உரையாடல்: 1:2

கேள்வி:

சாதி, குடும்பம், மரபு என்பவற்றின் வன்முறைகளை, கட்சி அரசியலின் வன்மங்களை நினைவு தெரிந்த நாளிலிருந்து அச்சத்துடன் கவனித்து வந்த எனக்கு  மாற்று அரசியல் மிக இயல்பாகப் பொருந்தியது என்கிறீர்கள்.

ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் அவர் உள்ளாகும் ஒடுக்குதல் மற்றும் அடையும் வலிகளின் காரணமாக அவர் மாற்று அரசியலின்பால் ஈர்க்கப்படுகிறாரா? அல்லது நீதியின்பால் அக்கரையுள்ள எவரொருவரும், விருப்பு வெறுப்பின்றி, அறிவார்ந்த சிந்தனையில் ஈடுபடும்போது அவர் வந்து சேரும் இடமாக மாற்று அரசியல் களம் இருக்குமா?

பதில்:

ஒடுக்குதல், அடக்குமுறை, அடிமைத்தனம், ஒதுக்குதல், வாழ்வுரிமைகள் மறுக்கப்படுதல், வன்முறைகளுக்குள்ளாதல் எனப் பல வகையான வலிகளைத் தனிமனிதர்களாக, குழுக்களாக, இனங்களாக  மனிதர்கள் அடைகிறார்கள். அதே போல மற்றவர்களுக்கு உருவாக்கவும் செய்கிறார்கள். இவற்றைத் தம் உடலிலும் மனதிலும் அடைபவர்கள் விடுதலைக்கான ஏக்கம் கொள்வது இயல்பான ஒன்று. ஆனால் விடுதலைக்கான வழியை, விடுதலைக்கான அறிவைத் தனியாக யாரும் உருவாக்கிக் கொள்ள இயலாது. இது அரசியல், அறம் சார்ந்த தன்னிலை உருவாக்கத்துடன் தொடர்புடையது. நீதியின்பால் அக்கறை கொள்வதும் அவ்வாறான ஒரு தன்னிலை உருவாக்கம்தான். பாதிக்கப்படுகிற ஒருவர் போராட, கலகம் செய்யத் தன் கருத்தியல் முறைகளில் மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்வதே தொடக்கமாக அமைகிறது. அந்தப் போராட்டம், எதிர்ப்பு மனம், மொழி, மெய் என அனைத்து வழிகளிலும் வெளிப்படுகிறது. இதே போராட்டத்தைத் தன் அறிவு, அற உணர்வு, நீதியுணர்வு வழியாகவும் ஒருவர் தன்வயப்படுத்த முடியும், முதலில் அதற்குத் தேவைப்படுவது  அடையாள நீக்கம், தன்னிலையின் உடைப்பு. இவ்வகையில் அவருக்கு இருவகை முயற்சிகள், பயிற்சிகள் தேவை.

மாற்று அரசியல் களம்  பாதிக்கப்பட்டவர்கள், பிறரின் பாதிப்புகளை உணர்ந்தவர்கள் இருவரின் பங்களிப்புடனும் இயங்கக்கூடியது. ஏனெனில் உலக சமூகங்களில் எத்தனையோ வகையான துயரங்கள், எத்தனையோ வகையான வன்முறைகள், ஒடுக்குதல்கள் நிகழ்ந்தபடியுள்ளன. இவற்றை ஒவ்வொருவரும் அனுபவித்தும் வாழ்ந்தும்தான் புரிந்து கொள்ள, உணர்ந்துகொள்ள முடியும் என்றால் விடுதலைக் கருத்தியல்களும், மாற்று அரசியலும் செயல்படவே இயலாத நிலைதான் உருவாகும். இனவெறி ஒடுக்குதலை அனுபவித்த ஒருவருக்குத் தீண்டாமை பற்றிய அனுபவம் இருக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்க்க இயலாது, ஆனால் தீண்டாமை ஒழிப்பு அரசியலைப் புரிந்து கொள்ள முடியும். பெண்ணியத்தை ஒரு ஆணாக இருந்து புரிந்தேற்கத் தேவையானது நேர்மையான  அறிவும், அறவுணர்வும்.

சாதி, குடும்பம், மரபு என்பவற்றிற்குள் இயங்கும்  வன்முறைகளைப் புரிந்து கொண்டதும் தனிமனிதர்களாக நாம் ஒவ்வொருவரும் செலுத்தக்கூடிய வன்முறைகளின் அடர்த்தியைப் புரிந்து கொண்டதும் கவிதை , இலக்கியம் சார்ந்த தேடுதல் வழி நிகழ்ந்தவை. சர்ரியலிசம், எக்சிஸ்டென்ஷியலிசம், பெண்ணியம் போன்றவை இதனைச் சற்றே விரிவாக விளக்கிய போது அதிர்ச்சியும் அவநம்பிக்கையும் என்னைத் தாக்கியுள்ளன. இந்த அதிர்ச்சி ஒருவரை அதிகார வன்மம் கொண்டவராக மாற்றவும்கூடும். இந்த வன்மத்திலிருந்து விடுபடுவதைத்தான் அடையாள அழிப்பின் அரசியல் என்றும் மாற்று உளவியல் என்றும் நாம் தற்பொழுது கூறிவருகிறோம். அதிகாரம், அடக்குமுறை என்ற உளவியல் அமைப்பு மனிதர்களுக்குள் எவ்வளவு இயல்பாக நுழைய முடிகிறதோ, அதே அளவுக்கு விடுதலை, தன்னுரிமை உணர்வுகளும் பதிய முடியும். தான் மற்றும் பிறர் பற்றிய கருத்தியலில் உருவாக வேண்டிய அடிப்படை மாற்றம்தான் இதன் முன் தேவை.

 மாற்று அரசியல் களம் என்பது நமக்கு முன்னே உள்ள பல  தேர்வுகளில் ஒன்று. நான் இதனை அதிக அலைச்சல் இன்றி, முழு நம்பிக்கையுடன் தேர்ந்தெடுக்க முடிந்தது என்பதைத்தான் மிக இயல்பாகப் பொருந்தியது என்று குறிப்பிட்டிருக்கிறேன். அதற்கான செயல்முறை என்ன என்பது பற்றிப் பல குழப்பங்கள், சிக்கல்கள் நேர்ந்திருந்தாலும், அவ்வப்பொழுது செயலின்மை என்னை அழுத்திய பொழுதும் மாற்று அரசியலின் தேவையை மறுப்பதற்கான நிலை உருவானதில்லை. எனது குழப்பங்கள் செயலின்மைகள் நான் நம்பும் அரசியலின் தேவையை குறைத்துவிட முடியாது.  இந்த வகை நிலைப்பாட்டிற்கு ஒவ்வொருவரும் வெவ்வேறு வகையில் வந்து சேர இயலும்.  இந்த நிலைப்பாட்டை நான் அடைந்தேன் என்பதை விட இதுதான்  எனக்கான அடையாளத்தை வழங்குகிறது.  இந்த உளவியல் உருவாக்கம்  நேர்க்கோட்டுத் தன்மையில் நேரக்கூடியதல்ல. வறுமையின் அழுத்தம், ஒடுக்குதலின் வலி ஒவ்வொருவரையும் வறுமைக்கெதிரான, ஒடுக்குதலுக்கெதிரான போராட்ட அரசியலுக்குத்தான் கொண்டு வந்து சேர்க்கும் என்று சொல்ல முடியாது, ஆனால் போராட்ட அரசியலில் இருக்கும் யாருக்கும் வறுமையின் வலியும் ஒடுக்குதலின் அவமானங்களும் தெரிந்திருக்க வேண்டும் என்பதை மட்டும் நாம் உறுதியாகச் சொல்ல முடியும். இது வாழ்வின் வழியோ, வாசிப்பின் வழியோ, நேசிப்பின் வழியோ, உற்றறிதலின் வழியோ நேரலாம், ஆனால் நேர்ந்தாக வேண்டும்.

உரையாடல்:1:1

கேள்வி:

எழுத்தை, சிந்தனையை  வாழ்வியலாகக் கொண்ட மாற்று அரசியல் செயல்பாட்டாளன் என்பதுதான் எனது எளிய அடையாளம் என்று கூறியுள்ளதையொட்டி ஒரு கேள்வி. மாற்று அரசியல் என்பது அரசியல் இருந்து வரும் காலம் நெடுகிலும் இருந்து வரும் ஒன்றாகக் கருதுகிறீர்களா, அல்லது நம் காலத்தின் தனிப்பட்ட தேவையின் அடிப்படையில் எழுவதாக நினைக்கிறீர்களா?

பதில்:

அரசு, அரசு வடிவங்கள், அரசியல் என்ற தொடரின் தொடக்கத்திலும் முடிவிலும் எப்போதும் இருந்து வருபவர்கள் தனிமனிதர்கள். தனிமனிதர்களின் அடிப்படைத் தேவைகளில் இருந்துதான் அரசு உருவாகிறது என பிளாட்டோ தன் குடியரசில் விளக்குவது இன்றும் சமூக அறிவியலில் மறுக்க இயலாத சமன்பாடு. மனிதர்கள் அரசுகளை, ஆட்சிகளை, அரசர்களை, அரசியல் அமைப்புகளை மாற்றியமைப்பது மிகத்தொன்மையான ஒரு அரசியல் செயல்பாடுதான். ஆனால் தனிமனிதர்கள்-அரசு என்ற உறவமைப்பின் அடிப்படையையே மாற்றியமைத்த அரசியலைத்தான் நாம் நவீன அரசியல் என்கிறோம். நவீன அரசியலில் சுதந்திரம், சமத்துவம், சமநீதி, தன்ன டையாளம் என்பவை மிக அடிப்படையான கருதுகோள்கள்.  நவீன அரசியல் தனி  மனிதர்களை மையமாக வைத்துக் கட்டப்பட்டது, ஆனால் தனி மனிதர்களால் கட்டுப்படுத்தப்பட முடியாதது,  தனிமனிதர்கள் ஒவ்வொரு வருக்கும் அரசியலில் பங்கை அளித்து அவர்கள் ஒவ்வொருவரும் அரசியலை செயல்படுத்தும் உரிமையை அளிப்பது, தனிமனிதர்கள் யாருக்கும் அடிபணிய வேண்டிய தேவையை இல்லாமலாக்குவது, இது தனிமனிதர்களால் ஆளப்படும் அரசியல் அல்ல பொதுஅறங்களால் ஆளப்படுவது எனப் பலவாறாக விளக்கிச் செல்லமுடியும். ஆனால் இவையெல்லாம் இன்று கருத்தியல் சமன்பாடுகள் மட்டுமே. இந்தக் கருத்தியல் சமன்பாடுகளை நடப்பியலாக மாற்றுவதற்கான அரசியலையே நாம் இன்றைக்கான மாற்று அரசியல் என்கிறோம்.

அரசின் வடிவத்தை மாற்றுவது, அரசியலுக்கும் தனிமனிதர்களுக்கும் இடையில் உள்ள உறவை மாற்றுவது, அதிகாரக் கட்டமைப்பின் மையங்களை அவிழ்த்துப் பரவலாக்குவது  என்பவை மாற்று அரசியலின் தொடக்கமாக உள்ளது. மார்க்சியம் அடையாளப்படுத்திய அரசியல் பொருளாதார விடுதலை, அம்பேத்கர்  முன்வைத்த சமநீதி, சமஉரிமைகள் கொண்ட அறம்சார்ந்த அரசியல், பாலின ஒடுக்குதலை மறுக்கும் பெண்ணிய அரசியல், வேறுபடுதலுக்கான உரிமையை வலியுறுத்தும் அடையாள அரசியல், உயிரினங்கள் அனைத்துக்கும் உள்ள வாழ்வாதார உரிமையை வலியுறுத்தும் சூழலியல் அரசியல்  எனப் பல தளங்களைக் கொண்டதுதான் இன்றைக்கான மாற்று அரசியல். ஒவ்வொரு காலகட்டத்திலும் மனிதர்கள் மனிதர்கள் மீது நிகழ்த்தும் வன்முறையின் அளவும் வடிவமும் மாறுபடுவது போல அதற்கெதிரான போராட்டங்களும் மாறுபடும். இன்றைய அரசியல், பொருளியல், அதிகார வன்முறைகளுக்கெதிரான மாற்றுகளை முன்வைப்பதுதான் இன்றைய மாற்று அரசியல். இன்றைய அடக்குமுறை அரசியல் பன்முனைப்பட்டதாக, பலவடிவம் கொண்டதாக இருப்பது போலவே இன்றைக்கான மாற்று அரசியலும் பலதளங்களைக் கொண்டதாக உள்ளது.

நம் காலத்தின் மாற்று அரசியல் காலம் சார்ந்தது மட்டுமல்ல, இடம் சார்ந்தும், களம் சார்ந்தும் பல வடிவங்களைப் பெறும். பொதுச்சாலைகளை தலித் மக்கள்  பயன்படுத்தத் தடையுள்ள ஊர்களில் அதற்கெதிரான போராட்டம்தான் முதல்கட்ட மாற்று அரசியலாக, விடுதலைக்கான அரசியல் செயல்பாடாக இருக்கும். ஊர்கள், சேரிகள் எனத் தனித்தனி வாழிடங்களையும் சேரிச் சுடுகாடு, ஊர்ச் சுடுகாடு எனத் தனித்தனி புதைகாடுகளையும் கொண்ட  ஒரு சமூகம்  பேசும் தமிழ் அரசியல் விடுதலைக்கானது அல்ல என்பதை விளக்கிக்கூற வேண்டியதும் மாற்று அரசியலின் பகுதிதான்.  தம் மண்ணை, ஆற்றை, குன்றுகளைக் காக்கப் போராடும் மண்ணின் மக்களுக்காகக் குரல்கொடுப்பதும், குரல் கொடுப்பவர்களுக்கு துணையாக நின்று பேசுவதும்கூட மாற்று அரசியல்தான். உலக மயமான ஆதிக்கங்கள்,  பெருந்தேசிய அடக்குமுறைகள் தொடங்கி தனி மனிதர்களின் நடத்தைகளில் உள்ள மற்றவர் மீதான மனிதஉரிமை மீறல்கைள் வரை நம் காலத்திற்கான  அரசியல் விரிந்து கிடக்கிறது. இவை பற்றிய மாற்றுப் பார்வைகளை அறிவதும் அவற்றை பரவலாக்குவதும்  நம் காலத்திய மாற்று அரசியலின் தொடக்கம்.

அச்சம் தவிர், ஆண்மை அழி -பிரேம்

உரையாடல்: 6    அச்சம் தவிர், ஆண்மை அழி

கேள்வி

[ராஜகாந்தன், அசோக்ராஜ், கருணாகரன்]

தமிழ்ப் பெண் எழுத்தாளர்கள் குறித்து தற்போது எழுந்துள்ள சர்ச்சையில் உங்களது எதிர்வினையைப்  பன்மெய் இதழில் பதிவுசெய்துள்ள நிலையில், பெண்ணியம் தமிழில் செயல்பட்டு வரும் முறை மற்றும் உலகமய /தனியார் மயமாக்கலுக்குப் பின்னான கடந்த பத்தாண்டுகளில் ஏற்பட்டுள்ள சமூக மாற்றங்களை உட்செரித்த பெண்ணிய சிந்தனைப் போக்குகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது குறித்து சற்று விவரியுங்கள்.

பதில்

பிரேம்

தமிழ்ப் பெண் எழுத்தாளர்கள் குறித்து தற்போது மட்டுமல்ல, அவ்வப்போது எழுவது சர்ச்சை இல்லை  அவமதிப்பு, இழித்துரைப்பு. மாற்று அரசியலில், அறம்சார் அரசியலில் அக்கறை கொண்டவர்கள் தமிழில் பெண்ணியச் சிந்தனைகள், பெண்ணெழுத்துகள் தனி அடையாளத்துடன் உருவாகி வளர்வதை வரவேற்று வளர்க்க முயற்சி செய்வார்கள். இலக்கியம், கோட்பாடு என்பதில் அக்கறையுள்ளவர்கள் பெண்ணியம், பெண்ணெழுத்து தமிழில் மிகத் தேவையானது என்பதைப் புரிந்து கொண்டு தம்வாசிப்பைத் தொடர்வார்கள். இவற்றில் எதுவும் இன்றி ஆண்திமிர், ஆண்மைய அதிகாரத்தைக் கலை-இலக்கியம் என்ற வெளிப்பூச்சுக்குள் மறைத்து  வைத்து விற்பனை செய்பவர்கள்தான் “இந்தப் பெண்கள் எழுத வந்து உலகமே கெட்டுப் போச்சு” என்று கூச்சல் எழுப்பிக் கொண்டுள்ளனர். இதற்கான பின்புலத்தை நான் பன்மெய் கட்டுரையில் (ஆண்மையவாதப் பொய்மைகளும் கருத்தியல் வன்கொடுமைகளும்) விரிவாக விளக்கியிருக்கிறேன்.

பெண்ணியம் மாற்றுச் சிந்தனை மற்றும் விடுதலை அரசியலின் மிகமிக அடிப்படையான ஒரு பகுதி. மார்க்சியம், மனித உரிமை அரசியல், தலித் அரசியல், சமத்துவ அரசியல் அனைத்தும் பெண்ணியத்தின் அடிப்படைகளை  ஏற்றுத்தான் தம்மைச் செயல்பாடு கொண்ட விடுதலைக் கருத்தியல்களாகத் தகுதிப்படுத்திக் கொள்ளமுடியும். அதே சமயம் பெண்ணியம் தனித்து இயங்குகிற, தனித்துச் செல்கிற ஒரு சிந்தனை முறையோ, உளவியலமைப்போ இல்லை.  பெண்ணியலாளராக இருக்கும் ஒருவர்தான்  அனைத்து வகையான  மாற்று அரசியல், விடுதலைக் கருத்தியல்  தளத்திலும்  சரியான, மெய்யான புரிதலுடன் செயல்பட  முடியும்.

