மண்ணை மறுத்த இலக்கியங்கள் உளவாளிகள் உருவாக்கிய கலகங்கள்-பிரேம்

மண்ணை மறுத்த இலக்கியங்கள்
உளவாளிகள் உருவாக்கிய கலகங்கள்

தமிழின் நவீன இலக்கியத்தின் தொடக்கமே சிக்கலாக அமைந்துவிட்டது.
விடுதலைக்கான அறிவு, அடக்குமுறைக்கு எதிரான மொழி, தன்மதிப்பு கொண்ட சமூக மதிப்பீடுகள் இவைதான் நவீன கலை இலக்கியத்தின் அடிப்படைகள்.  பொதுமை அரசியலோ, முதலாதிக்க அரசியலோ (Socialist or Capitalist polity)  ஜனநாயகம், மக்கள் உரிமை என்பதை ஏற்காமல் நவீன சமூக-அரசியல் இல்லை.
அதனால் கலை இலக்கியம் என்பவை தீராத கலகமும் தெளிவான எதிர்ப்புமாக அமைந்து மக்கள்சார் உளவியலால் இயக்கப்படுகின்றன. மேற்குலகின் நவீனத்துவம் முடியரசின் வல்லாதிக்கம்-தேவாலயக் கொடுங்கோன்மை இரண்டையும் அடித்துத் தகர்க்கும் பணியைத் தம் முதல் கடமையாக எடுத்துக் கொண்டது.
இந்திய நவீனத்துவம் இன்னும் சிலவற்றை அடித்து நொறுக்கும் பணியை அழகியலோடு செய்யத் தொடங்கியது. அதாவது சாதி-வர்ண அநீதி, ஆணாதிக்க வன்கொடுமை, வைதிக அறிவுக்கேடு என்பவற்றை எதிர்த்துப் பல மாற்றுகளை முன்வைத்து தன் மொழிதலைத் தொடங்கியது.
ஆனால் தமிழில் இது வெட்கக் கேடான பிராமண-வெள்ளாளத் திமிரின் மாறுவேடமாக அமைந்துவிட்டது.
பாரதியை மகாகவி என்றும் புதுமைப்பித்தனை புரட்சி இலக்கியவாதி என்றும் நிறுவி சாதித் திமிர் மற்றும் வர்ணத் திமிர் கொண்ட ஆண்மைய ஆன்மிகத் திமிரை மனிதாபிமான மாவில் பொதிந்து கொழுக்கட்டை செய்யும் அபார உத்தியைக் கண்டு பிடித்தனர் தமிழின் நவீனர்கள்.
சின்னசாமி சுப்ரமணிய ஐயர் என்ற பெயரிலும் சொ.விருத்தசலம் பிள்ளை என்ற பெயரிலும் இவர்கள் எழுதாதற்கு அவர்களின் அடையாள துறப்பைவிட அடையாள மறைப்புதான் காரணமாக அமைந்தது. இதற்குக் காரணம் நவீனநிலையும் புரட்சிகர காரணிகளும்தான். இவர்களாவது (பாரதி,பு.பி) எழுத்தாளர்கள், நவீன- நவீனத்துவ இலக்கிய மாணவர்கள் வாசிக்க-கற்க இவர்கள் எழுதியவை பயன்படும்.
இதற்கு அப்பால் ஒரு அய்யோக்கியத்தனமான ஒரு தந்திரம் உருவாகி அறிவு மரபைத் தகர்க்கும் முயற்சியாக அது விரிவடைந்தது.
இரண்டு தத்துவார்த்தத் தரகர்கள், உத்தம உளவாளி ‘தீவிர இலக்கியம் தீராத வக்கிரம்’ என்று களமாடினார்கள்.
பகுத்தறிவு மரபை இழிவு படுத்துதல், திராவிடத்-தமிழ் அறத்தை கீழறக்கம் செய்தல், மார்க்ஸிய விடுதலைக் கருத்தியல்களை வசைபாடுதல், அனைத்து விதமான சமத்துவ அறங்களையும் உள்ளொளி-உயர்தகுதி-ஞானம் என்ற அளவீட்டால் இழிநிலைப் படுத்தல் என்பவைதான் இவர்களின் மையத் திட்டம்.
ஜோதிட மூடத்தனம், ஆன்மிகமென்னும் அறிவுமறுப்பு, சாமியார்களின் சாணத்தை மகாபிரசாதம் என உண்ணவைக்கும் அபாசம் இவற்றை வெட்கமின்றி தீவிரத் தகிப்பு கொண்ட இலக்கிய மனதின் இலக்கணங்கள் என இவர்கள் நிறுவ முயன்றார்கள்.
சில ஆங்கில நூல்கள், அய்ரோப்பிய திரைப்படங்கள், ஓவியம் நாடகம் பற்றிய வெற்று அறிமுகத் தகவல்கள் என்பன இவர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள். ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியின் “ஒரே கருத்து ஓராயிரம் பக்கங்கள்“ என்ற அக்கப்போர்களை இவர்கள் மகாஞானம் மாறாத புரட்சி என்று கொண்டாடிய விதம் அருவருக்கத்தக்கதாவே இருந்தது.
மண்ணை நேசிக்காத தன்மை, மக்களுடன் கலக்காத தன்மையம், எந்த விடுதலைக்கான அடையாளத்திலும் தம்மை இணைத்துக்கொள்ளாத உயர்த்தகுதி பாசிச அழகியல், பிராமண-வெள்ளாள ஆண்மையத் திமிரை ஆன்மிகம் என்று கொண்டாடும் நோய்க்கூச்சல் இவைதான் இவர்களின் உளவியல்-நடத்தையியல் கட்டமைப்பு.
இவர்களின் விடுதலை அழிக்கும், கலகத்தை இழிக்கும் உளவாளி இயக்கத்திற்கு எதிரான போராட்டம் மற்றும் தகர்ப்புதான் 1987-1989 காலகட்டத்தில் வெளிவந்த கிரணம் எழுத்துகள் மற்றும் 1990-இல் உருவான நிறப்பிரிகை கருத்தயியல் களங்கள்.
(கிரணம் எழுத்துகளை பகுப்பு செய்தல்-ஒளிப்பகுப்பு செய்தல்- நிறப்பிரிகை என்ற பொருளில் நான் வைத்த பெயருடன் உருவான இதழும் களமும் அது)
இன்றுள்ள மாற்று கலக எழுத்துகள் சொல்லாடல்கள் அனைத்திற்கும் இந்த இரு எழுத்துக்-களங்களே அடப்படைகள். நான் இதனை மிகத்திட்டமிட்டே நிகழ்த்தினேன்.
எனது பாலரசியல் எழுத்துகளைப் பகடி செய்த முற்போக்கு அறிவியக்க பகுதிக்கு வில்ஹெம் ரெய்ச், மிஷல் பூக்கோ என அறிமுகம் செய்து பாலரசியல், நுண்ணரசியல், பெண்ணிய அரசியல், கலக அடையாளம் என்பவை பற்றிய கவர்ச்சியை உருவாக்கினேன்.
‘புரட்சியை நோக்கிய உளவியல் பிரச்சினைகள்’ போன்ற என் கட்டுரைகள் எனது எதிர்ப்பழகியல் எழுத்துக்களை அடையாளப்படுத்தும் முயற்சிகள்.
நான் யாருக்காக, யாரின் வலிகளை, எவருடைய வாதைகளை, மனச்சிதைவுகளை எழுதினேனோ அவர்களே அவற்றைப் புரிந்து கொள்ளாததின் துயரத்தில் நான் செய்த திட்டமிட்ட ஊடுருவல் உத்திதான் நிறப்பிரிகை-எழுத்து-உரையாடல் களம்.
பிறகு தலித்திய அரசியலும் பெண்ணிய பெருந்தகர்ப்பு இயக்கமும் உருவான பின் நான் எந்தத் தயக்கமும் இன்றி அதற்குள் கரைந்து என் அடையாளத்தையும் அழகியலையும் உணர்ந்தேன்.
இனி எனக்கு மறைவாய் திரைவாய் செய்ய- எழுத ஏதும் இல்லை.
என் மண்ணையும் மக்களையும் மொழியையும் அழிந்துவரும் காடுகளையும் நேசித்தபடி கலகம் செய்யும் என் எழுத்துகளை உருவாக்க இந்த இருபெரும் இயக்கங்கள் எனக்கு உடன்பாட்டுடன் கூடிய ஒப்புதல் அளித்துள்ளன.
களமாடிய படி என் கவிதைகளை எழுத அந்த இரு அரசியலும் உயிரச்சத்து தருகின்றன.
தலித் அரசியலுக்கும் பெண்ணிய அரசியலுக்குமான தமது எதிர்ப்பை வெறுப்பை நேரடியாகக் காட்ட இயலாத, அறிவால் வாதத்தால் எதிர் கொள்ள முடியாத ஒரு சாமியார் கூட்டமும் அறிவு மறுப்பு அக்கப்போர் கும்பலும் தற்போது உள்ள இந்துத்துவ-ஆண்மைய அரசியல் தந்த தெம்பில் தம் ஜோதிஷ மகாத்மியத்தை மறு பதிப்பு செய்து உருவாகி வரும் தலைமுறையை நாசப்படுத்தும் முயற்சியல் ஈடுபட்டுள்ளனர்.
மிகப்பெரிய அளவில் பஜ்ரங்கதள-சுயம் சேவக-சிவசேனைகள் செய்து வரும் அறிவழிப்பு கருத்தியல் வன்முறைகளை சிறிய அளவில் வாசிப்பு, எழுத்து என்பதில் ஈடுபாடு கொண்டவர்களிடையில் செய்வதுதான் இவர்களின் செயல் திட்டம்.
இவர்களின் இரு பிதாமகர்கள்தான் வெங்கட சாமிநாதன்- தருமு சிவராம் என்ற வெளியேறிய பண்பாட்டு உளவாளிகள். மாற்றங்களை இழித்துரைக்கும் அறிவுமறுப்புஜீவிகள்.
ஆம் இவர்களை வைத்துத்தான் இப்போது இயக்கம் கட்டப்படுகிறது. ஒன்றரை பக்கம் எழுத முடியாத ஒப்புக்கு எழுதிகள் இவர்களுக்கு ஆசிரமம் கட்டி ஆன்மிக வைபோகம் செய்ய கிளம்பிட்டாங்க.
இவர்களின் மேடையில் பெண்கவிகள் அணி வகுப்பு நடக்கலாம், அடையாளம் மறுத்த சில தலித் அறிவுஜீவிகளும்கூட மாட்டிக் கொண்டு திணரலாம்.
இவற்றுடன் ழாக் லக்கானின் கண்ணாடியை உடைத்து இவர்களின் ஆசிரமச் சுவர்களை அலங்கரிக்கலாம். பூக்கோவின் பாலியல் நிலையின் வரலாறு தொகுதிகளை அன்றே தர்மோ ஜீவராம் தன் பரிதி புணர்ந்து படரும் விந்தின் வழி தமிழகத்தில் பாயவிட்டுவிட்டார் என்று பஜனைகள்கூட பரவலாம்.
என்ன செய்வது இப்போது பெயர் ராசி-எழுத்து எண்ணிக்கைப் பார்த்து மார்க்ஸியத்தை மார்க்கியஜீயம் என்றும் தலித்தியத்தை தர்மோலித்யம் என்றும் பெண்ணியத்தை ஸ்திரிஜலாத்வம் என்றும் பெயர் மாற்றி வைத்து நம்மைக் காத்துக்கொள்ள முடியுமா என்று பார்க்கவேண்டும். திருவண்ணாமலையில் வேறு ஏதாவது ஏர்கண்டிஷன் சாமியார் வந்திருக்கிறாரா எனப் பார்த்து தீட்சை வாங்கி ஜீவனோத்தமராக மாறலாம் என்றெல்லாம் எண்ணம் தோன்றினால் தவிர்க.
பெண்ணிய தலித்திய அறிவாக்கத் தளத்தினர் குழப்பமடைய வேண்டாம் , வானம் நோக்கிய மேல் நோக்கிய பயணங்கள் மண்ணையும் மக்களையும் நேசிக்கும் நமது கீழ் நோக்கிய பயணங்களின் போது காலில் ஒட்டும் மண்ணைக்கூட தொட முடியாது.

 

தாத்தா சொன்ன கதையும் தாத்தாவைப் பற்றி கதையும்-பிரேம்

தாத்தா சொன்ன கதையும் தாத்தாவைப் பற்றி கதையும்

ஏவல் பூதம் என்று பில்லி சூனிய மரபில் ஒரு பாத்திரம் ஒன்று உண்டு. ஒவ்வொரு மந்திரவாதியும் தன் வாளை வசியத்தால் ஒரு பேயை (பூதம்) அடிமையாக்கி வைத்திருக்க வேண்டும். மலையாள தேசம் போய் யச்சிணி, குட்டிச்சாத்தான் என ஏதாவது ஒரு பேயை வசியம் செய்து கட்டி இழத்து வந்து தன் மந்திரக் குடிலில் வேலையாளாக மாற்றிக் கொள்ள வேண்டும். இதில் உள்ள ஒரே சிக்கல் அதற்கு தினம் வேலை தரவேண்டும் இல்லையென்றால் மந்திரவாதியை மண்டையில் அடித்துவிடும். அதனால் வேலை தரமுடியாத காலத்தில் மந்திரவாதி மற்ற ஏதாவது ஒரு மந்திரவாதியின் ஏவல் பேயின் பெயரைக் குறிப்பிட்டு அதன் உச்சாந்தலை முடி ஒன்றை பிடுங்கி வா என்று வேலையைத் தருவானாம்.

பிறகு என்ன பேயின் தலையில் இன்னொரு பேய் கைவைக்க முடியுமா? பேய் தூங்காது அல்லவா? பாவம் கொடுத்த வேலையை முடிக்க இயலாமல் பேய் சுற்றிச் சுற்றி வரும். மந்திரவாதிக்கு ஏதாவது பில்லி சூனிய வேலை வந்ததும் ‘வாலை வசியம் எங்கிருந்தாலும் உடனே மேடைக்கு வரவும்’ என்று அழைப்பு அனுப்புவான். பாவம் ஏவல் பூதம் வெட்கத்தில் குறுகிப்போய் வந்து நிற்கும். என்ன முடி கிடைத்தா என்பான் மந்திரவாதி. ஜகஜால எசமானரே நானும் ஒரு நொடியையும் வீணாக்காமல் முயற்சித்துக் கொண்டுதான் இருந்தேன், இன்னும் முடியவில்லை என்று தலைகுனிந்து சொல்லும்.  மந்திரவாதி “ஒரு மயிரை உன்னால பிடிங்க முடியல ஆனா மந்திரவாதியின் உயிரைப் பிடுங்கறதா ஒப்பந்தம் வேற. சரி சரி இப்ப இந்த வேலையை முடி பிறகு போய் அந்த வேலையை முடி” என்று பேயைக் கர்வபங்கம் செய்வான். பாவம் பேய் இருடா உன்ன வச்சிக்கிறேன் என்று கறுவியபடி கொடுத்த வேலையை செய்து விட்டு அடுத்த வேலை என்ன என்று கேட்டும் “அதுதான் மயிர் பிடுங்கற வேலை மிச்சமிருக்குள்ள போய்வா” என்பானாம் மந்திரவாதி.

இதனைச் சொல்லிவிட்டு என் தாத்தா ஒவ்வொரு முறையும் சொல்லுவார் “வாளை வசியக்காரன் அத்தனை பேரும் வாயால ரத்தம் கக்கித்தான் சாவான்.” ஏன் தாத்தா “பின்ன இன்னொரு மந்திரவாதியும் இதுபோல தன் பேயிக்கும் வேலை கொடுத்திருப்பான் இல்ல, எப்பவாவது இரண்டு பேயும் பொருந்திப் போனா இரண்டும் உன் முடி எனக்கு என் முடி உனக்குன்னு மாத்திக்கும். அப்புற மென்ன முடியைக் கொண்டு வந்து கொடுத்துட்டு “போதுண்டா இந்த மயிர் பிடுங்கிற பிழப்பு போய்வரேன்னு” சொல்லிட்டு உச்சந்தலையில ஓங்கி அடிக்கும், மந்திரவாதிக்கு வாயில் ரத்தம்.”

அப்புறம் ஏன் தாத்தா நீ மந்திரம் பண்ணற? என்று நான் கேட்பேன் தாத்தா சொல்லுவார், “அப்பா பிரம்மானந்தம் நான் செய்யறது பேய்வாளை இல்ல மருந்துவ வாளை. எனக்கு சாமுண்டியே ஏவல் தேவதையா வந்திருக்கா. இவ மட்டும் இல்லண்ணா இந்த சுத்துப்பட்டுல எத்தனை பிள்ளங்க இல்லாம போயிருப்பாங்க தெரியுமா? ஆமாம் அவர் ‘செய்வினை’ ‘சித்திரவதை ஏவல்’ பில்லி சூனியம் எதையும் செய்ய மாட்டார் வைத்தியம் மட்டும்தான். வைத்தியவாளை என்று அதனைச் சொல்லுவார்.

அவருடைய அண்ணன் அதாவது எனக்குப் பெரிய தாத்தா நல்ல உயரம் பெரிய தாடி வைத்திருப்பார். அவர்தான் இச்சா பூதம் இசக்கி வசியம் எனச் சொல்லி பெரிய பெரிய மந்திரம் செய்வார். மை போட்டுப் பார்ப்பது செய்வினை வைப்பது-எடுப்பது எல்லாம் செய்வார். வைத்தியத்தைக்கூட மந்திரமாகத்தான் செய்வார். வசதியானர்கள் மட்டும்தான் அவரை அணுக முடியும்.

துஷ்ட  மந்திரம் துக்க ஜீவிதம் என்று சொல்லுவார் எங்கள் தாத்தா. தன் அண்ணன் கையால் எதையும் வாங்கவோ சாப்பிடவோ மாட்டார். அவன் இவன் என்று மரியாதை இல்லாமல்தான் பேசுவார். வயதாக ஆக அவருக்குப் பல நோய்கள் நான் அவரிடம் “ஏன் தாத்தா எத்தனை பேருக்கு நீ வைத்தியம் பாத்து சரி பண்ணியிருக்கிங்க ஏன் அந்த மந்திர வைத்தியத்தை நீங்க செஞ்சுக்கூடாது?” என்று கேட்பேன். அவர் சொல்லுவார் “பல்லு போனா சொல்லு போகும். சொல்லு போனா சூத்திரம் போகும். சூத்திரம் போனா சூட்சுமம் போகும். சூட்சுமம்தானே மந்திரமும் மருத்துவமும். இப்ப நான் மருந்து விக்கிறவன்தான் மருத்துவன் இல்லையடா.”

நான் கேட்பேன் “அதுதான் தாத்தா அப்ப மருத்துவம் பாத்து குணப்படுத்திக்கலாம் இல்லையா?”

“பிரம்மானந்தம் இந்த கரண்டு கம்பிய ஊர்மேல போட்டப்ப தேவதையெல்லாம் காட்டுக்கு போய் மறைஞ்சிதுங்க, மந்திரம் போச்சு. இப்ப பூச்சி மருந்தும் உரமும் மூலிகையெல்லாம் முறிஞ்சி போச்சி மருத்துவமும் போச்சி. இந்த உரம் போட்ட உணவு வெள்ளக்காரன் தந்தது, மருந்தும் அவன்தான் தரணும்”

அதற்குப் பிறகு அவர் அலோபதி மருந்துதான் உட்கொண்டார். பார்வை முழுமையாக மறைந்தபோது “சாமுண்டி சதிகாரி என்ன ஏன்டியம்மா கைவிட்ட?” என்று அழுவார். என் கையைப் பிடித்துக்கொண்டு சாக பயமில்ல, இந்த இருட்டு பிடிக்கலடா என்பார்.

தன் இறுதிக்காலத்தில் என்னிடம் இத்தனை படிச்சிருக்கியே நீயே சொல்லு, உண்மையா சொல்லு கடவுள் தெய்வம் எல்லாம் மனுஷங்க கற்பனையா? என்று கேட்பார். நான் பெரியாரியத்தை ஏற்று கடவுள் மறுப்பை அறிவித்தபோது “இந்த வீடு தெய்வங்க இருக்கற வீடு இதில சாமியில்லன்னு சொல்றவன் நுழையக் கூடாது” என்ற தாத்தா இப்படி கேட்டால் என்ன சொல்வது?

“எனக்குத் தெரிஞ்சு கடவுள் மட்டும் இல்ல தாத்தா மனிதர்கள்கூட கற்பனைதான் வாழ்க்கையும் கூட கற்பனைதான் இதில் தேவைப்பட்ட கற்பனையை எடுத்துக்க வேண்டியதுதான்”

“நீ சித்தனடா என் செல்லம், நீ சொன்னா சரியா இருக்கும். உன் மாமன்மாருங்கள பாரு தெய்வம் பூசைன்னு நாள் முழக்க நடிக்கிறாங்க அப்பன் எப்படியிருக்கிறான்னு வாரம் ஒருநாள் வந்து பார்க்க நேரமில்ல. சாமி பொய்யின்னு சொல்லற நீதானடா என்ன மருந்து வைத்தியம்னு கூட்டிக்கிட்டு அலையற, போதும்பா வாழ்ந்தது. வலியில்லாம சாக ஒரு மருந்த இருந்தா தா கண்ணு.” என்ன சொல்வது தெரியவில்லை.

மருந்து, குழந்தை மருத்துவம் என்று வாழ்ந்தவர். மருத்துவத்தை விட்ட பிறகும் யாராவது வந்து நாடி பார்த்து உடல் நிலை கேட்பார்கள். கையைப் பிடித்தபடி கண்களை மூடி இது இப்படி இருக்கா என்றால் ஒருவர்கூட இல்லையென்று சொல்லி நான் கேட்டதில்லை. எல்லாவற்றையும் சொல்லிவிட்டு உன் நோய் என்னன்னுதான் என்னால சொல்ல முடியும், இப்ப மருந்தெல்லாம் வெள்ளகாரன்தான் தரனும் போய் டாக்டரபாரு” என்பார்.

நான் அவரை எந்த டாக்டரிடம் அழைத்துச் சென்றாலும் தன் உடலில் உள்ள குறை இது இதற்கு மருந்து தாருங்கள் என்பார். புதுவையில் இருந்த ஒரு புகழ் பெற்ற டாக்டரிடம் கண் தெரியாத போது  அவர் குரலை வைத்து தாத்தா சொன்னார் “அய்யா உங்க குடல்வால் கெட்டுக்கிட்டு இருக்கு மருந்து சாப்பிடுங்க பிராந்தியை ஒரு வருஷம் சாப்பிடாதீங்க”. டாக்டர் ஒரு நொடி திகைத்துப் போனார். அய்யா எப்படி கண்டு பிடிச்சிங்க என்று கேட்டார்.
“குரல்நாடின்னு ஒரு முறை, குழந்தை அழுவதை வைத்து வலி எங்கன்னு கண்டுபிடிக்கிறது, அந்த முறையிலதான் கண்டு பிடிச்சேன் நான் சொன்னது சரியா?”
“அப்படியே சொன்னிங்க, பிராந்தி பத்தி வேற சொன்னிங்களே!”

“எட்டு வயசுல மூலிகை பரிச்சி வர வேலை, பத்து வயசுல இருந்து நாடி மருந்து, மரம் ஏறி வாழ்ந்தவன்தான் மருத்துவத்த விடல. உங்க நோய்க்குகூட ஒரு மருந்து சொல்லறேன் சாப்பிட்டு பாருங்க சரியாகும். ஆனா பத்தியம் முக்கியம், மருந்து கால் வாசி மனசு முக்கால்வாசி.”

“என்னங்க அய்யா இத்தனை அனுபவம், இவ்வளவுகால மருத்துவம், உங்க உடம்புக்கு சித்த மருத்துவத்தில நீங்க ஏதும் செய்துக்கலாமே?”

தாத்தா சொன்னார் “இல்லங்க டாக்டர் காத்து மாறிடிச்சு, தண்ணி மாறிடிச்சு, மண்ணு மாறிடிச்சு. என்னோட மருந்து ஒண்ண ரெண்ட தவிர மத்தது வேலை செய்யாது. போதும் டாக்டர் இனிமே என்ன. வலியில்லாம, இழுத்துக்கிட்டு கிடக்காம சட்டுண்ணு மூச்சு நிக்கணும் அவ்வளவுதான்.”

அவர் அப்படித்தான் உயிர் விட்டார். மருத்துவரிடம் சென்று ஊசி போட்டு வீட்டில் விட்டுவிட்டு நூலகம் சென்று ‘ஆந்தாலஜி ஆஃப் பிரஞ்சு பொயட்ரி’ என்ற நூலையும் தாகூரின் கோரா என்ற நாவலையும் எடுத்துக் கொண்டு வீடு திரும்பியபோது தாத்தா உயிர் பிரிந்திருந்தது.

மார்பில் காதை வைத்துப் பார்த்துவிட்டு நம்பமுடியாமல் டாக்டரை சைக்கிளில் போய் அழைத்து வந்தேன். கையை தூக்கி நாடியைப் பார்த்தவர் கையை விட்டார். எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் தினம் நாடி பார்த்த அந்தக் கை பொத்தென விழுந்தது. வழக்கமாக நான் சைக்கிளை எடுத்தால் எதுவும் சொல்லாதவர் அன்று கேட்டார் “அய்யா இதுக்கு மேல எங்க போற? கொஞ்சம் உட்காரு பேசணும் போல இருக்கு.” தாத்தா இருங்க ஒரு மணி நேரத்தில வந்திடறேன் என்றேன். அதற்குள்தான் அவர் மூச்சு நின்றது.

அன்று இரவு விழுந்தடித்து ஓடிவந்த பெரியதாத்தா கதறினார் “முனிசாமி போயிட்டயா பத்து வயசு பெரியவன் நான் இருக்கேன். நீ போயிட்டயடா சாமி. உனக்கு பிடிமண் போடவா நான் உயிரோட இருந்தேன். பாவிடா நான் பாவி! அம்மா சாகும் போது சின்னவன பாத்துக்கோடான்னு கையைப்பிடிச்சு கொடுத்தாங்க துஷ்ட வைத்தியன்னு என் கையை அப்போ உதறன. இப்போ என்ன தனியா விட்டுப் போயிட்டயேடா, சாமி என் முனிசாமி!”

அந்த மனிதர் அப்படி அழக்கூடிவர் என்பதை என் பதினேழு வயதில் நம்ப முடியவில்லை. எனக்கு அழுகை வரவில்லை, அழுவது பயனற்றது.

அவர் விருப்படி நான் கட்டி விளையாடிய கோயில் இருந்த மண்ணின் தென்மேற்கு மூலையில் அவரை அடக்கம் செய்ய வேண்டும். அதற்கு நானும் அவரும் சென்று வாங்கி வைத்த அனுமதிச் சீட்டை காவல் துறையிடம் காட்ட வேண்டும். என் 11 வயதில் நானும் தாத்தாவும் சேர்ந்து செய்த சிமெண்டு லிங்கத்தை அவர் புதைகுழியின் மீது நடவேண்டும். இரண்டு மனைவிகள் ஏராளமான பிள்ளைகள் என வாழ்ந்த அவருடைய மகன்கள் என்னிடம் கோபமாகக் கேட்டார்கள், “இதையெல்லாம் அப்பா எங்களிடம் சொல்லவில்லையே ஊர் வழக்கம் இல்லியே இது. அந்த மண்ணுல பொதைச்சிட்டா அங்க யாரும் வாழ முடியாது, விக்க வாங்க முடியாது, என்னடா சொல்லற!”

காகிதங்கள் அவர் கைப்பட எழுதிய கடிதம் எல்லாவற்றையும் காட்டினேன். அசையாமல் உட்கார்ந்து கண்ணீரைப் பெருக்கிய பாட்டி சொன்னார், “அப்பா அதுதான் சொன்னார். புஷ்பராஜு சொல்லறத செய்யுங்க. என்னயும் அங்கதான் புதைக்கணும். எல்லை தாண்டி போகக்கடாது எங்க உடம்பு.” ஆம் இடுகாடு இருப்பது தமிழ்நாட்டில் எங்கள் தாத்தாவைப் புதைத்த இடம் புதுச்சேரி மண்.  அதன் பக்கத்தில் பிரஞ்சுக்காரர்கள் நட்ட எல்லைக்கல் இன்னும் உள்ளது. பிரஞ்சு டெரிடரி, பிரிடிஷ் டெரிடரி என ஒரே கல்லின் இருபக்கம் சுருக்க எழுத்துக்களில் (FT-BT) எழுதப்பட்டிருக்கும். அது கத்தி கோடாரி தீட்டியே தேய்ந்து போன கல். அதன் மீது உட்கார்ந்துதான் தாத்தா ஒருநாள் சொன்னார் “இதுவரை நம்ம மண், என்னை இங்கதான் புதைக்கணும்.”

எப்படித் தாத்தா அதற்கு அனுமதி இல்லையே. அதெல்லாம் இருக்கு என்னை நான் சொல்லற இடத்துக்கு அழைச்சிக்கிட்டு போடா கண்ணு. அவர் சந்தித்தது புதுவையின் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சுப்பையா. அவர் உதவியுடன் ஒரு வருடம் நடந்து அவரையும் பாட்டிகள் இருவரையும் சொந்த மண்ணில் அடக்கம் செய்ய அனுமதி உத்தரவு வாங்கினார்.

என்ன தாத்தா இது என்றேன் உனக்கு புரியும் சும்மா கேட்காத. இடுகாடு பிரிடிஷ்காரன் நாட்டுல இருக்கு. என் உடம்பு எல்லை தாண்டி போகக்கூடாது. இதை வச்சிக்க எல்லாம் உன் பொறுப்பு. தாத்தா இதை மாமாங்க கிட்ட கொடுத்து, சொல்லி வச்சிடுங்க என்றேன்.

தாத்தா சில நிமிடங்கள் அமைதியாக இருந்தார் “இல்ல சாமி நான் அவங்கள நம்பல. செத்த பிறகு பாக்கவா போறாண்ணு டொக்குமாந்த்-த தொலைச்சிட்டு ஊர்காரங்க சொல்லறாங்க, சாதி சனம் சொல்லறாங்கன்னு அதோ அந்தச் சுடுகாட்டுல கொண்டு போய் புதைச்சிடுவாங்க. உன்னால அப்ப எதுவும் செய்ய முடியாது.

அவர் சொன்னது போல அது பெரிய சிக்கலும் சண்டையுமாகத்தான் இருந்தது. ஆனாலும் வாக்கு கொடுத்தபடி நான் நம்பாத லிங்கத்தை வைத்து அவரை அடக்கம் செய்தேன். எங்கள் அம்மா தனக்கு வரும் என்று நம்பி இருந்த மண்ணை இந்த மண் எங்கள் பங்கில் போகட்டும் என கோபமாகச் சொல்லி பாதி மண்ணை விட்டுக் கொடுத்தேன்.

பின்னாளில் என் மாமா ஒருவர் பங்கு பிரிக்கும் போது புஷ்பராஜ் அன்னிக்கு கோபத்தில் ஏதோ சொல்லிவிட்டான் அதற்கு ஈடாக வேறு மண் கொடுக்கவேண்டும் என்றார். மற்றவர்கள் ஒப்பவில்லை, நானும் அதனை விரும்பவில்லை.

தாத்தா இறந்த போது அழுகை வரவில்லை. பலகாலம் அவர் மறைவு என் மண்டையில் உறைக்கவில்லை. பாட்டிகள் ஒவ்வொருவராக எங்கள் குடிசை வீட்டில உயிர் விட்டனர். அம்மாவின் கவனிப்பு, அன்புக்காக உறவுக்கார பாட்டிகள் பலர் அந்த வீட்டில் கடைசிக் காலத்தில் வந்து உயிர் விட்டனர்.

என்ன இந்த வீடு சாவுவீடா மாறிடிச்சே என்று பேசும் அளவுக்கு குடும்பத்தை, பிள்ளைகளை விட்டு வந்தவர்கள் சில ஆண்டுகள் சில மாதங்கள் இருந்து அந்த வீட்டில் தன் மூச்சை விட்டனர். எனக்கு அப்பொதெல்லாம் அழுகை வந்ததில்லை. பணம் புரட்டுவது பச்சை ஓலை வெட்டுவது என துக்கம் மரத்த வேலைகள்.
என் அப்பா அங்கு உயிர்விட வில்லை. வேறு ஒரு வாடகை வீட்டில் உயிர் விட்டார். ஆனால் அந்த வீட்டில் வைத்துதான் அடக்கம் செய்தோம். அப்போதும் கூட என்னால் அழமுடியவில்லை.

என் தம்பிக்கு ஒரு தொழில் வேண்டும்,  அந்த மண்ணும் வீடும்தான் ஒரே வழி என்று  விற்று விட்டு ஊரை விட்டுக் கிளம்பி விட்டோம். அந்த ஊருடன் இப்போது எந்த உறவும் இல்லை.

பல ஆண்டுகளுக்குப் பிறகு என் மகள் நான் வாழ்ந்த மண்ணையும் வீட்டையும் பார்க்க விரும்பினார். அழைத்துச் சென்றேன், என் கையால் நண்பர்களை துணையாக வைத்துக் கட்டிய அந்த வீடு அப்படியே இருந்தது, நான் வைத்த மரங்கள் அடையாளம் தெரியாமல் ஓங்கியிருந்தன.

அதற்கு அப்பால் மதில் கொண்ட அந்த கோயிலுடன் தாத்தா பாட்டிகள், அந்த லிங்கம், நந்தி, நிறைய மரங்கள், தாத்தாவும் நானும் செய்த கழுத்து மாரியம்மன் சிலை. சில நிமிடங்கள் அந்த சமாதியருகில் உட்கார்ந்தேன். என் மகள் செம்பருத்திப் பூக்களைச் சேமித்துக் கொண்டிருந்தாா். தாத்தா இறந்துதான் போனாரோ, பாட்டிகளுமா, அப்பா கூடவா? என்ன இது மண்டையில் உறைக்கவில்லையே.

திரும்பி வந்த என் மகள் கேட்டார், ஏன் பப்பி அழற? நானா என்னம்மா சொல்லற? ஆமாம் நீ அழற, கண்ணுல தண்ணி வருது முகம் வீங்கியிருக்கு, நீ அழறப்பா. என்ன ஆச்சி? ஒன்னும் இல்லம்மா, வா போகலாம்.
பாவம் பிள்ளை ஊர் பாக்க வந்தது என் அழுகையைப் பார்க்கவா. நான் பேச்சை மாற்றினேன்.

அழுது என்ன ஆகப்போகிறது? ஆனால் அன்று இரவு அழுதேன். அதுவரை நான் அழாதவர்களுக்காக எல்லாம் அழுதேன். தாத்தா சொன்னது காதில் ஒலித்தது. அதற்கு எந்த அர்த்தமும் இன்று இல்லை. என் உடம்பு எல்லை தாண்டிப் போகக்கூடாது. அர்த்தமற்ற வாசகம், அழுகையை வரவைக்கும் ஞாபகம்.

அம்பேத்கரிடம் கேட்கப்பட்ட இரண்டு கேள்விகள்-பிரேம்

அயோத்திதாசரின் அறப்புரட்சி : 5

பிரேம்

விடுதலை அறிவும் விடுதலை அரசியலும்

அறப்பேரறிஞர் அயோத்திதாசரும் அண்ணல் அம்பேத்கரும் கடந்த காலத்தை மீட்க முயன்ற சிந்தனையாளர்களோ, தேய்ந்து குறையுற்ற ஒரு சமயத்தை மீட்டுருவாக்கம் செய்ய முயன்ற மரபுப் பற்றாளர்களோ அல்லர். அவர்கள் இருவரும் ஒடுக்கப்பட்ட மக்களைச் சமூக, அரசியல், சமய ஒடுக்குமுறைகளிலிருந்து விடுதலை செய்யவும் ஒடுக்கும் மக்களைத் தம் வன்கொடுமை உளவியலில் இருந்து மீட்டு மனிதத்தன்மை கொண்டவர்களாக மாற்றி நவீன சமத்துவச் சமூகத்திற்குரிய மனிதர்களாக வளர்த்தெடுக்கும் வழிகளைக் காட்டவும் தம் வாழ்வை அளித்த நவீன விடுதலைக் கருத்தியலாளர்கள். இந்திய வரலாற்றில் இவர்கள் இருவரைத் தவிர வேறு யாரும் இதற்கு முன்பு இந்த இருமுனைப்பட்ட பணியை மேற்கொள்ள முன்வந்ததில்லை. இவ்விரு பேரறிஞர்களின் வழியைக் கற்று ஏற்று நடக்க முன்வராத யாரும் இதற்குப் பின்பும் இந்தக் கடினமான பணிக்குத் தம்மை ஒப்படைத்ததில்லை. தலித் அரசியல் என இன்று அடையாளப்படுத்தப்படும் இந்திய ஒடுக்கப் பட்டோர் விடுதலைஅரசியலின் மீது சுமத்தப்பட்டுவிட்ட இந்த வரலாற்றுச் சுமை உண்மையில் உலகின் வேறு எந்த அரசியலின் மீதும் சுமத்தப்பட்டதும் இல்லை, அதற்கான தேவைகள் இருந்த இடங்களில் கூட ஒடுக்குவோரை நிலைமாற்றி சமூக வயப்படுத்தும் சுமையை விடுதலை அரசியல் ஏற்றுக்கொண்டதில்லை.

விடுதலை கோரும் மக்களுக்கான அரசியல் தீண்டாமையையும் சாதியமைப்பையும் அழித்துச் சமத்துவச் சமூகத்தை உருவாக்குவதன் வழியாக உண்மையான தேசிய அரசியலையும் தேச அமைப்பையும் உருவாக்கித் தருகிறது என்பதைப் புரிந்துகொள்வதற்கான அறிவற்ற அரசியல் சிந்தனையாளர்களும் சாதிப்பற்றுக் கொண்ட தலைவர்களும் இன்று தலித் அரசியலையும் தலித் கட்சிகளையும் சாதிய அரசியல்‘ ‘சாதிக் கட்சிகள்என்று புலம்பித் திரிவதைக் காண்கிறோம். இனம், மொழி, அடையாள அரசியலிலும் இந்த வரலாற்றுப் புரிதலற்ற நிலை அச்சுறுத்தும் அளவுக்குப் படிந்து கிடப்பதைக் காணலாம். ஒடுக்கப்பட்டோர் அரசி யலைத் தலைமையேற்று களம் நிற்கும் தலைவர் களைச் சாதித் தலைவர்கள் என்று புறம்தள்ளியும் சாதி ஆதிக்கத்தை நிலைப்படுத்தும் தலைவர்களை இனத்தலைவர்கள், தமிழ்த்தேசியப் போராளிகள் என்று புகழ்பாடியும் நிலைக்கேடு அடைந்து நிற்கும் நிலை உண்மையில் விடுதலை அரசியலுக்கு எதிரானது மட்டுமின்றி இனவெறி மற்றும் சாதிவெறி அரசியலுக்கு இணக்கமானது . உலக அளவில் நடந்த பல்வேறு புரட்சிகர அரசியல் நிலைமாற்றங்கள் உருவாகிய இன்றையச் சூழலிலேயே ஒடுக்கப் பட்டோர் விடுதலை அரசியல் (தலித் அரசியல்) இவ்வளவு கடினமான துயர்நிறைந்த நிலையை எதிர்கொள்ள நேர்கிறதெனில் நம் தலைவர்களான அயோத்திதாசரும் அம்பேத்கரும் தம் அரசியல் பெரும் பணிகளை மேற்கொண்ட காலத்தில் அவர்கள் அடைந்தத் துயர்கள், தொல்லைகள், உள்ளக் காயங் கள் பற்றி எண்ணும் பொழுது மிகுந்த வலியில் தளர்கிறோம். ஆனால் அவற்றையெல்லாம் கடந்து அவர்கள் உருவாக்கிய புரட்சிகர இயக்கம், அவர்கள் கண்டறிந்துத் தொகுத்தளித்த விடுதலைச் சிந்தனைகள் பற்றி எண்ணும் போது வியப்பில் எழுகிறோம். இந்த வலிமையை, இந்த வகை எதிர்ப்புச் சக்தியை, உள்ளார்ந்த அறிவுச் செருக்கை, அறம் சார்ந்த முன்னோக்குப் பார்வையை அவர்களுக்கு அளித்தது எது என அவர்களின் எழுத்துகள் (வாழ்வும் சிந்தனையும் ஒன்றிணைந்த பகுதி) வழி அறிந்துகொள்ள முயற்சிக்கும் போது நமக்கு இரு மையப்புள்ளிகள் கிடைக்கின்றன. முதலாவது: அவர்கள் தம் மக்கள் மீது கொண்டிருந்த அன்பு, இரண்டாவது: அவர்கள் இருவருக்கும் பொதுவான பௌத்தம். ஆம், இவை இரண்டும்தான் அவர்களின் அறிவு, அறம், அரசியல் அனைத்தையும் வழிநடத்தியுள்ளன. இதில் பௌத்தம் அவர்களுக்கான அறம் சார்ந்த அரசியலை மட்டுமின்றி எதிர்ப்புகள், தோல்விகள், புறக்கணிப்புகள், வலிகள் அனைத்தையும் கடந்து வலிமையுடன் முன்செல்லும் ஆற்றலை அளித்திருக்கிறது. அவர்களின் அறிவுத் தேடலுக்கும் பகுத்தறிவு அரசியலுக்கும் பௌத்தம் மிகப்பெரும் அடித்தளத்தை அமைத்துத் தந்திருக்கிறது. இப்படிக் கூறும்போது பௌத்தம் வழிதான் அவர்கள் விடுதலைச் சிந்தனையாளர்களாக மாறினர் என்று புரிந்துகொள்ள வேண்டிய தேவையில்லை. மாறாக அவர்களின் விடுதலைக்கானத் தேடுதலுக்கும் அறிவு சார்ந்த அறக்கோட்பாடுகளுக்கும் பௌத்தம் பொருந்தி வந்ததால் அதனை அவர்கள் ஏற்றுக்கொண்டு புத்துருவம் அளித்தனர்.

ஆதிகுருவாம் புத்தரை இருவருமே தம் தத்துவ ஆசானாக, அரசியல் வழிகாட்டியாகக் குறிப்பிடும் பாங்கு மிகச்செறிவான வரலாற்று பொருள் பொதிந்தது. யாரையும் புனிதராகவோ வணங்கிப் பணியத் தக்கவராகவோ ஏற்காத அறிஞர்களான இருவரும் புத்தரை அறிவின் வடிவாக, அறத்தின் உருவாக, ஒரு புரட்சியாளராக, தமக்கு நெருங்கமான ஒரு துணைவராக அடையாளம் காண்கின்றனர். இந்த அடையாளம் அவர்களுக்கு ஒரு தொன்மை யான உரிமையை, மேன்மையுற்ற உணர்வை வழங்குகிறது. என்னிலும் மிக்க ஒரு அறிஞன் தற்போது இந்தியாவில் யார் உள்ளார் என்று கேட்பதற்குரிய உண்மையான ஆற்றல், உழைப்பினால் உருவான தகுதி அம்பேத்கருக்கு மட்டுமல்ல அயோத்திதாசருக்கும் இருந்தது. இது மிகைப்படுத்தப்படாத ஒரு முன்மொழிதல். இதற்கு அடித்தளமாக அமைந்தது பௌத்தம் உருவாக்கித் தந்த அறிவையும் அறத்தையும் மையமாகக் கொண்ட மரபு. “புத்தருக்குப் பிறகு யார் குருவாக இருக்க முடியும்?” என்ற கேள்வி எழுந்தபோது தம்மமே குருவாக இருக்க முடியும்” என்ற பதிலை அம்பேத்கர் பதிவு செய்து ஒரு அறக் கோட்பாடு தன் வலிமையால் வாழவேண்டுமே தவிர தனிமனிதர் ஒருவரின் ஆளுமையால் அது நிலைநிறுத்தக் கூடாது. தனிமனிதர் ஒருவரின் ஆளுமையால் நிலைப்படுத்தப் படுகிறதெனில் அது அறக்கோட்பாடாக இருக்க இயலாது ” என்று விளக்கமும் தருவார்.

அதன் வழியாக பௌத்தத்தைக் கிறித்துவ, இஸ்லாமிய மரபிலிருந்து வேறுபட்டது என்று நிறுவுகிறார் அம்பேத்கர். புத்தர் ஒரு குருவே தவிர இறைமைந்தனோ, இறைத்தூதரோ அல்லர் அதனால் அறிவார்ந்த புரட்சிக்குரிய சமய நெறியாகப் பௌத்தம் அமைந்துள்ளது என்பது அயோத்திதாசர், அம்பேத்கர் இருவரும் கண்டறிந்த உண்மை. இந்த அறிவு மரபில் தம்மை இணைத்துக் கொண்டதன் வழியாக விடுதலையுற்ற அறிஞர்களாக விடுதலைக்கு வழிகாட்டும் புரட்சியாளர்களாக இருவரும் தம்மை உறுதிப்படுத்திக்கொள்ள முடிந்தது. வேறு நிறுவனமான தலைமை அதிகாரம் கொண்ட சமயங்கள் அளிக்க இயலாத இந்த அறிவார்ந்த விடுதலையைப் பௌத்தத்தின் வழி தம் வாழ்வில் உணர்ந்ததால்தான் அவர்கள் தம் மக்களுக்கும் விடுதலைக்கான மார்க்கமாக அதனை முன்மொழிந்தனர்.

