அயோத்திதாசரின் அறப்புரட்சி-2: வீர சுதந்திரமா வெறிபிடித்த சாதியமா-பிரேம்

அயோத்திதாசரின் அறப்புரட்சி-2 (இணைப்பில் காண்க)

 

வீர சுதந்திரமா வெறிபிடித்த சாதியமா

பிரேம்

அயோத்திதாசரின் புரட்சி அவர்தம் காலத்தில் வலிமை பெற்றிருந்த தெய்வபக்தி-தேசபக்தி என்னும் இரு பெரும் மரபுகளுக்கு எதிராக; இருபெரும் வரலாற்றுச் சக்திகளுக்கு எதிரானதாக அமைந்திருந்தது.  தெய்வபக்தி-தேசபக்தி  இரண்டும் இணைந்து புதிய ஒரு சக்தியாக உருவாகி இந்திய நவீன அரசியலைத் தன்வயப்படுத்த முனைந்திருந்த காலகட்டம் அது. இந்தியத் தாய், பாரதமாதா எனப் பக்தியும் தேசிய அரசியலும் இணைக்கப்பட்டு சுதேசியம், சுதந்திரம், சுயராச்சியம் என்ற கருத்தியல்கள் உருவாக்கப்பட்டிருந்தன.  யாகத்திலே தவ வேகத்திலே தனியோகத்திலே பல போகத்திலே ஆகத்திலே தெய்வபக்தி கொண்டார்தம் அருளினிலே உயர் நாடு-பாருக்குள்ளே நல்லநாடு எங்கள் பாரத நாடு’ என்பன போன்ற பாரதியின் பாடல்களில் பதிவாகியுள்ள அன்றைய தெய்வீகத் தேசியம்  இந்தியாவின் புதிய அரசியலை  வைதீகமையம் கொண்டதாக மாற்றப் போராடிக்கொண்டிருந்த அரசியல் சக்திகளின் கருத்தியல் உள்ளடக்கத்தைத் தெளிவாகக் காட்டக்கூடியது. ‘சுயராச்சியம் எனது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவேன்’ என்ற முழக்கத்தின் உள்ளடக்கத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் இடம் தந்திரமாக மறைக்கப் பட்டிருந்தாலும் பிராமணமையம் மிக வெளிப்படையானதாகவே இருந்தது.  இந்த முழக்கத்தை அயோத்திதாசர் தன் சொற்களில் தன் மக்களுக்காகச் சொல்லத் தொடங்கிபோதுஅதில் உள்ள வரலாற்று முரண் புலப்பட்டது, ‘இந்தியாவிலுள்ள எந்த சாதியோருக்கு சுயராட்சியம்? சாதியேற்பாட்டில் எந்த சாதியோர்கள் இந்தியர் ? என அதனை கட்டடுடைத்து  முன்வைத்த விதம் வரலாற்றை மாற்றி யெழுதுவதாக அமைந்தது.

இந்தியாவின் புராதன, சனாதன மரபு தன்னை உருமறைத்துக் கொண்டு புதிய ஒரு அரசியல் சக்தியாக  நவீன தேசம் என்ற ஐரோப்பியர்களால் உருவாக்கப்பட்ட புதிய பேரமைப்பையும் தன் கைவசப்படுத்தத் திட்டமிட்டுக் கொண்டிருந்தது. பிராமண அதிகாரம், பிராமணரல்லாதார் அதிகாரம் என்ற இரு வடிவங்களில் தேசிய அரசியல் அடையாளப்படுத்தப்பட்ட போதும் இரண்டிற்கும் வெளியே வைக்கப்பட்டிருந்த ஒடுக்கப்பட்டோர் அரசியல் முற்றிலும் மறைக்கப்பட்டதாக, கவனம் கொள்ளப்படாததாகவே இருந்தது. ஐரோப்பிய அரசியல் முறையின் பக்க விளைவுகளால்  ஓரளவு உருவம் பெற்றுவந்த ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக-அரசியல்- பொருளாதார-வரலாற்று இருப்பு சுதந்திரம், சுயாட்சி, சுதேசியம், சுயராச்சியம் என்பதான இந்தியக் கருத்துகோள்களின் பெருக்கத்தால் மீண்டும் உருவமற்றதாக மாறும் நிலை ஏற்பட்டிருந்தது.

அதனால் உருவாகப்போகும் கொடிய விளைவுகளை முன்னுணர்ந்த அயோத்திதாசர் பிராமண-ஆதிக்கச் சாதிகள் உருவாக்கிய சுதேசியக் கருதாக்கத்தின்   அடிப்படையைத் திட்டவட்டமான கேள்விக்குட்படுத்தினார், “இந்தியர்களை மட்டிலும் ஐரோப்பியர் சமமாக நடத்த வேண்டுமென்று கேட்கின்றீர். அவ்வகை சமரசம் கேட்போர் தென்னிந்தியாவில் பார்ப்பானென்றும், பறையனென்றும் வகுத்துள்ள பொய்ச்சாதிக் கட்டுக்களை ஏன் அகற்றினீரில்லை. இவ்விருவரும் ஒருதேசக் குடிகளாக இருந்துகொண்டு ஒருவர் சுகமடைவதுபோல் மற்றவர்கள் சுகமடையப் போகாதென்று சகல விஷயங்களிலும் தாழ்த்தி சீர்கெடுத்து வந்ததையும் வருவதையும் உணராது ஐரோப்பியர் மட்டிலும் சமரச சுதந்திரங் கொடுப்பதில்லையென்று கேட்பது நியாயமாகுமோ?” (தமிழன்: நவம்பர் 24,1909)

இந்தக் கேள்வியின் உள்ளீடாக உள்ள சமரசம், சுதந்திரம் இரண்டும் மிகுந்த கவனத்திற்குரியவை. ஐரோப்பியர்களின் ஆட்சியில் சமரச சுதந்திரம் இல்லாத நிலையை ஒப்புக்கொண்டும் சமரசம்-சுதந்திரம் (இக்வாலிடி-லிபர்டி) இரண்டும் மனிதவாழ்வின் அடிப்படைகள் என்பதை உணர்ந்தும்தான் இந்தக் கேள்வி முன்வைக்கப்படுகிறது. இம்மண்ணில் சமஉரிமை கொண்ட உழைக்கும் மக்களுக்குச் சமரசமும் சுதந்திரமும் அளிக்க மறுக்கும் வன்கொடுமைக்காரர்களுக்கு சுதந்திரம் பற்றிப் பேசவும் அதனைக் கோரவும் என்ன உரிமை உள்ளது என்ற அறம்சார் அரசியல் கேள்வியே இதில் மையமானது. “இந்தியாவிலிருந்து செளத்தாபிரிக்காவுக்கு குடியேறியுள்ளவர்களுக்கு சமரசவாட்சி கேட்பவர்கள் இந்தியக்குடிகளாகிய திராவிடர்களாம் ஆறுகோடி மக்களை அடியோடு தாழ்த்தி அலக்கழிக்கலாமோ. அன்னிய தேசத்திற் சென்றிருக்கும் குடிகளுக்காக அதிகப் பிரயாசைப்படுகிறவர்கள் சுதேசத்தில் கஷ்டப்படும் பெருந்தொகைக் குடிகளுக்கு சமரச சுகம், சமரசவாட்சி, சமரச சேர்க்கை ஏன் கொடுக்கலாகாது. அன்னிய தேசவாசிகளான செளத்தாபிரிக்கரிடம் இந்தியாவிலிருந்து குடியேறியுள்ள வர்களுக்குச் சமரச சுகங்கேட்கும் நீதிமான்கள் இந்தியாவிலுள்ள ஏழைக்குடிகளுக்கும் சமரச சுகத்தை அளிக்கவேண்டுமென்னும் முயற்சியை ஏனெடுக்கக்கூடாது? ” (தமிழன்: அக்டோபர் 27,1909)  இவை வெறும் நீதி உணர்ச்சி பற்றிய கேள்விகளல்ல; நவீன இந்திய அரசியலில் எமது இடம் என்ன?  நீங்கள் முன்வைக்கும் சுதேசியம், சுதந்திரம், சமஉரிமைகள், சுயாட்சி, அரசியல் அதிகாரம், சுயராச்சியம் என்பவை யாருக்கானவை?  ஐரோப்பிய ஆட்சியை நீக்கிவிட்டு யார் இம்மண்ணின் ஆட்சியைக் கைக்கொள்ளப் போகிறீர்கள்? உமது ஆட்சியல் நாங்கள் அடிமைகளா அல்லது சமஉரிமை கொண்ட பங்காளிகளா?  இந்த நாட்டின் அரசியலை எமது மக்கள் ஏன் முடிவு செய்யக்கூடாது? என்ற அடிப்படையான பல அரசியல் கேள்விகள் உள்ளடங்கியுள்ளன. இவற்றிற்குப் பதிலளிக்க இயலாத, முயலாத, விரும்பாத சக்திகள்தான் அன்றைய சுதேசிய- சுதந்திர- சுயராச்சிய அரசியலைத் தம் வசப்படுத்தியிருந்தனர். தேசபக்தி, தெய்வபக்தி இரண்டும் இணைந்த ஒரு  புனித அரசியல்தான் அன்று உருவாகியிருந்தது.  இவை இரண்டையும் ஒருசேர எதிர்க்கவும் இவற்றிற்கு மாறான புதிய விடுதலைக் கருத்தியலை முன்வைக்கவும் தேவையான அறத்துணிவும் பெரும் அறிவாற்றலும் அயோத்திதாசரிடம் இருந்தன.

இந்தியச் சமூகத்தில் பக்தி மரபு மிகப்பலம் வாய்ந்த அரசியல் சக்தியாக நீண்டகாலமாக இருந்து வருகிறது. இப்பக்தி மரபு தெய்வ பக்தி, ராஜபக்தி இரண்டையும் உள்ளடக்கியது. இறை என்பது தெய்வம், அரசன் என்ற இரண்டையும் குறிக்கும் சொல் மட்டுமல்ல கோட்பாடுமாகும்.  வைதிக, பார்ப்பனிய மேலாதிக்கம் தம்மை உறுதிப்படுத்திக்கொள்ள முடியாட்சியின் அளவற்ற அதிகாரத்தைப் புனிதப்படுத்த வேண்டிய தேவை இருந்தது. அரச அதிகாரத்தைப் புனிதமானதாக நிறுவப் புராணங்களின் வழி கட்டப்பட்ட பக்தியும் முக்தியும் வலிமையான  உத்திகளாக அமைந்தன. தெய்வபக்தியும் ராஜபக்தியும் இணையும்போது அவற்றின் கீழ் அடிமைப்பட்டவர்கள் தம் அடிமைத்தனம் மறந்து மோட்ச நிலையில் மூழ்கிய, தெய்விக அருள் பெற்றதான உளப்பாங்கு பெறுகின்றனர்.

சத்திரியர்களும் வைசியர்களும் தமக்கான அரசியல், பொருளாதார, சமூக அதிகாரங்களை உறுதிப்படுத்திக்கொள்ள பிராமணியத்தின்  பொய்ப் புனிதங்களைத் தமக்கானதாக ஏற்றுக்கொண்டதுடன்;  அவற்றைச் சூத்திரச் சாதிகளின் மீதும் அவர்களுக்கும் கீழாக வைக்கப்பட்ட பஞ்சமர்கள்  மீதும் சுமத்திவந்தனர். மனு தர்மசாஸ்திரம், கெளடில்ய அர்த்த சாஸ்திரம், வாத்ஸ்யாயன காமசாஸ்திரம் போன்றவை தர்ம, அர்த்த, காம நியதிகளின்படி மோட்சத்தை அடைவதற்கான வழிகளைக் கூறுவன எனத் தம்மை நிறுவிக்கொண்டாலும் அவை உண்மையில் தண்டனைகள் மற்றும் வெகுமதிகள் பற்றிய விதிகளையே விளக்குகின்றன. அந்த விதிகளிலும்கூட சூத்திர-பஞ்சம மக்களுக்கு என வகுக்கப்பட்ட  இன்பங்களும் துன்பங்களும் மிகவெளிப்படையான தண்டனைகளாகவே உள்ளன. அவர்களுக்கான வெகுமதிகள் இவ்வுலகில், இப்பிறப்பில் கிடைப்பன அல்ல என்பதைச் சாத்திரங்கள் எந்த மறைப்பும் இன்றி விரிவாகக் கூறுகின்றன.

“ஒருவருக்கு விதிக்கப்பட்ட கடமையைப் பின்பற்றி வாழ்ந்தால் சுவர்க்க கதியை அடைந்து முடிவற்ற இன்பம் பெறலாம். சாதிகள் தம் கடமைகளை மீறும்போது குழப்பங்கள் உருவாகி உலகம் நாசமாகும். அதனால் அரசனானவன் மக்கள் ஒருபோதும் தம் கடமைகளில் இருந்து நழுவாதபடி பார்த்துக் கொள்ளவேண்டும்.  ஆரியர் (பிராமணர்) வகுத்த சாதிக் கட்டுகளையும் சமய ஆச்சாரங்களையும் பின்பற்றித் தம் கடமைகளில் இருந்து ஒருபோதும் வழுவாமல் வாழ்பவர் இப்பிறவியில் மட்டுமின்றி இனிவரும் பிறவிகளிலும் இன்பம் அடைவர்.” என்று அடிமை நிலையை வரையறை செய்கிறது கெளடில்ய அர்த்த சாஸ்திரம். அடிமைப்பட்டவர்கள் தாம் எவ்வாறு முழுமையான அடிமை வாழ்வை வாழ்வது என்பதைத் தம்மை அடக்கி வைத்துள்ளவர்களிடமே கற்கவேண்டும் என்கிறது மனுஸ்மிருதி, “உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் பிராமணரிடம் தமக்கான (சாதி) ஒழுங்கு விதிகளைக் கற்றறிந்து கொள்ள வேண்டு்ம்.” இந்த ஒழுங்குவிதிகளை யார் உறுதி செய்வது, யார் காப்பாற்றுவது என்பதையும் மனுச்சட்டம் விளக்குகிறது, “வைசியர்களும் சூத்திரர்களும் தமக்கு விதிக்கப்பட்ட ஊழியக் கடமைகளைச் சரிவரச் செய்யும்படி அரசன்தான் கட்டுப்படுத்தி வரவேண்டும்; இந்த இரண்டு சாதிகளும் தம் கடமைகளில் இருந்து நழுவினால் இந்த லோகம் நாசமடையும்.”

ஒடுக்கபட்ட, அடக்கப்பட்ட மக்கள் தமது அடிமை வாழ்வை ஏற்க மறுத்து மனித விழுமியத்துடன் வாழவேண்டும் என உணரும் நிலையைத்தான் இந்தியச் சமய வரலாறு அழிவு, நாசம், குழப்பம் என்று தொடர்ந்து குறிப்பிட்டு வருகிறது. “ஒரு சூத்திரன் அவன் விலைகொடுத்து வாங்கப்பட்டவனாகவோ அல்லது வாங்கப்படாதவனாகவோ இருக்கலாம்  அவனை வசக்கி வேலைவாங்க வேண்டியது அவசியம், ஏனென்றால் ஒரு பிராமணனுக்கு அடிமையாக இருக்கவே சுயம்புதேவன் சூத்திரர்களைப் படைத்திருக்கிறான்.” என்று வலியுறுத்தும் மனுஸ்மிருதி அடிமைகள் ஒருக்காலும் விடுதலை அடைய முடியாது என்று உறுதிப்படச்  சொல்கிறது, “ஒரு சூத்திரனை அவனுடைய எஜமானன் விடுதலை செய்தால்கூட அவனை அடிமைத்தனத்திலிருந்து யாரும் விடுவிக்க முடியாது, ஏனென்றால் அது அவனது பிறவிவிதி,  யாரால் அவனை அதிலிருந்து விடுவிக்க முடியும்?”

இந்த விடுதலை அடையமுடியாத நிலையை ஒடுக்கப்பட்ட மக்கள் மீது அடக்குமுறை, வன்முறை, தண்டனை, சித்திரவதை வழியாகத் திணிப்பது ராஜநீதி என்றும் ஒழுக்கம், தர்மம், பக்தி என்பவற்றின் பெயரால் திணிப்பதும் உளவியல் வழியான வன்கொடுமையை அவர்கள் மீது நிகழ்த்துவதும் தெய்வநீதி என்றும் இந்திய மரபில் கொண்டாடப்படுகின்றன. சாதிய விதிகள் பற்றிய திட்டவட்டமான வரையறைகளை நிலைப்படுத்தல் சாதிகளுக்கிடையில் கலப்பு நிகழாத வண்ணம் தடுத்தல்  இவை இரண்டும் இந்திய அரசியல் வரலாற்றையும் சமய வரலாற்றையும் இணைக்கின்ற செயல்திட்டங்களாக இருந்து வருகின்றன.

இந்த இரண்டு உத்திகளும் இணையும் இடத்தை பகவத்கீதை தெளிவாகக் குறிப்பிடப்படுகிறது. “குலம் நாசமடையும்போது தொன்று தொட்டுவந்த குலதருமங்கள் நாசமடையும்; தருமம் அழிந்தால் குலம் முழுதும் அதருமம் பரவி நிற்கும். அதருமம் பரவுவதால் குலப்பெண்கள் கற்பை இழந்து கெட்டுப் போவார்கள்; பெண்கள் கெட்டால் ஜாதிக் கலப்பு (வர்ண ஸங்கரம்) ஏற்படும்.” இதுதான் பகவத்கீதையைத் தொடங்கிவைக்கும் அடிப்படையான கேள்வியும் அது  விளக்கமுனையும் மையச் சிக்கலும். இதற்கான பதிலை நேரடியாகச் சொல்லாமல் ஸாங்கிய யோகம், கர்ம யோகம், ஞான யோகம், ஸந்நியாஸ யோகம், தியான யோகம், விஜ்ஞான யோகம் எனப் பலவாறாக விரித்து மோக்ஷம் அடையும் வழி சொல்லப்படுகிறது, “பிராமணர்க்கும் க்ஷத்திரியர்களுக்கும் வைசியர்களுக்கும் சூத்திரர்களுக்கும் அவரவர் இயற்கைக்குரிய குணங்களால் கருமங்கள் வகுக்கப்பட்டுள்ளன.” இதனை மீறாமல் இருப்பதுடன் “குற்றமுடையதாயினும் உடன்பிறந்த கருமத்தை ஒருவன் கைவிடக்ககூடாது” என்று உறுதியாகச் சொல்கிறது பகவத்கீதை.

அடிமைப்பட்ட சூத்திரர்களுக்கும்  அடிமையாக வாழநேர்ந்த பஞ்சமர்களுக்கும் தவிர வேறு யாருக்கும் தமக்குரிய கருமம் (கடமை) குற்றமுடையதாக துயரமுடையதாக இருக்கப்போவதில்லை. இவர்களைத் தவிர அதிகாரமும் உரிமைகளும் வாழ்வின்பங்களும் கொண்ட பிற குல-வர்ண-சாதியினருக்குத்  தருமத்தை மீற வேண்டிய தேவையும் ஏற்படப்போவதில்லை. தம் அடிமைநிலைக்கெதிராக ஒடுக்கப்பட்ட மக்கள் எழுச்சியடையும் நிலையையே  ‘அதருமம் எழச்சியடையும் நிலை’ என்றும் ஆதிக்கச் சாதியினரின் அதிகாரமும் அடக்குமுறையும் குறையும் நிலையை  ‘தருமம் குறைபடும் நிலை‘ என்றும் இந்தியச் சனாதன ராஜநீதி பலநூற்றாண்டுகளாகப் போதித்து வருகிறது. “பாரதா! எப்பொழுதெல்லாம் தருமத்திற்குக் குறைவும் அதருமத்திற்கு எழுச்சியும் உண்டாகிறதோ அவ்வப்போது என்னைப் படைத்துக்கொள்கிறேன். ஸாதுக்களைக் காத்தற்கும் துஷ்டர்களை அழித்தற்கும் தருமத்தை நிலை நாட்டுற்கும் யுகம் தோறும் வந்து உதிப்பேன்!”  [யதா யதா ஹி தர்மஸ்ய க்ளானிர் ப்பவதி பாரத! அப்யுத்தானம் அதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யஹம்! பரித்ராணாய சாதூனாம் விநாசாய ச துஷ்க்ருதாம் தர்ம ஸம்ஸ்தாபநார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே! (பகவத்கீதை 4:7;  4:8) ]

பகவத் கீதை முன்வைக்கும் இந்த அரசியல்தான்  இந்திய மரபில் இரு பிரிவுகளாக வளர்ந்து தெய்வபக்தி- தேசபக்தி என்ற ஆதிக்க மரபுகளாக இன்றுவரை நிலைபெற்றுள்ளன. அடக்கியாளும் வன்முறையாளர்களை சாதுக்கள் என்றும்;  அடங்க மறுத்து வாழ்வுரிமை கேட்கும் மக்களை துஷ்டர்கள் என்றும் வரையறை செய்யும் இந்த மரபுக்கெதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாக அமைந்ததுதான் அயோத்திதாசரின் சுதேசிய-சுயராச்சிய மறுப்பு.  ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான எழுச்சியை அன்றைய ஆதிக்கசாதி அரசியல் அதர்மத்தின் எழுச்சியாவே கண்டது. அந்த அடையாள எழுச்சிக்குக் காரணமாக இருந்த  இங்கிலாந்தின் அரசியலை இந்தியப் புனிதங்களை அழிக்க வந்த தீய சக்தியாகக் கண்டது.   இந்தியப் புனிதங்களின் அடிப்படையென இந்து-சனாதன சக்திகள் நம்புவது சாதி ஒதுக்குதலும் படிநிலை அடக்குமுறையும்தான் என்பதைத் தெளிவாக அறிந்திருந்ததால்தான்  அயோத்திதாசர் அன்றைய சுதேசிய அரசியலை அறச்சீற்றத்துடன் எதிர்த்து வந்தார். இந்தியாவின் அரசியல் விடுதலைக்குமுன் மண்ணின் மக்களுக்கு சமஉரிமைகளும் சமூக நீதியும் உறுதிசெய்யப்பட வேண்டும் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்த அயோத்திதாசருக்கு எந்த தயக்கமும் இல்லை.

திருநெல்வேலி ஆட்சியராக இருந்த ராபர்ட் வில்லியம் டி ஆஷ்  1911-ஆம் ஆண்டு ஜூன் 17-ஆம் நாள் வாஞ்சிநாதன் என்றழைக்கப்பட்ட செங்கோட்டை சங்கர ஐயர் என்ற இளைஞரால் சுட்டுக் கொல்லப்பட்டார். வாஞ்சி அய்யரும் தன்னைச் சுட்டுக்கொண்டு மாய்ந்தார். இந்த நிகழ்வு தமிழக சுதந்திரப் போராட்ட வரலாற்றின் வீரநினைவாகப் பதிவாகியுள்ளது. இந்தியத் தேசியம், இந்தியச்  சுதந்திரப் போராட்டம் என்பனவற்றை ஒற்றைத்தன்மை கொண்டதாக உறுதிப்படுத்த முனையும் புனித அரசியல் சக்திகளுக்கு  இதுபோன்று இன்னும் பல கொலைகளும் தற்கொலைகளும் விடுதலை வேள்வியாகத் தோன்றக்கூடும்.  ஆனால் இந்தியாவின் நான்கில் ஒரு பங்கு மக்களாக வாழ்ந்து துயருற்ற  ஒடுக்கப்பட்டோரின் வரலாறு இதுவல்ல என்பதைத்தான் அயோத்திதாசர் தயக்கமின்றி எடுத்துரைத்தார். ஆதிக்கக்காரர்களின் வரலாறும் அடிமைப்படுத்தப்பட்டோர் வரலாறும் ஒரே மண்ணில் ஒரே காலத்தில் நிகழலாம் ஆனால் ஒன்றே போல் ஒரே அர்த்தத்தில் நிகழ்வதில்லை என்பதைத் தலைகீழாக்க அரசியல் வழியாகப் பண்டிதர் நிறுவிக்காட்டினார். “நமது திருனெல்வேலி கலைக்ட்டரவர்கள் சீர்மையின்று இந்தியாவில் வந்து தனது பிரிட்டிஷ் ஆட்சியின் கலைக்ட்டர் உத்தியோகத்தைக் கைக்கொண்டு இவ்விடமுள்ள பூமிகளின் விஷயங்களையும் அந்தந்த பூமிகளின் நீர்ப்பாய்ச்சல் விஷயங்களையும் அங்கங்கு வாழும் குடிகளின் விஷயம், சாதிசமய விஷயங்களையும் நன்காராய்ந்தும், நாளாகத் தனது அநுபோகத்திற் கண்டறிந்தவரும் தேசசீர்திருத்தங்களை செய்ய வல்லவருமாகவிருந்த ஓர் துரைமகனை ஓர் படுபாவியாகிய துஷ்டன் கொன்றுவிட்டானென்றவுடன் சகல விவேகமிகுந்த மேதாவிகளும் துக்கத்தில் ஆழ்ந்தினார்களென்பதற்கு ஆட்சேபமில்லை.”  (தமிழன்: சூன் 28,1911) அயோத்திதாசரின் அறம்சார் அரசியல் தேசசீர்திருத்தம் மற்றும் குடிகளின் சுகங்கள் இரண்டையும் மையப்படுத்தியே தன் துயரைப் பதிவு செய்கிறது.

திருநெல்வேலி ஆட்சியராக இருந்த ஆஷ் தீண்டாமைக்குட்பட்ட மக்களிடம் இரக்கம் கொண்டவர் என்றும்;  தீண்டாமைக்குட்ட பெண் ஒருவர் நிறைமாத கர்ப்பத்தில் துயருற்ற போது தன் வண்டியில் ஏற்றி பார்ப்பனச்சேரி வழியாக மருத்துவமனைக்குக் கொண்டுசென்ற நிகழ்ச்சியால் கடுங்கோபங்கொண்டு அக்கிரகாரத்தைத் தீட்டுப்படுத்திய ஆஷை கொன்றவன் வாஞ்சி அய்யர் என்ற பார்ப்பன இளைஞன் என்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் நினைவுப் பதிவுகள் உள்ளன. இதற்குச் சான்றுகள் இருக்கலாம் இல்லாமலும் போகலாம். ஆனால் ஆஷ் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்த ஒரு அலுவலர் என்ற பண்டிதரின் பதிவு தரவுகள் கொண்ட மக்கள் வரலாறாகவே இருக்கும்.

