உரையாடல் -பிரேம்

 எழுதுபவரின் அரசியல்  

 எழுத்துக்களின் அரசியல்

எழுதப்பட வேண்டிய அரசியல்

 

எழுத்தாளர்  பிரேம் அவர்களுடன் ஒரு தொடர் உரையாடல்

WRITER PREM

 

[கேள்விகள்:  ராஜகாந்தன், அசோக்ராஜ், கருணாகரன்]

 

அறிமுகம்                                             

ராஜகாந்தன்

 

தமிழ்நாட்டில் வாழும்  தமிழ் மக்களை மட்டும் நாம்  கணக்கில்  கொண்டாலும் மக்கள்தொகை ஏழு கோடிக்கும் அதிகம். இது உலகிலுள்ள நூற்று எண்பது நாடுகளின் மக்கள் தொகையைக் காட்டிலும் அதிகம். ஃபிரான்ஸில் வசிக்கும் ஃப்ரெஞ்சுக்காரர்களை விடவும், இங்கிலாந்தில் வசிக்கும் ஆங்கிலேயர்களை விடவும், இத்தாலி மற்றும் தென்கொரிய நாடுகளின் குடிமக்களை விடவும் தமிழர்களின் எண்ணிக்கையானது அதிகம்.

இப்பெருந்திரளான மக்கள் அரசியல், சமூகம், பொருளாதாரம், பண்பாடு, வாழ்வியல் இன்ன பிற தளங்களில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ளவும், அவற்றை விளக்கவும், அது தொடர்பான உரையாடல்களைத் தொடர்ந்து நிகழ்த்தவும் அவற்றில் நிகழ வேண்டிய மாற்றங்கள் குறித்துச் சிந்திக்கவும் அவற்றை அறிவுத்தளத்தில் முன்னெடுக்கவும் தம்மை ஈடுபடுத்திக்கொண்ட  சீரிய, சார்பற்ற கடப்பாடுடைய அறிவுச் செயல்பாட்டாளர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் கணிசமாக இருக்கவேண்டும். ஆனால் நடப்புச் சூழலில் இப்படியான அறிவுத் தளத்தில் செயல்படுபவர்களின் எண்ணிக்கை தமிழில் ஆகக்  குறைந்த அளவே உள்ளதை நாம் அறிவோம். இது அளவு ரீதியான குறைபாடு, அத்துடன் தமிழ்ச் சமூகத்தின் அரசியல் பண்பை மிக அதிகமாகப் பாதிக்கும் குறைபாடு.

காலனிய காலத்தில் நாட்டின் விடுதலைக்கான போராட்டங்கள் நடந்தபோது  தேசிய  உணர்வு, தேச விடுதலை தொடர்பான கருத்தாக்கங்கள் முன்னிலை வகித்தன. சமூகக்கேடுகள் மற்றும் அவற்றிற்கெதிரான சீர்திருத்தங்கள் குறித்த தீவிர செயல்பாடுகள் அக்காலத்திய சிந்தனையாளர்களின் எண்ணங்களைக் கட்டமைத்தது, அதுவே அவர்களின் செயல்களுக்கான உந்து சக்தியாகவும் இருந்து வந்தது.

இந்திய விடுதலைக்குப் பின்னான பத்திருபது ஆண்டுகளில் விடுதலை தொடர்பான இலட்சியவாதக் கனவுகள் பொய்த்தப் பின், பொதுவுடைமைக் கருத்தாக்கமும், மொழி, இனம் சார்ந்த தன்னுணர்வுகளும் அக்காலத்தியச் சிந்தனாவாதிகளை ஆக்கிரமித்ததாகக் கொள்ளலாம். இதனைத் தொடர்ந்து நிகழ்ந்த களப்போராட்டங்கள் கடுமையான ஒடுக்குதல்களுக்கு உள்ளான பிறகு அச்சிந்தனைகளைத் தொடர்ந்து  முன்னெடுப்பதில் ஒரு சோர்வு ஏற்பட்டிருந்தாலும் முழுமையாக அணைக்க முடியாத நெருப்பு போல சமூகச் செயல்பாடுகளின்  உந்து சக்தியாக, சமூக உணர்வுகளின் சல்லி வேர்களாக இருந்து வருகிறதெனலாம்.

தொண்ணூறுகளில் பொதுவுடமை நாடுகளில் அரசுகளின் வீழ்ச்சிக்குப் பின் பொதுவுடைமைச் சிந்தனைகள் வலுவிழந்து, உலக வர்த்தக மயமாக்கம் நிகழத் தொடங்கியது. அதற்குப்பின் உருவான கடுமையான ஏற்றத் தாழ்வுடன் கூடிய பொருளாதார வளர்ச்சியால் நுகர்வுக் கலாச்சாரமும், பொருள்குவிப்பு மனோபாவம் மக்களிடையே பெருகியது. அதன் தொடர்ச்சியாக சமூக மதிப்பீடுகளின் பெரும் வீழ்ச்சியும் ஏற்பட்டது. அப்போதிலிருந்து சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளும் தத்தமது குழு சார்ந்த, சாதி சார்ந்த இருப்பை உறுதி செய்துகொள்ள முனைந்தன. அறிவார்ந்த செயல்பாடுகள் மதிப்பிழந்து விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டது போன்றதான ஒரு தோற்றம் தற்போது ஏற்பட்டுள்ளது. இது அறிவுச்செயல்பாட்டிற்கான சமூக இடம்மற்றும் அறிவுச் செயல்பாட்டின் இருப்பு சார்ந்த  சிக்கலாகவும் தோன்றுகிறது.