அயோத்திதாசர் இந்த விடுதலையைத் தம் வாழ்வில் 16 ஆண்டுகளுக்கு (1898-1914) மேல் நடைமுறை மெய்யாக்கினார். அக்காலகட்டத்தில் அவருடைய எழுத்து, பேச்சு, இயக்கம் அனைத்திலும் விடுதலையுற்ற ஆற்றலும் அச்சமற்ற தெளிவும் அநீதிகளை முகத்திற்கு நேராகத் தாக்கும் வலிமையும் வெளிப்பட்டன. அவர் வரலாற்றையும் மரபுகளையும் பொய்மைகளில் இருந்து விடுவித்துப் புதிதாகக் கட்டியெழுப்பினார். அம்பேத்கர் தம் வாழ்வின் தொடக்கக் கட்டத்திலிருந்து பகுத்தறிவாளராக இருந்தவர், தம் 44 ஆம் வயதில் மதமாற்றம் பற்றியும் இந்து மதத்திலிருந்து வெளியேற முடிவு செய்துள்ளது பற்றியும் அறிவிப்பை வெளியிடுகிறார். அதற்குப்பிறகு 1956-இல் தம் மறைவுக்குச் சில வாரங்களுக்கு முன் பௌத்த தம்மத்தைச் சடங்கு முறைகளுடன் ஏற்றுத் தம் மக்களுக்கான எதிர்காலச் செய்தியாக அதனை அறிவிக்கிறார். இடைப்பட்ட காலத்தில் அனைத்துச் சமயங்களையும் அவற்றின் அரசியல் சமூக வரலாறுகளையும் ஆய்வு செய்வதாக அவர் அறிவித்த போதும் பௌத்தத்தின் மீதான பற்று உள்ளீடாக அவருக்குள் எப்போதும் இருந்துகொண்டே இருந்தது. ஆனால் அதனை விடுதலைக்கான அரசியலுடன் இணைப்பதில் அவருக்கு பல விளக்கங்கள் தேவைப்பட்டன. 1930- களில் மதமாற்றம் தான் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான விடுதலைக்குத் தொடக்கம் என்றும் இந்து மதத்திலிருந்து உடனே வெளியேறுங்கள் என்றும் மக்களுக்கு அறிவுறுத்திய அண்ணல் எந்த சமயத்தைச் சார்வது என்பதை அறிவிக்கவில்லை. இஸ்லாம், கிறிஸ்துவம் , பௌத்தம் , சீக்கியம் பற்றிப் பொதுவாகக் குறிப்பிடுகிறார். ஆனால் பின்னாட் களில் தீண்டாமைக்குட்பட்ட மக்கள் தொல்புத்தர்களே, பிராமண சமயத்தின் தாக்குதலால் வீழ்ச்சியுற்ற மக்கள்தான் இன்றைய ஒடுக்கப்பட்ட மக்கள் என்ற வரலாற்று கருதுகோளை முன்வைக்கிறார். இந்த இரண்டு கருத்துகளும் அயோத்திதாசரால் சான்றுகளுடன் முன்பே நிறுவப்பட்டவை. “பூர்வத் தமிழர்களே, திராவிட பெளத்தர்களென்னும் பெயர்பெற்று சாதிபேத மென்னுங் களங்கமற்று சகலரும் ஒற்றுமெயுற்று வாழ்ந்ததுபோல் நாளதுவரையில் சாதிபேதமற்று வாழ்ந்து வருகின்றார்கள்.” (தமிழன் : ஆகஸ்டு 18,1909). இதற்காக அம்பேத்கர் வைக்கும் சமூகவியல் தரவும்கூட அயோத்திதாசர் முன்பே பதிவுசெய்யப்பட்டுள்ளது. ஒடுக்கப்பட்ட மக்கள் பூர்வ பௌத்தர்களே பிராமணஇந்து வன்முறையால் தம் பெளத்த அடையாளம் மறைத்து வாழ நேர்ந்தது வரலாற்றுச் சதி என்ற அறிவிப்பு ஒருவகையில் பௌத்தநெறியை ஏற்பது மதமாற்றம் இல்லை எங்கள் மதமீட்புஎன்ற செய்தியை முன் வைக்கிறது. அத்துடன் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான புதிய வாழ்வை, அரசியலை, அடையாளத்தை வழங்கு வதாகவும் அமைந்துவிடுகிறது. அயோத்திதாசர் சாதிபேதமற்று வாழ்ந்து வந்த பூர்வத் தமிழ்க்குடிகள், திராவிட பெளத்தர்கள்என்று இனம், மொழி உள்ளடக்கிய மீட்பைக் கட்டியெழுப்புகிறார். அத்துடன் உலகம் முழுமைக்குமான தன்மம் என்று அதனை அறிவிக்கவும் செய்கிறார். அம்பேத்கர் அதனை நவீன சமத்துவ அரசியலுடன் இணைத்து எதிர்கால உலகிற்கான விடுதலையாகவும் விரிவு படுத்துகிறார்.

இந்த முன்னெடுப்பு இருவரிடமும் நிகழ்வதன் பின்னணியை இங்கு நாம் குறித்துக்கொள்ள வேண்டும். அயோத்திதாசர் தம் காலத்தில் முன்வைத்த போராட்டத்திற்குப் பிரிட்டிஷ் அரசைப் பாதுகாப்பு அளிக்கும் ஒரு அமைப்பாக முன்வைத்து செயல்படுகிறார். பிராமணியம், இந்து மதம், சாதியம், தேசியம், நிலவுடைமை அமைப்பு என அனைத்தையும் அவர் அச்சமற்று எதிர்க்க வேற்று நாட்டு அரசின் சட்டங்களின் பாதுகாப்பினை அவர் பயன்படுத்திக் கொள்கிறார். அவர் மேலும் சில ஆண்டுகள் வாழ்ந்திருப்பாரேயானால் பிராமணரல்லாதார் அரசியல், தேசபக்தி அரசியல், இந்துத்துவ அரசியல் என வலிமைகொண்ட அரசியலுடன் மோதி நின்று போராட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும். அவருக்கு நேராத அந்த கடினமான மோதலும் தாக்குதலும் அம்பேத்கருக்கு வாழ்நாள் முழுக்க வந்து சேர்ந்தது. இவற்றை அண்ணல் எதிர்த்து நிற்கத் தளம் அமைத்துக் கொடுத்ததும் அந்நிய ஆட்சி என்ற மூன்றாவது அமைப்புதான். அந்த காலகட்டத்தில் அம்பேத்கருக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு பின்னாளில் அதாவது 1947-க்குப் பிறகான இந்துபிராமண ஆட்சியில் இல்லாமலாக்கப்பட்டது. அண்ணலின் எழுத்திலும் பேச்சிலும் துயரமும் வலியும் கூடிய காலகட்டம் இது. 1951-க்குப் பின்னான நாட்கள் அவரிடம் தளர்ச்சியும் சோர்வும் சீற்றமும் கூடிய காலகட்டம். தேர்தலில், கட்சியில் ஏற்பட்ட தோல்விகளும் அவரது திட்டங்களில் ஏற்பட்டப் பின்னடைவுகளும் அவரிடம் உள்ளார்ந்த பல கேள்விகளை எழுப்பின. தம் மக்களின் எதிர்காலம் பற்றிய பதற்றம், இந்திய அரசியலில் பிற்போக்குச் சக்திகளின் வளர்ச்சி பற்றி அருவருப்பு, இந்துபிராமண அதிகார எழுச்சி பற்றிய சீற்றம் என்பன அவரிடம் இறுக்கத்தை ஏற்படுத்தியிருந்தன. அந்த காலகட்டத்தில்தான் புத்தரும் அவர் தம்மமும்நூலை அண்ணல் எழுதத் தொடங்குகிறார். அவரது அறிவும் உணர்வும் ஒன்றித்து வெளிப்படும் இந்நூலின் வரிகளூடாக நாம் அவரது பயணத்தை அறிந்துகொள்கிறோம். வாழ்நாள் முழக்க போராடுவதற்கான வலிமை அவருக்கு வந்ததற்கான வேர்கள் அதில் படிந்துள்ளன. தோல்விகளைக் கடந்து வரலாற்றின் விடுதலைக் குறியீடாக அவர் மாறுவதற்கு அடித்தளம் அமைத்துத் தந்த உணர்வு அதன் பக்கங்களூடாக விரிகிறது. தன் மனக் கலக்கங்களைக் கடந்து முன்னோக்கிப் பார்க்கும் அண்ணலுக்கு தன் உள்ளார்ந்த அடையாளத்தை உலகுக்கு அறிவிக்க, தம் மக்களுக்கு வழங்க இனியும் காலங்கடத்தக் கூடாது என்பது புலப்படுகிறது. தீக்ஷா பூமியில் 1956 அக்டோபரில் ஒலித்த அவரது தளர்ந்த குரலில் இரண்டாயிரமாண்டுச் புரட்சிகரச் சிந்தனையின் தெளிவு வெளிப்படுகிறது.

என்னிடம் ஒரு கேள்வி தொடர்ந்து கேட்கப்படுகிறது: எப்படி இவ்வளவு உயர்ந்த அளவு கல்வியை நான் பெற முடிந்தது. இன்னொரு கேள்வியும் கேட்கப்படுகிறது: ஏன் எனக்கு பௌத்தத்தில் பற்று உருவானது. இந்தியாவில் தீண்டாமைக்குட்பட்ட சமூகத்தில் பிறக்க நேர்ந்த காரணத்தால் என் முன் இந்தக் கேள்விகள் வைக்கப்படுகின்றன. முதல் கேள் விக்கு விடையளிக்க இந்த முன்னுரை உகந்த இடமல்ல. ஆனால் இரண்டாவது கேள்விக்கு விடையளிக்க இந்த முன்னுரை உகந்த இடம்.

இக்கேள்விக்கு நேரடியான விடை புத்த தம்மமே மிகச்சிறந்த தர்மம் என நான் மதிக்கிறேன். வேறு எந்த சமய தர்மத்தையும் அதனுடன் ஒப்பிட இயலாது. அறிவியல் சிந்தனை கொண்ட நவீன மனிதர் ஒருவர் சமய நெறி ஒன்றைப் பின்பற்ற வேண்டும் என்று விரும்பினால் அதற்குத் தகுந்த ஒரே சமயநெறி புத்த நெறி மட்டுமே. முப்பத்தைந்து ஆண்டுகாலம் அனைத்துச் சமய மார்க்கங்களையும் நுட்பமாக ஆய்ந்து அறிந்தபின் இந்த நம்பிக்கை என்னுள் உறுதிப்பட்டுள்ளது.” (முன்னுரைபுத்தரும் அவர் தம்மமும்)

முதல் கேள்விக்கு அம்பேத்கர் இந்த நூலில் நேரடியாகப் பதில் சொல்லவில்லை, ஆனால் இந்த நூல் முழுமையுமே முதல் கேள்விக்கான பதிலாக அமைந்துள்ளது என்பதுதான் நாம் அறிந்துகொள்ள வேண்டிய உண்மை. அயோத்திதாசரின் ஒவ்வொரு எழுத்திலும் இதற்கான விடை பதிந்துள்ளது. அவர்களின் விடுதலை தொடங்கிய இடம் அது, அதனால்தான் தம் மக்களின் விடுதலைக்கான வழியாக அதனை முன்மொழிந்தனர்.

(தொடரும்)

(நமது தமிழ்மண்:அக்டோபர் 2015)

நவயான பௌத்தமும் நவீன அரசியலும்-பிரேம்

அயோத்திதாசரின் அறப்புரட்சி : 4

பிரேம்

நவயான பௌத்தமும் நவீன அரசியலும்

சோம்பேறிகளும் நாணமற்றவர்களும் வஞ்சகர்களும் பொய்யர்களும் ஒன்றுகூடிக்கொண்டு தேகவுழைப்பும் சுருசுருப்பும் நாணமும் மெய்மொழியும் நிறைந்த ஆறு கோடி மேன்மக்களை பறையரென்றும் தீயரென்றும் சண்டாளரென்றும் இழிவு கூறிவருவதை யானைகள் உறங்குவது போலும், புலிகள் பதுங்குவது போலும், வில்லுகள் வளைவது போலும், ஆட்டுக்கடாக்கள் பிந்துவதுபோலும் கேட்டுக்கொண்டு அடங்கி நிற்பது அவ்வளவும் பாச்சலுக்கென்று தெரிந்து நிதானித்து வார்த்தையாடாது வீணே தூற்றித் திரிகின்றார்கள்.” அயோத்திதாசர் (தமிழன் :நவம்பர் 9,1910)

விடுதலைக்கான போராட்டங்களில் மதங்களின் பங்கு எவ்வாறு அமையும் என்பதைக் குறித்து மிகநெடிய விவாதங்கள் உலக அளவில் கடந்த இரு நூற்றாண்டுகளாக நடந்து வருகின்றன. மதங்கள்தான் மக்களை ஒடுக்கி வருகின்றன மதங்களில் இருந்து மக்கள் முதலில் விடுதலை அடைய வேண்டும் என்ற ஒரு கருத்தும்; மதங்கள் மக்களுக்கானவை அவற்றை மக்கள் தம் கையில் எடுத்துக்கொண்டு தமக்கான விடுதலைக்காகப் போராடவேண்டும் என்ற ஒரு கருத்தும்; மதங்கள் மக்கள் நலனுக்கானவை அவை இல்லாமல் மக்களால் வாழமுடியாது என்ற ஒரு கருத்தும்; மதங்களைக் கடைப்பிடித்து மதங்களின் வழியில் வாழ்வதுதான் விடுதலை அதற்கு மாறான விடுதலை என எதுவும் இல்லை என வேறு ஒரு கருத்தும் இன்றுவரை முரண்பட்ட தம் வாதங்களைத் தொடர்ந்து முன்வைத்து வருகின்றன.

தமக்குள் முரண்படும் இந்த நான்கு வகையான நிலைப்பாடுகளும் ஒருவகையில் மக்கள்என்ற கருத்தாக்கத்தையும் விடுதலைஎன்ற கோட் பாட்டையும் மையமாக ஏற்றுக்கொண்டுள்ளன என்பதை நாம் கவனிக்க வேண்டும். மக்கள் மற்றும் விடுதலை என்ற கோட்பாடுகள் வரலாற்றில் மையம் பெறத்தொடங்கிய நிலை எனில் அது நவீன அரசியலின் காலகட்டம் சார்ந்தது, அதாவது மக்கள் புரட்சிகள் தொடங்கிய காலகட்டத்திற்குப் பிறகு உருவான கருத்து என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும். நவீன அறிவு, நவீன அரசியல், நவீன வாழ்வியல் மதிப்பீடுகளுக்குப் பின் மதங்களின் இடம் கேள்விக்குள்ளான போது அவை தம்மை மாற்றியமைக்க வேண்டிய தேவை உருவானது. அந்த மாற்றம்தான் மக்கள் நலன், மக்கள் விடுதலைஎன்ற கருத்தியலுடன் மதங்கள் தம்மை உறவுபடுத்தி விளக்க வேண்டிய தேவையை கடந்த இரு நூற்றாண்டுகளில் உருவாக்கியது.

இதற்கு முன்னான காலகட்டத்தில் மக்கள், சமூக வாழ்வியல், அரசியல் பற்றி மத நிறுவனங்கள் அளித்து வந்த விளக்கங்கள் முற்றிலும் மாறுபட்டவை. மக்கள் என்ற கருத்தாக்கம் விளிம்புநிலையில் வைக்கப்பட்டு அரசு, இறையியல் விதிகள், அதிகாரத்திற்கு அடிபணிதல் என்பன மையமாக வைக்கப்பட்டிருந்தன. ஆதிக்கம், அடக்குமுறை என்ற இரு செயல்பாடுகளும் அரசு, மதநிறுவனம் இரண்டின் அதிகாரத்தையும் உறுதி செய்யும் புனித விதிகளாகஏற்கப்பட்டிருந்தன. இந்தப் புனித விதிகள்அவ்வப்போது தகர்க்கப் படுவதற்கு சமூகப் புரட்சிகளும், கோட்பாட்டுப் புரட்சிகளும் காரணமாக அமைந்திருக்கின்றன. மக்களின் துயரத்தைக் கணக்கில் கொள்ளாத மதங்களுக்கு எதிராக நிகழ்ந்த புரட்சிகள் பல மதங்களைத் தகர்த்துள்ளன, சில மதங்களை மாற்றியமைத்துள்ளன. இந்தப் புரட்சிகளுக்கு ஏற்ப மதங்கள் தம்மைத் தகவமைத்துக் கொள்ளும் நிலையையே பாபாசாகேப் அம்பேத்கர் மதங்களில் நிகழும் புரட்சிஎன்று அடையாளம் காட்டுகிறார். அரசியல் புரட்சிகள் நிகழ்வதற்கு முன்பாக சமூகப் புரட்சியும் சமயப் புரட்சியும் நிகழ்வது வரலாற்றுத் தேவை என அம்பேத்கர் சான்றுகளுடன் விளக்குகிறார். ஆனால் அனைத்து மதங்களும் தமக்குள் புரட்சிகள் நிகழ்வதை அனுமதிப்பதில்லை என்பதால் மதங்களுக்கு எதிரான புரட்சியின் தேவை பற்றியும் அம்பேத்கர் விளக்குகிறார்.

உலக அளவில் புரட்சி பற்றிய முன்னோடிக் கருத்தியலை வழங்கிய மார்க்சியம் மதங்களை அறிவியல் சிந்தனைகள், அறிவு சார்ந்த மதிப்பீடுகளுக்கு எதிரானவை என்று விளக்கியிருக்கிறது. இதுவரையிலான மனித வரலாறு ஆதிக்க வர்க்கங்கள் மற்ற வர்க்கங்களைச் சுரண்டி வருவதன் வரலாறாக உள்ளது, வர்க்கப் பகை மையின் பல்வேறு வடிவங்கள்தான் கடந்த காலச் சமூக அமைப்பை வழிநடத்தியுள்ளன. ஆதிக்கக் கருத்தியல்கள் அனைத்தும் ஆதிக்கத்தில் இருந்தவர்களால் உருவாக்கப்பட்ட கருத்தியல்கள் தான், மதங்களும் அவ்வகையில் ஆதிக்கக் கருத்தியலைக் கொண்டுள்ளன. அதனால் கம்யூனிச சமூகம் மதங்களைக் கைவிட்ட சமூகமாக அமையும் என்று குறிப்பு வழங்கியுள்ளது. பழமையிலிருந்து விடுபட்ட ஒரு புரட்சிகர சமூகம் மதங்கள் அற்றதாக அமையும் என்பது மார்க்சியத்தின் நிலைப்பாடு. ஆனால் மார்க்சிய சமூகவியல் மற்றும் மார்க்ஸின் வரலாற்றுப் பார்வை மதம் மற்றும் சமய நிறுவனங்களை ஒரு காலகட்டத்தின் தேவை என்றும் விளக்கியிருக்கிறது. மனித உளவியல் மற்றும் சமூக உளவியலில் குழப்பங்களும் அச்சங்களும் பாதுகாப்பின்மைகளும் நிலவும் வரை மதங்களும் சமயங்களும் மனிதவாழ்வின் பகுதியாக அமைவது தவிர்க்கமுடியாத நிகழ்வு என அடையாளம் காட்டுகிறது. மார்க்ஸ் மதங்களின் அனைத்து வடிவங்களையும் செயல்பாடுகளையும் மிக ஆழமாகவே விளக்கியிருக்கிறார். மதங்கள் அற்ற சமூகத்தை உருவாக்க செய்ய வேண்டியவை குறித்தும் மிக விரிவாகச் சிந்தித்திருக்கிறார். மதங்கள் பற்றிய அவரது கருத்துகளில் சில இவ்வாறு அமைகின்றன: “மதம் மனிதர்கள் தம்மைத் தாமே கண்டடைவதற்கான ஒரு முயற்சி. மனிதர்களின் அரசுகளும் சமூகங்களும் உருவாக்கியவைதான் இந்த மதங்கள். இது மனித உலகம் பற்றிய தலைகீழான ஒரு பிரக்ஞை. அவை உலகம் பற்றிய மனிதர்களின் பொதுக்கோட்பாடுகளின் தொகுப்புகள். மனித சாராம்சம் என உறுதியாக ஏதும் இல்லாததால் கற்பனையால் கட்டப்பட்ட மனித சாராம்சமாக மதம் அமைகிறது. மதங்கள் கற்பிக்கும் துயரங்கள் உண்மையான துயரங்களின் ஒரு வகை வெளிப்பாடுதான், அதே சமயம் உண்மையான துயரத்திற்கு எதிரான செயல்பாடாகவும் அமைகிறது. மதம் ஒடுக்கப்பட்ட மனித உயிர்களின் பெருமூச்சு, இதயமற்ற உலகின் இதயம், ஆன்மாவற்ற வாழ்நிலையின் ஆன்மா. அது மக்களுக்கான அபினி. மாய இன்பமான மதங்களைக் கைவிடுவது என்பது மனிதர்களுக்கான உண்மையான மகிழ்ச்சியை உருவாக்கும் போது சாத்தியமாகும். மாய இன்பங்கள் தேவைப்படாத சமூக அமைப்பை உருவாக்குவதன் மூலம்தான் மதங்களை நாம் கைவிட முடியும். கண்ணீரின் பிறப்பிடத்தை கண்டறிந்து நீக்கும்போது இந்த மதங்களும் இல்லாமலாகும். உலகு கடந்த உண்மைகள் மறைய வேண்டுமெனில் இந்த உலகின் உண்மையை நிறுவிக்காட்ட வேண்டியது வரலாற்றின் கடமையாகிறது.” மார்க்ஸைப் பொறுத்தவரை மனிதர்களே அனைத்திற்கும் மையமாக அமைகின்றனர். இவ்வுலகின் சமயம் சார்ந்த, இறைமை சார்ந்த அனைத்தும் கற்பனைகள் என்பதில் மார்க்சியத்திற்கு எவ்வித ஐயமும் இல்லை. ஆனால் மதங்கள் அரசியலோடும் சமூக நடப்பியலோடும் உறவுடையன என்பதையும் அது மறுப்பதில்லை.

மதங்கள் தமக்குள் முரண்பட்டு ஒன்றை ஒன்று மறுத்தும், ஒன்றை மற்றது இழித்தும், ஒன்றுடன் ஒன்று மோதியும் மாபெரும் அழிவுகளை வரலாற்றில் நிகழ்த்தி வந்துள்ளன. மதங்களும் அரசுகளும் இணைந்து தனிமனிதர்களையும் சமூக மனிதர்களையும் தொடர்ந்து கட்டுப்படுத்தியும், தம் கட்டளைகளுக்கு உட்படுத்தியும், அடக்கி அடிமைப் படுத்தியும் வந்துள்ளன. என்றாலும் மக்கள் குழுக்கள் ஒட்டு மொத்தமாக மதங்களை மறுத்து வேறு வகை நம்பிக்கை மற்றும் நெறிகளை நோக்கிச் செல்லாமல் ஒரு மதத்திலிருந்து மற்றொரு மதத்திற்கு மாறியும் ஒரு மதத்தை மறுத்து புதிய ஒரு மதத்தை உருவாக்கியும் மத அமைப்புகளைத் தொடர்ந்து பாதுகாத்து வந்துள்ளனர். வர்க்க முரண், இன முரண், மொழி முரண்களின் அடிப்படையில் அடக்குமுறைகளும் அடிமைத்தனங்களும் உருவான பொழுதும் தம் மீது வன்முறைகள் ஏவப்பட்ட போதும்கூட மக்கள் மதங்களின் அடையாளங்களை மறுக்காமல் அவற்றிற்குள் இருந்தபடி நீதி கேட்டும் நிவாரணம் தேடியும் குரல் எழுப்பியும் கோரிக்கை வைத்தும் துயருற்ற வாழ்க்கையைத் தொடர்ந்துள்ளனர். பல சமூகங்களில் மதங்களின் சட்டங்களும் அவை உருவாக்கிய வாழ்க்கை விதிகளும் அனைவருக்குமான சமத்துவம், சமஉரிமை, சமமான வாழ்வாதாரங்கள் என்பதை மறுத்து படிநிலை ஏற்றத்தாழ்வு, அடிமைத்தனம், வாழ்வாதாரம் அற்ற வறுமை என்பனவற்றை நியாயப்படுத்துவனவாகவும் மக்களின் துயரங்கள் அனைத்தும் இறைமை விதிகளால் உருவாக்கப்பட்டவை அவை புனித ஒழுங்குகளால் வழி நடத்தப்படுகின்றன என்று போதிப்பனவாகவும் இருந்துள்ளன. தம் வாழ்க் கையை மாற்றும் உரிமையோ மாற்றுவ தற்கான வலிமையோ எளியோருக்கும் அடிமைப்பட் டோருக்கும் இல்லை எனத் தொடர்ந்து மதங்கள் வலியுறுத்தியும் வந்துள்ளன. மதங்களில் இருந்து விடுதலையடையாத மக்கள் தமக்கான எந்த விடுதலைக்காகவும் போராடச் சக்தியற்றவர் களாகின்றனர். மதங்களைக் கைவிட மனமற்ற மக்கள் தம் மீதான அனைத்து அநீதிகளையும் தாங்கிக் கொண்டு அடங்கிக் கிடப்பவர்களாக மாறிவிடு கின்றனர். இந்நிலையில் மதங்களுக்கும் மக்கள் விடுதலைக்கும் இடையிலான உறவுகள் சிக்கலடைகின்றன.

இந்தச் சிக்கலானதும் குழப்பங்கள் நிறைந்ததுமான தளத்தில் இருந்துதான் அயோத்திதாசர் தம் மக்களுக்கான விடுதலைப் போராட்டம் பற்றியும்; அறமற்ற, நீதியற்ற இந்தியச் சமூகத்தை மாற்றுவதற்கான புரட்சி பற்றியும் சிந்திக்கிறார். அயோத்திதாசர் சிந்தித்துக் கண்டடைந்த விடுதலைக்கான வாழ்வியலை, ஒடுக்குதலுக்கெதிரான அறப்போராட்டத்தை பின்னாளில் ஆழமான, விரிவான ஆய்வுகளுக்குப்பின் அம்பேத்கர் உறுதி செய்து நம் மக்களுக்கு வழங்கியிருக்கிறார். அதுதான் அயோத்திதாசர் வழிமொழிந்த புத்த தர்மமான சுயமரியாதை‘. இதனை அவர் விளக்கும் முறை முற்றிலும் புதிதானது, மரபான சடங்குத் தன்மை கொண்ட பௌத்தத்திலிருந்து முற்றிலும் விலகியது. “பவுத்தம் உலக சீர்திருத்த தர்மமாகும். அதற்கு ஜாதி, மதம், வேதம், ஆசாரம் முதலியன கிடையாதுஎன்ற அயோத்திதாசரின் அறிவிப்பு பௌத்தத்தைத் துணையாகக் கொண்ட ஒரு புரட்சியையும் அதே சமயம் பௌத்தத்திற்குள் ஒரு புரட்சியையும் தொடங்கி வைக்கிறது. அயோத்திதாசரின் பௌத்தம் அதற்கு முன் இல்லாத ஒரு புரட்சிகர பௌத்தம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். புத்தர் “மனுமகனாகவே பிறந்து, மனுமகனாகவே வளர்ந்து, மனமாசகன்று, அறிவு முதிர்ந்து, அவரது நற்செயலால் தேவனென்னும் பெயரும், புத்தரென்னும் பெயரும், திருமாலென்னும் பெயரும், பரமென்னும் பெயரும், ஈசனென்னும் பெயரும் பெற்றாரன்றி அவர் பிறந்தபோதே புத்தரென்றும், தேவரென்றும் கொண்டாடியப் பெயர்கள் கிடையாது.” (தமிழன் : சனவரி,1911) என நவீன பகுத்தறிவு மரபின் தளத்தில் பௌத்தத்தை நிறுவி தற்காலம் சார்ந்த ஒரு புரட்சிகர மரபைத் தொடங்கி வைக்கிறார்.

அதனால்தான் அம்பேத்கர் தன் பௌத்தத்தை நவயான பௌத்தம் என்று அடையாளப்படுத்தினார். இதற்கான தொடக்கமாக அமைந்தவர் அயோத்திதாசர். புத்தரை ஒரு குருவாக, மனித அறங்களின் உருவாக விளக்குவதன் வழியாக நவீன அரசியலும் மார்க்சிய இயங்கியலும் முன்வைத்த மதம் பற்றிய மறுப்பை எளிதாக உள்வாங்கி அதற்கான மாற்று ஒன்றையும் கண்டடைந்துவிடுகிறார். அதனை அவர் மனித மையம் கொண்ட சுய சமதர்மம்என்றும் புத்த தர்மமான சுயமரியாதைஎன்றும் விளக்குவதன் வழியாக நவீன புரட்சிகர அரசியல், விடுதலைக்கான அறவியல் இரண்டையும் இணைத்துவிடுகிறார். இந்த இணைப்புதான் பின்னாளில் அம்பேத்கர் வழியாக புத்தரா கார்ல் மார்க்ஸாஎன்ற மிகச்செறிவான ஒப்பீட்டுக்கு வழியமைக்கிறது. அது புத்தரையும் மார்க்ஸையும் இணைக்கும் புதிய ஒரு அற அரசியலாக வடிவம் பெறுகிறது. இந்த மாபெரும் இணைப்பு அறம்சார் அரசியல் என்ற அயோத்திதாசர்அம்பேத்கரிய உருவாக்கமாக இன்று நமக்குக் கிடைத்துள்ளது. இந்த அறம்சார் அரசியலின் அடிப்படையில் உள்ள வலிமையை அயோத்திதாசர் இவ்வாறு குறிப்பிட்டுக் காட்டுகிறார், “உறங்கிய வேழம் விழிப்பது போலும் பதுங்கிய புலி பாய்வதுபோலும் வளைந்த வில் தைப்பது போலும் பிந்திய கடா மோதுவது போலும் அடங்கியுள்ள (பூர்வ பௌத்தர்களாகும்) மேன்மக்கள் அவர்களது அடக்கத்தைவிட்டு வெளியேற நேரிடும் அக்கால் அவர்களை அடக்க முயல்வது சமுத்திர எழுச்சிக்கு வைக்கோல் அணைகட்டுவது போலாகும்.” (தமிழன்: நவம்பர் 9, 1910) ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டம், விடுதலைக்கான எழுச்சி அறம் சார்ந்ததாக அமைந்திருந்தாலும் அதன் அடிப்படையில் மாபெரும் வலிமை, எதிர்ப்பு சக்தி உள்ளீடாக அமைய வேண்டும் என்பதை அயோத்திதாசர் தெளிவாக அறிந்திருந்தார். புரட்சிகளின் அடிப்படையாக அமையக்கூடிய அந்த வலிமையும் சக்தியும் அறிவின் வழி ஒன்றிணைய வேண்டும் என்பதையே பகுத்தறிவு சார்ந்த பௌத்த தர்மம் என்ற நவீன செயல்திட்டமாக அவர் வடிவமைத்தார்.

அம்பேத்கரும் அயோத்திதாசரும் பௌத்தம் வழியாகக் கடந்த காலத்தை மீட்க வந்த பழமையாளர்கள் அல்லர்; இந்திய மண்ணில் தோன்றி தற்போது தேய்ந்து போன ஒரு சமயத்தை மீட்டுருவாக்கம் செய்ய முயன்ற மரபுப் பற்றாளர்களும் அல்லர்; எதிர்கால விடுதலைக்கான வழிகளைச் சிந்தித்த நவீன விடுதலைக் கருத்தியலாளர்கள் என்பதை இனி விரிவாகக் காண இருக்கிறோம்.

(தொடரும்)

(நமது தமிழ்மண்: ஆகஸ்டு 2015)

அயோத்திதாசரின் அறப்புரட்சி-3: வரலாற்றைத் திருத்தியெழுதுதலும் அடங்க மறுத்தலின் தொடக்கமும்-பிரேம்

அயோத்திதாசரின் அறப்புரட்சி-3  

பிரேம்

வரலாற்றைத் திருத்தியெழுதுதலும் அடங்க மறுத்தலின் தொடக்கமும்

அயோத்திதாசர் தன் விடுதலைப் போராட்ட வாழ்வைத் தொடங்கிய, விடுதலைக்கான சிந்தனைகளை உருவாக்கிய அக்காலகட்டத்தில் சமூக-அரசியல் பற்றிய  உலகச் சிந்தனைகள் மிகக்கடுமையான சிக்கல்களை எதிர்கொண்டிருந்தன. மக்களுக்கான அரசியல், மக்களை மையமாகக் கொண்ட அரசியல், மக்கள் விடுதலைக்கான அரசியல், மக்கள் நலம் சார்ந்த அரசியல் என்ற கருத்துகள் உருவாகியிருந்ததுடன் புதிய அரசியல்-பொருளாதாரம்  மற்றும் இயங்கியல் பொருள்முதல் வாதத்தை அடிப்படையாகக் கொண்ட புரட்சிகர அரசியலும் உலக அளவில் பரவிக்கொண்டிருந்தது. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற மதிப்பீடுகளை அடிப்படையாகக் கொண்ட புதிய அரசியல் கருத்தியல்கள் அதுவரை இருந்துவந்த மனித சமூக-அரசியல் அமைப்புகளை வன்முறையானவை, அடக்குமுறை கொண்டவை, அறமற்றவை என்று விளக்கி அவற்றை மாற்றுவதுதான் விடுதலைக்கான வழி என்று நிறுவி வந்தன. அனைத்தும் இயல்பாக, பொதுத் தன்மையுடன், மாற்ற இயலாத விதிகளின் அடிப்படையில், ஒரு முழுமைத் தன்மையுடன் நிகழ்ந்து கொண்டுள்ளன என்ற நம்பிக்கைத் தகர்க்கப்பட்டு மாற்றம் இயல்பானது, மனிதர்களால் உருவாக்கப் பட்ட அமைப்பை மனிதர்கள் மாற்றி அமைக்கமுடியும் என்ற அறிவும் நம்பிக்கையும் பரவிக்கொண்டிருந்த காலம் அது. ஆனால் மாற்றங்களை யார் நிகழ்த்துவது அவை எங்கிருந்து தொடங்கும் அந்த மாற்றம் எந்த வடிவில் அமையும் என்பதைப் பற்றிய குழப்பங்களும் சிக்கல்களும் நிலவி வந்தன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியும் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியுமாக அமைந்த அந்தக் காலகட்டம் நவீன மாறுதல்களின் மோதல்கள் மற்றும் முரண்களால் நிரம்பியது.

பொதுவான ஒரு பார்வையில் அயோத்திதாசர் வாழ்ந்த காலத்தை நவீன வரலாற்றின்  ‘புரட்சிகளின் காலகட்டம்’ என்று கூறலாம்.  ஆனால் அதுவரை உருவாகியிருந்தது அரசுகளின் மாற்றமே தவிர அரசியல் மாற்றமல்ல;  தேசிய அரசுகளும் காலனிய ஆட்சிகளும் ஏகாதிபத்தியப் பேரரசுகளும் உருவாகியிருந்த அதே காலகட்டத்தில் தேசியமும் தேசபக்தி இயக்கங்களும்  உருவாகியிருந்தன. புரட்சிக்கான அமைப்புகளும் கருத்தியல்களும் களங்களும் அமைந்திருந்தனவே தவிர புரட்சிகர சமூகமோ விடுதலை பெற்ற சமூக அமைப்போ உருவாகியிருக்கவில்லை.   அன்று உருவாகியிருந்த அரசியல் மாற்றத்தில் மிகவும் குறிப்பிடத்தக்கது குடிமைச் சமூகம் சார்ந்த சட்டம் மற்றும் நீதி  அமைப்புகள், உள்ளாட்சி  நிர்வாக அமைப்புகள் மட்டுமே. தொழிற்சங்க அமைப்புகள், தொழிலாளர் ஒன்றியங்கள் தம் அடிப்படை உரிமைகளுக்காகப் போராடும் நிலையில் இருந்தன, அடக்குமுறைகளை எதிர்த்துக் குரல் கொடுத்து வந்தன.  மக்கள் புரட்சி, சமத்துவப் பொருளாதாரம், பாட்டாளி வர்க்க அரசு என்ற எதுவும் தம்மை நடைமுறையில் நிறுவிக்கொள்ளவில்லை அதாவது மார்க்சிய அரசியல் பொருளாதாரப் புரட்சி ஒரு கருத்தாகவும் கனவாகவும் மட்டுமே அப்போது இருந்தது.  இந்தியாவில் நிலவிவந்த காலனிய ஆட்சி இந்திய மக்களை ஆளப்படும் மக்கள் கூட்டமாக அல்லது மக்கள் சமூகமாக மாற்றியிருந்ததே தவிர ‘குடிமக்கள்’ என்ற உரிமையை அது உருவாக்கித்தரவில்லை. இந்தியச் சமூகங்களோ ‘மக்கள்அரசு’ என்ற கருத்தை விரும்பாத சாதி அதிகாரத்தைக் கொண்டாடும்,  முடியாட்சிக்குப் பணியும் மரபான சாதி-குடிமரபுச் சமூகங்களாக இருந்து வந்தன.

இவ்வாறான சிக்கலும் குழப்பமும் நிறைந்தகாலகட்டத்தில்தான் அயோத்திதாசர் தனக்கேயான புதிய சிந்தனைகளையும் விடுதலைக்கான கோட்பாடுகளையும் உருவாக்குகிறார். அவருக்கு வழிகாட்டியாக அமையக்கூடிய கருத்தியல்கள், சமூகக் கோட்பாடுகள் அன்று இல்லை என்பதையும் அவர் தனித்து நின்று தன் மக்களுக்கும் இந்தியச் சமூகத்திற்குமான விடுதலைக் கருத்தியலை, மாற்று அறவியலைக் கண்டறிந்தார் என்பதையும் புரிந்துகொண்டால் அவரது சிந்தனை உழைப்பு, அறிவுத் தேட்டம்,  ஆய்வு ஆற்றல், அறம் சார்ந்த வலிமை பற்றிய வியப்பு நம்மில் பெருகும். வரக்க முரண், வர்க்கப்போராட்டம், தேசிய விடுதலை, அறிவியல் சிந்தனைகள், மனித சமத்துவம் என்ற கருத்துகள் பரவி வளர்ந்த அளவுக்கு இந்தியச் சமூகத்தின் சாதி அதிகாரம், தீண்டாமை வன்கொடுமை, பார்ப்பன வைதிக மேலாதிக்கம், உள்ளடங்கிய அடிமைமுறை பற்றிய அறிவோ ஆய்வுகளோ அப்போது இல்லை. இந்தியச் சமூகங்களுக்கான விடுதலை, இம்மண்ணுக்கான சமூக மாற்றம் எங்கிருந்து தொடங்க வேண்டும்,  அந்த மாற்றத்தை யார் முன்னெடுக்க வேண்டும் என்பது பற்றிய உரையாடல்களோ தேடல்களோ அன்று உருவாகியிருக்கவில்லை.

சுதேசி இயக்கம், பொதுவுடைமை இயக்கம், பகுத்தறிவு இயக்கம் என்ற மூன்று தளங்களில்  சமூக மாற்றம் பற்றியச் சிந்தனைகள் விவாதிக்கப்பட்டு வந்தன. இந்த மூன்று தளங்களிலும்  கவனிப்பு பெறாத ஒரு அடிப்படையான பகுதியை ஆய்வுக்கு உள்ளாக்கிய அயோத்திதாசர் தனக்கு முழுமையான வழிகாட்டியாக, முன்னோடியாக அமையக்கூடிய தத்துவங்கள் இன்றியே இந்தியச் சமூகங்களின் பெருங்கேடுகள் எவை இந்தியச் சமூகத்திலிருந்து நீக்கப்படவேண்டிய தீமைகள் எவை விடுதலையின் பாதை எது என்பதைக் கண்டறிந்து விளக்கினார் . “மநுக்களை (மனிதர்களை) மநுக்களாக நேசிக்காத தேசம் மகிழ்ச்சியும் புகழ்ச்சியும் பெறுமோ முக்காலும் பெறாவென்பது திண்ணம். அதாவது ஓர் மனிதன் தன்னைத்தானே பெரிய சாதியோனென உயர்த்திக்கொண்டு கர்வத்தினாலும் தம்மையொத்த மனிதனை மனிதனாக நேசிக்காத பொறாமையாலும் தமது முன்னோர்களாகியப் பெரியோர்களை (பூர்வ பௌத்தர்கள்)  தங்கள் பகையாலும் அறிவின்மையாலும் மக்களுள் மக்களை நேசிக்காது புறம்பாக்கி வருகிறார்கள். (அதனால்)  தென்னிந்தியாவோ சீரும் சிறப்பும் குன்றி அவன் சின்னசாதி இவன் பெரியசாதியென்னும் துன்னாற்றங்களே பெருகிவருகின்றபடியால் ஒருவரைக் கண்டால் மற்றவர் சீறுகிறதும் ஒருவரைக் கண்டால் மற்றொருவர் முறுமுறுக்கிறதும், ஒருவரைக் கண்டால் மற்றொருவர் சினந்து குரைக்கிறதுமாகியச் செயல்களால் வித்தைகளுங்கெட்டு விவசாயங்களுங்கெட்டு வித்தையில் விருத்தி பெற்றவர்கள் அவ்வித்தையை மற்றவர்களுக்குக் கற்பிக்காமலும் விவசாய விருத்தியைக் கற்றவர்கள் அவ்விவசாய வித்தையை மற்றவர்களுக்குக் கற்பிக்காமலும் தாங்கள் சீரழிவதுடன் தங்கள் சந்ததியோரையும் சீரழியச் செய்து தேசத்தையும் பாழடையச் செய்தே வருகிறார்கள்.”  (தமிழன் : ஏப்ரல் 9 ,1913). இந்தியச் சமூகத்தின் தனிப்பட்ட தீமையான சாதி ஆதிக்கம், தீண்டாமை வன்கொடுமை, சமூக உறவுத் தடைகளில் இருந்துதான் அனைத்து கொடுமைகளும் தீமைகளும் தொடங்குகின்றன என்பதை விளக்கும் அயோத்திதாசரின் இந்த ஆய்வுக் கருத்து இந்திய அரசியல் மற்றும் சமூகப் புரட்சியின் தொடக்கப்புள்ளியை தெளிவாக விளக்கிவிடுகிறது.  அயோத்திதாசரின் புரட்சி அறிவைப் பொதுவில் வைப்பதிலிருந்து தொடங்குகிறது. தேசத்தின் பாழ்பட்ட நிலைக்கான காரணங்களின் மூலக்கூறுகளை பகுத்து அடையாளம் காட்டிய அயோத்திதாசர் அதனால்தான் மற்ற புரட்சியாளர்களிடமிருந்து  தனித்து நிற்கிறார்.

அவரது சிந்தனை முறையில் பல தாக்கங்களைப் பின்னாளில் ஏற்படுத்தியிருக்கக்கூடிய இரு நிகழ்வுகள் அயோத்திதாசர் வாழ்ந்திருந்தபோது நிகழ்ந்திருக்கவில்லை:  ஒன்று முதலாம் உலகப்போர் (1914-18) மற்றது ரஷ்ய போல்ஷ்விக் புரட்சி (1917). வர்க்கங்கள் உருவாகி,  வர்க்க முரண்கள் கூர்மையடைந்து, வர்க்க அடக்குமுறைகள் பெருகியிருந்த போதும் வர்க்கப் புரட்சிகள் நிகழ்வதற்கான அறிகுறிகள் தென்படாத ஒரு கால கட்டம் அது. “சுரண்டும் வர்க்கத்தினரிடையே கூட்டமைப்பாதல் எளிதில் நிகழ்தலைப்போல சுரண்டப்படும் வர்க்கத்தினரிடையே நிகழ்ந்து விடுவதில்லை.” (அமைப்பாய்த் திரள்வோம், தொல்.திருமாவளவன்) என்ற வரலாற்று நடைமுறை யின்படி சுரண்டும் வர்க்கங்கள் ஒன்று திரண்டு பலமடைந்த அள வுக்கும் முதலாளித்துவம் அரசியல் ராணுவ வகையில் வலிமை யடைந்த அளவுக்கும் சுரண்டப்படும் வர்க்கங்கள் ஒன்று திரண்டு அமைப்பாகாத காலகட்டம் அது.