மார்க்சிய, அம்பேத்கரிய கருத்தியல் தளங்கள் பெண்ணியத்திற்கு மறுப்பான தர்க்கத்தையும் பெண்ணிலையை இரண்டாம் நிலையில் வைக்கும் கருத்தாக்கத்தையும் கொண்டிருப்பதாக கற்பனை செய்து பாருங்கள்… பௌத்தம், காந்தியம் போன்ற மனிதநேயச் சிந்தனைகள் பெண்ணியத்தின் பல அடிப்படைக் கேள்விகளுக்கு மௌனம் காப்பதால்தான் தனித்தியங்கும் சக்தியற்ற  நல்லெண்ணக் கருத்துக்களாக மட்டும் மீந்து போயுள்ளன…இந்தியச் சமூகங்களில் சுதந்திர, பகுத்தறிவுச் சிந்தனைகளின் முன்நிபந்தனை ஒடுக்கப்பட்டோர் அரசியல், பெண்ணிய அரசியல் இரண்டையும் ஏற்பதுதான்.

எப்போதோ இருந்த தீண்டாமையைச் சொல்லி தற்போது இடஒதுக்கீடு பெற்று ஏமாற்றுகின்றனர் தலித்துகள் என்று சொல்வதும் பெண்ணியம் பேசும் பெண்கள் சிலர் பல்வேறு தந்திரங்களைப் பயன்படுத்தி ஊடகங்களின் கவனத்தைக் கவருகின்றனர் என்று சொல்வதும் ஒரே வகை பிற்போக்கு  மூளையமைப்பிலிருந்து உருவாகும்  இருவகை வாசகங்கள்.  தமிழின் இலக்கியப் பொதுப்புத்தி என்பது ஆண்திமிர், ஆண்மைய அறியாமை கொண்டதாகத்தான் இருக்கிறது  என்பது  ஒவ்வொரு நாளும்  நிரூபனமாகிக்கொண்டே  இருக்கிறது.

இதற்கு வேறுசில வடிவங்களும் உண்டு. “பெரியார் சொல்லாத எந்தப் பெண்ணியத்தை இந்தப் பெண்கள் சொல்கிறார்களாம்” என்றோ,  “ஜெயகாந்தன் எழுத்தில் இல்லாத பெண்ணியத்தையா இந்தப் பெண்கள் சொல்லிவிடப் போகிறார்கள்” என்றோ,  “உண்மையான பெண்ணியம் பற்றி இவர்களுக்கு என்ன தெரியும்” என்றோ, “பாட்டாளி வர்க்கப் புரட்சிக்குள் பெண்விடுதலை அடங்கிவிடுகிறது  என்பதைத் தெரிந்து கொள்ளாத இயக்க மறுப்பியல்தான் இந்தப் பெண்ணியப் பேச்சுக்கள் எல்லாம்”  என்றோ இது பல குரல்களில் ஒலித்தாலும் இவை சொல்ல வருவது ஒன்றுதான்,  “பெண்ணியம் எனத் தனியாக ஏதும் இல்லை, பெண்மொழி, பெண்ணிலை அறிவு என்பதெல்லாம் பிரிவினைவாதம், பெண்ணெழுத்து என எதுவும் தனியாக இருக்க முடியாது.”

இதனை இப்படியே நீட்டிச் சென்றால் இறுதி முடிவுகள் இப்படியாக இருக்கும் “பெண் எனத் தனியாக எதுவும் இருக்க முடியாது. ஆணுக்குள் பெண் அடக்கம், ஆண் அமைப்பவை அனைத்தும் பெண்ணையும் உள்ளடக்கியது. பெண்ணைக் காப்பது ஆணின் கடமை,  ஆணிடம் தன்னை ஒப்படைத்து தனக்கான கடமையைச் செய்து வாழும் பெண்  பாதுகாப்பாக வாழ்வதுடன் எந்த துயரமும் இன்றி வாழலாம். தனக்கென தனி அடையாளம் பெறுவது இயற்கையிலேயே பெண்களுக்கு இயலாத ஒன்று. பெண்கள் தனி அடையாளம், சம உரிமை, சமத்துவம் என்று பேசுவதெல்லாம் மத ஒழுக்கம், குடும்பம், பண்பாடு என்ற அனைத்தையும் அழித்துவிடும். இந்தியச் சமூகம் எப்போதும் பெண்களுக்கு பெருமையளித்து வந்துள்ளது, பெண்ணைத் தெய்வமாக வழிபடும் நாடு நம்முடையது. பெண்கள் இன்று இழிந்த நிலையில் இருப்பதற்குக் காரணம் பெண்கள்தான். நம் மரபை விட்டு அவர்கள் வெளியேறும் போது பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகிறது. வீடுதான் அவர்களின் இடம்.  அரசியல், சிந்தனைத்துறைகள்,  இலக்கியம் என்பவையெல்லாம் ஆண்கள் பார்த்துக் கொள்ள வேண்டிய பகுதிகள்…”  இதில் ஏதாவதொரு வாக்கியத்தின் வழியாக நீங்கள் இன்றுள்ள ஆண்மைய அமைப்புகளின் மைய நரம்பு மண்டலத்திற்குள் நுழைந்துவிடலாம். முற்போக்கு-பிற்போக்கு, மதவாதம்-நவீன சிந்தனைகள், மனிதநேயம்-முதலாளித்துவம்,  அறிவியல்வாதம்- புராணிகவாதம், உழைப்பாளர்கள்- உயர்தொழில் நுட்பத்தினர்  இப்படிப் பல முரண்பட்ட போக்குகள் கொண்ட ஆண்கள் பெண்ணிய அரசியல், பெண்ணியச் சிந்தனைகள், பெண்ணிய இயக்கங்கள் என்பவற்றை எதிர்கொள்ளும் போது மட்டும் ஆண்மைய-ஆணாதிக்க நிலைப்பாட்டினை எடுப்பதுடன் ஆண்நிலை பற்றிய கட்டுக்கதைகளை இயற்கையானதென நம்பவும் செய்கின்றனர். இந்த வகையான சமூக-வரலாற்றுச் சூழல் நிலவும் ஒரு சமூகத்தில்தான் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து தொண்ணூறுகளில் தமிழில் புதுப்பிக் கப்பட்ட அடையாளத்துடன் பெண்ணியத்திற்கான களம் அமைக்கப்பட்டது.

 பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொடங்கி இருபதாம் நூற்றின் முற்பகுதிவரை பெண்விடுதலை, பெண் கல்வி, பெண்களுக்கான உரிமைகள் என உலகப் பெண்ணிய அரசியலின் தாக்கங்கள் தமிழில் இருந்து வந்தன. தேசிய இயக்கம் பெண்களின் பங்கின்றி மேற்செல்ல முடியாது என்ற நிலையில் பெண்கள் தேசிய அரசியலில் உள்ளடக்கப்பட்டனர். பகுத்தறிவு இயக்கம் பெண்களுக்கான விடுதலையை முன்நிபந்தனையின்றி ஏற்றுக் கொண்ட ஒன்றுதான். இந்திய மார்க்சிய அரசியல்  பெண்ணியத்தை மறுத்துச் சொல்லுவதற்கு கொள்கையடிப்படையில் எந்த உரிமையும் இல்லை.

இந்திய நவீனச் சிந்தனையாளர் பலரும் வேதகால நாகரிகம்,  பாரதத் தொன்மை, இந்தியப் பண்பாடு பற்றிய குழப்பமான பற்றுள்ளவர்கள்தான்.  ஆனால் பெண்ணிய-பெண்விடுதலை அரசியலின் கேள்விகள் அவர்களைப் பாதித்தன. பெண்ணியச் சிந்தனைகள் தொடக்க நிலையில் இருந்த போதே தமிழின் மகாகவியாகப் பின்னாளில் பெயரிடப்பட்ட சுப்பிரமணிய பாரதி போன்ற சிலரை அது பாதித்திருக்கிறது.   “ஞானவொளி வீசுதடி, நங்கை நின்றன் சோதிமுகம்; ஊனமறு  நல்லழகே!  ஊறுசுவையே! கண்ணம்மா!” என்றும் “வேதமடி நீ யெனக்கு, வித்தையடி நானுனக்கு; போதமுற்ற போதினிலே பொங்கிவருந் தீஞ்சுவையே! நாதவடி வானவளே! நல்ல உயிரே கண்ணம்மா!” என்றும் பாடிய பாரதிக்கு இருந்தது புனிதப் பெண்மை பற்றிய கருத்தாக்கம்தான் ஆனால் உலக அரசியலைக் கவனத்தில் கொண்ட ஒரு ஊடகவியலாளராக அவர் சொல்வது கவனத்திற்குரியது.

“சில தினங்களுக்கு முன்பு, இங்கிலாந்து தேசத்தில் மாஞ்செஸ்டர் நகரத்தில் பிரசுரம் செய்யப்படும் ‘மாஞ்செஸ்டர் கார்டியன்’ என்ற பத்திரிகை நவீன ருஷியாவின் விவாக விதிகளைப் பற்றிய உண்மையான விவரங்களைப் பிரசுரம் செய்திருக்கிறது.

அவற்றைப் பார்க்கும்போது, நவீன ஐரோப்பிய நாகரீகம் என்று புகழப்படும் வஸ்துவின் நியாயமான உயர்ந்த பக்குவ நிலையை மேற்படி போல்ஷிவிஸ்ட் விவாக சம்பிரதாயங்களில் எய்தப்பட்டிருக்கிறதென்று தெளிவாக விளங்குகிறது ஆண், பெண் இருபாலாரும் பரிபூரண ஸமத்துவ நிலைமையுடையோர். இங்ஙனம் இருபாலாரும் முற்றிலும் சமானம் என்ற கொள்கைக்குப் பங்கம் நேரிடாதபடி விவாகக் கட்டைச் சமைக்க வேண்டும் என்பதே ஐரோப்பிய நாகரீகத்தின் உண்மையான நோக்கம். பெண்களுக்கு விடுதலை தாங்கள் வேறு பல ஜாதியார்களைக் காட்டிலும் அதிகமாகக் கொடுத்திருப்பதே தாம் நாகரீகத்தில் உயர்ந்தவர்கள் என்பதற்கு முக்கியமான அடையாளங்களில் ஒன்றாமென்று ஐரோப்பியர்கள் சொல்லுகிறார்கள். அந்த வகையிலே பார்த்தால், ஐரோப்பாவின் இதரப் பகுதிகளைக் காட்டிலும் நவீன ருஷியா உயர்ந்த நாகரீகம் பெற்றுள்ள தென்பது பரத்யக்ஷமாகத் தெரிகிறது.

சில தினங்களின் முன்பு ஒரு கிராமாந்தரத்து ஸ்திரீ ‘மாதர் நிலை’ என்ற மகுடத்தின் கீழே ‘சுதேசமித்திரன்’ பத்திரிகையில் ஒரு வியாஸம் எழுதியிருந்தார்.அந்த வியாஸத்தை வாசித்துப் பார்த்தால் (ஸ்ரீமான் காந்தி சொல்லுவது போல) எவனுக்கும் அழுகை வராமல் இராது. அந்த வ்யாஸத்தில் நம்முடைய தேசத்து ஸ்திரீகளை நம்மவரில் ஆண் மக்கள் எத்தனை இழிவாகவும் குரூரமாகவும் நடத்துகிறார்களென்பதை அந்த ஸ்திரீ மிகவும் நன்றாக எடுத்து விளக்கியிருந்தார். உலகத்தில் ஒரு ஸ்திரீ ஜனனமெய்திய மாத்திரத்திலே பூமாதேவி மூன்றே சொச்சம் முழம் கீழே அமிழ்ந்து போய் விடுவதாக இந்நாட்டில் முந்தைய ஆண்மக்கள் எழுதி வைத்திருப்பதையும் அது போல் ஸ்திரீகளை இழிவாகவும் குறைவாகவும் சொல்லும் வேறு பல ‘சாத்திர’ வசனங்களையும் மேற்கோள் காட்டி, அந்த மாது நம் பெண் மக்களின் ஸ்திதி, விலங்குகளின் ஸ்திதியைக் காட்டிலும் பரிதாபத்துக்கு இடமாக விளக்கி மிகவும் வருத்த முணர்த்தியிருந்தார்.

இப்படிப்பட்ட நம்முடைய ஸ்திரீகளின் நிலைமையை நவீன ருஷ்யாவில் ஸ்திரீகளின் விஷயமாக ஏற்பட்டிருக்கும் சட்டங்களுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். அப்போது தான் நம்மை ஐரோப்பிய நாகரீகம் எந்த சக்தியினாலே கீழே வீழ்த்திற்று என்பதும், எந்த அம்சங்களில் நாம் ஐரோப்பிய நாகரீகத்தின் வழியைப் பின்பற்றத் தகும் என்பதும் தெளிவுறப் புலப்படும். நாம் ஐரோப்பியர் காட்டும் நெறிகளை முற்றிலுமே கைப்பற்றிக் கொள்ளுதல் அவசியமில்லை.

ஆனால் ‘ஆண்களுக்கும் பெண்களுக்கும் எவ்விதத்திலும் வேற்றுமை கிடையாது. இருபாலோரும் ஸமானமாகவே கருதப்படுவார்கள்’ என்று ருஷ்யச் சட்டம் கூறுமிடத்திலே நாம் ஐரோப்பிய நாகரீகத்தின் கருத்தை அனுஸரித்தல் மிக, மிக, மிக, மிக அவசரம்.”

பாடல்கள் பாடிய ஒரு பாவலன் என்ற நிலையில் இருந்து உலக அரசியல் மாற்றங்களை உணரும் அறிவுத்துறை நோக்கிய நகர்வு பாரதி கால நவீனத்துவத்தின் தொடக்கமாக அமைந்தது.

மிக மிக அவசரம் என்று பாரதி கூறி 100 ஆண்டுகளுக்குப் பிறகு, “நம் நாட்டில் பெண்கள் நிலைமையானது மிக்க கவலைக்கிடமானது. வேர் தொடங்கி உச்சிக் கிளைவரை முழுவதும் திருத்தம் செய்ய வேண்டும். பெண்களின் கேவல நிலைமைக்கு நம்நாட்டு மூடப் பழக்க வழக்கங்களே காரணம் என்று சொல்ல வேண்டும். பெண்கள் திருத்தம் அடைவதைப் பொறுத்தது – நாடு திருந்துவது.” என்ற பாரதிதாசன் பெண்ணியத்தின் முதல் கட்ட கோரிக்கைகள் அனைத்தையும் தன் மொழியில் தயக்கமின்றிக் கொண்டு வந்த பிறகு  “பெண்ணியம் மேலைநாட்டுப் பொருள் அதனைத் தமிழில் பேசுவோர் பண்பாட்டைக் கெடுப்பவர்கள். அவர்களைத் தாக்க வேண்டும்” என்று கூவித் திரிகின்றனர் சில  தமிழ்க் கவிஞர்களும் எழுத்தாளர்களும்.

பெண் கலைஞர்கள், எழுத்தாளர்கள், கல்வியாளர்கள்,களச்செயலாளர்கள், சிந்தனா வாதிகள், சமூகத்தலைவர்கள் எனப் பெண்கள் தம் வரலாற்றுப் பங்கை எடுத்துக் கொள்ளத் தொடங்கிய போதே தமிழில் எதிர்ப்பு, வெறுப்பு, தாக்குதல்  என்பவை இருந்தன. சிந்திக்கக் கூடிய, தனித்த அடையாளம் கொண்ட, பொது வெளியில் தலைமையேற்க முன் வரும்,  சமூக வெளியில் இயங்க முனையும் பெண்களின் வாழ்க்கைக் கதைகள் வலிகள், ஒதுக்குதல்கள், தனித்த அவலங்கள் கொண்டதாகவே இருந்தது.

இந்தக் காலகட்டத்திலும், இந்திய அரசியல் தொடங்கிய பிறகும் எழுதிய, செயல்பட்ட பெண்கள் பலர் பெண்மை பற்றிய பழங்கருத்தியல்களை, உருவகங்களை உடைக்கவும் புதிய அடையாளத்தை உருவாக்கவும் தம் பங்கை அளித்துள்ளனர். ஆனால் இவையெல்லாம் பெண்ணியத்திற்கான தொடக்கங்களே தவிர பெண்ணியத்தின் தேவைகளை நிறைவேற்றியவை அல்ல.

இதற்கு அடுத்த கட்டமாக  நிகழ்ந்த அடிப்படை மாற்றத் தைத்தான் “தொண்ணூறுகளில் தமிழில் புதுப்பிக்கப்பட்ட அடையாளத் துடன் பெண்ணியத்திற்கான களம் அமைக்கப்பட்டது” என்று குறிப்பிடுகிறேன். இந்தக் காலகட்டம் மிகுந்த முக்கியத்துவம் உடையது. பெண் பிறப்பதில்லை உருவாக்கப்படுகிறாள், பெண் உளவியல் என்பது மொழியால், பண்பாட்டு வரலாற்றுக் கதையாடல்களால் கட்டப்படுகிறது, ஆண்  தன்மை என்பது பெண்ணிலைக்கு மறுதலையான எதிர்நிலைக் கட்டமைப்பு என்பது போன்ற பெண்ணியப் புரிதல்கள் தொடங்கி அறிவியல், வரலாறு, மனிதநிலை என்பவை உலகப் பொதுத்தன்மையோ ஒற்றையமைப்போ கொண்ட புனித மெய்மைகள் அல்ல அனைத்தும்  கால-இடத்தன்மை கொண்ட கதையாடல் செயல்பாடுகளே என்ற பின்நவீனத்துவப் புரிதல்கள் வரை தற்போது அறிவமைப்புகளில் பல தலைகீழாக்கங்கள் நிகழ்ந்துள்ளன.