“அந்தக் கலைக்ட்டரின் குணாதிசயங்களை அறிந்த விவேகமிகுந்த மேன்மக்கள் யாவரும் அவரை மிக்க நல்லவரென்றும் நீதிமானென்றும் சகலசாதி மனுக்களையும் சமமாகப் பாவிப்பவரென்றும் கொண்டாடுகின்றனர்.” அப்படியிருக்க இப்பிராமணரென்று சொல்லிக் கொள்ளும் கூட்டத்தோருக்கு மட்டிலும் உண்டாய துவேஷமென்னை?” என்ற அடிப்படையான கேள்வியை முன்வைக்கிறார் பண்டிதர். இதில் ஆழ்ந்த ஆய்வுகள் செய்ய ஒன்றும் இல்லை;  நாமும்கூட பண்டிதரின் பார்வையைப்  புரிந்துகொண்டால், அண்ணல் அம்பேத்கரின் ஆய்வுகளை அறிந்து கொண்டால் “அவரைக் கொலைபுரிந்த காரணம் தங்கள் கூட்டத்தோர் சுகத்தைக் கருதிய ஏதுவாயிருக்குமேயன்றி வேறில்லை”  என்ற உள்மெய்யை ஏற்றுக் கொள்வோம்.

இந்த உண்மையை வாஞ்சிநாதன் தன் வாக்கால் பதிவு செய்திருப்பதைக் காணலாம், “ஆங்கில மிலேச்சர்கள் நமது பாரதத் திருநாட்டைப் பிடுங்கிக்கொண்டு, இந்நாட்டின் சனாதன தர்மத்தை அவர்களது கால்களால் மிதித்து அழித்து வருகின்றனர். ஒவ்வொரு இந்தியச் சகோதரனும் ஏகாதிபத்திய வெள்ளையனை நாட்டை விட்டுத் துரத்தி தர்மத்தையும், ஸ்வராஜ்யத்தையும் நிலைநாட்ட முயற்சி செய்து வருகிறான். ராமன், கிருஷ்ணன், சிவாஜி, குரு கோவிந்த சிங், அர்ஜுனன் முதலானோர் இருந்து தர்மம் தலைதூக்க அரசாட்சி செய்து வந்த நமது தேசத்தில், பசுவின் மாமிசத்தை தின்னக்கூடிய மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சமனை முடிசூட்ட உத்தேசம் செய்து கொண்டு பெரும் முயற்சியை எடுத்து வருகிறார்கள்.  3000 சென்னை ராஜதானியர்கள் அம்மிலேச்சர்களைக் கொல்லும்பொருட்டு தயாராகிக் கொண்டிருக்கிறோம். இச்சகோதரர்களது எண்ணத்தைத் தெரிவிக்கும் வகையில் அவர்களின் கடையனாகிய நான் இன்று இந்தச் செயலைச் செய்தேன். இதுதான் இந்துஸ்தானத்திலிருக்கும் ஒவ்வொருவனும் செய்யவேண்டிய கடமையாகும். இப்படிக்கு R.வாஞ்சி அய்யர் (17-06-1911)”

இந்தக் கடிதம் பின்னாட்களில் வெளிப்பட்ட ஒன்று; கொலை செய்தவர் பெயரும் அப்போது அறியப்படாமல் இருந்தது. இச்சான்றுகள் இன்றியே இக்கொலை சனாதன தர்மத்தைக் காக்க நிகழ்தப்பட்டதுதான் என்பதைப் புலப்படுத்த அயோத்திதாசருக்கு எவ்வாறு இயன்றது? அவர் ஆதிக்கத்தின் அடிமை அல்லர்;  அவரது பார்வை விடுதலை அறம் சார்ந்தது. காலனிய ஆட்சியின் அடக்குமுறை, ஆதிக்கம் என்பன பற்றி யாரைவிடவும் அயோத்திதாசருக்கு புரியும், அதே சமயம் இந்த மண்ணைச் சேர்ந்த பிற சாதிகளால் மனித விழுமியங்கள் மறுக்கப்பட்டு வாழ்ந்த தம் மக்களின் வரலாற்றுத் துயரும் தெரியும். தம் மக்களின் சார்பாகப் பேச முனைந்த ஒருவருக்கு ‘பகவத்கீதையின் தர்மப்படி’ என்ன நடக்கும் என்பதையும் அவரால் கூற இயலும். அதனால்தான் ஆதிக்கச் சாதியினர் வரலாறு எனச்சொல்லிவைத்த கதைகளை அவரால் தலைகீழாக்கம் செய்ய முடிந்தது, ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாற்றை மறுஉருவாக்கம் செய்யவும் முடிந்தது.

நவீன இந்திய வரலாற்றில் ஒடுக்கப்பட்ட அடிமைப்பட்ட மக்களை செயலற்றவர்களாக்கி வைக்கும் தேசபக்தி, தெய்வபக்தி இரண்டுக்கும் எதிரான புரட்சியை அயோத்திதாச பண்டிதர், அண்ணல் அம்பேத்கர் இருவருமே உறுதியாக முன்னெடுத்ததற்கான காரணங்களைப் புரிந்துகொணடால் இந்தியச் சமூகங்களுக்கான விடுதலை அரசியலையும் நாம் புரிந்துகொள்ள முடியும்.                                                            (தொடரும்…)

[நமது தமிழ்மண் : சூன்,2015]

அயோத்திதாசரின் அறப்புரட்சி:1 -பிரேம்

அயோத்திதாசரின் அறப்புரட்சி

(வரலாற்றிலிருந்து விடுவித்தவர் வரலாற்றையும் விடுவித்தவர்)  

பிரேம்

தமிழக வரலாற்றில் புரட்சியை ஏற்றுக்கொண்ட சிந்தனையாளர்கள்,  புரட்சிக்கான  சிந்தனையாளர், புரட்சியைப் பரப்பிய சிந்தனையாளர்கள் சிலர் உள்ளனர்.  ஆனால் ஒரு சிந்தனையாளர் மட்டுமே தன் சிந்தனையால், தன் செயல் திட்டத்தால் புரட்சியை நிகழ்த்தியிருக்கிறார். அவர் புரட்சி உருவாகுமெனக் காத்திருக்கவில்லை, புரட்சிக்குப்பின் விடுதலை வரும் என்று பார்த்திருக்கவுமில்லை. அவருடைய தொடக்கமே புரட்சியாக அமைந்தது, அவரது ஒவ்வொரு சொல்லும், வாக்கியமும், கருத்தும், அறிவுருவாக்க முறையும் ஆய்வுமுறையும் புரட்சியாக இருந்தது. தன் காலத்திய சிந்தனைகள் அனைத்தையும் கடந்து, தம் காலத்திய ஆதிக்க, அதிகார, மரபுகள் அனைத்தையும் எதிர்த்துச் செயல்பட்டவர் அவர். தான் வாழ்ந்த காலத்தில் வலிமை பெற்றிருந்த வரலாற்றுப் புனைவுகளில் இருந்து முற்றிலும் விடுதலை பெற்றவராக இருந்தார், அவற்றை ஆதாரமற்ற கட்டுக்கதைகள் என்று ஐயத்திற்கிடமின்றி எடுத்துரைத்தார், அவற்றை உருவாக்கிப் பரப்பி வருபவர்களை ‘சுயப்பிரயோசன சோம்பேரிகள்’ என்று தயங்காமல் தாக்குதல் தொடுத்தார்.

அவரது மொழி, சிந்தனைமுறை, வரலாற்றுப் புரிதல், இலக்கியம் பற்றி பார்வை, அறக்கருத்துகள், அரசியல் திட்டங்கள், வாழ்வியல் நெறிகள் அனைத்தும் புதிதாக இருந்தன. அவரது சிந்தனையில் இருந்த வலிமையும், அவற்றை எடுத்துரைப்பதில் அவருக்கிருந்த பொறுமையும் புதிய சிந்தனைப் பள்ளிகளை உருவாக்க முனையும் பேரறிஞர்கள் பலருக்கு வாய்க்காத பெருங்குணம்.  தான் கொண்டிருந்த கருத்தியல் மீது அவருக்கிருந்த பெருமிதமும், தனது அறத்தின் மீது அவர் வைத்திருந்த பெரும் பற்றும் தம் காலத்தில் வலிமை பெற்றிருந்த, ஆதிக்கம் செலுத்திவந்த, பெரும்பான்மையினரின் கருத்தியல்கள் அனைத்தையும் புறந்தள்ளி, பொய்யெனத் தூரவிலக்கி செயல்படுவதற்குரிய ஆற்றலையும் துணிச்சலையும் அவருக்கு அளித்திருந்தன. அந்தத் துணிவும் ஆற்றலும் நம் அயோத்திதாசரை அவர் காலத்திய சிந்தனைகள் பலவற்றைக் கடந்து, வரலாற்றின் கீழ் நசுங்கிய  ஒரு சமூகத்தின் மனிதர் என்ற நிலையிலிருந்து வரலாற்றைத் திருத்தியெழுதும் ஒரு பேரறிஞராக  உருவாக்கியிருந்தன.

அன்றைய அரசியல், சமூகவியல், வரலாறு, சமய நம்பிக்கைகள் அனைத்திலிருந்தும் மாறுபட்டுச் சிந்திக்கவும் அதனைச் செயல்படுத்தவும் அவரால் முடிந்தது.  அவர் தம் மக்களின் மீதும், விடுதலை மீதும் கொண்டிருந்த பற்றும் வித்தை, புத்தி, ஈகை, சன்மார்க்கம், கருணை, ஒற்றுமெய் என்ற சுத்த சீலங்கள் மீது கொண்டிருந்த நம்பிக்கையுமே அதற்குக் காரணமாக அமைந்தன. அந்த நம்பிக்கையின் வலிமையோடு  சாதிபேதமற்ற திராவிடர்களை ஒன்றிணைத்து அவர்களை விடுதலையை நோக்கி, நீண்ட சாந்தமும் நீடிய சமாதானமும் கொண்ட உண்மையான சுதேசியத்தை நோக்கி அழைத்துச் செல்வதைத் தம் வாழ்வாகக் கொண்டார்.

அந்த வாழ்வு நெடிய ஒரு போராட்டமாக அமைந்திருந்தது. ஏனெனில் அரசியல் வலிமைகொண்ட, சமய அதிகாரம் கொண்ட, வரலாற்று ஆதிக்கம் பெற்றிருந்த  பிராமண-வைதிக மரபை மட்டுமின்றி அவர்களுடன் இணைந்து சாதிவேற்றுமையை, தீண்டாமையைக் கடைபிடிக்கும் சாதி இந்துக்கள் அனைவருக்கும் எதிரான ஒரு அறிவுப்புரட்சியை, அறப்புரட்சியை அறிஞர் அயோத்திதாசர் தொடங்கியிருந்தார்.

தேசவிடுதலைஎன்று பொத்தம் பொதுவான கூக்குரலுடன் இந்தியாவின் சமூக, சமய வன்முறைகளைக் கவனத்தில் கொள்ளாமல் சாதிவேற்றுமை, தீண்டாமைக் கொடுமை, பெண்ணொடுக்குமுறை பற்றிய குற்றவுணர்வோ வெட்கமோ இல்லாத, மூடநம்பிக்கைவெறி கொண்ட பிற்போக்காளர்கள் தங்களுக்குத் தேசபக்தர்கள் என்று பெயர்ச்சூட்டிக் கொண்டு அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான போராட்டத்தில் ஈடுபட்டு வந்த காலத்தில் அயோத்திதாசர் “சாதிபேதங்  கொண்ட பொறாமெய் உள்ளோரிடம் சீவகருண்ய சிந்தையே கிடையாது என்பதை அநுபவத்தில் காணலாம்.” என்று அறிவித்து ஒரு கருத்துப் புரட்சியை தொடங்கியிருந்தார். அதனால்தான் அவரை அன்று விதவாப் பிரசங்க வேதாந்திகள், சில்லரைப் பிரசங்க சித்தாந்திகள், பாட்டுப் பிரசங்க பாரதியார்கள் என அனைத்துத் தரப்பினரும் எதிர்த்தனர். சாதிகர்வம் (சாதித்திமிர்), மதகர்வம் (சமயத்திமிர்), வித்தியாகர்வம் (கல்வித் திமிர்), தனகர்வம் (பணத்திமிர்) கொண்ட கூட்டத்தினர் பொதுச்சீர்த்திருத்தம்செய்யப்போவதாக புறப்பட்டு அயோத்திதாசரை அவமதித்து வந்தனர். அவற்றைக் கண்டு சற்றும் கலங்காத பேரறிஞர் தாம் “எழுதிவரும் சுதேச சீர்திருத்தத்தை சிலர் சுதேச சீர்திருத்தமாகக் கொள்ளாது சுதேச மறுப்பென்றெண்ணி மயங்குவதாக” விளக்கித் தன் உண்மையான அரசியல் நோக்கத்தைத் தெளிவுபடுத்தினார்: “நாம் சுதேசிகளைத் தாழ்த்தி பரதேசிகளை உயர்த்துவதற்கும், பரதேசிகளைத் தாழ்த்தி சுதேசிகளை உயர்த்துவதற்கும் பத்திரிகை வெளியிட்டோமில்லை. சுதேசிகளை சொந்தமாகவும் பரதேசிகளை பந்தவாகவும் எண்ணி பலர்ப் பிரயோசனங் கருதி (அனைவருக்குமான நன்மை அல்லது பொதுநீதி) வெளியிட்டிருக்கிறோம்.” (தமிழன் 2-10-1907) இந்தப் பொதுநீதிக்கான, சமத்துவ விடுதலைக்கான போராட்டமே அயோத்திதாசரை மற்ற சிந்தனையாளர்களிடம் இருந்து வேறுபட்டவராக ஆக்கியது, அவரது ஒவ்வொரு சொல்லையும் அறப்புரட்சியின் வெளிப்பாடாக மாற்றியது.

இந்திய வரலாறு என ஒற்றைத்தன்மையில் ஏதும் இல்லை யென்றபோதும் இந்தியாவின் பல வரலாறுகளுக்கிடையில் சில பொதுத்தன்மைகள் உள்ளன. அந்தப் பொதுத்தன்மைகளில் சாதி வேற்றுமை, தீண்டாமை வழக்கம் என்ற தீமைகள் முக்கிய இடம் பெறுகின்றன. இந்தியச் சமூக உளவியலில் ஆதிக்க சாதிக்குணம், இடைநிலை சாதிக்குணம் இரண்டும் தமக்குக்கீழ் உள்ள மக்கள் என்ற கற்பிதத்தை இறுகப் பற்றியுள்ளன. அதாவது சிலரைத் தீண்டாத நிலையில் வைத்திருப்பதில் பெருமை கொள்ளும் வன்முறை குணத்தை தமது உரிமை என நம்புகின்றன. இது ஒருவகையில் தனக்குக் கீழ் சில அடிமைகள் உள்ளனர் என்ற கற்பித உணர்வை அளித்து  அதிகாரத் திமிரை அளிக்கிறது. அத்துடன் தனக்குக் கீழ் அடக்கி வைக்கப்பட்டுள்ள மக்களின் கடின உழைப்பை ஊதியமளிக்காமல் சுரண்டிக் கொள்ளும் உரிமையை அவர்களுக்கு அளிக்கிறது.  அம்மக்களின் உடல், உள்ளம், மொழி அனைத்தின் மீதும் தன் அதிகாரத்தை அடக்குமுறையை செலுத்தும் உரிமை தனக்கு உள்ளதாகசாதிக்குணம்நம்புகிறது. இதனை நியாயப்படுத்துவதற்கு உகந்த அரசு, மதம், புராணம், வரலாறு, ஒழுக்கவிதிகள் என்பனவற்றை உருவாக்கிப் பாதுகாத்து வருகிறது.

இந்த அடக்குமுறைக்குள் சிக்கிய மக்களின் உளவியல் முற்றிலும் வேறுபட்டது. தம் வாழ்வுக்கென தனித்த பொருளின்றி தன்னை அடக்கியும் ஒடுக்கியும் வைத்துள்ள சாதிகளின் நலனுக்கு பொருந்தக்கூடிய, அவர்களின் ஒடுக்குமுறை விதிகளுக்குக் கட்டுப்பட்ட வாழ்வை வாழ்ந்து முடிப்பதற்கான நிர்ப்பந்திக்கப்பட்ட உளவியல் அது. தனக்கென உரிமையுள்ள வாழிடமின்றி, வாழ்வாதாரங்களில் பங்கின்றி, அரசியலில் தனக்கான இடமின்றி மற்ற சாதிகளுக்கென உழைத்து, வாழ்ந்துமுடியும் வெறுமை கொண்ட உளவியல் அது.  தம்மை ஒடுக்கும் மதத்தை ஏற்று, தம்மை இழிபடுத்தும் புராணங்களை நம்பி, தம்மை ஒடுக்கிய வரலாற்றிற்குள் அடைபட்டு நிற்கும் கொடிய நிலைதான் அது. இந்த வன்கொடுமை வாழ்வுக்கெதிராகக் கிளர்ந்தெழுந்து, அடக்குமுறைக்கெதிராகப் போராடி வெளியேற அம்மக்கள் தம்மை ஒடுக்கும் கற்பிதங்களை உடைத்து நொறுக்குவது முன் தொடக்கம். உடைத்து நொறுக்குவதுடன் தமக்கான புதிய வாழ்வியலை, வரலாற்றை, அரசியலை, சமூக நெறிகளை உருவாக்கிக் கொள்ள வேண்டியது அதன் தொடர்ச்சி.   இந்த உடைத்து நொறுக்கும் உளவியலும், உருவாக்கும் உளவியலும் இணைந்ததுதான் விடுதலைக்கான உளவியல். அவ்வகையில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான விடுதலை உளவியலை முற்றிலும் புதிய முறையில், நவீன வாழ்வியலுடன் இணைத்து உருவாக்கியவர்தான் அயோத்திதாசர். அவ்வகையில் மற்ற பல இந்திய விடுதலை இயக்கங்களில், புதிய வாழ்வுக்கான போராட்டங்களில் இல்லாத ஒரு தனித்தன்மையை அயோத்திதாசரிடம் நாம் காண்கிறோம்.

ஒடுக்கப்பட்ட மக்கள் ஆதிக்கச் சாதி மற்றும் ஆதிக்க இன வரலாறுகளை ஏற்று, தமது வாழ்வு கீழ்மை கொண்டதாக உள்ளதென ஒப்புக்கொண்டு அதிலிருந்து விடுதலை பெறப் போராடுதல் என்பது ஒரு வகை. இதில் ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்ட உளவியல் நியாயம் கேட்டு நிற்கும் நிலையில் வைக்கப்படுகிறது. இதில் உள்ள தன்னடையாளம் பற்றிய குற்றவுணர்வும் குறைவுணர்வும் புரட்சிக்கான ஆற்றலைத் தடைசெய்கிறது. தம் வரலாறு பற்றிய  தன்னிரக்கமும், பலியாக்கப்பட்டதன் வலியும், துயருற்ற மனமும் அவர்களின் போராட்ட வலிமையை, அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான வேட்கையைக் குறைக்கின்றன. தம் மீதுள்ள கொடுமைகள் ஓரளவு குறைந்து துயரம் நீங்கிய ஒரு வாழ்க்கை அமைந்தாலே போதுமானது என ஏற்றுக் கொள்ளும் ஒருவித அரசியல் கசப்பு அவர்களுக்குள் நிரம்பிவிடுகிறது. அந்நிலையில்  அவர்களிடம் அடக்குமுறையாளர்களிடமே நீதி கேட்டு நிற்கும் “அரசியல் கீழ்நிலையாக்கம்“ உருவாகிறது. அரசியல் அதிகாரமின்றி, சில சமூக உரிமைகளைப் பெற, மனித உரிமைக்களைக் கோர இந்த அரசியல் பயன்படலாம். ஆனால் முழுமையான விடுதலைக்கு இவ்வகையான நீதி கேட்கும் அரசியல் பயன்பாடாது.

அதிலும் சமத்துவம், சமநீதி, விடுதலை என்பனவற்றை ஏற்காத இந்தியச் சாதியச் சமூகத்தில் நீதி கேட்கும் அரசியல் முற்றிலும் பயனற்றதாகவே இருக்கும். ஒடுக்கப்பட்ட மக்களுக்கான விடுதலையில் “மேல்நிலை பெற்ற அரசியல்” போராட்டங்களே  அதாவது தம் உரிமைகளைத் தாங்களே எடுத்துக் கொள்ளும், தம்மை ஒடுக்குபவர்களின் அரசியல் அடிப்படையைத் தகர்த்தெரியும் போராட்டங்களே மாறுதல்களைக் கொண்டுவர முடியும். இந்த மேல்நிலை பெற்ற அரசியல் போராட்டத்தை இந்தியாவின் தீண்டாமைக்குட்பட்ட மக்கள் கையில் எடுக்க உகந்த காலமாக பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியும் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியும் அமைந்திருந்தன. இதற்கான தலைமையும், கருத்தியல் வழிகாட்டிகளும் உருவாக சர்வதேச அரசியலும், நவீன அரசியல் சிந்தனைகளும் பின்புலமாக இருந்தன. ஆனால் பிரிட்டானிய பேரரசின் அரசியல் நீதிமன்றம், குடிமை நிர்வாகம், சட்டம், கல்வி, பொதுப்பணிகள், இயந்திர உற்பத்தி என்பன போன்ற நவீன சமூக நிறுவனங்களை அறிமுகப்படுத்தியதன் வழி ஒடுக்கப்பட்டோரின் சமூக அரசியல் நிலைகளில் சில மாற்றங்களை உருவாக்கியது. பல நூற்றாண்டுகளாக மறுக்கப்பட்ட மனித உரிமைகளும், குடிமை உரிமைகளும் ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் கொள்கையளவில் உறுதி செய்யப்பட்டன.

இதனை “இத்தகைய கொரூரகாலத்தில் பூர்வ புண்ணிய வசத்தால் பிரிட்டிஷ் துரைத்தனம் வந்து தோன்றி சத்துருக்களின் கொரூரம் ஒடுங்கி இக்குலத்தோர் கிஞ்சித்து சீர்பெறவும் தங்கள் தங்கள் கையிருப்பின் சாஸ்திரங்கள் வெளிவரவும்” உகந்த நிலை என அயோத்திதாசர் அடையாளப்படுத்தினார்.  இந்தியச் சமூக வரலாற்றில் இதற்குமுன் இருந்தவந்த நிலையை “வேஷபிராமணர்களால் இக்குலத்தோர் நிலைகுலைந்து பலவகை துன்பங்களை அநுபவித்து” வந்த நிலை என விளக்கினார். அந்த நிலை தொடர்ந்திருக்கும் எனில் என்ன நிகழ்ந்திருக்கும் என்பதையும் அவர் தெளிவுபடுத்தியிருக்கிறார், “அத்தகையக் கொரூரத் துன்பங்களை வேஷபிராமணர்கள் இதுவரையில் செய்துக் கொண்டும், பறையர்களெனும் பூர்வ பௌத்தர்கள் அவற்றை இதுவரையில் அநுபவித்தும் வந்திருப்பார்களாயின் இவர்கள் தேகங்கிடந்த இடங்களில் எலும்பும் காணாமற்போயிருக்கும் என்பது சத்தியமாம்.” வரலாற்றில் தனது மக்கள் மீது இழைக்கப்பட்ட பெருங்கொடுமைகள் குறைந்த நிலையை “இக்குலத்தோர் கிஞ்சித்து சீர் பெற்ற” நிலை என வரையறை செய்தார்.  இந்தக் குறைந்த பட்ச அரசியல் உரிமையைச் சமூக உரிமைகளாக, வரலாற்று மெய்மையாக மாற்றவும் தம் மக்கள் முழுமையான விடுதலையை நோக்கிச் செல்வதற்குமான வழிமுறையைக் கண்டறிந்து கூறியவர்தான் அயோத்திதாசர்.

முதலில் அவர் தான் அடிமையில்லை, தன் மக்கள் கீழானவர்கள் இல்லை என  உறுதியுடன் அறிவித்துக் கொண்டார். “நமது தேசத்தின் தற்கால பழக்கம் பிச்சை ஏற்பவன் பெரிய சாதி, பூமியை உழுபவன் சின்னசாதி, உழைப்புள்ளவர்கள் சிறிய சாதி சோம்பேறிகள் பெரிய சாதிகள் என்று சொல்லித்திரிவது…” என்று இந்தியச் சமூக அநீதியின் அடிப்படையைத் தகர்த்து விட்டு தனக்கான புதிய அடிப்படையை உருவாக்குகிறார்.

“நாளது வரையில் தமிழ் பாஷைக்கு மூலாதாரமாக விளங்கும் கருவிகளாகிய ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன். மூதுரை, குறள், நீதி வெண்பா, விவேகசிந்தாமணி, மற்றுமுள்ள கலை நூற்கள் யாவும் பறையர்களென்று தாழ்த்தப்பட்டுள்ள பூர்வபௌத்தர்களே இயற்றியுள்ளரென்பது அநுபவக்காட்சியேயாம்.

இத்தகைய வித்தையிலும், புத்தியிலும், ஈகையிலும், சன்மார்க்கத்திலும் கீர்த்தி மிகுந்திருந்த பௌத்தர்களை பறையர்கள், பறையர்களென்றும், தாழ்ந்த சாதியோர் தாழ்ந்த சாதியோரென்றும் சீர் கெடுத்த காலத்தையும் மிலேச்சர்களாகிய ஆரியர்கய் பிராமணர், பிராமணரென்று வேஷமிட்டுக் கொண்டு உயர்ந்த சாதியோர் உயர்ந்த சாதியோரென்று சீர் பெற்ற காலத்தையும் ஆராய்வோமாக.”  எனத் தமிழக, இந்திய வரலாற்றில் ஆதிக்க சாதிகளின் பொய்யுரிமைகளை, போலித்தகுதிகளை இல்லாமலாக்கி, பார்ப்பன, வைதிக  வரலாற்றுப் பொய்மைகளைத் தகர்த்துஇந்தியப் பூர்வகுடிகளின்’ வரலாற்றை மறுஉருவாக்கம் செய்கிறார். இவ்வாறாக ஒடுக்கும் வரலாற்றைத் தகர்ப்பதற்கும் ஒடுக்கப்பட்டோரின் வரலாற்றை உருவாக்குவதற்கும் அயோத்திதாசர் கையாண்ட பெருங்கருவிதான்  பௌத்த தன்மம்.