இருபது லட்சத்திற்கு மேலான மனித உயிர்களைப் பலி கொண்ட முதல் உலகப்போர் சுரண்டும் வர்க்கங்களுக்கிடையிலான ஆதிக்க,  அதிகார,  ஏகாதிபத்தியப் போட்டியின் ஒரு விளைவு. முதல் உலகப்போர் தொடங்குவதற்கு சில மாதங்களுக்கு முன்பாக அயோத்திதாசர் மறைகிறார். ஆனால் நவீன போர்களின் பேரழிவைப் பற்றியும் அவற்றிற்கான காரணங்கள் பற்றியும் அவர் தெளிவாக  சிந்தித்திருந்தார். அதனை தனக்கேயுரிய அறஅரசியல் பார்வையில் இவ்வாறு விளக்கினார், “தற்கால யுத்தங்களோ வென்னில் சிறு துப்பாக்கியை ஒருவன் ஏந்திச் சுட்டவுடன் ஓரிருவர் மரிப்பதும், பெருந்துப்பாக்கியை ஒருவன் ஏந்திச் சுட்டவுடன் எட்டுபேர் பத்துபேர் மரிப்பதும், பீரங்கியைக் கொண்டு சுட்டவுடன் ஐன்னூறு ஆயிரம்பேர் மரிப்பதும், மற்றும் பெரும் அவுட்டுகளையும் வெடிகுண்டுகளையும் வைத்துச்சுட்டவுடன் ஆயிரம் இரண்டாயிரம் பேர் மரிப்பதும் விலாமுரிந்தும், கால்கை உடைந்தும், குடல்சரிந்தும், எடுத்துக் காப்போரின்றி குத்துயிரில் கொடுந் துன்புற்று தவிப்போருமாகியக் கோரங்களைக் கேட்கும் போதே மனம் பதருங்கால் அவர்களைக் கண்ணினால் காணும் மக்கள் எவ்வகைக் கதருவார்களோ விளங்கவில்லை.  ஆடுகளைப் போலும் கோழிகளைப் போலும் தங்களை ஒத்த மக்களைக் கொண்டுபோய் மடியவைத்து மன்னர்கள் என்ன சந்தோஷத்துடன் இராட்சியம் ஆளப்போகிறார்களோ அதுவும் தெரியவில்லை. சருவசீவர்களும் தங்கள் உயிர்களைக் காப்பாற்றிக்கொள்ள முயல்வது அநுபவக் காட்சியாகும். இவற்றுள் சருவசீவர்களிலும் சிறந்தவர்கள் மக்களென்றறிந்தும் அவர்களுள் குடிப்படை, கூலிப்படை யென வகுத்து அவர்களைக் கொண்டு போய் வீணே மடித்துத் துன்புறச்செய்வதினும் அத்தகைய அரசாட்சியை இச்சியாமலிருப்பதே தன்மமன்றோ. கடவுளுண்டு, கடவுளுண்டு எனச் சொல்லித்திரிபவர்க்கு கருணையென்பது ஒன்றில்லாமல் போமாயின் உலகநீதி ஒழுங்குறுமோ, ஒருக்காலும் ஒழுங்குறாவாம்.

உன் கடவுள், என் கடவுளென்னும் வெறுஞ்செருக்கும், உன் மதம் என்மதமென்னும் மதச்செருக்குமே கருணையென்பதற்று, கோபவெறியேறி தாங்களே யாத்த வலையிலும் துக்கத்திலும் வாதைப்படுவதன்றி தன் குடிபடைகளையும் கூலிப்படைகளையும் கொண்டு போயழித்து மீளாத்துன்பத்தில் ஆழ்த்தி வருகிறார்கள். இதுவே தற்கால யுத்தங்கள் எனப்படும்.” (தமிழன் : நவம்பர் 27 ,1912).

போர் மறுப்பு, அதிகார ஆதிக்க மறுப்பு, அரசாட்சிகளைத் தீமையென ஒதுக்கி மக்கள் மயமான சமூகங்களை உருவாக்கும் தத்துவப்பார்வை அனைத்தையும் உள்ளடக்கிய அயோத்திதாசரின் இந்தக் கருத்து  பௌத்தத்தை அடிப்படை யாகக் கொண்ட ‘சத்தியதன்ம சீர்திருத்தம்’ சார்ந்தது என அவரால் குறிப்பிடப்பட்டாலும் பின்னாளில் நிகழ்ந்த இரு உலகப்போர்களுக்குப் பின்புதான் நவீன சிந்தனை முறை தன் பார்வைக்கு எடுத்துக் கொண்டது.  இந்தப் பேரழிவுகளுக்குக் காரணமாக அமையப் போகின்றவை என அயோத்திதாசர் அடையாளம் காட்டியுள்ளவை மிகுந்த கவனத்திற்குரியவை: இராட்சியம் , ஆளுதல், உன் கடவுள் என் கடவுள்,  உன் மதம் என் மதம். இவை அரசுகள் (மனிதர்கள்) தாங்களே பின்னிக்கொண்ட வலைகள் தாங்களே உருவாக்கிக்கொண்ட  துக்கங்கள் என்ற விளக்கத்தின் வழியாகப் பின்னாளில் உருவான பல விடுதலைக் கருத்தியல்களுக்கும் ஆதிக்க எதிர்ப்பு அரசியலுக்கும் அடிப்படையான புரிதலை அளித்துவிடுகிறார்.

மக்கள் படைகள் அரசை உடைத்து புதிய ஒரு அரசியல் அமைப்பை உருவாக்க முடியும் என்பதற்கு முன்னோடியாக அமைந்திருந்தது ரஷ்யப்புரட்சி; அந்நிகழ்வு உலக அரசியலிலும் மக்கள் உளவியலிலும் உருவாக்கிய மாற்றங்களைக் கவனித்து விடுதலைக்கான மாற்று வழிகள் பற்றிய தன் கருத்தைப் பதிவு செய்யும் வாய்ப்பும் அயோத்திதாசருக்கு  இல்லாமல் போனது. அவருடைய காலத்தில் இந்தியச் சமூகத்தில் உருவாகியிருந்ததோ தேசபக்தி மற்றும் தேசிய அரசியல் என்ற பார்ப்பன மைய சாதிய அரசியல் மட்டும்தான். ஆனால் அயோத்திதாசர் இவ்விரு உலக நிகழ்வுகளும் பிற்காலத்தில் உருவாக்கிய ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசியல்- விடுதலைக்கான அரசியல் என்ற தளங்களில் காலத்திற்கு முன்பாக ஆழமாகச் சிந்தித்து அதன் சிக்கல்களை விரிவாக விளக்கியுள்ளதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

அவரது விடுதலைக் கருத்தியலின் விரிவைப் புரிந்துகொள்ள அவரது சமகாலத்தில் வாழ்ந்து மறைந்த இரு சிந்தனையாளர்களை நாம் இங்கு நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். ஒருவர் கார்ல் மார்க்ஸ் (1818 -1883) இவர் மக்களுக்கான விடுதலை பற்றித் தம் வாழ்நாள் முழுக்கச் சிந்தித்தவர்.  மற்றொருவர் பிரடெரிச் வில்ஹெம் நீட்ஷே (1844-1900) இவர் விடுதலையென்றால் என்ன, அனைவருக்கும் விடுதலை சாத்தியமா அல்லது அனைவருக்கும் விடுதலை தேவையா, அன்பு கருணை என்பதெற்கெல்லாம் என்ன அர்த்தம் என்று தம் வாழ்நாள் முழுக்க ஓயாமல் கேள்வி எழுப்பியவர். இருவரும் ஜெர்மனியப் பின்புலம் கொண்டவர்கள்,  ஆனால் உலகச் சமூக அரசியலின் இரு எதிர்நிலைக் கருத்தியல்களின் ஆசான்கள்.  அயோத்திதாசர் தன் வாழ்நாளில் சிந்தித்த, தேடிய அதே கருத்துக்கள் பற்றியும் மனித நிலை பற்றியும்தான் இருவரும் சிந்தித்தனர். ஆனால் இருவரும் முற்றிலும் எதிர்எதிர் நிலைகளைக் கண்டடைந்தனர்.

மார்க்ஸ், விடுதலை அனைவருக்கும் உரியது அதனை அடைய முடியும் என்றார். நீட்ஷே அடக்கி ஆளச் சிலரும் அடிமைப் பட்டிருக்கப் பலரும் இருந்தால்தான் ஒரு சமூகம் வலிமையாக இருக்கும் என்றார், மக்கள் அடிப்படையிலேயே அடிமைப் புத்திக் கொண்டவர்கள் அதனால் வலிமையும் அதிகாரமும் கொண்ட மகாமனிதர்கள் அவர்களை அடக்கியாள வேண்டும். வலிமையின் முன் அடிமைப் பட்டிருக்க விரும்புவது மக்கள் (அடிமைகள்) பெண்கள் இருபகுதியினரின் பண்பு, போரிலும் ஆதிக்கத்திலும் வலிமை கொண்டவர்களிடம் விரும்பி அடிமைப்பட்டிருப்பது பொது மனித குணம் என்றெல்லாம் வரலாற்றுச் சான்றுகள் காட்டி நிறுவ முயன்ற தத்துவவாதி.  ஆனால் இருவருமே மனித சமூக அரசியல்  வரலாற்றை அடக்குமுறைகளின் வரலாறு என்றும் அது அடக்குதல் அடிபணிதல் என்ற முரண்பாடுகளுக்கிடையிலான ஓயாத போராட்டம் என்றும் விளக்கிய வகையில் ஒன்றுபட்ட பார்வை கொண்டவர்கள். அடக்குபவர்களுக்குப் பணிந்து உழைத்து மடிய உகந்தவர்களாக அடிமைப்பட்டவர்களை உருவாக்குவதற்கான ஏற்பாடுகள்தான் சமயம், பண்பாடு,  நீதி, ஒழுக்கம் என்பதை மார்க்ஸ் விளக்கியது போலவே  நீட்ஷேவும் விளக்கியிருக்கிறார். ஆனால் மார்க்ஸ் அனைவருக்கும் சம அதிகாரம் ,அதன்வழியான விடுதலை என்ற அறம் சார் தீர்வினை முன்வைத்த போது, நீட்ஷே ‘அறம் கருணை என்பவை அடிமைகள் தம்மைத்தாமே ஏமாற்றிக் கொள்ள உருவாக்கிய கட்டுக்கதைகள்’ என்றும் அதிகாரம் கொண்டவர்கள்- ஆதிக்கம் செலுத்துபவர்கள் உருவாக்குவதுதான் அந்த அந்தச் சமூகத்திற்கான நீதி அவர்கள் பிறரை அடிமையாக வைத்திருக்க உருவாக்குவதுதான் ஒழுக்கம் அதனால்  எந்தவித குற்றவுணர்வும் அற்று அதிகாரத்தையும் ஆதிக்கத்தையும் செலுத்துவதுதான் மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கான வழிமுறை  அதுதான் விடுதலையுடன் இருக்கவும் சுதந்திரத்தின் இன்பத்தை அனுபவிக்குமான வழிமுறை என்றெல்லாம் தன் தர்க்கத்தைக் கட்டுகிறார்.

மார்க்ஸியம் மனித சமூகங்கள் இனிச் செல்ல வேண்டிய வழியைப் பற்றியும் இனி தேர்ந்தெடுக்க வேண்டிய அறம் பற்றியும் சிந்திக்கும் போது நீட்ஷே வலிமை கொண்டவர்கள் தொடர்ந்து வலிமையடைவது பற்றியும் விடுதலையை அனைவரும் நேசிப்பதில்லை எனவும் கடந்தகால வரலாற்றை மறுஉறுதி செய்கிறார். இது ஒரு வகையில் மிகப்பழமையான மேலாதிக்கவாதம், அடிமை நிலையை இயற்கையானதென நிறுவ முயலும் விதியேற்புவாதம் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால் இது அடக்கப்பட்டவர்கள் முன், அடிமைப்பட்டிருப்பவர்களின் முன் ஒரு சவாலை முன்வைக்கிறது. “உங்களுக்கென்று வரலாறு இல்லை அது உங்கள் ஆண்டைகளால் எழுதப்பட்டது, உங்களுக்கென்று நன்மை தீமை இல்லை அவை உங்கள் ஆண்டைகளால் வரையறுக்கப்பட்டுள்ளன. உங்கள் இன்பம்,  துன்பம்,   பாவம், புண்ணியம்,  ஒழுக்கம்,  கேடு,  தெய்வம் என அனைத்தும் அடக்கியாளுபவர்களால் உருவாக்கப்பட்டவை.  அவற்றை ஏற்றுக்கொண்டுள்ள நீங்கள் உங்களுக்கான எதனை உருவாக்கியிருக்கிறீர்கள், உங்கள் மொழிகூட  உங்களுக்கானது இல்லை, பிறகு எப்படி நீங்கள் விடுதலை அடையமுடியும்?” என்ற கடிந்த, வலிமையான கேள்விகளை முன்வைக்கிறது. அப்படியெனில் அடிமைப்படுத்தப்பட்டோர் அடக்கப்பட்டோர் தம் விடுதலையைத் தொடங்கும் இடம் எது?  என்ற கேள்வி இன்றும்கூட ஆய்வுக்குரியதாகவே இருந்துவருகிறது. ஆனால் அயோத்திதாசர்  புரட்சி மற்றும் விடுதலையின்  உளவியல் சிக்கல் தொடங்கும் தளத்தைத் தன் பார்வையின்வழி தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறார்,  “காரணமோ வெனில் பத்து பெயர்க்கூடி ஒரு மனிதனை இவன் தாழ்ந்த சாதியன், கொடியன், மிலேச்சனெனச் சொல்லிக்கொண்டே வருவதுடன் அவனை நெருங்கவிடாதுந், தீண்டவிடாதும் இழிவுபடுத்தி வருவார்களாயின் அவன் மனங்குன்றி நாணடைந்து நாளுக்குநாள் சீர்கெடுவானேயொழிய சீர் பெறமாட்டான்.” (தமிழன் : ஆகஸ்டு 13 ,1913).

பிறரை அடிமையாக்கவும் அடிமையாக வைத்திருக்கவும் ஆதிக்க சாதிகள்/ ஆதிக்க சக்திகள் எந்தவகை உத்தியைக் கையாண்டு வருகின்றன என்பதை நீட்ஷே வரலாற்றுத் தரவுகளுடன் இப்படியாகவே விளக்குகிறார். அவர்கள் தங்களைத் தாங்களே உயர்ந்தவர்கள், முழுமையானவர்கள், தூய்மையானவர்கள், முதலில் தோன்றியவர்கள் என்று உறுதியாகச் சொல்லிக் கொள்வார்கள். மற்றவர்களைக் கீழானவர்கள், குறையுடைய வர்கள், தூய்மையற்றவர்கள், வாழத் தகுதியற்றவர்கள் என்றெல்லாம் தொடர்ந்து சொல்லி அவர்களை அடிமையாக்கிக் கொள்வார்கள். தங்கள் செய்பவை அனைத்தும் நன்மைகள் மற்றவர்கள் செய்பவை அனைத்தும் தீமைகள் என்பதை உறுதிசெய்யத் தகுந்த வகையில் வரலாற்றை, கதைகளை, நம்பிக்கைகளை உருவாக்குவார்கள். தம்மிடம் அடிமைப்பட்டிருப்பவர்களிடம் குற்றவுணர்வையும் கீழ்மை உணர்வையும் உருவாக்கி அதன்வழியாவே அவர்களிடம் பணிந்து கிடக்கும் குணத்தை படியவைப்பார்கள். இந்த உத்திகள் அனைத்தையும் கையாண்டு வெற்றி பெற்றவர்கள் இந்தியப் பார்ப்பனர்கள் என்றும் பிராமணியத்தை ஏற்ற சத்திரியர்கள் இதற்குத் துணையாக இருந்து தம் ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொண்டவர்கள் என்றும் நீட்ஷே குறிப்பிட்டுக் காட்டுகிறார். அவரது நோக்கம் வலிமையை, தந்திரத்தை, அடக்கியாளுதலைக் கொண்டாடுவது. ஆனால் அது விடுதலைப் போராட்டம் மற்றும் புரட்சிக்கான முனைப்புகளின் முன் வைக்கப்படும் வலிமையான சவால். இந்தச் சவாலை அறப்புரட்சியாளர் அயோத்திதாசர் தனக்கேயான வழியில் எதிர் கொண்டார். தன் மக்கள் ‘மனங்குன்றி நாணடைந்து நாளுக்குநாள் சீர்கெடாமல்’ இருக்கவும் தம் அடிமைநிலை நீங்கிச்  சீர் பெறவும் அவர் கண்டறிந்த வழிமுறைதான் அதுவரை சொல்லப்பட்ட வரலாற்றை மறுத்தலும் அதனைத் தலைகீழாக்கி உடைத்தலும். தமக்கான வரலாற்றைத் தானே கண்டடைதலும் உருவாக்குதலும் முதல் தேவை என்பதை அவர் நடைமுறையில் நிகழ்த்திக்காட்டினார்.  பாரப்பன-வைதிக-இந்துச்  சமூகத்தின் புனிதங்கள் அனைத்தையும் ஆபாசம் என விளக்கி  குலம், வம்சம், ஜாதி, ஆசாரம், பிராமணத்துவம் அனைத்தையும் சாஸ்திரக் குப்பைகளின் விளைவுகள் என்றார். அறிவீனர்கள், மூளை பிறழ்ந்தவர்கள் சிலர் உளறிக் கொட்டிய குப்பைக் கூலங்கள்தான் இக்காலத்தில் இந்துமத நூல்களாக இருக்கின்றன என்பதை மாற்றுச் சான்றுகளுடன் விளக்கிய அயோத்திதாசர் தம் மக்களை பூர்வ பௌத்தர்கள், திராவிட பௌத்தர்கள், சாதிபேதமற்ற திராவிடர்கள் என விளித்து அடக்கும்  அடையாளங்களில் இருந்து விடுவித்தார்.

இந்தப் புரட்சியை அவர் மொழியில் இருந்து தொடங்கி, சொல்லாடல்களின் வழியாக விரிவாக்கி, சாதிய பிராமணிய கட்டுக்கதைகளைத் தகர்க்கும் முட்டுக்கதைகள் (எதிர்க்கதை) வழியான போராட்டமாக முன்னெடுத்துச் சென்றார்.  அவரது எதிர்ப்பரசியல் இதனைக் கடந்து உருவாக்க அரசியலாக வடிவம் கொண்டு அறம் சார் அதிகாரமாக,  அற அடிப்படையிலான மேலாக்கமாக மாறும் தளம்தான் பூர்வ பீடம்- பூர்வ தன்மம் என்ற மறு உருவாக்கங்கள்.  இதன் வழியாகவே இந்து-இந்திய, வைதிக-சாதிய  கட்டமைப்புகளை அறமற்ற, தீமை நிறைந்த, குற்றச் செயல்கள் என்று தயக்கமின்றி கீழாக்கம் செய்துவிடுகிறார் அயோத்திதாசர்.

இதனைக் கார்ல் மார்க்ஸ் புரட்சிகர நடைமுறையின் தொடக்கம் என்கிறார், அயோத்திதாசர் சத்திய தன்ம சீர்த்திருத்தம் என்கிறார். அயோத்திதாசரின் புரட்சியோ மார்க்ஸால் புரிந்துகொள்ள இயலாத பலபடித்தான வரலாற்று- சமூக வன்கொடுமைக்கு எதிரான புரட்சி.  தன் மக்களுக்கான மொழி, அறிவு, வரலாறு அனைத்தையும்  உருவாக்கி, அடையாளம் காட்டி, மறுஉறுதி செய்வதற்கான புரட்சி. அது நுண் அரசியல் வழியாக கட்டுமான மாற்றங்களை நோக்கி நகரும் புரட்சியாக அமைந்திருக்கிறது.                                                                                                              (தொடரும்)

அயோத்திதாசரின் அறப்புரட்சி-3 (ப.1) அயோத்திதாசரின் அறப்புரட்சி-3 (ப.2) அயோத்திதாசரின் அறப்புரட்சி-3 (ப.3) அயோத்திதாசரின் அறப்புரட்சி-3 (ப.4)

அயோத்திதாசரின் அறப்புரட்சி-2: வீர சுதந்திரமா வெறிபிடித்த சாதியமா-பிரேம்

அயோத்திதாசரின் அறப்புரட்சி-2 (இணைப்பில் காண்க)

 

வீர சுதந்திரமா வெறிபிடித்த சாதியமா

பிரேம்

அயோத்திதாசரின் புரட்சி அவர்தம் காலத்தில் வலிமை பெற்றிருந்த தெய்வபக்தி-தேசபக்தி என்னும் இரு பெரும் மரபுகளுக்கு எதிராக; இருபெரும் வரலாற்றுச் சக்திகளுக்கு எதிரானதாக அமைந்திருந்தது.  தெய்வபக்தி-தேசபக்தி  இரண்டும் இணைந்து புதிய ஒரு சக்தியாக உருவாகி இந்திய நவீன அரசியலைத் தன்வயப்படுத்த முனைந்திருந்த காலகட்டம் அது. இந்தியத் தாய், பாரதமாதா எனப் பக்தியும் தேசிய அரசியலும் இணைக்கப்பட்டு சுதேசியம், சுதந்திரம், சுயராச்சியம் என்ற கருத்தியல்கள் உருவாக்கப்பட்டிருந்தன.  யாகத்திலே தவ வேகத்திலே தனியோகத்திலே பல போகத்திலே ஆகத்திலே தெய்வபக்தி கொண்டார்தம் அருளினிலே உயர் நாடு-பாருக்குள்ளே நல்லநாடு எங்கள் பாரத நாடு’ என்பன போன்ற பாரதியின் பாடல்களில் பதிவாகியுள்ள அன்றைய தெய்வீகத் தேசியம்  இந்தியாவின் புதிய அரசியலை  வைதீகமையம் கொண்டதாக மாற்றப் போராடிக்கொண்டிருந்த அரசியல் சக்திகளின் கருத்தியல் உள்ளடக்கத்தைத் தெளிவாகக் காட்டக்கூடியது. ‘சுயராச்சியம் எனது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவேன்’ என்ற முழக்கத்தின் உள்ளடக்கத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் இடம் தந்திரமாக மறைக்கப் பட்டிருந்தாலும் பிராமணமையம் மிக வெளிப்படையானதாகவே இருந்தது.  இந்த முழக்கத்தை அயோத்திதாசர் தன் சொற்களில் தன் மக்களுக்காகச் சொல்லத் தொடங்கிபோதுஅதில் உள்ள வரலாற்று முரண் புலப்பட்டது, ‘இந்தியாவிலுள்ள எந்த சாதியோருக்கு சுயராட்சியம்? சாதியேற்பாட்டில் எந்த சாதியோர்கள் இந்தியர் ? என அதனை கட்டடுடைத்து  முன்வைத்த விதம் வரலாற்றை மாற்றி யெழுதுவதாக அமைந்தது.

இந்தியாவின் புராதன, சனாதன மரபு தன்னை உருமறைத்துக் கொண்டு புதிய ஒரு அரசியல் சக்தியாக  நவீன தேசம் என்ற ஐரோப்பியர்களால் உருவாக்கப்பட்ட புதிய பேரமைப்பையும் தன் கைவசப்படுத்தத் திட்டமிட்டுக் கொண்டிருந்தது. பிராமண அதிகாரம், பிராமணரல்லாதார் அதிகாரம் என்ற இரு வடிவங்களில் தேசிய அரசியல் அடையாளப்படுத்தப்பட்ட போதும் இரண்டிற்கும் வெளியே வைக்கப்பட்டிருந்த ஒடுக்கப்பட்டோர் அரசியல் முற்றிலும் மறைக்கப்பட்டதாக, கவனம் கொள்ளப்படாததாகவே இருந்தது. ஐரோப்பிய அரசியல் முறையின் பக்க விளைவுகளால்  ஓரளவு உருவம் பெற்றுவந்த ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக-அரசியல்- பொருளாதார-வரலாற்று இருப்பு சுதந்திரம், சுயாட்சி, சுதேசியம், சுயராச்சியம் என்பதான இந்தியக் கருத்துகோள்களின் பெருக்கத்தால் மீண்டும் உருவமற்றதாக மாறும் நிலை ஏற்பட்டிருந்தது.

அதனால் உருவாகப்போகும் கொடிய விளைவுகளை முன்னுணர்ந்த அயோத்திதாசர் பிராமண-ஆதிக்கச் சாதிகள் உருவாக்கிய சுதேசியக் கருதாக்கத்தின்   அடிப்படையைத் திட்டவட்டமான கேள்விக்குட்படுத்தினார், “இந்தியர்களை மட்டிலும் ஐரோப்பியர் சமமாக நடத்த வேண்டுமென்று கேட்கின்றீர். அவ்வகை சமரசம் கேட்போர் தென்னிந்தியாவில் பார்ப்பானென்றும், பறையனென்றும் வகுத்துள்ள பொய்ச்சாதிக் கட்டுக்களை ஏன் அகற்றினீரில்லை. இவ்விருவரும் ஒருதேசக் குடிகளாக இருந்துகொண்டு ஒருவர் சுகமடைவதுபோல் மற்றவர்கள் சுகமடையப் போகாதென்று சகல விஷயங்களிலும் தாழ்த்தி சீர்கெடுத்து வந்ததையும் வருவதையும் உணராது ஐரோப்பியர் மட்டிலும் சமரச சுதந்திரங் கொடுப்பதில்லையென்று கேட்பது நியாயமாகுமோ?” (தமிழன்: நவம்பர் 24,1909)

இந்தக் கேள்வியின் உள்ளீடாக உள்ள சமரசம், சுதந்திரம் இரண்டும் மிகுந்த கவனத்திற்குரியவை. ஐரோப்பியர்களின் ஆட்சியில் சமரச சுதந்திரம் இல்லாத நிலையை ஒப்புக்கொண்டும் சமரசம்-சுதந்திரம் (இக்வாலிடி-லிபர்டி) இரண்டும் மனிதவாழ்வின் அடிப்படைகள் என்பதை உணர்ந்தும்தான் இந்தக் கேள்வி முன்வைக்கப்படுகிறது. இம்மண்ணில் சமஉரிமை கொண்ட உழைக்கும் மக்களுக்குச் சமரசமும் சுதந்திரமும் அளிக்க மறுக்கும் வன்கொடுமைக்காரர்களுக்கு சுதந்திரம் பற்றிப் பேசவும் அதனைக் கோரவும் என்ன உரிமை உள்ளது என்ற அறம்சார் அரசியல் கேள்வியே இதில் மையமானது. “இந்தியாவிலிருந்து செளத்தாபிரிக்காவுக்கு குடியேறியுள்ளவர்களுக்கு சமரசவாட்சி கேட்பவர்கள் இந்தியக்குடிகளாகிய திராவிடர்களாம் ஆறுகோடி மக்களை அடியோடு தாழ்த்தி அலக்கழிக்கலாமோ. அன்னிய தேசத்திற் சென்றிருக்கும் குடிகளுக்காக அதிகப் பிரயாசைப்படுகிறவர்கள் சுதேசத்தில் கஷ்டப்படும் பெருந்தொகைக் குடிகளுக்கு சமரச சுகம், சமரசவாட்சி, சமரச சேர்க்கை ஏன் கொடுக்கலாகாது. அன்னிய தேசவாசிகளான செளத்தாபிரிக்கரிடம் இந்தியாவிலிருந்து குடியேறியுள்ள வர்களுக்குச் சமரச சுகங்கேட்கும் நீதிமான்கள் இந்தியாவிலுள்ள ஏழைக்குடிகளுக்கும் சமரச சுகத்தை அளிக்கவேண்டுமென்னும் முயற்சியை ஏனெடுக்கக்கூடாது? ” (தமிழன்: அக்டோபர் 27,1909)  இவை வெறும் நீதி உணர்ச்சி பற்றிய கேள்விகளல்ல; நவீன இந்திய அரசியலில் எமது இடம் என்ன?  நீங்கள் முன்வைக்கும் சுதேசியம், சுதந்திரம், சமஉரிமைகள், சுயாட்சி, அரசியல் அதிகாரம், சுயராச்சியம் என்பவை யாருக்கானவை?  ஐரோப்பிய ஆட்சியை நீக்கிவிட்டு யார் இம்மண்ணின் ஆட்சியைக் கைக்கொள்ளப் போகிறீர்கள்? உமது ஆட்சியல் நாங்கள் அடிமைகளா அல்லது சமஉரிமை கொண்ட பங்காளிகளா?  இந்த நாட்டின் அரசியலை எமது மக்கள் ஏன் முடிவு செய்யக்கூடாது? என்ற அடிப்படையான பல அரசியல் கேள்விகள் உள்ளடங்கியுள்ளன. இவற்றிற்குப் பதிலளிக்க இயலாத, முயலாத, விரும்பாத சக்திகள்தான் அன்றைய சுதேசிய- சுதந்திர- சுயராச்சிய அரசியலைத் தம் வசப்படுத்தியிருந்தனர். தேசபக்தி, தெய்வபக்தி இரண்டும் இணைந்த ஒரு  புனித அரசியல்தான் அன்று உருவாகியிருந்தது.  இவை இரண்டையும் ஒருசேர எதிர்க்கவும் இவற்றிற்கு மாறான புதிய விடுதலைக் கருத்தியலை முன்வைக்கவும் தேவையான அறத்துணிவும் பெரும் அறிவாற்றலும் அயோத்திதாசரிடம் இருந்தன.

இந்தியச் சமூகத்தில் பக்தி மரபு மிகப்பலம் வாய்ந்த அரசியல் சக்தியாக நீண்டகாலமாக இருந்து வருகிறது. இப்பக்தி மரபு தெய்வ பக்தி, ராஜபக்தி இரண்டையும் உள்ளடக்கியது. இறை என்பது தெய்வம், அரசன் என்ற இரண்டையும் குறிக்கும் சொல் மட்டுமல்ல கோட்பாடுமாகும்.  வைதிக, பார்ப்பனிய மேலாதிக்கம் தம்மை உறுதிப்படுத்திக்கொள்ள முடியாட்சியின் அளவற்ற அதிகாரத்தைப் புனிதப்படுத்த வேண்டிய தேவை இருந்தது. அரச அதிகாரத்தைப் புனிதமானதாக நிறுவப் புராணங்களின் வழி கட்டப்பட்ட பக்தியும் முக்தியும் வலிமையான  உத்திகளாக அமைந்தன. தெய்வபக்தியும் ராஜபக்தியும் இணையும்போது அவற்றின் கீழ் அடிமைப்பட்டவர்கள் தம் அடிமைத்தனம் மறந்து மோட்ச நிலையில் மூழ்கிய, தெய்விக அருள் பெற்றதான உளப்பாங்கு பெறுகின்றனர்.

சத்திரியர்களும் வைசியர்களும் தமக்கான அரசியல், பொருளாதார, சமூக அதிகாரங்களை உறுதிப்படுத்திக்கொள்ள பிராமணியத்தின்  பொய்ப் புனிதங்களைத் தமக்கானதாக ஏற்றுக்கொண்டதுடன்;  அவற்றைச் சூத்திரச் சாதிகளின் மீதும் அவர்களுக்கும் கீழாக வைக்கப்பட்ட பஞ்சமர்கள்  மீதும் சுமத்திவந்தனர். மனு தர்மசாஸ்திரம், கெளடில்ய அர்த்த சாஸ்திரம், வாத்ஸ்யாயன காமசாஸ்திரம் போன்றவை தர்ம, அர்த்த, காம நியதிகளின்படி மோட்சத்தை அடைவதற்கான வழிகளைக் கூறுவன எனத் தம்மை நிறுவிக்கொண்டாலும் அவை உண்மையில் தண்டனைகள் மற்றும் வெகுமதிகள் பற்றிய விதிகளையே விளக்குகின்றன. அந்த விதிகளிலும்கூட சூத்திர-பஞ்சம மக்களுக்கு என வகுக்கப்பட்ட  இன்பங்களும் துன்பங்களும் மிகவெளிப்படையான தண்டனைகளாகவே உள்ளன. அவர்களுக்கான வெகுமதிகள் இவ்வுலகில், இப்பிறப்பில் கிடைப்பன அல்ல என்பதைச் சாத்திரங்கள் எந்த மறைப்பும் இன்றி விரிவாகக் கூறுகின்றன.

“ஒருவருக்கு விதிக்கப்பட்ட கடமையைப் பின்பற்றி வாழ்ந்தால் சுவர்க்க கதியை அடைந்து முடிவற்ற இன்பம் பெறலாம். சாதிகள் தம் கடமைகளை மீறும்போது குழப்பங்கள் உருவாகி உலகம் நாசமாகும். அதனால் அரசனானவன் மக்கள் ஒருபோதும் தம் கடமைகளில் இருந்து நழுவாதபடி பார்த்துக் கொள்ளவேண்டும்.  ஆரியர் (பிராமணர்) வகுத்த சாதிக் கட்டுகளையும் சமய ஆச்சாரங்களையும் பின்பற்றித் தம் கடமைகளில் இருந்து ஒருபோதும் வழுவாமல் வாழ்பவர் இப்பிறவியில் மட்டுமின்றி இனிவரும் பிறவிகளிலும் இன்பம் அடைவர்.” என்று அடிமை நிலையை வரையறை செய்கிறது கெளடில்ய அர்த்த சாஸ்திரம். அடிமைப்பட்டவர்கள் தாம் எவ்வாறு முழுமையான அடிமை வாழ்வை வாழ்வது என்பதைத் தம்மை அடக்கி வைத்துள்ளவர்களிடமே கற்கவேண்டும் என்கிறது மனுஸ்மிருதி, “உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் பிராமணரிடம் தமக்கான (சாதி) ஒழுங்கு விதிகளைக் கற்றறிந்து கொள்ள வேண்டு்ம்.” இந்த ஒழுங்குவிதிகளை யார் உறுதி செய்வது, யார் காப்பாற்றுவது என்பதையும் மனுச்சட்டம் விளக்குகிறது, “வைசியர்களும் சூத்திரர்களும் தமக்கு விதிக்கப்பட்ட ஊழியக் கடமைகளைச் சரிவரச் செய்யும்படி அரசன்தான் கட்டுப்படுத்தி வரவேண்டும்; இந்த இரண்டு சாதிகளும் தம் கடமைகளில் இருந்து நழுவினால் இந்த லோகம் நாசமடையும்.”

ஒடுக்கபட்ட, அடக்கப்பட்ட மக்கள் தமது அடிமை வாழ்வை ஏற்க மறுத்து மனித விழுமியத்துடன் வாழவேண்டும் என உணரும் நிலையைத்தான் இந்தியச் சமய வரலாறு அழிவு, நாசம், குழப்பம் என்று தொடர்ந்து குறிப்பிட்டு வருகிறது. “ஒரு சூத்திரன் அவன் விலைகொடுத்து வாங்கப்பட்டவனாகவோ அல்லது வாங்கப்படாதவனாகவோ இருக்கலாம்  அவனை வசக்கி வேலைவாங்க வேண்டியது அவசியம், ஏனென்றால் ஒரு பிராமணனுக்கு அடிமையாக இருக்கவே சுயம்புதேவன் சூத்திரர்களைப் படைத்திருக்கிறான்.” என்று வலியுறுத்தும் மனுஸ்மிருதி அடிமைகள் ஒருக்காலும் விடுதலை அடைய முடியாது என்று உறுதிப்படச்  சொல்கிறது, “ஒரு சூத்திரனை அவனுடைய எஜமானன் விடுதலை செய்தால்கூட அவனை அடிமைத்தனத்திலிருந்து யாரும் விடுவிக்க முடியாது, ஏனென்றால் அது அவனது பிறவிவிதி,  யாரால் அவனை அதிலிருந்து விடுவிக்க முடியும்?”

இந்த விடுதலை அடையமுடியாத நிலையை ஒடுக்கப்பட்ட மக்கள் மீது அடக்குமுறை, வன்முறை, தண்டனை, சித்திரவதை வழியாகத் திணிப்பது ராஜநீதி என்றும் ஒழுக்கம், தர்மம், பக்தி என்பவற்றின் பெயரால் திணிப்பதும் உளவியல் வழியான வன்கொடுமையை அவர்கள் மீது நிகழ்த்துவதும் தெய்வநீதி என்றும் இந்திய மரபில் கொண்டாடப்படுகின்றன. சாதிய விதிகள் பற்றிய திட்டவட்டமான வரையறைகளை நிலைப்படுத்தல் சாதிகளுக்கிடையில் கலப்பு நிகழாத வண்ணம் தடுத்தல்  இவை இரண்டும் இந்திய அரசியல் வரலாற்றையும் சமய வரலாற்றையும் இணைக்கின்ற செயல்திட்டங்களாக இருந்து வருகின்றன.

இந்த இரண்டு உத்திகளும் இணையும் இடத்தை பகவத்கீதை தெளிவாகக் குறிப்பிடப்படுகிறது. “குலம் நாசமடையும்போது தொன்று தொட்டுவந்த குலதருமங்கள் நாசமடையும்; தருமம் அழிந்தால் குலம் முழுதும் அதருமம் பரவி நிற்கும். அதருமம் பரவுவதால் குலப்பெண்கள் கற்பை இழந்து கெட்டுப் போவார்கள்; பெண்கள் கெட்டால் ஜாதிக் கலப்பு (வர்ண ஸங்கரம்) ஏற்படும்.” இதுதான் பகவத்கீதையைத் தொடங்கிவைக்கும் அடிப்படையான கேள்வியும் அது  விளக்கமுனையும் மையச் சிக்கலும். இதற்கான பதிலை நேரடியாகச் சொல்லாமல் ஸாங்கிய யோகம், கர்ம யோகம், ஞான யோகம், ஸந்நியாஸ யோகம், தியான யோகம், விஜ்ஞான யோகம் எனப் பலவாறாக விரித்து மோக்ஷம் அடையும் வழி சொல்லப்படுகிறது, “பிராமணர்க்கும் க்ஷத்திரியர்களுக்கும் வைசியர்களுக்கும் சூத்திரர்களுக்கும் அவரவர் இயற்கைக்குரிய குணங்களால் கருமங்கள் வகுக்கப்பட்டுள்ளன.” இதனை மீறாமல் இருப்பதுடன் “குற்றமுடையதாயினும் உடன்பிறந்த கருமத்தை ஒருவன் கைவிடக்ககூடாது” என்று உறுதியாகச் சொல்கிறது பகவத்கீதை.

அடிமைப்பட்ட சூத்திரர்களுக்கும்  அடிமையாக வாழநேர்ந்த பஞ்சமர்களுக்கும் தவிர வேறு யாருக்கும் தமக்குரிய கருமம் (கடமை) குற்றமுடையதாக துயரமுடையதாக இருக்கப்போவதில்லை. இவர்களைத் தவிர அதிகாரமும் உரிமைகளும் வாழ்வின்பங்களும் கொண்ட பிற குல-வர்ண-சாதியினருக்குத்  தருமத்தை மீற வேண்டிய தேவையும் ஏற்படப்போவதில்லை. தம் அடிமைநிலைக்கெதிராக ஒடுக்கப்பட்ட மக்கள் எழுச்சியடையும் நிலையையே  ‘அதருமம் எழச்சியடையும் நிலை’ என்றும் ஆதிக்கச் சாதியினரின் அதிகாரமும் அடக்குமுறையும் குறையும் நிலையை  ‘தருமம் குறைபடும் நிலை‘ என்றும் இந்தியச் சனாதன ராஜநீதி பலநூற்றாண்டுகளாகப் போதித்து வருகிறது. “பாரதா! எப்பொழுதெல்லாம் தருமத்திற்குக் குறைவும் அதருமத்திற்கு எழுச்சியும் உண்டாகிறதோ அவ்வப்போது என்னைப் படைத்துக்கொள்கிறேன். ஸாதுக்களைக் காத்தற்கும் துஷ்டர்களை அழித்தற்கும் தருமத்தை நிலை நாட்டுற்கும் யுகம் தோறும் வந்து உதிப்பேன்!”  [யதா யதா ஹி தர்மஸ்ய க்ளானிர் ப்பவதி பாரத! அப்யுத்தானம் அதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யஹம்! பரித்ராணாய சாதூனாம் விநாசாய ச துஷ்க்ருதாம் தர்ம ஸம்ஸ்தாபநார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே! (பகவத்கீதை 4:7;  4:8) ]

பகவத் கீதை முன்வைக்கும் இந்த அரசியல்தான்  இந்திய மரபில் இரு பிரிவுகளாக வளர்ந்து தெய்வபக்தி- தேசபக்தி என்ற ஆதிக்க மரபுகளாக இன்றுவரை நிலைபெற்றுள்ளன. அடக்கியாளும் வன்முறையாளர்களை சாதுக்கள் என்றும்;  அடங்க மறுத்து வாழ்வுரிமை கேட்கும் மக்களை துஷ்டர்கள் என்றும் வரையறை செய்யும் இந்த மரபுக்கெதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாக அமைந்ததுதான் அயோத்திதாசரின் சுதேசிய-சுயராச்சிய மறுப்பு.  ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான எழுச்சியை அன்றைய ஆதிக்கசாதி அரசியல் அதர்மத்தின் எழுச்சியாவே கண்டது. அந்த அடையாள எழுச்சிக்குக் காரணமாக இருந்த  இங்கிலாந்தின் அரசியலை இந்தியப் புனிதங்களை அழிக்க வந்த தீய சக்தியாகக் கண்டது.   இந்தியப் புனிதங்களின் அடிப்படையென இந்து-சனாதன சக்திகள் நம்புவது சாதி ஒதுக்குதலும் படிநிலை அடக்குமுறையும்தான் என்பதைத் தெளிவாக அறிந்திருந்ததால்தான்  அயோத்திதாசர் அன்றைய சுதேசிய அரசியலை அறச்சீற்றத்துடன் எதிர்த்து வந்தார். இந்தியாவின் அரசியல் விடுதலைக்குமுன் மண்ணின் மக்களுக்கு சமஉரிமைகளும் சமூக நீதியும் உறுதிசெய்யப்பட வேண்டும் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்த அயோத்திதாசருக்கு எந்த தயக்கமும் இல்லை.

திருநெல்வேலி ஆட்சியராக இருந்த ராபர்ட் வில்லியம் டி ஆஷ்  1911-ஆம் ஆண்டு ஜூன் 17-ஆம் நாள் வாஞ்சிநாதன் என்றழைக்கப்பட்ட செங்கோட்டை சங்கர ஐயர் என்ற இளைஞரால் சுட்டுக் கொல்லப்பட்டார். வாஞ்சி அய்யரும் தன்னைச் சுட்டுக்கொண்டு மாய்ந்தார். இந்த நிகழ்வு தமிழக சுதந்திரப் போராட்ட வரலாற்றின் வீரநினைவாகப் பதிவாகியுள்ளது. இந்தியத் தேசியம், இந்தியச்  சுதந்திரப் போராட்டம் என்பனவற்றை ஒற்றைத்தன்மை கொண்டதாக உறுதிப்படுத்த முனையும் புனித அரசியல் சக்திகளுக்கு  இதுபோன்று இன்னும் பல கொலைகளும் தற்கொலைகளும் விடுதலை வேள்வியாகத் தோன்றக்கூடும்.  ஆனால் இந்தியாவின் நான்கில் ஒரு பங்கு மக்களாக வாழ்ந்து துயருற்ற  ஒடுக்கப்பட்டோரின் வரலாறு இதுவல்ல என்பதைத்தான் அயோத்திதாசர் தயக்கமின்றி எடுத்துரைத்தார். ஆதிக்கக்காரர்களின் வரலாறும் அடிமைப்படுத்தப்பட்டோர் வரலாறும் ஒரே மண்ணில் ஒரே காலத்தில் நிகழலாம் ஆனால் ஒன்றே போல் ஒரே அர்த்தத்தில் நிகழ்வதில்லை என்பதைத் தலைகீழாக்க அரசியல் வழியாகப் பண்டிதர் நிறுவிக்காட்டினார். “நமது திருனெல்வேலி கலைக்ட்டரவர்கள் சீர்மையின்று இந்தியாவில் வந்து தனது பிரிட்டிஷ் ஆட்சியின் கலைக்ட்டர் உத்தியோகத்தைக் கைக்கொண்டு இவ்விடமுள்ள பூமிகளின் விஷயங்களையும் அந்தந்த பூமிகளின் நீர்ப்பாய்ச்சல் விஷயங்களையும் அங்கங்கு வாழும் குடிகளின் விஷயம், சாதிசமய விஷயங்களையும் நன்காராய்ந்தும், நாளாகத் தனது அநுபோகத்திற் கண்டறிந்தவரும் தேசசீர்திருத்தங்களை செய்ய வல்லவருமாகவிருந்த ஓர் துரைமகனை ஓர் படுபாவியாகிய துஷ்டன் கொன்றுவிட்டானென்றவுடன் சகல விவேகமிகுந்த மேதாவிகளும் துக்கத்தில் ஆழ்ந்தினார்களென்பதற்கு ஆட்சேபமில்லை.”  (தமிழன்: சூன் 28,1911) அயோத்திதாசரின் அறம்சார் அரசியல் தேசசீர்திருத்தம் மற்றும் குடிகளின் சுகங்கள் இரண்டையும் மையப்படுத்தியே தன் துயரைப் பதிவு செய்கிறது.

