவிட்டன, மீண்டும் நாம் எழ வேண்டும்
என்று பழமைப் பக்தியில் உருகும். இந்தப் பக்தியின் உச்சத்தில் பெரும் தலைமை,
தெய்வீக மீட்பர், மகாபுருஷர் என்ற உருவங்களைப் பொருத்திவைக்கும்.
உலகைத் தூய்மையாக்கி, துல்லியமான
உண்மைகளை நிலை நிறுத்தி, அனைத்தையும் பேரின்ப நிலைக்குக் கொண்டு செல்லும் ஆற்றல்
தனக்கே உள்ளது என்று நிறுவி, அதற்குள் ஒவ்வொருவரையும் அடக்கி நீதான் இதன்
மூலாதரம், அடிப்படை, மையம் என்ற கற்பித நிலையை உறுதியாக மனத்திற்குள்
செலுத்திவிடும்.
இதற்குப் பிறகு மீளமுடியாத
வன்முறையும், கேள்வி கேட்க முடியாத வன்கொடுமைகளும் பெரும் அழகியலாக மாறிவிடும்.
எல்லாம் உன் நன்மைக்கே (தனிமனித நிலையில்) எல்லாம் உங்களுக்காக (சமூக நிலையில்)
எல்லாம் நமது தலைமுறைகளுக்காக (அமைப்பு இனம் என்ற நிலையில்) என்ற நித்திய நன்மை,
நீடித்த இன்பம் பற்றிய பேச்சுகளின் ஊடாகத் தொடரும் வன்முறை இது.
ஆண்மைய- தந்தை மையச் சமூகத்தின் நுண்
அலகும் இதில் உள்ளது. பேரன்பு பற்றிய அனைத்துச் சொல்லாடலுக்குள்ளும் உள்ள வன்முறை
இது.
தியாகம், அர்ப்பணிப்பு, தன்னலமின்மை
என்ற பெயர்களில் இந்த அடிமைநேய -வன்முறை உளவியல் உள்ளது. தாய்மை, தெய்வீகம்,
புனிதம், முழுமையான விடுதலை, முழுமையான புரட்சி என அனைத்துவகையான
முற்று-முழுமைகளினூடாகவும் இந்த வன்முறை தன்மைச் செயல்படுத்தும்,
நியாயப்படுத்தும்.
தனிமனித உறவுகளில் இது வன்முறை
நியதியாக, சிறுகச் சிறுக செயல்படும். ஆனால் அரசியல், சமூகம், தேசம் எனற அளவில்
பெருங்கொடுமைகளைப் பெருமையுடன் செய்து முடிக்கும்.
இது உயிர் வாழும் போராட்டம் ,
இனநீட்சி என்ற இயற்கை விதியின் அடிப்படையில் இயங்கும் வன்முறையல்ல. பிறர்
உயிர்வாழ்தல் தனக்குக் கெடுதல், தனது பூமிக்கு இழுக்கு. பிற உயிர்களின் இன்பம்
தூய்மையற்ற இழிவு என்ற இயற்கை கடந்த எதிர்நிலை உளவியலின் விரிவு.
இந்தியச் சமூகத்தில் மனு-வழி
அரசியலில் இதன் அலகுகளைப் பார்க்கலாம். இன்றுள்ள பாரதப் பெருந்தேசிய- மகாசாம்ராஜிய
– இந்துராஷ்டிர கனவுகள் மக்களுக்காக எதையும் செய்யாது; ஆனால், அது தேசத்தின் மீது
பக்தி கொண்ட, பேச்சு மறந்த அடிமைகளை புனித கூட்டமாக உருவகிக்கும்.
அறிவுக்கு எதிரானது ஃபாசிசம்- அதே
சமயம் அதிக அறிவும் ஃபாசிசமாகும். அன்புக்கு எதிரானது ஃபாசிசம் -ஆனால் தன்னைத்
தவிர யாருக்கும் அன்பு செய்யத் தெரியவில்லை என்று பேரன்பின் வடிவமாகத் தன்னைக்
காட்டும். எளிமைக்கு எதிரானது ,பாசிசம் ஆனால் எளிய மக்களை, அவர்தம் எளிய கனவுகளைத்
தனது ஆயுதமாக்கும்.
ஒரு சில வாக்கியங்களை நினைவு
படுத்திக் கொண்டு ஃபாசிசம் பற்றிய பேச்சைப் பிறகு தொடரலாம்.
குருஜி கோல்வால்கர் சொல்கிறார்:
“நமது தேசம் பழம்பெருமை கொண்டது,
நித்தியமானது நிலைத்தது அது மகாபுருஷர்களை ஈன்று அளித்திருக்கிறது, உலகின் சிகரமான
தத்துவங்களை உருவாக்கித் தந்திருக்கிறது, தர்மமே உருவான சமூக அமைப்பை அது
கொண்டிருந்து. அதன் சிறப்பை நாம் இன்றும் காணலாம், நம்மை ராமர், கிருஷ்ணர்,
சங்கராச்சாரியரின் வழிவந்தவர்கள் என்று சொல்லும் போது, இந்த மண்ணின் மைந்தர்கள்
இந்த மகோன்னத பிதாக்களின் ரத்தத்தைத் தமக்குள் கொண்டிருக்கிறார்கள் என்பது தெரிய
வரும். அவர்கள் உலகின் ஞானங்கள் அனைத்தையும் அடைந்தவர்கள், செயலில் உன்னதங்களை
நிகழ்த்தியவர்கள். இந்து சமூகத்தில் பிறந்து விட்டோம் என்ற ஒன்றே நமக்கு இந்த
உன்னதப் பெருமையைத் தருகிறது.”
இதன் தொடர்ச்சியான தர்க்கம் என்ன?
பார்க்கலாம்.
”இத்தனை வளம் கொண்ட நம் நாட்டை
மிலேச்சர்கள் ஆக்கிரமித்துக் கொண்டார்கள். தாய் மண்ணைக் காக்க நாம் வலிமையுடன்
வீரத்துடன் ஒன்று திரளவில்லை, அதன் காரணமாகத்தான் இன்றுள்ள துயரமான நிலையும் கொடிய
வறுமையும், துன்பங்களும் நம்மைச் சூழ்ந்துள்ளன, நமது உன்னதங்களையெல்லாம் அந்தக்
கொள்ளைக்காரர்கள் முன் இழந்து விட்டு நிற்கிறோம்.”
சற்று ஏமாந்தால் இவை அத்தனையும்
வரலாற்று உண்மைகள் போல நமக்கும்கூடத் தோன்றக்கூடும். அதுதான் பாசிசத்தின்
நுண்வலிமை!
பெயர் தெரியாத பாடல்
பெரும்
கட்டமைப்புகள், பெரும் படைப்புகள், பெரும்பாடல்கள், பெருந்தொடர்கள், பெருங்கவிகள் , ஆகப்பெரும் எழுத்தாளர்கள், ஒப்புயர்வற்ற
தலைவர், ஒற்றைத் தேசியம் என பாசிச அழகியல் பலவாறு
உருவெடுக்கும்.
சற்று
ஏமாந்தால் உன்னத எழுத்து, உன்னத கலை எல்லாம் மனிதப் படைப்பின் சாதனைதானே எனத் தோன்றக்
கூடும்.
சீனப்
பெருஞ்சுவர் உலக அதிசயம் என்றால் இனனொரு சுவரை உருவாக்குவது போலத்தான் பெருமித எழுத்துகள்.
பாசிசம் மறுக்கும்அழகியல் என்ன செய்யும்?
சீனப்
பெருஞ்சுவர் கலைத்து சிறுசிறு வீடுகள் கட்டும்
கோயில்கள்
தோறும் குவிந்துள்ள தங்கத்தை குன்றிமணியாக்கி
குழந்தைகளுக்கு விளையாடத் தரும். (1)
நுண்மையின் அழகை அறிந்தால் நுண்பாசிசங்களின் வடிவம் புலப்படும். அது மனதின் குரலாகவோ, மகாபாரதமாகவோ, மகான்களின் அருளாகவோ, மருத்துவ அறிவிப்பாகவோ இருக்கலாம்…
தெய்வம்
நீ என்று உணர்வதையெல்லாம் விட்டு மனிதன் வெறும் மனிதன் என்று மனதால் தெளிந்தால் “விட்டு விடுதலை யாகிநிற்பா யிந்தச்
சிட்டுக் குருவியைப் போல. ” மனமே எனச் சொல்லி
இப்போது உறங்கச் செல்கிறேன்.
(யாருக்குச் சொல்கிறாய் என்று நண்பர்கள் கேட்கமாட்டார்கள், என்றாலும் புதியவர்களுக்கு புரியச் சொல்கிறேன் : எனக்குச் சொன்னேன்)
(1) மூலபாடம்: சீனப்பெருஞ்சவரை இடித்து பல சின்னஞ்சிறு குழந்தை வீடுகள் செய்வோம் கோயில் கருவறைகள் கொள்ளையடித்து குண்டுவிளையாட நற்கோலிகள் செய்வோம் (பாடினோர்: பெயர்க் கிடைத்திலது, பாடலும் 25 % கிடைத்துளது, 1981 )
நவீன சமூகத்தில் அனைவருக்கும் பொதுவான, அனைத்துப் பிரிவினரையும் ஒன்றாக உள்ளடக்கும் இலக்கியம், கலை, கருத்தியல், ஊடகம் என எதுவும் இருக்க முடியாது, ஏன் அரசு கூட இருக்கமுடியாது. அனைவரும் அணுகக்கூடிய, விருப்பினால் இணையக்கூடிய ஒரு பொதுவெளி, பொது அடையாளம் மட்டுமே இருக்கும், அது அனைவரும் இருக்கவும், இயங்கவும் இடமளிக்கும் அரசியல் அமைப்பு போல இருக்கும், இருக்க முடியும், இந்திய அரசமைப்பு அவ்வாறுதான் இருக்கவும் செய்கிறது.
மக்கள் அரசு, மக்கள் அமைப்பு
என்பது பொதுவெளி, பொதுக்களம் என்ற தளத்தில்தான்
ஒன்றுபடுகிறது, அந்தப் பொதுக்களம் பொது அறத்தை பொதுவான பகுத்தறிவு முறையைக் கொண்டு
கட்டப்பட்டதாகவும் பின்னப்பட்டதாகவும் இயங்கும். அங்கு ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும்,
ஏற்றுக்கொள்ளும் குழுக்கள் சேர்ந்து வேறுபட்ட
அடையாளங்களுடன் உரையாடவும் திட்டமிடவும் உகந்த சூழலை உருவாக்கப்படும்.