இந்த தளத்தில் தமிழில் பெண்ணிய உரையாடல் பல புதிய தன்மைகளைக் கொண்டு இயங்கத் தொடங்கியுள்ளது. இதற்குத் தனித்தனியான சில பெண்ணியச் சிந்தனையாளர்கள், செயல்பாட்டாளர்கள் தம் வாழ்க்கையை அளித்துச் செயல்பட்டு வருகிறார்கள். இவர்கள் யார் யார் என்பதை கடந்த இருபது ஆண்டுகளில் பண்பாட்டு உளவுப்படையினரின், கலை-இலக்கிய பாதுகாப்புப்படையினரின்  தாக்குதலுக்கு அதிகம் உள்ளான பெண்ணிய, பெண்மொழி செயல்பாட்டாளர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் பற்றிய கணக்கெடுப்பின் வழி நீங்கள் தெரிந்து கொள்ளலாம். இன்று பெண்கள்  சிறப்பிதழ்களில் இவர்களின் பெயர்கள் இடம் பெறுவதும், பெண்கள் தாக்கப்படும் பொழுது ஊடகங்கள் இவர்களில் சிலரிடம் கருத்து கேட்பதும் இவர்கள் பெண்கள் என்பதால் அல்ல செயல்பாட்டாளர்கள், கருத்தியல் போராளிகள் என்பதால்தான். இதனையே பெண்கள் ஊடகத்தைக் கைப்பற்றிக் கொண்டனர் என்கின்றனர் இந்திய ஞானமரபினர். தமிழின் ஊடக, கருத்தியல் பரப்பில் இவர்களின் இடம் மிகமிகக் குறைவு. தொடர்கதைகள் எழுதி தமிழின் கதைப்பரப்பை பல மடங்கு பெருக்கிய-பெருக்கிவரும் பெண் எழுத்தாளர்களும், தொடர்களில் அழுது தமிழ்ப் பெண்களின் கண்ணீரைப் பெருக்கிவரும் பெண்கலைஞர்களும் பெற்றுள்ள பண்பாட்டு இடத்துடன் ஒப்பிடும் பொழுது பெண்ணிய, பெண்ணரசியல், பெண்ணெழுத்து வழி செயல்பட்டு வருபவர்களின்  இடங்கள் மிகச்சிறிய புள்ளிகளாகவே உள்ளன.

தமிழில் பெண்ணியம்  இன்றும் விளிம்புநிலையில் உள்ள  சிந்தனைப் போக்குதான்.  எல்லா கருத்தியல்களைப் போலவே பெண்ணியத்திலும் வேறுபடும் சிந்தனைப் பள்ளிகள், இயக்கப் போக்குகள் இருப்பது இயல்பானது. சாதி, இன, மொழி அடையாளங்கள் வழி இயங்கும் அரசியல் பரப்பில் பெண்ணியம் தன்னை வேறுபாடுகளுடன் மோதும் பன்மைநிலை அரசியலாக வைத்துக் கொள்ளுவது தவிர்க்க இயலாதது. பெண் எழுத்துக்கள் எல்லாம் பெண்ணிய எழுத்துக்களாக இருப்பதில்லை. ஆனால் பெண்ணியலாளர் ஒருவர் எழுதுவதும் பேசுவதும் அனைத்துப் பெண்களுக்குமானதாக இருக்கிறது, இது தற்காலத் தேவை.

கடந்த பத்தாண்டுகளில் ஏற்பட்டுள்ள சமூக மாற்றங்களை உட்செரித்த பெண்ணியச் சிந்தனைப் போக்குகள்  இன்று எவ்வாறு அமைய வேண்டும் என்பதை விட கடந்த பத்தாண்டுகளில் ஏற்பட்டுள்ள சமூக மாற்றங்களை விளக்க முயலும் சிந்தனைப் போக்குகள் பெண்ணியத்தை எந்த அளவுக்குப் புரிந்து தம்மை அதற்கேற்ப உருமாற்றிக் கொண்டுள்ளன என்று நாம் பார்க்க வேண்டும்.  அத்துடன் கடந்த நூற்றாண்டில் ஏற்பட்டுள்ள சமூக மாற்றங்களை நாம் பெண்ணிய நோக்கில் மறுஆய்வு செய்ய வேண்டும்.

தலித் அரசியல், தமிழ் அடையாளம், மொழித் தேசியம் பற்றிய திட்டமிடல்கள் மற்றும் கருத்தாக்க முறைகளின் அடிப்படைகளில் இருந்தே பெண்ணிய கருத்தியல்கள், கேள்விகள் மையஇடத்தில் வைக்கப்பட வேண்டும். இந்துத்துவ அரசியல் முன்வைக்கும் புனிதப்பழமை, புராதன மீட்பு, பண்பாட்டுத் தூய்மைவாதம் என்பவற்றை மொழிவழி முன்வைக்கும் அரசியலாகத் தமிழ் அரசியல் மாறாமல் இருக்க பெண்ணியத்தின் வரலாறு பற்றிய பார்வைகள்தான் வழி காட்டியாக இருக்க முடியும். உலகமயமாக்கல், தனியார் மயமாக்கல் பற்றிக் கருப்பினப் பெண்ணியம், சூழலியல் பெண்ணியம் கொண்டுள்ள புரிதல்கள் தமிழில் அதிகம் விவாதிக்கப்பட வேண்டும்.  சமநீதி கொண்ட குடிமைச் சமூகத்திற்கான உளவியல், நடத்தையியல் கட்டமைப்புகள் பெண்ணிய அறிவின்வழி மறுஉருவாக்கம் செய்யப்பட வேண்டும்.

தமிழ்ப் பொது வெளியில் அதற்கெல்லாம் நேரம்-இடம் வாய்ப்பதில்லை.  “பெண்ணியம் என்றால் மது குடிப்பதும், புகை பிடிப்பதும், மணவிலக்கு பெறுவதும்தான் எனச் சில நாசகார சக்திகள் தமிழ், இந்தியக் கலாச்சாரத்தை கெடுத்துக் கொண்டுள்ளன. இவர்களை வெளியே நடமாடவிடக் கூடாது” என்று வெறிபிடித்து உறுமுகிறவர்கள் நம் பண்பாட்டுக் காவலர்கள். இவர்களுடன் அறிவுப்பூர்வமாகவோ, அறம் சார்ந்தோ பேசிப் பயனில்லை. இவர்கள் தம்முடைய கடவுளர்கள் தொடங்கி கவியரசர்கள் வரை ஒன்றுக்கு மேல் மனைவியர்கள் ஒன்பதுக்கு மேல் காதலிகள் கொண்டு வாழ்ந்ததாகக் கதைசொல்லிக் கொண்டாடிக் கொண்டே  “பெண்மொழி இன்னா ஒடம்பு,  உறுப்புன்னு பேசறதுதானா,  அப்ப நாங்களும் கெட்டவார்த்தயில பேசுவோம்ல” என்று தமிழ்-பாரதப் பண்பாட்டைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பெண் கவிஞரின் கவிதைத் தொகுதியின்  தலைப்பை அவர் பெயரின் பின் இணைத்து எழுதி எழுதித் தம் வன்கொடுமைப் புத்தியை உலகம் முழுக்க பரப்பிக் கொண்ட வலைதள வாசகர்களையும், ஒரு பெண்கவிஞரின் பெயரைத் தம் பன்மொழி ஞானத்தால் மொழிவிளக்கம் கூறி கலகக் காளைகளிடம் கைதட்டல் பெற்றுக் கொள்ளும் ஒலகத்தரம் கொண்ட எழுத்தாளர்களையும் கொண்டதுதான் தமிழின் அ-றி-வு-ல-க-ம்.

பெண்ணியமும் பெண்ணிலைச் சிந்தனை முறையும் தமிழில், இந்தியச் சூழலில் போர்த்தன்மை கொண்டதாக மாறவேண்டிய காலம் இது. பெண்ணிய-விளிம்புநிலைச் சிந்தனையாளர், செயல்பாட்டாளர், கவிஞர் எனப் பல தளங்களில் இயங்கி வரும்  மாலதி மைத்ரி-யின் வாழ்வுடன் பங்கு கொண்டவனாக  அவரால் காப்பாற்றி வளர்க்கப்பட்டவனாக கடந்த இருபத்தாறு ஆண்டுகளில் நான் கற்று வருவது இதுதான். ஒவ்வொரு அறிவுத்துறையிலும், சிந்தனை செயல்பாட்டுத் தளத்திலும் பெண்ணியக் கேள்விகள் வலிவுடன் முன் வைக்கப்பட்டு அனைத்துத் தளங்களும் சீராக்கம் செய்யப்பட வேண்டும். பெண்ணிய விடுதலை பொதுவுடைமைச் சமூகத்தில் நிகழவேண்டிய ஏதோ ஒரு புரட்சிகர மாற்றம் இல்லை, ஜனநாயகம், மக்கள் ஆட்சி, குடிமைச் சமூகம், குடும்பம், தனிமனிதர்களுக்கிடையிலான உறவுகள், உரையாடல்கள் என அனைத்திற்குள்ளும் நிகழ வேண்டிய அடிப்படை மாறுதல்…

நான் சில இடங்களில் முன்பே குறிப்பிட்டதை இங்கு மீண்டும் ஒரு முறை குறிப்பிட விரும்புகிறேன், “பெண்கள் ஆண்களுக்குச் சமமானவர்கள் என்பதை நான் ஏற்கவில்லை, ஆமாம் அவர்கள் ஆண்களைவிட உயிரியல், உளவியல் வகையில் உயர்ந்தவர்கள். இன்றுள்ள மனித சமூகம் ஆண்களின் படைப்பல்ல பெண்மை மற்றும் தாய்மையின் படைப்பு, ஆண் உளவியல் பெண்ணாற்றல் மீதான அச்ச வுணர்வின் வழி நிகழும் எதிர்நிலை உருவாக்கம்.  ஆண்கள் தம் அச்சத்தின் அடிமைகள் அதனால், அச்சம் தவிர், ஆண்மை அழி, இணங்கி இரு, ஈடேற முயற்சி செய்… இது பெண்ணியம் இல்லை, என்றாலும் சொல்லுகிறேன். நான் ஒரு நவீன சிந்தனையுள்ள மனித உயிரி என்றால் பெண்ணியம் எனது இரண்டு நுரையீரல்களில் ஒன்றாக இருந்தே ஆகவேண்டும், என் மூளையின்  இடது பகுதியாக அமைந்தே ஆகவேண்டும்…