திருநெல்வேலி ஆட்சியராக இருந்த ஆஷ் தீண்டாமைக்குட்பட்ட மக்களிடம் இரக்கம் கொண்டவர் என்றும்;  தீண்டாமைக்குட்ட பெண் ஒருவர் நிறைமாத கர்ப்பத்தில் துயருற்ற போது தன் வண்டியில் ஏற்றி பார்ப்பனச்சேரி வழியாக மருத்துவமனைக்குக் கொண்டுசென்ற நிகழ்ச்சியால் கடுங்கோபங்கொண்டு அக்கிரகாரத்தைத் தீட்டுப்படுத்திய ஆஷை கொன்றவன் வாஞ்சி அய்யர் என்ற பார்ப்பன இளைஞன் என்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் நினைவுப் பதிவுகள் உள்ளன. இதற்குச் சான்றுகள் இருக்கலாம் இல்லாமலும் போகலாம். ஆனால் ஆஷ் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்த ஒரு அலுவலர் என்ற பண்டிதரின் பதிவு தரவுகள் கொண்ட மக்கள் வரலாறாகவே இருக்கும்.

“அந்தக் கலைக்ட்டரின் குணாதிசயங்களை அறிந்த விவேகமிகுந்த மேன்மக்கள் யாவரும் அவரை மிக்க நல்லவரென்றும் நீதிமானென்றும் சகலசாதி மனுக்களையும் சமமாகப் பாவிப்பவரென்றும் கொண்டாடுகின்றனர்.” அப்படியிருக்க இப்பிராமணரென்று சொல்லிக் கொள்ளும் கூட்டத்தோருக்கு மட்டிலும் உண்டாய துவேஷமென்னை?” என்ற அடிப்படையான கேள்வியை முன்வைக்கிறார் பண்டிதர். இதில் ஆழ்ந்த ஆய்வுகள் செய்ய ஒன்றும் இல்லை;  நாமும்கூட பண்டிதரின் பார்வையைப்  புரிந்துகொண்டால், அண்ணல் அம்பேத்கரின் ஆய்வுகளை அறிந்து கொண்டால் “அவரைக் கொலைபுரிந்த காரணம் தங்கள் கூட்டத்தோர் சுகத்தைக் கருதிய ஏதுவாயிருக்குமேயன்றி வேறில்லை”  என்ற உள்மெய்யை ஏற்றுக் கொள்வோம்.

இந்த உண்மையை வாஞ்சிநாதன் தன் வாக்கால் பதிவு செய்திருப்பதைக் காணலாம், “ஆங்கில மிலேச்சர்கள் நமது பாரதத் திருநாட்டைப் பிடுங்கிக்கொண்டு, இந்நாட்டின் சனாதன தர்மத்தை அவர்களது கால்களால் மிதித்து அழித்து வருகின்றனர். ஒவ்வொரு இந்தியச் சகோதரனும் ஏகாதிபத்திய வெள்ளையனை நாட்டை விட்டுத் துரத்தி தர்மத்தையும், ஸ்வராஜ்யத்தையும் நிலைநாட்ட முயற்சி செய்து வருகிறான். ராமன், கிருஷ்ணன், சிவாஜி, குரு கோவிந்த சிங், அர்ஜுனன் முதலானோர் இருந்து தர்மம் தலைதூக்க அரசாட்சி செய்து வந்த நமது தேசத்தில், பசுவின் மாமிசத்தை தின்னக்கூடிய மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சமனை முடிசூட்ட உத்தேசம் செய்து கொண்டு பெரும் முயற்சியை எடுத்து வருகிறார்கள்.  3000 சென்னை ராஜதானியர்கள் அம்மிலேச்சர்களைக் கொல்லும்பொருட்டு தயாராகிக் கொண்டிருக்கிறோம். இச்சகோதரர்களது எண்ணத்தைத் தெரிவிக்கும் வகையில் அவர்களின் கடையனாகிய நான் இன்று இந்தச் செயலைச் செய்தேன். இதுதான் இந்துஸ்தானத்திலிருக்கும் ஒவ்வொருவனும் செய்யவேண்டிய கடமையாகும். இப்படிக்கு R.வாஞ்சி அய்யர் (17-06-1911)”

இந்தக் கடிதம் பின்னாட்களில் வெளிப்பட்ட ஒன்று; கொலை செய்தவர் பெயரும் அப்போது அறியப்படாமல் இருந்தது. இச்சான்றுகள் இன்றியே இக்கொலை சனாதன தர்மத்தைக் காக்க நிகழ்தப்பட்டதுதான் என்பதைப் புலப்படுத்த அயோத்திதாசருக்கு எவ்வாறு இயன்றது? அவர் ஆதிக்கத்தின் அடிமை அல்லர்;  அவரது பார்வை விடுதலை அறம் சார்ந்தது. காலனிய ஆட்சியின் அடக்குமுறை, ஆதிக்கம் என்பன பற்றி யாரைவிடவும் அயோத்திதாசருக்கு புரியும், அதே சமயம் இந்த மண்ணைச் சேர்ந்த பிற சாதிகளால் மனித விழுமியங்கள் மறுக்கப்பட்டு வாழ்ந்த தம் மக்களின் வரலாற்றுத் துயரும் தெரியும். தம் மக்களின் சார்பாகப் பேச முனைந்த ஒருவருக்கு ‘பகவத்கீதையின் தர்மப்படி’ என்ன நடக்கும் என்பதையும் அவரால் கூற இயலும். அதனால்தான் ஆதிக்கச் சாதியினர் வரலாறு எனச்சொல்லிவைத்த கதைகளை அவரால் தலைகீழாக்கம் செய்ய முடிந்தது, ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாற்றை மறுஉருவாக்கம் செய்யவும் முடிந்தது.

நவீன இந்திய வரலாற்றில் ஒடுக்கப்பட்ட அடிமைப்பட்ட மக்களை செயலற்றவர்களாக்கி வைக்கும் தேசபக்தி, தெய்வபக்தி இரண்டுக்கும் எதிரான புரட்சியை அயோத்திதாச பண்டிதர், அண்ணல் அம்பேத்கர் இருவருமே உறுதியாக முன்னெடுத்ததற்கான காரணங்களைப் புரிந்துகொணடால் இந்தியச் சமூகங்களுக்கான விடுதலை அரசியலையும் நாம் புரிந்துகொள்ள முடியும்.                                                            (தொடரும்…)

[நமது தமிழ்மண் : சூன்,2015]

அயோத்திதாசரின் அறப்புரட்சி:1 -பிரேம்

அயோத்திதாசரின் அறப்புரட்சி

(வரலாற்றிலிருந்து விடுவித்தவர் வரலாற்றையும் விடுவித்தவர்)  

பிரேம்

தமிழக வரலாற்றில் புரட்சியை ஏற்றுக்கொண்ட சிந்தனையாளர்கள்,  புரட்சிக்கான  சிந்தனையாளர், புரட்சியைப் பரப்பிய சிந்தனையாளர்கள் சிலர் உள்ளனர்.  ஆனால் ஒரு சிந்தனையாளர் மட்டுமே தன் சிந்தனையால், தன் செயல் திட்டத்தால் புரட்சியை நிகழ்த்தியிருக்கிறார். அவர் புரட்சி உருவாகுமெனக் காத்திருக்கவில்லை, புரட்சிக்குப்பின் விடுதலை வரும் என்று பார்த்திருக்கவுமில்லை. அவருடைய தொடக்கமே புரட்சியாக அமைந்தது, அவரது ஒவ்வொரு சொல்லும், வாக்கியமும், கருத்தும், அறிவுருவாக்க முறையும் ஆய்வுமுறையும் புரட்சியாக இருந்தது. தன் காலத்திய சிந்தனைகள் அனைத்தையும் கடந்து, தம் காலத்திய ஆதிக்க, அதிகார, மரபுகள் அனைத்தையும் எதிர்த்துச் செயல்பட்டவர் அவர். தான் வாழ்ந்த காலத்தில் வலிமை பெற்றிருந்த வரலாற்றுப் புனைவுகளில் இருந்து முற்றிலும் விடுதலை பெற்றவராக இருந்தார், அவற்றை ஆதாரமற்ற கட்டுக்கதைகள் என்று ஐயத்திற்கிடமின்றி எடுத்துரைத்தார், அவற்றை உருவாக்கிப் பரப்பி வருபவர்களை ‘சுயப்பிரயோசன சோம்பேரிகள்’ என்று தயங்காமல் தாக்குதல் தொடுத்தார்.

அவரது மொழி, சிந்தனைமுறை, வரலாற்றுப் புரிதல், இலக்கியம் பற்றி பார்வை, அறக்கருத்துகள், அரசியல் திட்டங்கள், வாழ்வியல் நெறிகள் அனைத்தும் புதிதாக இருந்தன. அவரது சிந்தனையில் இருந்த வலிமையும், அவற்றை எடுத்துரைப்பதில் அவருக்கிருந்த பொறுமையும் புதிய சிந்தனைப் பள்ளிகளை உருவாக்க முனையும் பேரறிஞர்கள் பலருக்கு வாய்க்காத பெருங்குணம்.  தான் கொண்டிருந்த கருத்தியல் மீது அவருக்கிருந்த பெருமிதமும், தனது அறத்தின் மீது அவர் வைத்திருந்த பெரும் பற்றும் தம் காலத்தில் வலிமை பெற்றிருந்த, ஆதிக்கம் செலுத்திவந்த, பெரும்பான்மையினரின் கருத்தியல்கள் அனைத்தையும் புறந்தள்ளி, பொய்யெனத் தூரவிலக்கி செயல்படுவதற்குரிய ஆற்றலையும் துணிச்சலையும் அவருக்கு அளித்திருந்தன. அந்தத் துணிவும் ஆற்றலும் நம் அயோத்திதாசரை அவர் காலத்திய சிந்தனைகள் பலவற்றைக் கடந்து, வரலாற்றின் கீழ் நசுங்கிய  ஒரு சமூகத்தின் மனிதர் என்ற நிலையிலிருந்து வரலாற்றைத் திருத்தியெழுதும் ஒரு பேரறிஞராக  உருவாக்கியிருந்தன.

அன்றைய அரசியல், சமூகவியல், வரலாறு, சமய நம்பிக்கைகள் அனைத்திலிருந்தும் மாறுபட்டுச் சிந்திக்கவும் அதனைச் செயல்படுத்தவும் அவரால் முடிந்தது.  அவர் தம் மக்களின் மீதும், விடுதலை மீதும் கொண்டிருந்த பற்றும் வித்தை, புத்தி, ஈகை, சன்மார்க்கம், கருணை, ஒற்றுமெய் என்ற சுத்த சீலங்கள் மீது கொண்டிருந்த நம்பிக்கையுமே அதற்குக் காரணமாக அமைந்தன. அந்த நம்பிக்கையின் வலிமையோடு  சாதிபேதமற்ற திராவிடர்களை ஒன்றிணைத்து அவர்களை விடுதலையை நோக்கி, நீண்ட சாந்தமும் நீடிய சமாதானமும் கொண்ட உண்மையான சுதேசியத்தை நோக்கி அழைத்துச் செல்வதைத் தம் வாழ்வாகக் கொண்டார்.

அந்த வாழ்வு நெடிய ஒரு போராட்டமாக அமைந்திருந்தது. ஏனெனில் அரசியல் வலிமைகொண்ட, சமய அதிகாரம் கொண்ட, வரலாற்று ஆதிக்கம் பெற்றிருந்த  பிராமண-வைதிக மரபை மட்டுமின்றி அவர்களுடன் இணைந்து சாதிவேற்றுமையை, தீண்டாமையைக் கடைபிடிக்கும் சாதி இந்துக்கள் அனைவருக்கும் எதிரான ஒரு அறிவுப்புரட்சியை, அறப்புரட்சியை அறிஞர் அயோத்திதாசர் தொடங்கியிருந்தார்.

தேசவிடுதலைஎன்று பொத்தம் பொதுவான கூக்குரலுடன் இந்தியாவின் சமூக, சமய வன்முறைகளைக் கவனத்தில் கொள்ளாமல் சாதிவேற்றுமை, தீண்டாமைக் கொடுமை, பெண்ணொடுக்குமுறை பற்றிய குற்றவுணர்வோ வெட்கமோ இல்லாத, மூடநம்பிக்கைவெறி கொண்ட பிற்போக்காளர்கள் தங்களுக்குத் தேசபக்தர்கள் என்று பெயர்ச்சூட்டிக் கொண்டு அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான போராட்டத்தில் ஈடுபட்டு வந்த காலத்தில் அயோத்திதாசர் “சாதிபேதங்  கொண்ட பொறாமெய் உள்ளோரிடம் சீவகருண்ய சிந்தையே கிடையாது என்பதை அநுபவத்தில் காணலாம்.” என்று அறிவித்து ஒரு கருத்துப் புரட்சியை தொடங்கியிருந்தார். அதனால்தான் அவரை அன்று விதவாப் பிரசங்க வேதாந்திகள், சில்லரைப் பிரசங்க சித்தாந்திகள், பாட்டுப் பிரசங்க பாரதியார்கள் என அனைத்துத் தரப்பினரும் எதிர்த்தனர். சாதிகர்வம் (சாதித்திமிர்), மதகர்வம் (சமயத்திமிர்), வித்தியாகர்வம் (கல்வித் திமிர்), தனகர்வம் (பணத்திமிர்) கொண்ட கூட்டத்தினர் பொதுச்சீர்த்திருத்தம்செய்யப்போவதாக புறப்பட்டு அயோத்திதாசரை அவமதித்து வந்தனர். அவற்றைக் கண்டு சற்றும் கலங்காத பேரறிஞர் தாம் “எழுதிவரும் சுதேச சீர்திருத்தத்தை சிலர் சுதேச சீர்திருத்தமாகக் கொள்ளாது சுதேச மறுப்பென்றெண்ணி மயங்குவதாக” விளக்கித் தன் உண்மையான அரசியல் நோக்கத்தைத் தெளிவுபடுத்தினார்: “நாம் சுதேசிகளைத் தாழ்த்தி பரதேசிகளை உயர்த்துவதற்கும், பரதேசிகளைத் தாழ்த்தி சுதேசிகளை உயர்த்துவதற்கும் பத்திரிகை வெளியிட்டோமில்லை. சுதேசிகளை சொந்தமாகவும் பரதேசிகளை பந்தவாகவும் எண்ணி பலர்ப் பிரயோசனங் கருதி (அனைவருக்குமான நன்மை அல்லது பொதுநீதி) வெளியிட்டிருக்கிறோம்.” (தமிழன் 2-10-1907) இந்தப் பொதுநீதிக்கான, சமத்துவ விடுதலைக்கான போராட்டமே அயோத்திதாசரை மற்ற சிந்தனையாளர்களிடம் இருந்து வேறுபட்டவராக ஆக்கியது, அவரது ஒவ்வொரு சொல்லையும் அறப்புரட்சியின் வெளிப்பாடாக மாற்றியது.

இந்திய வரலாறு என ஒற்றைத்தன்மையில் ஏதும் இல்லை யென்றபோதும் இந்தியாவின் பல வரலாறுகளுக்கிடையில் சில பொதுத்தன்மைகள் உள்ளன. அந்தப் பொதுத்தன்மைகளில் சாதி வேற்றுமை, தீண்டாமை வழக்கம் என்ற தீமைகள் முக்கிய இடம் பெறுகின்றன. இந்தியச் சமூக உளவியலில் ஆதிக்க சாதிக்குணம், இடைநிலை சாதிக்குணம் இரண்டும் தமக்குக்கீழ் உள்ள மக்கள் என்ற கற்பிதத்தை இறுகப் பற்றியுள்ளன. அதாவது சிலரைத் தீண்டாத நிலையில் வைத்திருப்பதில் பெருமை கொள்ளும் வன்முறை குணத்தை தமது உரிமை என நம்புகின்றன. இது ஒருவகையில் தனக்குக் கீழ் சில அடிமைகள் உள்ளனர் என்ற கற்பித உணர்வை அளித்து  அதிகாரத் திமிரை அளிக்கிறது. அத்துடன் தனக்குக் கீழ் அடக்கி வைக்கப்பட்டுள்ள மக்களின் கடின உழைப்பை ஊதியமளிக்காமல் சுரண்டிக் கொள்ளும் உரிமையை அவர்களுக்கு அளிக்கிறது.  அம்மக்களின் உடல், உள்ளம், மொழி அனைத்தின் மீதும் தன் அதிகாரத்தை அடக்குமுறையை செலுத்தும் உரிமை தனக்கு உள்ளதாகசாதிக்குணம்நம்புகிறது. இதனை நியாயப்படுத்துவதற்கு உகந்த அரசு, மதம், புராணம், வரலாறு, ஒழுக்கவிதிகள் என்பனவற்றை உருவாக்கிப் பாதுகாத்து வருகிறது.

இந்த அடக்குமுறைக்குள் சிக்கிய மக்களின் உளவியல் முற்றிலும் வேறுபட்டது. தம் வாழ்வுக்கென தனித்த பொருளின்றி தன்னை அடக்கியும் ஒடுக்கியும் வைத்துள்ள சாதிகளின் நலனுக்கு பொருந்தக்கூடிய, அவர்களின் ஒடுக்குமுறை விதிகளுக்குக் கட்டுப்பட்ட வாழ்வை வாழ்ந்து முடிப்பதற்கான நிர்ப்பந்திக்கப்பட்ட உளவியல் அது. தனக்கென உரிமையுள்ள வாழிடமின்றி, வாழ்வாதாரங்களில் பங்கின்றி, அரசியலில் தனக்கான இடமின்றி மற்ற சாதிகளுக்கென உழைத்து, வாழ்ந்துமுடியும் வெறுமை கொண்ட உளவியல் அது.  தம்மை ஒடுக்கும் மதத்தை ஏற்று, தம்மை இழிபடுத்தும் புராணங்களை நம்பி, தம்மை ஒடுக்கிய வரலாற்றிற்குள் அடைபட்டு நிற்கும் கொடிய நிலைதான் அது. இந்த வன்கொடுமை வாழ்வுக்கெதிராகக் கிளர்ந்தெழுந்து, அடக்குமுறைக்கெதிராகப் போராடி வெளியேற அம்மக்கள் தம்மை ஒடுக்கும் கற்பிதங்களை உடைத்து நொறுக்குவது முன் தொடக்கம். உடைத்து நொறுக்குவதுடன் தமக்கான புதிய வாழ்வியலை, வரலாற்றை, அரசியலை, சமூக நெறிகளை உருவாக்கிக் கொள்ள வேண்டியது அதன் தொடர்ச்சி.   இந்த உடைத்து நொறுக்கும் உளவியலும், உருவாக்கும் உளவியலும் இணைந்ததுதான் விடுதலைக்கான உளவியல். அவ்வகையில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான விடுதலை உளவியலை முற்றிலும் புதிய முறையில், நவீன வாழ்வியலுடன் இணைத்து உருவாக்கியவர்தான் அயோத்திதாசர். அவ்வகையில் மற்ற பல இந்திய விடுதலை இயக்கங்களில், புதிய வாழ்வுக்கான போராட்டங்களில் இல்லாத ஒரு தனித்தன்மையை அயோத்திதாசரிடம் நாம் காண்கிறோம்.

ஒடுக்கப்பட்ட மக்கள் ஆதிக்கச் சாதி மற்றும் ஆதிக்க இன வரலாறுகளை ஏற்று, தமது வாழ்வு கீழ்மை கொண்டதாக உள்ளதென ஒப்புக்கொண்டு அதிலிருந்து விடுதலை பெறப் போராடுதல் என்பது ஒரு வகை. இதில் ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்ட உளவியல் நியாயம் கேட்டு நிற்கும் நிலையில் வைக்கப்படுகிறது. இதில் உள்ள தன்னடையாளம் பற்றிய குற்றவுணர்வும் குறைவுணர்வும் புரட்சிக்கான ஆற்றலைத் தடைசெய்கிறது. தம் வரலாறு பற்றிய  தன்னிரக்கமும், பலியாக்கப்பட்டதன் வலியும், துயருற்ற மனமும் அவர்களின் போராட்ட வலிமையை, அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான வேட்கையைக் குறைக்கின்றன. தம் மீதுள்ள கொடுமைகள் ஓரளவு குறைந்து துயரம் நீங்கிய ஒரு வாழ்க்கை அமைந்தாலே போதுமானது என ஏற்றுக் கொள்ளும் ஒருவித அரசியல் கசப்பு அவர்களுக்குள் நிரம்பிவிடுகிறது. அந்நிலையில்  அவர்களிடம் அடக்குமுறையாளர்களிடமே நீதி கேட்டு நிற்கும் “அரசியல் கீழ்நிலையாக்கம்“ உருவாகிறது. அரசியல் அதிகாரமின்றி, சில சமூக உரிமைகளைப் பெற, மனித உரிமைக்களைக் கோர இந்த அரசியல் பயன்படலாம். ஆனால் முழுமையான விடுதலைக்கு இவ்வகையான நீதி கேட்கும் அரசியல் பயன்பாடாது.

அதிலும் சமத்துவம், சமநீதி, விடுதலை என்பனவற்றை ஏற்காத இந்தியச் சாதியச் சமூகத்தில் நீதி கேட்கும் அரசியல் முற்றிலும் பயனற்றதாகவே இருக்கும். ஒடுக்கப்பட்ட மக்களுக்கான விடுதலையில் “மேல்நிலை பெற்ற அரசியல்” போராட்டங்களே  அதாவது தம் உரிமைகளைத் தாங்களே எடுத்துக் கொள்ளும், தம்மை ஒடுக்குபவர்களின் அரசியல் அடிப்படையைத் தகர்த்தெரியும் போராட்டங்களே மாறுதல்களைக் கொண்டுவர முடியும். இந்த மேல்நிலை பெற்ற அரசியல் போராட்டத்தை இந்தியாவின் தீண்டாமைக்குட்பட்ட மக்கள் கையில் எடுக்க உகந்த காலமாக பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியும் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியும் அமைந்திருந்தன. இதற்கான தலைமையும், கருத்தியல் வழிகாட்டிகளும் உருவாக சர்வதேச அரசியலும், நவீன அரசியல் சிந்தனைகளும் பின்புலமாக இருந்தன. ஆனால் பிரிட்டானிய பேரரசின் அரசியல் நீதிமன்றம், குடிமை நிர்வாகம், சட்டம், கல்வி, பொதுப்பணிகள், இயந்திர உற்பத்தி என்பன போன்ற நவீன சமூக நிறுவனங்களை அறிமுகப்படுத்தியதன் வழி ஒடுக்கப்பட்டோரின் சமூக அரசியல் நிலைகளில் சில மாற்றங்களை உருவாக்கியது. பல நூற்றாண்டுகளாக மறுக்கப்பட்ட மனித உரிமைகளும், குடிமை உரிமைகளும் ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் கொள்கையளவில் உறுதி செய்யப்பட்டன.

இதனை “இத்தகைய கொரூரகாலத்தில் பூர்வ புண்ணிய வசத்தால் பிரிட்டிஷ் துரைத்தனம் வந்து தோன்றி சத்துருக்களின் கொரூரம் ஒடுங்கி இக்குலத்தோர் கிஞ்சித்து சீர்பெறவும் தங்கள் தங்கள் கையிருப்பின் சாஸ்திரங்கள் வெளிவரவும்” உகந்த நிலை என அயோத்திதாசர் அடையாளப்படுத்தினார்.  இந்தியச் சமூக வரலாற்றில் இதற்குமுன் இருந்தவந்த நிலையை “வேஷபிராமணர்களால் இக்குலத்தோர் நிலைகுலைந்து பலவகை துன்பங்களை அநுபவித்து” வந்த நிலை என விளக்கினார். அந்த நிலை தொடர்ந்திருக்கும் எனில் என்ன நிகழ்ந்திருக்கும் என்பதையும் அவர் தெளிவுபடுத்தியிருக்கிறார், “அத்தகையக் கொரூரத் துன்பங்களை வேஷபிராமணர்கள் இதுவரையில் செய்துக் கொண்டும், பறையர்களெனும் பூர்வ பௌத்தர்கள் அவற்றை இதுவரையில் அநுபவித்தும் வந்திருப்பார்களாயின் இவர்கள் தேகங்கிடந்த இடங்களில் எலும்பும் காணாமற்போயிருக்கும் என்பது சத்தியமாம்.” வரலாற்றில் தனது மக்கள் மீது இழைக்கப்பட்ட பெருங்கொடுமைகள் குறைந்த நிலையை “இக்குலத்தோர் கிஞ்சித்து சீர் பெற்ற” நிலை என வரையறை செய்தார்.  இந்தக் குறைந்த பட்ச அரசியல் உரிமையைச் சமூக உரிமைகளாக, வரலாற்று மெய்மையாக மாற்றவும் தம் மக்கள் முழுமையான விடுதலையை நோக்கிச் செல்வதற்குமான வழிமுறையைக் கண்டறிந்து கூறியவர்தான் அயோத்திதாசர்.

முதலில் அவர் தான் அடிமையில்லை, தன் மக்கள் கீழானவர்கள் இல்லை என  உறுதியுடன் அறிவித்துக் கொண்டார். “நமது தேசத்தின் தற்கால பழக்கம் பிச்சை ஏற்பவன் பெரிய சாதி, பூமியை உழுபவன் சின்னசாதி, உழைப்புள்ளவர்கள் சிறிய சாதி சோம்பேறிகள் பெரிய சாதிகள் என்று சொல்லித்திரிவது…” என்று இந்தியச் சமூக அநீதியின் அடிப்படையைத் தகர்த்து விட்டு தனக்கான புதிய அடிப்படையை உருவாக்குகிறார்.

“நாளது வரையில் தமிழ் பாஷைக்கு மூலாதாரமாக விளங்கும் கருவிகளாகிய ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன். மூதுரை, குறள், நீதி வெண்பா, விவேகசிந்தாமணி, மற்றுமுள்ள கலை நூற்கள் யாவும் பறையர்களென்று தாழ்த்தப்பட்டுள்ள பூர்வபௌத்தர்களே இயற்றியுள்ளரென்பது அநுபவக்காட்சியேயாம்.

இத்தகைய வித்தையிலும், புத்தியிலும், ஈகையிலும், சன்மார்க்கத்திலும் கீர்த்தி மிகுந்திருந்த பௌத்தர்களை பறையர்கள், பறையர்களென்றும், தாழ்ந்த சாதியோர் தாழ்ந்த சாதியோரென்றும் சீர் கெடுத்த காலத்தையும் மிலேச்சர்களாகிய ஆரியர்கய் பிராமணர், பிராமணரென்று வேஷமிட்டுக் கொண்டு உயர்ந்த சாதியோர் உயர்ந்த சாதியோரென்று சீர் பெற்ற காலத்தையும் ஆராய்வோமாக.”  எனத் தமிழக, இந்திய வரலாற்றில் ஆதிக்க சாதிகளின் பொய்யுரிமைகளை, போலித்தகுதிகளை இல்லாமலாக்கி, பார்ப்பன, வைதிக  வரலாற்றுப் பொய்மைகளைத் தகர்த்துஇந்தியப் பூர்வகுடிகளின்’ வரலாற்றை மறுஉருவாக்கம் செய்கிறார். இவ்வாறாக ஒடுக்கும் வரலாற்றைத் தகர்ப்பதற்கும் ஒடுக்கப்பட்டோரின் வரலாற்றை உருவாக்குவதற்கும் அயோத்திதாசர் கையாண்ட பெருங்கருவிதான்  பௌத்த தன்மம்.

தம் மக்களின் விடுதலைக்கு பௌத்த தம்மமே வழிகாட்டி என்பதை அறிவித்த அயோத்திதாசர் அதனை ஒரு பழமையான நம்பிக்கையாகவோ ஒரு வழிபாட்டு முறையாகவோ நமக்கு வழங்கிச் செல்லவில்லை.  “பௌத்ததன்மம் உன்பூட்டன் எழுதி வைத்திருப்பினும் உன் பாட்டன் எழுதி வைத்திருப்பினும் அவற்றை யுன் விசாரனையிலும் அனுபவத்திலும் உசாவிப்பார். அவை மெய்யாயதென்று தெளிந்து உமக்கும் உமது சந்ததியோருக்கும் உன் கிராமவாசிகளுக்கும் உன் தேசத்தாருக்கும் சுகமளிக்கக்கூடியதாயின் அவற்றை நம்பு. உன் விசாரணைக்கும் உன் அநுபவத்திற்கும் பயனற்றதாயின் விட்டுவிடுமென்று கூறுவதாகும். அது கண்டே அவற்றிற்கு புத்ததன்மமென்றும் மெய்யறமென்றும் வகுத்துள்ளார்கள். மற்றைய மதத்தோர் அவர்களுக்குள் எழுதி வைத்திருப்பதையும் சொல்வதையும் நம்பி நடப்பதே இயல்பும், மதப்பிடிவாதமே செயலுமாக நிற்பர். (தமிழன், 12-11-1913)

இந்த வரலாற்று மறு உருவாக்கம் விடுதலைக் கருத்தியலின் ஆற்றல் வாய்ந்த அடிப்படையாக  அவரிடம் அமைந்திருந்தது. இந்திய வரலாற்றை மாற்ற இந்தியாவின் தொன்மைகளில் ஒன்றான பௌத்தத்தையே மீளுருவாக்கம் செய்த அயோத்திதாசரின் பெருங்கண்டுபிடிப்பை அண்ணல் அம்பேத்கர் முழுமையாக ஆய்வு செய்து பின்னாளில் உறுதிப்படுத்த முடிந்ததென்றால் அதற்குக் காரணம் அயோத்திதாசர் நிகழ்த்தியது ஒரு அறப்புரட்சி.

இந்தப் புரட்சி ஒடுக்கப்பட்ட மக்களின் உளவியலை மாற்றி தன்னுரிமை கொண்ட, தன்மதிப்பு கொண்ட போராளிகளாக மாற்றக்கூடிய ஆற்றலுடையது. ஒடுக்கப்பட்ட மக்கள் தம் மீது சுமத்தப்பட்ட அடையாளத்தை உதறியெறிந்துவிட்டு புதிய அடையாளத்தை பெறுவதன் வழியாக நிகழும் விடுதலையே முதல் கட்ட விடுதலை, இந்த அடையாளத்தை தன் அறிவின் வழி உருவாக்கியவர்தான் பேரறிஞர் அயோத்திதாச கவிராஜ பண்டிதர்.

அவர் ஒரு நூற்றாண்டுக்கு முன் கூறிச் சென்ற புரட்சிகரமான கருத்துக்களை, வரலாற்றுக் கண்டுபிடிப்புகளை இன்றுதான் உலக அறிஞர்கள் மெல்ல மெல்ல ஆய்ந்தும் ஆவணங்கள் தேடியும் நிருபித்து வருகின்றர். அவரது கருத்துக்கள் ஒடுக்கப்பட்ட மக்களை விடுவிப்பதற்கான செயல்திட்டங்கள் மட்டுமில்லை, இன்றைய பிராமண மைய, இந்துத்துவ திரிபுவாத அரசியலுக்கு எதிரான வலிமையான போராட்ட முறையாகவும் அமைந்துள்ளவை. இவற்றைப் பற்றித் தொடர்ந்து நாம் உரையாட இருக்கிறோம்.

அயோத்திதாசர் தொடங்கி வைத்த புரட்சியின் பெருமதியைப்  புரிந்து கொள்ள கருப்பின மக்களின் விடுதலைப் போராளியும்  இன்றைய பின்காலனியச் சிந்தனைகளின் முன்னோடியுமான பிரான்ஸ் பானோன் (1925-1961) அடிமைப் படுத்தப்பட்டோரின் உளவியலில் நிகழவேண்டிய மாற்றம் பற்றிக்கருப்புத் தோலும் வெள்ளை முகமூடிகளும் (1952) என்ற நூலில் கூறும் ஒரு கருத்தை இங்கு நினைவு கொள்ளலாம்:

“உலகின் ஒவ்வொரு பகுதியிலும் தேடுதல் கொண்ட மனிதர்கள் இருக்கிறார்கள். நான் வரலாற்றில் அடைபட்ட கைதி அல்லன். வரலாற்றின் சிறைச்சாலையில் நான் எனது வாழ்வின் விதி பற்றிய அர்த்தத்தைத் தேடக்கூடாது. எனது வாழ்க்கையில் புதியவற்றைக் கண்டறிந்து அறிமுகப்படுத்திக் கொள்வதில்தான் உண்மையான எனது முன்னோக்கிய பாய்ச்சல் இருக்கிறது என்பதை எனக்கு நானே ஓயாமல் நினைவூட்டிக் கொண்டே இருக்க வேண்டும். நான் கடந்து செல்லும் நிலப்பகுதிகளினூடாக முடிவற்று என்னை நானே புதிது புதிதாக உருவாக்கிக் கொள்கிறேன். நான் என் வாழ்வின் ஒரு பகுதியாக இருக்கிறேன் அதனைக் கடந்தும் செல்கிறேன். என் முன்னோர்களை மனித விழுமியமற்றவர்களாக ஆக்கிவைத்திருந்த அடிமைச் சமூகத்தின் அடிமையல்லன் நான்.”

                                                (அயோத்திதாசரின் அறப்புரட்சி தொடரும்)

நமது தமிழ்மண் ப-8 நமது தமிழ்மண் ப-9 நமது தமிழ்மண் ப-10 நமது தமிழ்மண் ப-11

 

 

அம்பேத்கர் கண்டெடுத்த நவீன இந்தியா -பிரேம்

அம்பேத்கர் கண்டெடுத்த நவீன இந்தியா

-பிரேம்

“இந்தியாவில் சமூகச் சீர்த்திருத்தத்திற்கான பாதை விண்ணுலகத்தை அடைவதற்கான பாதை போன்று பல இடர்பாடுகளால் நிரம்பியுள்ளது. இந்தியச் சமூகச் சீர்திருத்தம் குறைவான ஆதரவாளர்களையும் அதிகமான மறுப்பாளர்களையும் பெற்றுள்ளது. மறுப்பாளர்கள் இரண்டு பிரிவுகளாக உள்ளனர், ஒரு பிரிவினர் அரசியல்  சீர்திருத்தம் பேசுபவர்கள் மற்ற பிரிவினர் பொதுஉடைமைக் கொள்கை கொண்டவர்கள்.”

“அய்ரோப்பியச் சமூகங்களின் அரசியல் விடுதலைக்கு லூதர் தொடங்கிய சமயச் சீர்த்திருத்தம் முன்னோடியாக அமைந்தது. இங்கிலாந்தின் தூய கிறித்துவ இயக்கம் அரசியல் விடுதலைக்கு முன்னோடியாக அமைந்தது, அது புதிய உலகத்தைக் கண்டறிந்தது. அது அமெரிக்கச் சுதந்திரப்போரை வெற்றியடையச் செய்து ஒரு சமய இயக்கமாக உருவானது. இஸ்லாமிய அரசுகளின் உருவாக்கத்திலும் இதுவே நிகழ்ந்தது. அராபியர்கள் ஒரு அரசியல் சக்தியாக உருவாகும் முன்பு முகம்மது நபியால் தொடங்கப்பட்ட முழுமையான ஒரு சமயப்புரட்சி அங்கு நடந்தது. இந்திய வரலாற்றிலும் கூட இதற்குச் சான்று உள்ளது.  புத்தரின் சமூக, சமயப் புரட்சிக்குப் பிறகுதான் சந்திரகுப்தன் தொடங்கிய அரசியல் புரட்சி நிகழ்ந்தது. மகாராஷ்டிரத்தின் சமயப் பணியாளர்கள் முன்னெடுத்த சமூக-சமயச் சீர்த்திருத்தம்தான் ஷிவாஜி தலைமையிலான அரசியல் புரட்சிக்கு முன்னோடியாக  அமைந்தது. சீக்கியர்களின் அரசியல் புரட்சிக்கு குரு நானக் தொடங்கிய சமய, சமூகப் புரட்சியே அடிப்படையாக அமைந்தது. இதற்கு மேலும் உதாரணம் தேவையில்லை. மக்களின்  அரசியல் விடுதலை அவர்களின் அறிவிலும் ஆன்மாவிலும் நிகழும் விடுதலையில்தான் தொடங்குகிறது என்பதற்கு இவையே போதுமான சான்றுகளாக உள்ளன.”  (சாதியழிப்பு  நூலில் அண்ணல் அம்பேத்கர்)

கடந்தகால உலகின் அடிப்படைகளை விளக்கி அவற்றை மாற்றுவதற்கான வழிமுறைகளையும் கோட்பாடுகளையும் உருவாக்கித் தந்த சிந்தனையாளர்களை நாம் நவீனச் சிந்தனையாளர்கள் என்று கொண்டாடுகிறோம். அவர்களைத் தொடர்ந்து கற்று அவர்களின் சிந்தனைகள் மற்றும் செயல்திட்டங்களை நடைமுறைப் படுத்துவதையே நம் காலத்திற்கான அரசியலாக ஏற்றுக் கொள்கிறோம். அவர்கள் கண்டறிந்து விளக்கிய அறங்களை ஏற்று நம் வாழ்வியலாக அவற்றை மாற்றிக் கொள்கிறோம். அதற்குத் தடைகள் வரும்பொழுது அவற்றை நீக்கப் போராடுகிறோம். நம்மை அறிந்து கொள்ளவும் உலகையும் வாழ்வையும் புரிந்து கொள்ளவும் அச்சிந்தனையாளர்களே ஆசான்களாக, அறிவூட்டும் வழிகாட்டிகளாக அமைந்து வரலாற்று உருவங்களாக மாறுகின்றனர்.  நம் காலத்தின் வாழ்வை, சமூகத்தை, அரசியலை, பண்பாடு மற்றும் கருத்தியல்களை இவ்வாறான பேராசான்களின் கருத்தியல் கொண்டே நாம் அறிந்து கொள்ளவும் அளவிடவும் முடியும்.

இந்த வகையான வழிகாட்டிகள் நவீன காலத்திற்கு முன்பும் உருவாகி மக்களையும் சமூகங்களையும் மாற்றியமைத்து புதிய வாழ்வியலை  போதித்திருக்கிறார்கள். அவர்கள் சமயத் தலைவர்களாகவும், இறைத் தூதர்களாகவும் சில இடங்களில் வழிபடத் தகுந்த புனிதர்களாகவும்  மக்களால் மாற்றப்பட்டுள்ளனர். புத்தர், மகாவீரர், இயேசு கிறிஸ்து, முகம்மது நபி போன்ற வரலாற்று உருவகங்கள் இதற்குச் சான்றுகள். ஆனால் நவீன அறிவு, நவீன வாழ்வியல், இறைத்தூதர்கள் மற்றும் புனிதர்களை ஏற்பதில்லை. நம் காலத்தின் சிந்தனையாளர்கள் நமக்குத் தலைவர்களாக, ஆசான்களாக, வழிகாட்டிகளாக மட்டுமே இருக்க இயலும். ஏனெனில் நவீன அறிவும் வாழ்வியலும் மக்கள் மய்யமானது, பகுத்தறிவு, சமத்துவம், சமஉரிமை, சுதந்திரம், தன்மதிப்பு என்பவற்றை அடிப்படையாகக் கொண்டது. நம் வழிபாட்டு உணர்வு, பெருமதிப்பு,  வியப்புணர்வு அனைத்தையும் கடந்து நவீன காலத்தின் அறிஞர்கள் தலைவர்களாக, ஆசான்களாக, வழிகாட்டிகளாக மட்டுமே நம்முடன்  என்றும் இருப்பார்கள். அவ்வகையில் கார்ல் மார்க்ஸ் (1818-1883) மற்றும் அண்ணல் அம்பேத்கர் (1891-1956) என இரு நவீனப் பேராசான்கள் நமக்கு வாய்த்துள்ளனர்.

கௌதம புத்தரையும் கார்ல் மார்க்ஸையும் ஒப்பிடும் போது அண்ணல் அம்பேத்கர் “மார்க்ஸையும் புத்தரையும் ஒரே தளத்தில் வைத்து ஆய்வு செய்வதை மார்க்சியர்கள் நகைப்புக் குரியதாக கருத இடமுண்டு. மார்க்ஸ் மிக நவீனமான ஒருவர் புத்தர் மிகத்  தொன்மையானவர்! மார்க்சுடன் ஒப்பிடும் பொழுது புத்தர் வெறும் ஒரு புராதனச் சிந்தனையாளர்தான் என மார்க்சியர்கள்  சொல்லக்கூடும்.” (புத்தரா கார்ல் மார்க்ஸா) என ஒரு எச்சரிக்கை அறிவிப்பு செய்வார். ஆனால் அந்த வகையான அறிவிப்பு எதுவும் அம்பேத்கரையும்  மார்க்ஸையும் இணைத்தும் ஒப்பிட்டும் அறியவும் ஆய்வுசெய்யவும் தேவைப்படாது. ஏனெனில் அம்பேத்கர், மார்க்ஸ் இருவரும் மிக மிக நவீனமானவர்கள், மக்கள் அரசியல், அனைவருக்குமான விடுதலை, அறிவியல் அணுகுமுறை என அனைத்திலும் இன்றைய உலகச் சிந்தனையாளர்கள் எவரை விடவும் முன்னோக்கிய பார்வையைக் கொண்டவர்கள். அறிவின் மீதான பற்று, அனைத்தையும் மக்கள் மற்றும் மனித சமத்துவம் என்பதைக் கொண்டு அளவிடும் ஆற்றல், விடுதலையைத் தவிர வேறு எதனையும் வழிகாட்டு நெறியாகக் கொள்ளாத பிடிவாதம் என ஒவ்வொன்றிலும்  இருவரும் ஒருவருக்கு ஒருவர் போட்டியாக நிற்பவர்கள்.  இவர்கள் இருவரின் வாழ்வும் அறிவைத் தேடும் அதீத வேட்கையை அடிப்படையாகக் கொண்டது, அதனைவிட அவ்வறிவை மக்களின் விடுதலைக் கானதாக மாற்றும் போராட்டத்தை முன்னிலைப்படுத்தியது.

மார்க்சையும் அம்பேத்கரையும் ஒப்பிடும் பொழுது முதலில் நமக்கு வேறுபட்டுத் தெரியவருவது அவர்கள் இருவரின் சமூக, வர்க்கப் பின்னணி. மார்க்ஸ் அறிவின் நெடிய மரபை உரிமை கொண்டாடும் ஒரு இனத்தின் (யூத) பின்னணி கொண்டவர், கல்வியும் ஆய்வும் அவருக்கு மரபான உரிமையாக அமைந்தவை. தன் அறிவை உலகை மாற்றும் கருவியாக உருவாக்க முனைந்து அதற்காக வறுமையையும் துயரத்தையும் ஏற்றுக் கொண்டது மார்க்ஸின் தன்னீகையாக அமைந்தது. அம்பேத்கரின் வாழ்க்கையோ அதற்கு முற்றிலும் மாறான பின்னணி கொண்டது.  அடிமைநிலை, அவமதிப்பு, உரிமை யின்மை என்பனவற்றால்  நிரம்பியது. தன் வாழ்வை மட்டும் மாற்றிக் கொள்வதற்கான வாய்ப்புகள்  அவருக்கு அமைந்தபோதும் அவற்றை விலக்கிவிட்டு தன் மக்கள் அனைவருக்குமான விடுதலைக்காக தன் அறிவுத்திறன், போராட்ட வலிமை அனைத்தையும் அளித்த அவரது தன்னீகம்  ஆன்மிகத் தன்மை கொண்டது. இந்த வகையான போராட்டமும் தன்னீகமும் இணைந்த அறிவுச் செயல்பாட்டையே அம்பேத்கர் அரசியலில் ஆன்மிகம் என்று குறிப்பிடுகிறார். அவரது அறிவாற்றல், சிந்தனைத் திறன், ஆய்வுத்திறன்,  நினைவாற்றல், எழுத்து வலிமை இந்தியாவில் இதற்கு முன் யாருக்கும் அமையாதவை. அதனைவிட யாருக்கும் அஞ்சாமல் தான் கண்ட உண்மையை எடுத்துரைக்கும் துணிவு.

இந்தியாவில் சாதி இந்துக்களால் அதிக அளவு வெறுக்கப்பட்ட, எதிர்க்கப்பட்ட ஒரு தலைவராக, கருத்தியலாளராக அவர் இருந்தார். ஆனால் அவர்  யாருக்காகவும் தன் அறிவின் கடுமையை, உரிமைப் போராட்டத்தை விட்டுக் கொடுக்கவோ மென்மைப்படுத்தவோ முன்வரவில்லை. தன் மக்களால், தன் நண்பர்களால் கைவிடப்பட்ட பொழுதும் தன் அரசியல் முன்னெடுப்புகள் தோல்வியடைந்த போதும், உடன் பயணிகளான எம்.சி.ராஜா போன்றவர்கள் விலகிச் சென்ற போதும், சாதிய ஊடகங்கள் தன் மீது அவதூறுகளை, இழிமொழிகளை அள்ளி வீசிய போதும் அவர் தயக்கமின்றி முன்னோக்கிச் சென்று கொண்டே இருந்தார்.  மார்க்ஸ், அம்பேத்கர் இருவரிடமும் காணப்படும் இந்த பிடிவாதமான அறிவுகாண்முறை  பேரறிவு என்பதற்கு முழுமையான எடுத்துக்காட்டாக அமைவது.