இது நவீனத்துவத்திற்கு முன்பும் நவீன அமைப்புக்கு முன்பும் இருந்ததில்லை, மன்னராட்சி முறையோ பேரரசுச் சமூகங்களோ இதனை ஏற்பதில்லை. அத்தனை வேறுபாடுகளையும் மறுத்து ஒற்றை அரசு, ஒரே அதிகாரம் என்ற மையத்தை நோக்கி, ஒரே விதியின் கீழ் அடங்கிய படிநிலை அமைப்பாக அது இருக்கும். இந்தியச் சமூகத்தில் வர்ண-சாதி அமைப்பில் அடைப்பட்ட அரசு , போர் அமைப்பின் கீழ் ஒடுங்கிய சனாதன தர்ம சாஸ்திர அமைப்பு இருந்தது. நீங்கள் சூத்திரர்கள் அடிமைகள் ஏவல் செய்து தொண்டு செய்து வாழ்ந்து மடிய வேண்டியவர்கள் ஆனால் நீங்கள் வெளியே செல்லவோ, விலகிச் செல்லவோ கூடாது. நீங்கள் மிலேச்சர்கள், சண்டாளர்கள் நீங்கள் மனிதர்கள் கூட இல்லை, சூத்திரர்களை விடக் கடுமையாக உழைத்து அடிமைப்பட்டுக் கிடக்க வேண்டியவர்கள் ஆனால் நீங்கள் இந்த இடத்தை விட்டு நகர்ந்து விடவோ பிரிந்து சென்று வாழவோ முடியாது. அதற்கான முயற்சியைச் செய்வது கூட கொலை செய்யபடும் அளவுக்கான குற்றம், அப்படிச் சிந்திப்பதோ, அது பற்றிப் பேசுவதோ, அதற்காக ஆசைப்படுவதோ கூட குற்றம், பாபம் கொடுந்தீமை. அதனால் அப்படியான கருத்துகளை, எண்ணங்களைக்கூட உருவாக்கக் கூடாது என்ற தண்டனை விதிகளால் கட்டப்பட்டதுதான் இந்திய அரசாதிக்கச் சமூகம். அந்தச் சமூகம் மிகுந்த அமைதியும், அடிபணிதலும் கொண்டதாக, வேறுபட்ட கருத்துகள், எண்ணங்கள் அற்றதாக ஒரே தர்மத்தின் கீழ் ஒரே விதியின் கீழ் அடங்கி இருப்பதான தோற்றம் தரும். ஆனால் அடிமை விதியை மீறக்கூடிய ஒரே ஒரு செயல் நடந்தாலும், ஒரே ஒரு வாக்கியம் பேசப்பட்டாலும் அவை அழிக்கப்படும், கொலை செய்யப்படும், அதனால் விதி மீறல், விடுதலைக்கான ஆசை மொழியில்கூட இருக்க முடியாது, இருக்காது.
இந்த ஒடுக்குதலை, மனித மறுப்பை
இல்லாமலாக்கி அனைத்து விடுதலைக் கருத்துகளுக்கும், ஆசைகளுக்கும், எண்ணங்களுக்கும்,
கனவுகளுக்கும் இடமளிக்கும் அமைப்புதான் நவீன அரசு, குடிமை மற்றும் குடிமையச் சமூகம்,
இது மனித உரிமைகள், மனித மாண்புகள் என்னும் விழுமியங்களை மையமாக மட்டுமின்றி விளிம்பாகவும் கொண்டியங்குவது. ஒரு சமூகம் சமத்துவத்தை,
சமூகநீதியை முழுமையாக நடைமுறையில் கொண்டு இயங்காத நிலை இருக்கலாம், ஆனால் அவற்றைத்
தன் இலக்காக. அறமாகக் கொண்டு அவற்றை அடைவதற்கான கனவைத் தன் வழிகாட்டு நெறியாகக் கொண்டு
தொடர்ந்து இயங்கும்.
இப்படியான நவீன சமூக அமைப்பில் உள்ள ஆட்சி, அமைச்சகம், செயலதிகாரம், நிருவாகம், திட்டமிடல் என்பவற்றை அனைவராலும் தேர்ந்தெடுக்கப்படாத ஆனால் பெரும்பான்மை பங்கு கொண்ட ஒரு கட்சியோ கூட்டணியோ தன் பொறுப்பில் ஏற்று நடத்துகிறது, அதே சமயம் ஆட்சியில் இல்லாத ஒவ்வொரு கட்சியும் (எதிர்க்கட்சிகள்) அரசுச் செயல்பாட்டைக் கண்காணி்த்து, விமர்சனம் செய்து, தவறு நடக்கும் போது எதிர்த்து, நீதி மறுக்கப்படும் போதும் புறந்தள்ளப்படும் பொழுதும் அதனை எதிர்த்து நின்று தீமைகளைத் தடுத்தும் ஜனநாயகத்தை, அரசியல் அறங்களை, அரசமைப்பின் விழுமியங்களை, அனைவருக்குமான உரிமைகளை காத்தும் செயல்பட வேண்டியுள்ளது.
ஆட்சியில் உள்ள கட்சிக்கு இணையாக அரசமைப்பை ஜனாநாயகத்தைக் காக்கும் பொறுப்பும் உரிமையும் கொண்ட அமைப்பைத்தான் நவீன ஜனநாயகம், மக்கள் ஆட்சி என்று நாம் கூறுகிறோம்.
அதனை உருவாக்கிய, அதனை நோக்கிய அறிவைத்தான் நவீன அறிவு என்று கூறுகிறோம்.
பெரும்பான்மை வாக்குகள் பெற்றுள்ளதாலேயே
ஒரு கட்சியும், அதன் தலைமையும் இந்திய அரசின் (அரசியலின்) முழு அதிகாரமுடைய சக்தியாக
ஆகிவிடுவதில்லை. எந்த ஒரு அரசும், ஆட்சியும் அரசியலமைப்பைப் பின்பற்றி, செயல்படுத்தி,
பாதுகாத்து மக்களின் பெயரால் மக்களின் பணியாளர்களாக இருந்து செயலாற்றித் தன் பொறுப்புக்
காலம் முடிந்ததும் ஓய்வு பெற வேண்டிய ஒரு அமைப்பே.
நவீன அரசு வேறுபாடுகளின் உரிமைகளை, வேறுபடும் உரிமைகளைப்
பாதுகாத்து பன்மைகளின் இடத்தையும் பன்மைகளின் அடையாளத்தையும் உறுதிப்படுத்தித் தருவது.
இது முன்நவீன ஒற்றைத்தன்மை கொண்ட அரச அதிகார, சர்வாதிகார அரசியல் அல்ல.
தனிமனிதர்களுக்கு ஜனநாயகத்தில்
உரிமைகள் உள்ளன, கடமைகள் அதைவிட அதிகம் உள்ளன, ஆனால் அதிகாரம், ஆதிக்கம், மேலாண்மை,
உயர் அதிகாரம் என எதுவும் இல்லை. இந்திய நாடாளுமன்றத்தின் முதன்மை அமைச்சருக்கும், இந்தியக் குடியரசுத் தலைவருக்கும்
கூட அளிக்கப்பட்டுள்ளவை பொறுப்புகள், கடமைகள், உரிமைகள் மற்றும் அதனை நிறைவேற்றுவதற்கான
கூடுதல் வசதிகள், துணை செய்யும் மக்கள் பணியாளர் குழுக்கள் மட்டுமே.
அவர்களுக்கு அளிக்கப்படும் மதிப்பு, வணக்கம், சிறப்பு
அணிவகுப்புகள் அனைத்தும் நம் அரசியலமைப்புக்கும் மக்கள் ஆட்சி முறைக்கும் அளிக்கப்படும்
மதிப்புகளே தவிர தனிமனிதர்களுக்கு அல்ல. அதனால்தான் முறை தவறும் போது, பொறுப்புகள்
தட்டிக் கழிக்கப்படும் போது, நீதி அவமதிக்கப்படும் பொழுது எந்தப் பதவியில் உள்ளவர்களையும்
விசாரரணைக்குட்படுத்தித் தண்டிக்கும் உரிமையும் பொறுப்பும் அரசியல் அமைப்புக்கும்,
நீதித்துறைக்கும், மற்ற அதன் நிறுவனங்களுக்கும் அளிக்கப்பட்டுள்ளது.
பத்து வாக்குகள் அதிகமாகப் பெற்றாலும்
ஒரு மக்கள் பிரதிநிதி தேர்ந்தெடுக்கப்பட்டவராக அங்கீகரிக்கப்பட்டு சட்ட மன்றம், நாடாளுமன்றம்
செல்லும் பொறுப்பு வழங்கப் படுகிறார். ஒரே ஒரு உறுப்பினரை அதிகமாகப் பெற்றிருந்தாலும்
ஒரு கட்சி ஆட்சிப் பொறுப்பை (ஆட்சி அதிகாரம் அல்ல) ஏற்கும் தகுதி பெறுகிறது. மிகச் சுருக்கமாகச் சொன்னால்
இந்திய அரசியல் தனிமனிதர்களால், தனிக்குழுக்களால்
ஆளப்படுவதற்கோ, அதிகாரம் செலுத்துவதற்கோ அனுமதி அளிக்கவில்லை.
தற்போது பாராளுமன்ற பொறுப்பேற்றுள்ள
தேசியக் கட்சி 37.23 சதமான வாக்குகளைப் பெற்று 303 உறுப்பினர்களைப் பெற்று ஆட்சிப்
பொறுப்பினை ஏற்றுள்ளது. மீதமுள்ள 62.77 வாக்குகள் இந்தக் கட்சியைத் தேர்வு செய்யவில்லை
என்பதுதான் பொருள், அதனால் அரசியல் பொறுப்பை இக்கட்சி ஏற்பதை யாரும் தடுக்கவோ, எதிர்க்கவோ
முடியாது.
இந்த அரசு அனைவருக்குமானது, தன்னை மறுத்த பெரும்பான்மை மக்களுக்கும் சேர்த்தே அக்கட்சி பணி செய்ய வேண்டும். இதுதான் ஜனநாயகம், இதன் அடிப்படை நெறிகளை அரசியல் மேதை அண்ணல் அம்பேத்கர் முதன் முதலாக மிகத் தெளிவாக நாடாளுமன்ற அவையில் விளக்கியிருக்கிறார். “நாம் மக்களாட்சி முறையை வெறும் புறவடிவத்தில் மட்டுமின்றி செயல்படக்கூடிய உண்மையான அமைப்பாகப் பாதுகாக்க வேண்டுமென்றால் நாம் செய்ய வேண்டியவை என்ன? ” என்ற கேள்வியை எழுப்பி மூன்று அடிப்படை வழிமுறைகளை, நெறிமுறைகளை அளிக்கிறார்.
அவற்றில் இரண்டு நெறிமுறைகள் இவை :
1. நாம் சமூக, பொருளாதாரக் கோரிக்கைகளையும் தேவைகளையும் பெற அரசமைப்புச் சட்ட முறையையே பின்பற்ற
வேண்டும். வன்முறை கொண்ட புரட்சி முறையைக் கைவிட வேண்டும். சட்ட மறுப்பு, ஒத்துழையாமை,
சத்தியாகிரகம் என்ற முறைகளையும் கைவிட வேண்டும். அரசமைப்புச் சட்டம் இந்தக் கோரிக்கைகளை
நிறைவேற்றத் தவறும்போது இந்த முறைகள் நியாயமானதாக இருக்கலாம். ஆனால் அரசமைப்பு முறைகள்
நமக்கு முன் இருக்கும் போது இந்தச் சட்டமறுப்பு முறைகள் தேவையில்லை.
3. நாம் வெறும் அரசியல் ஜனநாயகத்தை நிறுவியதுடன் நிறைவடைய முடியாது.
அதனைச் சமூக ஜனநாயகமாக மாற்ற வேண்டும். சமூக ஜனநாயகத்தை அடித்தளமாகக் கொள்ளாத
அரசியல் ஜனநாயகம் நீடித்து நிலைக்காது. சமூக ஜனநாயகம் என்பது என்ன? சுதந்திரம்,
சமத்துவம், சகோதரத்துவம் என்ற கொள்கைகளை வாழ்க்கை நெறியாகக் கொள்வது. இவை
தனித்தனியே இருந்தாலும் அவற்றின் நோக்கம் நிறைவேறாது, மூன்றும்
பின்னிப்பிணைந்தவைகளாக இருக்க வேண்டும். அத்துடன் பொருளியல் சமத்துவமும் இணைய
வேண்டும். சமத்துவமற்ற இந்தியச் சமூகத்தில் இவற்றை நிலைநிறுத்தவும் பாதுகாக்கவும்
நமக்கு ஒரு அதிகாரி (கான்ஸ்டபிள்) வேண்டும். அதுதான் அரசியல் ஜனநாயகம், அதுதான் இந்திய
அரசமைப்பு.