தம் மக்களின் விடுதலைக்கு பௌத்த தம்மமே வழிகாட்டி என்பதை அறிவித்த அயோத்திதாசர் அதனை ஒரு பழமையான நம்பிக்கையாகவோ ஒரு வழிபாட்டு முறையாகவோ நமக்கு வழங்கிச் செல்லவில்லை.  “பௌத்ததன்மம் உன்பூட்டன் எழுதி வைத்திருப்பினும் உன் பாட்டன் எழுதி வைத்திருப்பினும் அவற்றை யுன் விசாரனையிலும் அனுபவத்திலும் உசாவிப்பார். அவை மெய்யாயதென்று தெளிந்து உமக்கும் உமது சந்ததியோருக்கும் உன் கிராமவாசிகளுக்கும் உன் தேசத்தாருக்கும் சுகமளிக்கக்கூடியதாயின் அவற்றை நம்பு. உன் விசாரணைக்கும் உன் அநுபவத்திற்கும் பயனற்றதாயின் விட்டுவிடுமென்று கூறுவதாகும். அது கண்டே அவற்றிற்கு புத்ததன்மமென்றும் மெய்யறமென்றும் வகுத்துள்ளார்கள். மற்றைய மதத்தோர் அவர்களுக்குள் எழுதி வைத்திருப்பதையும் சொல்வதையும் நம்பி நடப்பதே இயல்பும், மதப்பிடிவாதமே செயலுமாக நிற்பர். (தமிழன், 12-11-1913)

இந்த வரலாற்று மறு உருவாக்கம் விடுதலைக் கருத்தியலின் ஆற்றல் வாய்ந்த அடிப்படையாக  அவரிடம் அமைந்திருந்தது. இந்திய வரலாற்றை மாற்ற இந்தியாவின் தொன்மைகளில் ஒன்றான பௌத்தத்தையே மீளுருவாக்கம் செய்த அயோத்திதாசரின் பெருங்கண்டுபிடிப்பை அண்ணல் அம்பேத்கர் முழுமையாக ஆய்வு செய்து பின்னாளில் உறுதிப்படுத்த முடிந்ததென்றால் அதற்குக் காரணம் அயோத்திதாசர் நிகழ்த்தியது ஒரு அறப்புரட்சி.

இந்தப் புரட்சி ஒடுக்கப்பட்ட மக்களின் உளவியலை மாற்றி தன்னுரிமை கொண்ட, தன்மதிப்பு கொண்ட போராளிகளாக மாற்றக்கூடிய ஆற்றலுடையது. ஒடுக்கப்பட்ட மக்கள் தம் மீது சுமத்தப்பட்ட அடையாளத்தை உதறியெறிந்துவிட்டு புதிய அடையாளத்தை பெறுவதன் வழியாக நிகழும் விடுதலையே முதல் கட்ட விடுதலை, இந்த அடையாளத்தை தன் அறிவின் வழி உருவாக்கியவர்தான் பேரறிஞர் அயோத்திதாச கவிராஜ பண்டிதர்.

அவர் ஒரு நூற்றாண்டுக்கு முன் கூறிச் சென்ற புரட்சிகரமான கருத்துக்களை, வரலாற்றுக் கண்டுபிடிப்புகளை இன்றுதான் உலக அறிஞர்கள் மெல்ல மெல்ல ஆய்ந்தும் ஆவணங்கள் தேடியும் நிருபித்து வருகின்றர். அவரது கருத்துக்கள் ஒடுக்கப்பட்ட மக்களை விடுவிப்பதற்கான செயல்திட்டங்கள் மட்டுமில்லை, இன்றைய பிராமண மைய, இந்துத்துவ திரிபுவாத அரசியலுக்கு எதிரான வலிமையான போராட்ட முறையாகவும் அமைந்துள்ளவை. இவற்றைப் பற்றித் தொடர்ந்து நாம் உரையாட இருக்கிறோம்.

அயோத்திதாசர் தொடங்கி வைத்த புரட்சியின் பெருமதியைப்  புரிந்து கொள்ள கருப்பின மக்களின் விடுதலைப் போராளியும்  இன்றைய பின்காலனியச் சிந்தனைகளின் முன்னோடியுமான பிரான்ஸ் பானோன் (1925-1961) அடிமைப் படுத்தப்பட்டோரின் உளவியலில் நிகழவேண்டிய மாற்றம் பற்றிக்கருப்புத் தோலும் வெள்ளை முகமூடிகளும் (1952) என்ற நூலில் கூறும் ஒரு கருத்தை இங்கு நினைவு கொள்ளலாம்:

“உலகின் ஒவ்வொரு பகுதியிலும் தேடுதல் கொண்ட மனிதர்கள் இருக்கிறார்கள். நான் வரலாற்றில் அடைபட்ட கைதி அல்லன். வரலாற்றின் சிறைச்சாலையில் நான் எனது வாழ்வின் விதி பற்றிய அர்த்தத்தைத் தேடக்கூடாது. எனது வாழ்க்கையில் புதியவற்றைக் கண்டறிந்து அறிமுகப்படுத்திக் கொள்வதில்தான் உண்மையான எனது முன்னோக்கிய பாய்ச்சல் இருக்கிறது என்பதை எனக்கு நானே ஓயாமல் நினைவூட்டிக் கொண்டே இருக்க வேண்டும். நான் கடந்து செல்லும் நிலப்பகுதிகளினூடாக முடிவற்று என்னை நானே புதிது புதிதாக உருவாக்கிக் கொள்கிறேன். நான் என் வாழ்வின் ஒரு பகுதியாக இருக்கிறேன் அதனைக் கடந்தும் செல்கிறேன். என் முன்னோர்களை மனித விழுமியமற்றவர்களாக ஆக்கிவைத்திருந்த அடிமைச் சமூகத்தின் அடிமையல்லன் நான்.”

                                                (அயோத்திதாசரின் அறப்புரட்சி தொடரும்)

நமது தமிழ்மண் ப-8 நமது தமிழ்மண் ப-9 நமது தமிழ்மண் ப-10 நமது தமிழ்மண் ப-11

 

 

அம்பேத்கர் கண்டெடுத்த நவீன இந்தியா -பிரேம்

அம்பேத்கர் கண்டெடுத்த நவீன இந்தியா

-பிரேம்

“இந்தியாவில் சமூகச் சீர்த்திருத்தத்திற்கான பாதை விண்ணுலகத்தை அடைவதற்கான பாதை போன்று பல இடர்பாடுகளால் நிரம்பியுள்ளது. இந்தியச் சமூகச் சீர்திருத்தம் குறைவான ஆதரவாளர்களையும் அதிகமான மறுப்பாளர்களையும் பெற்றுள்ளது. மறுப்பாளர்கள் இரண்டு பிரிவுகளாக உள்ளனர், ஒரு பிரிவினர் அரசியல்  சீர்திருத்தம் பேசுபவர்கள் மற்ற பிரிவினர் பொதுஉடைமைக் கொள்கை கொண்டவர்கள்.”

“அய்ரோப்பியச் சமூகங்களின் அரசியல் விடுதலைக்கு லூதர் தொடங்கிய சமயச் சீர்த்திருத்தம் முன்னோடியாக அமைந்தது. இங்கிலாந்தின் தூய கிறித்துவ இயக்கம் அரசியல் விடுதலைக்கு முன்னோடியாக அமைந்தது, அது புதிய உலகத்தைக் கண்டறிந்தது. அது அமெரிக்கச் சுதந்திரப்போரை வெற்றியடையச் செய்து ஒரு சமய இயக்கமாக உருவானது. இஸ்லாமிய அரசுகளின் உருவாக்கத்திலும் இதுவே நிகழ்ந்தது. அராபியர்கள் ஒரு அரசியல் சக்தியாக உருவாகும் முன்பு முகம்மது நபியால் தொடங்கப்பட்ட முழுமையான ஒரு சமயப்புரட்சி அங்கு நடந்தது. இந்திய வரலாற்றிலும் கூட இதற்குச் சான்று உள்ளது.  புத்தரின் சமூக, சமயப் புரட்சிக்குப் பிறகுதான் சந்திரகுப்தன் தொடங்கிய அரசியல் புரட்சி நிகழ்ந்தது. மகாராஷ்டிரத்தின் சமயப் பணியாளர்கள் முன்னெடுத்த சமூக-சமயச் சீர்த்திருத்தம்தான் ஷிவாஜி தலைமையிலான அரசியல் புரட்சிக்கு முன்னோடியாக  அமைந்தது. சீக்கியர்களின் அரசியல் புரட்சிக்கு குரு நானக் தொடங்கிய சமய, சமூகப் புரட்சியே அடிப்படையாக அமைந்தது. இதற்கு மேலும் உதாரணம் தேவையில்லை. மக்களின்  அரசியல் விடுதலை அவர்களின் அறிவிலும் ஆன்மாவிலும் நிகழும் விடுதலையில்தான் தொடங்குகிறது என்பதற்கு இவையே போதுமான சான்றுகளாக உள்ளன.”  (சாதியழிப்பு  நூலில் அண்ணல் அம்பேத்கர்)

கடந்தகால உலகின் அடிப்படைகளை விளக்கி அவற்றை மாற்றுவதற்கான வழிமுறைகளையும் கோட்பாடுகளையும் உருவாக்கித் தந்த சிந்தனையாளர்களை நாம் நவீனச் சிந்தனையாளர்கள் என்று கொண்டாடுகிறோம். அவர்களைத் தொடர்ந்து கற்று அவர்களின் சிந்தனைகள் மற்றும் செயல்திட்டங்களை நடைமுறைப் படுத்துவதையே நம் காலத்திற்கான அரசியலாக ஏற்றுக் கொள்கிறோம். அவர்கள் கண்டறிந்து விளக்கிய அறங்களை ஏற்று நம் வாழ்வியலாக அவற்றை மாற்றிக் கொள்கிறோம். அதற்குத் தடைகள் வரும்பொழுது அவற்றை நீக்கப் போராடுகிறோம். நம்மை அறிந்து கொள்ளவும் உலகையும் வாழ்வையும் புரிந்து கொள்ளவும் அச்சிந்தனையாளர்களே ஆசான்களாக, அறிவூட்டும் வழிகாட்டிகளாக அமைந்து வரலாற்று உருவங்களாக மாறுகின்றனர்.  நம் காலத்தின் வாழ்வை, சமூகத்தை, அரசியலை, பண்பாடு மற்றும் கருத்தியல்களை இவ்வாறான பேராசான்களின் கருத்தியல் கொண்டே நாம் அறிந்து கொள்ளவும் அளவிடவும் முடியும்.

இந்த வகையான வழிகாட்டிகள் நவீன காலத்திற்கு முன்பும் உருவாகி மக்களையும் சமூகங்களையும் மாற்றியமைத்து புதிய வாழ்வியலை  போதித்திருக்கிறார்கள். அவர்கள் சமயத் தலைவர்களாகவும், இறைத் தூதர்களாகவும் சில இடங்களில் வழிபடத் தகுந்த புனிதர்களாகவும்  மக்களால் மாற்றப்பட்டுள்ளனர். புத்தர், மகாவீரர், இயேசு கிறிஸ்து, முகம்மது நபி போன்ற வரலாற்று உருவகங்கள் இதற்குச் சான்றுகள். ஆனால் நவீன அறிவு, நவீன வாழ்வியல், இறைத்தூதர்கள் மற்றும் புனிதர்களை ஏற்பதில்லை. நம் காலத்தின் சிந்தனையாளர்கள் நமக்குத் தலைவர்களாக, ஆசான்களாக, வழிகாட்டிகளாக மட்டுமே இருக்க இயலும். ஏனெனில் நவீன அறிவும் வாழ்வியலும் மக்கள் மய்யமானது, பகுத்தறிவு, சமத்துவம், சமஉரிமை, சுதந்திரம், தன்மதிப்பு என்பவற்றை அடிப்படையாகக் கொண்டது. நம் வழிபாட்டு உணர்வு, பெருமதிப்பு,  வியப்புணர்வு அனைத்தையும் கடந்து நவீன காலத்தின் அறிஞர்கள் தலைவர்களாக, ஆசான்களாக, வழிகாட்டிகளாக மட்டுமே நம்முடன்  என்றும் இருப்பார்கள். அவ்வகையில் கார்ல் மார்க்ஸ் (1818-1883) மற்றும் அண்ணல் அம்பேத்கர் (1891-1956) என இரு நவீனப் பேராசான்கள் நமக்கு வாய்த்துள்ளனர்.

கௌதம புத்தரையும் கார்ல் மார்க்ஸையும் ஒப்பிடும் போது அண்ணல் அம்பேத்கர் “மார்க்ஸையும் புத்தரையும் ஒரே தளத்தில் வைத்து ஆய்வு செய்வதை மார்க்சியர்கள் நகைப்புக் குரியதாக கருத இடமுண்டு. மார்க்ஸ் மிக நவீனமான ஒருவர் புத்தர் மிகத்  தொன்மையானவர்! மார்க்சுடன் ஒப்பிடும் பொழுது புத்தர் வெறும் ஒரு புராதனச் சிந்தனையாளர்தான் என மார்க்சியர்கள்  சொல்லக்கூடும்.” (புத்தரா கார்ல் மார்க்ஸா) என ஒரு எச்சரிக்கை அறிவிப்பு செய்வார். ஆனால் அந்த வகையான அறிவிப்பு எதுவும் அம்பேத்கரையும்  மார்க்ஸையும் இணைத்தும் ஒப்பிட்டும் அறியவும் ஆய்வுசெய்யவும் தேவைப்படாது. ஏனெனில் அம்பேத்கர், மார்க்ஸ் இருவரும் மிக மிக நவீனமானவர்கள், மக்கள் அரசியல், அனைவருக்குமான விடுதலை, அறிவியல் அணுகுமுறை என அனைத்திலும் இன்றைய உலகச் சிந்தனையாளர்கள் எவரை விடவும் முன்னோக்கிய பார்வையைக் கொண்டவர்கள். அறிவின் மீதான பற்று, அனைத்தையும் மக்கள் மற்றும் மனித சமத்துவம் என்பதைக் கொண்டு அளவிடும் ஆற்றல், விடுதலையைத் தவிர வேறு எதனையும் வழிகாட்டு நெறியாகக் கொள்ளாத பிடிவாதம் என ஒவ்வொன்றிலும்  இருவரும் ஒருவருக்கு ஒருவர் போட்டியாக நிற்பவர்கள்.  இவர்கள் இருவரின் வாழ்வும் அறிவைத் தேடும் அதீத வேட்கையை அடிப்படையாகக் கொண்டது, அதனைவிட அவ்வறிவை மக்களின் விடுதலைக் கானதாக மாற்றும் போராட்டத்தை முன்னிலைப்படுத்தியது.

மார்க்சையும் அம்பேத்கரையும் ஒப்பிடும் பொழுது முதலில் நமக்கு வேறுபட்டுத் தெரியவருவது அவர்கள் இருவரின் சமூக, வர்க்கப் பின்னணி. மார்க்ஸ் அறிவின் நெடிய மரபை உரிமை கொண்டாடும் ஒரு இனத்தின் (யூத) பின்னணி கொண்டவர், கல்வியும் ஆய்வும் அவருக்கு மரபான உரிமையாக அமைந்தவை. தன் அறிவை உலகை மாற்றும் கருவியாக உருவாக்க முனைந்து அதற்காக வறுமையையும் துயரத்தையும் ஏற்றுக் கொண்டது மார்க்ஸின் தன்னீகையாக அமைந்தது. அம்பேத்கரின் வாழ்க்கையோ அதற்கு முற்றிலும் மாறான பின்னணி கொண்டது.  அடிமைநிலை, அவமதிப்பு, உரிமை யின்மை என்பனவற்றால்  நிரம்பியது. தன் வாழ்வை மட்டும் மாற்றிக் கொள்வதற்கான வாய்ப்புகள்  அவருக்கு அமைந்தபோதும் அவற்றை விலக்கிவிட்டு தன் மக்கள் அனைவருக்குமான விடுதலைக்காக தன் அறிவுத்திறன், போராட்ட வலிமை அனைத்தையும் அளித்த அவரது தன்னீகம்  ஆன்மிகத் தன்மை கொண்டது. இந்த வகையான போராட்டமும் தன்னீகமும் இணைந்த அறிவுச் செயல்பாட்டையே அம்பேத்கர் அரசியலில் ஆன்மிகம் என்று குறிப்பிடுகிறார். அவரது அறிவாற்றல், சிந்தனைத் திறன், ஆய்வுத்திறன்,  நினைவாற்றல், எழுத்து வலிமை இந்தியாவில் இதற்கு முன் யாருக்கும் அமையாதவை. அதனைவிட யாருக்கும் அஞ்சாமல் தான் கண்ட உண்மையை எடுத்துரைக்கும் துணிவு.

இந்தியாவில் சாதி இந்துக்களால் அதிக அளவு வெறுக்கப்பட்ட, எதிர்க்கப்பட்ட ஒரு தலைவராக, கருத்தியலாளராக அவர் இருந்தார். ஆனால் அவர்  யாருக்காகவும் தன் அறிவின் கடுமையை, உரிமைப் போராட்டத்தை விட்டுக் கொடுக்கவோ மென்மைப்படுத்தவோ முன்வரவில்லை. தன் மக்களால், தன் நண்பர்களால் கைவிடப்பட்ட பொழுதும் தன் அரசியல் முன்னெடுப்புகள் தோல்வியடைந்த போதும், உடன் பயணிகளான எம்.சி.ராஜா போன்றவர்கள் விலகிச் சென்ற போதும், சாதிய ஊடகங்கள் தன் மீது அவதூறுகளை, இழிமொழிகளை அள்ளி வீசிய போதும் அவர் தயக்கமின்றி முன்னோக்கிச் சென்று கொண்டே இருந்தார்.  மார்க்ஸ், அம்பேத்கர் இருவரிடமும் காணப்படும் இந்த பிடிவாதமான அறிவுகாண்முறை  பேரறிவு என்பதற்கு முழுமையான எடுத்துக்காட்டாக அமைவது.

மார்க்ஸ், அம்பேத்கர் இருவரின் வாழ்வையும், பணியையும், எழுத்தையும் முழுமையாக வாசித்து அறியும் எவருக்கும் முதலில் தோன்றுவது வியப்பு, பின் அறிவைக் கண்டடைந்த ஆறுதல். வரலாறு, அரசியல், சமூகவியல், தத்துவம், சமய ஆய்வு, சமூகஉளவியல் என அனைத்தைப் பற்றியும் ஒரே இடத்தில் அறியக் கிடைத்து விட்ட ஆறுதல்தான் அது. இந்த ஆறுதலுக்குப் பின் உருவாவது மிகப்பெரிய ஆதங்கம், வருத்தம். மார்க்ஸ் உலக வரலாற்றில் என்றும் மறைக்கவும் மறுக்கவும் முடியாத விடுதலை உருவகமாக மாறிவிட்ட நிலையில் இந்திய அளவில் கூட அம்பேத்கரின் வரலாற்று, கருத்தியல் பங்களிப்பு புரிந்து கொள்ளப்படவில்லை என்பது பற்றிய ஆதங்கமாக அது இருக்கும். ஆனால் அதனைக் கடந்து இன்று உலக அளவிலான மாற்றுச் சிந்தனையாளர்கள், விடுதலை அரசியல் பணியாளர்கள் அம்பேத்கரை ஆழ்ந்து படிக்கத் தொடங்கியுள்ளனர். பின்காலனியச் சிந்தனையிலும் பெண்ணிய இயக்கங்களிலும் அடித்தள மக்கள் அரசியலிலும் இன்று அம்பேத்கரின் ஆய்வுகள் அடிப்படையான தரவுகளாக மாறியுள்ளன.

மாற்று அரசியல் தளத்தில் அம்பேத்கர் ஒரு குறியீடாக மாறியுள்ளதற்குப் பல காரணங்கள் இருந்தாலும் மார்க்சுக்கு அமையாத கூடுதலான மூன்று வரலாற்றுப் பணிகள் அம்பேத்கருக்கு அளிக்கப்பட்டன. முதல் பணி தன் மக்களை புதையுண்ட வாழ்வில் இருந்து மீட்டு விடுதலையை நோக்கி அழைத்துச் செல்லுதல். இரண்டாவது பணி இந்தியாவிற்கான புதிய சமூகம், நவீனத் தேசியம் எவ்வாறு அமைய வேண்டும் என்பதைத் திட்டமிட்டு அளித்தல். இதனைக் கடந்து மூன்றாவதாக அம்பேத்கர் ஏற்றுக் கொண்ட பணி நவீன தேசியத்திற்கான புதிய கருத்தியலை கட்டமைப்பதுடன் ஒரு தேசத்தை அக்கருத்தியல் அடிப்படையில் வடிவமைக்கும் பணி, இது இந்தியா என்னும் பன்மைப் பட்ட சமூகத்தை நவீனமாக்கும் சிக்கலான பணி.  ஆம் அது மிகச் சிக்கலான ஒரு பணிதான் ஏனெனில் நவீனமடைய விரும்பாத மக்களைக் கொண்ட, சமத்துவத்தை வெறுக்கும் பல சாதிகளைக் கொண்ட ஒரு நாட்டை நவீனமடையச் செய்வது, அதற்கான வழிகாட்டு நெறிகளை உருவாக்குவது எதனைவிடவும் கடுமையான ஒரு பணி.

அம்பேத்கர் இப்பணியை ஏற்றுக் கொண்டது 1946-இல் சட்ட அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட பொழுதுதான் என்று ஒரு பொதுப்பார்வையில் தோன்றக்கூடும். ஆனால் அவர் அந்தப் பணியைத் தன் பல்கலைக் கழக ஆய்வுக் காலத்திலேயே தொடங்கி விட்டார். இந்தியாவில் சாதிகள் : அவற்றின் செயல்முறை,  தொடக்கம் மற்றும் பெருக்கம் (1916) என்ற ஆய்வுக் கட்டுரையில் ஒன்றை நான் அழுத்தமாகச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் சாதி விதிமுறையை உருவாக்கியது மனு அல்ல, தனி ஒருவரால் அதனைச் செய்யவும் இயலாது. மனுவுக்கு முன்பே சாதி அமைப்பு இருந்தது, அதனை மனு நியாயப்படுத்தி தத்துவ வடிவம் தந்திருக்கிறான், நிச்சமாக இன்றுள்ள இந்து சமூக அமைப்பை மனு உருவாக்கவில்லை, அது இயலாத ஒன்று. அவனுடைய நூல் தற்போதுள்ள சாதி விதிகளை பட்டியலிட்டுக் காட்டுகிறது, சாதி தர்மத்தைப் போதிக்கிறது.” என்று சாதி மற்றும் தீண்டாமையின் வேர்களை அடையாளம் காட்டிய அம்பேத்கர் இந்தியாவில் அடிப்படையான அமைப்பு மாற்றத்தை உருவாக்காமல் சாதி மற்றும்  தீண்டாமை வன்கொடுமையை அழிக்க இயலாது என்பதை உணர்ந்தவராக இருந்தார்.

இந்தியாவை ஒரு தேசமாக, நவீனச் சமூகமாக மாற்ற அரசியல் விடுதலைக்கு முன் சமூக, சமய அமைப்பின் அடிப்படைகளை மாற்றியமைக்க வேண்டும் என்பதையும் அம்பேத்கர் கண்டறிந்தார், அதற்காகவே தன் வாழ்க்கையை அளித்தார். இந்தியாவில் சமூகச் சீர்திருத்தத்திற்கான பாதை பல இடர்பாடுகளைக் கொண்டது என்பதைத் தெளிவாக அறிந்திருந்தும் அதனை தன் வாழ்க்கையாக அமைத்துக் கொண்ட  அண்ணல்  இந்த தளத்தில்தான்  மார்க்சிடம் இருந்து வேறுபடுகிறார். இந்தியச் சமூகத்தை முழுமையாக ஆய்ந்து புரிந்து கொண்ட அம்பேத்கருக்கு யாருடைய வழிகாட்டுதலும் இன்றி தன் மக்களின் விடுதலையை உள்ளடக்கிய இந்திய விடுதலை பற்றித் தனியாகச் சிந்திக்க முடிந்தது. இந்தத் தனித்த பார்வை அம்பேத்கரை காங்கிரஸ், இந்துத்துவ அமைப்புகள், இந்திய கம்யூனிச இயக்கம், பிற்போக்கு சனாதனிகள் என அனைத்துப் பகுதியினரிடமிருந்தும் விலகியிருக்கச் செய்தது. அம்பேத்கரை ஒரு சாதித் தலைவராக பார்த்த இந்த அமைப்புகளும் கட்சிகளும் அவரது சமூகக் கோட்பாடுகளைப் புரிந்து கொள்ளவில்லை. அம்பேத்கரின் அரசியல், சமூக, பொருளாதாரக் கொள்கைத் திட்டங்கள்  இந்தியச் சமூகத்தை அடிப்படையிலிருந்து மாற்றியமைப்பதற்கான கோட்பாடுகளைக் கொண்டவை, பிராமண- உயர்சாதி ஆதிக்கத்தை உடைத்து உண்மையான மக்கள் அரசியலைக் கட்டுவதற்கான கருத்தியலைக் கொண்டவை என்பதை உணர்ந்த சாதிய-பிராமணிய அறிவுத்துறையினர் அண்ணலை அரசியலில் இருந்து நீக்கி வைப்பதையே தம் முழுநேரப் பணியாகக் கொண்டிருந்தனர்.

இந்தத் தடைகளைக் கடந்து அம்பேத்கர் தேசிய உருவாக்கத்தின் மைய சக்தியாகத் தன்னை மாற்றிக் கொண்டார்.  அரசியல் அமைப்புக்குழுவில் பங்கு, சட்ட அமைச்சர் பொறுப்பு, வரைவுக்குழுவின் தலைமைப் பொறுப்பு என்பவை அவரைத் தவிர அன்று வேறு யாராலும் கையாள முடியாத பெரும் பணிகள் என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். காந்தியின் பரிந்துரை, நேருவின் நவீன சிந்தனை என்பவை அம்பேத்கருக்கு அப்பொறுப்புகளை வழங்கின என்ற கதைகளில் சிறுபகுதி உண்மை இருக்கலாம். ஆனால் இந்தியாவின் ஐந்தில் ஒரு பங்காக அமைந்த ஒடுக்கப்பட்ட மக்களின் ஒற்றைக் குரலாக, மக்கள் அரசியலின் அறிவுக்களனாக இருபத்தைந்து ஆண்டுகள் இருந்துவரும் ஒரு சிந்தனையாளரை ஒதுக்கிவிட்டு ஒரு நவீன அரசியல் அமைப்பை யாரும் அமைத்துவிட இயலாது. அது மட்டுமின்றி அம்பேத்கருக்கு இணையான அரசியல், வரலாற்று, சமூக, சட்ட அறிவு கொண்ட மக்கள் சிந்தனையாளர், புரட்சிகர அறிவாளி எனச் சொல்ல வேறொருவர் அப்பொழுது இந்தியாவில் இல்லை.