உலக முதலாளியத்தை வளர்த்த உழைக்கும் வர்க்க அரசியல் -பிரேம்

உரையாடல்: 5   உலக முதலாளியத்தை வளர்த்த உழைக்கும் வர்க்க அரசியல்
கேள்வி:
உலகளாவிய முதலாளித்துவம், முன்னெப்போதும் இல்லாத வகையில் பரவலானதாகவும், சக்திவாய்ந்ததாகவும் மாறியுள்ள இன்றையச் சூழலில் உலக அளவிலான மாற்றுச் சிந்தனைகளின் எதிர்காலம் குறித்த உங்கள் பார்வை என்ன?
[ராஜகாந்தன், அசோக்ராஜ், கருணாகரன்]
பதில்
பிரேம்
முதலாளித்துவம், உலக முதலாளித்துவம் என்று நாம் அடையாளப்படுத்திக் காட்டுவது மாற்றுச் சிந்தனைத் தளத்தில் நிகழ்கிறது. முதலாளித்துவம், முதலீட்டு அதிகாரம், மூலதனம் காக்கும் அரசுகள், ஆதிக்கம் காக்கும் ராணுவங்கள், மனித உரிமை மறுக்கும் அமைப்புகள் என்ற தொடர் வன்முறைகள் இன்று வலுவடைந்துள்ளன என்பதை இப்படி அணுகிப்பார்க்கலாம். முதலீட்டியம், மூலதன ஆதிக்கம் எப்பொழுதாவது முழுமையாக வலுவிழந்திருந்திருக்கிறதா? அப்படி எதுவும் நடந்துவிடவில்லை. மக்கள்சார் அரசுகள், மக்கள் அரசியல், மக்கள் நல ஆட்சிமுறைகள் என்பவை நவீன காலகட்டத்தில தனிமனித சுதந்திரம் என்ற கோட்பாட்டு அடிப்படையில் உருவாகி உலக அளவில் மாற்று அமைப்பு பற்றிய கனவுகளை உருவாக்கின.
கொடுங்கோன்மை ஆட்சிகள், வன்கொடுமை அரசுகள், இனப்படுகொலை நிகழ்த்தும் ஆட்சியாளர்களால் நிறைந்திருந்ததுதானே மனித குலங்களின்- இனங்களின் வரலாறு. பேரரசுகளின் தலைநகரங்களில் இருந்து எவ்வளவு விலகியிருக்கிறதோ அந்த அளவுக்கு கொடுமையின்றி வாழலாம் என்ற நிலையில்தான் கிராம-குடிமரபுச் சமூகங்கள் இருந்தன. நவீன அமைப்புகள் நமக்கு வழங்கிய குடிமை உரிமைகள் சார்ந்து சுதந்திரம், சமநீதி, சமத்துவம், சமஉரிமை என்பவை பற்றி நமக்குக் கனவுகள் உருவாயின. சோஷலிசம், பொது உடைமைச் சமூகம் என்பதெல்லாம் அதற்கு அடுத்த கட்ட மனித முயற்சிகள். இன்று உலகச் சமூகங்கள் ஒவ்வொன்றும் ஒரளவு மனித உரிமை சார்ந்த மதிப்பீடுகளுடன் வாழ்வது அந்த வகை முயற்சிகள், அதற்கான போராட்டங்கள், தம் மக்களுக்காக போராளிகள் செய்த ஈகங்கள் உருவாக்கிய அமைப்பில்தான். உலக முதலாளியம் இன்று வலுவானதாக, உயிரியல் பெரும்போர் இயந்திரமாக மாறியிருந்தாலும் இது ஒரு இடைக்கால நிலை என்றே எனக்குத் தோன்றுகிறது.
இப்படிச் சொல்வதன் மூலம் மீண்டும் செம்படை புறப்பட்டு இந்த மனிதக்குலத்தை மீட்டெடுக்கும் என்று அறிக்கையிட அல்ல. அப்படி நடக்க வேண்டிய தேவையும் இல்லை. மொழி, இனம், சாதி, வாழ்வாதாரம், பண்பாடு, அரசியல், உயிர்வாழ்தல், பாலினம், மண்ணுரிமை என ஏதாவது ஒரு தளத்தில் ஒடுக்கப்பட்ட ஒவ்வொருவரும் விடுதலை பற்றி, நல்வாழ்வு பற்றி, தன்னுரிமை, தன்மதிப்பு பற்றிய கனவைக் காணாமல் இருப்பதில்லை. தம்மீது கவிந்த வறுமை, ஏழ்மை, அடிமைத்தனம் எதனையும் பாசத்துடன் பற்றிக் கொண்டிருப்பது மனித இயல்பல்ல. அப்படியெனில் இன்றைய தேசிய-பன்னாட்டு முதலீட்டு ஆதிக்கங்கள் எப்படி உலக மக்களை சமூகங்களைத் தன் கட்டுக்குள் வைத்திருக்கிறது? நீங்கள் பட்டினியில் கிடந்து சாகத்தான் வேண்டும் என்று சொல்லியா? இல்லையே, நாங்கள்தான் உங்களுக்கான நல்வாழ்வை வழங்குவோம், எங்களுக்காக உழையுங்கள், மூலதனத்தை, தேசிய ராணுவத்தை பலப்படுத்துங்கள், நாட்டுக்காக ரத்தம் சிந்தத் தயாராக இருங்கள், நீங்களும் உங்கள் தலைமுறையும் நலமாக வாழலாம் என்று கூறித்தான் தம்மை நியாயப்படுத்திக் கொண்டும் நிலைப்படுத்திக் கொண்டும் உள்ளன.
தென்னமெரிக்க மக்களின் தண்ணீரையும் செந்நீரையும் உறிஞ்சும் ஐக்கிய அமெரிக்க அரசு தன் மக்களுக்கு சொல்வது என்ன? “உலகின் வளம் எல்லாம் உமக்குத்தான் உயிர்களைக் கொல்வது பற்றிக் கவலை வேண்டாம்” என உறுதி அளிக்கிறது. “ஆப்கான் மக்களைக் கொல்லாமல் அமெரிக்கத் தெருக்களில் நம் மக்கள் அமைதியாக நடமாடவோ ஆடல் பாடல்களில் ஈடுபடவோ முடியாது” என்கிறது. ஐரோப்பிய நாடுகள் ஆப்ரிக்க மண்ணைக் கொள்ளையிட்டு தன் மக்கள் நல்வாழ்வுத் திட்டத்திற்கு அளிப்பதைப் பெருமையாகச் சொல்லிக் கொள்கின்றன. உலக முதலாளியம், உள்ளூர் முதலாளியம் எல்லாம் ஏதோ ஒரு வகையில் தன் மக்களுக்கான நல்வாழ்வு, நீடித்த இன்பம் பற்றிய கனவை உருவாக்கித்தருகின்றன.
பாகிஸ்தானுடன் ஆண்டுக்கு இருமுறை போர் நடத்தினால்தான் இந்தியா வல்லரசாகும் என்றும் இந்தியா வல்லரசானால் அரசின் நியாயவிலைக்கடைகள் வீட்டு வாசலுக்கு வந்து உணவுப் பொருள் வழங்கும் என்பது  போன்ற நம்பிக்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இவையெல்லாம் ஒவ்வொன்றாகத் தகரும் பொழுது மக்கள் மாற்று என்ன என்பதை நோக்கித் திரும்பத்தான் செய்வார்கள். மாற்று அரசியலை, மாற்றுப் பொருளாதாரத்தை, மாற்று வாழ்வியலை இயற்கையும் சூழலியல் நசிவும்கூட நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கும்.
உலக அளவிலான முதலாளித்துவ, சந்தைப் பொருளாதார அமைப்பு தனக்கான அடிப்படையை மீண்டும் உறுதி செய்துகொள்ளக் காரணமாக அமைந்தது இயந்திரமையம் கொண்ட மனிதக் கட்டமைப்பு. இயந்திரத் துப்பாக்கிகள் தொடங்கி, எண்மின்னியல் நினைவுக் களஞ்சியங்கள் வரை அனைத்தும் மனித உடல்நீக்கம் கொண்ட தொழில் நுட்பங்கள். பொதுவுடைமைச் சமூகம் பற்றிய கனவுகள், சமத்துவம், சமநீதி என்ற எதிர்பார்ப்புகள் இரண்டையும் கலந்து மார்க்சியத்தின் பெயரால் உருவாக்கப்பட்ட மாற்று அரசியல்-பொருளாதார அமைப்புகள் முன்னேற்றம்-வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் இயந்திரமைய அமைப்புகளையே பெருமளவில் உற்பத்தி செய்தன. இயந்திர மயமாக்கம்- அரசுமைய அதிகாரம்- முதலீட்டு ஆதிக்கம் அனைத்தும் ஒன்றாகக் கலக்கும் இடம் இது. இந்தக் கலப்பு முதலாளித்துவம், ஏகாதிபத்தியம் இரண்டிற்கும் மிகவசதியான ஒரு உலகை உருவாக்கித் தந்தது. பொதுவுடைமைச் சமூகம் பற்றிய கனவுகள், சமத்துவம், சமநீதி என்ற எதிர்பார்ப்புகள் இரண்டையும் நீக்கிவிட்டால் எந்த ஒரு தேசிய சோஷலிச அரசும் உலக முதலாளியத்தின் ராணுவத் தளங்களில் ஒன்றாக மாறிவிடும். இதுதான் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக நடந்து வருகிறது. மார்க்சியம், கம்யூனிசம் எல்லாம் அழிந்து மக்கள் மாபெரும் பேரானந்தப் பெருவாழ்வு பெறப்போகும் காலம் இது என வாணவேடிக்கையுடன் தொடங்கப்பட்டதுதான் இந்தச் சுதந்திர மயமாக்கல், தனியார் வசமாக்கல், உலகமயமாக்கல் என்ற விழாக்காலத் தள்ளுபடி அரசியல். இந்த விழாக்காலக் கொண்டாட்டங்கள் உலகின் 10-முதல் 20-சதவிகித மக்கள் தொகுதிகளை மட்டும் மனிதர்களாக மதிப்பவை. இவர்களுடைய களிப்பும் களிப்புக்கான முன் தயாரிப்பும்தான் உலக வாழ்க்கை என்ற உளவியல் கட்டமைப்பு அனைவருக்குமானதாக எப்படி இருக்க முடியும்?
இன்று உள்ள மக்கள் தொகுதிகள் நுகர்தலுக்கான கட்டற்ற உரிமை கொண்டவர்கள் – நுகர்வுக்குத் தம்மை நிபந்தனையற்று ஒப்படைப்பவர்கள் என்ற இரு பெரும் பிரிவாக பிரிந்துள்ளனர். உழைக்கும் வர்க்கம், உடமை வர்க்கம் என்பவை இன்று இடைநிலை இயந்திரங்களாக மாறி இயற்கை வளங்களை முதலீடாக மாற்றிக் கொண்டுள்ளன. மண்ணின் மக்களை வீடற்றவர்களாக்கி சுரங்கங்களைத் தோண்டி கனிமங்களைக் கொள்ளையிடுவது முதல் தொழிற்சாலைகளுக்கு மின்சாரம், வணிக வளாகங்களுக்கு ஒளிவெள்ளம் என்ற பெயரில் பலநூற்றாண்டு மனித அவலத்திற்குக் காரணமாக அமையவுள்ள அணுவுலைகளை நியாயப்படுத்துவது வரை உலக முதலாளியமும் – உழைக்கும் வர்க்கத்தின் உளவியல் இருண்மையும் ஒன்றிணைந்துள்ளன. இந்த இணைப்பு அதிக காலம் நீடிக்கக்கூடியதல்ல.
நுகர்வு பெருகிய சமூகம், வாழ்வாதரம் அற்ற சமூகம் என இரண்டு பகுதியாக உலகம் பிரிந்து குடை சாயும் நிலையில் உலக முதலாளியம் தன் கணிணிகளையும் ஏவுகணைகளையும் கட்டிப்பிடித்துக் கொண்டு நிம்மதியாகத் தூங்க முடியாது. ஒரு மூட்டை கோதுமையும் நெல்லும் சோளமும் ஒரு விண்களத்தைவிட மதிப்பு வாய்ந்தது என்பதையும், ஒரு கை தூயநீர் ஒரு மூட்டை அச்சடித்த பணத்தைவிட அரிதானது என்பதையும் உலக விஞ்ஞானிகள் உணர வேண்டிய காலம் உருவாகும். மாற்றுச் சிந்தனைகளின் “எதிர்காலம்” குறித்து நான் கவலைப்படவில்லை… மனிதர்கள் மாற்றுச் சிந்தனைகளின் வழியாவே தம்மை மதிப்பு மிக்கவர்களாக வைத்துக் கொள்ளமுடியும்…
இன்றைய ஒப்பீட்டு அளவிலான மனித நீதியும், அறம்சார் நெறிகளும் மாற்றுச் சிந்தனைகள், மாற்றுச்செயல்திட்டங்கள் வழிதான் காப்பாற்றப்படுகின்றன… தமிழ் இனப் படுகொலை நடத்திய சிங்கள அரசு கூட “ஆமாம் நாங்கள் படுகொலை செய்தோம், இத்தனை லட்சம்…” என்று சொல்லித் தம் இறையாண்மையைத் தொடரவில்லை. “நாங்கள் குற்றம் எதுவும் செய்யவில்லை போராளிகள்தான் தமிழ் மக்களைக் கொன்றார்கள் நாங்கள் மீதமிருந்த மக்களைக் காப்பாற்றினோம்.” என்றுதான் சொல்கிறார்கள். மண்ணின் மக்களைக் கொன்றொழிக்கும் வல்லாதிக்கப் படைகளுக்கு “அமைதி காக்கும் படை” என்று தான் பெயர். நான் அழுத்தமாகச் சொல்ல விரும்புவது மாற்றுச் சிந்தனைகள், விடுதலைக் கருத்தியல்கள்தான் இன்றைய மக்கள் உரிமைகளை, மனித அறங்களைக் குறைந்த அளவில் காத்து வருகின்றன, அவை எங்கும் நிறைந்துள்ள உள்ளார்ந்த போராட்டங்கள், மனித விழுமியத்தின் உள்ளாற்றல் இந்த வகையான மனிதவுரிமைப் போராட்ட உணர்வு.
மனிதர்கள் வன்முறை மட்டும் கொண்டவர்கள் என்றால் சமூக அமைப்புகள் உருவாகியிருக்காது. ஒவ்வொரு அமைப்பும் ஒரு அமைதி ஒப்பந்தம், சமூகம் என்பது தனிமனிதர்களுக்கிடையிலான போர் நிறுத்த உடன்படிக்கை. இன்று மதங்கள்கூட நவீனத்துவத்தின் மக்கள் மைய நிலைப்பாட்டைக் கைக்கொண்டு தம் சொல்லாடலை, செயல்பாடுகளை மாற்றிக்கொண்டுள்ளன என்றால் அதற்குக் காரணமாக இருப்பது மாற்றுச் சிந்தனைகள், மனித உரிமைக் கருத்தியல்கள் தான்.
பௌத்த, சமண, கிறித்தவ சமயங்கள் தம் காலத்தின் மக்கள் அரசியலை முன் வைத்து தம்மை வடிவமைத்துக் கொண்டன. பிறகு அவை ஆட்சியாளர்களின், அரசுகளின் கருவியாக மாற்றம் பெற்றன. இன்று மீண்டும் அவை தம்மை மக்கள் சார்ந்த, மனித உரிமைகள் சார்ந்த, அறம் சார்ந்த கருத்தியல்களாக, அமைப்புகளாக மறுவிளக்கம் செய்து கொள்கின்றன. இதற்கான காரணம் மக்கள் அரசியலும், மார்க்சிய இயக்கங்களும்தான்.
கிறித்தவத்தின் இருபெரும் பிரிவுகளான கத்தோலிக்க (போப்பரசுத் திருச்சபை), புரட்டஸ்டன்ட் (மக்கள் திருச்சபை) சமய நிறுவனங்களும் உழைக்கும் மக்களுக்கான, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான இறையமைப்புகளாக மீண்டும் மீண்டும் தம்மை அடையாளப்படுத்திக் கொள்கின்றன. மார்க்சியத்தைக் கற்காமலேயே ஒரு கிறித்தவர் எளியோரின் நல்வாழ்வு, ஏழைகளின் முன்னேற்றம், சுரண்டல்களில் இருந்து மக்களை விடுவித்தல் என்பவற்றிற்காகத் தன் வாழ்வைத் தரமுடியும் எனச் சொல்லும் விடுதலை இறையியலும், இயேசுவும் மார்க்சும் மக்களுக்கான இரு விடுதலைத் தூதர்கள் என்று சொல்லும் புரட்சிகரத் திருச்சபையும்  இன்று உலக அரசியலின் ஒரு பகுதியாக விரிவுபட்டுள்ளன. இஸ்லாத்தின் அறவியல் சிந்தனையாளர்கள் சமத்துவம், சகோதரத்துவம், சமூக நீதி என்பவை சமய வழியில் உறுதி செய்யப்பட்ட கருத்துக்கள் அதனால் இஸ்லாம் எதிர்கால மக்கள் அரசியலாக மறுஉருவாக்கம் பெறும் என்று அறிவிக்கிறார்கள்.
தற்கால வாழ்வியல் சார்ந்து பன்முகப்பட்ட விடுதலைக் கருத்தியல்கள் தற்போது உருவாகிவருகின்றன. இவை ஒன்றே போல ஒற்றைத் தன்மை கொண்டவைகளாக ஒருங்கிணைந்தவைகளாக இருக்கும் என நாம் எதிர்பார்க்க முடியாது. உலக அளவிலான மாற்றுச் சிந்தனைகளின் எதிர்காலம் பற்றிச் சிந்திக்கும் போது சற்றே சிக்கலாகத் தோன்றும் நிலைக்களம் இதுதான். இந்த தளத்தில்தான் இலக்கியம், கலைகள், கருத்தியல் ஆய்வுகள், அறிவுத்துறைகள் பெரும் பங்காற்ற இயலும், மாற்றுச் சிந்தனைகள், மாற்று அறங்கள், மாற்று அரசியல் களங்களுக்கிடையில் உரையாடலை, பரிமாற்றங்களை, புரிந்துணர்வுகளை வளர்ப்பதற்கான சொல்லாடல்களை, கதையாடல்களை உருவாக்கித்தர அவற்றால் முடியும்.
மாற்றுச் சிந்தனைகளை அன்றன்று புதுப்பித்துக் கொண்டே இருப்பதும், ஒவ்வொரு தளத்திலும் எடுத்துரைத்துக் கொண்டே இருப்பதும் ஒரு போராட்ட வாழ்முறை. தன் மக்களைக் காக்க உயிரைத் தந்த இனக்குழு போராளிகளுக்கு இருந்த தன்னீகத்தில் ஒரு சிறுபகுதி மாற்றுச் சிந்தனைகள், மாற்று அரசியலை ஏற்றுக் கொண்டவர்களுக்கு இருந்துதான் ஆகவேண்டும்… நான் புரட்சிகர போரைப் பற்றிச் சொல்லவில்லை, தன்மதிப்பும், தன் பிள்ளைகள்மீதான பாசமும், அவர்களின் எதிர்காலம் பற்றிய கனவுகளும் கொண்ட ஒரு தாய்க்கும், தந்தைக்கும் இருக்கக்கூடிய, இருக்க வேண்டிய போர்க்குணம் பற்றிச் சொல்கிறேன்.
மாற்று அரசியல், மாற்றுச் சிந்தனை...அதுதான் இன்றைக்கான அழகியல், கவிதையியல் … அவற்றைத் தொடர்ந்து பேணுவதும், புதுப்பிப்பதும், வளர்த்தெடுப்பதும்தான் அறிவுத்தளத்தினர், சிந்தனையாளர்கள், மக்களுக்கான இலக்கியவாதிகள் என்பவர்களின் பணி, வாழ்வு எல்லாம்…

எல்லாவற்றைப் பற்றியும் எழுதுவதன் அரசியல் -பிரேம்

 

உரையாடல்: 4:

எல்லாவற்றைப் பற்றியும் எழுதுவதன் அரசியல்

 

கேள்வி:

மேற்குலகில் தத்துவவாதிகள் (philosophers), அறிவுஜீவிகள் (public intellectuals), படைப்பாளிகள் (writers), இலக்கியவிமர்சகர்கள் (literary critics), திரைப்பட விமர்சகர்கள்  (film critics) என்போர் தனித்தனி வகைமைக்குள் இயங்குபவர்களாகவும் அவர்களுக்கென ஒருமரபும் இருந்துவரும் நிலையில், நமது சூழலில் எழுத்தைக் கைக்கொள்பவர்கள்,  அனைத்திலும் செயற்பட விழைபவர்களாக உள்ளது ஏன்? அது சரியானது தானா?

[ராஜகாந்தன், அசோக்ராஜ், கருணாகரன்]

பதில்

பிரேம்

இதுபோன்ற கருத்து-அறிவு சார்ந்த வேலைப் பிரிவினைகளை அடிப்படையில் நாம் மறுக்க வேண்டும். மேற்கின் உயர்தகுதி தேர்ந்தெடுப்புமுறை, தனிச்சிறப்பு அடையாளம் என்பவை ஒதுக்குதல் கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்துள்ளவை. அனைவருக்குமான அறிவு, அனைத்தைப் பற்றியுமான அறிவு என்பது பொதுமைப்பட்ட நிலையில்  இந்த வகை அறிவுஆதிக்கம், அறிவு அதிகாரம் இயங்க வாய்ப்பு இல்லை. ஆனால் தற்போது ஒவ்வொரு அறிவுத்துறையும் ஒரு உயர் தொழில்நுட்பத்  துறையாக மாறியுள்ளது.  இது முதலீட்டு குவித்தல் போலச் சுரண்டலை அடிப்டையாகக் கொண்டது. சமச்சீரற்ற அறிவுப்பரவல் வழி அதிகாரம், அடக்குமுறை, அடிமைத் தன்னடையாள உருவாக்கம் என்பவை வலுவடைகின்றன.  அப்படியென்றால் அனைவரும் அனைத்துத் துறைபற்றியும் பேசவும், எழுதவும் பழகித்தான் ஆகவேண்டும். நம்முடன் நம் சமூகத்துடன் உறவுள்ள ஒவ்வொன்றைப் பற்றியும் நம்மில் அனைவரும் பேசவும், எழுதவும் செய்வதில் தவறு என்ன இருக்க முடியும். தத்துவம், இலக்கியம், திரைப்படம், கலை, அழகியல், உளவியல், அரசியல் என அனைத்தைப்பற்றியும்,  அனைத்தையும் கலந்து  அனைவரும் எழுதுவதன் மூலம்தான் அறிவுத்துறையின் வன்முறையை, அதன் அரசியல் வன்முறையை நாம் நீக்க முடியும்.

தன்  சமூகத்தின் தேவைக்காக ஒருவரே  பலதுறைகள் பற்றி எழுதுவதற்கும், சந்தையின் தேவைக்காக,  பண்பாட்டு முதலீட்டியத்தின் முகவர்களாக எல்லாவற்றைப்  பற்றியும் ஒரு சிலரே எழுதிக் குவிப்பதற்கும் உள்ள வேறுபாட்டைப் பற்றித்தான் நீங்கள்  கேட்பதாக நினைக்கிறேன்.

எழுத்து, வாசிப்பு என்பது மற்ற அறிவுத்துறைகள் போலவே பயிற்சியும், உழைப்பும் தேவைப்படும் செயல்பாடு. அதனால் எழுதப் பயிற்சி பெறும் ஒருவர் அரசியல் சார்ந்தவராக இருந்தால் தன் உழைப்பை பயிற்சியைப் பயன்படுத்தி பலதுறைகளைப் பற்றி எழுத வேண்டிய தேவை ஏற்படும். அரசியல் நீக்கம் கொண்ட ஒருவர் அதே பயிற்சியைக் கொண்டு பலதுறைகள் பற்றியும் சந்தைக்கான எழுத்துக்களை உருவாக்குவார். ஒரளவு அறிவும் பயிற்சியும் உள்ளவர்கள் இவர்களின் எழுத்தின் உள்ளீடற்ற தன்மையை உடனே புரிந்து கொள்ள முடியும். மார்க்சிய வாசிப்புப் பள்ளியில் பழகிய, பயின்ற அனுபவத்தில் நான் ஒன்றைச் சொல்ல வேண்டும். மார்க்சியக் கல்வி தொடங்கும் இடம் அரசியலாக இருக்கும் பின் பொருளாதாரம், வரலாறு, தத்துவம், அழகியல், இலக்கியம், கவிதையியல் என ஒன்றுதொட்டு ஒன்றாக விரிந்து நாடகம்,  திரைப்படம், களஆய்வுகள், தற்கால வரலாறு என உங்களை பல தளங்களில் இயங்க நிர்ப்பந்திக்கும். அம்பேத்கரை வாசித்துக் கற்பதும் புரிவதும் மானுடவியல், சமய வரலாறு, இந்தியச் சமூகவியல், அரசியல், பொருளாதாரம் என பல அறிவுத்துறைகள் சார்ந்த பயிற்சியாக இருப்பதை நாம் அறிவோம்.

ஒரு குலமரபுச் சமூகத்தில் உழைப்பு, கலை, தற்காப்புப் போர் என அனைத்தும் ஒவ்வொருவருக்கும் பழகியிருப்பது போல நம் காலத்திய அறிவுத்துறைகள் பற்றி நாம் அனைவரும் அறிந்திருக்க வேண்டும். தேவைப்படும் பொழுது நாம் அனைவரும் அவற்றைப் பற்றிச் சிலவற்றை எழுதவும், பேசவும் வேண்டும். நான் ஒரு படைப்பிலக்கியவாதி என்றால் பிறருடைய அறியாமையை என் மூலதனமாக்கிக்கொள்ள வேண்டிய தேவை இல்லை, ஒரு தத்துவவாதி என்றால் புனைவெழுத்தை சிறுமை கொண்டதாகப் பார்க்கத் தேவையில்லை.

தமிழ்ச்சூழலில் எழுத வரும் மிகச் சிலர் இலக்கிய விமர்சனம், திரைப்பட விமர்சனம் என்ற இரு தளங்களில் கூடுதலாக இயங்க முயற்சி செய்வதை நாம் கவனிக்க முடியும். தனக்குப் பிடித்த இலக்கிய வகையை பெருமைப்படுத்தவும், தனக்குப் பிடித்த சில  திரைப்படங்களை புகழவும் இது தேவைப்படுகிறது. தனக்குப் பிடிக்காதவைகளை ஒதுக்கி தான் விரும்பும் ஒரு சிந்தனைப்பள்ளியை நிறுவ இந்த எழுத்துக்கள் அவர்களுக்கு உதவுகின்றன.