மார்க்ஸ், அம்பேத்கர் இருவரின் வாழ்வையும், பணியையும், எழுத்தையும் முழுமையாக வாசித்து அறியும் எவருக்கும் முதலில் தோன்றுவது வியப்பு, பின் அறிவைக் கண்டடைந்த ஆறுதல். வரலாறு, அரசியல், சமூகவியல், தத்துவம், சமய ஆய்வு, சமூகஉளவியல் என அனைத்தைப் பற்றியும் ஒரே இடத்தில் அறியக் கிடைத்து விட்ட ஆறுதல்தான் அது. இந்த ஆறுதலுக்குப் பின் உருவாவது மிகப்பெரிய ஆதங்கம், வருத்தம். மார்க்ஸ் உலக வரலாற்றில் என்றும் மறைக்கவும் மறுக்கவும் முடியாத விடுதலை உருவகமாக மாறிவிட்ட நிலையில் இந்திய அளவில் கூட அம்பேத்கரின் வரலாற்று, கருத்தியல் பங்களிப்பு புரிந்து கொள்ளப்படவில்லை என்பது பற்றிய ஆதங்கமாக அது இருக்கும். ஆனால் அதனைக் கடந்து இன்று உலக அளவிலான மாற்றுச் சிந்தனையாளர்கள், விடுதலை அரசியல் பணியாளர்கள் அம்பேத்கரை ஆழ்ந்து படிக்கத் தொடங்கியுள்ளனர். பின்காலனியச் சிந்தனையிலும் பெண்ணிய இயக்கங்களிலும் அடித்தள மக்கள் அரசியலிலும் இன்று அம்பேத்கரின் ஆய்வுகள் அடிப்படையான தரவுகளாக மாறியுள்ளன.

மாற்று அரசியல் தளத்தில் அம்பேத்கர் ஒரு குறியீடாக மாறியுள்ளதற்குப் பல காரணங்கள் இருந்தாலும் மார்க்சுக்கு அமையாத கூடுதலான மூன்று வரலாற்றுப் பணிகள் அம்பேத்கருக்கு அளிக்கப்பட்டன. முதல் பணி தன் மக்களை புதையுண்ட வாழ்வில் இருந்து மீட்டு விடுதலையை நோக்கி அழைத்துச் செல்லுதல். இரண்டாவது பணி இந்தியாவிற்கான புதிய சமூகம், நவீனத் தேசியம் எவ்வாறு அமைய வேண்டும் என்பதைத் திட்டமிட்டு அளித்தல். இதனைக் கடந்து மூன்றாவதாக அம்பேத்கர் ஏற்றுக் கொண்ட பணி நவீன தேசியத்திற்கான புதிய கருத்தியலை கட்டமைப்பதுடன் ஒரு தேசத்தை அக்கருத்தியல் அடிப்படையில் வடிவமைக்கும் பணி, இது இந்தியா என்னும் பன்மைப் பட்ட சமூகத்தை நவீனமாக்கும் சிக்கலான பணி.  ஆம் அது மிகச் சிக்கலான ஒரு பணிதான் ஏனெனில் நவீனமடைய விரும்பாத மக்களைக் கொண்ட, சமத்துவத்தை வெறுக்கும் பல சாதிகளைக் கொண்ட ஒரு நாட்டை நவீனமடையச் செய்வது, அதற்கான வழிகாட்டு நெறிகளை உருவாக்குவது எதனைவிடவும் கடுமையான ஒரு பணி.

அம்பேத்கர் இப்பணியை ஏற்றுக் கொண்டது 1946-இல் சட்ட அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட பொழுதுதான் என்று ஒரு பொதுப்பார்வையில் தோன்றக்கூடும். ஆனால் அவர் அந்தப் பணியைத் தன் பல்கலைக் கழக ஆய்வுக் காலத்திலேயே தொடங்கி விட்டார். இந்தியாவில் சாதிகள் : அவற்றின் செயல்முறை,  தொடக்கம் மற்றும் பெருக்கம் (1916) என்ற ஆய்வுக் கட்டுரையில் ஒன்றை நான் அழுத்தமாகச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் சாதி விதிமுறையை உருவாக்கியது மனு அல்ல, தனி ஒருவரால் அதனைச் செய்யவும் இயலாது. மனுவுக்கு முன்பே சாதி அமைப்பு இருந்தது, அதனை மனு நியாயப்படுத்தி தத்துவ வடிவம் தந்திருக்கிறான், நிச்சமாக இன்றுள்ள இந்து சமூக அமைப்பை மனு உருவாக்கவில்லை, அது இயலாத ஒன்று. அவனுடைய நூல் தற்போதுள்ள சாதி விதிகளை பட்டியலிட்டுக் காட்டுகிறது, சாதி தர்மத்தைப் போதிக்கிறது.” என்று சாதி மற்றும் தீண்டாமையின் வேர்களை அடையாளம் காட்டிய அம்பேத்கர் இந்தியாவில் அடிப்படையான அமைப்பு மாற்றத்தை உருவாக்காமல் சாதி மற்றும்  தீண்டாமை வன்கொடுமையை அழிக்க இயலாது என்பதை உணர்ந்தவராக இருந்தார்.

இந்தியாவை ஒரு தேசமாக, நவீனச் சமூகமாக மாற்ற அரசியல் விடுதலைக்கு முன் சமூக, சமய அமைப்பின் அடிப்படைகளை மாற்றியமைக்க வேண்டும் என்பதையும் அம்பேத்கர் கண்டறிந்தார், அதற்காகவே தன் வாழ்க்கையை அளித்தார். இந்தியாவில் சமூகச் சீர்திருத்தத்திற்கான பாதை பல இடர்பாடுகளைக் கொண்டது என்பதைத் தெளிவாக அறிந்திருந்தும் அதனை தன் வாழ்க்கையாக அமைத்துக் கொண்ட  அண்ணல்  இந்த தளத்தில்தான்  மார்க்சிடம் இருந்து வேறுபடுகிறார். இந்தியச் சமூகத்தை முழுமையாக ஆய்ந்து புரிந்து கொண்ட அம்பேத்கருக்கு யாருடைய வழிகாட்டுதலும் இன்றி தன் மக்களின் விடுதலையை உள்ளடக்கிய இந்திய விடுதலை பற்றித் தனியாகச் சிந்திக்க முடிந்தது. இந்தத் தனித்த பார்வை அம்பேத்கரை காங்கிரஸ், இந்துத்துவ அமைப்புகள், இந்திய கம்யூனிச இயக்கம், பிற்போக்கு சனாதனிகள் என அனைத்துப் பகுதியினரிடமிருந்தும் விலகியிருக்கச் செய்தது. அம்பேத்கரை ஒரு சாதித் தலைவராக பார்த்த இந்த அமைப்புகளும் கட்சிகளும் அவரது சமூகக் கோட்பாடுகளைப் புரிந்து கொள்ளவில்லை. அம்பேத்கரின் அரசியல், சமூக, பொருளாதாரக் கொள்கைத் திட்டங்கள்  இந்தியச் சமூகத்தை அடிப்படையிலிருந்து மாற்றியமைப்பதற்கான கோட்பாடுகளைக் கொண்டவை, பிராமண- உயர்சாதி ஆதிக்கத்தை உடைத்து உண்மையான மக்கள் அரசியலைக் கட்டுவதற்கான கருத்தியலைக் கொண்டவை என்பதை உணர்ந்த சாதிய-பிராமணிய அறிவுத்துறையினர் அண்ணலை அரசியலில் இருந்து நீக்கி வைப்பதையே தம் முழுநேரப் பணியாகக் கொண்டிருந்தனர்.

இந்தத் தடைகளைக் கடந்து அம்பேத்கர் தேசிய உருவாக்கத்தின் மைய சக்தியாகத் தன்னை மாற்றிக் கொண்டார்.  அரசியல் அமைப்புக்குழுவில் பங்கு, சட்ட அமைச்சர் பொறுப்பு, வரைவுக்குழுவின் தலைமைப் பொறுப்பு என்பவை அவரைத் தவிர அன்று வேறு யாராலும் கையாள முடியாத பெரும் பணிகள் என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். காந்தியின் பரிந்துரை, நேருவின் நவீன சிந்தனை என்பவை அம்பேத்கருக்கு அப்பொறுப்புகளை வழங்கின என்ற கதைகளில் சிறுபகுதி உண்மை இருக்கலாம். ஆனால் இந்தியாவின் ஐந்தில் ஒரு பங்காக அமைந்த ஒடுக்கப்பட்ட மக்களின் ஒற்றைக் குரலாக, மக்கள் அரசியலின் அறிவுக்களனாக இருபத்தைந்து ஆண்டுகள் இருந்துவரும் ஒரு சிந்தனையாளரை ஒதுக்கிவிட்டு ஒரு நவீன அரசியல் அமைப்பை யாரும் அமைத்துவிட இயலாது. அது மட்டுமின்றி அம்பேத்கருக்கு இணையான அரசியல், வரலாற்று, சமூக, சட்ட அறிவு கொண்ட மக்கள் சிந்தனையாளர், புரட்சிகர அறிவாளி எனச் சொல்ல வேறொருவர் அப்பொழுது இந்தியாவில் இல்லை.

நேருவின் நவீன-பகுத்தறிவுப் பயிற்சி அம்பேத்கரை ஒரளவு புரிந்து கொள்ள  உதவியாக இருந்தது, அத்துடன் அரசியல் அமைப்பை நவீனத் தன்மையுடையதாக மாற்ற அம்பேத்கரின் உதவி அவருக்குத் தேவைப்பட்டது. காந்திக்கு 1937-க்குப் பிறகு அம்பேத்கரின் மதிப்பும், அவர் முன்வைத்த கேள்விகளின் நியாயமும் புரியத் தொடங்கியிருந்தது. ஐந்து ஆண்டுகளில் இல்லை, ஐம்பது ஆண்டுகள் ஆனாலும் அரிஜன சேவா சங்கம் போன்ற அமைப்புகளால் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையைப் பெற்றுத்தர இயலாது என்பது அவருக்கு தெரியத் தொடங்கியிருந்தது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் அம்பேத்கருக்கும் காந்தி அளித்த உறுதி மொழி மறக்கப்பட்ட ஒன்றாக மாறியிருந்தது. ஆனால் அம்பேத்கரின் அரசியல் யாராலும் மறுக்க இயலாத இடத்தை அடைந்திருந்தது. அவர் தன் மக்களை முழுமையான அரசியல் சக்தியாகத் திரட்ட இயலாத நிலை இருந்தாலும் அவரது அரசியல்தான் விடுதலை அரசியலின் அடிப்படையாக அமைந்திருக்கிறது என்பதை சட்டமும், அரசியல் வரலாறும் படித்த காந்தி, நேரு போன்றவர்களால்   ஒரளவு புரிந்து கொள்ள முடிந்தது.

அம்பேத்கரின் பங்களிப்பு இந்திய அரசியலாக்கத்தில் மிகப்பெரும் முக்கியத்துவமுடையது என்பதை அவரது ஒரு பேச்சிலிருந்து நாம் புரிந்து கொள்ளலாம்: “நண்பர்களே, இந்தப் பெரும் தேசத்தின் சமூக, அரசியல், பொருளாதார அமைப்பின்  எதிர்கால வளர்ச்சி, மற்றும் அது அடைய இருக்கும் வடிவம் பற்றி எனக்குச் சிறு ஐயமும் இல்லை. இன்று நாம் அரசியல், சமூக, பொருளாதார அடிப்படையில் பாகுபட்டுக் கிடக்கிறோம் என்பதை நான் அறிவேன். நாம் முரண்பட்டு மோதிக்கொள்ளும் பலவேறு குழுக்களாகவே இன்று இருக்கிறோம், ஏன் நானே அப்படியான ஒரு முரண்படும் குழுவின் தலைவன்தான் என்பதை சொல்லிக்கொள்ளவும் நான் தயங்கவில்லை. நண்பர்களே இவற்றையெல்லாம் கடந்து, காலமும் சூழலும் அமையும்போது இந்த நாடு ஒன்றுபட்டதாக உருவாவதை உலகில் யாராலும் தடுக்க முடியாது  என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். (மகிழ்ச்சியொலி) சாதி, சமயப் பிரிவுகள்  எல்லாம் நமக்குள் இருந்தாலும் ஒரு வகையில் நாம் ஒன்று பட்ட தேசமக்கள் என்பதைச் சொல்லிக்கொள்ள நான் சிறிதும் தயங்கவில்லை. (மகிழ்ச்சியொலி) (அம்பேத்கரின் பாராளுமன்ற உரை: டிசம்பர்17,1946). எல்லாவித அடக்குமுறைக்கும் பிறகு பலவித ஏமாற்றத்திற்கும் பிறகு மன்னிப்பு வழங்கி  நம்பிக்கை தந்து அதற்காகத் தன் வாழ்வை அளித்து ஆசி வழங்கிய அண்ணலின் இந்தக் குரல்தான் இந்திய நவீன அரசியலின் தொடக்கம். “மறப்போம் மன்னிப்போம்” என்ற காங்கிரஸ் தலைவர்களின் வாக்குதான் அம்பேத்கருக்கு பாராளுமன்றத்தில் இடமளித்தது எனச் சொல்லும் அறிவீனர்கள் இந்திய அரசியலைத் தம் தோட்டத்து விருந்து என நினைத்துக் கொள்பவர்கள்தான்.

இந்திய அரசியலில் அம்பேத்கரின் இந்தக் குரல் தேசிய உருவாக்கத்தின் அடிப்படை. தன் மக்களின் விடுதலையையும் உள்ளடக்கிய ஒரு சுதந்திர நாடு பற்றிய கனவுடன் அம்பேத்கர் தன் அரசியலமைப்புப் பணியைத் தொடங்குகிறார். “யாருக்கும் ஐயம் தேவையில்லை. இறுதியான எதிர்காலம் அல்ல நம்முன் உள்ள இடர்பாடு.  இன்று பல்வகைப்பட்ட பிரிவாக உள்ள மக்கள் குழுக்களை பொதுவான கருத்தின் அடிப்படையில் ஒருங்கிணைப்பு நோக்கி எப்படி நகர்த்துவது எப்படியென்பதுதான் நமக்கு முன் உள்ள இடர்பாடு.  நமக்கு முன் உள்ள சிக்கல் இறுதி இலக்கு பற்றியதல்ல, எப்படித் தொடங்குவது என்பதில்தான் உள்ளது.” (மேலது).

அம்பேத்கர் தன் நாடு மற்றும் தன் மக்கள் இரண்டிற்குமான புதிய தொடக்கம் பற்றிச் சிந்தித்தவர், அதனால்தான் பொதுக் குடிமைச்சட்டம்  (இந்து குடும்பச் சட்டம்) போன்ற ஒரு சட்டத்தை இந்தியச் சீர்த்திருத்தத்தின் ஒரு தொடக்கமாக அவர் காண்கிறார். பெண்களுக்கான சொத்துரிமை, பெண்கள் தனித்து வாழ்வதற்கான உரிமை, பெண்கள் மணவிலக்கு பெறுவதற்கான உரிமை, சாதிப்பிரிவு கடந்த மண உறவுக்கான உரிமை, சாதிப்பாகுபாடு இன்றி குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்கும் சட்ட உரிமை, ஆண்கள் பலமணம் செய்தலுக்குத் தடை என்பன அச்சட்ட வரைவில் முதன்மையான கூறுகள். பெண்ணுரிமை, சாதிக்கலப்பு என்பவை இவற்றின் உள்நோக்கம் என்பதால் இந்து-சனாதன சக்திகள் இவற்றைக் கடுமையாக எதிர்த்ததும், இச்சட்ட வரைவு விலக்கிக்கொள்ளப்பட்டதும்,  அண்ணல் அமைச்சரவையில் இருந்து விலகியதும் நாம் அறிந்தவை. இவற்றைக் கடந்து நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது: 1916-இல்  இந்தியாவில் சாதிகள் : அவற்றின் செயல்முறை, தொடக்கம் மற்றும் பெருக்கம் என்ற தன் ஆய்வில் குடும்பம், பெண்களின் மீதான கட்டுப்பாடு, உட்சாதித் திருமணம் என்பவற்றிற்கும் இந்தியச் சாதி அமைப்பிற்கும் உள்ள உறவை விளக்கிய அம்பேத்கர் இந்தியச் சமூகத்தை நவீனமடைந்த சமூகமாக மாற்றுவதற்கான தொடக்கமாக இச்சட்டத் திருத்தத்தைக் கண்டார்.  “மக்களின் அரசியல் விடுதலை அவர்களின் அறிவிலும் ஆன்மாவிலும் நிகழும் விடுதலையில்தான் தொடங்குகிறது” என்பதை அறிவித்த அம்பேத்கர் இந்திய மக்கள் அனைவருக்கமான விடுதலை பற்றியே சிந்தித்தார். அந்த விடுதலை தன் மக்களின் விடுதலையில்தான் தொடங்குகிறது என்பதுதான் அவர் உலகுக்கு அறிவித்த செய்தி.

தன்னை ஓர் உலகக் குடிமகன் (I am a citizen of the world) என அறிவித்த கார்ல் மார்க்சும் “எனக்குத் தாய்நாடு இல்லை” (I have no homeland: எனக்கென ஒரு நாடு இல்லை) என காந்தியின் முன் அறிவித்த அம்பேத்கரும் இணைந்து கூறும் செய்தி இது “ஆகக்கீழான ஒடுக்குதலுக்கு உள்ளாகும் மக்களின் விடுதலையில்தான் மனிதர்கள் அனைவருக்குமான விடுதலை தொடங்குகிறது. இந்த விடுதலையை கொண்டுவரக் கூடிவர்கள் அந்த ஒடுக்குதலுக்கு உள்ளானவர்கள்தான்.”  இந்த அறிவிப்பு வெறும் உணர்ச்சிவயமானதோ, நல்லெண்ண அடிப்படையில் உருவானதோ, அந்தராத்மாவின் ஒலியோ அல்ல உலக வரலாற்றின் மிக அரிதான இரு பேரறிவாளர்களின் ஆய்வின் வழி கண்டறியப்பட்ட உண்மை.

(நமது தமிழ்மண்-ஏப்ரல் 2015)

அம்பேத்கர் கண்டெடுத்த நவீன இந்தியா

உரையாடல் : 11 சூழலியல் அரசியல் அனைத்திற்கும் அடிப்படை-பிரேம்

உரையாடல் : 11 சூழலியல் அரசியல் அனைத்திற்கும் அடிப்படை

கேள்வி:

சுற்றுச்சூழல் சீர்கேடு அனைத்துப் பிரச்சினைகளுடனும் தொடர்புடையதாக இருப்பதோடு மட்டுமல்லாமல் இந்தியச் சூழலில் கிராமப்புற மக்கள், பெண்கள் மற்றும் தலித்துக்களுக்கு முதன்மையான பாதிப்பை ஏற்படுத்தும் நிலையிலும் உள்ளதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? இது குறித்து உங்கள் மாற்று அரசியல் பார்வை என்ன?

[ராஜகாந்தன், அசோக்ராஜ், கருணாகரன்]

 

பதில்:

பிரேம்

சுற்றுச்சூழல் அரசியலின் தளத்தில் இன்றைய அனைத்து மனிதத் துன்பியல்களையும் உள்ளூடி ஆய்வு செய்யலாம். ஏனெனில் மனிதமையத் தன்மையை மறுத்து உயிர் மண்டலம் அனைத்துக்குமான வாழ்வுரிமை பற்றிய புரிதல் கொண்ட கருத்தியல் இது. இயற்கையைப் பாதுகாத்து மனிதர்கள் நல்வாழ்வு பெறலாம் என்ற தன்னலம் சார்ந்த புரிதல், இயற்கையின் பகுதியாக இருந்து இயற்கையிடம் பெற்று வாழலாம் என்ற ஒப்படைப்பு,  உலக உயிர்கள் அனைத்திற்கும் இந்தப் புவிமண்டலத்தில் பங்கு உண்டு  அதனைக் கட்டுப்படுத்தும் அதிகாரம், அதன் சமநிலையைக் குலைக்கும் உரிமை மனிதர்களுக்கு இல்லை என்னும் அறம் சார்ந்த நிலைப்பாடு எனப் பலகட்டங்களாக சூழலரசியல் உள்ளது. இவற்றில் ஏதாவதொன்றின் வழி நாம்  மாற்று வாழ்வியல் நோக்கிச் செல்ல இயலும்.

இந்தியா போன்ற நாடுகளில் சூழலரசியல், பசுமை அரசியல், புவிசார் அரசியல் என்ற தளத்தில் மாபெரும் மக்கள் இயக்கங்களை நடத்த முடியும். முதலாளித்துவ எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு, இனமேலாதிக்க எதிர்ப்பு, அறிவதிகார மறுப்பு, பெண்ணியச் சமத்துவம், பெருந்தேசிய மறுப்பு, அடையாள அரசியல் எனப் பல அரசியல் உணர்வு நிலைகளுக்கு சூழலரசியல் களமாக அமையக்கூடியது.

நவீனத்துவம், பெருந்தொழில் ஆதிக்கம், உலகமய வல்லதிகாரம் என்ற பல தளங்களில் நாம் இயற்கையின் மீது போர் தொடுத்திருக்கிறோம். வளர்ச்சி, அறிவியல், பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம், முன்னேற்றம், இன்புறும் வாழ்வு என்ற பெயர்களில் உயிர் மண்டலத்தின் மீது பயங்கரவாதத் தாக்குதலைச் (Eco-terrorism) செய்து கொண்டிருக்கிறோம். சூழலரசியலை பெண்ணியம் மிகச்சரியாக விளக்குகிறது, எல்லையற்ற அதிகாரத்திற்கான முனைப்புதான் வளர்ச்சிப் பொருளாதாரத்தின் தொடக்கம். எளிய மனிதர்களுக்கும், எளிய உயிர்களுக்கும் வாழ இடமில்லை என்ற நிலையை உருவாக்கிவிட்டு, நாம் வேறு வகையான மாற்று  அரசியல் பற்றிப் பேசுவதில் பயனில்லை.

சூழலைப் பேணுதல், இயற்கையைக் காத்தல் என்னும் பார்வைகளும் கோட்பாடுகளும் அவை  சார்ந்த அரசியலும் மனித வரலாற்றில் முற்றிலும் புதிதானவை. இதற்கு முன் அப்படியொரு மாற்றுப் பார்வை இருக்க வாய்ப்போ தேவையோ இல்லை, ஏனெனில் இயற்கையின் மீது மனிதர் நிகழ்த்திய எந்த ஒரு இடையூறும் நீடித்த பெரும் விளைவுகளை உருவாக்க இயலாதவைகளாக இருந்தன. இயற்கைச் சூழல் தன்னைப் புதுப்பித்துக் கொள்ளும் தன்மை கொண்டது என்பதால் அது இன்றுள்ள பேரழிவு நிலையை அடையவில்லை. இயற்கையின் பகுதியாக இருந்தபடி மனிதர்கள் தங்களுக்கானதைப் பெற்றுக் கொண்டதும் பெற முயற்சி செய்ததும் இன்றுள்ளது போன்ற கொடும் விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை அல்ல. இருபதாம்  நூற்றாண்டின் இயந்திர மயமாக்கம், நகர் மயமாக்கம் என்ற புதிய உற்பத்தி-நுகர்வு முறைகளின் விளைவு மனிதர்கள் எண்ணிப்பார்க்க இயலாத நெடிய துயரங்களைக் கொண்டு சேர்த்துள்ளது. நவீன அறிவியல் போர்த்தொழில் நுட்பங்களை  மையமாக வைத்துச் செயல்படுவது. உயர் தொழில் நுட்பங்கள் அனைத்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட மனிதர்கள் சிலரைத் தவிர மற்றவர்களின் வாழ்வுரிமையை அழிக்கக்கூடியது. இன்றைய உலக மயமான உற்பத்தி முறை மனித இனங்களின்  மண், நீர், காடு, காற்று அனைத்தின் மீதும் நிகழ்த்தப்படும் போராகவே உள்ளது, இது  இனப்படுகொலையின் இன்னொரு வடிவம்தான். இந்த உண்மை வெகுமக்கள் உணர்விலும் அறிவிலும் முழுமையாக பதிவாகாத நிலைதான் சூழலரசியலை விளிம்பு நிலை அரசியலாக வைத்துள்ளது. மற்ற அரசியல், சமூக நிகழ்வுகளைப் போல இன்றி புவிச்சூழல் மற்றும் இயற்கைச் சமநிலையில் நிகழும் கேடுகளில் பார்வையில் படக்கூடியவற்றைவிட  பார்வையில் படாதவை மிக மிக அதிகம். மக்களிடம் இருந்து மறைக்கப் பட்ட உண்மைகள்தான் தொழில்நுட்ப ஏகாதிபத்தியத்தின் முதல் கட்ட வலிமை. சூழலரசியல்   தற்போது இந்த மறைக்கப்ட்ட உண்மைகளை அனைவருக்கும் கொண்டு  செல்லும் நிலையில்தான் செயல்பட்டுக் கொண்டு வருகிறது. திரிக்கப்பட்ட தகவல்கள், திட்ட மிட்டுப் பரப்பப்படும் பொய்கள், நுண் அளவில் தொடங்கி உலக அளவில் நிகழ்த்தப்படும் சதித்திட்டங்கள் அனைத்தையும் மக்கள் முன் புலப்படுத்தி இனியான மக்கள் அறிவியலை மக்களே தேர்ந்தெடுக்கும் நிலையை உருவாக்க நமக்கு உள்ள ஒரே வழி சூழலரசியல் மட்டும்தான்.

மரத்தையும், நீர்நிலையையும், காட்டையும் கடலையும் தெய்வம் என வணங்கி, மண்ணையும் காற்றையும் தெய்வம் எனப் போற்றி வாழ்வதுதான்  தொல்சமயப் புனித உணர்வு என்றால் நான்  பகுத்தறிவை உதறி விட்டு பக்திப் பண் பாடித் திரியும் அடியவனாக மகிழ்வோடு வாழ்ந்து முடிப்பேன். ஆனால் அது அப்படி எளிதாக அடையக் கூடிய நிலையல்ல… அதுதான் இன்றைய மக்கள் அரசியலின் தொடக்கம்,  அதுதான் வாழ்வுரிமைப்  போராட்டம், அதுதான் இன்றைய அழகியல்.

அம்பேத்கர் பௌத்தம் மொழிஅரசியல்-பிரேம்

அம்பேத்கர் பௌத்தம் மொழியரசியல் (பக்க வடிவில்)

 

அம்பேத்கர், பௌத்தம், மொழி அரசியல்

-பிரேம்

இந்தியப் பெருந்தேசிய அரசியலில் நிலவிவரும் பல்வேறு ஒடுக்குமுறைகளில் ஒன்று மொழி சார்ந்த ஒடுக்குமுறை. உலக அரசியலில் பெரும் ஒடுக்குமுறைகளுக்குக் காரணமாக அமைந்த இந்த மொழிசார்ந்த ஒடுக்குமுறை பிற ஒடுக்குமுறைகளிலிருந்து பலவழிகளில் வேறுபட்டது. இந்தியச் சமூகத்தின்  மற்ற ஒடுக்குமுறைகளான தீண்டாமை, சாதிப்படிநிலைகள், ஆணாதிக்கம், நிலவுடைமை என்பவை சமூகப் பொருளாதாரக் கட்டமைப்புகளில் நேரடியான விளைவுகளை ஏற்படுத்துவதால் அவை இன்றும் வெளிப்படையாகப் புலப்படக்கூடியனவாக உள்ளன.  இந்தப் பழமையான ஒடுக்குமுறைகளை நவீன அரசியலும், மக்கள் ஆட்சிமுறையும் கருத்தியல் அடிப்படையில் மறுக்கின்றன. ஆனால் இந்தியச் சமூகத்தில் இந்த ஒடுக்குமுறைகளை முழுமையாக நீக்குவதற்கானச் சட்டங்கள் இயற்றப்பட்ட அளவுக்கு நடைமுறைத் திட்டங்கள் உருவாக்கப்படவில்லை. நவீன அரசு, தேசியம் சார்ந்த அரசியல் இரண்டும் குடிமைச் சமூகங்களை, அடிப்படை மனித உரிமைகளை மையமாகக் கொண்டு கட்டப்பட்டவை, அதனால்தான் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் சமநீதி, சுதந்திரம், சமத்துவம், தனிமனித தன்மதிப்புடன் கூடிய சகோதரத்துவம் பற்றிய அக்கறைகள் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தியச் சமூகத்தின் பழமையான ஒடுக்குமுறைகள் அனைத்துமே நவீன சட்டங்கள் மற்றும் அரசியல் விதிகளின்படி பல்வேறு வடிவில் தடை செய்யப்பட்டவை, நீதியியல் அடிப்படையில் தண்டனைக்குரியவைகூட. ஆனால் இன்றும் இந்தியச் சமூகங்கள் சுதந்திரம், சமத்துவம், சமநீதி என்ற மதிப்பீடுகளை நடைமுறையில் ஏற்பனவாக இல்லை. அதனால் தேசிய மதிப்பீடுகள், மக்கள் ஆட்சித் தத்துவங்கள் என்னும் நவீனக் கருத்தியல்கள் இந்தியச் சமூகங்களில் செயலாற்றல் அற்றனவாகத்  தேங்கிக் கிடக்கின்றன. இந்தியச் சமூகங்கள் நவீன சமூகங்களாக மாறவேண்டுமெனில் சாதிப்படிநிலைகள் அற்ற, தீண்டாமையின் பருண்மையான மற்றும் நுண்மையான வன்கொடுமைகளை மறுத்த பண்பாட்டு மதிப்பீடுகள் உருவாக்கப்பட வேண்டும். இந்த மதிப்பீடுகள் சமய நம்பிக்கைகள், மரபான பற்றுகள் அனைத்தையும் கடந்த பொது அறத்தின் அடிப்படையில் கட்டப்படவேண்டும். இந்த மாற்றத்தையே அண்ணல் அம்பேத்கர்  ‘புதிய வாழ்வியல்’ என்று அடையாளம் காட்டினார். இந்தப் புதிய வாழ்வியலைக் கட்டமைக்க அரசியல், பொருளாதாரம், சமூகவியல், பண்பாடு என்ற அனைத்து அமைப்புகளிலும் மாற்றங்கள் நிகழ வேண்டுமென அம்பேத்கர் விளக்கியிருக்கிறார்.

அம்பேத்கர் தாம் வரையறுத்துக் காட்டிய நவீன இந்தியாவை உருவாக்குவதற்கான முயற்சிகளில் ஒன்றாகத்தான் அரசியல் வரைவுக் குழுவின் தலைமையை ஏற்றுக் கொள்கை சார்ந்த தம் பதிவுகளை அதில் இடம்பெறச் செய்தார். ஆனால் அண்ணல் விரும்பிய அடிப்படை மாற்றங்கள் நிகழ்வதற்கான அரசியல், பொருளாதார முன்னெடுப்புகள்  அவர் வாழ்நாளில் உருவாகாத சூழலில் அவர் தன் கவனத்தைப் பண்பாட்டுக் கட்டமைப்புகள் மீது குவித்தார். ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையில் தொடங்கி,  ஒன்றுபட்ட இந்தியத் தேசிய உருவாக்கம் வரை, தனிமனித விடுதலை தொடங்கி உலக அரசியல் விடுதலை வரை அம்பேத்கருக்குத் தெளிவான பார்வைகள் இருந்தன. ஆனால் இந்தியாவின் தேசிய அரசியல் ஒடுக்கப்பட்ட மக்களையும் அவர்களின் அரசியலையும் வெளியில் வைத்துப் பார்ப்பதைத் தொடர்ந்த பொழுது அம்பேத்கர் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான உறுதியான, தனித்த திட்டங்களை முன் வைத்தார். அதில் ஒன்றுதான் ஒடுக்கப்பட்ட மக்கள் இந்து மதத்திலிருந்து வெளியேறி பௌத்த நெறியைத் தழுவுதல்.

அரசியல் அதிகாரம், பொருளாதார உரிமைகள், சமூக விடுதலை அனைத்திற்கும் தொடக்கமாக அமைவது ஒடுக்கப்பட்ட மக்களிடம் நிகழவேண்டிய பண்பாட்டுப் புரட்சியே என்பதை அம்பேத்கர் தன் ஆழ்ந்த ஆய்வின் வழியாகவும் வரலாற்று அனுபவத்திலிருந்தும் தெளிவாக அறிந்தார். இந்தியாவின் இன்னொரு உலகமாக வெளியே வைக்கப்பட்டுள்ள ஒடுக்கப்பட்ட மக்கள் தம்மைப் பலப்படுத்திக் கொள்ளாதவரை தமக்கான விடுதலையை,  சமத்துவத்தை, அரசியலில் தமக்கான பங்கை பெறமுடியாது என்பதை தெளிவுபடுத்தவே கற்பி, போராடு, ஒன்றுசேர் (கற்பி, எழுச்சிகொள், ஒன்றுபடு / கற்பி, புரட்சி செய், ஒன்றிணை எனப் பல பொருள்களில்)  என்ற முப்பெரும் கொள்கைகளை அண்ணல் முன் வைத்தார். அறிவு பெறுதல், அடக்குமுறைக்கெதிராகப் போராடுதல்,  விடுதலைக்காக ஒன்றிணைதல் என்பதைத் தன்  உள்ளடக்கங்களில் ஒன்றாகக் கொண்ட இந்த மும்மை நெறி பௌத்தம் நோக்கிய அம்பேத்கரின் அறிவிப்பின் தொடக்கமாக அமைந்திருந்திருந்தது. விடுதலையை யாரும் இரந்து  பெறமுடியாது என்பதுடன், இரக்கத்திற்குரியவர்கள் அடையும் விடுதலை விடுதலையாக இருக்காது என்பதையும் விடுதலையை யாரும் யாசகமாகத் தம் மக்களுக்கு வழங்கத் தேவையில்லை என்பதையும் தெளிவாக உணர்ந்திருந்ததால்தான் காந்தி முன்வைத்த தீண்டாமை ஒழிப்புத் திட்டங்களை அம்பேத்கர் தன் மக்களின் மீதான அவமானமாகக் கருதினார்.  தமக்கான  விடுதலையைத் தாமே அடைதல் என்பதுதான் அம்பேத்கர் தம் மக்களுக்குக் கற்பித்த அரசியல். தம் மக்களின் விடுதலையின்றி இந்தியச் சமூகம் ஒரு நாளும் சுதந்திர நாடாக,  நவீன தேசமாக மாறமுடியாது என்பதுதான் அம்பேத்கர் உலகுக்கு அறிவித்த செய்தி.

1951-ஆம் ஆண்டு எழுதிய ஒரு கட்டுரையில் இதனை அண்ணல் மற்றொரு வடிவில் அறிவித்திருக்கிறார், “அறிவியல் விழிப்புணர்வு கொண்ட ஒரு சமூகம் ஏற்றுக்கொள்ளத்தக்க சமய நெறி புத்தரின் சமயம் மட்டுமே,  இல்லாவிடில் அச்சமூகம் அழிந்துவிடும். பௌத்த நெறி மட்டுமே நவீன உலகம் தன்னைக் காத்துக் கொள்வதற்கான ஒரே வழி.” இந்த அறிவிப்பில் இரண்டு விதமான நோக்கங்கள் உள்ளன, முதல் நோக்கம் அடிமைப்பட்டிருப்பவர்களை விடுதலை நோக்கி அழைப்பது, இரண்டாவது நோக்கம் அடிமைப்படுத்திக் கொண்டிருப்பவர்களை தம்மை திருத்திக் கொள்ள அழைப்பது. நவீன உலகம், அறிவியல் விழிப்புணர்வு,  அழிதல், காத்துக் கொள்ளுதல் என்ற கருத்தியல்களை புரட்சி மற்றும் புதிய உலகம் என்ற தெளிவான அரசியல் பொருளில் அம்பேத்கர் இங்கு பயன்படுத்துகிறார். மாற விரும்பாத சமூகங்களை மக்கள் மாற்றுவார்கள், அந்த மாற்றம் பெரும் வன்முறைகளைக் கொண்டதாக அமையும் என்பதை அம்பேத்கர் பல இடங்களில் சுட்டிக்காட்டியிருக்கிறார்.  இதனை புத்தரா அல்லது கார்ல் மார்க்ஸா என்ற தன் கட்டுரையில் விரிவாக விளக்கும் அம்பேத்கர் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற கொள்கைகளின் அடிப்படையில் மார்க்ஸிசமும் பௌத்தமும் ஒன்றிணைந்தாலும் வன்முறை, சர்வாதிகாரம் என்ற வழிமுறைகளில் வேறுபடுகின்றன. அதனால் நீடித்த நல்விளைவை ஏற்படுத்தும் நெறி பௌத்தம்தான் என்று தன் முடிவை அறிவிக்கிறார். உண்மையான சகோதரத்துவம், சமத்துவம், சுதந்திரம் என்பவை பண்பாட்டு மாற்றங்கள் வழிதான் உருவாக முடியும் என்பது  அம்பேத்கரின் உறுதியான நம்பிக்கை. இதனை விரிவாக விளக்கவே தன் வாழ்வின் பெரும் படைப்பான புத்தரும் அவர் தம்மமும் (1957) நூலை அவர் உருவாக்கினார். இந்த நூலில் அம்பேத்கர் தன் உள்ளத்தில், அறிவில் புதைந்திருந்த அனைத்துக் கேள்விகளையும் எழுப்பி விடை தேட முயற்சித்திருப்பதைக் காணலாம். ஒரு வகையில் நவீன உலக அரசியலில் மார்க்சியம் கடந்த விடுதலைக் கருத்தியல் தொகுதி ஒன்றை உருவாக்கும் முயற்சியை அம்பேத்கர் இந்த நூலில் மேற்கொண்டிருப்பதைக் காணலாம். அதனால்தான் இந்நூலை எழுத அவர் ஐந்து ஆண்டுகளைச் செலவிட்டார். உடல்நிலை  வருத்திய அந்த காலகட்டத்தில்  அம்பேத்கருக்குத் தன் மக்களின் எதிர்காலம் பற்றி மட்டுமின்றி இந்திய-உலக அரசியல் மற்றும் மக்கள் சமூகத்தின் எதிர்காலம் பற்றியும் பெரும் கேள்விகள் எழுந்தன. அவர் தன் அறிவின் வழியும், அறம் சார்ந்த தேடுதல் வழியும் அக்கேள்விகளுக்கான விடைகளைக் கண்டறிய முயற்சித்தார்.

அக்கேள்விகளை அவர் பின்வருமாறு வரிசைப்படுத்தி யிருக்கிறார்: புத்தர் சமூகத்துக்கான கருத்துக்களைச் சொல்லியிருக்கிறாரா? புத்தர் நீதியைப் போதித்திருக்கிறாரா? அன்பைப் போதித்திருக்கிறாரா? விடுதலையைப் போதித்திருக்கிறாரா? சமத்துவத்தைப் போதித்திருக்கிறாரா? சகோதரத்துவத்தைப் போதித்திருக்கிறாரா?  கார்ல் மார்க்சின் கேள்விகளுக்கு புத்தரால் விடையளிக்க இயலுமா? இதற்கெல்லாம் அம்பேத்கர் சொல்லும் பதில் “புத்தர் சமூகத்துக்கான கருத்தியலையே சொல்லியிருக்கிறார். பௌத்தம் இந்தக் கேள்விகள் அனைத்திற்கும் பதில் சொல்லுகிறது. ஆனால் அவை நவீன பௌத்த அறிவாளிகளால் மறைக்கப்பட்டுள்ளன.” அம்பேத்கர் தன் நூலின் வழியாக மறைக்கப்பட்டுள்ள உண்மைகளை வெளிக்கொண்டுவரும் பெரும் பணியை மேற்கொள்கிறார், ஒரு வகையில் பௌத்தத்தைப் புதுப்பித்து நவீன விடுதலைக் கருத்தியலாக விளக்குகிறார். இதன் வழி அண்ணல் நவீன பௌத்த குருவாக, விடுதலைத் தூதுவராக வடிவம் பெறுகிறார். அம்பேத்கரின் வாழ்வில் அதிகம் விவாதிக்கப்படாத பகுதியாக உள்ள இந்த நவீன புத்துருவாக்க பௌத்தம் தற்கால அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டு, உளவியல் கேள்விகளை கையாளக்கூடிய ஆற்றல் கொண்டது. அதன் மையமாக உள்ளதுதான் பல்வேறு ஒடுக்குமுறைகள் பற்றியும் ஒடுக்குமுறைகளிலிருந்து விடுதலை அடைவதற்கான வழிகள் பற்றியுமான கேள்வி.

மொழி அரசியல், மொழி வழியான ஒடுக்குமுறை பற்றிய கேள்விகளை நாம் இதன் தொடர்ச்சியாகவும் தற்காலப் புரிதலுடனும்தான் விளங்கிக்கொள்ள வேண்டியுள்ளது. ஏனெனில்  தலித் அரசியலில் மொழி அரசியலின் இடம், அது பெறும் முக்கியத்துவம் மற்ற அரசியல் கருத்தியல்களில் இருந்து பல வழிகளில் வேறுபட்டது. இந்த வேறுபாட்டை இந்தியாவின் மற்ற தலித் அரசியல் கட்சிகள் மற்றும் தலித் இயக்கங்கள் தமிழகத்தின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை அணுகும் முறையிலிருந்து புரிந்து கொள்ள இயலும்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை தேசிய, மாநில அளவிலான மற்ற தலித் கட்சிகள் தம்மிலிருந்து வேறுபட்டதாகவே பார்க்கின்றன, சற்று விலகியிருந்தும் பார்க்கின்றன.  தமிழின அரசியல், தமிழ் மொழி அரசியல், ஈழவிடுதலை ஆதரவு, பெருந்தேசியத்துக்கு மாறான கூட்டாட்சித் தத்துவத்தை முன்வைத்தல், அடையாள அரசியலை ஏற்ற செயல்திட்டம் என்பவை தேசியத்தை ஏற்ற பல தலித் சிந்தனையாளர்களுக்கு உவப்பானதாக இல்லை. அவர்கள் தலித் விடுதலையில் மொழிவழி அரசியலுக்கு இடமில்லை என நம்புகின்றனர். அம்பேத்கரின் மொழிக் கொள்கை, மொழித் தேசியம் பற்றிய கருத்துக்களைத் தாம் பின்பற்றுவதாகவும் நம்புகின்றனர். மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்படுதல் பற்றிய தன் விரிவான கருத்துரையில் (1955) அம்பேத்கர், “இந்திய தேசியம் ஒன்றுபட்டு இருக்க வேண்டும்,  ஒரு மாநிலத்திற்கு ஒரு மொழி இருக்கலாம் ஆனால் ஒரு மொழிக்கு ஒரு மாநிலம் இருப்பது தேசம் உடையக் காரணமாக அமையும், ஒரு மாநிலத்தின் தாய்மொழி அம்மாநிலத்தின் அலுவல் மொழியாக இருக்கக்கூடாது, அது தொடக்கத்தில் ஆங்கிலமாகவும் பின்பு ஹிந்தியாகவும் இருக்க வேண்டும், ஒன்றிணைந்த இந்தியத் தன்மையை உருவாக்க ஹிந்தி மொழியை நாம் அனைவரும் கற்க வேண்டும்.” என்பதான சில கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறார்.  ஹிந்தி மொழி, ஒன்றிணைந்த இந்திய தேசியம் பற்றிய பகுதிகளை மட்டும் பிரித்தெடுத்துக் கொண்டு  வாசித்தால் அம்பேத்கரின் அரசியல் பற்றி நாமும் மிகத்தவறான முடிவுகளுக்கே வந்து சேருவோம்.

அம்பேத்கர், இந்திய மொழிகள், இந்து மதம் இரண்டிலும் சாதி ஆதிக்கமே மேலோங்கியுள்ளது அதனால் மொழிவழி அரசியலால் சிறுபான்மையினரான ஒடுக்கப்பட்ட மக்கள், பெரும்பான்மையினரான சாதி இந்துக்களின் அடக்கு முறைக்கு தொடர்ந்து உள்ளாக வேண்டியிருக்கும் என்பதை விளக்கி அதனால் ஒரு மொழி கொண்ட பல மாநிலங்கள் அமைப்பது, ஒரு அலுவல் மொழி கொண்ட ஒருங்கிணைந்த தேசம் ஒன்றைக் கட்டமைப்பது பற்றிய திட்டத்தை முன்வைக்கிறார். தீண்டாமையைத் தன் பண்பாடு, சமயங்கள், மரபுகள், நம்பிக்கைகள், சடங்குகள் அனைத்தின் வழியாகவும் நியாயப்படுத்தி வருகிற,  சாதிப் படிநிலையைத் தன்  அடிப்படை அடையாளமாகக் கொண்ட சமூகங்கள் உள்ள நாட்டில் மொழிவழி அரசியல் தீய விளைவையே ஏற்படுத்தும் என்ற அம்பேத்கரின் அன்றைய கணிப்பு பிழையானதல்ல.  மொழி அரசியலின் விளைவு பற்றி அம்பேத்கர் இவ்வாறு விளக்குகிறார், “மொழி வழி மாநிலங்கள் அமைக்கப்பட்டால் சாதியின் கொடிய விளைவுகள் தீவிரமடையும். சிறுபான்மைச் சமூகங்கள் சிதறடிக்கப்படும். அல்லது அவை அடக்குமுறைக்கும் அடிமைப்படுத்தலுக்கும் உள்ளாக்கப்படும். சட்டத்தின் முன் சமநீதி பெறுவதும் பொதுவாழ்வில் சமவாய்ப்புகள் பெறுவதும் அவர்களுக்கு மறுக்கப்படும்.”  மொழிப் பெரும்பான்மை பற்றிய அச்சம்,  ஒருங்கிணைந்த தேசிய அரசியலின் தேவை இரண்டைப் பற்றியும் அம்பேத்கரின் புரிதல்கள் வரலாற்று முக்கியத்துவ முடையவை, ஆழமான அக்கறைகளின் வழி உருவாக்கப்பட்டவை. தேசிய அரசியல் பின்னடைந்து உலக மயமான பொருளாதார அரசியல் அனைத்து மட்டங்களிலும் ஊடுறுவியுள்ள நிலையில், சாதி அரசியல், இந்து மதஅரசியல் இரண்டும் வலிமை அடைந்து, புதிய வடிவங்களில் பெருகிவரும் நம் கால கட்டத்தில் மொழி அரசியல் பற்றி கூடுதலான தரவுகளின் அடிப்படையில் நாம் விவாதிக்க வேண்டியுள்ளது.