நேருவின் நவீன-பகுத்தறிவுப் பயிற்சி அம்பேத்கரை ஒரளவு புரிந்து கொள்ள  உதவியாக இருந்தது, அத்துடன் அரசியல் அமைப்பை நவீனத் தன்மையுடையதாக மாற்ற அம்பேத்கரின் உதவி அவருக்குத் தேவைப்பட்டது. காந்திக்கு 1937-க்குப் பிறகு அம்பேத்கரின் மதிப்பும், அவர் முன்வைத்த கேள்விகளின் நியாயமும் புரியத் தொடங்கியிருந்தது. ஐந்து ஆண்டுகளில் இல்லை, ஐம்பது ஆண்டுகள் ஆனாலும் அரிஜன சேவா சங்கம் போன்ற அமைப்புகளால் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையைப் பெற்றுத்தர இயலாது என்பது அவருக்கு தெரியத் தொடங்கியிருந்தது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் அம்பேத்கருக்கும் காந்தி அளித்த உறுதி மொழி மறக்கப்பட்ட ஒன்றாக மாறியிருந்தது. ஆனால் அம்பேத்கரின் அரசியல் யாராலும் மறுக்க இயலாத இடத்தை அடைந்திருந்தது. அவர் தன் மக்களை முழுமையான அரசியல் சக்தியாகத் திரட்ட இயலாத நிலை இருந்தாலும் அவரது அரசியல்தான் விடுதலை அரசியலின் அடிப்படையாக அமைந்திருக்கிறது என்பதை சட்டமும், அரசியல் வரலாறும் படித்த காந்தி, நேரு போன்றவர்களால்   ஒரளவு புரிந்து கொள்ள முடிந்தது.

அம்பேத்கரின் பங்களிப்பு இந்திய அரசியலாக்கத்தில் மிகப்பெரும் முக்கியத்துவமுடையது என்பதை அவரது ஒரு பேச்சிலிருந்து நாம் புரிந்து கொள்ளலாம்: “நண்பர்களே, இந்தப் பெரும் தேசத்தின் சமூக, அரசியல், பொருளாதார அமைப்பின்  எதிர்கால வளர்ச்சி, மற்றும் அது அடைய இருக்கும் வடிவம் பற்றி எனக்குச் சிறு ஐயமும் இல்லை. இன்று நாம் அரசியல், சமூக, பொருளாதார அடிப்படையில் பாகுபட்டுக் கிடக்கிறோம் என்பதை நான் அறிவேன். நாம் முரண்பட்டு மோதிக்கொள்ளும் பலவேறு குழுக்களாகவே இன்று இருக்கிறோம், ஏன் நானே அப்படியான ஒரு முரண்படும் குழுவின் தலைவன்தான் என்பதை சொல்லிக்கொள்ளவும் நான் தயங்கவில்லை. நண்பர்களே இவற்றையெல்லாம் கடந்து, காலமும் சூழலும் அமையும்போது இந்த நாடு ஒன்றுபட்டதாக உருவாவதை உலகில் யாராலும் தடுக்க முடியாது  என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். (மகிழ்ச்சியொலி) சாதி, சமயப் பிரிவுகள்  எல்லாம் நமக்குள் இருந்தாலும் ஒரு வகையில் நாம் ஒன்று பட்ட தேசமக்கள் என்பதைச் சொல்லிக்கொள்ள நான் சிறிதும் தயங்கவில்லை. (மகிழ்ச்சியொலி) (அம்பேத்கரின் பாராளுமன்ற உரை: டிசம்பர்17,1946). எல்லாவித அடக்குமுறைக்கும் பிறகு பலவித ஏமாற்றத்திற்கும் பிறகு மன்னிப்பு வழங்கி  நம்பிக்கை தந்து அதற்காகத் தன் வாழ்வை அளித்து ஆசி வழங்கிய அண்ணலின் இந்தக் குரல்தான் இந்திய நவீன அரசியலின் தொடக்கம். “மறப்போம் மன்னிப்போம்” என்ற காங்கிரஸ் தலைவர்களின் வாக்குதான் அம்பேத்கருக்கு பாராளுமன்றத்தில் இடமளித்தது எனச் சொல்லும் அறிவீனர்கள் இந்திய அரசியலைத் தம் தோட்டத்து விருந்து என நினைத்துக் கொள்பவர்கள்தான்.

இந்திய அரசியலில் அம்பேத்கரின் இந்தக் குரல் தேசிய உருவாக்கத்தின் அடிப்படை. தன் மக்களின் விடுதலையையும் உள்ளடக்கிய ஒரு சுதந்திர நாடு பற்றிய கனவுடன் அம்பேத்கர் தன் அரசியலமைப்புப் பணியைத் தொடங்குகிறார். “யாருக்கும் ஐயம் தேவையில்லை. இறுதியான எதிர்காலம் அல்ல நம்முன் உள்ள இடர்பாடு.  இன்று பல்வகைப்பட்ட பிரிவாக உள்ள மக்கள் குழுக்களை பொதுவான கருத்தின் அடிப்படையில் ஒருங்கிணைப்பு நோக்கி எப்படி நகர்த்துவது எப்படியென்பதுதான் நமக்கு முன் உள்ள இடர்பாடு.  நமக்கு முன் உள்ள சிக்கல் இறுதி இலக்கு பற்றியதல்ல, எப்படித் தொடங்குவது என்பதில்தான் உள்ளது.” (மேலது).

அம்பேத்கர் தன் நாடு மற்றும் தன் மக்கள் இரண்டிற்குமான புதிய தொடக்கம் பற்றிச் சிந்தித்தவர், அதனால்தான் பொதுக் குடிமைச்சட்டம்  (இந்து குடும்பச் சட்டம்) போன்ற ஒரு சட்டத்தை இந்தியச் சீர்த்திருத்தத்தின் ஒரு தொடக்கமாக அவர் காண்கிறார். பெண்களுக்கான சொத்துரிமை, பெண்கள் தனித்து வாழ்வதற்கான உரிமை, பெண்கள் மணவிலக்கு பெறுவதற்கான உரிமை, சாதிப்பிரிவு கடந்த மண உறவுக்கான உரிமை, சாதிப்பாகுபாடு இன்றி குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்கும் சட்ட உரிமை, ஆண்கள் பலமணம் செய்தலுக்குத் தடை என்பன அச்சட்ட வரைவில் முதன்மையான கூறுகள். பெண்ணுரிமை, சாதிக்கலப்பு என்பவை இவற்றின் உள்நோக்கம் என்பதால் இந்து-சனாதன சக்திகள் இவற்றைக் கடுமையாக எதிர்த்ததும், இச்சட்ட வரைவு விலக்கிக்கொள்ளப்பட்டதும்,  அண்ணல் அமைச்சரவையில் இருந்து விலகியதும் நாம் அறிந்தவை. இவற்றைக் கடந்து நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது: 1916-இல்  இந்தியாவில் சாதிகள் : அவற்றின் செயல்முறை, தொடக்கம் மற்றும் பெருக்கம் என்ற தன் ஆய்வில் குடும்பம், பெண்களின் மீதான கட்டுப்பாடு, உட்சாதித் திருமணம் என்பவற்றிற்கும் இந்தியச் சாதி அமைப்பிற்கும் உள்ள உறவை விளக்கிய அம்பேத்கர் இந்தியச் சமூகத்தை நவீனமடைந்த சமூகமாக மாற்றுவதற்கான தொடக்கமாக இச்சட்டத் திருத்தத்தைக் கண்டார்.  “மக்களின் அரசியல் விடுதலை அவர்களின் அறிவிலும் ஆன்மாவிலும் நிகழும் விடுதலையில்தான் தொடங்குகிறது” என்பதை அறிவித்த அம்பேத்கர் இந்திய மக்கள் அனைவருக்கமான விடுதலை பற்றியே சிந்தித்தார். அந்த விடுதலை தன் மக்களின் விடுதலையில்தான் தொடங்குகிறது என்பதுதான் அவர் உலகுக்கு அறிவித்த செய்தி.

தன்னை ஓர் உலகக் குடிமகன் (I am a citizen of the world) என அறிவித்த கார்ல் மார்க்சும் “எனக்குத் தாய்நாடு இல்லை” (I have no homeland: எனக்கென ஒரு நாடு இல்லை) என காந்தியின் முன் அறிவித்த அம்பேத்கரும் இணைந்து கூறும் செய்தி இது “ஆகக்கீழான ஒடுக்குதலுக்கு உள்ளாகும் மக்களின் விடுதலையில்தான் மனிதர்கள் அனைவருக்குமான விடுதலை தொடங்குகிறது. இந்த விடுதலையை கொண்டுவரக் கூடிவர்கள் அந்த ஒடுக்குதலுக்கு உள்ளானவர்கள்தான்.”  இந்த அறிவிப்பு வெறும் உணர்ச்சிவயமானதோ, நல்லெண்ண அடிப்படையில் உருவானதோ, அந்தராத்மாவின் ஒலியோ அல்ல உலக வரலாற்றின் மிக அரிதான இரு பேரறிவாளர்களின் ஆய்வின் வழி கண்டறியப்பட்ட உண்மை.

(நமது தமிழ்மண்-ஏப்ரல் 2015)

அம்பேத்கர் கண்டெடுத்த நவீன இந்தியா

அம்பேத்கர் பௌத்தம் மொழிஅரசியல்-பிரேம்

அம்பேத்கர் பௌத்தம் மொழியரசியல் (பக்க வடிவில்)

 

அம்பேத்கர், பௌத்தம், மொழி அரசியல்

-பிரேம்

இந்தியப் பெருந்தேசிய அரசியலில் நிலவிவரும் பல்வேறு ஒடுக்குமுறைகளில் ஒன்று மொழி சார்ந்த ஒடுக்குமுறை. உலக அரசியலில் பெரும் ஒடுக்குமுறைகளுக்குக் காரணமாக அமைந்த இந்த மொழிசார்ந்த ஒடுக்குமுறை பிற ஒடுக்குமுறைகளிலிருந்து பலவழிகளில் வேறுபட்டது. இந்தியச் சமூகத்தின்  மற்ற ஒடுக்குமுறைகளான தீண்டாமை, சாதிப்படிநிலைகள், ஆணாதிக்கம், நிலவுடைமை என்பவை சமூகப் பொருளாதாரக் கட்டமைப்புகளில் நேரடியான விளைவுகளை ஏற்படுத்துவதால் அவை இன்றும் வெளிப்படையாகப் புலப்படக்கூடியனவாக உள்ளன.  இந்தப் பழமையான ஒடுக்குமுறைகளை நவீன அரசியலும், மக்கள் ஆட்சிமுறையும் கருத்தியல் அடிப்படையில் மறுக்கின்றன. ஆனால் இந்தியச் சமூகத்தில் இந்த ஒடுக்குமுறைகளை முழுமையாக நீக்குவதற்கானச் சட்டங்கள் இயற்றப்பட்ட அளவுக்கு நடைமுறைத் திட்டங்கள் உருவாக்கப்படவில்லை. நவீன அரசு, தேசியம் சார்ந்த அரசியல் இரண்டும் குடிமைச் சமூகங்களை, அடிப்படை மனித உரிமைகளை மையமாகக் கொண்டு கட்டப்பட்டவை, அதனால்தான் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் சமநீதி, சுதந்திரம், சமத்துவம், தனிமனித தன்மதிப்புடன் கூடிய சகோதரத்துவம் பற்றிய அக்கறைகள் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தியச் சமூகத்தின் பழமையான ஒடுக்குமுறைகள் அனைத்துமே நவீன சட்டங்கள் மற்றும் அரசியல் விதிகளின்படி பல்வேறு வடிவில் தடை செய்யப்பட்டவை, நீதியியல் அடிப்படையில் தண்டனைக்குரியவைகூட. ஆனால் இன்றும் இந்தியச் சமூகங்கள் சுதந்திரம், சமத்துவம், சமநீதி என்ற மதிப்பீடுகளை நடைமுறையில் ஏற்பனவாக இல்லை. அதனால் தேசிய மதிப்பீடுகள், மக்கள் ஆட்சித் தத்துவங்கள் என்னும் நவீனக் கருத்தியல்கள் இந்தியச் சமூகங்களில் செயலாற்றல் அற்றனவாகத்  தேங்கிக் கிடக்கின்றன. இந்தியச் சமூகங்கள் நவீன சமூகங்களாக மாறவேண்டுமெனில் சாதிப்படிநிலைகள் அற்ற, தீண்டாமையின் பருண்மையான மற்றும் நுண்மையான வன்கொடுமைகளை மறுத்த பண்பாட்டு மதிப்பீடுகள் உருவாக்கப்பட வேண்டும். இந்த மதிப்பீடுகள் சமய நம்பிக்கைகள், மரபான பற்றுகள் அனைத்தையும் கடந்த பொது அறத்தின் அடிப்படையில் கட்டப்படவேண்டும். இந்த மாற்றத்தையே அண்ணல் அம்பேத்கர்  ‘புதிய வாழ்வியல்’ என்று அடையாளம் காட்டினார். இந்தப் புதிய வாழ்வியலைக் கட்டமைக்க அரசியல், பொருளாதாரம், சமூகவியல், பண்பாடு என்ற அனைத்து அமைப்புகளிலும் மாற்றங்கள் நிகழ வேண்டுமென அம்பேத்கர் விளக்கியிருக்கிறார்.

அம்பேத்கர் தாம் வரையறுத்துக் காட்டிய நவீன இந்தியாவை உருவாக்குவதற்கான முயற்சிகளில் ஒன்றாகத்தான் அரசியல் வரைவுக் குழுவின் தலைமையை ஏற்றுக் கொள்கை சார்ந்த தம் பதிவுகளை அதில் இடம்பெறச் செய்தார். ஆனால் அண்ணல் விரும்பிய அடிப்படை மாற்றங்கள் நிகழ்வதற்கான அரசியல், பொருளாதார முன்னெடுப்புகள்  அவர் வாழ்நாளில் உருவாகாத சூழலில் அவர் தன் கவனத்தைப் பண்பாட்டுக் கட்டமைப்புகள் மீது குவித்தார். ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையில் தொடங்கி,  ஒன்றுபட்ட இந்தியத் தேசிய உருவாக்கம் வரை, தனிமனித விடுதலை தொடங்கி உலக அரசியல் விடுதலை வரை அம்பேத்கருக்குத் தெளிவான பார்வைகள் இருந்தன. ஆனால் இந்தியாவின் தேசிய அரசியல் ஒடுக்கப்பட்ட மக்களையும் அவர்களின் அரசியலையும் வெளியில் வைத்துப் பார்ப்பதைத் தொடர்ந்த பொழுது அம்பேத்கர் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான உறுதியான, தனித்த திட்டங்களை முன் வைத்தார். அதில் ஒன்றுதான் ஒடுக்கப்பட்ட மக்கள் இந்து மதத்திலிருந்து வெளியேறி பௌத்த நெறியைத் தழுவுதல்.

அரசியல் அதிகாரம், பொருளாதார உரிமைகள், சமூக விடுதலை அனைத்திற்கும் தொடக்கமாக அமைவது ஒடுக்கப்பட்ட மக்களிடம் நிகழவேண்டிய பண்பாட்டுப் புரட்சியே என்பதை அம்பேத்கர் தன் ஆழ்ந்த ஆய்வின் வழியாகவும் வரலாற்று அனுபவத்திலிருந்தும் தெளிவாக அறிந்தார். இந்தியாவின் இன்னொரு உலகமாக வெளியே வைக்கப்பட்டுள்ள ஒடுக்கப்பட்ட மக்கள் தம்மைப் பலப்படுத்திக் கொள்ளாதவரை தமக்கான விடுதலையை,  சமத்துவத்தை, அரசியலில் தமக்கான பங்கை பெறமுடியாது என்பதை தெளிவுபடுத்தவே கற்பி, போராடு, ஒன்றுசேர் (கற்பி, எழுச்சிகொள், ஒன்றுபடு / கற்பி, புரட்சி செய், ஒன்றிணை எனப் பல பொருள்களில்)  என்ற முப்பெரும் கொள்கைகளை அண்ணல் முன் வைத்தார். அறிவு பெறுதல், அடக்குமுறைக்கெதிராகப் போராடுதல்,  விடுதலைக்காக ஒன்றிணைதல் என்பதைத் தன்  உள்ளடக்கங்களில் ஒன்றாகக் கொண்ட இந்த மும்மை நெறி பௌத்தம் நோக்கிய அம்பேத்கரின் அறிவிப்பின் தொடக்கமாக அமைந்திருந்திருந்தது. விடுதலையை யாரும் இரந்து  பெறமுடியாது என்பதுடன், இரக்கத்திற்குரியவர்கள் அடையும் விடுதலை விடுதலையாக இருக்காது என்பதையும் விடுதலையை யாரும் யாசகமாகத் தம் மக்களுக்கு வழங்கத் தேவையில்லை என்பதையும் தெளிவாக உணர்ந்திருந்ததால்தான் காந்தி முன்வைத்த தீண்டாமை ஒழிப்புத் திட்டங்களை அம்பேத்கர் தன் மக்களின் மீதான அவமானமாகக் கருதினார்.  தமக்கான  விடுதலையைத் தாமே அடைதல் என்பதுதான் அம்பேத்கர் தம் மக்களுக்குக் கற்பித்த அரசியல். தம் மக்களின் விடுதலையின்றி இந்தியச் சமூகம் ஒரு நாளும் சுதந்திர நாடாக,  நவீன தேசமாக மாறமுடியாது என்பதுதான் அம்பேத்கர் உலகுக்கு அறிவித்த செய்தி.

1951-ஆம் ஆண்டு எழுதிய ஒரு கட்டுரையில் இதனை அண்ணல் மற்றொரு வடிவில் அறிவித்திருக்கிறார், “அறிவியல் விழிப்புணர்வு கொண்ட ஒரு சமூகம் ஏற்றுக்கொள்ளத்தக்க சமய நெறி புத்தரின் சமயம் மட்டுமே,  இல்லாவிடில் அச்சமூகம் அழிந்துவிடும். பௌத்த நெறி மட்டுமே நவீன உலகம் தன்னைக் காத்துக் கொள்வதற்கான ஒரே வழி.” இந்த அறிவிப்பில் இரண்டு விதமான நோக்கங்கள் உள்ளன, முதல் நோக்கம் அடிமைப்பட்டிருப்பவர்களை விடுதலை நோக்கி அழைப்பது, இரண்டாவது நோக்கம் அடிமைப்படுத்திக் கொண்டிருப்பவர்களை தம்மை திருத்திக் கொள்ள அழைப்பது. நவீன உலகம், அறிவியல் விழிப்புணர்வு,  அழிதல், காத்துக் கொள்ளுதல் என்ற கருத்தியல்களை புரட்சி மற்றும் புதிய உலகம் என்ற தெளிவான அரசியல் பொருளில் அம்பேத்கர் இங்கு பயன்படுத்துகிறார். மாற விரும்பாத சமூகங்களை மக்கள் மாற்றுவார்கள், அந்த மாற்றம் பெரும் வன்முறைகளைக் கொண்டதாக அமையும் என்பதை அம்பேத்கர் பல இடங்களில் சுட்டிக்காட்டியிருக்கிறார்.  இதனை புத்தரா அல்லது கார்ல் மார்க்ஸா என்ற தன் கட்டுரையில் விரிவாக விளக்கும் அம்பேத்கர் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற கொள்கைகளின் அடிப்படையில் மார்க்ஸிசமும் பௌத்தமும் ஒன்றிணைந்தாலும் வன்முறை, சர்வாதிகாரம் என்ற வழிமுறைகளில் வேறுபடுகின்றன. அதனால் நீடித்த நல்விளைவை ஏற்படுத்தும் நெறி பௌத்தம்தான் என்று தன் முடிவை அறிவிக்கிறார். உண்மையான சகோதரத்துவம், சமத்துவம், சுதந்திரம் என்பவை பண்பாட்டு மாற்றங்கள் வழிதான் உருவாக முடியும் என்பது  அம்பேத்கரின் உறுதியான நம்பிக்கை. இதனை விரிவாக விளக்கவே தன் வாழ்வின் பெரும் படைப்பான புத்தரும் அவர் தம்மமும் (1957) நூலை அவர் உருவாக்கினார். இந்த நூலில் அம்பேத்கர் தன் உள்ளத்தில், அறிவில் புதைந்திருந்த அனைத்துக் கேள்விகளையும் எழுப்பி விடை தேட முயற்சித்திருப்பதைக் காணலாம். ஒரு வகையில் நவீன உலக அரசியலில் மார்க்சியம் கடந்த விடுதலைக் கருத்தியல் தொகுதி ஒன்றை உருவாக்கும் முயற்சியை அம்பேத்கர் இந்த நூலில் மேற்கொண்டிருப்பதைக் காணலாம். அதனால்தான் இந்நூலை எழுத அவர் ஐந்து ஆண்டுகளைச் செலவிட்டார். உடல்நிலை  வருத்திய அந்த காலகட்டத்தில்  அம்பேத்கருக்குத் தன் மக்களின் எதிர்காலம் பற்றி மட்டுமின்றி இந்திய-உலக அரசியல் மற்றும் மக்கள் சமூகத்தின் எதிர்காலம் பற்றியும் பெரும் கேள்விகள் எழுந்தன. அவர் தன் அறிவின் வழியும், அறம் சார்ந்த தேடுதல் வழியும் அக்கேள்விகளுக்கான விடைகளைக் கண்டறிய முயற்சித்தார்.

அக்கேள்விகளை அவர் பின்வருமாறு வரிசைப்படுத்தி யிருக்கிறார்: புத்தர் சமூகத்துக்கான கருத்துக்களைச் சொல்லியிருக்கிறாரா? புத்தர் நீதியைப் போதித்திருக்கிறாரா? அன்பைப் போதித்திருக்கிறாரா? விடுதலையைப் போதித்திருக்கிறாரா? சமத்துவத்தைப் போதித்திருக்கிறாரா? சகோதரத்துவத்தைப் போதித்திருக்கிறாரா?  கார்ல் மார்க்சின் கேள்விகளுக்கு புத்தரால் விடையளிக்க இயலுமா? இதற்கெல்லாம் அம்பேத்கர் சொல்லும் பதில் “புத்தர் சமூகத்துக்கான கருத்தியலையே சொல்லியிருக்கிறார். பௌத்தம் இந்தக் கேள்விகள் அனைத்திற்கும் பதில் சொல்லுகிறது. ஆனால் அவை நவீன பௌத்த அறிவாளிகளால் மறைக்கப்பட்டுள்ளன.” அம்பேத்கர் தன் நூலின் வழியாக மறைக்கப்பட்டுள்ள உண்மைகளை வெளிக்கொண்டுவரும் பெரும் பணியை மேற்கொள்கிறார், ஒரு வகையில் பௌத்தத்தைப் புதுப்பித்து நவீன விடுதலைக் கருத்தியலாக விளக்குகிறார். இதன் வழி அண்ணல் நவீன பௌத்த குருவாக, விடுதலைத் தூதுவராக வடிவம் பெறுகிறார். அம்பேத்கரின் வாழ்வில் அதிகம் விவாதிக்கப்படாத பகுதியாக உள்ள இந்த நவீன புத்துருவாக்க பௌத்தம் தற்கால அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டு, உளவியல் கேள்விகளை கையாளக்கூடிய ஆற்றல் கொண்டது. அதன் மையமாக உள்ளதுதான் பல்வேறு ஒடுக்குமுறைகள் பற்றியும் ஒடுக்குமுறைகளிலிருந்து விடுதலை அடைவதற்கான வழிகள் பற்றியுமான கேள்வி.

மொழி அரசியல், மொழி வழியான ஒடுக்குமுறை பற்றிய கேள்விகளை நாம் இதன் தொடர்ச்சியாகவும் தற்காலப் புரிதலுடனும்தான் விளங்கிக்கொள்ள வேண்டியுள்ளது. ஏனெனில்  தலித் அரசியலில் மொழி அரசியலின் இடம், அது பெறும் முக்கியத்துவம் மற்ற அரசியல் கருத்தியல்களில் இருந்து பல வழிகளில் வேறுபட்டது. இந்த வேறுபாட்டை இந்தியாவின் மற்ற தலித் அரசியல் கட்சிகள் மற்றும் தலித் இயக்கங்கள் தமிழகத்தின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை அணுகும் முறையிலிருந்து புரிந்து கொள்ள இயலும்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை தேசிய, மாநில அளவிலான மற்ற தலித் கட்சிகள் தம்மிலிருந்து வேறுபட்டதாகவே பார்க்கின்றன, சற்று விலகியிருந்தும் பார்க்கின்றன.  தமிழின அரசியல், தமிழ் மொழி அரசியல், ஈழவிடுதலை ஆதரவு, பெருந்தேசியத்துக்கு மாறான கூட்டாட்சித் தத்துவத்தை முன்வைத்தல், அடையாள அரசியலை ஏற்ற செயல்திட்டம் என்பவை தேசியத்தை ஏற்ற பல தலித் சிந்தனையாளர்களுக்கு உவப்பானதாக இல்லை. அவர்கள் தலித் விடுதலையில் மொழிவழி அரசியலுக்கு இடமில்லை என நம்புகின்றனர். அம்பேத்கரின் மொழிக் கொள்கை, மொழித் தேசியம் பற்றிய கருத்துக்களைத் தாம் பின்பற்றுவதாகவும் நம்புகின்றனர். மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்படுதல் பற்றிய தன் விரிவான கருத்துரையில் (1955) அம்பேத்கர், “இந்திய தேசியம் ஒன்றுபட்டு இருக்க வேண்டும்,  ஒரு மாநிலத்திற்கு ஒரு மொழி இருக்கலாம் ஆனால் ஒரு மொழிக்கு ஒரு மாநிலம் இருப்பது தேசம் உடையக் காரணமாக அமையும், ஒரு மாநிலத்தின் தாய்மொழி அம்மாநிலத்தின் அலுவல் மொழியாக இருக்கக்கூடாது, அது தொடக்கத்தில் ஆங்கிலமாகவும் பின்பு ஹிந்தியாகவும் இருக்க வேண்டும், ஒன்றிணைந்த இந்தியத் தன்மையை உருவாக்க ஹிந்தி மொழியை நாம் அனைவரும் கற்க வேண்டும்.” என்பதான சில கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறார்.  ஹிந்தி மொழி, ஒன்றிணைந்த இந்திய தேசியம் பற்றிய பகுதிகளை மட்டும் பிரித்தெடுத்துக் கொண்டு  வாசித்தால் அம்பேத்கரின் அரசியல் பற்றி நாமும் மிகத்தவறான முடிவுகளுக்கே வந்து சேருவோம்.