திரைப்படங்கள் குறித்து நான் கட்டுரை எழுதிய போது திரைத்துறைக்கு போகும் முயற்சியா எனச் சில  நண்பர்கள் கேட்டார்கள். அமெரிக்க வல்லாதிக்கம் பற்றி நான் எழுதிய கட்டுரைகள் அமெரிக்காவுக்குப் போகும் முயற்சிகள் என்றால் இவை திரைத்துறைக்கு போவதற்கான முயற்சிகள்தான் என்றேன். கவிதை, நாடகம், தத்துவம், புனைவுகள், கோட்பாடுகள் எனப் பல கதையாடல் வடிவங்களில் இயங்கும் எனக்கு ஒன்று மட்டும் தெரியும்… ஒன்றின் பயிற்சி மற்றதற்கான தொடக்கமாக இருக்கிறது. ஒன்றை தொடங்கும் போது அதற்கான கூடுதல் உழைப்பும் திறனும் தேவைப்படுகிறது. இந்தக் கூடுதல் உழைப்பைத் தருவதற்கான பொறுப்பற்றவர்கள் தமக்குக் கிடைத்த ஒரு அடையாளத்தை வைத்துக்கொண்டு அனைத்தைப் பற்றியும் எழுதுவது நம் காலத்திற்கான அறிவுருவாக்கத்தைத் திட்டமிட்டுச் சிதைப்பவர்கள். இதற்கான தளங்களை ஊடகங்கள் சில உருவாக்கித் தருகின்றன.

நம் காலத்திய அறிவு பல தளங்களில் இயங்குவது தவிர்க்க இயலாத நிகழ்வாக மாறிவிட்டபின், அறிவுத்துறைகளை நாம் தனித்தனியாகப் பயில வேண்டியது அவசியம். இந்தத் தனிப்பயிற்சி தரவுகளைத் தேடித் தரவும், அவற்றைப் பகுக்கவும் தொகுக்கவும் உதவக்கூடியது. ஆனால் இவற்றை அரசியல் தளத்தில் பொருத்திக் காட்ட,  சமூக அறிவுருவாக்கத்தில் ஒருங்கிணைக்க, செயல்படும் அழகியலாக உருவாக்க அனைத்தையும் இணைக்கும் பன்மை அறிவு தேவைப்படுகிறது. இதில் நமக்குப் பெரும் சிக்கல் உள்ளது.

தமிழ் இலக்கியத்தைக் காலவரிசைப்படி கற்றுள்ள பலரை நாம் தமிழறிஞர்கள் என்கிறோம், இவர்களுக்குத் தற்கால அரசியல், அழகியல், சமூகவியலில் பயிற்சியோ பழக்கமோ இல்லாததால் பிற்போக்குச் சிந்தனையின் முகவர்களாக செயல்படுவதைத் தன் வாழ்க்கைக் கடனாகக் கொண்டிருக்கிறார்கள். மார்க்சியம் அறிந்து பயின்றவர்கள் பலர் கலை-இலக்கியம் பற்றி, சூழலரசியல் பற்றி காலப்பொருத்தமற்ற கருத்துக்களைக் கொண்டிருப்பார்கள். திரைப்பட வரலாறு தெரியும் என்று சொல்லிக்கொள்ளும் பலர் தமிழ்ச் சமூகத்தின் வரலாற்றையோ, தமிழின் குல-குடி மரபுகள் பற்றியோ அடிப்படைகளைக்கூடத் தெரிந்துகொள்ள முயற்சிப்பதில்லை. இலக்கியம் பயின்று, எழுதவும் பழகிய சிலர் தமிழில் அரசியல், தத்துவம், நுண்கலைகள், திரைப்படம், ஓவியம், இசை  எனப் பலதுறைகளில் இயங்கும் ஆர்வம் கொள்வது, செயல்படுவது அறுபதுகள் எழுபதுகளில் ஒரு அடையாள உளவியலாக உருவாகியிருந்தது. எழுத்தைப் பழகிய பலர் திரைப்படம் வழியாகத் தம்மை மேலும் வெளிப்படுத்த முடியும் என்றும் அதில் சாதனைகளைச் செய்யமுடியும் என்றும்  நம்பினர். இந்தியத் திரைக்கலைஞர்கள் சிலர் இலக்கியப் பயிற்சி கொண்டிருந்ததும் ரித்விக் கட்டக், சத்யஜித் ரே போன்ற சிலர் தங்கள் மொழியில் குறிப்பிடத்தகுந்த இலக்கிய படைப்பாளிகளாகவும் இயங்கி வந்ததும் தமிழில் பல எழுத்தாளர்களுக்கு  முன்னுதாரணமாக இருந்திருக்கிறது. எழுத்தாளர் பிரபஞ்சன்  எழுபதுகளில் சென்னையில் வாழத்தொடங்கிய போது திரைப்படத் துணை இயக்குநராக இருந்தது பற்றியும் அப்போது உலக அளவில் சாதனைகள் புரிய திரைப்படம்  ஒன்றே சிறந்த வழி என்று நம்பியிருந்தது பற்றியும் தனக்கே உரிய தற்கேலியுடன் சொல்லுவார், முடிவில் படம் பிடிக்கக் கற்றுக் கொள்ளாமல் புகைபிடிப்பதைக் கற்றுக் கொண்டது பற்றிச் சொல்லியபடி ஒரு சிகரெட்டைப் பத்தவைப்பார். பாரதிதாசன் படம் பிடிக்கச் சென்ற கதையை பிரபஞ்சன் சொல்லிக் கேட்க வேண்டும்,  படம் படுத்திய பாடு தமிழின் தனி வரலாறாக நீளும். நான் அரும்பு மாணவர் இதழில்  துணையாசிரியராக இருந்தபோது, அப்போது வெளிவந்திருந்த மகாநதி திரைப்படம் தமிழில் தேவையான ஒரு திரைமொழியை கொண்டுள்ளது பற்றி ஒரு கட்டுரை எழுதி பக்கம் கருதி குறைத்து வெளியிட்டேன்.  அதில் நீக்கப்பட்ட பக்கங்களைப் பார்த்த என் எழுத்தாள நண்பர் என்ன இது வேண்டாமா இப்படிக் கொடுங்க நான் பயன்படுத்திக் கொள்கிறேன் என்று கேட்டு வாங்கி சில வாக்கியங்களை இணைத்து கணையாழி இதழில் தன் பெயரில் வெளியிட்டார். சில நாட்களில்  வந்த ஒரு அழைப்பினை என்னிடம் கூறி வாழ்க்கையே மாற இனி வாய்ப்பு உண்டு நீங்க வரிங்களா இல்லையா என்று பொறுப்புடன் கடிந்து கொண்டார். நான் எழுதியது அந்த திரைப்படக் கலைஞருக்கு பிடித்திருந்தால் அவர் என்னை வந்துப் பார்த்துப் பேசட்டும், நான் ஏன் அவரைப் போய் பார்க்க வேண்டும் என வேடிக்கையாகவும் வினையாகவும் சொல்லி வைத்தேன்.   “பாருங்க ராஜன் இந்த மனுசன் தானும் பொழைக்க மாட்டாரு கூட இருக்கிறவங்களையும் பொழைக்கவிட மாட்டாரு” என்று வருத்தப்பட்டார் எழுத்தாள நண்பர்.  ‘நீங்க போய் வாங்க உங்க பொழைப்ப நான் கெடுக்க மாட்டேன்’ என்று அவரை அனுப்பி வைத்தேன். இப்படித்தான் இந்த எழுத்து நம்மை எங்கெங்கோ இழுத்துச் செல்கிறது.

திரைப்படக்காரர்களிடம் தனக்குத் தெரியாதது உலகில் எதுவும் இல்லை என்று வியப்பை உருவாக்கவே சில எழுத்தாளர்கள் தற்போது  ஆன்மிகம் தொடங்கி அமெரிக்க அரசியல் வரை, தாஸ்தெயெவஸ்கி தொடங்கி தாஜ்மகாலின் அறியப்படாத வரலாறு வரை பலவற்றை எழுதிக் கொண்டிருக்கிறார்கள். தன்னுடைய புத்தகத்தின் பெயர் ஒரு நடிகரின் வாய்ச்சொல்லாக அமைந்து விட்டால் தான் எழுதியதின் பயனை மட்டுமின்றி பிறந்ததின் பயனையும் அடைந்து விட்டதாகப் பெருமையில் நுரைத்துப் பறக்கும் தமிழ் எழுத்தாளர்கள்- படைப்பாளிகள் தற்போது தத்துவ வாதிகளாக,  அறிவு ஜீவிகளாக, இலக்கிய விமர்சகர்களாக,  திரைப்பட விமர்சகர்களாக எல்லா வடிவிலும் இயங்க நினைப்பது எதற்கானது என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.

திரைப்படம் பற்றி இன்று சிலர் எழுதுவதையும் பேசுவதையும் எடுத்துக் கொள்ளுங்கள். படத்தில் நகைச்சுவை இல்லாத குறையை அப்படம் பற்றிய சிலரின் எழுத்து தீர்த்துவிடுகிறது. ஆரண்ய காண்டம் (தியாகராஜன் குமாரராஜா,2011) படம் பற்றி உலக சினிமாவில் துறைபோகிய ஒரு எழுத்தாளர் (லத்தீன் அமெரிக்க திரைப்பட இயக்குநர்களைத் தன் வாசகராகக் கொண்டிருப்பதாகக்கூட சில பேச்சுகள் உண்டு) தன் வாசக வட்டத்திடம் விரிவாகப் பேசுகிறார். கேட்பவர்களுக்கு உலக சினிமா தெரியவா போகிறது என அவர் நம்புவதற்கு இடம் உண்டு.  இன்று மின்எண்ணியல் வடிவில் அனைத்துப் படங்களும் கிடைக்கும் என்றாலும் அனைவருக்கும் இணையம் ஒத்துழைக்காது இல்லையா.  அவர் சொல்லகிறார் “ஆரண்ய காண்டம் படம் உலக சினிமாவில் எதனைப் போலவும் இல்லை,  இந்தப் படம் வேறு எந்தப் படத்தையும் எனக்கு நினைவுபடுத்தவில்லை என்பதே இதன் சிறப்பு”. உலக சினிமா பற்றி இவருக்கு ஒவ்வொரு இழையும் தெரியும் என்பதை நம்பும் ஒரு பார்வையாளர் இதனைத் தன் கல்வியாக எடுத்துக் கொள்வார் என்பதை நாம் மறுக்க முடியாது. அப்படத்தின் இயக்குநருக்கு நிச்சயம் சிரிப்பு வந்திருக்கும். சிட்டி ஆஃப் காட், அமரோஸ் பெரோஸ், பல்ப் பிக்ஷ்சன் என வரிசையாக சில  படங்களைச் சம அளவில் எடுத்து துண்டு துண்டாக நறுக்கி,  வேகவைத்து, நொதிக்கவைத்து, வடிகட்டி, சென்னைத் தமிழ் மணம்  ஊட்டி தயாரிக்கப்பட்ட பானம் அது என்பதைத் தமிழ்கூறும் நல்லுலகின் துணைஇயக்குநர்கள், இணைஇயக்குநர்கள், எதிர்கால இயக்குநர்கள் அனைவரும் நன்கு அறிவார்கள். அப்படத்திற்கு ஒளி அமைப்பு செய்த தொழில்நுட்ப உதவியாளர்களிடம் கேட்டால்கூட “படத்தில் மறைந்துள்ள படங்களின்“ பெயர்களைச் சொல்வார்கள். அப்படிப் படம் பார்த்து கதை சொல்வதும் படம் செய்வதும் திரைத்துறையில் விரும்பத் தகாத வினோத நடத்தையும் அல்ல. நான் சொல்ல வருவது உலக சினிமாவை ஓயாமல் சுவாசிக்கும் ஒரு பேரறிஞர் தன் “கலகக் கண்மணி” களுக்கு அடிப்படையிலேயே தவறான தகவல் ஒன்றைத் தருகிறார். இதனை அவருடைய “வலையில்” சிக்கிய ஒவ்வொரு கலையன்பரும் ஒரு நூறு பேருக்குக் கொண்டுசேர்ப்பார்… இப்படித்தான் நம் காலத்திய தமிழ் அறிவு நலிவடைய நேர்கிறது. மாறுபட்ட பார்வைகளைத் தருவது  ஒருவருடைய உரிமை, ஆனால் பார்ப்பதையே மாற்றிக் கூறுவது திட்டமிட்ட மடைமை…   எழுத்தை, அறிவை நேசிக்கும் ஒருவர், தன் சமூகத்தை மதிக்கும் ஒருவர் செய்ய முடியாத செயல் இது.

உரையாடல்: 4 : 1

உரையாடல்: 3 அரசு-அடிமைகள் கட்டமைப்பும் அறிவு மறுக்கும் எழுத்துக்களும்-பிரேம்

 

உரையாடல் : 3

அரசு-அடிமைகள் கட்டமைப்பும் அறிவு மறுக்கும் எழுத்துக்களும்

 

கேள்வி

ஒரு இலக்கியப் பிரதியின் வெகுமதியை, பெறுமதியை பரந்த இலக்கிய வாசிப்பு அனுபவம் உள்ளவர்கள், தங்கள் நுண்ணறிவுத் திறனால் மதிப்பிட இயலும் என நம்பப்பட்டும், அத்தகைய வாசிப்பனுபவம் உள்ளவர்கள் என அறியப்பட்டவர்கள், உண்மைத் தன்மை, வாசிப்பனுபவம், அகவெழுச்சி,  தரிசனம் போன்ற பூடகமான சொற்களைக் கொண்டு இலக்கியப் பிரதிகளின்  தரப்பட்டியல்களை உருவாக்கிக்  கொண்டு மிருந்த காலத்தில் மொழியியல், அமைப்பியல், தொன்மவியல் அடிப்படைகளில் கலை இலக்கியங்களை அணுகவும், இலக்கியப் பிரதிகளுக்குள் இயங்கும்,  மோதிக்கொள்ளும்  சமூகக் கருதுகோள்களைப்  பகுத்துணரவும், கருத்துருக்களை உருவாக்கவும் ஆரம்பகட்ட முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டன. ஆனால்  தற்போது இவற்றிற்கான தடயங்களே  தெரியாத வகையில்  மீண்டும் கலை இலக்கியங்களின்  மீதான விமர்சனம் என்பது முன்பு போலவே வெறும் கருத்துரைப்புகளாக மாறியுள்ளதை எவ்வாறு  விளங்கிக்  கொள்வது?   இதைக் குறித்து உங்கள்  விளக்கம்  என்ன?

[ராஜகாந்தன், அசோக்ராஜ், கருணாகரன்]

 

பதில்

பிரேம்

 சமூக வாழ்க்கை அரசியலை அடிப்படையாகக் கொண்டது, தனிமனிதர்கள்  அரசியலால் உருவாக்கப்பட்டவர்கள், தனிமனிதர்களுள் அரசியல் ஊடுறுவியுள்ளது, இருமனிதர்களுக்கிடையில் நிகழும் ஊடாட்டம் மட்டுமல்ல தனி ஒரு மனிதருக்குள் நிகழும் உள்ளோட்டங்களும்கூட  அரசியல் தன்மைகொண்டது, அரசியலை நிகழ்த்துவது என்ற கருதுகோள்களை ஏற்றுக்கொண்ட தளத்தில்தான் இந்த கேள்விக்குப் பொருள் உள்ளது. அதற்குப் பிறகே நாம் இலக்கியத்தின் அரசியல், அரசியலை அடிப்படையாகக்  கொண்ட இலக்கியம், இலக்கியத்தின் அரசியல் வடிவம் என்பவை பற்றிப் பேச முடியும்.  இலக்கியத்தை வைத்து இந்தக் கருதுகோள்களை மறைத்து விட வேண்டும், இப்படிப் பட்ட புரிதல்களை இல்லாமலாக்கிவிட வேண்டும் என்ற திட்டத்துடன் இயங்கும் பண்பாட்டு அரசு இயந்திரங்கள் (Cultural State Apparatus) இவ்வகைக் கேள்விகள் உருவாவதற்கான தளங்களையும் அழித்துவிடக் கூடியவை.  அரசியலை அறியவும், இயக்கவும் கட்டுப்படுத்தவும் சிலருக்கு மட்டும் உரிமை உண்டு, சிலர் அதனைச் செய்தால் போதும் மற்றவர்கள் அதற்குக்  கட்டுப்பட்டு அடிமைகளாக இருந்து வாழ்ந்து முடிக்க வேண்டும் என்பதை மாற்ற முடியாத விதியாகத் தொடர  வேண்டும் என்றால் அதற்கு ஒரு அமைப்பு செய்யவேண்டியது தனிமனிதர்களின் அரசியல் நீக்கம். தனிமனிதர்களை அரசியல் நீக்கம் செய்யப் பலவித உத்திகள்  உள்ளன. அந்த உத்திகள்- கருவிகள் மதம்-பக்தி, அழகியல், கலைச் செயல்பாடுகள், ஊடகங்கள், இலக்கியம் என்ற வடிவத்தில்தான் செயல்படுத்தப்படுகின்றன. மார்க்சிய அணுமுறையின் மறுக்க முடியாத பகுதியிது.

அரசியல் விடுதலைக்குத் தொடக்கம் ஒவ்வொருவரும் அரசியலடைவது.  அரசியலடைவதைத் தடுத்து அரசு வயப்படுத்துவது என்ற செயல்பாடு ஒன்று உண்டு. அதன் வழியாக ஒரு அமைப்பு அரசியல்- எதிர்அரசியல் களங்களைக் கையாள முடியும். இதனை  உளவியல் அமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பாகவே நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். தன்னை அரசின் குறுகிய வடிவமாக- அதன் செயல்படும் கருவியாக வைத்துக் கொண்டு  மற்ற ஒவ்வொருவரையும் கண்காணிப்பது, ஒழுங்குபடுத்துவது, தீர்ப்பு வழங்குவது, தண்டிப்பது அதற்குத் தன் வலிமை போதாத போது குழுக்களாகச் சேர்ந்து தண்டிப்பது அதற்கும் மீறிய நிலையில் அரசின் பெருந்தண்டனைக் களத்திடம் அந்த மற்றவரைக் கொண்டு ஒப்படைப்பது என்ற வடிவத்தில்  தனி மனிதர்களின் அரசுவயப்படும் உளவியல் கட்டமைக்கப்பட்டுள்ளது இதனை அரசு-அடிமைகள் என்ற உளவியல் இணைப்பு என்று கூறலாம். பாலடையாள நுண் அரசியலில் இது மிகத் தெளிவாக வெளிப்படும், ஆண்மையத்தன்மையும் அரசு மையத்தன்மையும் ஒப்பமைப்புகளாக இயங்கும் தளம் இது.  அரசு- அரசின் உடல் என்னும் ஆண்வடிவக் கட்டமைப்பு போர் இயந்திரத்தின் வழியாக எங்கும் நிறைக்கப்படுகிறது. எங்கும் நிறைக்கப்பட்ட அரசு-அடிமைகள் உறவைப் புரிந்து கொள்வது அரசியலாக்கத்தின் தொடக்கம். “நான் அரசு அல்ல நான் நிகழ்த்துவது அரசியல்” என்ற அரசியலாக்கக் கருத்தமைப்பு அடுத்த கட்டத்தில் விடுதலை, அரசு நீக்கம், அரசுமைய நீக்கம்  என்பதை நோக்கிச் செலுத்தக்கூடியது.  இந்த அரசு மைய நீக்கம் மக்கள் ஆட்சி, ஜனநாயக அரசியல், மனித உரிமைகள், குடிமைச் சமூகம், சமத்துவம் என்பவற்றை நோக்கிச் செலுத்தக்கூடியது. அப்படியெனில்  ‘அரசு-அடிமைகள்’ கட்டமைப்பைத் தொடர அதிகார அமைப்பின் அனைத்து உத்திகளும் பயன்படுத்தப்படும், அரசியலாக்கத்திற்கு எதிரான கருத்தியல் தாக்குதல் அனைத்து தளங்களிலும் விரிவுபடுத்தப்படும்.