இவற்றிற்கு நடுவாக அண்ணல் குறிப்பிட்டுள்ள ஒரு நெறி மிக முக்கியமானது:. “எத்தனைச் சிறப்புகள் கொண்டவராக இருந்தாலும், எந்த ஒரு தனிமனிதரின் காலடியிலும் மக்கள் தம் சுதந்திரத்தை ஒப்புக் கொடுக்கக்கூடாது. அவர்களுக்கு அரசமைப்பு நிறுவனத்தை மீறும் அதிகாரத்தை வழங்கிவிடவே கூடாது. நாட்டுக்காகத் தம் வாழ்வைத் தரும் ஒரு தனிமனிதருக்கு மதிப்பு தருவதில் ஒன்றும் தவறில்லை. நன்றியுடன் இருப்பதற்கு ஒரு எல்லை உண்டு. தன் சுயமரியதையை விட்டுக் கொடுத்து நன்றியுடன் இருக்க வேண்டிய தேவை யாருக்கும் இல்லை…. இந்தியா பக்தி என்ற பெயரில் தனிமனித வழிபாட்டில் மூழ்கிக் கிடக்கும் சமூகம். பக்தியும், மகான் வழிபாடும் சமயத்துடன் நின்று விட்டால் பரவாயில்லை, அவை அரசியலில் நுழைந்தால் ஜனநாயக அமைப்பு தகர்ந்து, சர்வாதிகாரம்தான் உருவாகும். ( 1949 நவம்பர் 25-இல் அரசியல் சட்ட அவையில் அம்பேத்கர் வழங்கிய இந்த உரை மக்களால் தெய்வமாக மாற்றப்பட்ட காந்தி பற்றியும் வழிபடப்பட்ட நேரு மற்றும் சில தலைவர்கள் பற்றியுமான குறிப்பைக் கொண்டது.)
இவ்வாறான ஒரு
கூட்டமைப்பில் கலை, இலக்கியம், ஊடகங்களின்
செயல்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டும், அவற்றின் கடமையும் பொறுப்பும் தகுதியும் என்ன
என்பதை ஆராய்ந்து அறிந்தால் இலக்கியச்
செயல்பாட்டுக்கும், இலக்கியவாதிகளின் செயல்பாட்டுக்கும் நாம் ஏன்
முக்கியத்துவம் தருகிறோம் என்பது புரியவரும். நவீன சமூகத்தில் படைப்பாளிகளின்
இடம், அவர்களுக்கு அளிக்கப்படும் மதிப்பு, பெருமைகள் அனைத்தும், இந்தப் பொது
அறத்திற்கும், அறிவுக்கும், அரசியலுக்கும் அவர்கள் அளிக்கும் பங்கை அடிப்படையாகக்
கொண்டவை. சமத்துவம், நீதி, சுதந்திரத்திற்கு எதிரான, மாறான எந்த ஒரு சொல்லும்
படைப்பும் நவீன அமைப்பில் தன் தகுதியை இழக்கிறது,
அது மாபெரும் கனவுகளுக்கு எதிரான வன்முறையைச் செய்கிறது.
அப்படியான எழுத்துகளும் பேச்சுகளும் இருப்பதற்கான உரிமையைப் பொதுக்கள அரசியல், மக்கள் அரசியல் மறுத்துவிட முடியாதுதான். ஆனால் அவை அறம் பேசும் தகுதி அற்றவை என்பதைச் சுட்டிக்காட்டி, அவற்றில் நவீன அறிவுக்கும் அறத்திற்கும் எதிரான கருத்துகள் உள்ளன, கவனமாக இருக்கவும் என்ற அறிவிப்புப் பலகையை வைக்கவும் நவீன அறிவுக்கும் அரசியலுக்கும் உரிமை உண்டு, அதைவிடப் பொறுப்பு உண்டு.
அதனால்தான் ஒரு திரைப்படம் மட்டுமல்ல ஒரு கருத்துப்படம் கூட, ஒரு விளம்பர வாசகம் கூட பொதுக்களத்தில் அறிவுத்தளத்தில் விவாதிக்கப்படுகிறது, விமர்சிக்கப்படுகிறது. சமூக வெளியில் பேசப்படும், பரப்பப்படும் ஒவ்வொரு சொல்லும், வாசகமும், சைகையும் கூட , ஒரு புகைப்படம் கூட பகுத்து ஆய்வு செய்யப்படுவதன் பின்னணி இதுதான்.
அர்த்தமுள்ள இந்துமதம் அர்த்தங்கெட்ட மார்க்சியம்
நவீன அரசும் நவீன தொழில் நுட்பங்களும், நவீன இயந்திரவியலும், கருவிகளும், இந்தியச் சமூகங்களை முழுமையாக ஊடுருவி, அடிப்படைக் கட்டமைப்புகளை மாற்றியமைத்த பின்னும் மரபு, பழமை, தொன்மை என்ற பெயர்களில் நவீனம் மறுக்கும் உள அமைப்பையும், நவீன அறிவை, அறத்தை, மதிப்பீடுகளை உடைக்கும் சமூக நடத்தைகளையும் இந்தியச் சமூகம் கொண்டாடி வருவதுடன் அதில் பெருமிதமும் கொள்கிறது. இதனை நாம் எப்படிப் புரிந்து கொள்வது, எப்படிக் கையாள்வது?
நவீனக்
கருவிகளை, இயந்திரங்களை, இயந்திர வாழ்வியலை, நகரமைப்பை ஏற்றுக் கொள்ளும் இந்தியச் சமூகம்
நவீன அறிவு, அறம், மதிப்பீடுகள், அழகியல் என்னும்
உள்ளமைப்புகளில் மாற்றத்தை ஏற்பதில்லை என்பதுடன் அதன் மீது வெறுப்பும் கொண்டுள்ளது.
நவீன சமூகம் தந்த, நவீன அறிவால் உருவாக்கப்பட்ட புறவயப் பொறியமைப்புகளை, இயந்திரக் கட்டமைப்புகளை
தனதாக்கிக் கொண்டு அதன் சுகங்களை அனுபவித்துக் கொண்டு பழமைகளைக் கொண்டாடும் வாழ்வியல்
போலப் புதிய இலக்கிய வடிவங்களைத் தனதாக்கிக் கொண்டு பழமைகளைக் கொண்டாடும், மீட்டு உயர்வுபடுத்தும்
இலக்கியங்களும், கலைகளும் பெருமிதமும் பெருவலிமையும்
கொண்டு இயங்கி வருவது தமிழ்ச் சமூக நடப்பியல்புகளில் ஒன்று. இதனை எவ்வாறு நாம் புரிந்து
கொள்வது, எதிர்கொள்வது, கையாள்வது?
தமிழ் எழுத்தாளர்கள் பலரின் எழுத்துகள் பழமை மீட்பு, மரபுப் பெருமிதம் என்ற இயக்கமறுப்பில் திளைத்துப் புகழும் நிதியும் பெற்று அதிகாரப் பேருருவங்களாக நிலைக்கின்றன. இவர்களே கலாச்சார, பண்பாட்டு நாயகர்களாகவும், அடையாளங்களாகவும் இருப்பவர்கள். சாதிய உளவியலும் ஆணாதிக்க நடத்தையும் பெருகிய திரைப்படங்களும், கலைகளும், கதைகளும் பெருமளவில் கொண்டாடப்படுவதும் அதிகாரம் பெறுவதும் இதன் விரிவடைந்த நிகழ்வு. இவர்களுக்கு மாறான நவீன இலக்கியம், முற்போக்குச் சிந்தனை, புதிய கருத்தியல்கள் என்ற வடிவத்தில் எழுதி இயங்கும் எழுத்தாளர்கள் அரசியல் வகைப்பட்டவர்களாக, வெகுமக்களின் மனமகிழ்வுக்குப் பொருந்தாத எழுத்துக்களை எழுதுபவர்களாக இருப்பதும் ஒரு வரலாற்று மெய்நிலை. முற்போக்கு எழுத்துகள், புரட்சிகரச் சிந்தனைகள், உலகவயப் பட்ட பார்வைகள், மரபுகளைக் கேள்விக்குட்படுத்தி புதுமைகளைக் கொண்டாடும் அழகியல் கொண்டவை என இந்த வகை எழுத்துகளும் இலக்கியங்களும் தம்மை அடையாளப்படுத்திக் கொள்கின்றன.
இந்த எதிரெதிரான வெளிப்படையான அடையளங்களை மறைத்து தம்மையும் புதிய இலக்கியம், நவீன இலக்கியம், நவீன சிந்தனை என்று அடையாளப்படுத்திக் கொண்டு, அதற்கான உரிமைகளைப் பெற்றுக் கொண்டு அதற்கான தகுதி உள்ளதாகக் கூறிக் கொண்டு உள்ளார்ந்த நிலையில் பழமை போற்றுகிற, இயக்கவியல் மறுக்கிற எழுத்துகளும் எழுத்தாளர்களும் இருமடங்கு அதிகாரத்துடன் பெருமைகளுடன் இயங்கும் ஒரு தளம் தமிழில் உண்டு.
இவர்களுக்குப்
பின்புலமாக, ஆதாரமாக இருப்பவை பிற்போக்கு, சனாதன, பழமைமீட்பு சக்திகளும் நிறுவனங்களுமே.
இவர்கள் வெறும் எழுத்துடன் நின்றுவிடும் பொழுது கருத்தை உருவாக்கும் பல சக்திகளில்
ஒன்றாகக் கலந்து போவார்கள். இவர்களே கலச்சார நாயகர்களாக, அடையாளச் சின்னங்களாக மாறும்
பொழுது ஒரு இயக்கமாக உருப்பெற்று பல இளைஞர்களையும், சமூகச் சக்திகளையும் நிலைகுலைத்து,
அறிவுத் தேக்கத்தை உருவாக்கி. அறிவுருவாக்கத்
தளங்களை அழிக்கும் பேரழிவு நிறுவனங்களாக மாறுவார்கள்.
இவர்கள்
வழியாக பழமைவாதமும், தொன்மைப் பெருமையும் வலிமையடையும், அதற்கான கருத்தியல் கருவிகளை
இவர்கள் உருவாக்கி அறிவு மறுப்பையே அறிவுச் செருக்காக உரு மாற்றிவிடுவார்கள். இவர்கள்
உருவாக்கும் கருத்தியல், மதிப்பீட்டுக் கருவிகள் இலக்கியப் பெருமிதம் கொண்டதாக, பேரறிவு
கொண்ட போதனைகளாக, பெரும் ஆய்வில் விளைந்த சாதனைகளாக உயர்வுபடுத்தப்படும். இவர்களின் செயல்பாடு புதுமைகள்
அனைத்தையும் உள்ளடக்கியது போலவும், புரட்சிகரச் சிந்தனைகளால் நிறைந்தவை போலவும் தோற்றம்
தரும். அவற்றை விட மனித நேயம், மாந்தர் அறம், மரபின் தரிசனங்கள், ஆன்மீக உயர்வு என்ற சொற்கள் இவர்களிடம் தெய்வீகச் சொற்களாக ஓயாமல் ஒலிக்கும்.
இவர்கள்
முற்போக்கு, புரட்சி, கலகம் என்ற அடையாளத்துடன் தொடங்குவார்கள், பெரும் அறிவாளிகள்,
பெரும் படிப்பாளிகள், அசலான ஆழமான சிந்தனையாளர்கள் என அடைமொழிகள் இவர்கள் மேல் அடுக்கடுக்காய்
போர்த்தப்படும். இவர்களில் சிலர் ஏராளமாக எழுதிக் குவி்ப்பார்கள். திறமை, படைப்பாற்றல், கற்பனைப் பெருக்கு, காவிய
முறுக்கு, கலகச் செருக்கு என்று தொடர் பஜனைகள் இவர்களைப் பற்றி எங்கும் ஒலிக்கத் தொடங்கிவிடும்.