அம்பேத்கர், இந்திய மொழிகள், இந்து மதம் இரண்டிலும் சாதி ஆதிக்கமே மேலோங்கியுள்ளது அதனால் மொழிவழி அரசியலால் சிறுபான்மையினரான ஒடுக்கப்பட்ட மக்கள், பெரும்பான்மையினரான சாதி இந்துக்களின் அடக்கு முறைக்கு தொடர்ந்து உள்ளாக வேண்டியிருக்கும் என்பதை விளக்கி அதனால் ஒரு மொழி கொண்ட பல மாநிலங்கள் அமைப்பது, ஒரு அலுவல் மொழி கொண்ட ஒருங்கிணைந்த தேசம் ஒன்றைக் கட்டமைப்பது பற்றிய திட்டத்தை முன்வைக்கிறார். தீண்டாமையைத் தன் பண்பாடு, சமயங்கள், மரபுகள், நம்பிக்கைகள், சடங்குகள் அனைத்தின் வழியாகவும் நியாயப்படுத்தி வருகிற,  சாதிப் படிநிலையைத் தன்  அடிப்படை அடையாளமாகக் கொண்ட சமூகங்கள் உள்ள நாட்டில் மொழிவழி அரசியல் தீய விளைவையே ஏற்படுத்தும் என்ற அம்பேத்கரின் அன்றைய கணிப்பு பிழையானதல்ல.  மொழி அரசியலின் விளைவு பற்றி அம்பேத்கர் இவ்வாறு விளக்குகிறார், “மொழி வழி மாநிலங்கள் அமைக்கப்பட்டால் சாதியின் கொடிய விளைவுகள் தீவிரமடையும். சிறுபான்மைச் சமூகங்கள் சிதறடிக்கப்படும். அல்லது அவை அடக்குமுறைக்கும் அடிமைப்படுத்தலுக்கும் உள்ளாக்கப்படும். சட்டத்தின் முன் சமநீதி பெறுவதும் பொதுவாழ்வில் சமவாய்ப்புகள் பெறுவதும் அவர்களுக்கு மறுக்கப்படும்.”  மொழிப் பெரும்பான்மை பற்றிய அச்சம்,  ஒருங்கிணைந்த தேசிய அரசியலின் தேவை இரண்டைப் பற்றியும் அம்பேத்கரின் புரிதல்கள் வரலாற்று முக்கியத்துவ முடையவை, ஆழமான அக்கறைகளின் வழி உருவாக்கப்பட்டவை. தேசிய அரசியல் பின்னடைந்து உலக மயமான பொருளாதார அரசியல் அனைத்து மட்டங்களிலும் ஊடுறுவியுள்ள நிலையில், சாதி அரசியல், இந்து மதஅரசியல் இரண்டும் வலிமை அடைந்து, புதிய வடிவங்களில் பெருகிவரும் நம் கால கட்டத்தில் மொழி அரசியல் பற்றி கூடுதலான தரவுகளின் அடிப்படையில் நாம் விவாதிக்க வேண்டியுள்ளது.

அந்த உரையாடலின் ஒரு பகுதியை மட்டும்  நான் இங்கு பதிவு செய்கிறேன். ஒடுக்கப்பட்டோர் விடுதலையில் மொழியின் இடம் மிக முக்கியமானது. மண்ணை அடிமை கொள்ளுதல், இனத்தை அடிமை கொள்ளுதல், மொழியை அடிமை கொள்ளுதல் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று உறவுடையவை. மக்களின் மொழியை மக்களிடமிருந்து நீக்கிவிடும் பொழுது அவர்கள் அறிவின் வழி ஒன்றுமற்றவர்களாக மாறுகின்றனர். ஆப்பிரிக்க, தென்னமெரிக்க இனக்குழுச் சமூகங்கள் தம் மொழிகளை இழந்து அடக்குமுறையாளர்களின் மொழியைச் சுமந்து வாழ நேர்ந்ததின் மூலம் நிரந்தரமான அடிமைகளாக மாற்றப்பட்டனர். ஆட்சிமுறை, அறிவியல் துறைகள், நிர்வாகம், கல்வி, கலை-இலக்கியங்கள் என ஒவ்வொன்றும் தாய்மொழியற்ற வெறொரு மொழியில் செயல்படுத்தப்படும் பொழுது மக்கள் அடிப்படையிலேயே அடிமைநிலையில் வைக்கப்படுகின்றனர், அவர்களிடம் அடிமை உளவியல் உருவாக்கப்படுகிறது. இந்தியாவில் ஆங்கிலம் ஒரு மொழி என்ற அளவிலேயே அடக்குமுறைத் தன்மைகொண்டது, அது தாய்மொழிவழியான அறிவை அறியாமை எனச் சொல்கிறது. ஆங்கிலத்தின் இடத்தில் ஹிந்தி வைக்கப்படும் பொழுது அது மற்ற மொழி மக்கள் மீது அதே வகையான  அடக்கு முறையைச் செலுத்துகிறது.

ஹிந்தி மொழியைப் பேசும் மக்கள் ஆங்கிலம் தம் மீது செலுத்தும் வன்முறையை, கீழாக்கத்தை உணர்ந்துள்ளனர். மருந்துப் பொருள்கள் தொடங்கி உணவுப் பொருள்கள், மின்சாதனப் பொருள்கள், மின்னணுச் சாதனங்கள் என அனைத்தின் மீதும் ஆங்கிலத்தில் அச்சான சொற்கள் தங்களை அவமதிப்பதாக, அடிமைப்படுத்துவதாக, அந்நியமாக்குவதாக  அவர்கள் ஒவ்வொரு நாளும் உணர்கின்றனர். ஆங்கிலம் ஒரு காலனிய, மேலாதிக்க ஆயுதமாக செயல்படுவதாக அவர்கள் பல சமயங்களில் குறிப்பிடுகின்றனர். அதனால் ஆங்கிலத்தை நீக்கிவிட்டு ஹிந்தியை இந்தியா முழுதும் கொண்டுவர வேண்டுமென அவர்களிடம் ஒரு வெறி உருவாகியுள்ளது. அவர்களின் அறியாமை இந்தியாவில் ஹிந்தி போல இன்னும் இருபதுக்கு மேற்பட்ட தாய்மொழிகள் உள்ளன, இருநூறுக்கு மேற்பட்ட கிளைமொழிகள் உள்ளன என்பதை மறைத்து விடுகிறது.

இன்றைய மொழி அரசியலில், மொழி அடக்குமுறையில் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களும், உழைக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களும்தான் என்பதை நாம் கவனத்தில் கொண்டால் தமிழ் அரசியல் பேசும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அக்கறை இந்திய ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பழங்குடியின மக்கள் அனைவருக்குமான மொழிவழி உரிமைகளைக் கவனத்தில் கொண்டுள்ளது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

மருத்துவத்துறையின் ஒவ்வொரு கட்டச் செயல்பாட்டையும் நாம் மொழிவழி வன்முறைக்கு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். இந்தியாவின் பல கோடிக்கணக்கான மக்கள் தங்களுக்கு வழங்கப்படும் மருந்துகளை தம்முன் வைத்துக்கொண்டு எந்த மருந்தை எந்த வேளை எத்தனை முறை சாப்பிடுவது எனத் தெரியாமல் துயர்ப்படுவதை ஒரு நூற்றாண்டாக நாம் பார்த்து வருகிறோம். மருந்தின் பெயரைப் படித்து வழங்க மருத்துவமனைகளில் தொழில்முறை மருந்தாளுநர்கள் தேவைப்படுகின்றனர். நோயின் பெயரை அறிந்துகொள்ளாமலும் மருந்துகளை அறியாமல் மாற்றி உட்கொண்டும் உயிரிழப்போர் எண்ணிக்கை இந்தியாவில் அதிகம். மருந்துக் கடைகளில் மருந்துகளைத் தம் வசதிக்கேற்ப மாற்றித்தரும் கொடுமையும் ஆங்கிலத்தால் நிகழ்த்தப்படும் ஏமாற்று வேலை. உயிர் வாழும் உரிமையுடன் விளையாடும் இந்த மொழி வன்முறை உணவுப் பொருள்களின் வழியாக அதிகம் நிகழ்கிறது. ஒவ்வொரு உணவுப்பொருளின் மேலட்டையிலும் அதில் உள்ள மூலப்பொருள்கள், உலோக அலோகச் சேர்மங்கள், ஒவ்வாமை ஏற்பட உள்ள சாத்தியங்கள் பற்றி அச்சடிக்கப்பட்டுள்ளன, அனைத்தும் ஆங்கிலத்தில். ரொட்டியை வாங்கிச் சாப்பிடும் ஒருவருக்கு அதில் உள்ளவற்றைத் தெரிந்துகொள்ள ஆங்கிலம் தேவை என்றால் உயிர் வாழும் உரிமையுடன் அந்த ரொட்டி விளையாடுகிறது என்றுதான் பொருள். நாம் பயன்படுத்தும் பொருள்களை எப்படி உண்பது அல்லது இயக்குவது என்பதை வேற்று மொழியில் அச்சடித்து வைத்துக் கொண்டு நாம் என்ன செய்யப் போகிறோம்.

உலக மயமான சந்தையும், உலக மயமான பொருளாதாரமும் இன்று மக்களின் அறிவின் மீது பெரும் தாக்குதலைத் தொடுத்துள்ளன. தாய்மொழி அறிவை மட்டும் சார்ந்து இயங்கும் பெரும் மக்கள் கூட்டங்கள், இனங்கள் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டு சமூகத்தின் மையத்திலிருந்து வெளியேற்றப்படுகின்றனர். இந்தியாவில் ஆங்கிலவழிக் கல்வி ஒடுக்கப்பட்ட மக்களையும், பழங்குடியினரையும், உழைக்கும் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மக்களையும் வெளியேற்றிவிட்டு தனித்த அறிவு அதிகாரம் பெற்ற வர்க்கம் ஒன்றை உருவாக்கி வைத்துள்ளது. தற்போது இந்த மொழிவழி அதிகாரம் பன்னாட்டு முதலீடுகளின் ஆயுதமாக மாறிப் பல மடங்கு அடக்குமுறையை, விளிம்புநிலையாக்கத்தை உருவாக்கி வருகிறது. இந்தத் தாய்மொழி நீக்கத்தை ஆதிக்கச் சாதியினரும், நகர்சார் சாதியினரும் தமக்கான திறன்சார் பயிற்சியாக மாற்றிக்கொள்ள முடியும். ஆனால் ஒடுக்கப்பட்ட, பழங்குடிச் சமூகங்கள் மேலும் விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்டு தீண்டாமையின் புதிய வகைக் கொடுமைகளுக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறார்கள்.

அரசியல், சமூக, பொருளாதார விடுதலை மற்றும் சமத்துவத்திற்கான போராட்டங்களுக்குப் பதிலாக வெறும் உயிர்வாழும் உரிமைக்காகப் போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள இந்தியாவின் ஒடுக்கப்பட்ட, குடியின மக்கள் தம் மொழியில் பேசவும், எழுதவும், அறியவும் போராட வேண்டிய நிர்ப்பந்தம் தற்போது உருவாகியுள்ளது.  தமிழ் காக்கும் போராட்டத்தைத் தலித் அரசியலின் தலைமையில் நிகழ்த்துவதற்கான வரலாற்றுத் தேவையைத் தமிழின் அடையாள அரசியல் இயக்கங்கள் புரிந்து கொள்ளுமெனில் தமிழின அரசியல் பொருளுடையதாக, செயல்பாடுடையதாக மாறும். இல்லையெனில் சாதி இந்துக்கள் போல, சாதித் தமிழர்களை உருவாக்கவே மொழி உணர்வு பயன்படும். அம்பேத்கர் இந்த மொழிச்சாதி அரசியல் பற்றியே தன் அச்சத்தை அன்றையச் சூழலில் தெளிவாக விளக்கினார்.  அனைத்து வகை அடக்குமுறைகளுக்கும் எதிராக பௌத்த அறத்தை முன்வைத்த அம்பேத்கருக்கு மொழிவழியான அடக்குமுறை பற்றி மிகத்தெளிவாவே தெரியும், அதனால்தான் எங்கு சென்றாலும் அங்குள்ள மக்களின் தாய்மொழியைக் கற்று அம்மக்களின் தாய்மொழியில் தம் அறத்தைப் போதிக்கும் மரபைக் கொண்ட பௌத்ததை நவீன உலகிற்கான சமய நெறியாக அறிவிக்க முடிந்தது, அதே காரணத்தால்தான் அயோத்திதாசரால் பௌத்தத்தைத் தமிழ் நெறியாக மறு உருவாக்கம் செய்ய முடிந்தது.

(நமது தமிழ்மண், பிப்ரவரி-2015)

உரையாடல்: 5-4 மீந்து நிற்பவர்களின் அரசியல்-பிரேம்

உரையாடல்:  5-4   மீந்து நிற்பவர்களின் அரசியல்

கேள்வி:

பெண்ணரசியல், சூழலரசியல், சிறுபான்மை இன, மத மக்களுக்கான உரிமையரசியல் என்பவையெல்லாம் தேவை என்பதில், யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

 ஆனால் இதில் ஒரு சிக்கல் உள்ளது. உலகு தழுவிய முதலாளித்துவ, பொருளாதார  சக்திகள், எல்லாவற்றையும் கபளீகரம் (appropriation) செய்யும் தன்மை கொண்டதாக உள்ளது. மேற்கண்ட மாற்று சிந்தனைகளைத் தம் வர்க்க நலன் குறித்த தன்னுணர்வுடன், தமது வர்த்தக லாப நோக்கங்களுக்கு இடையூறு இல்லாத வரை அங்கீகரிக்கவும் கையாளவும் முன்வருவதைக் காணமுடிகிறது.

தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலம் செய்யப்படும் பெண்ணிய,  சூழலிய விழிப்புணர்வு, தன்னிறைவுத் திட்டங்கள், தம் வர்க்க நலனில் சிறிதும் சமரசமின்றி பெண்ணியம் பேசும் உயர்தட்டு அறிவாளிகள், தமது சாதீய மேலாண்மையை தக்க வைத்துக் கொண்டே இனவிடுதலை அரசியல் பேசுபவர்கள், ஊழலரசியலில் திளைத்து வளர்ந்து பின் சாதியெதிர்ப்பு பேசுபவர்கள், பூர்வகுடி மலையின மக்களைப் பற்றிய அடிப்படைப் புரிதலின்றி சூழலியம், கானுயிர் பாதுகாப்பு எனப் பேசுபவர்கள், நுகர்வுக் கலாச்சாரத்தில் திளைத்த வண்னம், மேற்கண்ட அனைத்து அரசியலையும் பேசுபவர்கள், இவர்களின் பின் தனித்தனி அணிகளாகத் திரண்டுள்ள மக்கள் என உருவாகியுள்ள ஒரு குழப்பமான நிலைக்கும் உலகு தழுவிய முதலாளித்துவ அரசியலுக்கும் தொடர்பு இல்லை எனச் சொல்லிவிட முடியாது.

இந்நிலையில் அப்பெரும் சக்திகள் கட்டமைக்கும் களத்திற்குள்தான் மேற்கண்ட போராட்டங்களை நிகழ்த்தியாக வேண்டும். அவ்வாறு மேற்கொள்ளப்படும் போராட்டங்கள் அரசியல் ரீதியாக சரியானவை எனக் கொண்டால், மாற்று அரசியல் சிந்தனையாளர்கள் அறம் சார்ந்த சிக்கலான  கேள்விகளை எழுப்பிக் கொள்ளாமல்,  தங்களின் அரசியல் செயல்பாடுகளின் இடத்தை உறுதி செய்யவும் பரவலாக்கவும் சில சமரசங்களோடு மக்களை சென்றடையும் வெகுஜன ஊடகங்களையும் இன்ன பிற கட்டமைப்புகளையும், நிதியுதவிகளையும், பயன்படுத்திக்கொள்ளலாம் அல்லவா? இதை எப்படி பார்க்கிறீர்கள்?

[ராஜகாந்தன், அசோக்ராஜ், கருணாகரன்]

பதில்:

பிரேம்

பெண்ணிய அரசியல்,  சூழலியல் அரசியல், சிறுபான்மை இன, மத, மொழி அரசியல் என்பவை தனித் தனியாக இயங்கக்கூடிய அரசியல் இயக்கங்களோ, அரசியல் சக்திகளோ அல்ல. சமூக, அரசியல், பொருளாதார, பண்பாட்டு அமைப்புகளை வழி நடத்தும் முன் நிபந்தனைகள். அவை மக்கள் சார்ந்த திட்டமிடுதல்கள், செயல்பாடுகள் மற்றும் அறிவாக்க முறைகள் அனைத்திலும் ஊடுருவியிருக்க வேண்டிய மதிப்பீடுகள் மற்றும் கருத்தியல்கள். இன்னொரு வகையில் அவை விடுதலை நோக்கிய செயல் பாட்டுக்கான  நடத்தையியல் முறைகள். நவீன மனித மதிப்பீடுகள் மற்றும் மனித அடையாளங்களின் வழிகாட்டு நெறிகளில் அவை கலந்திருக்க வேண்டும்.

பாலின ஒடுக்குமுறை எங்கெங்கு உள்ளதோ அங்கெல்லாம் பெண்ணிய அரசியலும், இயற்கையின் சமநிலை நுகர்வுக்காகச் சுரண்டப்படும் நிலையில் சூழலியல் அரசியலும், இனம், மதம், மொழி, சாதி என்ற ஏதாவதொன்றின் அடிப்படையில் மக்களின் மீது அடக்குமுறையும் வன்முறையும் ஏவப்படும் பொழுதும்,  அவர்களின் தன்னுரிமைகள், வாழ்வாதர உரிமைகள் பறிக்கப்படும் பொழுதும் அவற்றின் அடிப்படையிலான அரசியலும் உருவாகிப் போராட்டங்களாகவோ அரசியல் அழுத்தங்களாகவோ வெளிப்படும். இங்கு எழும் முதல் முதல் கேள்வியே மக்கள் அரசியலடைவதா இல்லையா?  அடுத்த கேள்வி: எந்தக் கருத்தியல் அடிப்படையில் அரசியல் அடைவது? மூன்றாவது கேள்வி: அரசியல் அடைந்த பின் அதனை எப்படித் தொடர்வது, தொடர்வதற்கான போராட்ட வழிமுறைகள் என்ன? இந்தக் கேள்விகள் அத்தனைக்கும் முன் உள்ள மிக அடிப்படையான ஒரு கேள்வி: மக்களுக்கு அரசியலடையும் உரிமை, அரசியலை மாற்றும் உரிமை இருக்கிறதா இல்லையா? இந்தக் கேள்விக்கு ஒரு அமைப்பு அளிக்கும் பதிலில் இருந்துதான் மக்கள் அரசியலின் வடிவமும் செயல்பாடும் நிர்ணயிக்கப்படுகிறது. இந்தக் கேள்விகளை எழுப்பப் பயிற்சி பெறும் பொழுதுதான் மக்கள் அரசியல் சக்தியாக உருவாகிறார்கள். போராட உரிமை அற்ற மக்கள் அடிமைகளாக வைக்கப்பட்டிருக்கிறார்கள், போராட விரும்பாத மக்கள் அடிமைகளாகத் தங்களை வைத்துக் கொள்கிறார்கள், அதில் இன்புறுகிறார்கள். போராட்டங்கள்  ஒற்றைத் தன்மையுடன், ஒற்றை இலக்குடன் இருக்க வேண்டும், அவை ஒற்றைக் கருத்தியலின் அடிப்படையில்தான் நிகழ முடியும் என்ற முன்முடிவுடன் இதனை அணுகினால் ஒரு போராட்டமும் நிகழ வாய்ப்பில்லை.

உலகு தழுவிய முதலாளித்துவ, பொருளாதார  சக்திகள் மக்களின் போராட்டங்களையும் விடுதலைக் கோரிக்கைகளையும் கையகப்படுத்தியும் தம் எல்லைக்கு தக்க உள்ளடக்கியும் தம் நலனுக்கு உகந்த வகையில் ஊக்குவித்தும் அரசியல் உத்தியாகப் பயன்படுத்த முடியும் என்பது மறுக்க முடியாத நடப்பியல் உண்மை. ஏனெனில் முதலாளித்துவ, பொருளாதார, வணிக சக்திகளும் இனம், மொழி, நிலம், மக்கள் சார்ந்த கட்டமைப்புகளாவே உள்ளன. முதலாளித்துவம், உலக முதலீட்டுச் சக்திகள் என்பவை தனித்த தன்னிறைவு கொண்ட இயந்திரங்கள் அல்ல. அவை நாடுகள் சார்ந்து, நிலங்கள் சார்ந்து, மக்கள் தொகுதிகள் சார்ந்து இயங்கும் உலக வலைப் பின்னல்கள். அவை முற்கால இறையதிகார, அரசதிகாரச் சக்திகளாகத் தற்போது இயங்கவில்லை.  மக்கள் அரசியல் என்ற அதிகாரக் கட்டமைப்பையும், நவீன தேசியம் என்ற நிலவியல்  கட்டமைப்பையும், சமூகப் பங்களிப்புடன் கூடிய  நவீன ராணுவக் கட்டமைப்புகளையும் கொண்ட கூட்டு இயந்திரங்களாக அவை உள்ளன. இந்தப் பொருளை இந்த வகை மனிதர்கள் பார்க்கவும் உரிமை இல்லை என்ற மரபான கொடுங்கோன்மைக்கும் இந்தப் பொருளை இந்த இந்த மனிதர்கள் நுகர்ந்தே ஆகவேண்டும் என்று நிர்ப்பந்திக்கும் சந்தைப் பொருளாதாரத்திற்கும் இடையில் உள்ள இடைவெளியில்தான் இன்றைய மக்களின் இடம் வைக்கப்பட்டுள்ளது.

ஏகாதிபத்திய நாடு ஒன்றில் உள்ள மக்களின் கூட்டு உளவியல் மற்ற நாடுகளின், இனங்களின் வாழ்வாதாரங்களைக் கொள்ளையிடும் தன் நாட்டுடைய பொருளாதாரத் திட்டமிடுதல்களை ஏற்றுக் கொண்டதாக, பிறநாடுகள் மீதான  தன் நாடு செலுத்தும் வன்முறைகளை நியாயப்படுத்தும் தொடர் செயல்பாட்டின் பகுதியாக மாறிவிடுகிறது. தன் நாட்டில் உள்ள சிறுபான்மையினர் மீதான சுரண்டலை நியாயப்படுத்தும் பொது உளவியலும் அத்துடன் இணைந்து கொள்கிறது.  இதிலிருந்து விலகிய மக்கள் தொகுதிகள் தம்மை விளிம்பு நிலைப்படுத்திக் கொண்டவையாகவே மாறும். இந்த வெளியேற்றம் குற்றவியலின் ஒரு பகுதியாக, தேசத்திற்கெதிரான கலகமாக அடையாளம் காணப்படும்.  இந்த வெளியேற்றமும் ஒத்துழையாமையும் கலகமும் பெருகித் திரளும் பொழுது ஒரு அரசியல் அமைப்பு உடைந்து மற்றொரு அமைப்பு உருவாகிவிடும், இது நவீன அரசியல் சமன்பாடு.  புரட்சிகளின் காலம் என்று நாம் அடையாளம் காணும் பதினெட்டு, பத்தொன்பது, இருபதாம்  நூற்றாண்டுகளில் நிகழ்ந்த பெரும் அரசியல் மாற்றங்கள்  அமைப்பு உடைதலின் வழி, அரசாங்கங்கள் மாறியதன் வழி  நிகழ்ந்தவை. என்றாலும் உள்ளடக்குதல், இடம் அளித்தல், தன்வயப்படுத்தல் என்ற வகையில் முந்தைய அமைப்பின் உள்ளியக்கங்களைத் தொடரக்கூடியனவாகவே இருந்தன. ஜார் வம்சத்தின் முடியாட்சி உடைய கம்யூனிஸ்ட் கட்சி காரணமாக அமைந்தாலும் முதல் உலகப் போரின் போது உருவான ரஷ்ய தேசிய ஒன்றிணைப்புதான் அதனை நடப்பியல் சாத்தியமாக்கியது. பொருளாதாரம், வாழ்க்கைத் தேவைகள், மனித உரிமைகள் என அனைத்திலும் மக்கள் பெருங்கேடுகளை அனுபவித்த போது, உடைமை வர்க்கத்திற்கும் உழைக்கும் மக்களுக்கும் இடையில் வன்மம் கூடிய பொழுது, மக்களின் மீதான வன்கொடுமைகள் அடக்குமுறைகள் பெருகிய போது ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி மக்களின் உணர்வுகளை ஒன்றிணைத்தது,  அங்கு சோஷலிசம் என்ற தேசியப் பொருளாதாரத் திட்டமிடுதலுடன் கூடிய அரசு உருவானது. அந்த அரசுதான் பின்னாளில் ஒரு ராணுவப் பேரரசாக, ஒரு ஏகாதிபத்திய கேந்திரமாக உருவானது. அந்நாட்டின் மக்களுக்கான வாழ்வாதாரங்களையும் உறுதி செய்த அதே அரசுதான் மற்ற நாடுகளைச் சுரண்டவும் உலக வளங்களைக் கொள்ளையிடவும் கூடிய ராணுவ சக்தியாகவும் உலக அரசியலை உளவு பார்த்து தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் சதிகளின் தலைமையகமாகவும் மாறியது.  1776-ஆம் ஆண்டு “அனைத்து மனிதர்களும்   சமமாகப் படைக்கப்பட்டவர்கள், கடவுள் அனைவருக்கும் வாழ்வதற்கான உரிமை, சுதந்திரம்,  இன்புற்று வாழ்தல் என்பதற்கான   மறுக்க முடியாத உரிமைகளை அளித்திருக்கிறார். இந்த உரிமைகளை உறுதிசெய்யவே மனிதர்கள் அரசாங்கங்களை உருவாக்கியுள்ளனர், அவற்றின் நீதிசார்ந்த அதிகாரம் மக்களால் அளிக்கப்பட்டது. இந்த நோக்கத்தைக் குலைக்கும் வகையில் எந்த அரசாங்கம் நடந்தாலும் அவற்றை மாற்றியமைக்கவோ அல்லது தூக்கியெறிந்து விட்டு புதிய அரசாங்கத்தை அமைக்கவோ மக்களுக்கு உரிமை உள்ளது.” என்ற புரட்சிகரமான அரசியல் நெறியை அடிப்படையாக வைத்து  தொடங்கப்பட் அமெரிக்கச் சுதந்திர அமைப்பு தன் பொருளாதாரத்தை அடிமை உழைப்பின் வழி பெருக்கிக் கொண்டதுடன் இன ஒடுக்குதலை இன்று வரை முழுமையாக நீக்க முடியாமல் தொடர்ந்து வருகிறது. இன்று உலக நிலம்சார் அரசியலைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டிருக்கும் ஆதிக்க சக்தியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. 1789-இல் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற கொள்கைகளை அறிவித்து உருவான பிரஞ்சுப் புரட்சி தன் அமைப்பு மாற்றத்தால் உலக காலனிய ஆதிக்கத்தில் தன் பங்கைப் பலமடங்காகப் பெருக்கிக் கொண்டது. ஸ்பானிய, போர்த்துகிசிய, இத்தாலிய நவீன அரசுகள்தான் ஆப்பிரிக்க, தென்னமெரிக்க நிலங்களையும் மக்களையும் கொள்ளையிட்டு இன்றுள்ள அய்ரோப்பிய சமூகத்தின் குடிமை வாழ்வு, வாழ்வாதார வளங்களை உருவாக்கித் தந்தன. சுதந்திரத்தின் பெயரால் உருவான அரசுகள் அனைத்தும் இன்று பயங்கரவாத அரசுகளாக செயல்பட்டுக் கொண்டுள்ளன. நவீன உலகின் அரசியல், சமூக அமைப்புகளில் இவற்றின் வன்முறை உள்ளீடாகத் தொடர்ந்கொண்டே உள்ளது.