பெரும் பொருளாதார, அரசியல், ஊடகச் சக்திகள் தம் நுட்பமான கருத்தாடல்கள் மூலம் வெகுமக்கள் சிந்தனையை மழுங்கடித்து சுரண்டலுக்குத் துணை போகும் சமூக மனவியலை உருவாக்குவதைக் கண்டுணர்ந்து புலப்படுத்தி, மக்களின் சார்பாக நின்று அதிகார செயல்பாடுகளை கேள்விக்குள்ளாக்க வேண்டிய சிந்தனையாளர்கள் தற்போது ஏதாவதொரு அதிகாரம் சார்ந்த நிறுவனங்களோடு தொடர்புடையவர்களாக மாறியுள்ளதால் இத்தகையச் செயல்பாட்டில் ஒரு உள்ளார்ந்த  முரணியக்கம் ஏற்பட்டுள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை வெகுஜன ஊடகங்களைக் கடுமையாகச் சாடிவந்த தமிழ்ப் படைப்பாளிகள், அறிவுசார் செயல்பாட்டாளர்கள்  தற்போது அவற்றில் தமக்கு அங்கீகாரம் கிடைத்தவுடன் தங்களுடைய நிலைப்- பாடுகளையும் பெருமளவுக்குச் சமரசத்துக்கு           உட்படுத்திக் கொண்டதோடு மட்டுமல்லாமல் வெகு  மக்களை மூளைச்சலவை செய்யும் பெரு  நிறுவனங்களின் செயல்பாடுகளில்  பங்காளர்களாகவும் மாறியுள்ளனர்.   இது அறிவுசார் செயல்பாட்டாளர்களின் அரசியல் நிலைப்பாடு, நம்பகத்தன்மை போன்றவற்றில் ஏற்பட்டுள்ள மாபெரும் வீழ்ச்சியாக உள்ளது.

இப்பெரும் தமிழ்ச் சமூகத்தில் அறிவுக் கூர்மையுடையவர்கள்அறிவுத் தரகர்கள், அறிவுவியாபாரிகள், தொழில் நுட்பவாதிகள், பெரும் கலை யிலக்கிய படைப்பாளிகள், கேளிக்கை யாளர்கள் அனைவரும் ஆளும்வர்க்க நலன் சார்ந்தவர் களாகவே இருப்பார்களெனினும் இதற்கு மாறாக சமரசமற்றவர்  களாக, மக்கள்  சார்புள்ள அறிவுத்திறன் கொண்ட செயல்பாட்டாளர் களாக இயங்கும் சிலருக்கான இடம் உறுதி செய்யப்பட வேண்டியது அவசியமானது. இது தமிழ்ச் சமூகம் தன் இன்றைய வீழ்ச்சிகளிலிருந்து மீள்வதற்கும், உயிர்ப்புடன் கூடிய அறிவார்ந்த உரையாடல்களை உருவாக்கித் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கும்  முக்கிய  தேவையாக உள்ளது.

இன்று உருவாகியுள்ள கருத்தியல் சிக்கல்கள், ஊடக வன்முறைகள் பற்றி அரசியல் பின்புலத்தில் விளக்கம் பெற நாம் மாற்று அரசியல் இயக்கச் செயல்பாட்டாளர்கள் சிலரை அணுகலாம். அவர்கள் களச்செயல்பாடு சார்ந்த அனுபவங்களின் அடிப்படையில் சில விளக்கங்களைத் தருவார்கள். ஆனால் இன்று தமிழ்ச் சமூகத்தை அதிகம் பாதிக்கும் திரைப்படம், இலக்கியம், கலைகள், ஊடகவியல் சார்ந்தும்  கோட்பாடுகள் சார்ந்தும் விளக்க இயலாதவர்களாக உள்ளனர், இது வருத்தத்திற்குரிய நிலைஆனால் கோட்பாடுகளின் தேவை பற்றி, தமக்கு ஏற்பட்டுள்ள கருத்தியல் சிக்கல்கள் பற்றி இவர்கள் வெளிப்படையாக விவாதிக்காத வரை இன்றைய தேக்க நிலையை நாம் கடக்க இயலாது.

இலக்கியம், கலைகள், திரைப்படங்கள் பற்றி  எழுதித் தம்மை ஆளுமைகள் என நிருவிக்கொண்ட பலர் மக்கள் அரசியல், மக்கள் வரலாறு பற்றித் திட்டமிட்ட திரிபுகளைப் பரப்பி வருகின்றனர். இவர்களிடமிருந்து நாம் தமிழ்ச் சமூகத்தின் இன்றைக்கான அரசியல், கருத்தியல் சிக்கல்கள் பற்றித் தெரிந்து கொள்ள  முயற்சிப்பது பயனற்றது.   