அந்த உரையாடலின் ஒரு பகுதியை மட்டும்  நான் இங்கு பதிவு செய்கிறேன். ஒடுக்கப்பட்டோர் விடுதலையில் மொழியின் இடம் மிக முக்கியமானது. மண்ணை அடிமை கொள்ளுதல், இனத்தை அடிமை கொள்ளுதல், மொழியை அடிமை கொள்ளுதல் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று உறவுடையவை. மக்களின் மொழியை மக்களிடமிருந்து நீக்கிவிடும் பொழுது அவர்கள் அறிவின் வழி ஒன்றுமற்றவர்களாக மாறுகின்றனர். ஆப்பிரிக்க, தென்னமெரிக்க இனக்குழுச் சமூகங்கள் தம் மொழிகளை இழந்து அடக்குமுறையாளர்களின் மொழியைச் சுமந்து வாழ நேர்ந்ததின் மூலம் நிரந்தரமான அடிமைகளாக மாற்றப்பட்டனர். ஆட்சிமுறை, அறிவியல் துறைகள், நிர்வாகம், கல்வி, கலை-இலக்கியங்கள் என ஒவ்வொன்றும் தாய்மொழியற்ற வெறொரு மொழியில் செயல்படுத்தப்படும் பொழுது மக்கள் அடிப்படையிலேயே அடிமைநிலையில் வைக்கப்படுகின்றனர், அவர்களிடம் அடிமை உளவியல் உருவாக்கப்படுகிறது. இந்தியாவில் ஆங்கிலம் ஒரு மொழி என்ற அளவிலேயே அடக்குமுறைத் தன்மைகொண்டது, அது தாய்மொழிவழியான அறிவை அறியாமை எனச் சொல்கிறது. ஆங்கிலத்தின் இடத்தில் ஹிந்தி வைக்கப்படும் பொழுது அது மற்ற மொழி மக்கள் மீது அதே வகையான  அடக்கு முறையைச் செலுத்துகிறது.

ஹிந்தி மொழியைப் பேசும் மக்கள் ஆங்கிலம் தம் மீது செலுத்தும் வன்முறையை, கீழாக்கத்தை உணர்ந்துள்ளனர். மருந்துப் பொருள்கள் தொடங்கி உணவுப் பொருள்கள், மின்சாதனப் பொருள்கள், மின்னணுச் சாதனங்கள் என அனைத்தின் மீதும் ஆங்கிலத்தில் அச்சான சொற்கள் தங்களை அவமதிப்பதாக, அடிமைப்படுத்துவதாக, அந்நியமாக்குவதாக  அவர்கள் ஒவ்வொரு நாளும் உணர்கின்றனர். ஆங்கிலம் ஒரு காலனிய, மேலாதிக்க ஆயுதமாக செயல்படுவதாக அவர்கள் பல சமயங்களில் குறிப்பிடுகின்றனர். அதனால் ஆங்கிலத்தை நீக்கிவிட்டு ஹிந்தியை இந்தியா முழுதும் கொண்டுவர வேண்டுமென அவர்களிடம் ஒரு வெறி உருவாகியுள்ளது. அவர்களின் அறியாமை இந்தியாவில் ஹிந்தி போல இன்னும் இருபதுக்கு மேற்பட்ட தாய்மொழிகள் உள்ளன, இருநூறுக்கு மேற்பட்ட கிளைமொழிகள் உள்ளன என்பதை மறைத்து விடுகிறது.

இன்றைய மொழி அரசியலில், மொழி அடக்குமுறையில் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களும், உழைக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களும்தான் என்பதை நாம் கவனத்தில் கொண்டால் தமிழ் அரசியல் பேசும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அக்கறை இந்திய ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பழங்குடியின மக்கள் அனைவருக்குமான மொழிவழி உரிமைகளைக் கவனத்தில் கொண்டுள்ளது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

மருத்துவத்துறையின் ஒவ்வொரு கட்டச் செயல்பாட்டையும் நாம் மொழிவழி வன்முறைக்கு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். இந்தியாவின் பல கோடிக்கணக்கான மக்கள் தங்களுக்கு வழங்கப்படும் மருந்துகளை தம்முன் வைத்துக்கொண்டு எந்த மருந்தை எந்த வேளை எத்தனை முறை சாப்பிடுவது எனத் தெரியாமல் துயர்ப்படுவதை ஒரு நூற்றாண்டாக நாம் பார்த்து வருகிறோம். மருந்தின் பெயரைப் படித்து வழங்க மருத்துவமனைகளில் தொழில்முறை மருந்தாளுநர்கள் தேவைப்படுகின்றனர். நோயின் பெயரை அறிந்துகொள்ளாமலும் மருந்துகளை அறியாமல் மாற்றி உட்கொண்டும் உயிரிழப்போர் எண்ணிக்கை இந்தியாவில் அதிகம். மருந்துக் கடைகளில் மருந்துகளைத் தம் வசதிக்கேற்ப மாற்றித்தரும் கொடுமையும் ஆங்கிலத்தால் நிகழ்த்தப்படும் ஏமாற்று வேலை. உயிர் வாழும் உரிமையுடன் விளையாடும் இந்த மொழி வன்முறை உணவுப் பொருள்களின் வழியாக அதிகம் நிகழ்கிறது. ஒவ்வொரு உணவுப்பொருளின் மேலட்டையிலும் அதில் உள்ள மூலப்பொருள்கள், உலோக அலோகச் சேர்மங்கள், ஒவ்வாமை ஏற்பட உள்ள சாத்தியங்கள் பற்றி அச்சடிக்கப்பட்டுள்ளன, அனைத்தும் ஆங்கிலத்தில். ரொட்டியை வாங்கிச் சாப்பிடும் ஒருவருக்கு அதில் உள்ளவற்றைத் தெரிந்துகொள்ள ஆங்கிலம் தேவை என்றால் உயிர் வாழும் உரிமையுடன் அந்த ரொட்டி விளையாடுகிறது என்றுதான் பொருள். நாம் பயன்படுத்தும் பொருள்களை எப்படி உண்பது அல்லது இயக்குவது என்பதை வேற்று மொழியில் அச்சடித்து வைத்துக் கொண்டு நாம் என்ன செய்யப் போகிறோம்.

உலக மயமான சந்தையும், உலக மயமான பொருளாதாரமும் இன்று மக்களின் அறிவின் மீது பெரும் தாக்குதலைத் தொடுத்துள்ளன. தாய்மொழி அறிவை மட்டும் சார்ந்து இயங்கும் பெரும் மக்கள் கூட்டங்கள், இனங்கள் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டு சமூகத்தின் மையத்திலிருந்து வெளியேற்றப்படுகின்றனர். இந்தியாவில் ஆங்கிலவழிக் கல்வி ஒடுக்கப்பட்ட மக்களையும், பழங்குடியினரையும், உழைக்கும் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மக்களையும் வெளியேற்றிவிட்டு தனித்த அறிவு அதிகாரம் பெற்ற வர்க்கம் ஒன்றை உருவாக்கி வைத்துள்ளது. தற்போது இந்த மொழிவழி அதிகாரம் பன்னாட்டு முதலீடுகளின் ஆயுதமாக மாறிப் பல மடங்கு அடக்குமுறையை, விளிம்புநிலையாக்கத்தை உருவாக்கி வருகிறது. இந்தத் தாய்மொழி நீக்கத்தை ஆதிக்கச் சாதியினரும், நகர்சார் சாதியினரும் தமக்கான திறன்சார் பயிற்சியாக மாற்றிக்கொள்ள முடியும். ஆனால் ஒடுக்கப்பட்ட, பழங்குடிச் சமூகங்கள் மேலும் விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்டு தீண்டாமையின் புதிய வகைக் கொடுமைகளுக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறார்கள்.

அரசியல், சமூக, பொருளாதார விடுதலை மற்றும் சமத்துவத்திற்கான போராட்டங்களுக்குப் பதிலாக வெறும் உயிர்வாழும் உரிமைக்காகப் போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள இந்தியாவின் ஒடுக்கப்பட்ட, குடியின மக்கள் தம் மொழியில் பேசவும், எழுதவும், அறியவும் போராட வேண்டிய நிர்ப்பந்தம் தற்போது உருவாகியுள்ளது.  தமிழ் காக்கும் போராட்டத்தைத் தலித் அரசியலின் தலைமையில் நிகழ்த்துவதற்கான வரலாற்றுத் தேவையைத் தமிழின் அடையாள அரசியல் இயக்கங்கள் புரிந்து கொள்ளுமெனில் தமிழின அரசியல் பொருளுடையதாக, செயல்பாடுடையதாக மாறும். இல்லையெனில் சாதி இந்துக்கள் போல, சாதித் தமிழர்களை உருவாக்கவே மொழி உணர்வு பயன்படும். அம்பேத்கர் இந்த மொழிச்சாதி அரசியல் பற்றியே தன் அச்சத்தை அன்றையச் சூழலில் தெளிவாக விளக்கினார்.  அனைத்து வகை அடக்குமுறைகளுக்கும் எதிராக பௌத்த அறத்தை முன்வைத்த அம்பேத்கருக்கு மொழிவழியான அடக்குமுறை பற்றி மிகத்தெளிவாவே தெரியும், அதனால்தான் எங்கு சென்றாலும் அங்குள்ள மக்களின் தாய்மொழியைக் கற்று அம்மக்களின் தாய்மொழியில் தம் அறத்தைப் போதிக்கும் மரபைக் கொண்ட பௌத்ததை நவீன உலகிற்கான சமய நெறியாக அறிவிக்க முடிந்தது, அதே காரணத்தால்தான் அயோத்திதாசரால் பௌத்தத்தைத் தமிழ் நெறியாக மறு உருவாக்கம் செய்ய முடிந்தது.

(நமது தமிழ்மண், பிப்ரவரி-2015)

உரையாடல்: 5-4 மீந்து நிற்பவர்களின் அரசியல்-பிரேம்

உரையாடல்:  5-4   மீந்து நிற்பவர்களின் அரசியல்

கேள்வி:

பெண்ணரசியல், சூழலரசியல், சிறுபான்மை இன, மத மக்களுக்கான உரிமையரசியல் என்பவையெல்லாம் தேவை என்பதில், யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

 ஆனால் இதில் ஒரு சிக்கல் உள்ளது. உலகு தழுவிய முதலாளித்துவ, பொருளாதார  சக்திகள், எல்லாவற்றையும் கபளீகரம் (appropriation) செய்யும் தன்மை கொண்டதாக உள்ளது. மேற்கண்ட மாற்று சிந்தனைகளைத் தம் வர்க்க நலன் குறித்த தன்னுணர்வுடன், தமது வர்த்தக லாப நோக்கங்களுக்கு இடையூறு இல்லாத வரை அங்கீகரிக்கவும் கையாளவும் முன்வருவதைக் காணமுடிகிறது.

தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலம் செய்யப்படும் பெண்ணிய,  சூழலிய விழிப்புணர்வு, தன்னிறைவுத் திட்டங்கள், தம் வர்க்க நலனில் சிறிதும் சமரசமின்றி பெண்ணியம் பேசும் உயர்தட்டு அறிவாளிகள், தமது சாதீய மேலாண்மையை தக்க வைத்துக் கொண்டே இனவிடுதலை அரசியல் பேசுபவர்கள், ஊழலரசியலில் திளைத்து வளர்ந்து பின் சாதியெதிர்ப்பு பேசுபவர்கள், பூர்வகுடி மலையின மக்களைப் பற்றிய அடிப்படைப் புரிதலின்றி சூழலியம், கானுயிர் பாதுகாப்பு எனப் பேசுபவர்கள், நுகர்வுக் கலாச்சாரத்தில் திளைத்த வண்னம், மேற்கண்ட அனைத்து அரசியலையும் பேசுபவர்கள், இவர்களின் பின் தனித்தனி அணிகளாகத் திரண்டுள்ள மக்கள் என உருவாகியுள்ள ஒரு குழப்பமான நிலைக்கும் உலகு தழுவிய முதலாளித்துவ அரசியலுக்கும் தொடர்பு இல்லை எனச் சொல்லிவிட முடியாது.

இந்நிலையில் அப்பெரும் சக்திகள் கட்டமைக்கும் களத்திற்குள்தான் மேற்கண்ட போராட்டங்களை நிகழ்த்தியாக வேண்டும். அவ்வாறு மேற்கொள்ளப்படும் போராட்டங்கள் அரசியல் ரீதியாக சரியானவை எனக் கொண்டால், மாற்று அரசியல் சிந்தனையாளர்கள் அறம் சார்ந்த சிக்கலான  கேள்விகளை எழுப்பிக் கொள்ளாமல்,  தங்களின் அரசியல் செயல்பாடுகளின் இடத்தை உறுதி செய்யவும் பரவலாக்கவும் சில சமரசங்களோடு மக்களை சென்றடையும் வெகுஜன ஊடகங்களையும் இன்ன பிற கட்டமைப்புகளையும், நிதியுதவிகளையும், பயன்படுத்திக்கொள்ளலாம் அல்லவா? இதை எப்படி பார்க்கிறீர்கள்?

[ராஜகாந்தன், அசோக்ராஜ், கருணாகரன்]

பதில்:

பிரேம்

பெண்ணிய அரசியல்,  சூழலியல் அரசியல், சிறுபான்மை இன, மத, மொழி அரசியல் என்பவை தனித் தனியாக இயங்கக்கூடிய அரசியல் இயக்கங்களோ, அரசியல் சக்திகளோ அல்ல. சமூக, அரசியல், பொருளாதார, பண்பாட்டு அமைப்புகளை வழி நடத்தும் முன் நிபந்தனைகள். அவை மக்கள் சார்ந்த திட்டமிடுதல்கள், செயல்பாடுகள் மற்றும் அறிவாக்க முறைகள் அனைத்திலும் ஊடுருவியிருக்க வேண்டிய மதிப்பீடுகள் மற்றும் கருத்தியல்கள். இன்னொரு வகையில் அவை விடுதலை நோக்கிய செயல் பாட்டுக்கான  நடத்தையியல் முறைகள். நவீன மனித மதிப்பீடுகள் மற்றும் மனித அடையாளங்களின் வழிகாட்டு நெறிகளில் அவை கலந்திருக்க வேண்டும்.

பாலின ஒடுக்குமுறை எங்கெங்கு உள்ளதோ அங்கெல்லாம் பெண்ணிய அரசியலும், இயற்கையின் சமநிலை நுகர்வுக்காகச் சுரண்டப்படும் நிலையில் சூழலியல் அரசியலும், இனம், மதம், மொழி, சாதி என்ற ஏதாவதொன்றின் அடிப்படையில் மக்களின் மீது அடக்குமுறையும் வன்முறையும் ஏவப்படும் பொழுதும்,  அவர்களின் தன்னுரிமைகள், வாழ்வாதர உரிமைகள் பறிக்கப்படும் பொழுதும் அவற்றின் அடிப்படையிலான அரசியலும் உருவாகிப் போராட்டங்களாகவோ அரசியல் அழுத்தங்களாகவோ வெளிப்படும். இங்கு எழும் முதல் முதல் கேள்வியே மக்கள் அரசியலடைவதா இல்லையா?  அடுத்த கேள்வி: எந்தக் கருத்தியல் அடிப்படையில் அரசியல் அடைவது? மூன்றாவது கேள்வி: அரசியல் அடைந்த பின் அதனை எப்படித் தொடர்வது, தொடர்வதற்கான போராட்ட வழிமுறைகள் என்ன? இந்தக் கேள்விகள் அத்தனைக்கும் முன் உள்ள மிக அடிப்படையான ஒரு கேள்வி: மக்களுக்கு அரசியலடையும் உரிமை, அரசியலை மாற்றும் உரிமை இருக்கிறதா இல்லையா? இந்தக் கேள்விக்கு ஒரு அமைப்பு அளிக்கும் பதிலில் இருந்துதான் மக்கள் அரசியலின் வடிவமும் செயல்பாடும் நிர்ணயிக்கப்படுகிறது. இந்தக் கேள்விகளை எழுப்பப் பயிற்சி பெறும் பொழுதுதான் மக்கள் அரசியல் சக்தியாக உருவாகிறார்கள். போராட உரிமை அற்ற மக்கள் அடிமைகளாக வைக்கப்பட்டிருக்கிறார்கள், போராட விரும்பாத மக்கள் அடிமைகளாகத் தங்களை வைத்துக் கொள்கிறார்கள், அதில் இன்புறுகிறார்கள். போராட்டங்கள்  ஒற்றைத் தன்மையுடன், ஒற்றை இலக்குடன் இருக்க வேண்டும், அவை ஒற்றைக் கருத்தியலின் அடிப்படையில்தான் நிகழ முடியும் என்ற முன்முடிவுடன் இதனை அணுகினால் ஒரு போராட்டமும் நிகழ வாய்ப்பில்லை.

உலகு தழுவிய முதலாளித்துவ, பொருளாதார  சக்திகள் மக்களின் போராட்டங்களையும் விடுதலைக் கோரிக்கைகளையும் கையகப்படுத்தியும் தம் எல்லைக்கு தக்க உள்ளடக்கியும் தம் நலனுக்கு உகந்த வகையில் ஊக்குவித்தும் அரசியல் உத்தியாகப் பயன்படுத்த முடியும் என்பது மறுக்க முடியாத நடப்பியல் உண்மை. ஏனெனில் முதலாளித்துவ, பொருளாதார, வணிக சக்திகளும் இனம், மொழி, நிலம், மக்கள் சார்ந்த கட்டமைப்புகளாவே உள்ளன. முதலாளித்துவம், உலக முதலீட்டுச் சக்திகள் என்பவை தனித்த தன்னிறைவு கொண்ட இயந்திரங்கள் அல்ல. அவை நாடுகள் சார்ந்து, நிலங்கள் சார்ந்து, மக்கள் தொகுதிகள் சார்ந்து இயங்கும் உலக வலைப் பின்னல்கள். அவை முற்கால இறையதிகார, அரசதிகாரச் சக்திகளாகத் தற்போது இயங்கவில்லை.  மக்கள் அரசியல் என்ற அதிகாரக் கட்டமைப்பையும், நவீன தேசியம் என்ற நிலவியல்  கட்டமைப்பையும், சமூகப் பங்களிப்புடன் கூடிய  நவீன ராணுவக் கட்டமைப்புகளையும் கொண்ட கூட்டு இயந்திரங்களாக அவை உள்ளன. இந்தப் பொருளை இந்த வகை மனிதர்கள் பார்க்கவும் உரிமை இல்லை என்ற மரபான கொடுங்கோன்மைக்கும் இந்தப் பொருளை இந்த இந்த மனிதர்கள் நுகர்ந்தே ஆகவேண்டும் என்று நிர்ப்பந்திக்கும் சந்தைப் பொருளாதாரத்திற்கும் இடையில் உள்ள இடைவெளியில்தான் இன்றைய மக்களின் இடம் வைக்கப்பட்டுள்ளது.

ஏகாதிபத்திய நாடு ஒன்றில் உள்ள மக்களின் கூட்டு உளவியல் மற்ற நாடுகளின், இனங்களின் வாழ்வாதாரங்களைக் கொள்ளையிடும் தன் நாட்டுடைய பொருளாதாரத் திட்டமிடுதல்களை ஏற்றுக் கொண்டதாக, பிறநாடுகள் மீதான  தன் நாடு செலுத்தும் வன்முறைகளை நியாயப்படுத்தும் தொடர் செயல்பாட்டின் பகுதியாக மாறிவிடுகிறது. தன் நாட்டில் உள்ள சிறுபான்மையினர் மீதான சுரண்டலை நியாயப்படுத்தும் பொது உளவியலும் அத்துடன் இணைந்து கொள்கிறது.  இதிலிருந்து விலகிய மக்கள் தொகுதிகள் தம்மை விளிம்பு நிலைப்படுத்திக் கொண்டவையாகவே மாறும். இந்த வெளியேற்றம் குற்றவியலின் ஒரு பகுதியாக, தேசத்திற்கெதிரான கலகமாக அடையாளம் காணப்படும்.  இந்த வெளியேற்றமும் ஒத்துழையாமையும் கலகமும் பெருகித் திரளும் பொழுது ஒரு அரசியல் அமைப்பு உடைந்து மற்றொரு அமைப்பு உருவாகிவிடும், இது நவீன அரசியல் சமன்பாடு.  புரட்சிகளின் காலம் என்று நாம் அடையாளம் காணும் பதினெட்டு, பத்தொன்பது, இருபதாம்  நூற்றாண்டுகளில் நிகழ்ந்த பெரும் அரசியல் மாற்றங்கள்  அமைப்பு உடைதலின் வழி, அரசாங்கங்கள் மாறியதன் வழி  நிகழ்ந்தவை. என்றாலும் உள்ளடக்குதல், இடம் அளித்தல், தன்வயப்படுத்தல் என்ற வகையில் முந்தைய அமைப்பின் உள்ளியக்கங்களைத் தொடரக்கூடியனவாகவே இருந்தன. ஜார் வம்சத்தின் முடியாட்சி உடைய கம்யூனிஸ்ட் கட்சி காரணமாக அமைந்தாலும் முதல் உலகப் போரின் போது உருவான ரஷ்ய தேசிய ஒன்றிணைப்புதான் அதனை நடப்பியல் சாத்தியமாக்கியது. பொருளாதாரம், வாழ்க்கைத் தேவைகள், மனித உரிமைகள் என அனைத்திலும் மக்கள் பெருங்கேடுகளை அனுபவித்த போது, உடைமை வர்க்கத்திற்கும் உழைக்கும் மக்களுக்கும் இடையில் வன்மம் கூடிய பொழுது, மக்களின் மீதான வன்கொடுமைகள் அடக்குமுறைகள் பெருகிய போது ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி மக்களின் உணர்வுகளை ஒன்றிணைத்தது,  அங்கு சோஷலிசம் என்ற தேசியப் பொருளாதாரத் திட்டமிடுதலுடன் கூடிய அரசு உருவானது. அந்த அரசுதான் பின்னாளில் ஒரு ராணுவப் பேரரசாக, ஒரு ஏகாதிபத்திய கேந்திரமாக உருவானது. அந்நாட்டின் மக்களுக்கான வாழ்வாதாரங்களையும் உறுதி செய்த அதே அரசுதான் மற்ற நாடுகளைச் சுரண்டவும் உலக வளங்களைக் கொள்ளையிடவும் கூடிய ராணுவ சக்தியாகவும் உலக அரசியலை உளவு பார்த்து தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் சதிகளின் தலைமையகமாகவும் மாறியது.  1776-ஆம் ஆண்டு “அனைத்து மனிதர்களும்   சமமாகப் படைக்கப்பட்டவர்கள், கடவுள் அனைவருக்கும் வாழ்வதற்கான உரிமை, சுதந்திரம்,  இன்புற்று வாழ்தல் என்பதற்கான   மறுக்க முடியாத உரிமைகளை அளித்திருக்கிறார். இந்த உரிமைகளை உறுதிசெய்யவே மனிதர்கள் அரசாங்கங்களை உருவாக்கியுள்ளனர், அவற்றின் நீதிசார்ந்த அதிகாரம் மக்களால் அளிக்கப்பட்டது. இந்த நோக்கத்தைக் குலைக்கும் வகையில் எந்த அரசாங்கம் நடந்தாலும் அவற்றை மாற்றியமைக்கவோ அல்லது தூக்கியெறிந்து விட்டு புதிய அரசாங்கத்தை அமைக்கவோ மக்களுக்கு உரிமை உள்ளது.” என்ற புரட்சிகரமான அரசியல் நெறியை அடிப்படையாக வைத்து  தொடங்கப்பட் அமெரிக்கச் சுதந்திர அமைப்பு தன் பொருளாதாரத்தை அடிமை உழைப்பின் வழி பெருக்கிக் கொண்டதுடன் இன ஒடுக்குதலை இன்று வரை முழுமையாக நீக்க முடியாமல் தொடர்ந்து வருகிறது. இன்று உலக நிலம்சார் அரசியலைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டிருக்கும் ஆதிக்க சக்தியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. 1789-இல் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற கொள்கைகளை அறிவித்து உருவான பிரஞ்சுப் புரட்சி தன் அமைப்பு மாற்றத்தால் உலக காலனிய ஆதிக்கத்தில் தன் பங்கைப் பலமடங்காகப் பெருக்கிக் கொண்டது. ஸ்பானிய, போர்த்துகிசிய, இத்தாலிய நவீன அரசுகள்தான் ஆப்பிரிக்க, தென்னமெரிக்க நிலங்களையும் மக்களையும் கொள்ளையிட்டு இன்றுள்ள அய்ரோப்பிய சமூகத்தின் குடிமை வாழ்வு, வாழ்வாதார வளங்களை உருவாக்கித் தந்தன. சுதந்திரத்தின் பெயரால் உருவான அரசுகள் அனைத்தும் இன்று பயங்கரவாத அரசுகளாக செயல்பட்டுக் கொண்டுள்ளன. நவீன உலகின் அரசியல், சமூக அமைப்புகளில் இவற்றின் வன்முறை உள்ளீடாகத் தொடர்ந்கொண்டே உள்ளது.

அதே சமயம் நாம் அறியும் நவீன உலகை உருவாக்கியவையும் இந்த நிகழ்வுகள்தான். அதனால்தான் இன்றைய உலக முதலாளித்துவமும், நவீன பொருளாதாரச் சக்திகளும் தனித்த அமைப்புகளாக இன்றி அனைத்திற்குள்ளும் கலந்து கிடக்கின்றன. உள்ளடக்குதல், இடம் அளித்தல், தன்வயப்படுத்தல் என்ற உத்திகளின் வழி அவை நுண் அரசியலைச் செயல்படுத்துகின்றன, நவீன வணிகமும் பொதுச் சந்தையும் அவற்றின் களங்களாக உள்ளன. நவீன கருத்தியல்கள், நவீன வாழ்வியல் மதிப்பீடுகளின் மொழியில்தான் இவை பேசியாக வேண்டும். நவீன குறியமைப்புகள் வழிதான் அவை செயல்பட்டாக வேண்டும். சுதந்திரம், முன்னேற்றம்,  பொது நலன், சமூக ஒப்பந்தம், நீதி, அமைதி என்ற கருத்தியல்களை முன் வைத்தே அவை தம்மை பாதுகாத்துக் கொள்ள இயலும். அதே சமயம் அவை அனைவருக்கும் கிடைத்துவிடாமல் பார்த்துக் கொள்வதுதான் முதலீட்டு அதிகாரத்தின் அடிப்படை விதி.

இன்றைய முதலீட்டு அரசியல் இயந்திரங்கள் எதிர்காலத்தை வைத்துத் தன்மை நியாயப்படுத்திக் கொள்வதில்லை, கடந்த காலத்தை வைத்துத் தம்மை நியாயப்படுத்திக் கொள்கின்றன, அதிலிருந்து மக்களை தாங்கள் மீட்டதாகச் சொல்லித் தம்மை நியாயப்படுத்திக் கொள்கின்றன. (சமூகப்புரட்சிகள் தம் நியாயத்தைக் கடந்த காலத்திலிருந்து பெற்றுக் கொள்ள முடியாது- கார்ல் மார்க்ஸ்)  கடந்த காலம் என்பது முடியரசுகளின் கொடுங்கோன்மை, மரபான நிறுவனங்களின் அடக்குமுறைகள், மத நிறுவனங்களின் தண்டனைகள்,  பல்வேறு பழமைவாத ஒடுக்குமுறைகளால் நிரம்பிக் கிடப்பது.  அச்சமூட்டும் கடந்த காலம், உறுதி செய்யப்படாத எதிர்காலம் இரண்டுக்கும் இடையில் வாழ நேர்ந்துள்ள மக்கள் உலக அளவில் ஒற்றைத் தன்மை கொண்டவர்கள் இல்லை என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். மக்கள் தமக்கான அரசியலை உருவாக்க, வாழ்வுரிமைகளைப் பாதுகாக்கப் போராடுவதைவிட வாழ்தலுக்காகப் போராடுதல் என்ற நிலைக்கு பல நாடுகளில் தள்ளப்பட்டுள்ளனர். இன்னொரு வகையில் போராடுதலுக்கான ஆற்றலும், களங்களும், இடமும் இல்லாத நிலையில் பெரும் பகுதி மக்கள் வைக்கப்பட்டுள்ளனர்.

மக்கள் ஆட்சி நசுக்கப்பட்டுள்ள ஒரு ராணுவ சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக அந்நாட்டு மக்கள் போராட விரும்புகிறார்கள். ஆனால் அவர்களுக்கு அடிப்படைக் கட்டமைப்புகள் இல்லை. அந்த நிலையில் ஒரு வல்லாதிக்க அரசு ஆயுதங்களை வழங்கி அரசியல் மாற்றத்தைக் கொண்டு வருகிறது. பின் அந்த நாட்டிற்கு உதவி செய்வதாக உள்நுழைந்து  கனிம, இயற்கை வளங்களைத் தன் வயப்படுத்திக் கொள்கிறது. அந்த மக்கள் அரசு உறுதியடையாமல் இருக்கவும் தன் கட்டுப்பாட்டில் அந்நாட்டைத்  தொடர்ந்து வைத்திருக்கவும் அந்நாட்டின் ஒரு குறிப்பிட்ட சிறுபான்மை மத, இன மக்களிடம் பாதுகாப்பற்ற உணர்வை வளர்த்து ஒரு அமைதியின்மையை உருவாக்குகிறது. இந்தக் கொடுஞ்சுழல் எங்கு முடியும் என்பதை யாரால் யூகிக்க இயலும்? ஆப்கானிஸ்தானில் பெண்கள் அடிமை நிலையில் வைக்கப் பட்டிருக்கிறார்கள் என்பதை அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் கூறுவதன் உட்பொருள் அந்தச் சமூகத்தை விடுதலை நோக்கி அழைத்துச் செல்வதல்ல தமது படைகளை அங்கு நிரந்தரமாக நிலைப்படுத்துவது. பிரிடிஷ் காலனிய அரசு இந்தியாவின் தீண்டாமைக் கொடுமையை நீக்குவது பற்றித் தொடர்ந்து பேசி வந்தது.  அதன் நோக்கம் இந்தியச் சமூகத்தை சாதியற்ற சமூகமாக மாற்றுவதல்ல, இந்தியாவின் தன்னாட்சி உரிமையை அடிப்படையில் கேள்விக்குள்ளாக்குவது. இவற்றிற்கிடையில்தான்  தொடர்கிறது மக்களின் அரசியல், இவற்றை மீறியும் செல்வதுதான் மக்களுக்கான அரசியல். இந்தத் தளத்தில் இருந்து இக்கேள்வியை அணுகும் போது நாம் சிலவற்றைப் புரிந்து கொள்ள இயலும்.

இந்தியச் சமூகங்களில் மக்கள் ஒற்றை அமைப்பாக, ஒற்றை அரசியல் திரளாக மாறுவது இன்று சாத்தியமில்லை, அப்படியொரு அடையாளம் இன்றுவரை உருவாகவில்லை.  இடம் சார்ந்தும் களம் சார்ந்தும்தான் அரசியலாக்கம் நிகழ முடியும். நகர் சார்ந்த உழைக்கும் மக்கள், அமைப்பு சாராத உழைப்பாளிகள், நிலமற்ற வேளாண் மக்கள், கூலியுழைப்பிலும் கொத்தடிமை உழைப்பிலும் நசுங்கிக் கொண்டிருக்கும் மக்கள், விளிம்பு நிலைச் சாதிகள், தீண்டாமைக்குட்பட்ட சமூகங்கள், பழங்குடிச் சமூகங்கள், வடகிழக்கு மாநிலங்களில் உள்ளது போன்ற மண்சார்ந்த தன்னுரிமை கோரும் இனக்குழு மக்கள், தம் வாழிட உரிமைகளை இழந்து ஏதிலிகளாக இடம் பெயர்ந்து வாழும் மக்கள், வேளாண் தொழிலைத் தன் வாழ்வாகக் கொண்டுள்ள மக்கள், நகர்ப்புற கூலித்தொழில் செய்யும் மக்கள், உழைப்பு உரிமை அற்ற மக்கள், தேசிய வளங்களில் பங்கற்ற மக்கள் குழுக்கள் எனத் தனித்தனியாகவே மக்களின் திரட்சி நிகழ முடியும், அவர்களின் அரசியலாக்கமும் நிகழ் முடியும். ஒருவரின் அரசியல் மற்றவருக்கு பயங்கரவாதமாக, தேச விரோதச் செயலாகத் தோன்றம் தரும். இந்த அரசியலாக்கத்தில் பலவித குழப்பங்கள் தலையீடுகள் இருப்பதையும் தவிர்க்க முடியாது. சீனா நிலவழியாக இணைக்கப்பட்டிருப்பதால்தான் இந்தியாவில்  மக்கள் யுத்த அரசியல் 1960-களில் வசந்தத்தின் இடிமுழக்கமாக உருவாகி இன்று வரை தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கிறது. சோவியத் அரசும் ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியும் இந்திய இடதுசாரி கட்சிகளுக்கு மட்டுமில்லை உலக இடதுசாரி அரசியலுக்கே ஆதார சக்தியாக, அடிப்படை பலமாக இருந்து வந்ததை நாம் மறந்துவிட முடியாது. இந்தியாவில் இஸ்லாமியர்களை நசுக்கும் இந்துராஷ்டிரியம் உருவாகாமல் இருப்பதற்கு அரேபிய எண்ணை வள அரசுகள்தான் இன்று வரை காரணமாக இருந்து வருகின்றன. பங்களாதேசத்தின் மொழி உரிமை மற்றும் தன்னாட்சி உரிமைகளை இந்திய அரசு ராணுவத் தலையீட்டால் உறுதி செய்ததும், இலங்கையில் தமிழ் மக்களுக்கு அதே  உரிமைகளை ராணுவத் தலையீட்டால் இல்லாமலாக்கியதும்கூட இந்த வகை குழப்பங்களின் அடையாளங்கள்தான்.

உலகு தழுவிய முதலாளித்துவ அரசியலுக்கு வெளியே, வணிக, சந்தைக் கட்டமைப்புகளில் இருந்து விலகி உள்ளது என்று சொல்லத் தகுந்த ஒரு இடம், களம் இன்று இல்லை. மார்க்சிய அமைப்புகள் இன்று தொழிற் சங்க அமைப்புகளை மட்டும் தான் சார்ந்துள்ளன. பன்னாட்டு, பெருமுதலீட்டுத் தொழில்களை ஆதரித்து வேளாண் மக்களின் மண்ணுரிமையை, பழங்குடி மக்களின் நிலவியல் பண்பாட்டை மறுக்கும் நிலைக்கு இடதுசாரி அரசியல் செல்வதற்கும், ரஷ்யாவின் அணு உலையில் கதிர்வீச்சு இல்லை, இருந்தாலும் மக்களைப் பாதிக்காது  என்று சொல்லும் அளவுக்கு அறிவியல் மறுப்பு நிலைப்பாடு எடுப்பதற்கும் இந்தக் குழப்பமான உலக அரசியல்தான் காரணமாக உள்ளது.

 இந்திய மக்கள் ஒன்றிணைந்த அரசியல் சக்தியாக மாறுவதிலும் கடுமையான சிக்கல்கள் உள்ளன.  உலக முதலாளித்துவம், அரச ஒடுக்குமுறை, உலகமயமான சுரண்டல் என்பவற்றிற்கெதிராக மக்கள் சக்தி உருவாகி மாற்றங்களை நோக்கிச் செல்லுவதற்குமுன் பண்பாடு, மதிப்பீடுகள், சமூக உளவியல் மட்டங்களில் மாற்றங்கள் நிகழ வேண்டும். அந்த மாற்றங்கள் நிகழும் வரை அரசியல் செயல்பாடுகளை ஒத்திப்போடுவதும் பயனளிக்காது. அரசியல் செயல்பாட்டின் வழி அறிவை அடைவதும், அரசியல் அறிவின் வழி உளவியல் மாற்றங்கள் உருவாவதும் தொடர்புடைய நிகழ்வுகள். மாற்று அரசியல் சிந்தனையாளர்கள், செயல்பாட்டா ளர்களின் தேவை இந்தத் தளத்தில்தான் அதிகமாக உறுதி செய்யப்படுகிறது.  இன்றுள்ள ஊடகங்கள், மொழி அமைப்புகள், சொல்லாடல் களங்கள், அறிவுத்துறைகள் அனைத்தின் வழியாகவும் மக்களின் அரசியலைக் கொண்டு செல்ல வேண்டும். அதே சமயம் அவற்றைக் கடந்த மாற்று ஊடகங்களையும் கண்டறிய வேண்டும்.

தீண்டாமைக் கொடுமையிலிருந்து வெளியேற சில ஒடுக்கப்பட்ட மக்கள் கிறித்தவத்திற்கு மாறிய நிகழ்வை பிழைப்புவாதம் என்று சொல்ல எந்தப் புனித அரசியலுக்கு உரிமையிருக்கிறது? சமரசங்கள், ஒப்பந்தங்கள், பரிமாற்றங்கள் வழியாக மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், தம் வாழ்வுரிமைகளை மீட்கவும், பல சமயங்களில் இனப் படுகொலைகளில் இருந்தும், இடப்பெயர்ச்சிகளில் இருந்தும் தப்ப முடியும் என்றால் அவற்றைத் தவறென்று சொல்ல வெளியே உள்ள அரசசியல் சக்திகளுக்கு எந்த உரிமையும் இல்லை என்றுதான் நினைக்கிறேன்.

சமூகப் புரட்சிகள் தம் நியாயத்தைக் கடந்த காலத்திலிருந்து பெற்றுக் கொள்ள முடியாது என்ற மார்க்ஸின் சமன்பாட்டில் இதுவும் உள்ளடங்கியுள்ளது: நிகழ்காலத்தை மறுத்து விட்டு எதிர்காலத்தைக் கொண்டு மட்டுமே சமூகப் புரட்சிகள் தம்மை நியாயப் படுத்திக்  கொள்ளவும் முடியாது.

[மக்கள் அரசியல், மக்கள் போராட்டங்கள் வழிதான் மக்களுக்கான அறங்களும் அடையாளங்களும் உருவாக முடியும் என்பதை போர்களுக்கு எதிரான போராட்டங்கள் அல்லது மக்களை உருவாக்கும் போராட்டங்கள் என்ற கட்டுரையில் சற்று விரிவாக விளக்கியிருக்கிறேன்.]

உரையாடல் : 10 இந்துத்துவம், இந்து தேசியம் என்பவை இந்துக்களுக்கும் எதிரானவை-பிரேம்

உரையாடல் : 10  இந்துத்துவம்,  இந்து தேசியம் என்பவை  இந்துக்களுக்கும் எதிரானவை

கேள்வி:

மத்திய அரசில் தற்போது ஏற்பட்டிருக்கும் ஆட்சி மாற்றத்துக்குப் பின் இந்து மதவாத பிற்போக்குச் சக்திகள் ஊக்கம் பெற்றிருப்பதாகக் கருதுகிறீர்களா? இந்துமத மேலாண்மைச் சிந்தனைகளை விதைக்கும், வளர்க்கும் எழுத்து முயற்சிகள் தமிழில் முன்னெடுக்கப்பட்டால், தமிழ் மரபின் பவுத்த, சமண சிந்தனைகளையும், சிந்தனையாளர்களையும் மீட்டுருவாக்கம் செய்து பொதுச் சொல்லாடல்களங்களில் விவாதிப்பது  ஒரு சமனிலையாக்கம் என்ற வகையில் பயன்படுமா?

[ராஜகாந்தன், அசோக்ராஜ், கருணாகரன்]

பதில்:

பிரேம்

தேசிய அளவில் இந்து மதவாத அரசியல் தனிப் பெரும்பான்மை பெற்று வலுப்பட்டுள்ள இந்தக் காலகட்டத்தில்கூட பொத்தம் பொதுவாக இந்திய மக்கள் அனைவரும் இந்துத்துவக் கருத்தியிலை ஏற்றுக் கொண்டார்கள் என்று நாம் சொல்ல இயலாது. காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கட்சிகள் தற்கால அரசியலுக்கான திட்டமின்றி பின்னடைந்த போது பாரதிய சனதா கட்சி மக்களுக்கு ஒரு மாற்றாகத் தெரிந்தது. உலக அளவிலான சந்தைச் சுரண்டல், நுகர்வுப் பொருளாதாரம் மற்றும் வளங்களைக் கொள்ளையிடும் அரசியல் இந்திய அரசியலைத் தனக்கேற்ப மாற்றியமைக்கத் தொடங்கிய காலகட்டமான 1980 களிலிருந்து இந்தச் சிக்கல் தொடங்கிவிட்டது. காங்கிரசைத் தன் களப்பணிக் கருவியாக வைத்துக் கொள்ள முடியும் என்று பன்னாட்டு முதலாளியம் நம்பிய வரை அக்கட்சியை தேசிய அரசியலில் பலப்படுத்தியது. ஒரு கட்சியை மட்டும் நம்பித் தன் திட்டங்களை இந்திய மண்ணில் விரிவுப்படுத்த முடியாது என்பதையும், இடதுசாரி அரசியல் இந்திய மக்களிடம் மீண்டும் பரவ வாய்ப்புள்ளது என்பதையும் புரிந்து கொண்ட போது காங்கிரசுக்கு இணையான அதே சமயம் பழமையான மற்றொரு கட்சியை வளர்க்க வேண்டும் என்ற தேவையை பன்னாட்டு முதலாளியம் அறிந்து கொண்டது. உலக அளவிலான இந்தத் திட்டமிடலின் விரிவைத்தான் இந்துத்துவ அரசியலின் புத்துருவாக்கத்திலும் வளர்ச்சியிலும் நாம் காண்கிறோம்.

1970-கள் வரை மக்களிடம் இருந்த மாற்றுகள், தீர்வுகள் பற்றிய நம்பிக்கைகள் 1980-களில் மெல்லக் கரைந்து முதலாளித்துவத்தின் பலம் பற்றிய மிரட்சி, அரசு ஆயுதங்கள் பற்றிய திகைப்பு,  பிற்போக்குச் சக்திகளின் வன்முறை பற்றிய அச்சம் என்பவை வளர்ந்தன. இந்திய மக்கள் அரசியலில் உருவான நம்பிக்கையின்மை மற்றும் பொது அச்சுறுத்தல்தான் இன்றைய இந்துத்துவச் சக்திகளின் பெருக்கத்திற்கான அடிப்படை. பஞ்சாப், கஷ்மீர், வடகிழக்கு மாநில மக்களின் தன்னுரிமைப் போராட்டங்கள் தண்டகாரண்ய நிலப்பகுதி மக்களின் வாழ்வுரிமைப் போராட்டங்கள் அனைத்தைப் பற்றியுமான எதிர் நிலைப்பாடுகளை உருவாக்கிப் பாதுகாப்பற்ற தேசியம் என்ற சொல்லாடலைக் கட்டமைத்துத் தன் அச்சுறுத்தும் அரசியலுக்குப் பயன்படுத்திக் கொண்டன இந்துத்துவச் சக்திகள். வன்முறைக்கெதிரான இந்திய அரசின் சட்டங்களும், திட்டங்களும் இந்து மதவெறி வன்முறைகளைக் கண்டு கொள்ளாமல் விட்டதுடன் அவற்றின் பரவலுக்கு ஆதரவாகவும் பலநேரங்களில் செயல்பட்டன. வன்முறை அரசியலைத் தன்  ‘கொடியற்ற’ படைப்பிரிவின் வழியாகச் செயல்படுத்தி வந்த காங்கிரஸ் 1985-இல் சீக்கியர்களின் மீதான கொடும் தாக்குதல் வழியும் 1989-இல் இலங்கைத் தமிழ் மக்கள் மீதான ராணுவத் தாக்குதல் வழியாகவும் தன் அச்சுறுத்தும் அரசியலை விரிவுபடுத்தியது. இந்த வகைத் தடைகள் இல்லாத பாரதிய சனதாவுக்குக்  கொடியுடன் கூடிய படை அரசியல் அதிக பலனளிப்பதாக இருந்தது. காங்கிரஸ்  பழைய முதலாளிகளின் அணிவகுப்பு என்றால் பாரதிய சனதா கட்சி புதிய முதலாளிகளின் அணிவகுப்பாக உருவானது. உலக மயமாக்கத்தை யார் விரைவாக, வலிமையாக இந்தியாவில் கொண்டு வருவது என்பதில் இரண்டு கட்சிகளுக்கும் கடுமையான போட்டி இருந்து வருகிறது.