அதே சமயம் நாம் அறியும் நவீன உலகை உருவாக்கியவையும் இந்த நிகழ்வுகள்தான். அதனால்தான் இன்றைய உலக முதலாளித்துவமும், நவீன பொருளாதாரச் சக்திகளும் தனித்த அமைப்புகளாக இன்றி அனைத்திற்குள்ளும் கலந்து கிடக்கின்றன. உள்ளடக்குதல், இடம் அளித்தல், தன்வயப்படுத்தல் என்ற உத்திகளின் வழி அவை நுண் அரசியலைச் செயல்படுத்துகின்றன, நவீன வணிகமும் பொதுச் சந்தையும் அவற்றின் களங்களாக உள்ளன. நவீன கருத்தியல்கள், நவீன வாழ்வியல் மதிப்பீடுகளின் மொழியில்தான் இவை பேசியாக வேண்டும். நவீன குறியமைப்புகள் வழிதான் அவை செயல்பட்டாக வேண்டும். சுதந்திரம், முன்னேற்றம்,  பொது நலன், சமூக ஒப்பந்தம், நீதி, அமைதி என்ற கருத்தியல்களை முன் வைத்தே அவை தம்மை பாதுகாத்துக் கொள்ள இயலும். அதே சமயம் அவை அனைவருக்கும் கிடைத்துவிடாமல் பார்த்துக் கொள்வதுதான் முதலீட்டு அதிகாரத்தின் அடிப்படை விதி.

இன்றைய முதலீட்டு அரசியல் இயந்திரங்கள் எதிர்காலத்தை வைத்துத் தன்மை நியாயப்படுத்திக் கொள்வதில்லை, கடந்த காலத்தை வைத்துத் தம்மை நியாயப்படுத்திக் கொள்கின்றன, அதிலிருந்து மக்களை தாங்கள் மீட்டதாகச் சொல்லித் தம்மை நியாயப்படுத்திக் கொள்கின்றன. (சமூகப்புரட்சிகள் தம் நியாயத்தைக் கடந்த காலத்திலிருந்து பெற்றுக் கொள்ள முடியாது- கார்ல் மார்க்ஸ்)  கடந்த காலம் என்பது முடியரசுகளின் கொடுங்கோன்மை, மரபான நிறுவனங்களின் அடக்குமுறைகள், மத நிறுவனங்களின் தண்டனைகள்,  பல்வேறு பழமைவாத ஒடுக்குமுறைகளால் நிரம்பிக் கிடப்பது.  அச்சமூட்டும் கடந்த காலம், உறுதி செய்யப்படாத எதிர்காலம் இரண்டுக்கும் இடையில் வாழ நேர்ந்துள்ள மக்கள் உலக அளவில் ஒற்றைத் தன்மை கொண்டவர்கள் இல்லை என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். மக்கள் தமக்கான அரசியலை உருவாக்க, வாழ்வுரிமைகளைப் பாதுகாக்கப் போராடுவதைவிட வாழ்தலுக்காகப் போராடுதல் என்ற நிலைக்கு பல நாடுகளில் தள்ளப்பட்டுள்ளனர். இன்னொரு வகையில் போராடுதலுக்கான ஆற்றலும், களங்களும், இடமும் இல்லாத நிலையில் பெரும் பகுதி மக்கள் வைக்கப்பட்டுள்ளனர்.

மக்கள் ஆட்சி நசுக்கப்பட்டுள்ள ஒரு ராணுவ சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக அந்நாட்டு மக்கள் போராட விரும்புகிறார்கள். ஆனால் அவர்களுக்கு அடிப்படைக் கட்டமைப்புகள் இல்லை. அந்த நிலையில் ஒரு வல்லாதிக்க அரசு ஆயுதங்களை வழங்கி அரசியல் மாற்றத்தைக் கொண்டு வருகிறது. பின் அந்த நாட்டிற்கு உதவி செய்வதாக உள்நுழைந்து  கனிம, இயற்கை வளங்களைத் தன் வயப்படுத்திக் கொள்கிறது. அந்த மக்கள் அரசு உறுதியடையாமல் இருக்கவும் தன் கட்டுப்பாட்டில் அந்நாட்டைத்  தொடர்ந்து வைத்திருக்கவும் அந்நாட்டின் ஒரு குறிப்பிட்ட சிறுபான்மை மத, இன மக்களிடம் பாதுகாப்பற்ற உணர்வை வளர்த்து ஒரு அமைதியின்மையை உருவாக்குகிறது. இந்தக் கொடுஞ்சுழல் எங்கு முடியும் என்பதை யாரால் யூகிக்க இயலும்? ஆப்கானிஸ்தானில் பெண்கள் அடிமை நிலையில் வைக்கப் பட்டிருக்கிறார்கள் என்பதை அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் கூறுவதன் உட்பொருள் அந்தச் சமூகத்தை விடுதலை நோக்கி அழைத்துச் செல்வதல்ல தமது படைகளை அங்கு நிரந்தரமாக நிலைப்படுத்துவது. பிரிடிஷ் காலனிய அரசு இந்தியாவின் தீண்டாமைக் கொடுமையை நீக்குவது பற்றித் தொடர்ந்து பேசி வந்தது.  அதன் நோக்கம் இந்தியச் சமூகத்தை சாதியற்ற சமூகமாக மாற்றுவதல்ல, இந்தியாவின் தன்னாட்சி உரிமையை அடிப்படையில் கேள்விக்குள்ளாக்குவது. இவற்றிற்கிடையில்தான்  தொடர்கிறது மக்களின் அரசியல், இவற்றை மீறியும் செல்வதுதான் மக்களுக்கான அரசியல். இந்தத் தளத்தில் இருந்து இக்கேள்வியை அணுகும் போது நாம் சிலவற்றைப் புரிந்து கொள்ள இயலும்.

இந்தியச் சமூகங்களில் மக்கள் ஒற்றை அமைப்பாக, ஒற்றை அரசியல் திரளாக மாறுவது இன்று சாத்தியமில்லை, அப்படியொரு அடையாளம் இன்றுவரை உருவாகவில்லை.  இடம் சார்ந்தும் களம் சார்ந்தும்தான் அரசியலாக்கம் நிகழ முடியும். நகர் சார்ந்த உழைக்கும் மக்கள், அமைப்பு சாராத உழைப்பாளிகள், நிலமற்ற வேளாண் மக்கள், கூலியுழைப்பிலும் கொத்தடிமை உழைப்பிலும் நசுங்கிக் கொண்டிருக்கும் மக்கள், விளிம்பு நிலைச் சாதிகள், தீண்டாமைக்குட்பட்ட சமூகங்கள், பழங்குடிச் சமூகங்கள், வடகிழக்கு மாநிலங்களில் உள்ளது போன்ற மண்சார்ந்த தன்னுரிமை கோரும் இனக்குழு மக்கள், தம் வாழிட உரிமைகளை இழந்து ஏதிலிகளாக இடம் பெயர்ந்து வாழும் மக்கள், வேளாண் தொழிலைத் தன் வாழ்வாகக் கொண்டுள்ள மக்கள், நகர்ப்புற கூலித்தொழில் செய்யும் மக்கள், உழைப்பு உரிமை அற்ற மக்கள், தேசிய வளங்களில் பங்கற்ற மக்கள் குழுக்கள் எனத் தனித்தனியாகவே மக்களின் திரட்சி நிகழ முடியும், அவர்களின் அரசியலாக்கமும் நிகழ் முடியும். ஒருவரின் அரசியல் மற்றவருக்கு பயங்கரவாதமாக, தேச விரோதச் செயலாகத் தோன்றம் தரும். இந்த அரசியலாக்கத்தில் பலவித குழப்பங்கள் தலையீடுகள் இருப்பதையும் தவிர்க்க முடியாது. சீனா நிலவழியாக இணைக்கப்பட்டிருப்பதால்தான் இந்தியாவில்  மக்கள் யுத்த அரசியல் 1960-களில் வசந்தத்தின் இடிமுழக்கமாக உருவாகி இன்று வரை தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கிறது. சோவியத் அரசும் ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியும் இந்திய இடதுசாரி கட்சிகளுக்கு மட்டுமில்லை உலக இடதுசாரி அரசியலுக்கே ஆதார சக்தியாக, அடிப்படை பலமாக இருந்து வந்ததை நாம் மறந்துவிட முடியாது. இந்தியாவில் இஸ்லாமியர்களை நசுக்கும் இந்துராஷ்டிரியம் உருவாகாமல் இருப்பதற்கு அரேபிய எண்ணை வள அரசுகள்தான் இன்று வரை காரணமாக இருந்து வருகின்றன. பங்களாதேசத்தின் மொழி உரிமை மற்றும் தன்னாட்சி உரிமைகளை இந்திய அரசு ராணுவத் தலையீட்டால் உறுதி செய்ததும், இலங்கையில் தமிழ் மக்களுக்கு அதே  உரிமைகளை ராணுவத் தலையீட்டால் இல்லாமலாக்கியதும்கூட இந்த வகை குழப்பங்களின் அடையாளங்கள்தான்.

உலகு தழுவிய முதலாளித்துவ அரசியலுக்கு வெளியே, வணிக, சந்தைக் கட்டமைப்புகளில் இருந்து விலகி உள்ளது என்று சொல்லத் தகுந்த ஒரு இடம், களம் இன்று இல்லை. மார்க்சிய அமைப்புகள் இன்று தொழிற் சங்க அமைப்புகளை மட்டும் தான் சார்ந்துள்ளன. பன்னாட்டு, பெருமுதலீட்டுத் தொழில்களை ஆதரித்து வேளாண் மக்களின் மண்ணுரிமையை, பழங்குடி மக்களின் நிலவியல் பண்பாட்டை மறுக்கும் நிலைக்கு இடதுசாரி அரசியல் செல்வதற்கும், ரஷ்யாவின் அணு உலையில் கதிர்வீச்சு இல்லை, இருந்தாலும் மக்களைப் பாதிக்காது  என்று சொல்லும் அளவுக்கு அறிவியல் மறுப்பு நிலைப்பாடு எடுப்பதற்கும் இந்தக் குழப்பமான உலக அரசியல்தான் காரணமாக உள்ளது.

 இந்திய மக்கள் ஒன்றிணைந்த அரசியல் சக்தியாக மாறுவதிலும் கடுமையான சிக்கல்கள் உள்ளன.  உலக முதலாளித்துவம், அரச ஒடுக்குமுறை, உலகமயமான சுரண்டல் என்பவற்றிற்கெதிராக மக்கள் சக்தி உருவாகி மாற்றங்களை நோக்கிச் செல்லுவதற்குமுன் பண்பாடு, மதிப்பீடுகள், சமூக உளவியல் மட்டங்களில் மாற்றங்கள் நிகழ வேண்டும். அந்த மாற்றங்கள் நிகழும் வரை அரசியல் செயல்பாடுகளை ஒத்திப்போடுவதும் பயனளிக்காது. அரசியல் செயல்பாட்டின் வழி அறிவை அடைவதும், அரசியல் அறிவின் வழி உளவியல் மாற்றங்கள் உருவாவதும் தொடர்புடைய நிகழ்வுகள். மாற்று அரசியல் சிந்தனையாளர்கள், செயல்பாட்டா ளர்களின் தேவை இந்தத் தளத்தில்தான் அதிகமாக உறுதி செய்யப்படுகிறது.  இன்றுள்ள ஊடகங்கள், மொழி அமைப்புகள், சொல்லாடல் களங்கள், அறிவுத்துறைகள் அனைத்தின் வழியாகவும் மக்களின் அரசியலைக் கொண்டு செல்ல வேண்டும். அதே சமயம் அவற்றைக் கடந்த மாற்று ஊடகங்களையும் கண்டறிய வேண்டும்.

தீண்டாமைக் கொடுமையிலிருந்து வெளியேற சில ஒடுக்கப்பட்ட மக்கள் கிறித்தவத்திற்கு மாறிய நிகழ்வை பிழைப்புவாதம் என்று சொல்ல எந்தப் புனித அரசியலுக்கு உரிமையிருக்கிறது? சமரசங்கள், ஒப்பந்தங்கள், பரிமாற்றங்கள் வழியாக மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், தம் வாழ்வுரிமைகளை மீட்கவும், பல சமயங்களில் இனப் படுகொலைகளில் இருந்தும், இடப்பெயர்ச்சிகளில் இருந்தும் தப்ப முடியும் என்றால் அவற்றைத் தவறென்று சொல்ல வெளியே உள்ள அரசசியல் சக்திகளுக்கு எந்த உரிமையும் இல்லை என்றுதான் நினைக்கிறேன்.

சமூகப் புரட்சிகள் தம் நியாயத்தைக் கடந்த காலத்திலிருந்து பெற்றுக் கொள்ள முடியாது என்ற மார்க்ஸின் சமன்பாட்டில் இதுவும் உள்ளடங்கியுள்ளது: நிகழ்காலத்தை மறுத்து விட்டு எதிர்காலத்தைக் கொண்டு மட்டுமே சமூகப் புரட்சிகள் தம்மை நியாயப் படுத்திக்  கொள்ளவும் முடியாது.

[மக்கள் அரசியல், மக்கள் போராட்டங்கள் வழிதான் மக்களுக்கான அறங்களும் அடையாளங்களும் உருவாக முடியும் என்பதை போர்களுக்கு எதிரான போராட்டங்கள் அல்லது மக்களை உருவாக்கும் போராட்டங்கள் என்ற கட்டுரையில் சற்று விரிவாக விளக்கியிருக்கிறேன்.]

உரையாடல் : 10 இந்துத்துவம், இந்து தேசியம் என்பவை இந்துக்களுக்கும் எதிரானவை-பிரேம்

உரையாடல் : 10  இந்துத்துவம்,  இந்து தேசியம் என்பவை  இந்துக்களுக்கும் எதிரானவை

கேள்வி:

மத்திய அரசில் தற்போது ஏற்பட்டிருக்கும் ஆட்சி மாற்றத்துக்குப் பின் இந்து மதவாத பிற்போக்குச் சக்திகள் ஊக்கம் பெற்றிருப்பதாகக் கருதுகிறீர்களா? இந்துமத மேலாண்மைச் சிந்தனைகளை விதைக்கும், வளர்க்கும் எழுத்து முயற்சிகள் தமிழில் முன்னெடுக்கப்பட்டால், தமிழ் மரபின் பவுத்த, சமண சிந்தனைகளையும், சிந்தனையாளர்களையும் மீட்டுருவாக்கம் செய்து பொதுச் சொல்லாடல்களங்களில் விவாதிப்பது  ஒரு சமனிலையாக்கம் என்ற வகையில் பயன்படுமா?

[ராஜகாந்தன், அசோக்ராஜ், கருணாகரன்]

பதில்:

பிரேம்

தேசிய அளவில் இந்து மதவாத அரசியல் தனிப் பெரும்பான்மை பெற்று வலுப்பட்டுள்ள இந்தக் காலகட்டத்தில்கூட பொத்தம் பொதுவாக இந்திய மக்கள் அனைவரும் இந்துத்துவக் கருத்தியிலை ஏற்றுக் கொண்டார்கள் என்று நாம் சொல்ல இயலாது. காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கட்சிகள் தற்கால அரசியலுக்கான திட்டமின்றி பின்னடைந்த போது பாரதிய சனதா கட்சி மக்களுக்கு ஒரு மாற்றாகத் தெரிந்தது. உலக அளவிலான சந்தைச் சுரண்டல், நுகர்வுப் பொருளாதாரம் மற்றும் வளங்களைக் கொள்ளையிடும் அரசியல் இந்திய அரசியலைத் தனக்கேற்ப மாற்றியமைக்கத் தொடங்கிய காலகட்டமான 1980 களிலிருந்து இந்தச் சிக்கல் தொடங்கிவிட்டது. காங்கிரசைத் தன் களப்பணிக் கருவியாக வைத்துக் கொள்ள முடியும் என்று பன்னாட்டு முதலாளியம் நம்பிய வரை அக்கட்சியை தேசிய அரசியலில் பலப்படுத்தியது. ஒரு கட்சியை மட்டும் நம்பித் தன் திட்டங்களை இந்திய மண்ணில் விரிவுப்படுத்த முடியாது என்பதையும், இடதுசாரி அரசியல் இந்திய மக்களிடம் மீண்டும் பரவ வாய்ப்புள்ளது என்பதையும் புரிந்து கொண்ட போது காங்கிரசுக்கு இணையான அதே சமயம் பழமையான மற்றொரு கட்சியை வளர்க்க வேண்டும் என்ற தேவையை பன்னாட்டு முதலாளியம் அறிந்து கொண்டது. உலக அளவிலான இந்தத் திட்டமிடலின் விரிவைத்தான் இந்துத்துவ அரசியலின் புத்துருவாக்கத்திலும் வளர்ச்சியிலும் நாம் காண்கிறோம்.

1970-கள் வரை மக்களிடம் இருந்த மாற்றுகள், தீர்வுகள் பற்றிய நம்பிக்கைகள் 1980-களில் மெல்லக் கரைந்து முதலாளித்துவத்தின் பலம் பற்றிய மிரட்சி, அரசு ஆயுதங்கள் பற்றிய திகைப்பு,  பிற்போக்குச் சக்திகளின் வன்முறை பற்றிய அச்சம் என்பவை வளர்ந்தன. இந்திய மக்கள் அரசியலில் உருவான நம்பிக்கையின்மை மற்றும் பொது அச்சுறுத்தல்தான் இன்றைய இந்துத்துவச் சக்திகளின் பெருக்கத்திற்கான அடிப்படை. பஞ்சாப், கஷ்மீர், வடகிழக்கு மாநில மக்களின் தன்னுரிமைப் போராட்டங்கள் தண்டகாரண்ய நிலப்பகுதி மக்களின் வாழ்வுரிமைப் போராட்டங்கள் அனைத்தைப் பற்றியுமான எதிர் நிலைப்பாடுகளை உருவாக்கிப் பாதுகாப்பற்ற தேசியம் என்ற சொல்லாடலைக் கட்டமைத்துத் தன் அச்சுறுத்தும் அரசியலுக்குப் பயன்படுத்திக் கொண்டன இந்துத்துவச் சக்திகள். வன்முறைக்கெதிரான இந்திய அரசின் சட்டங்களும், திட்டங்களும் இந்து மதவெறி வன்முறைகளைக் கண்டு கொள்ளாமல் விட்டதுடன் அவற்றின் பரவலுக்கு ஆதரவாகவும் பலநேரங்களில் செயல்பட்டன. வன்முறை அரசியலைத் தன்  ‘கொடியற்ற’ படைப்பிரிவின் வழியாகச் செயல்படுத்தி வந்த காங்கிரஸ் 1985-இல் சீக்கியர்களின் மீதான கொடும் தாக்குதல் வழியும் 1989-இல் இலங்கைத் தமிழ் மக்கள் மீதான ராணுவத் தாக்குதல் வழியாகவும் தன் அச்சுறுத்தும் அரசியலை விரிவுபடுத்தியது. இந்த வகைத் தடைகள் இல்லாத பாரதிய சனதாவுக்குக்  கொடியுடன் கூடிய படை அரசியல் அதிக பலனளிப்பதாக இருந்தது. காங்கிரஸ்  பழைய முதலாளிகளின் அணிவகுப்பு என்றால் பாரதிய சனதா கட்சி புதிய முதலாளிகளின் அணிவகுப்பாக உருவானது. உலக மயமாக்கத்தை யார் விரைவாக, வலிமையாக இந்தியாவில் கொண்டு வருவது என்பதில் இரண்டு கட்சிகளுக்கும் கடுமையான போட்டி இருந்து வருகிறது.

1984-இல் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி கொலை செய்யப்பட்டது, 1991-இல் முன்னாளைய பிரதமர் ஒருவர் கொலை செய்யப்பட்டது. 1992-இல் பெரிய அளவிலான திட்டமிடலுடன் நிகழ்த்தப்பட்ட மசூதித் தகர்ப்பு, அதனைத் தொடர்ந்து நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் என அச்சுறுத்தும் அரசியல் பெருகி வளர்ந்து 1996-இல் 194 மக்களவை இடங்களைப் பெறவும் 1999-இல் கூட்டணியமைத்து மத்தியில் ஆட்சிப் பொறுப்பை ஏற்கவும் உரிய  அளவுக்கு இந்துத்துவக் கட்சியைக் கொண்டு சென்றது. அதன் பின் உருவான 10 ஆண்டு கால இடை வெளியை அக்கட்சியும் அதன் கிளை அமைப்புகளும் திட்டமிட்டுப் பயன்படுத்திக் கொண்டுள்ளன. இன்றைய அச்ச அரசியல் அச்ச மூட்டுபவர்களிடமே தங்களை ஒப்படைக்கும் மக்கள் உளவியலை உருவாக்கியுள்ளது.

[குஜராத் முஸ்லிம் மக்கள் படுகொலையின் போது (2002) பதிவு செய்யப்பட்டு உலகம் முழுதும் பரவிய  இரு படங்கள் இந்திய அச்ச-அரசியல் உளவியலைப் புரிந்து கொள்ள உதவும்.

IMAGE-1

IMAGE-2

கண்கள் கலங்கத் தன்னைத் தாக்க வரும் ஒரு கூட்டத்தின் முன் கைகூப்பிக் கெஞ்சும் ஒரு மனிதர், படுகொலை செய்வேன் என்பதைப் பரவசவெறியுடன் அறிவிக்கும் ஒரு தொண்டர்]

எண்ணிக்கையைச் சொல்லிக் காட்டி புரிய வைக்க முடியாத தொகைகளில் ஊழல் கணக்கு, வெளிநாட்டில் குவிந்துள்ள இந்தியப் பணத்தைக் கொண்டு வந்தால் இந்தியர்கள் ஒவ்வொருவர் கணக்கிலும் சில லட்ச ரூபாய்கள் வந்து சேர்ந்து விடும் என்ற பூதக்கனவு, பத்தாண்டு காங்கிரஸ் ஆட்சி சலித்துப் போனதின் விளைவு, பன்னாட்டு உள்நாட்டு முதலாளிகளுக்கான பாதுகாப்புக்கும் விரிவுக்கும் உத்தரவாதமளிக்கும் கொள்கைத் திட்டங்கள். இரும்புக் கரம் கொண்டு எதிர்ப்புகளை அடக்கும் வலிமை உள்ள கட்சியின் ஆட்சி.  இப்படிப் பல காரணங்கள் புதிய ஆட்சிக்கு வழிவகுத்துள்ளன. இஸ்லாமிய வெறுப்பு,  கிறித்துவ இழிப்பு, சனாதனக் கொதிப்பு என்பவை மக்களிடம் அதிக தீய விளைவுகளை ஏற்படுத்தியிருப்பதைக் காணமுடிகிறது. இவற்றைக் கடந்தும் கூட இந்து என்ற வகையில் ஒரு பெரும்பான்மை  மதவாதத் தேசிய உணர்வு இந்தியச் சமூகங்களிடையே ஏற்பட வாய்ப்பு மிகக்குறைவு.

இந்து என்ற பொது அடையாளம் உருவாவதும், திடப்படுவதும் சாதி, மொழி, இனம், நிறம், சமய வழக்குகள், சடங்கு வேறுபாடுகள், பலதெய்வப் பிரிவுகள், பொதுவான சமய நூல் இல்லாமை, குலக்-குடிச் சமயங்களின் வகைமை, தொல்குடி மக்கள், வனக்குடிச் சமூகங்கள் அதிக அளவில் இருப்பது, பொது வரலாறு அற்ற நிலை எனப் பல காரணங்களால் அவ்வளவு இலகுவில் நடக்க வாய்ப்பு இல்லை.

பகவத் கீதையைத் தேசிய நூலாக வைத்தால் சைவ, சாக்தேய, கௌமார, காணபத்திய மக்கள் தொகை அந்நியப்பட்டுப் போகும். ஏற்கனவே ராமராஜியம், ராமஜன்ம பூமி என்ற கட்டமைப்பு சைவ, வைணவ மேலாதிக்கப் போட்டியுணர்வின் காரணமாக தளர்ந்து போனது. பிராமண, சனாதன, வைதிக மையம் கொண்ட இந்து ஆதிக்கம் சூத்திர, சத்திரிய இடைநிலைச் சாதிகளிடம் பெயரளவில் இருக்கலாமே தவிர ஒரு சமூக உளவியலாக மாறுவதில் சிக்கல் இருக்கும்.

மதச்சிறுபான்மையினர் தம்மை அடக்கி ஆள்வதாகவோ, அவர்களே  இந்தியா பொன்னாடாக மாறுவதைத் தடுத்துக் கொண்டே இருப்பதாகவோ அனைத்து இந்து-இந்தியச் சமயத்தினரையும் நீண்ட நாட்கள் நம்ப வைக்க முடியாது. பாகிஸ்தான் மீதான வெறுப்பைத் தீமூட்டி வளர்த்து பால் கொதிக்க வைக்க முடியாது. அதற்கு எரிவாயு தாருங்கள் என மக்கள் கேட்க அதிக காலம் ஆகாது.