தொடர்கதைகள், தொடர் கட்டுரைகள், தொடர் சொற்பொழிவுகள், தொடர் பாராட்டுகள், தொடர் விருதுகள் எனத் தொடர்ந்து கொண்டே இருக்கும் இவர்களின் சாதனைகள். முதல் கதையிலேயே இவர்களுக்கு விருதுகள் காத்திருக்கும், முதல் நாவலே பெரும் படைப்பு எனப் பதாகையுடன் வெளிவரும். ஊடகங்களில் இவர்களின் பெயர்களே ஓயாமல் ஒலிக்கும். ஒரு நாள் இவர்கள் தம் உருவத்தை வெளிப்படுத்துவார்கள் நானும் நாத்திகனாக இருந்தேன், புரட்சியில் கலந்தேன், பகுத்தறிவில் புரண்டேன் இப்போது அதெல்லாம் மனித வாழ்வுக்கு உதவாது என்று என் ஞானத்தால் தெளிந்தேன் எனக் கதாகாலட்சேபத்தைத் தொடங்குவார்கள். இவர்களின் பொது அங்க அடையாளம் இதுதான் : கம்யூனிசச் சிந்தனைகள், மக்கள் போராட்டங்கள். பெண்ணியச் சிந்தனைகளை எல்லாம் கேலி கிண்டல் செய்வது, இவை காலாவதியாகிவிட்டது என்று ஞானப்பிரகாசகம் பொழிவது, இந்திய ஞானம், பாரதப் பண்பாடு, தியாக வரலாறு, மகான்களின் மகிமை என மணிகளை ஆட்டுவது. எந்த ஒரு புதிய சிந்தனையோ, சிந்தனையாளரோ அறிமுகப்படுத்தப்பட்டால் அதனை அத்வைதத்தில் அடங்கியது, உபநிஷதத்தின் உள்ளே முடங்கியது, பதஞ்சலியால் பதம் பார்க்கப்பட்டது என்று சும்மா சுற்றிவிடுவது. தமிழின் ஞானப்பிரகாச மரபுக்கு உள்ள சௌந்தர்ய லகரியே பெரியாரியச் சிந்தனைகளை வசைபாடுவதுதான். அம்பேத்ரியச் சிந்தனையை செயலியக்கத்தை வெறுத்தபடி அதற்கு புத்தி சொல்வது, காந்தியின் வழியில் அம்பேத்கர் நடந்திருந்தால் சேரிகளில் சேதாரம் எதுவும் நடந்திருக்காது, அம்பேத்கருக்கு ஆய்வு போதாது ஆனால் நான் அம்பேத்கரை இந்தியாவின் பெருமைகளில் ஒன்று எனச் சொல்வேன் என புருடா விடுவது. மாற்றுச் சிந்தனைகள் எதுவும் வந்தால் முதலில் மண்டையில் அடித்து ஓரமாக கிடத்திவிட வேண்டும் என்று இரும்புத் தண்டோடு கதவுக்குப் பின்னால் பதுங்கி இருக்கும் கூலிப்படையை வாசகர்கள் என்ற பெயரில் உருவாக்கி விடுவது. காலத்தால் மறைக்கப்பட்ட அயோத்திதாசர் போன்ற சிந்தனைச் செயல் தலைவர்கள் கண்டெடுக்கப்பட்டால் முதலில் சென்று அவர் கருத்துகளை முடிந்த அளவு திரித்துக் குறைத்து வெட்டி ஒட்டி தன் நித்திய சத்திய குருவுக்குப் பொருந்தும் அங்கியாக மாற்றித் தைத்து மாட்டி விடுவது.
தலித் அரசியலும் ஒரு சாதி அரசியல்தான், அதிலும் அதிகாரம் உண்டு, படிகாரம் உண்டு அதனால் அதனிடம் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று வானிலை அறிவிப்புச் செய்வது. இப்படி இப்படியாக வளைந்து நெளிந்து ரப்பராக நீளும். இவற்றுடன் பின்நவீன-பின்நவீனத்துவ பெருங்கொண்டாட்ட கைலாசாக்கள் இணையும் போது ஸீரே டிகிரியில் உலகம் சுழல ஆரம்பிக்கும். எதுவுமே உலகத்தரம்தான் இவர்களுக்கு. தமிழில் உலகத்தரத்தில் இலக்கியம் இல்லை என்ற வாசகத்துடன் தினமலராக மலர்வார்கள் இவர்கள், உலகப்படங்கள், உலக இசை என இவர்களின் அலப்பறைகளுக்கு அளவே இருக்காது, இவர்கள் பியர் குடிப்பது கூட உலகக் கோப்பையில்தான் என்றால் மற்றவை எப்படி இருக்கும் என்று பார்த்துக் கொள்ளுங்கள்.
இவர்களின் எழுத்து முதலீடே தமிழர்களின் வாசித்து அறியாத வாழைப்பழ சோம்பேறித்தனம்தான். ஃபூக்கோ. ஈக்கோ, லக்கான், சுக்கான் எல்லாம் வாங்க நித்தியானத்த சாய் சமேத வயகர வாக்கிய ஆசானிடம் ஆசி பெற்று முக்தியடையுங்கள் என்று அவர்கள் புகழ்பாடும் துணைநடிகர்கள்தான் மிகவும் சுவாரஸ்யமாக சுகானுபவமான பார்ட்டிகள். சார்ள்ஸ் ஃபுகோவிஸ்கி கவிதை மேடையில் குடித்து விட்டு வாந்தியெடுத்தபடி கவிதைகளைப் படிப்பான் அதுதான் உண்மையான கலகம் என்று உபதேசத்தைக் கேட்டுவிட்டு ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார்களாம் சில கலகக் காவாளிகள் (காவல் ஆளும் இகள்). நிகழ்ச்சிக்கு கவிதை கேட்பவர்களும் குடித்து வாந்தியெடுப்பதைக் கண்ட ஆசான் அடக்கமுடியாத ஆத்திரத்துடன் “தமிழ் நாடு நாசமாகத்தான் போகும், கவிதை வாசிப்பவர்கள்தான் வாந்தியெடுக்க வேண்டும் என்று தெரியாமல் இப்படி இலக்கியவாதிகளை அவமதித்தால் நான் அர்கெந்தினாவுக்கே போய்விடலாம் என முடிவு செய்து விட்டேன், பக்கத்தில் இருக்கிற கேரளாவில் கூட பாத்து பக்குவமாதான் வாந்தியெடுக்கிறாங்க” என்று தன் வலைபக்கத்தில் ரத்த வாந்தி யெடுத்திருந்தார்.
புரட்சியைப் பேசிப் பேசி புரட்சி வராமல் பார்த்துக் கொள்வது. புதுமைகளைக் கேலி செய்து புறமுதுகிட்டு ஓட வைப்பது உலகத் தரமான உத்தி என்பதைக் கவனத்தில் கொண்டால், தமிழக ஆளுமைகளில் சிலருக்கு நாம் சிலை வைக்க வேண்டும். கண்ணதாசன் என்ற பெரும்பெயர் கொண்ட திரைக்கவியின் மொழி விளையாட்டு அர்த்தமுள்ள இந்துமதமாகவும், அர்த்தங்கெட்ட பகுத்தறிவாகவும் அவதாரம் எடுத்த வரலாற்று நிகழ்வை இதன் ஒரு வகை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்.
நானே
புரட்சி, நான் சொல்வதெல்லாம் வறட்சி எனத் தொடங்கி கம்யூனிசச் சிங்கம், கருத்துக்களின்
தங்கம் என்று புகழ்பரப்பி மெல்ல விவேகானந்தர், ஆன்மிக இந்தியா என நழுவி, ஜெய ஜெய சங்கர,
ஹரஹர சங்கர என ஜெயகோஷம் எழுப்பி பிரம்ம வாக்கியப் பிதாமகராக உருவெடுத்த ஜெயகாந்தன் இதன் மற்றொரு உதாரணம்.
ஜெயகாந்தன்
போலத் தொடக்கத்தில் புரட்சி பெயர் கிடைத்த பின் சுழற்சி என்றெல்லாம் குழப்பாமல் தொடக்கத்திலிருந்தே
சொக்கத் தங்கமாக, சொல்லின் தங்கமாக, கருத்தில்
வங்கமாக (கடல்) திகழ்ந்து வருபவர்தான் வெண்முரசு நாயகர், விக்கி ஸ்தாபகர், இந்திய தரிசனத்தை
மீட்கவந்த தூயவர், அறச்சீற்றதின் பாயவர் ( பாய்- அவர்) ஆன்மீக அரசியலின் மாயவர் ஜெயமோகன் என்ற திருப்பெயர் கொண்ட இலக்கியப் பேயவர்.
(பேய் இங்கு பெருமைச் சொல்).
தமிழிலக்கியத்தில்
இதுவரை யாருக்கும் இல்லாத அளவுக்கு வாசகர்
வழிபாட்டு மன்றங்கள் கொண்ட, படிக்காத மேதைகளைப் பக்த கோடிகளாகப் பெற்ற, ஓங்கியடித்தால் ஒன்றரை டன் கனம் கொண்டு தாக்கும்
பாரதக் கதையை பத்து வருடமாக (உயர்வு நவிர்ச்சியணி) எழுதி உலகச் சாதனை செய்துள்ள, ஒரு
கிளை நூலகத்தின் அத்தனை அலமாரிகளையும் தன் பொத்தகங்களைக் கொண்டே நிரப்பி விடும் அளவுக்கு
எழுத்தே வாழ்வாய் இயங்கும் எழுத்துப்புயல்
அவர். தமிழில் இவருக்கு இணையாக அல்லது போட்டியாக சாரு நிவேதிதா என்ற ஆட்டோ பிக்குஷன்
எழுத்தாளரைத்தான் சொல்ல முடியும் என்று அல்பேனிய பத்திரிகையொன்றில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
(செவிவழிச் செய்தி) நயாகராத் தமிழால் நயமான கதையெழுதும் முன்னவரிடம் தஞ்சமடைந்த தமிழர்களை
தன் வயகராத் தமிழால் வசப்படுத்தும் போட்டியில் பின்னவர் இறங்கியதைக் கதையிரவுகளில்
வியப்புடன் பேசுகிறார்கள். இந்த இரு எழுத்தாளர்களும்
மேடைகளில் ஒருவருக்கொருவர் இதனையே தம் புகழாரமாகச்
சூட்டி மகிழ்கிற காணொலிகளைக் காண்பது சாகித்திய சந்தோஷம் தரும்.
ஜெயமோகன்
ஒரு அறிவுக்கடல், அவர் எழுத்துகள் எல்லாம் ஆய்வு மடல், அவர் உலக அறிவுகள் ஓடி விளையாடும்
திடல் என்று நம்பும் திருக்கூட்டம் நகரங்கள் தோறும் “ஊருக்கு நூறு பேர்” என்ற வகையில்
இயங்கிவருவதை இணையத் தளங்கள் வழி அறியமுடிகிறது. அவர்கள் வேறு எதையும் வாசித்து அறிய
வேண்டியத் தேவையே இல்லை எனவும் தினம் “வீண் முரசு” அத்தியாயம் ஒன்றை உறக்கத்துக்கு
முன், உறக்கத்துக்குப் பின் என்ற முறையில் பத்து ஆண்டுகள் வாசித்து பரமபதம் அடையலாம்
என்றும் வாட்ஸ்அப் தகவல்கள் வலம் வருகின்றன.
அதையும் மீறி நித்திய தர்மங்கள் தொடங்கி நிலையான மர்மங்கள் வரை ஏதும் ஐயம் எழுந்தால் வியாசரை வென்ற வித்யாபதி ஜெயமோகன் அவர்களின் இணையப்பக்கத்திற்கு கேள்வியாக எழுதி அனுப்பினால் உலக அறிஞர்கள் உரைத்தவற்றுடன் உரைக்காதவற்றையும் விளக்கி, அத்துடன் தன் உற்றறிவால் உணர்ந்தவற்றையும் உள்ளொளியால் கண்டவற்றையும் இனி காண உள்ளவற்றையும் அருளித் தன் வாசகர்களை கடைத்தேற்றும் அவரை “ஆன்மாவால் காந்தியைத் தேட முயலும் ஒர் எழுத்தாளன்” என்று அவரே விளக்கிக் கூறுவதை இங்கு நினைவுபடுத்திக் கொண்டு, அவரது ஆய்வின் ஆழத்தையும் அறிவின் அகலத்தையும் அசைக்க முடியாத வாதங்களின் உயரத்தையும் தக்கச் சான்றுகளுடன் நிறுவிக் காட்டும் ஒரு சிறு முயற்சியில் நுழையலாம்.