1984-இல் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி கொலை செய்யப்பட்டது, 1991-இல் முன்னாளைய பிரதமர் ஒருவர் கொலை செய்யப்பட்டது. 1992-இல் பெரிய அளவிலான திட்டமிடலுடன் நிகழ்த்தப்பட்ட மசூதித் தகர்ப்பு, அதனைத் தொடர்ந்து நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் என அச்சுறுத்தும் அரசியல் பெருகி வளர்ந்து 1996-இல் 194 மக்களவை இடங்களைப் பெறவும் 1999-இல் கூட்டணியமைத்து மத்தியில் ஆட்சிப் பொறுப்பை ஏற்கவும் உரிய  அளவுக்கு இந்துத்துவக் கட்சியைக் கொண்டு சென்றது. அதன் பின் உருவான 10 ஆண்டு கால இடை வெளியை அக்கட்சியும் அதன் கிளை அமைப்புகளும் திட்டமிட்டுப் பயன்படுத்திக் கொண்டுள்ளன. இன்றைய அச்ச அரசியல் அச்ச மூட்டுபவர்களிடமே தங்களை ஒப்படைக்கும் மக்கள் உளவியலை உருவாக்கியுள்ளது.

[குஜராத் முஸ்லிம் மக்கள் படுகொலையின் போது (2002) பதிவு செய்யப்பட்டு உலகம் முழுதும் பரவிய  இரு படங்கள் இந்திய அச்ச-அரசியல் உளவியலைப் புரிந்து கொள்ள உதவும்.

IMAGE-1

IMAGE-2

கண்கள் கலங்கத் தன்னைத் தாக்க வரும் ஒரு கூட்டத்தின் முன் கைகூப்பிக் கெஞ்சும் ஒரு மனிதர், படுகொலை செய்வேன் என்பதைப் பரவசவெறியுடன் அறிவிக்கும் ஒரு தொண்டர்]

எண்ணிக்கையைச் சொல்லிக் காட்டி புரிய வைக்க முடியாத தொகைகளில் ஊழல் கணக்கு, வெளிநாட்டில் குவிந்துள்ள இந்தியப் பணத்தைக் கொண்டு வந்தால் இந்தியர்கள் ஒவ்வொருவர் கணக்கிலும் சில லட்ச ரூபாய்கள் வந்து சேர்ந்து விடும் என்ற பூதக்கனவு, பத்தாண்டு காங்கிரஸ் ஆட்சி சலித்துப் போனதின் விளைவு, பன்னாட்டு உள்நாட்டு முதலாளிகளுக்கான பாதுகாப்புக்கும் விரிவுக்கும் உத்தரவாதமளிக்கும் கொள்கைத் திட்டங்கள். இரும்புக் கரம் கொண்டு எதிர்ப்புகளை அடக்கும் வலிமை உள்ள கட்சியின் ஆட்சி.  இப்படிப் பல காரணங்கள் புதிய ஆட்சிக்கு வழிவகுத்துள்ளன. இஸ்லாமிய வெறுப்பு,  கிறித்துவ இழிப்பு, சனாதனக் கொதிப்பு என்பவை மக்களிடம் அதிக தீய விளைவுகளை ஏற்படுத்தியிருப்பதைக் காணமுடிகிறது. இவற்றைக் கடந்தும் கூட இந்து என்ற வகையில் ஒரு பெரும்பான்மை  மதவாதத் தேசிய உணர்வு இந்தியச் சமூகங்களிடையே ஏற்பட வாய்ப்பு மிகக்குறைவு.

இந்து என்ற பொது அடையாளம் உருவாவதும், திடப்படுவதும் சாதி, மொழி, இனம், நிறம், சமய வழக்குகள், சடங்கு வேறுபாடுகள், பலதெய்வப் பிரிவுகள், பொதுவான சமய நூல் இல்லாமை, குலக்-குடிச் சமயங்களின் வகைமை, தொல்குடி மக்கள், வனக்குடிச் சமூகங்கள் அதிக அளவில் இருப்பது, பொது வரலாறு அற்ற நிலை எனப் பல காரணங்களால் அவ்வளவு இலகுவில் நடக்க வாய்ப்பு இல்லை.

பகவத் கீதையைத் தேசிய நூலாக வைத்தால் சைவ, சாக்தேய, கௌமார, காணபத்திய மக்கள் தொகை அந்நியப்பட்டுப் போகும். ஏற்கனவே ராமராஜியம், ராமஜன்ம பூமி என்ற கட்டமைப்பு சைவ, வைணவ மேலாதிக்கப் போட்டியுணர்வின் காரணமாக தளர்ந்து போனது. பிராமண, சனாதன, வைதிக மையம் கொண்ட இந்து ஆதிக்கம் சூத்திர, சத்திரிய இடைநிலைச் சாதிகளிடம் பெயரளவில் இருக்கலாமே தவிர ஒரு சமூக உளவியலாக மாறுவதில் சிக்கல் இருக்கும்.

மதச்சிறுபான்மையினர் தம்மை அடக்கி ஆள்வதாகவோ, அவர்களே  இந்தியா பொன்னாடாக மாறுவதைத் தடுத்துக் கொண்டே இருப்பதாகவோ அனைத்து இந்து-இந்தியச் சமயத்தினரையும் நீண்ட நாட்கள் நம்ப வைக்க முடியாது. பாகிஸ்தான் மீதான வெறுப்பைத் தீமூட்டி வளர்த்து பால் கொதிக்க வைக்க முடியாது. அதற்கு எரிவாயு தாருங்கள் என மக்கள் கேட்க அதிக காலம் ஆகாது.

மையப்படாத ஒரு மதம், தன்னளவில் ஒருமைப்படாத ஒரு சமயம் எதிர்நிலை, வெறுப்பு உளவியலை மட்டும் வைத்துத் தன்னை தேசிய அடையாளமாக உருவாக்கிக் கொள்ள முடியாது. பாரதிய ஜனதா கட்சியில் ஆட்சியில் இருப்பவர்கள், அமைச்சர்களாக இருப்பவர்கள் பேசுவது ஒன்று,  மக்கள் மத்தியில் உள்ளூர் தலைவர்கள் பேசுவது அதற்கு எதிரான ஒன்று. சாமியார்கள், சாமியாரினிகள் பேசுவது தம் கட்சியின் கொள்கையல்ல என்று தினம் அறிவிக்க வேண்டிய கடமை இன்றைய தலைமை அமைச்சருக்குத் தரப்பட்டிருக்கிறது. இரண்டு மடங்களைச் சேர்ந்த இருபது சாமியார்களை இரண்டு நாட்கள் ஒரே இடத்தில் அடைத்து வைத்துப் பாருங்கள்  இவர்கள் பேசும் ஆன்மிகத் தேசியம், தேசிய ஒற்றுமை என்பதன் நிறம் என்ன என்பது தெரியும். இந்த வேறுபாடுகளின் காரணமாக இந்துத்துவா ஒரு அச்சுருத்தும் பேச்சாகத் தொடர்ந்து இருக்கலாமே தவிர அரசியல் கட்டமைப்பாக மாற வாய்ப்பு குறைவு.

இந்து சமயங்களில் ஒன்றைப் பின்பற்றி, இந்தியத் தெய்வங்களில் ஏதாவதொன்றை வழிபட்டு இந்து என அடையாள அட்டையில் பதிவு செய்து வாழ்வதும் இந்துத்துவ அரசியலை ஏற்று, இந்து மதவெறி இயக்கமாகச் செயல்படுவதும் ஒன்றிணைய வேண்டிய தேவை இல்லை. காங்கிரஸ் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, காமராஜர் ஆட்சி என ஏதாவதொன்றைப் பற்றிக் கொண்டு இந்து அடையாளத்தையும் எந்த வில்லங்கமும் இன்றி மக்கள் தொடர வாய்ப்புகள் உண்டு. இந்த நிலைதான் இந்துத்துவ பாசிசத்திற்கு இடைஞ்சலாக இருக்கிறது, காந்தியைக் கொன்று இந்த நிலைக்கான அடையாள எதிர்ப்பை இந்துத்துவ அரசியல் முன்பு நிகழ்த்திக் காட்டியது. தற்பொழுதுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி கல்வி, அறிவுத்துறை, வரலாற்றுப் புனைவுகள், தொன்மங்களின் மீட்டுருவாக்கம், புராணிக அழகியல், கலை-இலக்கிய வடிவங்கள், கருத்தியல்  தளங்கள், பன்முனை ஊடகங்கள் என அனைத்தின் வழியாகவும்  இதனை மறுகட்டமைப்பு செய்யும் முயற்சிகள்  நடக்கும்.

இதன் ஒரு பகுதியைத்தான் நீங்கள் “இந்துமத மேலாண்மைச் சிந்தனைகளை விதைக்கும், வளர்க்கும் எழுத்து முயற்சிகள் தமிழில் முன்னெடுக்கப் பட்டால்” என்ற வரியாக முன்வைத்திருக்கிறீர்கள். இது இன்று நேற்றல்ல இலக்கிய வரலாறு தொடங்கிய காலத்திலிருந்து நிகழ்ந்து கொண்டிருக்கும் போராட்டம். தமிழ் அச்சு ஊடகம் தொடங்கப்பட்ட போதும் இந்தப் போராட்டம் புதுப்பிக்கப்பட்டது. பக்தி அரசியல் ஒவ்வொரு காலகட்டத்திலும் இருந்து கொண்டே இருக்கும், ஆனால் தமிழில் சிறு தெய்வ மரபுகளும், குலதெய்வ மரபுகளும் வைதிக மையப்படாத இணை மரபுகளும் இதனை கலைத்துக் கொண்டே இருக்கின்றன.

ஒடுக்கப்பட்டோர், ஊருக்கு வெளியே இருக்கும்படி ஒதுக்கி வைக்கப்பட்டோர் மரபுகளும்  இந்து-வைதிக அதிகாரத்தை ஏற்கக் கூடியவை இல்லை. தமிழ்ப் பண்பாடு பற்றிய நவீன கட்டமைப்பு தெரிந்தோ தெரியாமலோ பகுத்தறிவுச் சார்புடையதாக மாறியிருக்கிறது. தொல்தமிழர் வாழ்வு சாதி-வர்ணப் பகுப்பற்றது என்று சொல்லிக் கொள்வதில் நமக்கு விருப்பம் இருக்கிறது. வள்ளுவ மரபைத் தமிழ் அடையாளமாக வைத்துக் கொள்வதில் பெருமை கொள்ளும் சமூகம் நமது.  பெரியாரிய, மதமறுப்புச் சிந்தனைகளை ஒரு புறம் வைத்துக் கொண்டே இந்தியாவிலேயே அதிகக் கோயில்களைக் கொண்ட மண் என்ற பெருமையை தினம் ஒரு புதிய கோயில் கட்டுவதன் மூலம்  தக்கவைத்துக் கொள்ளும் சமூகமும் இது.

பிராமணரல்லாதோர் அரசியல் தொடங்கிய இடம் என்று வரலாற்றுப் பெயர் பெற்ற போதும் பிராமணச் சமூகத்திற்குக் கோயில் கருவறை முதல் குடும்ப நிகழ்ச்சிகள்வரை அதிக மரியாதையை வழங்கி முன்பு வழக்கில் இல்லாத புதிய புதியச் சடங்குகளைப் பெருக்கி அவர்களுக்குத் தடையற்ற வருமானத்திற்கு வழிசெய்து தருவது,  உணவு விடுதிகள், திருமண நிகழ்வுகள் என அனைத்திலும் பிராமணாள் கைப்பதம் என்ற ஒரு நவீன வழக்கத்தை உருவாக்கிப் பேணுவது,  ஊடகங்கள் தொடங்கி உள்ளூர் பஜனை மடங்கள் வரை அய்யர் பேச்சுக்கு அடுத்த பேச்சு கிடையாது என்ற அழிச்சாட்டியங்களை அசட்டுத்தனமாக ஏற்று நடப்பது போன்ற வழக்கங்கள் மூலம் கலப்புத் தன்மை கொண்ட சமூகமாகத்தான் நம்மை வைத்துக் கொண்டிருக்கிறோம்.

இந்தப் பின்னணியில்தான் நாம் ஒன்றைக் கவனிக்க வேண்டும் இந்துமத மேலாண்மைச் சிந்தனைகள் இங்கு தொடர்ந்து இருந்து வந்தாலும் அது இந்துத்துவ, இந்து மட்டும் என்ற அரசியலாக மாறியதில்லை. ஒருவர் மலையாளி  எனத் தெரிந்தே தமிழர்கள் அவரைத் தங்களின் பொன்மனச் செம்மலாகத் தயக்கமின்றி தேர்ந்தெடுத்திருக்கிறார்கள், மராத்தியர் என்று தெரிந்தே ஒரு நடிகரைத் தமிழ் நாட்டின்  ‘வாழும் தெய்வம்’ என்று கொண்டாடு கிறார்கள்.  இது மற்ற மொழி மாநிலங்களில் நடக்க முடியாத அடையாள முரண்.

இதே போன்றுதான் சிலர் பேசித் திரியும் இந்துத்துவம், இந்து தேசியம் போன்ற புனைவுகளையும் தமிழ்ச் சமூகம் கேட்டு ரசிக்குமே தவிர அதனைத் தன் அரசியலாக ஏற்காது. தமிழர்களைச் சுரண்டி வாழ்கிறார்கள் என்று  இஸ்லாமிய வெறுப்பை, கிருத்துவ வெறுப்பை இங்கு யாரும் கொளுத்திவிட முடியாது. அப்படிக் கொளுத்த நினைத்தால் அந்த வெறுப்பின் தனல் முதலில் வட இந்திய முதலாளிகள், தெலுங்கு, கன்னட, மலையாள  ‘மொழி வழி மாற்றாள்’ என்று அறியப்பட்ட இந்துமதப் பகுதியினரைத்தான் முதலில் வருத்தத் தொடங்கும். அப்போது இந்துத்துவ தீர்த்தம் மருந்தாக வந்து காப்பாற்ற முடியாது. தமிழகத்தில் உள்ள இந்தக் குழப்பமான நிலை மாற்று அரசியலுக்குச் சார்பாகவும் அமையாது. அப்படியெனில் மாற்று அரசியல் பண்பாட்டு இயக்கங்கள் தம் பணிகளை மறுஆய்வு செய்து புதிதாகத் திட்டமிட வேண்டும்.

பெண்ணிய, தலித்திய, சூழலரசியல், இடதுசாரி இயக்கங்கள் ஒன்றிணைந்து தமிழ்ச் சூழலுக்கான மாற்றுச் செயல் திட்டங்களை வகுக்க வேண்டும்.  இந்த மறுகோட்பாட்டாக்க முயற்சி நடந்து விடக்கூடாது என்பதில்தான் இன்றைய இலக்கிய-பண்பாட்டு பிற்போக்குக் குழுக்கள் மிகக் கவனமாக உள்ளன. இதற்கெதிரான நுண்கிருமி தாக்குதல்கள் தான் வீண்முரசு, உப்புப் பாண்டவம், ஆட்டோபிக்கிஷன் என்ற பெயர்களில் நடத்தப்படுகின்றன.  அரசியல் தளத்தில் இடைநிலைச் சாதிகளின்   இந்துத்துவ சார்பு நிலை  இன்னும் விரிவான வடிவங்களில் செயல்படக்கூடும்.

தமிழ் மரபின் பவுத்த, சமணச் சிந்தனைகளையும் சிந்தனையாளர்களையும் மீட்டுருவாக்கம் செய்து பொதுச் சொல்லாடல் களங்களில் விவாதிப்பது மாற்று அறிவு என்ற வகையிலும், தமிழ் அறிவு மரபு பன்மைத் தன்மை கொண்டது என்பதைத் தொடர்ந்து நினைவூட்டுவதற்கும் பயன்படும். ஆனால் நவீன அரசியல்-பொருளாதாரச் சூழலுக்குப்பின் நிலவும் மனிதத் துன்பியல்கள், சிக்கல்களுக்கு நவீனத் தளத்தில் இருந்துதான் தீர்வுகளைத் தேட வேண்டும், இந்த நிலையைத்தான் பின்நவீன நிலை என்று சொல்கிறோம், இந்த இந்திய-தமிழ் பின்நவீன நிலை மிகுந்த அரசியல் தன்மை கொண்டது.

பின்நவீன நிலையைப் புரிந்து கொள்ள நாம் பயன்படுத்தும் கோட்பாட்டு முறைகள்தான் பின்நவீனத்துவ  பன்மை அறிவுமுறைகள். பின்நவீனத்துவம் என்றவுடன் உங்களுக்கு நினைவுக்கு வரும் ஒரு கருத்து, ஒரு எழுத்தாளரின் பெயர் எது? அதனைத் தொடக்கப் புள்ளியாக வைத்துதான் தமிழின் தற்கால கருத்தியல் உரையாடலில் நீங்கள் எந்தத் தளத்தில், எந்த இடத்தில் இருக்கிறீர்கள் என்பதை நாம் விளக்க முடியும்…

இது இப்படியிருக்க இந்தக் கேள்வியின் இன்னொரு விளிம்பும் கவனத்திற்குரியது.

மத்திய அரசில் தற்போது ஏற்பட்டிருக்கும் ஆட்சி மாற்றத்துக்குப்பின் இந்துமதவாத பிற்போக்குச்சக்திகள் தங்களைத் தாங்களே ஊக்கப்படுத்திக் கொள்ளும் முயற்சியில் நிச்சயம் ஈடுபடுவார்கள். அனைத்துத் துறைகளிலும் தம் அடியவர் கூட்டத்தை இருத்தி வைக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பார்கள். இது அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் ஆட்சியில் உள்ள போது செய்யக் கூடிய வேலைதான். ஜனநாயக ஆட்சி அரசியலில் இவை நடப்பதைத் தடுக்க முடியாது. ஆனால் இந்துத்துவச் சக்திகள் ஜனநாயகத்தைவிடச் சாமியார் நாயகத்தை அதிகம் நம்புகின்றன. இவர்கள் தங்களின் உண்மையான திட்டங்களை நிறைவேற்றத் தொடங்கும்போது பத்தாண்டுத் திட்டமாக பாஜக அரசைக் கட்டி எழுப்பிய முதலாளித்துவ சக்திகள்கூட கோபமடைவார்கள். இந்திய மக்கள் இவர்களிடமிருந்து அந்நியப்படுவார்கள்.

பாரதமாதா, அகண்டபாரதம், சமஸ்கிருதச் சங்கீதம் எனக் குறியீட்டு நாடகங்களைத் தொடரும் அளவுக்கு சாமிகள் நாயக அதிகாரத்தை வளர்க்க முடியாத கோபத்தில் ஆட்சித் தலைமையை சாதுக்கள் முறைப்பார்கள். பிரசாதம் கொடுத்து மக்களை அடிமைகளாக வைத்துக் கொள்ள முடியாது என்பதைத் தெரிந்து கொண்ட ஆட்சித் தலைவர்கள் புதிய திட்டங்களைத் தீட்டும் போது கட்சியின் மூத்த பரிவாரங்கள் அவற்றை வெறுத்து ஒதுக்குவார்கள். இவர்களுக்கிடையில் உள்ள உயர்குல பிராமணர்கள் மற்றும் சேவை செய்யும் பிறர் என்ற உள்பகை வெளித் தெரியாதது, ஆனால் மிகக் கடுமையானது. இது ஆட்சியில் இருக்கும்போது வலிமையாக வெளிப்பட்டு பெரும் மோதல்களை ஏற்படுத்தும். இது எல்லாம் ஒருபுறம் இருந்தாலும் பெண்கள், ஒடுக்கப்பட்ட -தலித் சமூகங்கள்,  மதச் சிறுபான்மையினர், இடதுசாரிச் சிந்தனையு டையோர் அனைவரும் இந்துத்துவ மதவாத அதிகாரத்தை வெறுப்பவர்கள் மட்டும் இல்லை, அதனைத் தினவாழ்வில் எதிர்ப்பவர்களும் கூட, இந்த மக்கள் இந்தியாவின் 60 சதவிகிதத்திற்கு மேற்பட்டவர்கள் என்பதைக் கவனத்தில் கொண்டால் மத்திய அரசில் தற்போது ஏற்பட்டிருக்கும் ஆட்சி மாற்றத்துக்குப்பின் இந்துத்துவம் அழிந்து இந்தியத் தன்மை என்ற கலப்பு அரசியலை அனைவரும் கற்க வேண்டிய தேவை உருவாகும்.

குருஜி மாதவ் சதாசிவ் கோல்வால்கர் இந்து தேசம் என்றால் என்ன என்பதை இவ்வாறு வரையறுத்துள்ளார் “தர்ம, அர்த்த, காம, மோக்ஷ என்ற சதுர்வித புருஷார்த்தங்களான நான்கு மகத்தான நோக்கங்களின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட சமூகம் அது”. சதுர்வித புருஷார்த்தங்களை ஏற்றால் சத்வம், ராஜசம், தாமசம் என்ற மூன்று குணங்களையும், சதுர் வர்ணியம் என்ற நான்கு வர்க்கப் பிரிவினையையும், தெய்வ சம்பத்து கொண்ட மக்கள் அசுர சம்பத்து கொண்ட மக்கள் என்ற மக்கள் பிரிவினையையும் நாம் ஏற்க வேண்டியிருக்கும். கீதை கூறுகிறது “அசுர ஜனங்கள் செய்யத்தக்க நல்வினையையும் விலக்கத்தக்க தீவினையையும் உணர மாட்டார்கள். அவர்களிடம் சுத்தம் இல்லை, நன்னடத்தை இல்லை, உண்மை இல்லை.”

இந்து என்ற மத அடையாளம் சீக்கிய, ஜைன, பௌத்த சமயங்களையும் உள்ளடக்கியதாக நம் அரசியல் சட்டம் அடையாளப்படுத்தியுள்ளது. இதனைக் குறிப்பிட்டு சீக்கியர்கள் உள்ளிட்ட யாரும் தங்களைத் தனியாக அடையாளப்படுத்திக் கொள்ளக்கூடாது என கோல்வால்கர் கூறுகிறார். அதனால் இந்து தேசியம் என்ற திட்டம் இந்தியாவின் பன்மயப் பட்ட இந்தியச் சமயங்களை கீழ்மைப்படுத்தும் வைதிக மையம் கொண்டதாக உள்ளது, இந்துத்துவம் என்பது பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பழங்குடிச் சமூகங்களை நிரந்தரமாக விளிம்பு நிலையில் வைத்திருப்பதற்கான உள்நோக்கம் கொண்டது.

“இந்தியா இனி புண்ணிய பூமியாக மாறும், பாரத சன்ஸ்கிருதி மீட்கப்படும்… எங்கள் ஆட்சி இனி இந்து தர்மத்தை எல்லா இடத்திலும் நிலைப்படுத்தும், ஜீ இன்னும் எத்தனை காலத்திற்கு  சோஷலிசம், அம்பேத்கர் என்று பிற்போக்குக் கருத்துக்களை நம்பி ஏமாறப் போகிறீர்கள்  நம்ம கட்சியில சேருங்க ஜீ, உங்களுக்கு உள்ள ஹிதிகாச, காவ்ய, சம்ஸகிருத இலக்கியம், உலக இலக்கிய அறிவுக்கு எங்க கட்சி உங்கள எங்கேயோ கொண்டு போகும்…” இதனைக் கூறியது என்னிடம் சில மாதங்கள் மட்டும் வந்து இலக்கியம் கற்ற ஒரு முன்னாள் மாணவர், இன்னாள் அகில பாரதிய விசுவ இந்து பரிஷத் மாணவச் செயல்வீரர்.  டெல்லி பல்கலைக் கழகத்திற்கு வந்து வாரம் 12 மணிநேரம் இந்திய இலக்கியம், 6 மணி நேரம் உலக-இந்திய சினிமா எனக் கற்பிக்கத் தொடங்கி 10 ஆண்டுகள் முடியப் போகிறது. இந்த காலகட்டத்தில் இந்த ஒரு மாணவர் மட்டும்தான் என்னை எத்தனை பெரிய கூட்டத்திற்கு நடுவில் பார்த்தாலும் குனிந்து பாதத்தைத் தொட்டு பிரணாம் குரு ஜீ என்று வணங்கும் பழக்கமுடையவர். இது என்ன வட இந்தியப் பழக்கமா என்று கேட்ட போது இல்லை ஜீ இதுதான் பாரதப் பண்பாடு என்று விளக்கம் சொன்னவர். இவர் தூரத்தில் வருவதைப் பார்த்தாலே பாதத்தை மறைத்து ஓடி ஒளிவது எனக்குப் பழக்கம். அவர் அப்படிக் கூறியபோது நானும்கூட கொஞ்சம் நெகிழ்ந்து தான் போனேன்.

சற்றே தெளிந்து அவரிடம் சொன்னேன் “அன்பான ராம் பி…. நான் உங்கள் கட்சியில் சேர சில நிபந்தனைகளை வைக்கிறேன்.  உங்கள் புனிதத் திட்டப்படி கங்கை யமுனை இரண்டின் கரைகளிலும் உள்ள தொழிற்சாலைகள் அனைத்தையும் மூடுவதுடன் இந்திய நதிகள் அனைத்தையும் கங்கையின் அம்சமாக அறிவித்து ரசாயனக் கழிவுகளைத் தடை செய்யச் சட்டம் கொண்டு வர வேண்டும், இந்திய மரபான இயற்கை மது வகைகளைத் தவிர மேற்கத்திய மது உற்பத்தி மற்றும் விற்பனை அனைத்தையும் தடை செய்ய வேண்டும், இதனை ஒரு ஆண்டுக்குள் செய்ய முடியுமா?” அவர் மீண்டும் ஒரு முறை பாதத்தைத் தொடக் குனிந்தார், இது விடை பெறுவதற்கானது. அவர் போகும் போது சொன்ன வாசகம் இதுதான்  ‘ஜீ நீங்கள் இதன் மூலம் இரண்டு செய்திகளைச் சொல்லியிருக்கிறீர்கள். ஒன்று ஒரு ஆண்டில் பாஜபாவை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கான திட்டம், மற்றது நீங்கள் உயிருடன் இருக்கும் வரை எங்கள் கட்சியில் சேரப் போவதில்லை என்பது. வருத்தமாகத்தான் உள்ளது ஜீ!’    “ஆமாம்  பாண்டே… உங்களைப் போன்ற அறிவுக் கூர்மை கொண்டவர்கள்கூட அந்தக் கட்சியில் இருப்பதை நினைக்கும் போது எனக்கும் வருத்தமாகத்தான் உள்ளது, பார்க்கலாம் நன்றி!”

அதனால்தான் கூறுகிறேன்… இந்து மதவாத பிற்போக்குச் சக்திகள் ஊக்கம் பெறலாம் ஆட்சியைப் பிடிக்கலாம், ஆனால் மக்களின் அன்பை, மதிப்பைப் பெறமுடியாது. மக்களின் அன்பைப் பெற உண்மையாக முயற்சித்தால் பன்னாட்டு முதலாளிகளின் கருணையைப் பெற முடியாது.

உரையாடல் : 5-3 இப்படியொரு மார்க்சியம் இருக்க இயலாது-பிரேம்

உரையாடல் : 5-3  இப்படியொரு மார்க்சியம் இருக்க இயலாது

கேள்வி:

உலக முதலாளித்துவம் மற்றும் மாற்று அரசியல் குறித்து ஒரு அடிப்படையான கேள்வி. பெண்ணரசியல், சூழலரசியல், சிறுபான்மை இன, மத மக்களுக்கான உரிமையரசியல், மூன்றாம் பாலினத்தவர்க்கான அரசியல் என்பதெல்லாம் மேல்தட்டு அறிவுஜீவிகள் உலகு தழுவிய முதலாளித்துவம் எனும் பேரரசியல் தளத்தை ஏற்று அதற்குள்ளாகவே மேற்கண்ட உரிமைசார் போராட்டங்களை நிகழ்த்தும் களனாக மாற்று அரசியல் களத்தை மாற்றும் முயற்சி எனவும், மேற்கண்ட மாற்று அரசியல் செயல்பாடுகளை அங்கீகரிக்கவும், அவற்றையும் தம் வர்த்தக, லாப, நோக்கில் கையாளவும் உலக முதலாளித்துவ சக்திகளே தயாராக உள்ளது எனவும், (அமெரிக்க அதிபர் ஒபாமாவின் சமீபத்திய இந்திய வருகையின்போது மதச் சார்பின்மை மற்றும் பெண்களின் சமூகப் பங்களிப்பு குறித்து அவர் தெரிவித்த கருத்துக்கள், உலகை குப்பைக் காடாக மாற்றிய மேற்குநாடுகளே சூழலியல் குறித்து கவலை தெரிவிப்பது, அணுமின் நிலையங்கள் மரபார்ந்த மின் உற்பத்தி முறைகளை விட குறைவாகவே வெளியை மாசுபடுத்தும் என்ற பிரச்சாரம், மேற்குலக முதலாளித்துவ நாடுகளில் மூன்றாம் பாலினத்தவர்க்கு வழங்கப்படும் உரிமைகள், போன்றவற்றை நினைவில் கொள்ளலாம்) எனவே மக்களின் வாழ்வியலோடு தொடர்புடைய அனைத்தையும் தனியார் மயமாக்குதலையும், ஏகபோக பொருளாதாரக் குவிப்பை அடிப்படையாகக் கொண்ட உலகு தழுவிய முதலாளித்துவத்தையும் எதிர்த்து மீண்டும் அரசுடைமையாக்கம் பொதுவுடைமையாக்கம் என மக்களின் போராட்ட உணர்வுகளை ஒரு முனைப்படுத்துவதும்தான் தீர்வு, எனவும் சில மேற்குலக மரபு மார்க்சியர்கள் கூறிவருகிறார்களே அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்:

வாழ்வாதாரங்களையும் இயற்கை வளங்களையும் தனியார் மயமாக்குதல் மட்டுமல்ல மனித மயமானதாக, மனித மையத்தன்மை உடையதாக மாற்றுவதும் வன்முறையே. இந்த வன்முறையை அரசியல் மற்றும் சமூகச் செயல்திட்ட அடிப்படையில் முற்றிலும் இல்லாமலாக்கிவிட்டால் அரசுடைமையாக்கம், பொதுவுடைமையாக்கம் எல்லாம் தானாக நிகழ்ந்துவிடும். உயிர் மண்டலம் பற்றிய மனித அணுகுமுறை தன்மையத் தன்மை கொண்டது. தாவரங்கள், விலங்குகள், காற்று, நீர், மண் அனைத்தும் தனக்கானவை அவற்றை உடைத்தும் சிதைத்தும் திரித்தும் தனக்கானதாக மாற்றிக்கொள்ளலாம் என்னும் சுரண்டல் உணர்வுதான் உடைமை மற்றும் ஆதிக்க நடத்தையியலின் அடிப்படை. இது விலங்குகளிடம் இயற்கையானதாக, சமநிலை கொண்டதாக அமைந்துள்ளது. மனிதர்களிடம் பெருக்கப்பட்டதாக, அளவுகடந்த செயல் தந்திரங்களைக் கொண்டதாக விரிவுபட்டுள்ளது. விலங்குகள் தம் உணவுக்காகக் குறிப்பிட்ட சில விலங்குகளைக் கொன்று உண்ணுகின்றன, தம் பசியாறிய பின் ஒய்வு கொள்கின்றன. கொல்லப்படும் நிலையில் உள்ள விலங்குகள் தம் உயிரைக் காக்க விழிப்புடன் இருப்பதுடன் ஓயாமல் தப்பி ஓடியபடியும் உள்ளன. ஒரே இரைக்காக இரண்டு இன விலங்குகள் மோதிக் கொள்கின்றன, ஒரு  இனத்திற்குள்ளான உணவுப் போராட்டமும் கூட மோதலாக, கொலையாக மாறுகின்றன. தாவரங்கள்கூட ஒன்றுடன் ஒன்று போட்டியிட்டும் ஒன்றை ஒன்று அடக்கியும் தம் இனத்தைப் பெருக்கிக் கொள்கின்றன. இந்த இரக்கமற்ற இயற்கைச் சுழலின் இன்னொரு பகுதியில் ஒன்றுடன் ஒன்று இணைந்தும் உதவியும் வாழும் உயிர்ச்சூழலும், இன வாழ்க்கை மற்றும் இணக்க வாழ்க்கை கொண்ட உயிர் மண்டலமும் இருக்கவே செய்கின்றது. மனிதர்களிடம் உள்ள சிக்கல் இந்தப் பண்புகள் அனைத்தும் கலந்து கிடப்பதுடன் இவற்றை விளக்குவதற்கான மொழியும் நம்மிடம் உள்ளது. விலங்குகள் உயிர்வாழவும் உயிரைப் பாதுகாத்துக் கொள்ளவும் செய்யும் வேட்டையாடுதல், மோதியழித்தல், பின்வாங்குதல், பதுங்குதல் போன்ற இயல்பான செயல்கள் மனிதர்களிடம் போர்த்திறனாகவும் போர்த்தொழில் உத்தி யாகவும் பெருக்கமடைந்துள்ளன. இந்த அளவுகடந்த பெருக்கத்தின் ஒரு பகுதிதான் நமக்குள் படிந்துள்ள தனியுடைமை, முதலாளித்துவம், ஆதிக்கம், அதிகாரம், அடக்கு முறை, இன ஒடுக்குதல், உலக மயமாக்கம், உரிமை மறுத்தல், உரிமைக்கான போராட்டம், அடிமைப்படுத்தல், விடுதலைக்காகப் போராடுதல் எல்லாம்.

முதலாளித்துவம் மற்றும் தனிவுடைமை சார்ந்த அரசியல் பொருளாதாரத்தின் உளவியல் அடிப்படைகளை உற்றுக் கவனிக்கும் போது ஒன்று நமக்குப் புரிய வரும். தன் தேவைகளுக்கு அதிகமாகச் சேமித்தல், மற்றவர்களுக்கு உரிய பங்கையும் தானே நுகர்தல், மற்றவர்களை விடத் தன் வாழ்வின்பங்களை பலமடங்கு பெருக்கிக்கொள்ளுதல் என்னும் சில நடத்தை முறைகள் முதல் பார்வையில் தெரியக் கூடியவை. ஆனால் இதன் கடுமையான மறுபகுதி மிகுந்த வன்முறை கொண்டது. தான் உண்ணுவதில் இன்பம் காணுதலைக் கடந்து மற்றவர்களை உண்ணவிடாமல் செய்தலில் பெரும் இன்பம் காணுதல், தான் நுகரக் கூடியவைகளை மற்றவர் நுகரவிடால் செய்து களிப்படைதல், தான் இன்பம் நுகர்வதை விட மற்றவர்கள் துன்புற்று வலியுடன் வாழ்வதில் இன்பம் பெறுதல், தான் சுதந்திரமாக இருத்தலை விடத் தனக்குச் சிலர் அடிமைகளாக இருந்து துயரடைவதில் பெருமை கொள்ளுதல் என்னும் சமூக உளவியலின் மீதுதான் அதிகாரம், ஆதிக்கம், மூலதன அரசியல், தனிவுடைமைச் சட்டவிதிகள் கட்டப்பட்டுள்ளன. மார்க்சியத்தை அதன் அறவியல் அடிப்படையில் புரிந்து கொண்டால் விடுதலை, சமத்துவம், சமநீதி என்பவை வெறும் அரசுடைமையாக்கம், பொதுவுடைமையாக்கம் என்பதில் தொடங்கு வதுமில்லை அதில் முடிவதும் இல்லை என்பது புரியவரும்.

மனித சமூக அமைப்பாக்கம் முதலில் தனிமனிதர்களிடம் உள்ள தற்காப்பு, தன்னை நிலைப்படுத்திக் கொள்ளும் தன்மை (இவை விலங்குகளிடம் பிறந்தது முதல் இறப்பது வரை தொடரும் பண்பு) என்பனவற்றைக் குறைத்து  இன அடையாளத்தை உருவாக்கி இனம் சார்ந்த மனித நிலையை உருவாக்குகிறது. இந்த இனத் தன்மை தனிமனிதர்களுக்குச் சமூக அமைப்பு தரும் பாதுகாப்பு, வாழ்வாதாரங்கள் சார்ந்த ஒப்பந்தம் மற்றும் மரபான உறுதி மொழிகளின் அடிப்படையில் அமைவது. இந்த இனத்தன்மைதான் விலங்குகளையும் மனிதர்களையும் வேறுபடுத்தும் அடிப்படைக் களம். மனிதர்கள் தம்மை இனத்திடம், சமூகத்திடம், அரசிடம், அமைப்பிடம் ஒப்படைத்துவிடுகிறார்கள், மற்றொரு வகையில் அவற்றால்தான் தனிமனிதர்கள் உருவாக்கப்படுகிறார்கள். இதைத்தான் நாம் மனிதர்களின் அரசியல் நிலை என்கிறோம். இந்த இணைப்புதான் ஒவ்வொரு மனிதரும் தனக்கானதைச் சமூகத்திடம், அரசிடம், அமைப்பிடம் கேட்டுப் பெறும் உரிமையை வழங்குகிறது. அத்துடன் சமூகம் கட்டமைத்துள்ள விதிகளைப் பின்பற்றவும், சமூகத்திற்கான தன் பங்கை அளிக்கவும் கடமைப்பட்டவர்களாகத் தனிமனிதர்களை வைக்கிறது. விளக்க மிக எளிமையானது இந்தச் சூத்திரம்: உரிமைகளுக்கும் கடமைகளுக்கும் இடையிலான சமநிலை மற்றும் புரிந்துணர்வுதான் அரசியல் பொருளாதாரம். இதனை முறைப்படுத்தும் துணை அமைப்புகள்தான் பண்பாடுகள், மதங்கள், அறிவமைப்புகள், நீதி நிறுவனங்கள், அழகியல் செயல்பாடுகள் என்பன. இவற்றில் நிகழும் மாற்றங்களும், சிதைவுகளும் சமூகம், தனி மனிதர்கள் என அனைத்தையும் பாதிக்கும். மக்களின் போராட்ட உணர்வுகளை ஒருமுனைப்படுத்துவது என்பதுகூடத் தேவையில்லை, மக்களின் வாழ்வியல் உணர்வுகளை ஒருமுனைப்படுத்தினாலே வரலாற்றின் அத்தனைத் துயரங்களும் அநீதிகளும் நீக்கப்பட்டிருக்க முடியும். ஆனால் அது அவ்வளவு எளிதான செயல்பாடு இல்லை.

இவ்வளவு எளிமையான செயல்திட்டம் கொண்டதாக இருந்திருந்தால் 1992-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஐக்கிய அமெரிக்க அரசு தன்னை உடைத்துக் கொண்டு சோவியத் அரசியலுக்கு மாறுவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றியது, அதிபர் ஜியோர்ஜ் புஷ் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார், கியூபாவுடன் இணைய  சில அமெரிக்க மாகாணங்களும், சுதந்திர சோஷலிசக் குடியரசாக இருக்கச் சில மாகாணங்களும் முடிவு செய்தன என்பது போன்ற வரலாற்றுக் குறிப்புகளைத்தான் நாம் இன்று படித்துக் கொண்டிருப்போம். ஆனால் நடப்பியல் அப்படியில்லை, இன்று மிக அடிப்படையான மனித உரிமைகளை நிலைநிறுத்தவும், மக்களாட்சி நெறிகளை பாதுகாக்கவுமே மிகப்பெரும் போராட்டங்களை நிகழ்த்த வேண்டியுள்ளது. பொதுவுடைமைச் சமூகம் வரும்வரை பெண்ணரசியல், சூழலரசியல், சிறுபான்மை இன, மத மக்களுக்கான உரிமையரசியல் என்பவை பற்றிச் சிந்திப்பதோ பேசுவதோ முதலாளித்துத்தை போற்றிப் பாதுகாக்கும் முயற்சி என்று ஒருவர் நம்புவார் எனில் அதன் பொருள் “அரசியல் பற்றிச் சிந்திப்பது, அரசியல் அடைவது, விடுதலை உளவியல் என்பவை இன்றும் இனியும் சாத்தியமில்லை அதனால் செயலற்றுக் கிடந்து செத்து மடியலாம்” என்பதுதான்.

இந்திய அரசியலில் தீண்டாமைக் கொடுமை, சாதி அடுக்குமுறை பற்றிய மிக அடிப்படையான கேள்விகளை இடதுசாரி அரசியல் இப்படியான அறியாமையுடன் அணுகி ஒடுக்கப்பட்ட மக்களிடமிருந்து   அந்நியப்பட்டு நின்றது. சாதிச் சமத்துவம் அற்ற அரசியல் விடுதலை தனது மக்களை ஏமாற்றும் திட்டம் என்று உறுதியாகச் சொன்ன அம்பேத்கரை தேசியவாதிகள், தேசபக்தர்கள் என்ற பெயர்ச்சூட்டிக் கொண்ட ஒரு கூட்டம் ஏகாதிபத்திய கைக்கூலி என்று ஊளையிட்டுக் கொண்டிருந்தது.

இன்று வரலாறு நமக்குப் பலவற்றை ஈவு இரக்கமின்றிக் கற்றுத்தந்துள்ளது, விடுதலை அரசியல் ஒருமையான, ஒற்றை நெடுங்கோட்டுப் பயணமல்ல. தனிமனித உளவியல் தொடங்கி தனிநாடு கோரி போராடுவது வரை இன்று புதிய படிப்பினைகள் கிடைத்துள்ளன. மக்களின் போராட்ட உணர்வுகளை ஒருமுனைப்படுத்துவது என்றால் என்ன?  எதனை நோக்கி அந்தப் போராட்டம் அமையவேண்டும். மக்களின் போராட்டம் என்பது என்ன? ஏன் மக்கள் போராட வேண்டும்? மக்கள் எப்போதும் பொதுவுடைமை சமூகத்தை அமைக்கவும் உலக முதலாளித்துவத்தை அழிக்கவும்தான் போராடுவார்களா, அல்லது போராட வேண்டுமா? மக்கள் என்பது ஒற்றை அடையாளமா?

அமெரிக்க ஐக்கிய நாட்டில் தம் இனத்தாலும் நிறத்தாலும் அடிமைப்படுத்தல், ஒடுக்குதல், ஒதுக்குதல், இழிநிலைப்படுத்தல், உரிமை மறுத்தல் என்பவற்றால் துயருற்ற கருப்பின மக்கள் முதலில் அடிமை முறையிலிருந்து விடுபட்டு மனித நிலையுடன் வாழப் போராடினார்கள். பின்பு மனித மதிப்புடன் வாழப் போராடினார்கள், பிறகு மனித உரிமைகளுடன் வாழப் போராடினார்கள், அதற்கும் பிறகு சம உரிமைகள், சம அதிகாரம், சம பங்கு எனப் போராட்டத்தைத் தொடர்ந்தார்கள். இந்தப் போராட்டம் இன்று வரை சமூகம், பண்பாட்டுப் பொதுவெளி, அரசியல் தளங்களில் தொடர்ந்து கொண்டே  உள்ளது. அமெரிக்க குடிமைச் சட்டங்களும், உரிமைச் சட்டங்களும் மாற்றமைடைந்து கொண்டே உள்ளன. தனி உடைமையும் முதலாளித்துவமும் அழிந்து பொது உடைமைச் சமூகம் உருவாகும் வரை தனக்குப் பேருந்தில் உட்கார்ந்து செல்லும் உரிமையெல்லாம் தேவையில்லை என்று அமைதியாகச் செல்லாமல் 1955-இல் ரோசா பார்க் எதிர்த்து நின்றது மேல்தட்டு அறிவுஜீவிகளின் அரசியலா? 1959-இல் கியூபாவில் ஏற்பட்ட புரட்சிகர யுத்தம் தன் நாட்டில் கருப்பின மக்களின் வழியாகப் பரவிவிடக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாகவும் உலக அரசியலில் தன்னை வல்லாதிக்க நாடாக மாற்ற உள்நாட்டில் கருப்பின மக்களின் ஒத்துழைப்பு வேண்டும், அவர்களின் வலிமை வேண்டும் என்பதைக் கணக்கிட்டுத்தான் அமெரிக்கா கருப்பின அரசியலின் கோரிக்கைகளை சிறிது சிறிதாக ஏற்கத் தொடங்கியது என்பது மிக வெளிப்படையான உண்மை. இஸ்லாமிய தேசியம், மால்கம் எக்ஸ், மார்டின் லூதர் கிங், கருஞ்சிறுத்தைகள் இயக்கம் என எழுச்சி பெற்ற இன உரிமைப் போராட்ட உணர்வை அமெரிக்க வெள்ளை முதலாளித்துவம் தன் அரசியல் உத்தியாக மாற்றிக் கொண்ட போதும் அப்போராட்டங்கள் கருப்பின மக்களின் வாழுவுரிமைகளை மாற்றியமைத்துள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. பெண்ணிய அரசியல், சூழலியல் அரசியல் என்பவை முதலாளித்துவத்தை ஏற்ற மேல்தட்டு அறிவுஜீவிகளின் அரசியல் என்றால் மார்க்சிய, மாற்று அரசியலில் அவற்றிற்கு இடமில்லை என்று பொருளா?