இவற்றில் ஒரு பகுதியான கலை இலக்கிய வடிவங்களை நீங்கள் குறிப்பிட்ட  மொழியியல், அமைப்பியல், தொன்மவியல்  அடிப்படைகளில் அணுகி, இலக்கியப்  பிரதிகளுக்குள்  இயங்கும், மோதிக் கொள்ளும்  சமூகக்  கருதுகோள்களை  பகுத்துணரவும், கருத்துருக்களை உருவாக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதென்பது வாசிப்பை மட்டுமின்றி வாழ்வையும் அரசியல் மயப்படுத்தும் செயல்பாடு இல்லையா?

இதனை இல்லாமலாக்கக் கையாளப்படும் உத்திகளில் ஒன்றுதான் இலக்கிய வாசிப்பை “வெறும் கருத்துரைப்புகளாக” மாற்றுவது. இதற்கு அதிக வாசிப்போ, அறிவுத்துறை சார்ந்த பயிற்சியோ, கலை-இலக்கியம் பற்றிய ஆய்வுத் திறனோ தேவையில்லை. அந்த அந்த காலத்தின் பொதுப்புத்திவழி உருவான உணர்வுநிலைகளை எடுத்துக்கொண்டு அவற்றைச் சில கூடுதலான உதாரணங்கள், சொல்லணிகள் வழி விளக்கும் திறன், பயிற்சி போதுமானது. பக்தி அனைவருக்கும் இருக்கும், ஆனால் தேவாரம், திருவாசகம் அல்லது நாலாயிரத்திவ்விய பிரபந்தம் கலந்து அதனைச் சொல்லக்கூடிய ஒருவர் அக்காலத்தின் அருள்நெறிச் செல்வர் என்ற இடத்தை அடைகிறார். அவர் மக்களின் முன் தெய்வத் திருவுருவாகத் தோன்றி பக்தி என்ற உணர்வை அக்காலத்திற்குரியதாக உறுதி செய்கிறார்.

நவீன இலக்கியக் களத்தில் இதற்கு சில சிக்கல்கள் முன்பு ஏற்பட்டிருக்கிறது. அச்சுப்  பொறியின் வழி அறிவுருவாக்கம் புதிய வடிவத்தை அடைந்தபோது இந்தச் சிக்கலை கையாள சில அறிவுசார் குழுக்கள் உருவாயின. வள்ளலார் நவீன தனிமனிதர்கள் கைக்கொள்ளத்தக்க வகையில் இறைமைக் கோட்பாட்டை உருமாற்ற முனைந்த போது புதிய வடிவிலான கோயில், வழிபாட்டு முறை, ஓளிச்சுடர் உருவம், ஜீவகாருண்யம் எனப்பல புத்துருவாக்கங்களைச் செய்கிறார். பத்திரிகையாளர் பாரதி பக்தியை, இறைமையைத் தேசியம், தேசபக்தி, பாரதமாதா என்ற வடிவில் காணவேண்டியிருந்தது.

இந்த இரு நிலைக்கும் புறம்பாக அயோத்திதாசர், பெரியார், பாரதிதாசன் என்ற சிந்தனையாளர்கள் புதிய மொழியமைப்பை, கதையாடல் முறையை உருவாக்கித் தரவேண்டியிருந்தது. சமய மறுப்பு, நவீனச் சிந்தனைகள், நவீன அரசியல்-சமூகம், சமத்துவம், பகுத்தறிவு என்பவை பற்றிப் பேசவும் விளக்கவும் முயன்ற நம் காலத்தின் சிந்தனையாளர்களுக்கு இதுவரை இருந்தவை அனைத்தையும் மறுக்கவும், புதியனவற்றை நிறுவவும் அதிகம் விளக்கம் தர வேண்டிய கடமை இருந்தது.  இவர்கள் உலக வரலாறு, அரசியல், சட்டம், நீதி,  அறிவியல் தொடங்கி உடன் கால வழக்காறுகள் வரை அனைத்தையும் துணையாகக் கொண்டு புராணங்களை, சாதி-சமயக் கட்டுக்கதைகளை, அடிமை உளவியலைக் கட்டமைக்கும் அனைத்து வகையான சொல்லாடல்களையும் மறுத்தும் எதிர்த்தும் பேச வேண்டியிருந்தது.  சாதி ஒழிப்பு, சமத்துவ சமூகம், சமநீதி, பெண்விடுதலை, இனம்-மொழி  அடையாளம், புதிய சமூக நிறுவனங்கள் என அனைத்தையும் உலகின் மாற்றுச் சிந்தனையாளர்கள் வழி அறிந்து தம் சமூகத்திற்குரியதாக மாற்ற முனைந்த இவர்கள் வெறும் கருத்துரைப்பாக  “நான் உணர்ந்த வகையில் இதனைச் சொல்கிறேன், என் கடன் சொல்லி விட்டுச் செல்வதே”  என இருந்து விடமுடியாது. இந்திய அளவில் அம்பேத்கர் இதே போன்ற பெரும் பாரத்தை ஏற்றுக்கொண்டிருக்கிறார். பழமையால் கட்டமைக்கப்பட்ட அறிவுதளங்களை உடைத்து நீக்கி புதியவற்றை அமைத்துத் தரும் பெரிய உழைப்பை அவர் மேற்கொண்டார். பெரும் தர்க்க அறிவும், வாசிப்பும் இன்றி வேதங்கள் தொடங்கி அரசியலமைப்புச் சட்டம் வரை அனைத்தையும் விமர்சிக்கும் பணியை ஒருவர் செய்யமுடியாது.

மேற்சொன்ன மாற்று அறிவுக்கு மறுப்பைச் சொல்ல வந்தவர்கள் கைக்கொண்ட முறை என்ன? வெறும் உள்ளொளி, தெய்வவாக்கு, மனதறியும் மனதின் மொழி என்ற சொல்லாடல்தானே. “இல்லையென்பாரின் மனதிலும் இருக்கும் ஈசனே, இல்லையென்ற சொல்லையும் இயக்கும் நேசனே”  என்று இமைகளை மூடிச் சொல்லிவிட்டால் போதும், “இல்லையென்று சொல்லிச் சொல்லியே உன் பெயரை இத்தனை முறை சொல்லச் செய்கிற எல்லையில் நாதனே என் போதனே புண்ணியா” என்று பாடிவிட்டால் பகுத்தறிவு மயக்கங்கள் பறந்தோடிப் போகும்.

தமிழ் நவீன இலக்கியத்தில் இப்படியொரு இலகுவான அறிவுமறுக்கும் அறிவு மரபு ஒன்று உருவானது. மார்க்சிய-பெரியாரிய, பகுத்தறிவுச் சிந்தனைகளை சிறு கிண்டல் செய்துவிட்டு கடந்து செல்வது, அல்லது அப்படியெல்லாம் ஒன்றும் இல்லையென்பது போல மனதின் உள் இடுக்குகள் பற்றிய ஆய்வைச் செய்து உலகுக்கு உரைப்பது என சில குழுக்கள் இயங்கி வந்தன. இடதுசாரி  சிந்தனைகளை ஒரு வரியில் மறுப்பது அல்லது அறைகுறை அ-மார்க்சிய கட்டுரைகளை மொழிபெயர்த்து வெளியிடுவது, இதுவே போதுமானது, இவர்கள் மார்க்சியம் கடந்த அறிவுஜீவிகளாக மதிக்கப்படுவதற்கு. மார்க்சியம் பேசியவர்கள் கேட்கும் எந்த கேள்விக்கும் பதில் சொல்லாமல் பிராய்ட், யுங் பிறகு ஆல்பர் காம்யு என ஏதாவது பெயரைச் சொல்லித் தப்பிப்பது. இந்த எழுத்தில் இத்தனை சதவிகிதம் வாழ்க்கையிருக்கிறது, இதில் நம்பகத் தன்மையில்லை என்று ஒருவரி சொல்லிவிட்டு தனக்குப் பிடித்த ஒரு நாவலில் நம்பகத்தன்மை எப்படியெல்லாம் பொங்கிவழிகிறது என  ஒன்பது பக்கம் விளக்கம் தருவது… என நவீன இலக்கியத்தில் எத்தனையோ கருத்துரைப்பு உத்திகள் கையாளப்பட்டு வந்துள்ளன. நமது மார்க்சியத் தோழர்களுக்கு மனம், வலி, குழப்பம் என்று ஏதாவது ஒரு சொல் வந்துவிட்டாலே அது அமெரிக்கச் சதிகாரர்களின் அடுத்த கட்ட தாக்குதல் என்று தோன்றிவிடும். இடதுசாரிகளும் வெறும் கருத்துரைப்பு உத்திகளுடன் நிறுத்தாமல் மேற்கோள்கள், வரலாற்றுத் தரவுகளுடன் கூடுதலான கருத்துரைப்பு உத்தியைக் கையாள வேண்டிய அவலநிலைதான் இருந்தது. இதற்கு நடுவில் பின்அமைப்பியல், பின்நவீனத்துவம், பெண்ணிய  விளக்கமுறை, பகுப்புமுறை  உத்திகள் மேலைநாடுகளில் இருந்து கொண்டுவந்து தமிழில் வலிந்து புகுத்தப்பட்டன. இதனைச் சான்றோர்கள் சிலர் இப்படித்தான் சொன்னார்கள், சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இந்திய அறிவு அல்லது தமிழ் அறிவு பொங்கி வழியும் இவர்களில் பலருக்கு “இந்தியா சேரி, ஊர் என  இரண்டாக இருக்கிறது” என்ற அம்பேத்கரின் கருத்தை மேற்கோள் காட்டினாலே அதிர்ச்சி ஏற்படுகிறது. இந்தியா என்பது 1950-க்கு பிறகு உருவான ஒரு நாடுதான் என்று அரசியல் சட்டப்படி சொன்னாலே அங்கம் எரிகிறது.

இந்த நிலையில்தான், தற்பொழுது தமிழில் முன்பு போலவே வெறும் கருத்துரைப்பு உத்திகள் கையாளப்படுவதாக நீங்கள் வருத்தத்துடன் குறிப்பிடுகிறீர்கள்.  ஆனால்  இதனையே மகிழ்ச்சி பொங்கக் குறிப்பிடும் குழுக்கள் அதிக வலிமையடைந்துள்ளன. எதற்கெடுத்தாலும் அரசியல், கருத்துருவாக்கம், பன்முக வாசிப்பு, பெண்ணியம், இனவரைவியல், விளிம்புநிலை  என்று சொல்லித்திரிந்த கூட்டம்  ஒரு வழியாக ஓய்ந்தது, நம்ம ஆட்சிதான் , ஜெயம் நமக்குத்தாங்… என்ற கொண்டாட்டக் கூச்சல் நம்மைச் சூழ்ந்திருக்கிறது.  இது மீண்டும்  நிகழ்ந்ததாகவா நினைக்கிறீர்கள்  இதுதான் தொடர்ந்து  நடந்து வருகிறது. இதற்கு  மாற்றான கருத்தியல், கோட்பாட்டுப் போராட்டமும் இருந்து வந்தது.  இந்த மாற்றுக் கருத்தியல் போராட்டம் தற்போது அதிக விளிம்பு நிலை அடைந்துள்ளது.  பின்நவீனத்துவம், பெண்ணியம், தலித்தியம், சிறுமரபுக் கதையாடல்கள் என்றவுடன் தமிழில் மார்க்சியத் தளத்தில் இயங்கியவர்களும் முகம் சுருக்கிய நிலையில் மரபுக்காரர்களுக்கு, மௌனமொழி குழுக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. இன்னும் விளிம்பில் தள்ளிவிட இது நல்ல வாய்ப்பு.

இதைக் குறித்து எனது விளக்கத்தை இப்படிச் சொல்லிப் பார்க்கிறேன்…

கலை-இலக்கியம் என்பது இறைத்தன்மை, புனிதத் தன்மை கொண்டது அவற்றின் வழியே இறைவனை அடையலாம் என்ற புராணிகப் பார்வை, கலை-இலக்கியம் என்பதே இறைச்செயலும் இறைவனின் விளையாடலும் என்ற இறையின்பக்  கோட்பாட்டுப் பார்வை, கலை-இலக்கியம் என்பன இறையுணர்வுக்கு எதிரான ஒழுக்கக்கேடு என்ற சமயத்துறவுப் பார்வை எனப் பல பார்வைகள் பழைமையின் பகுதிகளாக இருந்து வந்தவை. இந்நிலையில் இலக்கியம், கலை, அழகியல் என்பன உலகத்தன்மை அல்லது தேசியத்தன்மை கொண்டவை என்ற நவீனப்பார்வை மேற்கு மையத்தன்மையுடன் நம்மை வந்தடைந்தது. இந்தப் பார்வை இறைநீக்கம் கொண்டதாகவும் மனிதமையத் தன்மை கொண்டதாகவும் தோற்றம் தந்தாலும் படைப்பு என்பதை ஒற்றைத்தன்மை உடையதாக விளக்கிப் படைப்பு மையத்தன்மை ஒன்றை உருவாக்கியிருந்தது, அதன் மூலம் பக்திசார்ந்த ஒரு அழுத்தம் இதற்குள் இன்றும் இருந்து வருகிறது.

படைப்பு-படைப்பாளி என்ற இணைப்பு உலகஒருமை, ஓருலகத் தன்மை கொண்டதாக விளக்கப்படும் பொழுதே சிறுமரபுகள்-குழுமரபுகள், இனமரபுகள், தாய்மண்மரபுகள், பெண்மொழி, கிளைமொழிக் கதையாடல்கள் மறுக்கப்பட்டவைகளாக, ஒதுக்கப் பட்டவைகளாக, மதிப்பற்றவைகளாக மாற்றப்பட்டு விடுகின்றன. இந்த ஒதுக்குதலுக்கு, அடையாள அழிப்புக்கு எதிரான போராட்டமே பன்மைக் கதையாடல், சிறுமரபு, விளிம்புநிலைக் கதையாடல்களுக்கான செயல்பாடுகள். தேசிய இலக்கியம், தேசியக் கவிஞர்கள், உலகமகா இலக்கியப் படைப்புகள், உலக இலக்கிய வரிசை என்ற கொடுவன்முறைகள் இலக்கியப் பார்வை என்ற பெயரில் இன்றுவரை செயல்பட்டுக் கொண்டுவருகின்றன. இவை முதலீட்டிய, அரசியல் ஏகாதிபத்தியம்  போல பண்பாட்டியல் ஏகாதிபத்திய வன்முறை.

வெள்ளைமையவாதம், இனவெறி, ஆண்பாலினத் திமிர், ஒற்றை மனிதவாதம் போன்ற மனிதப்பன்மை மறுப்புத் திட்டங்கள் இவற்றின் உள்ளடக்கமாக இருக்கின்றன. இந்திய இலக்கியம் என்ற ஒன்று எப்படி வன்முறையான கட்டமைப்போ அப்படியே தமிழிலக்கியம், மலையாள இலக்கியம்  என்பது போன்ற ஒற்றை அடையாடளமும் வன்முறைக் கட்டமைப்புகளே.

தமிழில் இந்த வன்முறைக் கட்டமைப்பைத் தகர்க்க முயற்சி நடந்து அதற்கான கருத்தியல் தளமும் விளக்கப்பட்டுள்ளது. இதன் பன்மை அரசியல், மாற்று அரசியலின் ஆற்றல் என்ன என்பதைப் புரிந்து கொண்ட ஊடகப் பண்பாட்டு பெருநிறுவனங்கள் இதற்கெதிரான தாக்குதலைத் தொடங்கியுள்ளன.

பேரிலக்கியம், செவ்வியல் படைப்புகள், இலக்கிய ஞானிகள், (இசைஞானிபோல) இலக்கிய ஆளுமைகள் என்பதான மக்கள் மறுப்புக் கதையாடலை மீண்டும் பெரும் முதலீட்டுடன் மறுஉருப்பெருக்கம் செய்யத் தொடங்கின.  ஊடகப் பெருக்கமும், கணினி அச்சுத் தொழில் நுட்பமும் அதற்குத் துணையாக இருந்தது. ஒவ்வொரு வகைக்கும் ஒருவரைத் தேர்ந்தெடுத்து மூவர் முதலிகள் மரபைத் தொடர்ந்தனர். ஒருவர் ஒரு ஆண்டில் வெளியேற்றும் ஒன்பது நூல்களை ஒரே மேடையில் ஒன்பது பேரை வைத்து பிரதிஷ்டை செய்வது பெருமையாகப் பேசப்படுகிறது.  இலக்கிய கும்பாபிஷேக, குடமுழுக்கு விழாக்களை நடத்திப் புண்ணியம் தேடும் இலக்கிய அறங்காவலர்கள் இப்படித்தான் உருவாகி வந்தனர். நகைக்கடை, துணிக் கடை, வைரநகை விற்பனையாளர்கள் சிலர் மேடையில் தோன்றி “எனக்குத் தெரிந்து இப்படி ஒரு நூலை இதுவரை யாரும் எழுதியதில்லை” என்றோ, இது ஒரு  தமிழ்  சாதனை, தமிழில் என்ன இந்திய அளவில், ஏன் உலக அளவில் இது ஒரு சாதனை” என்றுகூறி திரைப்படத் தொழில் செய்யும் ஒருவரின் கையில் புத்தகத்தை ஒப்படைத்து உலக்கை நாயகர்களை உருவாக்கும் தொடர் முயற்சிகள் நடக்கத்தொடங்கின.