அவரது
“இன்றைய காந்தி” (2009) என்ற ஞான நூல் “காந்தி மீதுள்ள அத்தனை ஐயங்களையும்” நீக்கி
இத்தனை அறிவையும், ஆய்வுத்திறனையும் எங்கிருந்து பெற்றார் இந்த அறிஞர் என்ற ஒரே ஒரு ஐயத்தை மட்டும் நம்மிடம்
விட்டுச் செல்லும் ஒரு பெருநூல். இந்த நூல் 512 பக்கங்களைக் கொண்டது, அருண் ஷௌவ்ரி
என்ற சத்தியசீலர் எழுதியுள்ள “ஒர்ஷிப்பிங் ஃபால்ஸ் காட்” (1997) என்ற ஆங்கில நூல்
663+ பக்கங்களில் இந்திய மக்களுக்கு உண்மையான கடவுள் யார் அவர்களை எப்படி ஒர்ஷிப் செய்வது
என்று உணர்த்தும் உன்னத நூலாக வெளிவந்ததை நாம் அறிவோம். ஆங்கிலத்தில் அதனை வாசிக்க
இயலாத அறிவுத்தாகம் உடையவர்களுக்கு ஞானப்பழத்தைப் பிழிந்து நயமாக ஊட்டும் பெரும் பணியை “இன்றைய காந்தி“ என்ற
இந்த நூல் செய்கிறது.
அந்த
நூலுக்குள் செல்லும் முன்பாக மறைக்கப்பட்ட
மனதின் மென்மைகளையும் புதைக்கப்பட்ட
வரலாற்று உண்மைகளையும் தன் ஓயாத “அகழ்வு ஆராய்ச்சி” வழியாக
அள்ளி எடுத்து வந்து தமிழர்களுக்குக்
கடந்த 45 ஆண்டுகளாக ஊட்டி வரும் ஒரு படைப்புலக
மேதையின் சாதனைகளை நான் அறிந்த வரை, வாழ்ந்து பெற்ற அனுபவங்களின் வழி இங்கே எடுத்துரைக்கிறேன்.
நான் அறிந்த ஜெயமோகன்
இப்பொழுது மணிவிழா காணும் மதிப்புக்குரிய
எழுத்தாளர் ஜெயமோகனுக்கு ஒரு சிறப்பு உண்டு, மற்ற தமிழ் எழுத்தாளர்கள் யாருக்கும் இல்லாத
ஒரு சிறப்பு.
உங்களால் யூகிக்க முடியுமா எனத்தெரியவில்லை. நானே சொல்லி விடுகிறேன். வேறு எந்த எழுத்தாளருக்காவது நள்ளிரவுக்கு மேல் பத்மநாபபுரம் அரண்மனையையும், வீதிகளையும் சுற்றிச் சுற்றி நடந்தபடி மந்திரவாதிகளின் தந்திரங்கள் என்ன என்பது பற்றி ஒரு பின்நவீன, பின்நவீனத்துவ எழுத்தாளருடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்திருக்குமா? நிச்சயம் இருக்காது. ஜெயமோகனுக்கு கிடைத்தது, அதனை நானே ஏற்படுத்தித் தந்திருக்கிறேன்.
அது பல ஆண்டுகளுக்கு முன் (ஆண்டு சரியாக
ஞாபகம் இல்லை) மகன் நடக்கும் சிறுவனாகவும், மகள் தூக்கச் சொல்லி அழும் குழந்தையாகவும் இருந்த காலம்.
அவர் தொலைத் தொடர்புத் துறையில் பணி ஓய்வு பெறாமல் ஓய்வையே பணியாகச் செய்துகொண்டிருந்த காலம். என்னைவிட வயதில் மூன்று வயது மூத்தவர், ஆனால் அறிவில் ஞானத்தில் தரிசனத்தில் மூவாயிரம் ஆண்டு மூத்தவர். (இரட்டுற மொழிதலை என்னிடம் மட்டும் அவர் ரசிக்கக்கூடும், அந்த அனுமதி வாசகர்களுக்கு இல்லை).
புதிதாக எழுத வரும் யாரையும் தேடித் தேடி
படித்துவிடும் பழக்கமுள்ள எனக்கு அவருடைய எழுத்துக்களெல்லாம் தொடக்கத்திலிருந்தே நன்கு
பழகியவைதான். ஆனால் அவரை எனக்கு அறிமுகப்படுத்தி
வைத்தவர் கிரணம் இதழின் பதிப்பாளர், ஆசிரியர் சாரு நிவேதிதா அவர்கள்.
அவர்தான் ஜெயமோகனை தருமபுரியில் (அப்படித்தான்
ஞாபகம்) சந்தித்துவிட்டு வந்து என்னிடம் “களங்கத்துப் பரணி” பாடினார். ஜெயமோகன் சிறுகதைகள்
பொருள்பொதிந்த வாசிப்புக்கு உரியவை என்பது போல நான் சொல்லியிருந்ததில் சாரு மிகுந்த அறச்சீற்றமும் அழகியல் ஆவேசமும் அடைந்திருந்த
காலம் அது. நேரிலேயே சந்தித்துத் தன் சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளும் கள ஆய்வு மனப்பான்மையுடன்
அவர் தர்மபுரி சென்றிருக்க வேண்டும்.
திரும்பி வந்து அவர் சொன்ன வாசகங்களை “பழுப்பு நிறப் பக்கங்களில்” எழுத முடியுமா எனத் தெரியாது. அப்போதெல்லாம் சாரு யாரைப்பற்றியும் நல்லபடி எனக்கு அறிமுகப்படுத்துவதே இல்லை, நல்லபடி பேசுகிற பழக்கம் இல்லை. ஏன் தன்னைப் பற்றிக்கூட! இது பற்றிப் பிறகு எழுதுகிறேன் (சாருவும் நானும் பின்னே புவனஸ் அயரேஸ் நகரமும் என்ற தலைப்பில்) தற்போது ஜெ.மோ. பற்றி மட்டும்.
சாரு சொன்னதன் சாராம்சம் இதுதான் “நீங்க எப்படியும் அவரைச் …. சந்திக்கவே கூடாது…” எனக்குத் தெரியும் யாரையும் நான் சந்திப்பதை சாரு விரும்புவதில்லை, சந்தித்தாலும் நட்போடு இருந்துவிடக்கூடாது, அதற்கான முன்னேற்பாடுகளையும் முஸ்தீபுகளையும் செய்துவிட்டுத்தான் அவர்களிடம் என்னைக் கொண்டு செல்வார். “வாய்யா, எங்கிட்ட கேட்டில்ல, இப்ப கேளு, என்ன கேக்கணுமோ கேளு, எந்தலைவன் வந்துட்டான்னயா இப்ப கேளு கேட்டுப் பாரு” என அன்போடு அறிமுகப்படுத்துவார். நாங்கள் முட்டிமோதி தெருவோரம் புரளுவோம் என்று காத்திருப்பார், மெதுவாக நாங்கள் விவாதிப்பதைப் பார்க்க நேர்ந்தால் வெறுப்புடன் அங்கிருந்து நகர்ந்து விடுவார்.
பிறகு பகைவர்கள் என்று என்னிடம் காட்டிவர்களுடன் நெருக்கத் தோழராக அவர் மாறிவிடுவதும் உண்டு. கேங்க்ஸ் ஆப் வாசிப்பூர் போல ஆறுமணிநேரப் படம் அது. இப்ப சுருக்கமாகச் சொல்லிவிடுகிறேன். சாருவுக்கு இருந்த கடைசி ஆயுதம் ஒன்றுதான் “உங்க கவிதை, எழுத்து எல்லாம் பைத்தியக்காரப் பிதற்றல், படிக்கவே முடியல” அப்படின்னு சொன்ன ஆளு அவர் (மரியாதை விகுதி எனது) அவருடன் நீங்க பழகுறிங்க, அவர் எழுதிய எழுத்தை வாசிக்கிறிங்க.” என்று சொல்லி என்னை சீரோ டிகிரியில் நிறுத்தி விட்டு அவர் நேனோ தொழில்நுட்பத்தின் வழி அவர்கள் நட்பைத் தொடர்வார்.
அப்படித்தான் ஜெமோ-வையும் எனக்கு அறிமுகப்படுத்தியிருந்தார்.
அவற்றை நாவல்களில் எங்காவது எழுதி வைக்கிறேன்,
பிறகு “தமிழிளகியவாதிகள்” வாசித்துக் கொள்ளுங்கள். இப்பொழுது ஜெ.மோ.வை நான் சந்தித்த
நாள் பற்றிய காணொலியை காணுங்கள்.
“மூன்றாவது
(கவிதை) பட்டறை 1989 அக்டோபர்
2,3,4 தேதிகளில் நடைபெற்றது. இதற்கு ஜெய
மோகன் போன்ற புதியவர்கள் வந்திருந்தார்கள்.” என்று சொன்ன கவி.கலாப்ரியா தொடர்ந்து கூறுகிறார்
“வழக்கம் போல் அரங்கிற்கு வெளியே நிறைய விஷயங்கள் பகிரவும் அலசவும்
பட்டன.” என்ற சொல்லிவிட்டு “அந்த வகையில் பங்கேற்பாளர்கள்
எவ்வித ஏமாற்றமும் அடையவில்லை. அவர்கள் வாசிப்பிற்கான பாதை
மேலும் திறந்து விடப்பட்டிருப்பதாகவே பலரும் எழுதினார்கள்.
குறிப்பாக ஜெய மோகன்.”
என்று சிறு இடைவெளிவிட்டு தொடர்கிறார். “அடுத்த நான்காண்டுகளுக்கு
குற்றாலம் கவிதைப் பட்டறை நடத்த இயலவில்லை. ஆனால் ஒகேனக்கல்லில்
1991 இல் பிரம்மராஜன் நடத்தினார். 1993இல்
பதிவுகள் கவிதைப் பட்டறை, கவிதைக்கு மட்டும் சிறப்பளிக்கிறீர்களே
சிறுகதை, நாவல் பற்றி யோசிக்கவில்லையா என்று பலரும் கேட்டுக்
கொண்டதன் பேரில் இலக்கியக் கருத்தரங்கமாக மாற்றப்பட்டது. 1993 அக்டோபர் 1,2,3 தேதிகளில் திவான் பங்களாவில் வைத்து நடைபெற்றது. இம்முறை முதல் நாள் கவிதை இரண்டாம் நாள் சிறுகதை, மூன்றாம் நாள் நாவல் பற்றிய கருத்தரங்கு. விரிவான
ஏற்பாடுகளை விக்ரமாதித்யன் ஆரம்பத்திலிருந்தே உடனிருந்து செய்து மிக உதவிகரமாக இருந்தார்.
கோமல் சுவாமினாதன், இளையபாரதி, பொன்னீலன், இந்தியா டுடே அரவிந்தன், நஞ்சுண்டன் என்று புதிய, அதிகமான பார்வையாளர்கள்.
மூன்று துறையிலும் நிகழ்வுகள் போக்குகள் இரண்டும் விரிவாக விவாதிக்கப்பட்டன.
இந்த அரங்கில் பிரேம் ரமேஷ் இருவரின் பங்களிப்பும் காத்திரமானது. நாவல்களில் பின் நவீனத்துவப் பங்களிப்பு.
மற்றும் பாதிப்புகள் குறித்துப் புதிய திறப்புகளை வழங்கினார்கள்.
கோணங்கி, சாரு நிவேதிதா, எஸ்.ராமகிருஷ்ணன் போன்றோர் விவாதங்களை சரியான திசையில்
கொண்டு சென்றார்கள். இந்தியா டுடே, தினமணி, சுப மங்களா பத்திரிகைகளில் விரிவான கட்டுரைகள் இடம் பெற்றிருந்தன.”