மையப்படாத ஒரு மதம், தன்னளவில் ஒருமைப்படாத ஒரு சமயம் எதிர்நிலை, வெறுப்பு உளவியலை மட்டும் வைத்துத் தன்னை தேசிய அடையாளமாக உருவாக்கிக் கொள்ள முடியாது. பாரதிய ஜனதா கட்சியில் ஆட்சியில் இருப்பவர்கள், அமைச்சர்களாக இருப்பவர்கள் பேசுவது ஒன்று,  மக்கள் மத்தியில் உள்ளூர் தலைவர்கள் பேசுவது அதற்கு எதிரான ஒன்று. சாமியார்கள், சாமியாரினிகள் பேசுவது தம் கட்சியின் கொள்கையல்ல என்று தினம் அறிவிக்க வேண்டிய கடமை இன்றைய தலைமை அமைச்சருக்குத் தரப்பட்டிருக்கிறது. இரண்டு மடங்களைச் சேர்ந்த இருபது சாமியார்களை இரண்டு நாட்கள் ஒரே இடத்தில் அடைத்து வைத்துப் பாருங்கள்  இவர்கள் பேசும் ஆன்மிகத் தேசியம், தேசிய ஒற்றுமை என்பதன் நிறம் என்ன என்பது தெரியும். இந்த வேறுபாடுகளின் காரணமாக இந்துத்துவா ஒரு அச்சுருத்தும் பேச்சாகத் தொடர்ந்து இருக்கலாமே தவிர அரசியல் கட்டமைப்பாக மாற வாய்ப்பு குறைவு.

இந்து சமயங்களில் ஒன்றைப் பின்பற்றி, இந்தியத் தெய்வங்களில் ஏதாவதொன்றை வழிபட்டு இந்து என அடையாள அட்டையில் பதிவு செய்து வாழ்வதும் இந்துத்துவ அரசியலை ஏற்று, இந்து மதவெறி இயக்கமாகச் செயல்படுவதும் ஒன்றிணைய வேண்டிய தேவை இல்லை. காங்கிரஸ் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, காமராஜர் ஆட்சி என ஏதாவதொன்றைப் பற்றிக் கொண்டு இந்து அடையாளத்தையும் எந்த வில்லங்கமும் இன்றி மக்கள் தொடர வாய்ப்புகள் உண்டு. இந்த நிலைதான் இந்துத்துவ பாசிசத்திற்கு இடைஞ்சலாக இருக்கிறது, காந்தியைக் கொன்று இந்த நிலைக்கான அடையாள எதிர்ப்பை இந்துத்துவ அரசியல் முன்பு நிகழ்த்திக் காட்டியது. தற்பொழுதுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி கல்வி, அறிவுத்துறை, வரலாற்றுப் புனைவுகள், தொன்மங்களின் மீட்டுருவாக்கம், புராணிக அழகியல், கலை-இலக்கிய வடிவங்கள், கருத்தியல்  தளங்கள், பன்முனை ஊடகங்கள் என அனைத்தின் வழியாகவும்  இதனை மறுகட்டமைப்பு செய்யும் முயற்சிகள்  நடக்கும்.

இதன் ஒரு பகுதியைத்தான் நீங்கள் “இந்துமத மேலாண்மைச் சிந்தனைகளை விதைக்கும், வளர்க்கும் எழுத்து முயற்சிகள் தமிழில் முன்னெடுக்கப் பட்டால்” என்ற வரியாக முன்வைத்திருக்கிறீர்கள். இது இன்று நேற்றல்ல இலக்கிய வரலாறு தொடங்கிய காலத்திலிருந்து நிகழ்ந்து கொண்டிருக்கும் போராட்டம். தமிழ் அச்சு ஊடகம் தொடங்கப்பட்ட போதும் இந்தப் போராட்டம் புதுப்பிக்கப்பட்டது. பக்தி அரசியல் ஒவ்வொரு காலகட்டத்திலும் இருந்து கொண்டே இருக்கும், ஆனால் தமிழில் சிறு தெய்வ மரபுகளும், குலதெய்வ மரபுகளும் வைதிக மையப்படாத இணை மரபுகளும் இதனை கலைத்துக் கொண்டே இருக்கின்றன.

ஒடுக்கப்பட்டோர், ஊருக்கு வெளியே இருக்கும்படி ஒதுக்கி வைக்கப்பட்டோர் மரபுகளும்  இந்து-வைதிக அதிகாரத்தை ஏற்கக் கூடியவை இல்லை. தமிழ்ப் பண்பாடு பற்றிய நவீன கட்டமைப்பு தெரிந்தோ தெரியாமலோ பகுத்தறிவுச் சார்புடையதாக மாறியிருக்கிறது. தொல்தமிழர் வாழ்வு சாதி-வர்ணப் பகுப்பற்றது என்று சொல்லிக் கொள்வதில் நமக்கு விருப்பம் இருக்கிறது. வள்ளுவ மரபைத் தமிழ் அடையாளமாக வைத்துக் கொள்வதில் பெருமை கொள்ளும் சமூகம் நமது.  பெரியாரிய, மதமறுப்புச் சிந்தனைகளை ஒரு புறம் வைத்துக் கொண்டே இந்தியாவிலேயே அதிகக் கோயில்களைக் கொண்ட மண் என்ற பெருமையை தினம் ஒரு புதிய கோயில் கட்டுவதன் மூலம்  தக்கவைத்துக் கொள்ளும் சமூகமும் இது.

பிராமணரல்லாதோர் அரசியல் தொடங்கிய இடம் என்று வரலாற்றுப் பெயர் பெற்ற போதும் பிராமணச் சமூகத்திற்குக் கோயில் கருவறை முதல் குடும்ப நிகழ்ச்சிகள்வரை அதிக மரியாதையை வழங்கி முன்பு வழக்கில் இல்லாத புதிய புதியச் சடங்குகளைப் பெருக்கி அவர்களுக்குத் தடையற்ற வருமானத்திற்கு வழிசெய்து தருவது,  உணவு விடுதிகள், திருமண நிகழ்வுகள் என அனைத்திலும் பிராமணாள் கைப்பதம் என்ற ஒரு நவீன வழக்கத்தை உருவாக்கிப் பேணுவது,  ஊடகங்கள் தொடங்கி உள்ளூர் பஜனை மடங்கள் வரை அய்யர் பேச்சுக்கு அடுத்த பேச்சு கிடையாது என்ற அழிச்சாட்டியங்களை அசட்டுத்தனமாக ஏற்று நடப்பது போன்ற வழக்கங்கள் மூலம் கலப்புத் தன்மை கொண்ட சமூகமாகத்தான் நம்மை வைத்துக் கொண்டிருக்கிறோம்.

இந்தப் பின்னணியில்தான் நாம் ஒன்றைக் கவனிக்க வேண்டும் இந்துமத மேலாண்மைச் சிந்தனைகள் இங்கு தொடர்ந்து இருந்து வந்தாலும் அது இந்துத்துவ, இந்து மட்டும் என்ற அரசியலாக மாறியதில்லை. ஒருவர் மலையாளி  எனத் தெரிந்தே தமிழர்கள் அவரைத் தங்களின் பொன்மனச் செம்மலாகத் தயக்கமின்றி தேர்ந்தெடுத்திருக்கிறார்கள், மராத்தியர் என்று தெரிந்தே ஒரு நடிகரைத் தமிழ் நாட்டின்  ‘வாழும் தெய்வம்’ என்று கொண்டாடு கிறார்கள்.  இது மற்ற மொழி மாநிலங்களில் நடக்க முடியாத அடையாள முரண்.

இதே போன்றுதான் சிலர் பேசித் திரியும் இந்துத்துவம், இந்து தேசியம் போன்ற புனைவுகளையும் தமிழ்ச் சமூகம் கேட்டு ரசிக்குமே தவிர அதனைத் தன் அரசியலாக ஏற்காது. தமிழர்களைச் சுரண்டி வாழ்கிறார்கள் என்று  இஸ்லாமிய வெறுப்பை, கிருத்துவ வெறுப்பை இங்கு யாரும் கொளுத்திவிட முடியாது. அப்படிக் கொளுத்த நினைத்தால் அந்த வெறுப்பின் தனல் முதலில் வட இந்திய முதலாளிகள், தெலுங்கு, கன்னட, மலையாள  ‘மொழி வழி மாற்றாள்’ என்று அறியப்பட்ட இந்துமதப் பகுதியினரைத்தான் முதலில் வருத்தத் தொடங்கும். அப்போது இந்துத்துவ தீர்த்தம் மருந்தாக வந்து காப்பாற்ற முடியாது. தமிழகத்தில் உள்ள இந்தக் குழப்பமான நிலை மாற்று அரசியலுக்குச் சார்பாகவும் அமையாது. அப்படியெனில் மாற்று அரசியல் பண்பாட்டு இயக்கங்கள் தம் பணிகளை மறுஆய்வு செய்து புதிதாகத் திட்டமிட வேண்டும்.

பெண்ணிய, தலித்திய, சூழலரசியல், இடதுசாரி இயக்கங்கள் ஒன்றிணைந்து தமிழ்ச் சூழலுக்கான மாற்றுச் செயல் திட்டங்களை வகுக்க வேண்டும்.  இந்த மறுகோட்பாட்டாக்க முயற்சி நடந்து விடக்கூடாது என்பதில்தான் இன்றைய இலக்கிய-பண்பாட்டு பிற்போக்குக் குழுக்கள் மிகக் கவனமாக உள்ளன. இதற்கெதிரான நுண்கிருமி தாக்குதல்கள் தான் வீண்முரசு, உப்புப் பாண்டவம், ஆட்டோபிக்கிஷன் என்ற பெயர்களில் நடத்தப்படுகின்றன.  அரசியல் தளத்தில் இடைநிலைச் சாதிகளின்   இந்துத்துவ சார்பு நிலை  இன்னும் விரிவான வடிவங்களில் செயல்படக்கூடும்.

தமிழ் மரபின் பவுத்த, சமணச் சிந்தனைகளையும் சிந்தனையாளர்களையும் மீட்டுருவாக்கம் செய்து பொதுச் சொல்லாடல் களங்களில் விவாதிப்பது மாற்று அறிவு என்ற வகையிலும், தமிழ் அறிவு மரபு பன்மைத் தன்மை கொண்டது என்பதைத் தொடர்ந்து நினைவூட்டுவதற்கும் பயன்படும். ஆனால் நவீன அரசியல்-பொருளாதாரச் சூழலுக்குப்பின் நிலவும் மனிதத் துன்பியல்கள், சிக்கல்களுக்கு நவீனத் தளத்தில் இருந்துதான் தீர்வுகளைத் தேட வேண்டும், இந்த நிலையைத்தான் பின்நவீன நிலை என்று சொல்கிறோம், இந்த இந்திய-தமிழ் பின்நவீன நிலை மிகுந்த அரசியல் தன்மை கொண்டது.

பின்நவீன நிலையைப் புரிந்து கொள்ள நாம் பயன்படுத்தும் கோட்பாட்டு முறைகள்தான் பின்நவீனத்துவ  பன்மை அறிவுமுறைகள். பின்நவீனத்துவம் என்றவுடன் உங்களுக்கு நினைவுக்கு வரும் ஒரு கருத்து, ஒரு எழுத்தாளரின் பெயர் எது? அதனைத் தொடக்கப் புள்ளியாக வைத்துதான் தமிழின் தற்கால கருத்தியல் உரையாடலில் நீங்கள் எந்தத் தளத்தில், எந்த இடத்தில் இருக்கிறீர்கள் என்பதை நாம் விளக்க முடியும்…

இது இப்படியிருக்க இந்தக் கேள்வியின் இன்னொரு விளிம்பும் கவனத்திற்குரியது.

மத்திய அரசில் தற்போது ஏற்பட்டிருக்கும் ஆட்சி மாற்றத்துக்குப்பின் இந்துமதவாத பிற்போக்குச்சக்திகள் தங்களைத் தாங்களே ஊக்கப்படுத்திக் கொள்ளும் முயற்சியில் நிச்சயம் ஈடுபடுவார்கள். அனைத்துத் துறைகளிலும் தம் அடியவர் கூட்டத்தை இருத்தி வைக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பார்கள். இது அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் ஆட்சியில் உள்ள போது செய்யக் கூடிய வேலைதான். ஜனநாயக ஆட்சி அரசியலில் இவை நடப்பதைத் தடுக்க முடியாது. ஆனால் இந்துத்துவச் சக்திகள் ஜனநாயகத்தைவிடச் சாமியார் நாயகத்தை அதிகம் நம்புகின்றன. இவர்கள் தங்களின் உண்மையான திட்டங்களை நிறைவேற்றத் தொடங்கும்போது பத்தாண்டுத் திட்டமாக பாஜக அரசைக் கட்டி எழுப்பிய முதலாளித்துவ சக்திகள்கூட கோபமடைவார்கள். இந்திய மக்கள் இவர்களிடமிருந்து அந்நியப்படுவார்கள்.

பாரதமாதா, அகண்டபாரதம், சமஸ்கிருதச் சங்கீதம் எனக் குறியீட்டு நாடகங்களைத் தொடரும் அளவுக்கு சாமிகள் நாயக அதிகாரத்தை வளர்க்க முடியாத கோபத்தில் ஆட்சித் தலைமையை சாதுக்கள் முறைப்பார்கள். பிரசாதம் கொடுத்து மக்களை அடிமைகளாக வைத்துக் கொள்ள முடியாது என்பதைத் தெரிந்து கொண்ட ஆட்சித் தலைவர்கள் புதிய திட்டங்களைத் தீட்டும் போது கட்சியின் மூத்த பரிவாரங்கள் அவற்றை வெறுத்து ஒதுக்குவார்கள். இவர்களுக்கிடையில் உள்ள உயர்குல பிராமணர்கள் மற்றும் சேவை செய்யும் பிறர் என்ற உள்பகை வெளித் தெரியாதது, ஆனால் மிகக் கடுமையானது. இது ஆட்சியில் இருக்கும்போது வலிமையாக வெளிப்பட்டு பெரும் மோதல்களை ஏற்படுத்தும். இது எல்லாம் ஒருபுறம் இருந்தாலும் பெண்கள், ஒடுக்கப்பட்ட -தலித் சமூகங்கள்,  மதச் சிறுபான்மையினர், இடதுசாரிச் சிந்தனையு டையோர் அனைவரும் இந்துத்துவ மதவாத அதிகாரத்தை வெறுப்பவர்கள் மட்டும் இல்லை, அதனைத் தினவாழ்வில் எதிர்ப்பவர்களும் கூட, இந்த மக்கள் இந்தியாவின் 60 சதவிகிதத்திற்கு மேற்பட்டவர்கள் என்பதைக் கவனத்தில் கொண்டால் மத்திய அரசில் தற்போது ஏற்பட்டிருக்கும் ஆட்சி மாற்றத்துக்குப்பின் இந்துத்துவம் அழிந்து இந்தியத் தன்மை என்ற கலப்பு அரசியலை அனைவரும் கற்க வேண்டிய தேவை உருவாகும்.

குருஜி மாதவ் சதாசிவ் கோல்வால்கர் இந்து தேசம் என்றால் என்ன என்பதை இவ்வாறு வரையறுத்துள்ளார் “தர்ம, அர்த்த, காம, மோக்ஷ என்ற சதுர்வித புருஷார்த்தங்களான நான்கு மகத்தான நோக்கங்களின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட சமூகம் அது”. சதுர்வித புருஷார்த்தங்களை ஏற்றால் சத்வம், ராஜசம், தாமசம் என்ற மூன்று குணங்களையும், சதுர் வர்ணியம் என்ற நான்கு வர்க்கப் பிரிவினையையும், தெய்வ சம்பத்து கொண்ட மக்கள் அசுர சம்பத்து கொண்ட மக்கள் என்ற மக்கள் பிரிவினையையும் நாம் ஏற்க வேண்டியிருக்கும். கீதை கூறுகிறது “அசுர ஜனங்கள் செய்யத்தக்க நல்வினையையும் விலக்கத்தக்க தீவினையையும் உணர மாட்டார்கள். அவர்களிடம் சுத்தம் இல்லை, நன்னடத்தை இல்லை, உண்மை இல்லை.”

இந்து என்ற மத அடையாளம் சீக்கிய, ஜைன, பௌத்த சமயங்களையும் உள்ளடக்கியதாக நம் அரசியல் சட்டம் அடையாளப்படுத்தியுள்ளது. இதனைக் குறிப்பிட்டு சீக்கியர்கள் உள்ளிட்ட யாரும் தங்களைத் தனியாக அடையாளப்படுத்திக் கொள்ளக்கூடாது என கோல்வால்கர் கூறுகிறார். அதனால் இந்து தேசியம் என்ற திட்டம் இந்தியாவின் பன்மயப் பட்ட இந்தியச் சமயங்களை கீழ்மைப்படுத்தும் வைதிக மையம் கொண்டதாக உள்ளது, இந்துத்துவம் என்பது பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பழங்குடிச் சமூகங்களை நிரந்தரமாக விளிம்பு நிலையில் வைத்திருப்பதற்கான உள்நோக்கம் கொண்டது.

“இந்தியா இனி புண்ணிய பூமியாக மாறும், பாரத சன்ஸ்கிருதி மீட்கப்படும்… எங்கள் ஆட்சி இனி இந்து தர்மத்தை எல்லா இடத்திலும் நிலைப்படுத்தும், ஜீ இன்னும் எத்தனை காலத்திற்கு  சோஷலிசம், அம்பேத்கர் என்று பிற்போக்குக் கருத்துக்களை நம்பி ஏமாறப் போகிறீர்கள்  நம்ம கட்சியில சேருங்க ஜீ, உங்களுக்கு உள்ள ஹிதிகாச, காவ்ய, சம்ஸகிருத இலக்கியம், உலக இலக்கிய அறிவுக்கு எங்க கட்சி உங்கள எங்கேயோ கொண்டு போகும்…” இதனைக் கூறியது என்னிடம் சில மாதங்கள் மட்டும் வந்து இலக்கியம் கற்ற ஒரு முன்னாள் மாணவர், இன்னாள் அகில பாரதிய விசுவ இந்து பரிஷத் மாணவச் செயல்வீரர்.  டெல்லி பல்கலைக் கழகத்திற்கு வந்து வாரம் 12 மணிநேரம் இந்திய இலக்கியம், 6 மணி நேரம் உலக-இந்திய சினிமா எனக் கற்பிக்கத் தொடங்கி 10 ஆண்டுகள் முடியப் போகிறது. இந்த காலகட்டத்தில் இந்த ஒரு மாணவர் மட்டும்தான் என்னை எத்தனை பெரிய கூட்டத்திற்கு நடுவில் பார்த்தாலும் குனிந்து பாதத்தைத் தொட்டு பிரணாம் குரு ஜீ என்று வணங்கும் பழக்கமுடையவர். இது என்ன வட இந்தியப் பழக்கமா என்று கேட்ட போது இல்லை ஜீ இதுதான் பாரதப் பண்பாடு என்று விளக்கம் சொன்னவர். இவர் தூரத்தில் வருவதைப் பார்த்தாலே பாதத்தை மறைத்து ஓடி ஒளிவது எனக்குப் பழக்கம். அவர் அப்படிக் கூறியபோது நானும்கூட கொஞ்சம் நெகிழ்ந்து தான் போனேன்.

சற்றே தெளிந்து அவரிடம் சொன்னேன் “அன்பான ராம் பி…. நான் உங்கள் கட்சியில் சேர சில நிபந்தனைகளை வைக்கிறேன்.  உங்கள் புனிதத் திட்டப்படி கங்கை யமுனை இரண்டின் கரைகளிலும் உள்ள தொழிற்சாலைகள் அனைத்தையும் மூடுவதுடன் இந்திய நதிகள் அனைத்தையும் கங்கையின் அம்சமாக அறிவித்து ரசாயனக் கழிவுகளைத் தடை செய்யச் சட்டம் கொண்டு வர வேண்டும், இந்திய மரபான இயற்கை மது வகைகளைத் தவிர மேற்கத்திய மது உற்பத்தி மற்றும் விற்பனை அனைத்தையும் தடை செய்ய வேண்டும், இதனை ஒரு ஆண்டுக்குள் செய்ய முடியுமா?” அவர் மீண்டும் ஒரு முறை பாதத்தைத் தொடக் குனிந்தார், இது விடை பெறுவதற்கானது. அவர் போகும் போது சொன்ன வாசகம் இதுதான்  ‘ஜீ நீங்கள் இதன் மூலம் இரண்டு செய்திகளைச் சொல்லியிருக்கிறீர்கள். ஒன்று ஒரு ஆண்டில் பாஜபாவை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கான திட்டம், மற்றது நீங்கள் உயிருடன் இருக்கும் வரை எங்கள் கட்சியில் சேரப் போவதில்லை என்பது. வருத்தமாகத்தான் உள்ளது ஜீ!’    “ஆமாம்  பாண்டே… உங்களைப் போன்ற அறிவுக் கூர்மை கொண்டவர்கள்கூட அந்தக் கட்சியில் இருப்பதை நினைக்கும் போது எனக்கும் வருத்தமாகத்தான் உள்ளது, பார்க்கலாம் நன்றி!”

அதனால்தான் கூறுகிறேன்… இந்து மதவாத பிற்போக்குச் சக்திகள் ஊக்கம் பெறலாம் ஆட்சியைப் பிடிக்கலாம், ஆனால் மக்களின் அன்பை, மதிப்பைப் பெறமுடியாது. மக்களின் அன்பைப் பெற உண்மையாக முயற்சித்தால் பன்னாட்டு முதலாளிகளின் கருணையைப் பெற முடியாது.

திரையில் வரையப்பட்ட தமிழ்நிலம்-பிரேம்

திரையில் வரையப்பட்ட தமிழ்நிலம்

பிரேம்

திரைப்படத்தை முன்வைத்து நம் காலத்திய அரசியல் உளவியல்புகள் பற்றிச் சில கருத்துரைகள்

1.

திரையில் வரையப்பட்ட தமிழ்நிலம் என்ற இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகள்  ‘விலகும் திரைகள்’ என்ற தலைப்பில் தீராநதி மாத இதழில் தொடராக வெளிவந்தவை. ஒரு பொருள் பற்றியோ அல்லது பல்வேறு பொருள் சார்ந்தோ சில எழுத்தாளர்கள் எழுதுவதை ஒரு பொதுத்தலைப்பின் கீழ் ஒவ்வொரு இதழிலும் வெளியிடுவது அந்த இதழில் உள்ள நடைமுறை. முன்பு 2007-இல் தீராநதியில்  ‘இருண்மைகள்  இடைவெளிகள்  மௌனங்கள்’ என்ற  தலைப்பில் தொடராகச் சில கட்டுரைகளை எழுதியிருக்கிறேன். கவிஞர் கடற்கரை கேட்டுக் கொண்டதன் பேரில் எழுதப்பட்ட அந்தக் கட்டுரைகள் பின்நவீனத்துவ அரசியல் சார்ந்த உரையாடல்களாக அமைந்தன. தமிழில் அதுவரை முழுமையாக விவாதிக்கப்படாத பல்வேறு கோட்பாட்டுச் சிக்கல்கள் பற்றிய தொடக்க கட்ட உரையாடலாக அமைந்த அக்கட்டுரைகளைத் திட்டமிட்டபடி தொடர இயலாத சூழல் ஏற்பட்டது.

மீண்டும்  2011, செப்டம்பர் மாத தீராநதி இதழுக்கு  எழுதிய ஒரு கட்டுரை இத்தொடருக்கான தொடக்கமாக அமைந்தது. திரைப்படத்தை முன் வைத்து நம் காலத்திய  சமூக-அரசியல் உளவியல் பற்றிய கட்டுரைகளைக் கொண்டதாக இத்தொடர் அமையும் என நான் தெரிவித்திருந்தேன். திரைப்படங்களை முன்வைத்து நம் காலத்திற்கான சில கோட்பாட்டுச் சிக்கல்களைப் பேச இந்தப் பக்கங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற திட்டம் இருந்தது.

தமிழில் திரைப்படங்கள் பற்றிய கோட்பாடுகள் சார்ந்த ஆய்வுகள், வாசிப்புகள் இல்லை.  திரைப்பட வரலாறு, திரைப்படத் தொழில்நுட்பம் பற்றிய அறிமுக நூல்கள் சில மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. தமிழில் திரைப்படம் பற்றிய எழுத்துக்கள் என்பன  கதைசொல்வது அல்லது ஆவணப் படுத்துவது என்ற வகையில் அமைந்துள்ளன. இவை அடிப்படை வாசிப்புக்கு உரியவை.  அதற்கு மாறாக ஒரு மரபும் உண்டு ‘உலக சினிமாவைத் தமிழர்களின் குருதியில் கலந்துவிட வேண்டும்’ என்ற உயர்ந்த நோக்கத்துடன் திரைப்பட விழாக்களில்  பார்த்த அல்லது பார்க்காத  படங்களைப்  பற்றிக் கதைச் சுருக்கக் கையேடுகளை வைத்து எழுதி அப்படங்களைப் பார்க்க வாய்ப்பில்லாதவர்களை அசர வைத்துவிடுவது. ஒளிஒலிப்பேழைகள் குறுமின்தட்டுகள், இணையத்தளங்கள்  என விரிவடைந்த திரைப்பட நுகர்வு இந்த வகையான கதைக்கட்டும் முறைகளை கேலிக்குரியனவாக மாற்றியிருக்கின்றன. ஆனாலும் தமிழின் முதல் பேசும்படத்தில் பயன்பட்ட ஒலிவாங்கி, முதல் திரையரங்கத்தில் இருந்த திரைப்படுத்தும் கருவி, முதல் நடிகர் அணிந்திருந்த மோதிரம் என்பன பற்றியெல்லாம்  ‘மேலைநாட்டு’ அறிஞர்களின் வழிநின்று அரிதான ஆய்வுகள் தொடர்ந்து நடந்தபடியுள்ளன. உலகத் திரைப்படக்காரா்களைப் பற்றிய தகவல்களைத் திரட்டி உள்ளுர் திரைப்படக்காரர்களை வியக்கவைக்க இலக்கிய மொத்த விற்பனைக்காரர்கள் எழுதும் ஆன்மிக எழுத்துக்கள் பெரும் வரவேற்பைப் பெறுகின்றன.  இவற்றிலிருந்து விலகிய கருத்தியல் செயல்பாடாக இக்கட்டுரைகள் அமையும் என்பதால்  ‘விலகும் திரைகள்’ என்ற தலைப்பை அளித்தேன்.