படைப்பிலக்கியம் செய்யும் இலக்கியவாதிகளில் பலர் இலக்கியப் புனிதம் பேசுவதன் மூலம் எழுத்து அதிகாரத்தை நிறுவி பண்பாட்டு பெருமுதலாளித்துவத்தை பலப்படுத்துபவர்களாக  செயல்படுகின்றனர். விளிம்பு நிலையில் உள்ள அரசியல் இயக்கச்  செயல்பாடுகளில் தம்மை உறவுபடுத்திக் கொண்டவர்கள் கலை– இலக்கியம் என்பதெல்லாம் ஒன்றும் இல்லையென மறுப்பதன் மூலம் சமூக அறிவியலின் அடிப்படைகளை  மறைத்து  விடுகின்றர்.

இந்நிலையில் மக்களுக்கான சிந்தனைகளை, மாற்றுக் கருத்தியல்களைத் தமிழில் பேசும் குழுக்கள் தமக்குள் உரையாடல் இல்லாமல் தனித்தனியாகத் தம் கருத்துகளை முன்வைத்து வருகின்றனர். மார்க்சியம், தலித்தியம், அம்பேத்கரியம், பெரியாரியம், பெண்ணியம் பற்றி பேசுகிற பலர் ஒன்றை மற்றதிலிருந்து முரண்பட்டதாக விளக்கி வருவதால், அல்லது ஏதாவதொரு கருத்தியலை எல்லாவற்றுக்கும் தீர்வாக முன்வைப்பதால் புதிதாக அறிவுத் தளத்தில் இயங்க முன்வரும் தலைமுறையினர் தவறான குழப்பங்களுக்கு உள்ளாவதுடன் விரைவில் அரசியல் அற்ற எழுத்தாளார்களின், ஊடகம் வழிபடும்  பக்தர்களாக மாறிவிடுகின்றனர்.

இதிலிருந்து மாறுபட்டு நவீனத்துவம், பின்நவீனத்துவம் பற்றிய மிகவிரிவான உரையாடல்களை முன் வைப்பதுடன் தலித்தியம், பெண்ணியம், சுற்றுச்சூழல், அடையாள  அரசியல் சார்ந்த கருத்தியல்களின் தேவைகளை வலியுறுத்தி  மார்க்சியம்,  அம்பேத்கரியம், பெரியாரியம், காந்தியம் அனைத்திலும் உள்ள மக்கள் சார்ந்த மாற்றுச் சிந்தனைகளை அடையாளம் கண்டு இனியான மாற்றுக் கருத்தியல்களை நாம் உருவாக்க வேண்டும் என விளக்கி வரும் எழுத்தாளராக, சிந்தனையாளராக இயங்கி வரும் பிரேம் கடந்த முப்பதாண்டுகளில் உருவாக்கியுள்ள உரையாடல்கள், பிரச்சினைப்பாடுகள்   முக்கியத்துவம் பெறுகின்றன.

படைப்பாளியின் இடம் தனித்த இடம் இல்லை அது அரசியலின் ஒரு பகுதி, படைப்பாளி என்ற அடையாளத்தின் வழி அதிக சமூகத் தன்மை அடைகிறேன் என்றும் எழுத்தை நான் உருவாக்குகிறேன் என்பதை விட எழுத்து என்னை உருவாக்கித் தருகிறது என்றும் அறிவித்து இயங்கிவரும் பிரேம் அறிவார்ந்த, அரசியல் செறிந்த தளங்களில் தீவிரமாக செயல்பட்டுவரும் படைப்பாளி. அரசியல் இயக்கம், புனைவெழுத்து இரண்டிலும்  பன்மைத் தன்மை, மாறும் கட்டமைப்பு பற்றித் தொடர்ந்து வலியுறுத்தி வருபவர். இலக்கியம், அரசியல், கருத்தியல் என எந்த ஒரு தளத்திலும் மையவாதமும் பிம்ப உருவாக்கமும் வன்முறையென்று தொடர்ந்து விளக்கிவிளிம்புநிலைகளின் அரசியலை உரையாடலாக முன் வைத்துவரும் அவருடன் ஒரு உரையாடலை முன்வைக்கிறோம்.

நவீனத்துவம், பின்நவீனத்துவம் கடந்து தமிழில் பன்மை நவீனத்துவம் உருவாக வேண்டும் என்று எழுதி வரும் அவர் முன்வைக்கும் சமூக-தனிமனித அரசியல், அழகியல், அறவியல் பற்றிய பதில்கள் உங்கள் பங்களிப்புடனும் இடையீடுகளுடனும் உரையாடலாக, விவாதமாக விரிவடைய உள்ளது.  

(உரையாடலில் கருத்து பதிவு செய்யவும், கேள்விகளை அனுப்பவும் மின்னஞ்சல்: panmeyithazh@gmail.com)