அந்தக் காணொலியில் குறிப்பிடப்படும் வரலாற்றுச் சிறப்பு மிக்க தருணத்தில்தான் ஜெயமோகனைச் சந்தித்தேன். பதிவுகள் சந்திப்பில் வழக்கம் போல சாரு நிவேதிதா சண்டையைத் தொடக்கி வைத்தார். தன் “நான் லீனியர்” கதைகளை ஜெயமோகன் ஒன்றுமற்ற வெற்று என்று சொல்வதாக முறையிட்டு என்ன பிரேம் அமைதியா உட்காந்திருக்கீங்க என்று அரசியல்படுத்தி எழுச்சியூட்டினார். நான் “பொறுங்க சாரு அவர் உங்களை மட்டுமில்லை போர்ஹெஸ் கதையெழுத தெரியாமல் எதையோ எழுதிவிட்டு கேட்டால் மெட்டாபிக்ஷன் என்று சொல்லிவிட்டார், போர்ஹெவின் பெயரைக் காலம் இலக்கியத்திலிருந்து துடைத்தெறியும்” (காலம் அழிக்கப் போகும் முதல் பெயராம்) என்று சொல்லியிருக்கிறார். “மேஜிகல் ரியலிசம் எல்லாம் பம்மாத்து,இந்திய மரபில் இல்லாத மேஜிக்கா, ரியலிசமா என்று பிரம்மவாக்கியம் அருளியிருக்கிறார்.” எல்லாவற்றுக்கும் சேர்த்துத்தான் பதில் சொல்ல வேண்டும். காத்திருங்கள் மற்றவர்கள் பேசட்டும் என்று கூறி அமைதிப்படுத்த முயற்சித்தேன்.
சேகுவேரா இப்படி அமைதியாக இருந்திருந்தால் பொலிவியன் டைரி கிடைத்திருக்குமா? பூக்கோ இப்படி அமைதியாக இருந்திருந்தால் “ஹிஸ்ட்ரி ஆப் செக்சுவாலிட்டி” கிடைத்திருக்குமா என்பதுபோலப் பேசி இறுதியில் “காண்டீபம் எழுக உன் கை வண்ணம் எழுக, இக்களமெலாம் சிவக்க” எனக் கட்டளையிட திவான் பங்களா திமிலோகப்பட்டது.
என் பேச்சின் இறுதி முடிவு இதுதான் “நீங்கள் போர்ஹெஸ் படிக்கல, பிரம்மராஜன், தருமு ஜீவராம் மொழிபெயர்த்த இரு கதைகளைப் படித்தது தவிர, (மலையாளத்தில் எதுவும் வந்ததா தெரியவில்லை) மேஜிகல் ரியலசமும் மேஜிக்கும் ஒன்றல்ல, அது பற்றி நான் தனியே விளக்க முடியும், மார்க்வெஸ் எழுத்தும் படிக்காமல் பேசுகிறீர்கள், அவர் மற்ற நாவல்கள் மேஜிக்கும் இல்லை ரியலியசமும் இல்லை வேறு வடிவங்கள், நான்லீனியரிட்டி என்பது எழுத்தின், சிந்தனையின் இயல்பான வடிவம், கவிதையின் இயல்பே இந்த கிளைக்கோட்டுத் (நேர்கோடுX கிளைக்கோடு) தன்மைதான். நகுலன் கதைகளை நீங்கள் மறுப்பதில்லை, மௌனி கதைகளைக் கொண்டாடுகிறீர்கள், ஏன் புதுமைப்பித்தனின் பொருள்படுத்தும் கதைகள் பல இப்படித்தான் உள்ளன. சாரு எழுதும் எழுத்துகள் நகர் வாழ்வில் அடைபட்ட சிதைந்த மனதின் சொல்முறை, அது நான்லீனியர் வடிவில் ஒரு லீனியர் பொருளை, உணர்வைச் சொல்கிறது, திரைப்படங்களின் மொழியே நான் லீனியர் தன்மையுடன் மொண்டேஜ் வடிவில் அமைவது… இப்படி இப்படி” (நினைவில் எஞ்சியவை) நான் குரலை உயர்த்தாமல் சொல்லியிருந்தாலும் சில வாசகங்கள் யாரையும் காயப்படுத்தியிருக்கும். அவர் போர்ஹெஸின் எந்த புத்தகத்தைப் பார்த்து இந்த முடிவுக்கு வந்தார்? என்ற கேள்வி அவருடைய நண்பர்களை கோபப்படுத்தியது. இப்படியெல்லாம் பேசினால் நான் இதில் கலந்து கொள்ள மாட்டேன் என்றார் கோமல் சுவாமினாதன். நான் “வழி அந்தப் பக்கம் இருக்கிறது” என்று கையைக் காட்டினேன். கடுங்கோபத்துடன் அவர் எழுந்து செல்ல முயற்சிக்க (அனைவரும் தரையில் உட்கார்ந்திருந்தோம்) இளையபாரதி அவரை அமைதிப்படுத்தினார். பெரும் அமளியுடன் கூட்டம்…. முடியவில்லை தொடர்ந்தது. ஜெயமோகன் தன் மாய ரூபத்தைக் கலைத்து இப்படிச் சொல்லி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழத்தியதாக ஞாபகம். “இப்படி நிதானமாகத் தன் தரப்பை எடுத்துச் சொல்லும் ஒருவரைத்தான் நான் கலைஞன், சிந்தனையாளன் என்று சொல்வேன். மற்றவவை வெறும் கூச்சல், நான் வேண்டுமென்றேதான் சீண்டினேன், (தூண்டினேன்) நான் பிரேம் சொல்வதை ஏற்றுக் கொள்ளவில்லை, எப்போதும் ஏற்றுக் கொள்ளவும் மாட்டேன், ஆனால் அவருடன் தொடர்ந்து உரையாடுவேன். ” அவரது திருவிளையாடல் வழி வகுத்த யுத்த தந்திரம் நன்கு வேலை செய்தது. என்றாலும் முழுதாகத் தகர்க்கப்பட்ட ஒருவர் முகம் கொடுத்து பேசிக்கொள்ள வாய்ப்பில்லை என்று கோவில்பட்டி குழுவினரும் சாரு சமேத சபையினரும் தீர்க்கமாக நம்பினார்கள்.
அன்று இரவு அருவியில் அனைவரும் நனைந்து கொண்டிருக்க நானும் ஜெயமோகனும் நிதானமாக பேசிக்கொண்டு பெரும் நகைச்சுவைகளுடன் தொடர்ந்து கொண்டிருந்தோம். “நீங்கள் சிரிக்கவே மாட்டீர்கள் எனச் சாரு சொன்னார் அவர் சொன்னால் நிச்சயம் அது பொய்யாதான் இருக்கும் என்று எனக்கு அப்பவே தெரியும்” என ஜெயமோகன் சொல்ல, “நீங்கள் எதிரே இருப்பவரைப் பேசவே விடமாட்டீர்கள் பேசினாலும் கவனிக்க மாட்டீர்கள் என்று சாரு சொன்னார். அது பாதி பொய் என்பதை நீங்களும் நிரூபித்திருக்கிறீர்கள்.” என நானும் சொல்ல, இந்தியப் புராணிக மரபு தொடங்கி, அம்பேத்கர் பௌத்தம் வரைப் பல பக்கங்கள் நீண்டது அன்றைய இரவுப் பேச்சு.
எல்லோரும் குளிக்கும் போது நீங்க ரெண்டு பேரும் இப்படி ஓரமா நின்னு பேசிக்கிட்டிருக்கீங்களே என்று அப்பாஸ் முறையிட “எல்லாரும் குளிச்சா துணிகளை யார் பார்த்துக்கிறது” என்றும் “சிறுபடைப்பாளிகளுக்குத்தான் அருவி குளியல் எல்லாம், பெரும் படைப்பாளிகளுக்கு அதெல்லாம் முக்கியமில்ல” என்றும் கடுப்பேத்தும் பதில்களுமாக கடந்தது நேரம்.
சாரு கடுங்கோபத்தில் இருந்தார், “குடிச்சவங்களோட ஒரு வார்த்தையும் பேசமாட்டேன் அப்படின்னு ஜெமோ சொன்னா(ர்), சாமியார் பசங்ககிட்ட சவகாசமே கிடையாதுன்னு பிரேம் சொல்லுவார் இப்ப என்ன நடக்குது?” என நண்பர்களிடம் முறையிட்டார்.
அப்போதெல்லாம் சாரு “நித்ய சைதன்ய யதி” என்ற பெயரைத் தன் கலகமொழிப்படி எப்படி உச்சரிப்பார் என்பதை அவருடைய ரசிகர்களின் நுண்மான் நுழைபுலத்திற்கே விட்டுவிடுகிறேன்.
மறுநாள் சாரு என்னிடமும் அதனைக் கேட்டார், நான் “கொஞ்சம் அதிகமா குடிச்சிட்டேன் சாரு அதான்” என்று பிஞ்சு முகத்தை வரவழைத்துக் கொண்டு சொல்லித் தப்பிக்கப் பார்த்தேன். ஆனால் ஒன்றும் அவரிடம் பலிக்கவில்லை. [சாரு மன்னிக்க வேண்டும், சற்று அதிகம் உரிமை எடுத்துக் கொள்கிறேன். தடையற்ற பேச்சின் தலைமகன் நீங்கள் அனுமதிப்பீர்கள் என்று தெரியும். அப்படியே சீற்றமடைந்து ஏதாவது வசைகளை, வதந்திகளை எழுதினாலும் பரவாயில்லை, புதுசா என்னத்தை உடைக்கப் போறீங்க. அதே கடிகாரம், அதே டேமேஜ்தான், அதே வௌக்கெண்ணைதான் ஓக்கேயா?]
இப்படித்தான் தொடங்கியது இருவரின்
நட்பும் (???) வேறு எழுத்தாளர்கள் யாரிடமும் இவ்வளவு நேரங்கள் தொடர்ச்சியாகப்
பேசிக் கொண்டிருந்ததில்லை. ஒருவரை மற்றவர் ஒரு முறைகூட ஏற்றுக் கொண்டதில்லை,
உடன்பாடு என்று ஒன்றிலிலும் கிடையாது. உடல்நிலை, நண்பர்களுக்கு உதவி, பிள்ளைகள்
படிப்பு என்பன சில முரண்பாடு அற்ற பேச்சுகளாக இருக்கும். பல அரங்கங்களை ஏற்பாடு
செய்து என்னைப் பேச அழைத்திருக்கிறார். பல ரகசிய கூட்டங்களுக்கும் நான்
போயிருக்கிறேன் (அழைப்பு உள்ளவர்கள் மட்டும் என்பதால்) எல்லா இடத்திலும் எனது
பேச்சின் எதிர்த்திசையில் அவர் பேச்சு, அவரது கருத்தியல் அடிப்படைகளைத் தகர்க்கும்
எனது வாதம். இப்படித்தான் தொடர்ந்தது அது. கடைசியாக மதுரையில் ஆசான் அயோத்திதாசர்
கருத்தரங்கில் சந்தித்ததாக ஞாபகம், (அல்லது கன்னியா குமரியில் காலச்சவடு அரங்கிலா)
அப்பொழுதும் வெளியே கேலியும் கிண்டலுமாக எங்கள்
பேச்சுகள். அவருடன் வந்த பக்தர் குழாம்
பதைபதைப்புடன் சுற்றிலும் நின்று கவனித்துக் கொண்டிருந்தது. “பிரேம்கிட்ட இப்ப
முழுசா பேராசியர் தோரணை வந்துடுச்சி” என ஜெமோ சொல்ல சிலருக்கு “அது பொருந்தும்
சிலருக்கு காமெடியாயிடும், நல்ல வேளை எனக்கு எப்பவும் பிரச்சினையில்லை” என்று சொல்லிவிட்டு
“ நான் பேராசிரியரா ஆயிட்டேன் அது எதிர்ப்பார்த்த ஒன்றுதான், நீங்க
அகழ்வாராய்ச்சியாளரா ஆவீங்கன்னு நான் எதிர்ப்பார்க்கல” பக்கத்திலிருந்த நண்பர்களில் சிலர்
பதறிப்போனார்கள், அது எனக்குப் பிடித்திருந்தது (சிலருக்குதான் இது புரியக்கூடும்).