பாரதி, புதுமைப்பித்தன், ஜெயகாந்தன்  என்றோ கல்கி, கண்ணதாசன், பாலகுமாரன், என்றோ எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன், சாருநிவேதிதா என்றோ முப்பெரும்தேவர், மூவேந்தர், மூவர் முதலிகள், மரபுகளை நவீன- பின்நவீனத் தளத்தில் பெருக்கத் தொடங்கினர் பண்பாட்டுச் சந்தை முகவர்கள்.  இது பக்தி மரபின் இன்றைய வடிவம், மூவர் முதலிகளை உருவாக்கி விட்டால் அவர்களுக்கான பக்தர் குழாம் வழி அறிவுக்கேடான கருத்தியல்களை உருவாக்குவது எளிது. ஒரு காலத்தின் அறிவுருவாக்கத்தைக் கட்டுப்படுத்த கலை-இலக்கிய வடிவங்கள் மிகச்சிறந்த கருவிகள் இல்லையா?

ஒரு தனிமனிதரை எழுத்தாளராக உருவாக்க வேண்டும், பிறகு அவரைத் தனிப்பெரும் எழுத்தாளர் என நிருவிக்காட்ட வேண்டும், அவரே நம்காலத்தின் நாயகன், அவருடைய மேதைமை தன்னிகரில்லாதது என மேடைகளில் முழங்க வேண்டும், இவரது எழுத்துக்கள் மட்டுமே நம் காலத்தின் சாதனை எனக் கூச்சலைப் பெருக்க வேண்டும்,  இந்த நூற்றாண்டின் 10 நூல்களின் பட்டியலை ஆண்டுக்கு ஒருமுறை செதுக்கியெடுத்து அதில் தமக்குத் தேவைப்பட்ட ஒருவரின்  5 நூல்களை ஆணியடித்துப் பொருத்திவிட வேண்டும். இப்பொழுது இவரே நம் காலத்தின், நம் சமூகத்தின் அனைத்து இன்ப, துன்பங்களையும் வரையறுக்கும் வல்லமை கொண்டவர். இனி அனைத்தைப் பற்றியும் இவர்களிடம் கருத்துக்கேட்டு பதிவுசெய்து தமிழ்ச்சமூகத்தின் தலைவிதியை, வரலாற்றைத் தொகுக்க வேண்டியதுதான். தமிழ் வழிக்கல்வி தொடங்கி தமிழினப் படுகொலைவரை, பெண்ணெழுத்து எப்படியிருக்க வேண்டும் என்பது முதல் சமண முனிவர்கள் பக்தி அரசியல்போரின் போது கழுவேற்றப்பட்டார்களா இல்லை அவர்களே கழுவில் ஏறி தம்மை மாய்த்துக் கொண்டார்களா என்பது வரை இவர்களின் கருத்துக்களே வரலாறாக அமையும்.

ஜெயகாந்தன் இதற்குத் திடமான ஒரு உதாரணம். இவர் தமிழின் பல கதைசொல்லிகளில் ஒருவர். நவீன சமூகத்தில் மரபான மனிதர்கள் எதிர்கொள்ளும் வாழ்வியல், உளவியல், உறவுசார் சிக்கல்களைக் கண்டும் கேட்டும் புனைவு வடிவில் தந்திருப்பவர்தான், சரி. இவரின் புனைவுகள் சமூக நிகழ்வியலின் ஒரு கட்டப் பதிவு என்பதை இலக்கிய அறிவியல் வகையில் ஏற்க வேண்டும். ஆனால் வரலாறு, தமிழ்ச்சமூகம், தமிழ் அடையாளம், மையத்தேசியம் என்பவைபற்றி இவர் அளித்துள்ள கருத்தமைவுகள் சங்கரமட நவீனத்துவம் மட்டுமே.  இவர் கட்டிய பல கருத்துருவ மாதிரிகள் அறியாமையை அடிப்படையாகக் கொண்டவை,  நவீன உளவியலுக்கு எதிரானவை. உண்மையான இடதுசாரிச் சிந்தனைகள் தமிழிலக்கிய-பண்பாட்டுப் பரப்பில் வலிமையாகப் படிந்துவிடக்கூடாது என்பதற்காக அன்றைய அச்சு ஊடகங்களால் திட்டமிட்டப் பெருக்கப்பட்ட பிம்பமாக மாறிய அவர் அவர்களுக்கான சேவையை அளவுக்கதிமாகவே செய்திருக்கிறார். குருபீடம், ஞானபீடம் என்ற உருவாக்கங்கள் அறிவு இயக்கத்தில் அழிவு சக்திகளாவே செயல்படும் என்பதற்கு இந்த ஜெயஜெய சங்கர. ஹரஹர சங்கர புரட்சிக் கனலே தெளிவான எடுத்துக்காட்டு.  ஒரு இலக்கிய மாணவனாக நான் ஜெயகாந்தனின் ஒவ்வொரு எழுத்தையும் எழுத்தெண்ணிப் படித்தவன். ஒரு பத்து ஆண்டுகள் அவர் புதுவையில் எந்த மேடையில் பேசினாலும் உடல் நலமில்லாத நிலையில்கூட ஓடிச்சென்று ஒரு மூலையில் இருந்து கேட்டு வளர்ந்தவன்.  “சில நேரங்களில் சில மனிதர்கள்” படித்து  ‘ஆங்கிலம்’ கற்ற பலரில் நானும் ஒருவன். இன்றுகூட அவருடைய குறுநாவல்களைப் படித்தபின் நவீன இலக்கியம் பற்றிப் பேசுங்கள் என இலக்கிய மாணவர்களுக்குச் சொல்லுவேன்.  ஆனால் … தன் புனைவுகளில் சில மனித வகைமைகளை மதித்துப் புரிந்து கொள்வதற்கான குரலைப் பதிவு செய்துள்ள ஜெயகாந்தன் போன்ற ஒருவர் தன் கருத்தியல் கதையாடல்களில் அதிகாரமையத்தன்மை கொண்ட, புனிதப்பழமையின் தூதுவராகச் செயல்படுவதன் எந்திரவியலைப் புரிந்து கொண்டால் இலக்கிய பக்தி, அறிவுலக அடைக்கல வாதம் என்பவற்றில் இருந்து நாம் விடுபட்டு விடுவோம்.

ஆனால் இந்த விடுதலைப் பார்வை ஊடக-பண்பாட்டு அரசியல் நிறுவனங்களுக்கு அச்சமூட்டக் கூடியதாக இருக்கும். அதனால் ஒரு ஜெயகாந்தன் சோர்ந்து    போய் செயல்பட முடியாத நிலையில் இன்னொரு ஜெயமோகன் உருவாக்கப்படுவார். இவர் ஜெயகாந்தனைவிடப் பலமடங்கு மேதைமை கொண்டவர் என்றும் பார் போற்றும் படிப்பாளர் என்றும் திக்குகள் எட்டும் சிதற ஜெயபேரிகை கொட்டிவிட்டால் கருத்துருவாக்க வேலை மிக எளிதாகிவிடும். இன்று இந்த விஷயத்தில் பேசிக்கொண்டிருக்கும் எவரின் குரலுடனும் சேர்ந்தது அல்ல என் குரல். இது இந்தக் காலகட்டத்தின் முதன்மை படைப்பிலக்கியவாதியின் குரல். நீங்கள் சொல்லும் ஒவ்வொரு சொல்லும் காலத்தில் மறைந்தபின்னும் எஞ்சும் குரல் இது. என் ஆசான் ஜெயகாந்தன் இதைவிட வெறுப்பு அனலடித்த காலகட்டத்தில் சிங்கம் போல மேடையேறி நின்று முழங்கிய கருத்துக்கள்தான் இவை.”  இந்த தனிப்பெரும் குரல் உருவாக்கம் மாற்றம் மறுக்கும் அரசியல் இயந்திரங்களுக்கு மிகத்தேவையான ஒன்று. கண்ணதாசன் இதைவிட தனிப்பெருங்குரலில் இந்து மதத்திற்கு அர்த்தம் கண்டு கூறியது நமக்குத் தெரியும்.

இலங்கையில் இனப்படுகொலை நடக்கவில்லை, நடக்கவேயில்லை என்பதை சுப்பிரமணிய சுவாமி சொன்னால் நம்பத் தயங்குபவர்கள்கூட ஜெ.மோ தனிப்பெரும் குரலில் ஞானச் செருக்குடன் சொன்னால் நம்பித்தானே ஆக வேண்டும். பெயர் சொல்ல விரும்பாத தன் நண்பர் ஒருவருடன் நேரில் சென்று பார்த்து, இந்திய ஞானமரபின் அனைத்து மகான்களையும் அணுகி ஐயம்தீர்த்து இவர் சொல்லும்போது தமிழ்ப் பெண்கள் தான் சிங்கள ராணுவத்தினரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றனர் என்ற உலகுக்குத் தெரியாத உண்மையையை யாரால் மறுக்க முடியும்  பெண்ணெழுத்தை, பெண்ணியத்தை தன் சுட்டுவிரலால்  தூக்கியெறிய  இவர் இருக்கும்வரை பெண்ணியச் சதித்திட்டங்களைப் பற்றி தமிழின் அறிவுலகம் கவலைப்படத் தேவையில்லைதானே? அருந்ததி ராய் போன்ற “அமெரிக்க கைக்கூலிகள்” இந்தியத் தாயின் புனிதத்தைத் குலைக்கவும் எல்லைப்பகுதியில் வன்முறைகளைத் தூண்டவும் செய்யும் தொடர் முயற்சிகளை இவரைத் தவிர வேறு யார் இவ்வளவு சான்றுகளுடன் அம்பலப்படுத்த முடியும்?  இந்தியாவில் வெறுப்பு அரசியலையே தொழிலாகக்கொண்டவர்கள் இந்து மகாசபையினரோ, ராஷ்டிரிய சுயம்சேவை வீரர்களோ, பாரதிய ஜனதா கட்சி-பஜ்ரங்க தளச் செயல் மறவர்களோ இல்லை பெரியார், அம்பேத்கர் போன்ற ஆயுதம் ஏந்திய ஆன்மிகமற்றத் தலைவர்கள்தான் என்பதை இது போன்ற வரலாற்று ஞானத்துடன் வேறு யார் தமிழ் இளைஞர்களுக்குச் சொல்லித்தர முடியும்? தமிழ்ப் பிராமண அன்பர்கள் தீண்டாமைக்கு உட்பட்டுத் திக்குத் தெரியாமல் தவித்து வரும் பெருங்கொடுமையை இவ்வளவு அறச்சீற்றத்துடன் வெறுப்பு அரசியலின் விஷம் துளிகூட இல்லாமல் உலகுக்கு வேறு யாரால் அறிவிக்க முடியும்…

இப்படித்தான் தொடர்கிறது இந்த இலக்கிய மேதைகள், உலகத்தர எழுத்தாளர்கள் என்ற ஊடக உருவாக்கத்தின் அரசியல்… இதற்கு ஒருவர் மட்டும் போதாது இன்னும் இருவர் அவசியம். அந்தந்த இடத்திற்கேற்ப மூவர், ஐவர் என வரிசைகள் மாறலாம், ஆனால் இந்த ஆளுமை பெருக்கக் கதையாடல் வன்முறையின் வரலாற்றுத் தடம் இதுதான்.

பெருந்தலைவர்கள், வரலாற்று நாயகர், மகாத்மாக்கள் உருவாக்கப்படுவது அரசியல் வன்முறைகளை, வரலாற்று சதிகளை மறைக்க, திரிபுக் கருத்துகளை நியாயப்படுத்தப் பயன்படுவது போல கலை-இலக்கியத்தில் பேரிலக்கிய ஆளுமை பற்றிய கதையாடல் பழமைகளை மீளுருவாக்கம் செய்ய, அரசு-அடிமைகள் உளவியல் கட்டமைப்பைத் தொடரப் பயன்படுவது. தெய்வத்தின் குரலும்   சிங்கத்தின் குரலும் இணைந்து முழங்கும் இவர்கள் மீது வெறுப்பு அனலடிக்கிறதாம், எது இந்த அனல்? அந்த அந்த காலத்தின் அறிவரசியல் மாற்றுக் குரல்களைத்தான் இவர்கள் வெறுப்பு அனல் என்கிறார்கள். இந்த அனல் முறையாகத் தேவையான அளவுக்கு அடிக்காததால்தான் பிற்போக்கு பிணாத்தல்கள் தமிழின் அடையாளமாக மாற்றப்படுகின்றன.

ஆளுமை மையவாதம் அறிவுருவாக்கத்திற்கு, அரசியல் தன்னுருவாக்கத்திற்கு எதிரான அழிவுத்திட்டம்.  இலக்கியம்,  திரைப்படம், ஊடகக்கதையாடல்கள் என அறிவழிப்பு அதிகார மையங்கள் தமிழ்ச் சமூகத்தின் மீது தொடுத்துள்ள அழகியல்-உளவியல் போர் இது. இந்தப் போர் உயிரியல் ஆயுதங்கள் வழி நடத்தப்படும் உருமறைந்த தாக்குதலாக தொடர்ந்து நிகழ்கிறது… தமிழில் இதனை எதிர்த்து கருத்தியல், அறிவுக்களங்களில் பெரும்போராட்டம் நடக்க வேண்டும். வாசிப்பின் அரசியல், வாசிப்பின் அறிவியல் வழிவாக விரிவடைய வேண்டும்.

மக்கள் அரசியலை மறுக்கும் ஒரு குழுவினரால் உருவாக்கப்படும் உத்திதான் ஒரே மேடையில் ஒரு நூறு நூல்களின் விழா என்ற கேளிக்கைக் கொண்டாட்டம். இந்தப் பெருங்கட்டமைப்புத் தந்திரத்தின் முகவர்களாக  இயங்கும் பல பதிப்பகங்கள்… எல்லா பத்திரிகை நிறுவனங்களும் ஒரு இலக்கிய இதழை, இணைப்பைத் தொடங்கியுள்ளன… இந்து தமிழில் வந்துவிட்டால் இரண்டாவது கருத்து இருக்கமுடியுமா என்ன? இப்படித்தான் நீள்கிறது அரசியல் நீக்கச் சொல்லாடல்.   இன்றைய இளைஞர்களின் அறியாமையின் மீது கட்டப்பட்டுள்ளது ஊடகங்கள் கொண்டாடும் இலக்கிய மகான்களின் குருபீடம்…

சில இளைய வாசகர்கள், சில ஆய்வு மாணவர்கள் ஒரு கலந்துரையாடலின் பொழுது   என்னிடம் கேட்டனர், கலக இலக்கியம், பாலரசியல் பற்றியெல்லாம் நீங்கள் தான் தொடர்ந்து எழுதி வருகிறீர்கள், ஆனால் அந்த “ஒரு எழுத்தாளரின்” கலக எழுதுக்களை நீங்கள் படிப்பதில்லை எனக் குறிப்பிடுகிறீர்கள் என்ன காரணம்? நான் இறுக்கத்தைக் குறைக்க வேண்டும் என்பதற்காக சுவாமி நித்தியானந்தரின் கலக அரசிலை கவனிக்கவே எனக்கு நேரம் இல்லை இதற்கு எங்கு நேரம் கிடைக்கப்போகிறது என்று சொன்னேன். எக்சிஸ்டென்ஷியலிசமும் பேன்சி பனியன்களும் நாவலை நீங்கள்தான் கலகத்தை முன்வைக்கும் பிரதி என்று முன்னுரை எழுதினீர்கள் அதை இப்போது மறுக்கிறீர்களா? நீங்கள் கலகம் என்று சொல்லும் போது ஏற்பதும், இல்லை என்றால் அதை மறுப்பதும்தான்  வாசகர்களான எங்கள் வேலையா? அவர்கள் கேள்வியில் நியாயம் உண்டு, படித்த பிள்ளைகள் இல்லையா. கலகத்தை முன்வைக்கும் போது முன்வைப்பதாகவும் அதனைப் பின்வைக்கும் போது பின்வைப்பதாகவும் சொல்லத்தான் வேண்டும். அவர் பின்வைத்த கலகம் தினமல… மன்னிக்க தினமலர் பத்திரிகையின் வழி உருவாக்கப்பட்டது. அதனை இப்போது நான் முன்வைக்க வேண்டிய தேவை இல்லைதானே?” என்று சற்றே எரிச்சலுடன் பதில் சொன்னேன். அவர்களிடம் என் முன்னுரையின் கடைசி வாக்கியத்தைப் படியுங்கள் “இந்தப் பிரதியில் கலகம் எந்த அளவுக்குச் சாத்தியப்பட்டுள்ளது என்பது வாசிப்பின் வழி தெரியவரும்” என்பது போல ஒன்றைச் சொல்லியிருப்பேன் என்றும் நினைவு படுத்தினேன்.

ஆனால் அவர்களுக்கு விளக்க வேண்டிய கடப்பாடு எனக்கு உண்டு. பாலரசியலை எழுதுவது என்றால் பாலியல் குற்றங்களை விதந்தோதுவதும், பெண்ணிலையின் மீதான கருத்தியல் வன் கொடுமையை  கவிதையியல் எனக் கொண்டாடுவதும் இல்லை. மேல்நிலைப்படுத்தப்பட்டதை கீழறக்கம் செய்வது கலகம், அடக்கப்பட்டவர்களை அவமதித்து எழுதுவது வன்முறை. பாலியலின் சிக்கல்களை, அதன் அரசியலை கதைப்படுத்துவது என்றால் பெண் குழந்தைகளின் மீதான பாலியல் வன்கொடுமையை அழகியல் என்று நிறுவும் ஒரு எழுத்து  மனித உரிமைக் கெதிரான குற்றம் என்று  உங்களுக்குத் தோன்றவில்லையா?