 நான்கு குறிப்புகளை  மனதில் கொண்டு ‘விலகும் திரைகள்’ என்ற தலைப்பு  உருவாக்கப்பட்டது.  தமிழ்த் திரைப்படங்களின் பொதுவான தன்மையாக  உள்ள வரலாற்றிலிருந்து, பண்பாட்டியல் மெய்மைகளிலிருந்து, அறிவுரு வாக்கத்திலிருந்து விலகுதல் என்பதில் உள்ள முதல் விலகுதல். கடந்த பத்தாண்டுகளில் உருவாக்கப்பட்ட மிகச்சில படங்கள் தமிழ்த்திரையின் தேய்வழக்கு, ஒற்றைக் கதையாடல் முறை, மறுசுழற்சிக் காட்சித்தன்மை என்பதிலிருந்து விலகிச் சில சமூக உளவியல் கூறுகளையும்  பண்பாட்டுத் தடயங்களையும் தமிழ்ச் சமூகத்தின் துன்பியல் களங்களையும் பதிவு செய்ய முயற்சிப்பதில் உள்ள இரண்டாவது விலகுதல்.  திரைப்படம் பற்றிய அறிவைத் தருவதாகக் கூறிக்கொண்டு சில இலக்கிய முகவர்கள் தமிழில் உருவாக்கிக் கொண்டிருக்கும் ஆய்வு முறையற்ற வழிபாட்டு மன்றங்களின் மயக்கமூட்டும் திரைகளை விலக்குதல் என்பது மூன்றாவது விலகுதல். தமிழின் கோட்பாடுகள் குறித்த சொல்லாடல்களை மறைத்துள்ள பொதுச்சொல்லாடல் திரைகளை விலக்கும் முயற்சி நான்காவது விலகுதல். திட்டம் பெரியது, ஆனால் களமோ சிறியது. ஒவ்வொரு கட்டுரை வெளிவந்த பின்னும் நண்பர்கள் சொன்ன கருத்து ‘தமிழில் முற்றிலும் புதிய அணுகுமுறை என்பதால் இன்னும் கூடுதல் விளக்கம் தேவை’. பொதுக்கருத்து கொண்ட திரைப்பட வாசிப்புக்கு ‘விளங்காத திரையாக’ இக்கட்டுரைகள் தோற்றம்தர பல காரணங்கள்  இருந்தன. முதல் காரணம் திரைப்படம் குறித்த பேச்சு அல்ல இது, திரை அரசியல் பற்றிய உரையாடல், அரசியல் உளவியல் பற்றிய மறு ஆய்வு.  கடவுள் பற்றிய ஆய்வுக்கும் ஒரு பக்திப் பாடலுக்கும் இடையில் உள்ள வேறுபாடு இது. தமிழின் நவீன கதைசொல்லிகள் சிலர் திட்டமிட்டு  உருவாக்கி வைத்துள்ள ஞானஒளியின்  பெருக்கத்தில் இக்கட்டுரைகள் இருட்டைத் தேக்கி வைத்துக் கொண்டவையாக தோற்றம் தருவது இயல்பானது. ஆனால் பின்காலனிய, பின்நவீனத்துவ ஆர்வமும் வாசிப்பும் உள்ள பல நண்பர்கள் இக்கட்டுரைகளை முன்வைத்து உரையாடல்களைத் தொடர்ந்தனர்.

2.

தமிழில் சில ஊடகங்கள், பதிப்பகங்கள் இணைந்து சில எழுத்தாளா்களைத் தோ்ந்தெடுத்து அறிவாளிகள், ஆய்வுத்திறன் கொண்டவா்கள், பெரும் படைப்பாளிகள் என்ற உருத் தோற்றத்தைத் திட்டமிட்டு பரப்பிக் கருத்தியல் பங்குச்சந்தை ஒன்றை உருவாக்கி உள்ளன. இந்த ஊடக ஒலிபரப்பிகள் உலக சினிமா முதல் உள்ளுர் ஆன்மீகம் வரை அனைத்தைப் பற்றியும் முன் தயாரிப்பு செய்யப்பட்ட கருத்துகளை மிகப்புதிய சிந்தனை முறைபோல ஓசையெழுப்பிக் கொண்டே இருக்கின்றனா். அறிவுமறுக்கும் பொதுக்கருத்தை உருவாக்க முனைகிற ஊடக-இலக்கிய உற்பத்திக் கூடங்களுக்கு இவா்கள் பலமடங்கு லாபத்தைப் பெருக்கித் தருவார்கள்.   உலகச் சந்தையும், பன்னாட்டு முதலீடுகளும் அனைத்துவகை அறிவையும் தன்வசமாக்குதல், பின் செயலிழக்க வைத்தல் என்பதற்கென தனித்துறையை உருவாக்கியுள்ளன. மார்க்ஸியம் தொடங்கி பெண்ணியம், தலித்தியம், உலக சினிமா, உலக இலக்கியங்கள் எது பற்றியும் புதிய கருத்துக்களை’ பரப்புவதற்கான மொத்த விற்பனையாளர்களையும் சில்லரை விற்பனையாளர்களையும் இவர்கள் உருவாக்குகிறார்கள். ஊடகங்கள் இவர்களை தொடர்ந்து உருப்பெருக்கிக் கொண்டே இருக்கும். தமிழின் அறிவுத்துறையில் இந்த ஊடக உருப்பெருக்கம் நம்மைப் பல வகையில் பாதித்தபடி உள்ளது. இந்த ஊடக உருவங்கள் தொடர்ந்து சொல்லும் எதுவும் தமிழக வரலாற்றில் அழியா இடம் பெற்றதாகிவிடும். அறிவுமறுக்கும் பெருங்கதையாடல் ஊடகங்கள் என்ன சொல்கின்றனவோ அவற்றையே நவீன சிந்தனை, நான்லீனியர் எழுத்து, இந்திய ஞான மரபு, புனித தேசியம் என ஏதாவது ஒரு வெள்ளித் தாளில் பொதிந்து விற்பனைக்கு வைக்க இவர்கள் பயிற்சி பெற்றிருக்கிறார்கள். ‘அர்த்தமுள்ள இந்துமதம்’ உருவாக்கித் தந்த எதிர் அறிவு மரபு இது.

தமிழில் எதை எழுதினாலும் படிக்கச் சிலர் இருப்பார்கள், அவற்றைச் சரிபார்க்கவோ ஒப்பிட்டுக் கேள்வி கேட்கவோ யாரும் இல்லை என்ற கெடுநம்பிக்கையே இவர்களை இயக்கும் சக்தி. “எங்களுக்கு இரண்டு கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள், உங்கள் மாற்றுச் சிந்தனைகளை ஏற்க இருநூறு பேர்தான் இருக்கிறார்கள், அதனால் நாங்களே உலகை ஆளும் தகுதி கொண்டவர்கள்” என்ற இறுமாப்பை தமிழ் சினிமாக்காரா்களிடம் பார்க்க முடியும். தமிழ்த் திரையும் புதிய கதைக்காரா்களும் இணையும் தளம் இது. அறிவுத் திரிபுகளுக்கான சதித்திட்டங்கள் இந்தத் தளத்தில் செயல்வேகம் பெறுகின்றன. மாற்றுச் சிந்தனைகள், மாறுபட்ட அணுகுமுறைகள், விடுதலைக் கருத்தியல் சார்ந்து சிந்திக்கவும் எழுதவும் தொடங்கும் ஒருவா் இந்தப் பல்நோக்கு அங்காடிகளின் படிக்கட்டுகளில் இடறிவிழாமல் இருக்க பயிற்சியும் முனைப்பும் தேவைப்படுகிறது. கருத்தியல் சந்தைப் பொருளாதாரமும் பண்பாட்டியல் மூலதனத் திட்டங்களும் தொடுக்கும் தாக்குதலை எதிர்கொண்டு மீளுவதற்கான முயற்சியின் ஒரு பகுதியே இக்கட்டுரைகள். இவை ‘தீராநதி’ இதழில் தொடராக வெளிவருவதற்கான முரண்சூழலை உருவாக்கித் தந்ததும்கூட உலகமயமான சந்தைப் பொருளாதாரம், பன்னாட்டு  பொதுக்களம் போன்ற சிக்கலான  நிலைகள்தான்.

3.

அரசியல், தத்துவம், கலை, இலக்கியம் என்பவற்றைக் கற்பது முன்திட்டமிடப்படாத பெரும் அலைச்சல் கொண்ட ஒரு தேடுதலாக எனக்கு இருந்துள்ளது. ஒரு இலக்கியப் படைப்பாளியாக மட்டும் இருக்க விருப்பம் கொண்டிருந்த எனக்குக் கல்விப்புலங்கள் அனைத்தும் அறிவு ஒடுக்கும் தன்மை கொண்டவை படைப்பாற்றலை அழிப்பவை என்ற எண்ணம் உண்டு. ஆனால் எனது அரசியல் ஈடுபாடுகள் அறிவுப்புலங்கள் பலவற்றை ஊன்றிக் கற்க வேண்டிய தேவையை உருவாக்கின. ஆங்கிலக் கல்வி இல்லாத எனக்கு அனைத்தையும் ஆங்கிலத்தில் கற்க வேண்டிய நிலையை உருவாக்கி, பின் ஆங்கிலத்தில் கற்பிக்கவும் மொழிபெயர்க்கவும் உரியவனாக்கியிருப்பது காலத்தின் முரண்நகைதான்.  நாடகம், திரைப்படம் என்ற இரு துறைகளை நான் இந்த பயிற்சிக்குப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன்.  தெளிவாகத் திட்டமிடப்பட்ட ஒரு பயிற்சி முறையுடன் ஒரு  மாணவனாக இருந்து இவற்றைக் கற்றுக் கொண்டேன். எங்கிருந்து தொடங்கி எந்தெந்தச் சிந்தனைப் பள்ளிகள் ஊடாக இத்துறைகளைக் கற்பது என்பதும் எந்தெந்த நூல்களை, கோட்பாட்டுப் புலங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதும் இத்துறைகளில் விரிவாகப் பட்டியலிடப்பட்டிருப்பது எனக்குப் பயனுடையதாக இருந்தது.

உலக அளவிலான தேர்ந்தெடுக்கப்பட்ட நாடகப் பிரதிகளும் உலக அளவிலான தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படங்களும் ஒரு நேர்க்கோட்டு முறையில் காலவரிசைப்படுத்தப்பட்டு கற்பதற்கேற்ப நமக்குக் கிடைக்கின்றன. செவ்வியல் சார்ந்தும் மாற்று மரபுகள் சார்ந்தும் இந்த அறிவுத்துறைகள் பலவகையான பார்வைகளை, அணுகுமுறைகளைத் தம் இயல்களாக இணைத்துக் கொண்டுள்ளன.  இதன் காரணமாக நாடகம், திரைப்படம் என்ற இரு துறைகளைப் பற்றி எழுதுவதானது தொடர் உரையாடல் ஒன்றில் நம்மை இணைத்துக் கொள்ளும் செயலாக இருக்கும். ஒரு தொழில்நுட்பப் பயிற்சியின் பின்புலத்துடன் இந்த உரையாடலில் யாரும் பங்கெடுத்துக் கொள்ள இயலும். ஆனால் இவற்றை அரசியல்படுத்தவும் கோட்பாட்டு வகையில் இடப்படுத்தவும் முயற்சிக்கும்போது திரைப்படம், நாடகம் மட்டுமின்றி நிகழ்கலை வடிவங்கள் பற்றிய ஆய்வறிவுகள் அனைத்தும் பன்மையான அறிவுப்புலங்களுடன் உறவுடைய கலப்பான அணுமுறைகளைக் கொண்டவை என்பது நமக்குப் புரியவரும். திரைப்படத்தைப் பொறுத்தவரை இந்தப் பன்புலத் தன்மை கூடுதலாகத் தேவைப்படுகிறது.

இந்தப் பின்புலத்தில் திரைப்பட வாசிப்பை பின்நவீனத்துவம் கோட்பாட்டு உரையாடல்களின் பகுதியாக ஏற்றுக் கொள்கிறது. பேச்சு தொடங்கி, பெரும்  கட்டுமானங்கள்,    நகர அமைப்புகள் வரை அனைத்தையும் குறியியல்   செயலாகவும்,   கதையாடல் களமாகவும்    (Narrative Domain)  அடையாளப்படுத்துகிறது பின் நவீனத்துவ  பொருளுரைப்பு முறை. பிரதிகளை, கதையாடலை, வாழ்வை,வரலாற்றை வாசிப்பது, உடலை மனதை பொருள்படுத்துவது என அனைத்தையும் இடையீட்டுப் பிரதிச் செயல்பாடுகளாக    (Intertextual function)   விளக்கும் பின்நவீனத்துவ அணுகுமுறை  வாசிப்புச் செயல்பாட்டை அரசியல் செயல்பாட்டின் பகுதியாக விரிவுபடுத்தி அதனை வாழ்வுச் செயல்பாடுகளில் ஒன்றாகவே மாற்றியிருக்கிறது. இந்தக் கட்டுரைகள் குறியியல், பின்நவீன வாசிப்பு முறைகளைக் கொண்டிருந்தாலும் பன்மை நவீனத்துவம் என்ற அணுகுமுறையை நோக்கி  நகர்கின்றவை.

திரைப்படம் கதை சொல்வதோ, தோற்ற மெய்மைகளை தொகுத்துத் தருவதோ, மாய வினோதக் காட்சிகளை உருவாக்கிக் காட்டுவதோ மட்டும் அல்ல. அது பொருளுரைத்து, கோட்பாட்டாக்கம் செய்யும் ஒரு எடுத்துரைப்பு, பலவிதமான அறிவுருவாக்க முறைகளில் ஒன்று என்பதைப் புரிந்து கொண்ட தளத்தில் இக்கட்டுரைகள் இயங்குகின்றன. அத்துடன் “ஒரு திரைப்படம் அதனளவில் தன்னை விளக்கிக் கொள்வதில்லை அதற்கு முன்னும் பின்னும் அமையும் மொழி ஊடான, குறியமைவுகள் வழியான பொருளுரைப்புகளால்தான் அது தன்னை விளக்கிக் கொள்கிறது”. “திரைப்படத்தை பொருளுடையதாக்குவது திரைப்படம் பற்றிய பேச்சுருவாக்கம்தான்”  என்ற ரொலான் பார்த், ஷீல் தெலஸ் வழிவந்த கருதுகோள் இக்கட்டுரைகளின் அடிப்படைகளில் ஒன்று.

தமிழில் உலகத் திரைப்படங்கள் பற்றி எழுதுவது என்றால் அப்படங்களைப் பார்க்காத, பார்க்க வாய்ப்பில்லாதவர்களுக்குக் கதையைச் சொல்வது அல்லது யார் அவற்றைப் பார்க்கப் போகிறார்கள் என்ற தெம்புடன் கதைவிடுவது என்று ஒரு பொதுவழக்கு உருவாகியுள்ளது. இதனைத் தவிர்த்து தமிழ்-இந்தியச் சூழல் சார்ந்த படங்களை மட்டும் வாசிக்கவென இக்கட்டுரைகளை அமைத்துக் கொண்டேன். இருபத்தைந்து ஆண்டுகளாக ஓடியலைந்து பார்த்த பல இயக்குநர்களின் திரைப்படங்கள் முழுத்தொகுப்புகளாக இன்று பார்க்கக் கிடைப்பதால்  அவை பற்றிய மன அழுத்தங்களில் இருந்து விடுபட்ட நிலையில் இக்கட்டுரைகளை நான் எழுதியிருக்கிறேன். உலகத் திரைப்படம் என ஒன்றும் இல்லை என்பதைத்தான் இந்த இயக்குநர்கள் எனக்குச் சொல்லித் தந்திருக்கிறார்கள். அவா்கள் தம் மொழியில், தம் சமூகம் பற்றி, தம் அரசியல் சார்ந்து தம் திரைப்படங்களைப் புனைந்திருக்கிறார்கள். அது அவர்கள் திரைப்படம், அதில் நாம் இல்லை.  நம் திரைப்படம் வேறு. அது என்னவாக உள்ளது? அது என்னவாக இருக்க வேண்டும் அல்லது இருக்க முடியும்? எனப்பல கேள்விகளுடன் இந்தக் கட்டுரைகளை நான் எழுதத் தொடங்கினேன். தமிழில் பேசும் ஒரு திரைப்படம் என்பதால் அது தமிழ்ச் சமூகங்கள் அனைத்திற்குமான திரைப்படமாக இருக்க வேண்டிய தேவை இல்லை என்ற எளிய உண்மை இக்கட்டுரைகள் வழியாகப் புரியவந்தது. அதே போல தமிழில் எழுதப்பட்டுள்ளதால் இக்கட்டுரைகள் தமிழில் வாசிக்கப் பயின்ற அனைவருக்குமானதாக இருக்க வேண்டும் என்ற தேவையும் இல்லை. இதனை எழுதுவது வாசிப்பது இரண்டுமே இருவகை இணக்கமுள்ள அரசியல் செயல்பாடுகள்.

4.

இக்கட்டுரைகளை எழுதுவதற்கு முன் நான் பதிவு செய்திருந்த ஒரு குறிப்பை இங்கு தருவது வாசிப்பிற்கான ஒரு முன்புலமாக அமையக்கூடும்.

குறியீட்டுச் செயல்பாடும் திரைப்படமும்:

திரையில் தோன்றி நினைவில் படியும் உருவங்களைப் பற்றிப் புரிந்துகொள்ள  முயற்சிக்கும் போது நாம் உடல் பற்றிய  குறியீட்டுச் செயல்பாடுகளில் ஒன்றைப் பற்றிப் புரிந்துகொள்ள முயற்சிக்கிறோம். மனிதவுடல் மட்டுமல்ல எந்த ஒரு பருப்பொருளும் வேறு எந்த ஒன்றுக்கும் குறியீட்டுப் பதிலியாக இருப்பதில்லை. ஆனால் குறியீட்டுத் தன்மை கொள்ளாத ஒன்றை மனித அறிதலும் அனுபவமும் தமது உலகில் அனுமதிப்பதில்லை. அறிவும் அனுபவமும் முதலில் அனைத்தையும் குறியீடாகப் பொருள்கொள்வதிலும் பொருள்படுத்துவதிலும் தொடங்கிப் பின் அனைத்து வகைக் குறியீடுகளும் தம்மைத் தாம் குறிப்பு செய்து அதனூடான பொருள் மாறுபாட்டு நாடகங்களை நிகழ்த்திச் செல்கின்றன. அவை  வேறுவகைப் பொருளை, அா்த்தங்களைக் கண்டு சொல்கின்றனவோ அா்த்தங்களைக் கொண்டுவந்து தருகின்றனவோ அல்ல என்பதை உணர்த்தி முற்றுப்பெறுகின்றன.

இதனை பௌத்தம் நிப்பாண (நிர்வாண) என்றும் சூன்யா என்று சொல்ல முயற்சித்தது. பின்நவீனத்துவம் இதனை முடிவற்ற குறியீட்டுச் செயல்பாடு என்று விளக்கிக் காட்டியது. பன்மை நவீனத்துவத்தின் வழி இதனை குறியீட்டுப் பொருள் பற்றிய குறியீட்டுப் பெருக்கம் எனவும், குறியீடு கடந்த குறியீடுகளின் பெருக்கம் எனவும் சொல்லலாம். வாழ்தல் என்பதைக் குறியீடுகளுடனான ஓயாத விளையாட்டு என்று சொன்னால் சாதல் என்பது குறியீட்டாக்கத்தின் முடிவு என்று கொள்ள முடியும். ஆனால் குறிகளும் குறியீட்டுத் தொகுதிகளும் ஒரு தனிமனிதரின் பிறப்புக்கு முன்பே இங்கு இருந்து அவரைச் சூழ்ந்து கொள்வதுடன் அவருக்குப் பின்னும் இங்கு இருந்து அவர் இருந்ததைப் பற்றியும் அவர் இல்லாமல் போனதைப் பற்றியும் வேறொரு காலத்தில் சொல்லிக்கொண்டிருப்பவையாக இருக்கின்றன.

நம் உடல் எதனையும் குறிப்பிட்டுக் காட்டவோ, வேறொன்றைக் குறிப்புணர்த்தவோ, வேறொன்றின் நிழலாகவோ, மற்றதின் பதிலியாகவோ இங்கு இருந்துகொண்டில்லை என்பதை  உணர்ந்து கொள்ளும்பொழுது ஏற்படும் ஒரு அச்சமூட்டும் வெறுமையைக் கடக்கவும் கையாளவும் நம்மை பழக்கித் தருபவை பண்பாடு, கலாச்சாரம், வரலாறு, கலை-இலக்கியம் என்ற கட்டுமானங்கள். ஒரு வகையில் நம் வாழ்தலைப்பற்றிய, இருத்தலைப்பற்றிய பொருள்படுத்துதல், பொருள்கூறுதல் என்பதைவிட நாம் இல்லாமல்போகும் நிலைபற்றிய அச்சத்தைக் கையாள, தன்வயமாக்கிக்கொள்ள நம்மைப் பழக்கித் தருபவையே மனித குறியமைப்புச் செயல்பாடுகள்.

சமயங்கள் ஒவ்வொன்றும் இதனைக் கையாளும் வழிமுறைகள் வெவ்வேறாக இருந்தாலும் கடவுள் மற்றும் மற்றொரு உலகம் என்ற உருவக நிலைகளால் இந்த இன்மை உணர்வை உருமாற்றித் தருகின்றன. இறைமையுடன் இணைதல் தொடங்கி இறையுலகில் ஒரு உருவமாய்க் கலந்துவிடுதல் மற்றும் இறையின் நெருக்கத்தில் இணைபிரியாமல் இருத்தல் வரை வெவ்வேறு உருவகத் தன்மைகள் சமயம் சார்ந்த உளவியலாக அமைந்துவிடுகின்றன. இவை ஒருவகையில் மனித உளவியலில் எதிர்காலம் சார்ந்த இன்மை பற்றிய மனஅழுத்தம் என்பதை அடிப்படையாகக் கொண்டவை. அதாவது நாம் இல்லாமல் போகும் ஒரு காலம் பற்றிய உளவியல்  அழுத்தம். இந்த ‘இன்மை நிலையின் தொடர் இருப்பு’ (perpetual presence of postulated absence) என்பது மொழியிலக்கணத்தின் வழி முழுமையாக விளக்க முடியாத ஒரு திருகல் நிலை, அதே சமயம் மொழிவழி அமைந்த காலம் என்பதை அடிப்படையாகக் கொண்ட ஒரு புனைவுநிலை.

‘இறைவனும் இல்லை இறந்தவர் பிறவார் அறனோ டென்னை?’ (மணிமேகலை) என்ற மறுத்துரைக்கும் லோகாயதக் கேள்வியும் ‘நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே காக்குமெங் காவலனே காண்பரிய பேரொளியே’ (திருவாசகம்) என்ற முழுமையான ஒப்படைப்பும் வரலாற்றில் இணையாக அமைந்த புரிதல்கள். இவை இரண்டிற்குமே  அடிப்படையாக அமைந்த குறியீட்டு நிலையான இருத்தல் பற்றிய கேள்விகளும் அழுத்தங்களுமே முடிவு காணமுடியாத மனிதப் புனைவுகளின் பெருக்கத்திற்குக் காரணமாக அமைகின்றவை.

இந்தக் குறியீட்டு நிலையிலான இருத்தலை மரணத்திற்கும் இன்மைநிலைக்கும் அப்பால் வைத்துக் கையாள்பவை சமயச் சொல்லாடல்கள். இதே குறியீட்டுநிலை இருத்தலை வாழ்வுடனும், உடலாய் இருத்தல் என்பதுடன் இணைத்து உளவியல் தளத்தில் கையாள்பவை கலையும் இலக்கியமும். சமயம், சடங்கு சார்ந்து அமைந்த இலக்கியங்கள்கூட மனித உடல்-வாழ்வு நாடகத்தன்மையின் வழியாகவே தம்மை வடிவமைத்துக் கொள்கின்றன. விரகபக்தி, நாயகி-நாயக பாவம் போன்று வடிங்களின் வழி அமைந்த புலன் தன்மையையும், காவிய புராணிகக் கதைவழி அமைந்த நெடும் கதைக்கூறல்களும் உடலையே தொடா்ந்து குறியீட்டாக்கம் செய்கின்றன.

உடல்சார் இருத்தலும் உடல்சார் வாழ்தலும் பற்றிய அனைத்துக் கேள்விகளையும் அரசியல் மற்றும் வரலாற்றின் தளத்தில் வைத்துப் பேசும் போதும் நாம் தவிர்க்க முடியாமல் குறியீட்டுநிலை இருத்தலைப் பற்றியே பேசுகிறோம். இதனை இன்னொரு வகையில் விளக்கும்போது நம் உடல்சார் இருத்தலுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் உள்ளதோ அதே அளவுக்கான முக்கியத்துவம் நமது குறியீட்டு நிலைக்கும் உள்ளது. உடல்சார் இருப்பு எப்போது தனிமனித நிலை கடந்து சமூகம், இனம் என்ற குழுநிலை அடைகிறதோ அப்போதே அது குறியீட்டு நிலையை பெற்றுக்கொள்கிறது. இதனை உருவாக்கித்தரும், இதன் உருவாக்கக் கூறுகளை அடையாளம் காட்டித்தரும் இயந்திரமாகச் செயல்படுகின்றவையே அவ்வக்கால கலைவடிவங்கள்.

‘உடல் என்பது எதன் குறியீடு’ என்ற கேள்வியைச் சற்றே  ஒத்திவைத்துவிட்டு உடல் என்பதை எத்தனை வகைக் குறியீட்டுச் செயல்களாகப் பெருக்கலாம் என்றும் உடல்நிலை கடந்த எத்தனை வகை குறியீட்டு நிலைகளை நாம் நிகழ்த்திப் பார்க்கலாம் என்றும் சொல்லித்தருபவை கலை-இலக்கியச் செயல்பாடுகள். இந்தக் குறியீட்டு நிலை பற்றிய உணா்தலோ, அறிதலோ, பிரக்ஞையோ இல்லாத கலை-இலக்கிச்செயல்பாடுகள் எந்த ஒரு சமூகத்திற்கும் அடையாளம் சார்ந்த பெரும் சிதைவுகளையும் இன இருப்பு சார்ந்த கொடுங்கேடுகளையும் கொண்டுவந்து சேர்க்கின்றன.

தன் சமூகத்திற்கான பொதுஅறம் எது, தன்னை இயக்கும் அழகியல் எது, தன்னை நிலைப்படுத்திக் கொள்வதற்கான உளவியல் கட்டமைப்பு எது என்பதை அறியமுடியாத தன்மை கொண்ட சமூக மனிதர்கள் உருவாகக் குறியீட்டு நிலை அழிந்த பொது உளவியல் காரணமாகிறது. இதனைத் தமிழ்த்திரை எவ்வாறு உருவாக்கி வருகிறது, இதற்கான காட்சிநிலை உத்திகளை அது எவ்வாறு செயல்படுத்தி வருகிறது என்பதைப் பற்றியும் சில திரைப்படங்கள் இந்தக் குறியீட்டுநிலைச் சிக்கலை எவ்வாறு கையாண்டிருக்கின்றன என்பதைப் பற்றியும் விவாதிக்க வேண்டியுள்ளது.

( திரையில் வரையப்பட்ட தமிழ் நிலம் நூல் காட்சிப்பிழை வெளியீடு, 2014)