ஆனால் காலையில் நான் 70- 80 நிமிடங்கள் பேசியதை மறுத்து அவர் 60 நிமிட அளவுக்குப் பேசி அயோத்திதாசரின் ஆன்மீகத்தை மீட்க வேண்டும், அரசியலை அல்ல என்று முடித்துவிட்டு திரைப்பட நண்பர்கள் காத்திருக்கிறார்கள் முடியும் வரை இருக்க இயலாது மன்னிக்க வேண்டும் என்று சொல்லிப் புறப்பட்டார். இரண்டு மூன்று கார்களில் வந்த ஸ்டன்ட் மாஸ்டர்கள் போன்ற தோற்றத்திலிருந்த இளைஞர்கள் அவரை அழைத்துச் சென்றார்கள்.
அரசியல் போராட்டம் அற்ற அயோத்திதாசர் மருந்து உள்ளே இல்லாத கேப்ஸ்சுல் போல எனத் தொடங்கி மீண்டும் சில நிமிடங்கள் நான் பேசியிருக்கிறேன். சற்று எரிச்சலுடன் கூடிய பேச்சு அது.
காலம் எத்தனைக் கடியது? நண்பர்
அனுப்பிய சாரு பேசிய காணொலி கேட்டேன்
“தமிழில் எனக்கு இணையாக எழுதுவது ஜெயமோகன் மட்டும்தான், இரண்டு பேர்தான் இன்றைய
எழுத்தாளர்கள், எங்களுக்குள்தான் போட்டி” இப்படித் தொடர்ந்தது. அவர்கள் இருவரும்
பலமேடைகளில் எழுந்தருளி தரிசனம்
தருகின்றனர். எனக்கு இருவரையும் தெரியும், அவர்களுக்கு டப்மாஷ் செய்து
ரசிக்கிறேன்.
ஜெயமோகன் கதைகள் தமிழில் வரும் பல கதைகளைப்
போல எளிமையானது, ஒற்றைவகைக் கதைசொல்லலை ஒரு
பாடு நீட்டி முழக்குவது, ஞான ஒளி வீசும் வாசகங்களைப் பாயவிட்டு அறியாத பருவ வாசகர்களை
அரச வைப்பது, வளவள எழுத்துக்கு வகையான உதாரணம்
அவை. 200 பக்கங்களில் எழுதி முடிக்க வேண்டியதை 890 பக்கம் எழுதித் தன்னைப் பெரும்படைப்பாளியாக வைத்துக் கொள்ள வேண்டிய துர்ப்பாக்கியம்
அவருக்கு நேர்ந்துவிட்டது வருத்தத்துக்குரியது.
எதையும் முழுதாக முறையாக வாசிக்காத தமிழ் வாசக அடியவர் கூட்டத்தை ஆட் கொள்ள
வந்த ஆபத்பாந்தவர் அவர்.
தன் வாசக கோடிகள் வேறு எந்த எழுத்தையும்
வாசித்து விடவே கூடாது என்ற பெரும் திட்டத்துடன்
தட்டித்தட்டி அவர் செய்திருக்கும் காவி-யச் சாதனை எழுத்து வேதனை, அறிவுக்கு வந்த சோதனைதான்
அந்த “வீண் முரசு” இப்படிச் சொல்வதில் நான் வருந்தவில்லை. விஷ்ணுபுரம், பின்தொடரும்
நிழலின் குரல் நாவல்களைப் பற்றி பல அரங்குகளில்
பேசி இருக்கிறேன். விஷ்ணுபுரம் நாவலை மூன்று நாட்களில் வாசித்துப் பல தளங்களில் கட்டுடைக்க.
வேண்டிய வாசிப்புக்கு உரியது என்று சொன்னதற்காக சாரு தொடங்கி பெரும் கலகக்காரர்களின்
ஜென்ம விரோதியாக மாறியவன் நான். என்றாலும் கதையழிக்கும் கதைகளை எழுதிக் காவியம் எனச்
சொல்லும் இந்த எதிர்நவீன எழுத்தை இலக்கியம் என்ற சொல்ல மாட்டேன். இந்திய அரசியலில்
2014-இல் தொடங்கிய இரண்டாம் கட்ட அச்சுறுத்தும் சொல்லாடல்களின் ஒரு பகுதியாகவே அது உள்ளது.
ஜெயமோகனிடம் ஒரு ஏளனப் புன்னகை யாருடன்
பேசும் பொழுது இருக்கும். அது இன்று தமிழ் வாசகர்களை நோக்கிய நிரந்தரக் குறியீடாக மாறிப்போனது.
அவருடைய அரசியல் கருத்துகள் அபத்தமானவை மட்டுமல்ல ஆபத்தானவையும் கூட . சான்றுகள் ஆதாரங்கள் அற்று அவர் வாரியிறைக்கும் வார்த்தைகள் தமிழின் தொடக்க நிலையில் உள்ள வாசகர்களையெல்லாம் மனவளர்ச்சி குன்றிய மக்கிலக்கிய கூட்டமாக்கி, வார வழிபாட்டு மன்றங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.
ஜெயகாந்தன் தன் முற்போக்கு இலக்கியப் புகழை 1975-க்கு பிறகு சனாதனச் சக்திகளுக்கு தத்தம் செய்து ஜெயஜெய சங்கர, ஹரஹர சங்கர என்று உளற ஆரம்பித்தார், ஆனால் ஜெயமோகன் தனது திட்டங்களுக்கு உண்மையானவர், தொடக்கத்தில் இருந்து அப்படித்தான் இருக்கிறார், முன்பு அவரது கருத்தாக இருந்தது இன்று அது இயக்கமாக மாறியிருக்கிறது. ஊருக்கு நூறு ஜெயமோகன் என்ற நிலை உருவாக இன்றைய அதிகாரச் சூழல் உதவிசெய்கிறது.
ஞான ஒளி, நற்செய்திப் பிரசங்கம் என நீளும்
அவருடைய எழுத்துகள் வெறுப்பின் பத்திகளால் நிரம்பிக் கொண்டிருக்கின்றன. நெடிய ஆய்வின்
வழி கண்டறிந்து கூறுவது போன்ற பாவனையில் அவர் எழுதுபவை பல அடிப்படைத் தவறுகளால் பொங்கி வழிகின்றன.
நான் அறியாத காந்தி
எனக்குள் பெரும் எரிச்சலை ஏற்படுத்திய
ஒரு பொத்தகம் “இன்றைய காந்தி” (2009) அதில் உள்ள
பரதவாக்கியம் இது “இந்த நூல் எந்தவிதத் திட்டமும் இல்லாமல் உருவானது. இதற்காக
எந்த ஆராய்ச்சியும் செய்யவில்லை. ஆராய்ச்சி செய்து எழுதும் நூல்களின் வகையைச் சேர்ந்த
நூலும் அல்ல இது.” அப்பறம் என்ன…? என்று கேட்கத்
தோன்றுகிறது, நடுவண் அரசால் நசுங்கிச் சாக முடியாது நம்மால். நான் சொல்வது இதுதான்
“எந்த ஆராய்ச்சியும் இல்லை என நீங்கள் சொல்வது உண்மை, ஆனால் திட்டமில்லை என்று சொல்லாதீர்கள்.
ஜெமோ. “இனி ஒரு பயபுள்ள தமிழ்நாட்டில உண்மைய
பேசிடக்கூடாது, பேச விடமாட்டோம் ஆமாம்”. என்பதுதான் உங்கள் திட்டம்.
தமிழக பாஜக தலைவர் அறிஞர் அண்ணாமலை பெரியாரியம்,
அம்பேத்கரியம் அனைத்தையும் தவிடுபொடியாக்கி வருவதை நாம் அறிவோம். அவர் வாழும் காலத்தில்
வாழ்வது பற்றி நாம் கவலைப்பட ஒன்றுமில்லை, அவர் இலக்கியம் எழுத வில்லை, ஜெயமோகன் இலக்கியம்
எழுதுகிறார் அதனைக் கண்டு அறிவுத் தஞ்சமடையும் இளைஞர்களிடம் அரசியல் பேசுகிறார். அத்தோடு
நோய்வாய்ப்படும் இலக்கியவாதிகளுக்கு உற்ற உதவிகளைப் புரிகிறார். “ஆன்மாவால் காந்தியைத்
தேட முயலும் ஓர் எழுத்தாளனின் சொற்களே அந்தப் பணியை ஆற்ற முடியும்.” என்பதும் புரிகிறது.
“காந்தியை அவரது எதிரிகள் வழியாக அறிந்தவன்தான்
நானும்” என்றும் “காந்தியை புத்தம் புதிதாக அறிமுகம் செய்து கொண்டேன்” எனவும் சொல்லித்
திகைக்க வைக்கிறார்.
பெருமையுடன் அவர் சொல்கிறார் “நான் இப்படிச் சொல்வேன்.
இந்நூல் குறுகிய பிளவுவாத நோக்கில் காந்தியையும் அவரது கொள்கைகளையும் புரிந்து கொள்ளும்
முறைக்கு மாற்றாக விரிவான ஒரு வரலாற்றுப் பிரக்ஞையுடன் காந்தியத்தையும் காந்தியையும்
புரிந்து கொள்ள முயல்கிறது”
நல்லது, அதற்காக எந்த ஆராய்ச்சியைச் செய்தீர்கள்
என்றால் ”இந்த நூலுக்காக எந்த ஆய்வையும் செய்யவில்லை.” என்கிறார். ஆராய்ச்சி செய்யாமல்
வரலாற்று பிரக்ஞையுடன் எப்படிங்க ஜெமோ” என்றால். “என்ன ஆராய்ச்சி செய்ஞ்சியா…? ” என்று திரும்பக்
கேட்கிறார்.
வாசகர்களுக்கு அவர் தரும் தரினங்களில் சில. “இது எழுத்தாளனின் மொழி. ஆகவே உணர்ச்சிபூர்வமானது.” சரி அதற்காக “வெள்ளையருடன் எந்நிலையிலும் பேச காந்தி தயாராக இருந்தார். பகத்சிங் செய்த கொலைகளை நியாயப்படுத்திய பின் அவர் எப்படி உலக மனசாட்சியுடன் பேச முடியும்? எப்படி வெள்ளையனின் அறவுணர்வை நோக்கிப் பேச முடியும்? அதன் பின் சத்யாக்ரகத்துக்கு என்ன மதிப்பு? ” (இன்றைய காந்தி, 2009:189) “பகத் சிங் செய்த கொலைகள்” என்று உணர்ச்சி வசப்பட்டுச் சொல்ல உங்களைத் தூண்டிய ஆவணம் எது. எங்கு, எப்படி அந்த உண்மையைக் கண்டு பிடித்தீர்கள்?
ஈரோடு வெங்கடப்பா ராமசாமி என்ற பெயர் கொண்ட பெரியார் பற்றி அபத்தங்களை கடைபரப்பும் இந்த நூல் “அதாவது காந்திய யுகத்தின் இன்னொரு பெருந்தலைவர் அல்ல ஈ.வே.ரா அவர்கள். காந்தியும் ஈ.வே.ராவும் என்ற ஒப்புமைக்கே இடமில்லை.” (ப.344) என்பதை நிறுவுகிறதாம். சரி அதற்காக பெரியாரின் நூலைக் கண்ணில் கூடக் காணாமல் சங்கத்தில் யாரோ பேசக் கேட்டு எழுதுவது எந்த வகை ஆன்மிக தர்மம்?