மரபு மார்க்சியர்கள் அல்லது கட்சி மார்க்சியர்கள் அல்லது அலுவல் உரிமை பெற்ற மார்க்சியர்கள் என்ற பெயரில் யாரும் இன்று மார்க்சியத்திற்கு உரிமைகோர இயலாது. மார்க்சியம் என்பது மாற்றத்திற்கான அறிவுருவாக்கம், மாறுதல்களைப் புரிந்து கொள்ளும் அறிவாய்வு முறை, அதற்கெல்லாம் கடந்து விடுதலைக்கான அறம்.

பெண்ணியம், சூழலியல், அடையாள அரசியல், தன்னடையாளச் சுதந்திரங்கள் என்பனவற்றை மறுத்து விட்டு இன்றைய மார்க்சிய அரசியல் இருக்கவே இயலாது. இந்தியச் சமூகத்தில் அது இன்னும் விரிவாகத் தலித் அரசியல், பழங்குடி மக்கள் அரசியல், மொழி அரசியல் என்பவற்றையும் புரிந்து ஏற்ற அரசியலாக இருக்க வேண்டும். அப்படியெல்லாம் இல்லையென்று சொல்லும் ஒரு மார்க்சியக் கட்சி கொடிகாத்த குமரர்களைத்தான் உருவாக்க இயலும். அவர்களால் மக்களை காக்க முடியாது, மக்களும் அவர்களைக் காப்பது பற்றிச் சிந்திக்க மாட்டார்கள். இடதுசாரிகள் மாற்றங்களைப் புரிந்துகொள்ளத் தவறும் போது சிவப்பிந்திய இனத்தில் பிறந்த அமெரிக்க குடியரசுத் தலைவர் ஒருவர் 2025-இல் இந்தியக் குடியரசு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வருவார் மதச்சார்பின்மை, பெண்களின் சமூகப் பங்களிப்பு, இன ஒற்றுமை இவற்றுடன் சுதந்திரம், சோஷலிசம், சமத்துவம் பற்றியும்கூட இந்தியர்களுக்கு நினைவுபடுத்திவிட்டுச் செல்லுவார்.

உரையாடல் : 9 மறைக்க எதுவுமில்லை மக்கள் அரசியலில்-பிரேம்

உரையாடல் : 9  மறைக்க எதுவுமில்லை மக்கள் அரசியலில்

கேள்வி:

கல்வி நிறுவனங்கள், ஊடகங்கள், போன்றவை ஊழல ரசியலதிகாரங்களின் பிடியில் சிக்கியுள்ளன. வளரிளம் தலைமுறையின் வாசிப்பு என்பதும் சமூக வலைதளம், மற்றும் இணையத்தோடு முடிந்துவிடுகிறது. இந்த நிலையில் மாற்று அரசியல் சிந்தனைகள், சீரிய கோட்பாட்டு விவாதங்கள், அறிவார்ந்த செயல்பாடுகளின் களங்களாக எவற்றை அமைத்துக் கொள்வது? அவைகளும் இணையத்தின் வாயிலாகத்தான் மேற்கொள்ளப்பட வேண்டுமெனில் அவை தீவிரக் கண்காணிப்புக்குள்ளாவதை எவ்வாறு எதிர்கொள்வது?

[ராஜகாந்தன்,அசோக்ராஜ்,கருணாகரன்]

பதில்:
பிரேம்
கல்வி நிறுவனங்கள், ஊடகங்கள் எப்போது மக்களுக்கானதாக மக்கள் கையில் இருந்திருக்கிறது? மக்கள் அரசியல் செய்வோர், மக்களுக்காகச் சிந்திப்போர் அதில் இடம் பிடித்து விடுதலை அறிவை மக்களுக்குக் கொண்டு சேர்க்க வேண்டும். மக்களுக்கான அதிகாரம், மக்கள் உரிமை என்பவை நவீனக்கல்வி, ஊடகம் இரண்டுக்கும் அடிப்படையானவை. அதனால் மாற்றத்திற்கான, மக்கள் அரசியலுக்கான கூறுகளை அவற்றில் இருந்து முழுமையாக யாரும் நீக்கிவிடவும் முடியாது.
இன்றுள்ள இந்தியத் தமிழக அரசியல் கட்டமைப்பும் அதிகார அமைப்புகளும் கலப்பான தன்மை கொண்டவை. மக்கள் அரசியல், மக்கள் ஆட்சி, மக்களுக்கான அதிகாரம், நீதியை அடிப்படையாகக் கொண்ட சமூகச் செயல்பாடுகள், அனைவருக்குமான வாழ்வுரிமை என்பதான நவீன மதிப்பீடுகள்தான் நம் காலத்திய அரசு மற்றும் அரசியல் செயல்பாடுகளின் அடிப்படைகள். இந்தச் சமத்துவ மனித உரிமை அரசியலையும் நவீன அரசதிகாரத்தையும் முற்றிலும் வெறுக்கக்கூடிய, படிநிலை அடிமைமுறையை காக்க நினைக்கும் சக்திகளின், சமூகக் குழுக்களின் கையில்தான் இன்றுவரை இந்திய அரசியல் அதிகாரம் இருந்து வருகிறது. நீதி மன்றங்களில் சாதிவெறி கொண்டவர்களின் ஆதிக்கம் நிறையும்போது ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பழங்குடி மக்களுக்கு நீதி கிடைப்பதற்கு வாய்ப்புகள் இல்லை. பெண்களைப் பாதுகாக்கச் சட்டங்கள் இருந்த போதும் காவல்துறையும், நீதி மன்றங்களும் ஆணாதிக்கத்தின் கருவிகளாக இருப்பதால் பெண்களின் மீதான வன்முறையும் அவமதிப்பும் அந்த இடங்களில்தான் அதிகம் நிகழ்கின்றன. சாதி மற்றும் தீண்டாமை உளவியல்தான் இந்தியக் குடிமைச் சமூக மதிப்பீடுகளை, பழகு முறைகளை இன்றுவரை செயல்பாடற்ற நிலையில் வைத்துள்ளன. அனைத்து மக்களும் பயன்பெறும் கல்வி, மருத்துவம், பொதுப் போக்குவரத்து, பொதுப்பணிச் சேவைகள் போன்றவற்றைப் ‘பள்ளுபறை’ அனைத்துச் சாதிகளும் பயன்படுத்த முடியும் என்பதே பலருக்கு வெறுப்பை ஏற்படுத்தி அவற்றைச் சீரழிப்பதை திட்டமிட்டுச் செய்ய வைக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்கள் வாழும் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் மருத்துவர்கள் நடந்து கொள்ளும்முறை, அவர்கள் பயன்படுத்தும் இழிமொழிகள் தன்மதிப்பு கொண்ட யாராலும் சகிக்க முடியாத அளவுக்கு இருப்பதை இந்தியாவில் அனைத்துப் பகுதிகளிலும் நாம் காணலாம்.
நவீன அரசியல் உயர் மதிப்பீடுகளை செயல்பாடில்லாமல் ஆக்கவும், அவற்றை அழிக்கவும் பயன்படும் கருவிகளில் ஒன்றுதான்  ஊழல் என்ற சமூகக் குற்றம். மக்கள் ஆட்சிமுறையைப் பற்றி மக்களிடம் அச்சத்தையும், வெறுப்பையும் உருவாக்க ஊழல் செயல்பாடுகள் பயன்படுத்தப் படுகின்றன.  மக்களின் வாழ்வாதாரத்தை, தேசியப் பொருளாதாரத்தைக் கொள்ளையிடுவது மட்டுமல்ல ஊழலின் கொடுங்கேடு. சுதந்திரம், சமத்துவம், சமநீதி என்பவற்றை அழிப்பது, இழிவு படுத்துவது மூலம் நம் சமூகத்தை ஊழல் செயல்பாடுகள் மிக ஆழமாகப் பாதிக்கின்றன. ஊழலரசியல் அதிகாரம் என்பது பல அடுக்குத் தீமைகள் கொண்டது. நவீன, பகுத்தறிவு மரபுகள்  மக்களிடம் உருவாகாமல் இருப்பதற்கு இந்தத் தீயசக்திகள் அனைத்து ஊடகங்களையும் பயன்படுத்துகின்றன, ஆனால் ஊடகங்களை முழுமையாக அவற்றால் கட்டுப்படுத்திவிட முடியாது.
மாற்றம் பெற விரும்பும் ஒரு சமூகத்திற்கு அதற்கான அறிவை, அழகியலை, அடையாளத்தை உருவாக்க இயக்கங்கள் வேண்டும், அவற்றைப் பரவலாகக் கொண்டு செல்ல பல்வேறு ஊடகங்கள் வேண்டும். இவற்றில் இணையமும் வலைதளங்களும் குறியீட்டு ஊடகங்கள் தானே தவிர முழுமையான மக்கள் ஊடகங்கள் அல்ல. மாற்று அரசியல் சிந்தனைகள், செறிவான கோட்பாட்டு விவாதங்கள், அறிவார்ந்த செயல்பாடுகளின் களங்களாக வாழ்வின் அனைத்து மொழிச் செயல்பாடுகளையும் மாற்றிக் கொள்ள வேண்டியது தற்பொழுது தேவையானது.
பக்திப் பாடல்களை மட்டும் பாடித் தமிழ்க்கல்வி என்றாலே பக்திப் பாயசம்தான் என்று அறிவை அழித்த தமிழாசிரியர், திரைப்பாடல்களைச் சகிக்க முடியாத குரலில் கத்தி கிச்சுக்கிச்சுமூட்டி உணர்வைக் கெடுத்த தமிழாசிரியர், எந்த ஒரு பாடலையும் கதையையும் பெரியாரிய-மார்க்சியக் கருத்துக்களின் வழி விளக்கம் சொல்லி விரித்துரைத்த தமிழாசிரியர் என மூன்று வகையான ஆசிரியர்களிடம் நான் பாடம் கேட்டிருக்கிறேன்.
பெண்பிள்ளைகள், ஆண்பிள்ளைகள் இணைந்து படிக்கும் வகுப்பில் இரட்டை அர்த்த வசனங்களைப் பேசி அரட்டை அரங்கம் நடத்திக் களிக்கும் வக்கிர மனநோய் கொண்ட தமிழாசிரியர்களும், தம்மிடம் படிக்க வரும் மாணவர்களை இரண்டு ஆண்டுக்குள் அறிஞர்களாக மாற்றிவிட வேண்டும் என்ற கனவுடன் உலக வரலாறு தொடங்கி ஊடக அறிவியல் வரை தமிழில் பேசி மாணவர்களிடம் கிறுக்கு வாத்தி எனப் பெயரெடுத்த தமிழாசிரியர்களும் ஒரே மேல்நிலைப் பள்ளியில் இருப்பதைக் கண்டிருக்கிறேன். கல்வி நிறுவனங்கள், ஊடகங்கள் போன்றவை இப்படித்தான் பலபடித்தான வகைமாதிரிகளால் நிரம்பி உள்ளன.
வளரிளம் தலைமுறையின் வாசிப்பு சமூக வலைதளம், மற்றும் இணையத்தோடு முடிந்துவிடுவதாக நான் நினைக்கவில்லை. அவற்றில் தொடங்குகிறது என்றும், சில கட்டங்களில் அவற்றின் வழியாகவாவது படிக்கிறார்களே என்றும் ஆறுதல் அடைகிறேன். ஏனெனில் மாற்று அறிவு என்பது எப்போதும் உவப்பானதாக இருந்ததில்லை.
நூல்கள் இன்று அதிக அளவில் உற்பத்தியாகின்றன, அதிக அளவில் விற்பனையாகின்றன, பலர் நூல்களை வாங்கி இல்லங்களை அலங்கரிக்கிறார்கள். பலருக்கு நூல்கள் அழகிய வண்ண அட்டைப் படத்துடன் வருவது பிடித்திருக்கிறது. மின்படியெடுத்து படிக்கும் பழக்கமும் அதிகமாகி உள்ளது. ஆனால் பழங்குடி மக்கள் படுகொலை செய்யப்படும்போது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க அழைப்பு விடும்போது 24 பேர்தான் பங்கேற்க வருகிறார்கள். அதில் 10 பேர் 60 வயதுக்கு மேற்பட்ட சமூகச் செயல்பாட்டாளர்கள்.  “இந்தியா வல்லரசு நாடாக வளர்வதை இந்தப் பழங்குடியினர் மண் காக்கும் போராட்டம் என்ற பெயரில் கெடுத்துக் குட்டிச்சுவராக்கிக் கொண்டுள்ளனர், சுரங்கங்களைத் தோண்ட விடாமல் கலவரத்தில் ஈடுபட்டால் காவல்துறை சுடாமல் என்ன செய்யும்?” என்று சமூகவியல் அறிஞர்களாகிக் கேள்வி கேட்கும் இளைஞர்கள் இன்று அதிகம்.
“அணு உலை வேண்டாம் எனப் போராடும் மக்களை அடித்துக் கடலில் வீசாமல் வேடிக்கைப் பார்க்கிறது இந்த அரசு” என்று சொல்லும் தீவிரவாத தேசபக்த இளைஞர்கள் “அப்படிச் செய்ய முடியாது, அணுவுலை வேண்டாம் என்பவர்கள் அனைவரையும் ஒரு ரயில் அடைத்து பாகிஸ்தான் எல்லையில் கொண்டு போய் தள்ளிவிட வேண்டும், பவர் சப்ளை இல்லாம வாழ முடியாதுன்றது அப்பத்தான் அவங்களுக்குப் புரியும்” என்று சொல்லும் மிதவாத தேசபக்த இளைஞர்கள் என எல்லோரும் எதையாவது படிக்கவே செய்கிறார்கள், ஆனால் அவர்கள் அரசியல் தான் அச்சுறுத்துவதாக உள்ளது.
வீடு முழுக்க அரசியல் புத்தகங்கள், ஊர் ஊராகச் சென்று இளைஞர்களைப் போராடத் திரட்டும் அறைகூவல் பேச்சு, புரட்சியைத் தவிர வேறு எதைப் பேசினாலும் முகம் கடுக்கும் அரசியல் பற்று கொண்ட சில மூத்த தோழர்களின் பிள்ளைகள் அரசியல், சமூகம் என எதையும் தெரிந்து கொள்வதில் விணாகக் காலத்தைச் செலவிடாமல் முதல் மதிப்பெண் பெற்று போட்டித் தேர்வுகளில் சாதனை புரிந்து குறைந்தது மருத்துவத்துறை வல்லுனர்கள் என்ற நிலையையாவது அடைந்துள்ளனர். மற்றவர்களுக்கு அரசியல் கற்பிக்கும் இவர்கள் தம் பிள்ளைகளிடம் மக்களுக்காக உயிரைக் கொடுங்கள் என்று சொல்லவில்லையென்றாலும் மக்களின் உயிரையெடுக்காமல் இருங்கள் என்றாவது அவர்களுக்குச் சொல்லியிருப்பார்களா எனத் தெரியவில்லை…
நான் சொல்ல வருவது அரசியல் கல்வியானது தற்போதுள்ள ஊடகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மூலம்  வருவதில்லை, அவற்றை மீறி உருவாகும் அரசியல் கல்வியை அவை தடுக்க முடிவதும் இல்லை… அரசியல் இயக்கம் போல அறிவுக்கான இயக்கங்கள் தேவை, அவை இணையம், சமூக வலைதளங்கள் வழியாக முன்பு இருந்ததைவிட அதிக ஆற்றலோடு நிகழமுடியும். மாற்று அரசியல் சிந்தனைகள், மாற்று அரசியல் செயல்பாடுகள் இன்று இணையம் வழிப் பெருகியிருப்பதைக் காணமுடிகிறது. அடக்குமுறையும் ஆதிக்கமும், முதலீட்டுக் கொடுங்கோன்மையும் அரச பயங்கரவாதமும் உயர் தொழில்நுட்ப உதவியுடன் உலகமயப்படும் என்றால் அதற்தெதிரான சிந்தனைகளும் செயல்பாடுகளும் உலகமயப்படுவதும் தவிர்க்க முடியாதது. அதற்கு ஒரு உதாரணம் தீண்டாமைக் குற்றங்கள், சாதி வன்முறைகள் நிகழும்போது முன்பு வெளித்தெரியவே பலமாதங்கள் ஆகும் அதற்குப்பிறகு அதற்கெதிரான குரல்கள், போராட்டங்கள் எழுவதற்குள் இன்னும் பல இடங்களில் வன்முறைகள் நடந்துவிடும். இன்று பதிவுகள் உடனடியாகச் சென்று சேர்கின்றன, எதிர்ப்புக் குரல்கள் எழுந்து கொடுமையின் கைகளைப் பின்னோக்கி இழுக்கின்றன. பசுமை அரசியல், பெண்ணிய அரசியல், அடையாள அரசியல், இனக்குடி அரசியல் இணையங்கள் வழியாக உலக மாற்றுச் சிந்தனையாளர்களை இணைத்துள்ளன. அறிவுக்கெதிரான, உழைப்பைக் கண்டு அஞ்சும் ஒரு கூட்டம் ஊடகத்தை, தொழில் நுட்பத்தைத் தமக்கெனப் பயன்படுத்த முடியும் என்றால் அறிவும் உழைப்பும் உள்ள மாற்றுச் சிந்தனையாளரகள், அரசியல் குழுக்கள் பயன்படுத்த முடியாதா என்ன!  எந்த அடிப்படை வசதியும் இல்லாத காலத்திலேயே “அறுபது லட்சத்திற்கு மேற்பட்டக் குடிகளை (பம்பாய் மாகாணக் கணக்கு)  பறையர் பறையர் என்று தாழ்த்தி பதிகுலைத்த பரிதாபத்தை” அயோத்திதாசர் தம் மக்களுக்குச் சொல்லிப் புரிய வைப்பதையே தம் வாழ்வாகக் கொண்டு செயல்பட்டிருக்கிறார் என்றால் இன்று நமக்கு முதல் தேவை மாற்று அரசியலைத் தேர்ந்தெடுக்கும் நேர்மை.
இது ஒருபுறம் இருந்தாலும் இன்றைய மின் எண்ணியல் வலைப் பின்னல்கள் நம்மை அதற்குள் இழுப்பதற்குக் காரணமே அதற்கு வெளியே உலகம் என எதுவும் இருக்கக்கூடாது என்பதற்காகவும், ஒவ்வொரு வருக்குமான ஒரு உள் இருப்பதை அழிப்பதற்காகவும்தான். இதிலிருந்து வெளியே இருப்பதுதான் மாற்று அடையாளத்தைத் தகவமைப்பதற்கான எளிய வழி. வலைதளக் கண்காணிப்பு பற்றி நமக்குத் தெரிந்ததுதான். மின்னஞ்சலில் என் மகளுக்கு ஒரு நூலைப்பற்றி ஒரு முறை குறிப்பிட்டிருந்தேன், அதற்குப் பிறகு இரண்டு மூன்று மாதங்களுக்கு நான் இணையத்தைத் திறக்கும் போதெல்லாம் அந்த நூலுக்கான விளம்பரம் வந்து கொண்டே இருந்தது. அன்புள்ள பப்பி என மின்னஞ்சலின் முடிவில் குறிப்பிட்டிருந்தால் நாய்குட்டி பொம்மைகளின் விளம்பரங்கள் தனிக் கட்டத்தில் வந்து சிரிப்பு மூட்டுகின்றன. ஆனால் நாம் எந்த சதித் திட்டமும் தீட்டவில்லை. அதனால் கண்காணித்தாலும் காதைக் கடித்தாலும் அச்சப்பட  ஒன்றுமில்லை…
மக்கள்  அரசியல் மறைப்புகள் இன்றி ரகசியமின்றி இருக்க வேண்டும் என்று ஒரு எண்ணம் எனக்கு உண்டு. உறதியாகச் சொல்ல முடியவில்லை… ஆனால் நான் நம்புகிறேன். தகவல் தொடர்புகள், ஊடகங்கள், இயந்திரக் கட்டமைப்புகள் மறுத்து கைபற்றிப் பேசி, கூடி உரையாடி மக்கள் அரசியலை, மாற்று அரசியலைக் கட்ட வேண்டும். நிகழ்கலைகள், நெகிழ்வான கருத்தியல் கல்வி போன்றவைதான் மக்களுக்கானவை, மாற்றமுறும் அரசியலுக்கானது… மின்னணுவியலும் மிகையான தகவல் தொடர்பும் தற்காலிகமானவை, தம்மளவிலேயே பெருங்கட்டமைப்பு சார்ந்தவை, ராணுவத்தன்மை கொண்டவை,  ஒரு வகையில் மக்கள் அறிவை மறுப்பவை… இவை ஒரு இடைக்கால பதிலீடுகள் மட்டும்தான்…

உரையாடல்: 5- 2 அழிவைக் கொண்டாட எழுதலாம்-பிரேம்

உரையாடல்: 5- 2

அழிவைக் கொண்டாட எழுதலாம்

கேள்வி:

மாற்று அரசியல், மாற்றுச் சிந்தனை…அதுதான் இன்றைக்கான அழகியல்,  கவிதையியல் அவற்றைத் தொடர்ந்து பேணுவதும், புதுப்பிப்பதும், வளர்த் தெடுப்பதும்தான் மக்களுக்கான இலக்கிய வாதிகள் என்பவர்களின் பணி  என்கிறீர்கள். கலை இலக்கியங்களில் அரசியல் இருக்கலாம், ஆனால் அரசியல் செயல் திட்டங்களோடு அவற்றைப் புனைவது என்பது படைப்பாளிகளின் படைப்புத்திறனை (creativity),குறுக்குவதில் முடியுமல்லவா? மேலும் இலக்கியவாதிகளை மக்களுக்கானவர்கள், அல்லாதவர்கள் எனப் பகுப்பது சரியா? மக்களை மனதில் கொள்ளாமல் படைக்கப்பட்ட பிரதிகளில், மக்கள் பிரச்சினைப்பாடுகளைப் பற்றி செறிவும் ஆழமும் மிகுந்திருப்பதை காணமுடிகிறதே?

பதில்:

இந்தத் தளத்திலான விவாதம்  மாற்றுக் கலை-இலக்கியக் கோட்பாடு என்ற பெயரில் தொடர்ந்து முன்வைக்கப்படும் ஒன்று.  படைப்பாளிகளின் படைப்புத் திறன் பற்றிய இந்தப் பொத்தம் பொதுவான கேள்வியை மேம்போக்காக அணுகும்போது நியாயமான அக்கறை போலத் தோற்றம் தரும். ஆனால் இதற்குள் வரலாற்றுத் திரிபும், அரசியல் செயல் திட்டமும் பொதிந்துள்ளன. கலை இலக்கிய ஆக்கங்கள் அனைத்துமே தனிமனிதர்களின் உற்பத்திபோலத் தோற்றம் தரும் கூட்டுப் படைப்புகள். தனிமனிதர்கள் கலைஞர்களாக உருவாதல் வரலாற்று முன்புலம், சமூக நிகழ்களம் சார்ந்த ஒரு நிகழ்வு. சமூகத்தின் அக்காலத் தேவை, ஒவ்வொரு காலகட்டத்திலும் உள்ள கலை வடிவங்கள் மற்றும் கலை சார்ந்த நுட்பங்கள் எனப் பலவிதமான கூறுகள் இணைந்து கலைச் செயல்பாடுகளை வடிவமைக்கின்றன.

நாடகம் என்ற ஒரு வடிவம் இல்லாமல் ஒரு நாடகக் காப்பியத்தையோ, திரைப்படம் என்ற வடிவம் இல்லாமல் ஒரு திரைக்கதையையோ படைப்பாற்றலை மட்டும் கொண்டு  ஒருவர் உருவாக்கிவிட முடியாது. இலக்கியத்தில் இது  மிகத்தெளிவான ஒரு நிகழ்வு. உலக இலக்கியம் என்பதோ, தேசிய இலக்கியம் என்பதோ உருவாகாத ஒரு நிலையில் இலக்கியங்கள் சமயம் சார்ந்தோ, அரச மண்டலம் சார்ந்தோதான் உருவாக முடியும். சமயம், மற்றும் அரசின் புனிதம் பற்றியும் அதற்கு மாறாக மக்கள் நடக்கும் பொழுது நிகழும் துன்பங்கள், தீமைகள் பற்றியும் தான் செவ்வியல் இலக்கியங்கள் பேசுகின்றன. இதிகாச, காப்பிய எழுத்துக்கள் எது தர்மம் எது அதர்மம் என்பதைப் பற்றியவைகளாக உள்ளன. அறம், பொருள், இன்பம், வீடு என்ற நால்வகை பயன்களைச் சுற்றியே இந்திய இலக்கியங்கள் அமைக்கப்பட வேண்டும் என்பது இலக்கியச் சூத்திரம் மட்டுமில்லை மிக எளிமையான ஒரு அரசியல் சூத்திரமும்கூட. பக்தி இலக்கியங்கள், நீதி இலக்கியங்கள், இன்பம் சார்ந்த இலக்கியங்கள், போர்ப் பெருமை பேசும் இலக்கியங்கள் என ஒவ்வொரு வடிவமும் அவ்வக்கால அரசியலின் தெளிவான வெளிப்பாடுகள்தான். பௌத்தமும் சமணமும் போர், அடக்குமுறை, வெற்றிப் பெருமிதம், வன்கொடுமைகள் பற்றி சமூக உளவியலில் தடைகளை உருவாக்கிய பொழுது பேரரசுகளுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டது, சார்வாக, லோகாயத, ஆஜிவக மரபுகள் உருவாக்கிய பற்றற்ற தன்மை வணிகப் பெருக்கம், செல்வக் குவிப்பு, நகர சமூகத்தின் கேளிக்கைக்காக மக்களை அடிமைகளாக வைத்திருத்தல் போன்றவற்றுக்கு எதிராக அமைந்தது. இதற்கு மாறாக மகாபாரதம், ராமாயணம் போன்ற பெருங்காப்பியங்கள் போரின் தேவையை உணர்த்தவும் வீரமும் வெற்றியும் சத்திரிய-அரச தர்மம் என்று நிலைநிறுத்தவும், செல்வப் பெருக்கம், நகர வாழ்க்கை பற்றிய மதிப்பீகளை மிகைப்படுத்தவும் உருவாக்கப்பட்டன. காளிதாசன், கம்பன் போன்ற பாவலர்கள் மகாகவிகளாக போற்றப்படுவதற்கு அவர்கள் கால அரசியலுக்கும், சமய விதிகளுக்கும் இயைந்த, அவற்றை பெருமை செய்யும் படைப்புகளை அவர்கள் உருவாக்கியதுதான் காரணம். தொன்மையான சமூகங்களில் சமய நம்பிக்கை, அரசின் புனிதம் இரண்டையும் ஏற்காத ஒரு எழுத்து உருவாக இயலாது, அப்படி உருவாகும் பொழுது அது மாற்று சமயம், மாற்று அரசு பற்றியதாக எடுத்துக் கொள்ளப்பட்டு தண்டனைக்கு உள்ளாக்கப்படும்,அழிக்கப்படும், தடை செய்யப்படும். அப்படிப்பட்ட  எழுத்துக்களை சிறுகுழுக்கள் தமக்குள் பாதுகாத்து வேறு காலகட்டத்தில், வேறு சமூகத்தில் பரப்பும் முயற்சியை மேற்கொள்ளும். இந்தப் பின்னணியில் அரசியல் செயல் திட்டம், சமயப்பற்று, படைப்பாற்றல்  என்பவை ஒன்றுடன் ஒன்று பிரிக்க முடியாத செயல்பாடுகள் என்பது புரிய வரும்.

நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்
நரகத்தி லிடர்ப்படோம் நடலை யில்லோம்
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்
இன்பமே யெந்நாளுந் துன்ப மில்லை.

என்று ஒருவர் பாடும்பொழுது இறைநம்பிக்கை, சமயப்பற்று, அரசியல் திட்டம், பக்தி, படைபாற்றல், போர்க்குணம் அனைத்தும் கலந்த ஒரு சொல்லாடலாக வெளிப்படுகிறது. சைவத்தைக் காக்க சிவனடியார்கள் வைணவ அரசர்களை எதிர்த்து சிவபதம் சேர்ந்ததும், வைணவ நம்பிகள் சைவ அரசர்களின் அடக்குமுறையை எதிர்த்து வைகுண்டம் சேர்ந்ததும் அரசியல், சமயம், இறைநெறி அனைத்தும் கலந்த உளவியலின் வெளிப்பாடுகள். இவற்றைப் பதிவு செய்வனதான் இலக்கியங்கள், இதனை நுட்பமாகப் பதிவு செய்வதுதான் படைப்புத்திறன் என்று அறியப்பட்டது. கம்ப ராமாயணத்தை ஒரு வீரசைவரோ, திருவாசகத்தை ஒரு வீர வைணவரோ படைப்புத் திறன் கொண்ட பனுவல் என ஏற்க இயலாது. கிறித்துவம் பைபிள் தவிர அனைத்து நூல்களையும் சாத்தானியம் சார்ந்த சதித்திட்டங்கள் என்று அறிவித்திருந்த காலம் உண்டு. பிற சமய நூல்களை வாசிப்பது மட்டுமல்ல வைத்திருப்பதும்கூட தண்டனைக்குரிய குற்றங்களாக கிறித்தவம்,இஸ்லாம் இரண்டிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட காலங்கள் இருந்தன.

இன்று நாம் அந்த வகையான சமய மைய, அரசுமைய நிலையிலிருந்து வெளியேறி இருக்கிறோம். இந்த வெளியேற்றமே, இந்த வகை புதிய இலக்கிய வடிவமே அரசியல் தேர்ந்தெடுப்ப்புதான். நாம் இன்று நவீன எழுத்து என அறியும் ஒரு செயல்பாடு பல உயிர்களைக் காவு வாங்கிய பின், பல இலக்கியவாதிகள், வாசகக் குழுக்களைப் பலிவாங்கிய பின் உருவாகி வந்த ஒன்று. இதன் உலகத் தன்மை, இதன் வரலாற்று வடிவம், இதனுடன் தொடர்புள்ள  படைப்பாற்றல், படைப்புரிமை, படைப்புத்திறன், படைப்புச் சுதந்திரம், வெளிப்பாட்டுச் சுதந்திரம், எழுதுபவர் என்னும் தன்னடையாளம் அனைத்தும் மக்கள் அரசியலால் உருவாக்கப்பட்டவை, உறுதியளிக்கப்பட்டவை, பாதுகாக்கப்படுபவை. நாம் நவீன இலக்கியம், நவீன கலை என எதனை உருவாக்கினாலும் அதில் மக்கள் அரசியல், மனித உரிமை அரசியல், தனி மனித விழுமியம் என்பவை உள்ளடங்கி உள்ளன. சமயங்களோ, கொடுங்கோன்மை அரசுகளோ, புனித மரபுகளோ இந்த படைப்புரிமையை, படைப்பாற்றலை நவீன படைப்பாளிகளுக்கு வழங்கிவிடவில்லை. படைப்பாளிகள் மக்களை மறந்து விட்டு எழுதலாம், மக்களை மனதில் கொள்ளாமல் எழுதலாம், மக்களுக்கு எதிராகவும் மக்கள் வெறுப்பிலும்கூட எழுதலாம், ஆனால் அவர்கள் எழுத்து மக்கள் அரசியலின் உயிர்ச்சத்தில் உருவாவது. மக்கள் அரசியல் என்ற புதிய புலன்கள் கொண்டு அமைவது. மக்கள் அரசியல், மக்கள் தேசியம், மனித உளவியல் என்பவைதான் இந்த எழுத்துக்களின் களம், செயல்பாடு அனைத்தும். தமக்குப் பின்னால் மக்கள் சமூகமும், மக்கள் நீதியும், மக்கள் அரசியலும் உள்ளன என்ற நம்பிக்கையில்தான் ஒவ்வொரு எழுத்துக் கலைஞரும் எதையாவது எழுதுகிறார்கள், அது சிறிய அளவிலோ, பரந்துபட்ட அளவிலோ இருக்கலாம் ஆனால் அங்கு மக்கள், மக்கள் அரசியல் என்ற கருதுகோள் மிக அடிப்படையாகச் செயல்படுகிறது.  மக்களை மறந்த, மக்கள் அரசியலை மறுத்த நவீன எழுத்து என்ற தொடரே கோட்பாட்டு, கட்டமைப்பு வகையில் ஒரு இல்பொருள் உருவகம்,  ‘மார்க்சிய முடியாட்சி’ என்பது போல ஒரு முரண் தொடர்.

அடுத்து இலக்கியவாதிகளை மக்களுக்கானவர்கள், அல்லாதவர்கள் என்று பகுத்து அறிவது பற்றி. மக்கள் அரசியல், பன்மை அரசியல், பிரதிநிதித்துவ அரசு என்பதைக் கொண்ட நம் நாட்டில் மக்கள் என்ற அடையாளம் ஒற்றைத் தன்மை உடையதல்ல. சாதி, குலம், மொழி, இனம், வர்க்கம், கிராமம், நகரம், அதிகாரப் பகிர்வு, வாழ்வாதார பங்கீடு, பாலின உரிமைகள் என்ற வகையில் பலவகை வேறு பாடுகளை, அடுக்குமுறைகளை, ஏற்றத்தாழ்வுகளை, ஒடுக்குமுறைகளைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளன மக்கள் குழுக்கள். அப்படியெனில் இதில் ஏதாவதொரு பகுதியைச் சார்ந்து, ஏதாவதொரு பகுதியின் பிரதிநிதியாக, ஏதாவதொரு பகுதியை நோக்கித்தான் எழுத்துக்கள் அமைய முடியும். அதன் கவிதையியல், அழகியல், இலக்கிய வடிவம், வகைமை, எடுத்துரைப்பு முறை என்பவை ஏதாவதொரு பண்பாட்டு, கருத்தியல் அடிப்படையில்தான் அமைய முடியும். இதில் நடுநிலை, பொதுத்தன்மை, எல்லாவற்றையும் உள்ளடக்கும் கவிதையியல் என்பதெல்லாம் நடப்பியல் சாத்தியமற்ற வெற்றுச் தொடர்கள்.  ‘இந்தியர்களாகி நாம்’ என்று தொடங்கும் ஒரு கவிதை வரியின் இந்தியர்கள் எங்கிருக்கிறார்கள், அரசியலமைப்புத் திட்டத்தில் தவிர. ஆனால் இதற்கு ஒரு கோட்பாட்டுப் பொருண்மை உள்ளது. அது போலத்தான் எழுதும் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு மக்கள் தொகுதியை கருத்தியல் பொருண்மையாகக் கொண்டுள்ளனர்.

 “மின்கம்ப முடுக்குகளில் பறவைக்கூடுகள் 
இடும் ஒவ்வொரு முட்டையும்
பறவையறியா புதிய நிறத்தில்
குஞ்சுகளுக்கு ஊட்டுகிறது தாய்ப்பறவை
பாலித்தீன் இழைகள் சிலிக்கான் துகள்கள்
ஒவ்வொரு முறையும்
பறக்கத் தொடங்கும் குஞ்சுகளின் முதல் பயணம்
பன்னாட்டு நிறுவனத்தின்
வானம் மறைக்கும் கண்ணாடிகளில்
மோதிச் சிதறுகிறது
சிதறிய தசைகளை உண்டு
அடுத்த அடைகாப்பிற்கென
உயிர் தரித்திருக்கிறது
தாய்பறவை.”

என்ற ஒரு கவிதையை எழுதி இதனை அனைத்து மக்களுக்குமானது என நான் எப்படிச் சொல்ல முடியும்?  இன்னும் ஒரு வகையில் இதனைக் கவிதை என்றுதான் நான் எப்படிச் சொல்ல இயலும். ஆனால் இயற்கையரசியல் உணர்ந்த, சூழலரசியல் புலன் கொண்ட ஒருவரின் கண்களை இந்த வரிகள் ஈரமாக்கும் என்பதையும் மறுக்க இயலாது.

“காத்திருக்கிறேன் அலைபேசி அழைப்புக்காக

வந்து சேராத குறுஞ்செய்தியில்

சிக்கிக் கொண்டுள்ளது என்

தூக்குக் கயிறை அறுக்கும் கத்தி“

என்ற துணுக்கை எழுதிவிட்டு இந்த நூற்றாண்டின் காதலர்கள் அனைவருடைய வலியையும் தாங்கியுள்ளது இக்கவிதை எனத் தொலைக்காட்சி நேர்காணலில் ஒரு கவிஞர் சொல்வாரெனில் அதனை மறுக்க நமக்கு உரிமை இல்லைதான்.  ஆனால் குறைந்த பட்சம் தொலைபேசி இல்லாத ஊர்களில் உள்ள காதலர்களையாவது கொஞ்சம் விட்டுவிடுங்கள் என்று நாம் சொல்லக்கூடாதா என்ன.

நான் சொல்ல வருவது அதிக சிக்கலற்றது: எழுத்து ஒவ்வொன்றும் அரசியலுடையது. அது ஏதாவது ஒரு பிரிவு மக்கள் பற்றியது, மக்களின் வாழ்வு, கனவு, துயரம், களிப்பு பற்றியது. சிலர் ஒடுக்கப்பட்ட, துயறுரும் மக்களின் வாழ்வு, வரலாறு பற்றியோ, விடுதலை விரும்பும் மக்களின் மொழியிலோ எழுதுகிறார்கள். சிலர் யாரும் ஒடுக்கப்படவில்லை, இதுதான் நம் காலத்திய வாழ்வு, இதனை அமைதியாக ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்று நிறுவ எழுதுகிறார்கள். இன்னும் சிலர் எழுதிப்பார்க்கலாம் என எழுதுகிறார்கள் அதனையும் சில மக்கள் தம் எழுத்தாக கொண்டாடிக் களிக்கிறார்கள். இவை அனைத்தும் பெரும் அரசியல் போராட்டத்தின், வாழ்வுரிமைப் போராட்டத்தின் நுண்மையும், பருண்மையுமான செயல்பாடுகள்தான். ஒடுக்குமுறை அரசியல், உலகமயமான சுரண்டல், பன்னாட்டு அதிகார மையங்கள், இயந்திர-தொழில் நுட்ப முதலீட்டியம் என்பவற்றின் வன்முறைகள் பற்றித் தெளிவான புள்ளி விவரங்களுடன் எழுதுவதுதான் மக்கள் அரசியல் என்று இல்லை. இன்றைய வாழ்க்கை, இன்றையக் கனவுகள், இன்றைய வலிகள், இன்றைய மனச்சிதைவுகள் பற்றி எழுதும் எல்லா எழுத்தும் அரசியல் எழுத்துக்கள்தான். எழுதுகிறவர்கள் அரசியலற்றவர்களாக இருக்கலாம், ஆனால் எழுத்துக்கள் அரசியலற்று இருப்பதில்லை. எழுதுகிறவர்கள் எழுத்தில் உள்ள அரசியலை எவ்வளவு முயற்சி செய்து அழித்து அழித்து எழுதினாலும் அழித்த தடங்களும் படிந்து, அழித்த வரிகளும் இணைந்து அவற்றை அதிக அரசியலுடையவையாக மாற்றும்.

மக்களை மனதில் கொள்ளாமல் படைக்கப்பட்ட பிரதிகளில், மக்கள் பிரச்சினைப்பாடுகளைப் பற்றி செறிவும் ஆழமும் மிகுந்திருப்பதைக் காணமுடிவதாக நீங்கள் சொல்வது  இன்றைய இலக்கியத்தில் மட்டுமல்ல தொல்சமூக இலக்கியங்களில்கூட நிகழக்கூடியது, அது வாசிப்பின் வழி அமைவது. நவீன வாசிப்பில் அனைத்தையும் மக்கள் மையப் பார்வையில் அணுகும்போது மக்கள் அரசியலும், பிரச்சினைப் பாடுகளும் புலப்படும்.  இதனைத்தான் நாம் அரசியல் வாசிப்பு, வாசிப்பின் அரசியல் என்கிறோம். மக்களை மறுத்தும் மக்களை இழிவுபடுத்தியும் மக்களுக்கு எதிராகவும் எழுதலாம்,  மக்களை அழிப்பது பற்றிய திட்டங்களைக்கூட எழுதலாம். ஆனால் மக்களைப் பற்றி,  ஏதாவதொரு மக்கள் குழுவின் பின்புலத்தில்தான் எழுத முடியும்.  யூத மக்களை அழிதொழிப்பது பற்றிய பெருமை பேசும் ஜெர்மனிய எழுத்துக்களில் இருந்துதான் இனப்படுகொலையின் மக்கள் உளவியலை நாம் புரிந்துகொள்கிறோம், பாலஸ்தினிய மக்கள் மீதான இஸ்ரேலிய வெறுப்பை அவர்களின் எழுத்திலிருந்துதான் புரிந்து கொள்கிறோம். அமெரிக்க கருப்பின மக்கள் பற்றிய வெள்ளையின எழுத்துக்கள், திரைப்படங்கள் வழியாக கருப்பின மக்களின் வரலாற்றுத் துயரை நாம் கண்டுணர இயலும். ஐரோப்பிய மத்திய கால ஓவியங்கள் கருப்பின அடிமைகள் பற்றி ஆவணங்களோ, பதிவுகளோ அல்ல ஆனால் ஒவ்வொரு ஓவியத்திலும் பின் விளிம்பில் துயருற்ற கருப்பின அடிமைகளின் நிழல்கள் படிந்துள்ளதை மறைத்துவிட முடியாது. உங்கள் கண்கள்தான் உங்களின் முதல் அரசியல் கருவி, காண்பதும், காண மறுப்பதும் உங்கள் அரசியலை, கருத்தியலைப் பொறுத்தது.

இன்னொரு தகவல்  ‘மக்களை மனதில் கொள்ளாமல் படைக்கப்பட்ட பிரதிகள்’ என்பதுகூட தவறான ஒரு விளக்கம். மக்கள் பற்றிய மாறுபட்ட பார்வை கொண்ட பிரதிகள், மக்கள் அரசியல் பற்றிய மாற்றுக் கருத்துக் கொண்ட பிரதிகள், மக்களைவிட அதிகாரம், ஆதிக்கம் இவையே மேலானவை என்ற பார்வை கொண்ட பிரதிகள், தன்னுடைய மக்களைத் தவிர பிற மக்களின் மதிப்பினை ஏற்காத பிரதிகள் என்று அடையாளப் படுத்துவது இன்னும் விளக்கமாக இருக்கும். தமிழ் இலக்கியத்தை ஒடுக்கப்பட்ட மக்களை மனதில், நினைவில் கொள்ளாத பிரதிகளின் தொகுப்பு  என்று அடையாளப்படுத்தலாம் தானே?

சாப்ளின், சே, பாப் மார்லே படங்கள் ஆடை வடிவமைப்பில் இடம் பெறுவது பற்றிய மாணவர் களுடன் பேசிக்கொண்டிருந்தபோது ஒரு நிகழ்ச்சியைச் சொன்னார்கள். பாப் மார்லியின்  பெரிய படத்தை ஒரு அலங்கார உணவு விடுதியில் இருந்து எடுத்துவிட வேண்டும் என்று ஒரு  இளைஞர் கூட்டம்  சொன்னதாம்.  அவர்கள் சொன்ன காரணம்  “சாப்பிடும் இடத்தில்  இப்படியொரு படமா, அந்த முடியும் முகமும் குமட்டலை உருவாக்கும்.” அதில் உண்மை இருக்கலாம், அவர்களுக்கான உண்மை. அந்த இளைஞர்களைக் கூட்டமாகப் பார்த்தால் நமக்கு ஒரு வாந்திக்குவியலாகத் தோன்றலாம் இது நமக்கான உண்மை.

பாப் மார்லியைத் தன் அறை முழுதும் ஒட்டி வைத்திருக்கும் மேட்டுக்குடி இளையோர் பற்றியும் நமக்குத் தெரியும், இதுவும் கவனத்திற்குரியது. அந்த முகத்தின் பின் மறைந்துள்ள மக்களை மனதில் கொள்ளாமல் அதனை ஒரு ஓவியமாக மட்டும் காண இயலுமா, இயலக்கூடும். ஆனால் அந்த முகமும் அதன் பின்னுள்ள வரலாறும், அந்தச் சடைமுடியும், அந்தக் குரலும் அந்த மக்கள் பற்றித்தான் பேசுகிறது. இந்தியர்களை இழிவானவர்களாக விளக்க எழுதப்பட்ட காலனியகால இலக்கியங்கள், குறிப்புகள், ஆவணங்களில் இருந்துதான்  இந்திய வரலாற்றைத் தொகுத்தெழுதியிருக்கிறோம்.