நீங்க ஈ.வே.ராவை யார்கூட ஒப்பிடறிங்களோ
இல்லையோ அது உங்கப்பாடு ஜெமோ. நாங்க ஈ.வெ.ராமசாமி என்கிற அந்த காலத்திற்கான அறிவாளியை எல்லாருடனும் ஒப்பிட்டு அவர்கள்
தகுதியை அறிந்து கொள்வோம். எழுதுவதற்கு முன் வாசிக்கனும் தெரீய்தா, இப்படி வாய்மொழியாகக்
கேட்டு வளர்ந்தால் ஈ.வே.ராவாதான் வரும், கடைசி வரி வரை (பக்.342-368). ஒரு எழுத்தாளன் இப்படியா எழுத முடியும் “இந்தப் போராட்டத்தின்
…உண்மையான வைக்கம் வீரர் டி.கே. மாதவன் மட்டுமே. அவரது இருபதாண்டுக் கால பொது வாழ்க்கையின்
சாதனை அது. அதைச் சிலநாள் அப்போராட்டத்தில் பங்கெடுத்த ஈ.வே.ரா அவர்கள் மேல் ஏற்றிக்கூறுவது
ஈவேராவிற்கே பெருமை சேர்க்காது.” (ப.368)
இப்படித்தான் தொடர்கிறது, அவரது அரசியல்,
வரலாற்று பிரக்ஞையும். உலக எழுத்தை எழுதும் ஒரு மகா கலைஞனுக்கு உள்ளூர் எழுத்தில் கவனம்
செலுத்தும் கடப்பாடு இல்லை என்று அவருடைய தொண்டர் அணி ஊர் முழுக்க பிளக்ஸ் கட்அவுட்
வைக்கலாம். அது வரலாற்றின் பக்கங்களில் பொறிக்கவும் படலாம். ஈவேராவாம்…ஈவேரா…
மகாதரிசனங்களின் பெருக்கில் ஒரு பகுதி மண்டையில் அடித்த ஒரு பகுதி “அன்று அம்பேத்கர் மக்கள் தலைவரே அல்ல. ஏன், இந்திய தலித்துகளின் ஒட்டுமொத்த தலைவர்கூட அல்ல. அரசியலியக்கமாக அம்பேத்கரின் அமைப்பு என்றுமே குறிப்பிடத்தக்க வெற்றி பெறவில்லை. மகாராஷ்டிரத்துக்கும் மகர் சாதிக்கும் வெளியே நீளவே முடியவில்லை என்பது வரலாற்று உண்மை. அப்போது இது இன்னும் ஆரம்ப நிலையிலேயே இருந்தது. ஆகவே தாழ்த்தப்பட்டவர்கள் உட்பட்ட இந்தியாவின் கோடானுகோடி மக்களின் குரலை, அதாவது காந்தியின் குரலை, அவர் பொருட்படுத்தியே ஆகவேண்டும். வேறு வழியில்லை. அதுவே நடந்தது.” (இ.கா, ப. 256) இதற்கான ஆதாரத்தை எங்கிருந்து ஜெயமோகன் பெற்றார்? அம்பேத்கரை பிரிட்டிஷ் கைக்கூலி என 639 பக்கங்கள் எழுதி வெளியிட்ட அருண் ஷோவ்ரி என்கிற சேவக அறிவுஜீவியிடம் இருந்து. அதே நூலின் பக்கம் 22- இல் ஷோவ்ரியின் நூலில் இருந்து எடுத்த இந்தப் பத்தியைக் குறிப்பிட்டு விரிவான தகவல் ஆதாரம் கொண்டது என எழுதுகிறார். பிறகு அந்தப் பத்தியில் இருக்கும் மகாராஷ்டிராவுக்கு வெளியே செல்லவில்லை என்பதுடன் அம்பேத்கர் மகர் சாதிக்கு வெளியே கூடச் செல்லவில்லை என்பதை இணைத்து , இதுதான் வரலாற்று உண்மை என்கிறார். அயோத்திதாசரை ஆன்மிக வழிப்படுத்தியவர் என தமிழக வரலாற்று அறிஞர்களால் கொண்டாடப்படும் ஜெயமோகனின் தரிசன தர்மம்.
பிரிட்டிஷ் அரசு அளித்த போர்ப் பணியின் நிமித்தம் தென்னாப்பிரிக்கா விட்டு இந்தியா திரும்பிய காந்தியைப் போல 50 வயதில் அரசியலுக்கு வந்தவர் அல்ல பாபாசாகேப். பேசத் தொடங்கிய காலத்திலிருந்துஅரசியல் பேசி, எழுதத் தொடங்கிய காலத்திலிருந்து அரசியல் எழுதி, தன் பிள்ளைகளைப் பலியிட்டு விடுதலை அரசியல் செய்தவர் அவர் என்பதைக் கூட அறியாத ஒருவர் தன்னை வரலாற்று பிரக்ஞை கொண்டஎழுத்தாளர் என்கிறார்.
இந்தியாவின் அனைத்து மகாணங்களிலும் இயங்கி வந்த எழுபதுக்கும் மேற்பட்ட விடுதலை அமைப்புகள் சேர்ந்து உருவாக்கிய “ஆல் இன்டியா டிப்ரஸ்ட் கிளாஸ் காங்கிரசின்” (1930) தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் அவர் என்பதையும் மறைத்து தலித் அரசியல் வரலாற்றையே இழித்துரைக்கும் ஒருவர்தான் தனது எழுத்துக்குள் ஆன்மீகம் பொங்கி வழிகிறது என்று புளகாங்கிதம் அடைகிறார். எதையும் வாசிக்காமல் எளிய வாசகர்களுக்கு வாழ்வளிக்கும் பேரறிஞராக அவர் செயல்படுவது எப்படி எனப் புரிகிறது.
அமைப்பு அற்ற தலைவர் அம்பேத்கர்
வாசித்தால் தெரியவரும் சில வரலாற்று மெய்கள் இவை:
இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடு 1931 மார்ச் மாதம் 26-ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை நடப்பதாக திட்டமிடப்பட்டது. மாநாடு நடக்கும் போது பகத்சிங் உயிருடன் இருந்தால் காங்கிரஸின் முதல் தீர்மானமாக பகத்சிங்கின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றும் கோரிக்கையே பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேறும் நிலை உருவாகும். இதற்கு முன் இது போன்ற “யாரையும் கொல்லாத வெடிகுண்டுகளை” வீசிய வழக்குகளில் இப்படி தீர்ப்புகள் உள்ளன. இதனை மார்ச் 5, 1931 இல் வைஸராய் இர்வினுடனான சந்திப்பின் போது பேசிய ஒருவர் எடுத்துச் சொல்கிறார். அதற்கு முன் பகத்சிங் தூக்கிலிடப்பட வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டு 23 மார்ச், 1931 இல் மன்னிப்புக் கேட்க மறுத்த பகத்கிங், சுக்தேவ், ராஜகுரு மூவரும் தூக்கிலிடப்படுகின்றனர். இர்வின் சந்திப்பில் காங்கிரஸின் நிலையை முழுமையாக விளக்கிப் பேசிய மகாத்மா காந்திதான் பகத்சிங் ஒரு தேசபக்தர் ஆனால் அவரது பாதை சத்தியத்துக்கும் அகிம்சைக்கும் எதிரானது என்கிறார்.
காந்தி பற்றி அவரது குறிப்பில் இருந்து பெறப்படும் சில ஆன்மீக நிகழ்வுகள் இவை.
ஆப்ரிக்க காபிர்களுடன் இந்தியர்கள் ஒன்றாகச் சிறையில்அடைக்கப்படுவது இழிவானது என வாதிட்டவர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி.
பிரிடிஷ் படைக்கு ஆள் சேர்க்க தென்னாப்பிரிக்காவை விட்டு இந்தியா வந்து பாதை யாத்திரை செய்த காந்திக்கு முதலில் ‘சார்ஜண்ட் மேஜர்’ பதக்கமும் பிறகு ‘கெய்ஸர் ஹிந்து’ பட்டமும் வழங்கப்படுகிறது. 1919-இல் காந்தி அதனைத் திருப்பித் தந்துவிடுகிறார். (அல்லது அவற்றைத் துறந்துவிடுகிறார்)
பகத்சிங் போன்றவர்களைத் தூக்கிலிட பிரிடிஷ் அரசுக்கு உரிமையுள்ளது,
காங்கிரஸ் உணர்ச்சி வசப்பட்டு இதில் தலையிட முடியாது என்று சொன்ன காந்தி நீண்ட அனுபவம்
கொண்ட வழக்கறிஞர், பாரிஸ்டர்.
பெண்களுடன் தன் பிரம்மச்சர்ய பரிசோனையை நேரு முதலான தலைவர் விமர்சித்த
போதும், அது தன் ஆன்ம பரிசோதனை அது தன் அந்தராத்மா சம்பந்தப் பட்டது, நாட்டுக்காக அதனை
மாற்றிக்கொள்ள முடியாது என்று பல காலம் சொல்லி வந்த ஆன்மிகத் தலைவர் மகாத்மா காந்தி.
தனித்தொகுதி உரிமை என்ற இடைக்கால அரசியல் உரிமை கிடைத்தால் “தீண்டாத்தகாதோரைக் கொல்வோம்” என்ற சாதி இந்துக்களும், சனாதனிகளும் சொன்னதைக் கேட்டும், இந்திய ஒடுக்கப்பட்ட மக்களின் ஒப்பற்ற தலைவர் ஒயாத அரசியல் செயல்பாட்டாளர் அம்பேத்கரைக் கொலை செய்வோம் என்ற சுவரொட்டிகளைப் பத்திரிகைகளில் பார்த்தும் அவை பற்றி நேரடியாக எதுவும் பேசாமல் (சாதி) இந்துக்களின் பாவம் (சாதி) இந்துக்களால்தான் கழுவப்படவேண்டும் என்று பூடகம் பேசி உண்ணாநோன்பிருந்தவர் தேசபிதா காந்தி அடிகள்.
ஜெயமோகனை இனி எதையும் வாசிக்க வைக்க முடியாது (வரிகளை வாசித்தல் அல்ல). தமிழ் வாசகர்களுக்குச் சொல்கிறேன். வாசியுங்கள் பிறகு யோசியுங்கள், அப்புறமா இந்தியத் தரிசனம் பத்தி எழுதுங்க… நானும் விரிவாக எழுதிக் கொண்டிருக்கிறேன்… வாசித்தவைகளைப் பற்றி மட்டும்… மகாத்மா காந்தி நூல் தொகுப்பு நூறு உள்ளது, பன்னாட்டு நிறுவனங்களும் பாரதப் பெரும் பணக்காரர்களும் தந்த கொடையில் காந்தியக் குடும்ப நிறுவனம் சேகரித்துத் தொகுக்க, இந்திய அரசு நிறுவனம் வெளியிட்ட தொகுப்பு அது, வாசியுங்கள் …
பின்தொடரும் சிறு குரல்:
இப்போது சந்தித்தாலும் இருவரும் பேசிக் கொள்ளக்கூடும், எனது அரசியல் கேலிகளை அவர் சகித்துக் கொள்ளுவார் எனில் ஒரு நாள் முழுக்கத் தொடரவும் கூடும். வெண்டி டோனிகர் படித்தீர்களா என்றால் வசைபாடாமல் பேச அவரால் முடியும் என்றால். அம்பேத்கரை முழுதாக வாசித்துப் பின் காந்தி பற்றிப் பேசுங்கள் என்றால் நான் ஞான தரிசனத்தால் நாற்பது தொகுதிகளையும் வாசித்து விட்டேன் என்று கூறாமல் இருந்தால், அவருடன் விருந்தும் உண்ண முடியும். அத்துடன் இப்பொழுதெல்லாம் நான் அவர் வெறுக்கும் மதுவை அருந்துவதில்லை, காந்திய வழியில் இல்லை மருத்துவ வழியில் அதனால் ஏராளம் பேச முடியும்