அப்படியென்றால் அரசியல் பற்றி மட்டும்தான் எழுதவேண்டுமா?  என்ற அவர்கள் கேள்விக்கு நான் சொன்ன பதில் இதுதான். அரசியல் மட்டுமே அனைத்துமாக இருக்கும் ஒரு சமூகத்தில் அரசியல் மறுத்து எழுதுங்கள்… அரசியல் அற்ற ஒரு சமூகத்தில் அரசியல் பற்றியே எழுதுங்கள்.  உங்கள் அரசியல்தான் உங்களுக்கான அழகியல், உங்கள் அழகியல்தான் உங்கள் அறம்… உங்கள் அறம்தான் நீங்களும் உங்கள் சமூகமும்…

கலை இலக்கியங்களின் மீதான விமர்சனம் என்பது முன்பு போலவே வெறும் கருத்துரைப்புகளாக மாறியுள்ளதற்கு அல்லது தொடர்வதற்குக் காரணம் தற்போது விளங்கும்தானே. அரசியல் நீக்க  வாசிப்பு, அறிவு மறுக்கும் அழகியல், இவைதான் தற்கால அடையாளம் அற்ற சமூகத்தை உருவாக்க  அடிப்படைத் தேவைகள். செவ்வியல் பெருமை பேசியோ, புராதனப் புகழ் பேசியோ நிகழ்த்திக்காட்ட முடியாத அறிவு, அடையாள அழிப்பை அரசியல் நீக்க வாசிப்புகள் வழி நிகழ்த்த முடியும்.

உரையாடல்: 3: 1

உரையாடல்: 3 : 2 

மாறுதல்களைப் புரிந்து கொள்வதும் மாற்றங்களைக் கண்டு அஞ்சுவதும் – பிரேம்

உரையாடல்:2 
மாறுதல்களைப் புரிந்து கொள்வதும் மாற்றங்களைக் கண்டு அஞ்சுவதும்

கேள்வி

தொண்ணூறுகளின் ஆரம்ப காலத்தில் தமிழ் அறிவுலகச் சூழலில் இலக்கியம், வரலாறு, சமூகம், வாழ்வியல் குறித்து அதுவரை இருந்துவந்த பார்வைகளில் இடையீடு செய்து சில மாற்றுப் பார்வைகளை  முன்வைத்தவர்களில்  நீங்களும் ஒருவர், அதன் பிறகு  தமிழ்ச் சூழலில்  ஏற்பட்டுள்ள  மாற்றங்களை, வளர்ச்சியை நீங்கள் எவ்வாறு மதிப்பிடுகிறீர்கள்?

[ ராஜகாந்தன், அசோக்ராஜ், கருணாகரன்]

பதில்

பிரேம்

மாற்றுப்பார்வைகளை முன் வைத்து வருவதுடன் மாறுதல்கால பயங்கரங்கள் பற்றியும் பேசி வருபவன் என்ற வகையில் நான் எனது மாறுதல் விரும்பும் வாழ்க்கையினூடாகவே இதனை விளக்க முயற்சிக்கிறேன். 2009 ஆண்டு ஈழ மண்ணில் நிகழ்த்தப்பட்ட தமிழினப் படுகொலைக்கு முன் இது போன்றதொரு கேள்விக்கு எளிதாக நான் பதில் கூறியிருப்பேன். இடையீடுகள் செய்ய இயலாத பலமடைந்த ஒரு கருத்தியல் பயங்கரவாதம்  உருவாகிப் பரவிவரும் ஒரு காலகட்டத்தில் என்னைப் பற்றிய பேச்சினூடக இதனை விளக்கவும் விளங்கிக்கொள்ளவும் முயற்சிக்கிறேன்.

தொண்ணூறுகளின் தொடக்கம், எழுபதுகள் எண்பதுகளின் கடினமான காலகட்டத்தின் தொடர்ச்சி… உலகின் இருமுனை ஆதிக்கங்களாகவும்,  போர்மைய அரசுகளாகவும் இருந்த அமெரிக்க-ரஷ்ய வல்லாண்மைகள் உலக அளவிலான மக்கள் தொகுதிகளின் அடிப்படையான, எளிய வாழ்வியல் தேவைகளைக்கூட தம் அடக்குமுறைகளின் வழியாகப் பெருங்கனவுகளாக மாற்றியிருந்தன.

குடிநீர் தேவைக்காக ஆயுதம் ஏந்திப் போராடி உயிர்விட வேண்டிய நிலையில் மக்கள் வைக்கப்பட்டிருந்தனர்.  தம் தாய்மொழியில் கல்வி கற்கவும் கையெழுத்திடவும் உரிமை கேட்ட மக்கள் தற்கொலைப் படையினராக மாறவேண்டிய அளவுக்கு மிகக்கொடூரமாக அரசுகள் நடந்து கொண்டன. மாற்றங்களுக்கான கனவுகள், விடுதலைக்கான ஏக்கங்கள் அதுவரை பெற்றிருந்த தளத்தினை இழந்து சிதறிய நிலையை அடைந்திருந்தன. குடிமை உரிமைகளுக்கான போராட்டங்கள் கூட போர் அமைப்புகளாக மாறவேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது. ரஷ்ய-ஸ்டாலினிய வன்கொடுமைகள்தான் புரட்சிகர அமைப்புகளின் அடையாளமாக இருக்க முடியும் என்ற நிலை ஏற்பட்ட பின் மார்சிய, விடுதலை அரசியல் என்பதும் அழிவு அரசியலின் வடிவமாகத் திரண்டிருந்தது.

 புரட்சி-எதிர்ப்புரட்சி இரண்டுமே ரஷ்ய-அமெரிக்க ஆயுதச் சந்தை நிலவரம் சார்ந்ததாக, போர்ச்சந்தை சதித்திட்டங்களாக மாறியிருந்தபோது மக்கள் அரசியல், மக்கள் அடையாளம், மக்கள் வரலாறு பற்றிய அடிப்படையான கேள்விகள்கூட சிக்கலானதாக மாறியிருந்தன. பொறுப்பான ஒரு மார்க்சியச் சிந்தனையாளர் இந்த நிலையை எதிர்கொள்வது, கைக்கொள்வது மட்டும் அல்ல இதன் தொடர்ச்சியாகச் சிந்திப்பதும்கூட மிகக்கடினமான நிலை. ரஷ்யா உடைந்தது ஏன், கம்யூனிசம் தோற்றுப்போனதா எனத் தொடர்விவாதங்களை நடத்தி அமைதி அடைந்துவிடக்கூடிய நிலையில் ஒரு மார்க்சியர் இருக்க முடியாது.

அமெரிக்க வன்கொடுமைகளுக்கு இணையாக ரஷ்ய வன்கொடுமைகள் உலகைச் சிதைத்துக் கொண்டிருந்த போதும், சோவியத் ரஷ்யா பல தேசங்களாகப் பிரிந்து சென்றாலும் அமெரிக்க ஒன்றியம், அய்ரோப்பிய ஒன்றியம் என்பவை வலுவடைந்தபோதும் உலகில் எதுவுமே நடக்கவில்லை என்பது போல கட்சி-சித்தாந்தம் எனப் பேசியபடி கொடிவழியாக நடந்து செல்வதற்கு அறியாமை மட்டுமே காரணமாக இருக்க முடியாது. மாற்றம், வளர்ச்சி, புரட்சிகள், எதிர்ப்புரட்சிகள், மனித உரிமை, போர்-அமைதி, நவீன வாழ்வு என அனைத்தும் வெள்ளைமைய, அய்ரோப்பியமையத் தன்மை கொண்டவைகளாக இருந்து வருவதைப் புரிந்து கொள்ளாமல் நாம் சென்று கொண்டே இருக்க முடியாது.

எழுபது-எண்பதுகளில் தமிழில் அரசியல் மிகச்சிக்கலான இரண்டு தளங்களை அடைந்திருந்தது. ஒரு தளத்தில் “அரசியல்” அதிகம் பேசப்பட்டு அரசியல் நீக்கம் நிகழ்த்தப்பட்டது.   திராவிட, சுயமரியாதை, தமிழ் அரசியல் இடதுசாரி அரசியலின் இடத்தை எடுத்துக்கொண்டது. தேசிய அரசியலின் இறுக்கம் குறைந்து அடையாள அரசியல் முன்வைக்கப்பட்டது,  ஆனால் கொள்கை, கோட்பாடு, கருத்தியல் என்பவை பொருளற்றவைகளாக, பேசத்தகாதவைகளாக மாறியிருந்தன. இந்திய அளவில் காந்தி, நேரு, இந்திரா என்ற பெயர்களில் சமூகமும் அரசியலும் வரலாறும் அடக்கப்பட்டது போலத் தமிழில்  பெரியார், காமராஜர், அண்ணா, கருணாநிதி,  எம்.ஜி.ராமச்சந்திரன் என்ற பெயர்களுக்குள் அனைத்தும் அடக்கப்பட்டிருந்தன.  புரட்சித்தலைவர் என்ற ஒற்றைப் பெயரும் அத்தனிமனிதரின் பொன்மனமும்  தமிழர்களின் மொத்த வாழ்வையும் வளத்தையும் நிர்ணயிப்பதாக இருக்க முடியும் என்பது மிகப்பெரும் அவலம் மட்டுமல்ல வரலாற்று வன்முறை, அடிமைச் சமூக, அழிவு உளவியல்.  தமிழ்ச்சமூகம் முழுமையும் தட்டேந்திக்கொண்டு அய்யா, அம்மா என்று அழுதபடி நீண்ட வரிசையில்  நிற்பது போன்ற ஒரு நிகழ்வியல் படிமம் உருவாக்கப்பட்டது இந்த காலத்தில்தான். இந்த காலகட்டத்தில் இடதுசாரி, மக்கள் அரசியல் தமிழகத்தின் மறதியாக, மனச்சிதைவுப் புலம்பலாகத்தான் இருந்தது. மக்கள் போராட்டம் சார்ந்த செயல்பாடுகள் ஆயுதம் கொண்டும், கொடும் அடக்குமுறை கொண்டும் அழித்தொழிக்கப்பட்டன, அல்லது குலைக்கப்பட்டன.  புரட்சிகர உளவியல்  இந்திய அரசியலில் உருவாகி விடாமல் இருப்பதில் அமெரிக்கா-ரஷ்யா இரண்டும் மிகக் கவனமாக இருந்தன. இரண்டு வல்லாண்மை அரசுகளும் போட்டி போட்டுக் கொண்டு ஆயுதங்களையும் திட்டங்களையும் வழங்கி இந்திய அரசியலைத்  தம் விரல் அசைவில் இயக்கும் இயந்திர இணைப்பை உருவாக்கியிருந்தன.

இரண்டாவது தளத்தில் தமிழ் அரசியல் பேச்சுக்கு இடம் அளிக்காத ஆயுதக் கட்டமைப்பாக மாற்றப்பட்டது.  நான் இதனை மாறுதல் கால பயங்கரங்கள் என்று விளக்க முயற்சித்திருக்கிறேன்.  1975 க்குப் பிறகான தமிழ்ச்சமூகம் பற்றி இன்று நினைத்துப் பார்க்கும் பொழுது வரலாற்றுத் தடுமாற்றமும் பெருங்குழப்பமும் மிஞ்சுவதுடன் நம் காலத்திய பெருந்துன்பியல் நிகழ்வுகளுக்கு நடுவில் நாம் மிஞ்சியிருக்கிறோம் என்பதும் உடனே நம்மைத் தாக்கும். 1977 ஆகஸ்ட் மாதம் பிற்பகுதியில் இலங்கையில் தமிழ்ச் சமூகம் அடைந்த துயரம் தமிழ் நாடு முழுக்க உணரப்பட்டது. 1981 ஜூன் யாழ் நூலக எரிப்பு அரசியல் அறிந்த இளைஞர்களைக் கொந்தளிக்க வைத்தது, 1983 ஜூலை தமிழினப் படுகொலைகள் தமிழர்களின் அரசியல் உணர்வை விடுதலைப் போருக்கான நிதிதரும் திட்டமாக மாற்றியது.  அதற்குப் பிறகு தமிழகத்தின் தினசரி அரசியலாக மாறியிருந்த ஈரோஸ், இபிஆர்எல்எஃப், எல்டிடிஇ, டெலொ மற்றும் உருவாகிக் கொண்டிருந்த  தமிழ் ஈழம் என்ற ஒரு தனிநாடு அனைத்தும் நம் காலத்திய உளவியல் கூறுகளாக, உணர்வுத் தளங்களாக மாறியிருந்தன. ஆயுதம் ஏந்திய புரட்சி பற்றிப் பேசிக் கொண்டிருந்த அரசியல் தனிமனிதர்களின் அறைகளில் ஆயுதங்கள் கொண்டுவந்து வைக்கப்பட்டன. தமிழகச் சட்ட மன்றத்தில் தனி ஈழத் தமிழ்நாடு பற்றிய தீர்மானம், இந்தியப் பிரதமர் ஆதரவுடன் தமிழகம் எங்கும் போராளி முகாம்கள். புரட்சிக்கும் போருக்கும் இடையில் தடுமாறிக் கொண்டிருந்த அரசியல் கருத்தியல் களம் நம் காலத்திய தமிழ் அரசியல் இனி மேடைப் பேச்சுகளால், உரையாடல்களால் மட்டும் தீர்மானிக்கப்படக்கூடிய நிலையில் இருந்து மாறிவிட்டது என்பதை கவனத்தில் கொள்ளத் தவறியது. ஆனால் 1987-1991 காலகட்டத் துயரங்கள், இந்திய அமைதி காக்கும் படை தொடங்கி வைத்த அமைதியற்ற காலத்தின் கண்ணீர், இயக்கங்கள் தமக்குள் நிகழ்த்திக் கொண்ட படுகொலைகள், சிந்திப்பதற்கான சாத்தியங்கள் குறைந்து  தப்பிப்பதற்கான உளவியல் உருவான ஒரு காலகட்டம். விடுதலை  இயக்கங்களைப் சமமாகப் பார்த்து வந்த எனக்கு விடுதலைப்புலி அரசியல் துயரமாகத்தான் இருந்தது. தமிழீழம், தமிழ் அரசியல், விடுதலைக் கருத்தியல் என்பவை தற்கொலைகளாலும் கொலைகளாலும்  நிரம்பிய நிலையில் என்னிடம் குழப்பம் மட்டும்தான் மீந்திருந்தது. இந்தக் குழப்ப நிலையை தம் அடிப்படைகள் பற்றிய மறுபுரிசீலனைக்கான களமாக தமிழ் அரசியல், கருத்தியல், அறிவுசார் துறைகள் மாற்றிக்கொள்ள முடியும் என்று நான் நினைத்திருந்தேன்.

அரசியல், இலக்கியம், வரலாறு, சமூகம், வாழ்வியல், உளவியல்பு, தனிமனிதர்கள் என எதனைப் பற்றியும் அதுவரை தமிழ்ச்சூழலில் விவாதிக்கப்பட்டவை பொறுப்பற்றவைகளாக, திட்டமிப்பட்ட பிற்போக்குத்தனம் கொண்டவைகளாக இருந்தன. தீண்டாமை, பெண்நிலை ஒடுக்குதல் தொடங்கி சாதி, இனம், மொழி, பண்பாட்டு அடையாளம் சார்ந்த சிதைவுகள், தேசிய இனச் சிக்கல், சூழலியல் கேடு என அத்தனை தீமைகளாலும் பாதிக்கப்பட்ட ஒரு சமூகமாகத் தமிழ்ச்சமூகம் இருந்தபோது அறிவுலகம் அவற்றைப் பற்றிய எந்தக் கேள்வியையும் கவனத்தில் கொள்ளாமல் தன் உறக்க நடையைத் தொடர்ந்து கொண்டிருந்தது. இனப்படுகொலை, இனத்துக்குள்ளான  ஒடுக்குமுறை,  பண்பாட்டுப் பழமைவாதம் என உலகில் உள்ள அனைத்துச் சிக்கல்களையும் ஒருசேர எதிர்கொண்ட, அனுபவித்த ஒரு சமூகமாக தமிழ்ச்சமூகம் இருந்தபோதும் நம் சிந்தனைத்தளம் இவற்றைப் புரிந்துகொள்வதற்கான ஆற்றல் அற்றதாக வைக்கப்பட்டிருந்தது. தமிழ்ச் சமூகத்தில் மாற்று அரசியல் என்றால் பெரியாரிய, மார்க்சிய முன்முடிவுகளே அனைத்தையும் விளக்கப்போதுமானது என்ற பிடிவாதமான நம்பிக்கை நிலவிவந்தது.

இதற்கு வெளியே உருவாக்கப்பட்ட சில சிந்தனைத் தளங்களைப் பாருங்கள். அந்நியமாதல், எக்சிஸ்டென்சியலிசம், அமைப்பியல்வாதம், குறியியல் என்ற ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபதுகளின் இறுதியில் மேற்கில் இற்றுத் தீர்ந்துபோன சிந்தனைப்பள்ளிகளை அன்றுதான் கண்டுபிடித்த அதிசயம் போலப் பேசத் தொடங்கியிருந்தன சில வெளியீடுகள். எஸ்.வி.ராஜதுரை, கார்லோஸ் தமிழவன் என்ற இருவரும் தமக்குக்கிடைத்த ஆங்கில நூல்கள் வழி அடிப்படைகளை நோக்கிச் செல்லாத உரையாடல்களைச் சிறிய அளவில் பரப்பிக்கொண்டிருந்தனர். அரசியல் நீக்கம் செய்யப்பட்ட உரையாடல்களின் விரிவாக அவை இருந்தன. நானும் இந்த உரையாடலை ஒரு மாணவனாக இருந்து தொடர்ந்து சென்றிருக்கிறேன், பின்பு அவற்றை அடிப்படையிலிருந்து கேள்விக்குள்ளாக்கியிருக்கிறேன். என்னை அவர்கள் மறுக்கவும், பெயர் மறைக்கும் உத்தியால் வெளியேற்றவும்கூட இது காரணமாக இருந்தது. தமிழவன் பிறகு எனது கருத்துகள், கேள்விகளை ஓரளவு குறிப்பிடத் தொடங்கினார். என்னுடன் நட்பும், மதிப்பும் கொண்டவர் அவர், ஆனால் எனது  நுண் அரசியல், எதிர்ப்புச் சொல்லாடல்கள் பற்றி அவருக்கு உடன்பாடு இல்லை. பின்னாட்களில் எஸ்.வி.ராஜதுரை பெரியாரியம் பற்றிய மறுவாசிப்பின் வழியாக தமிழின் தற்கால அரசியலுக்கான சொல்லாடலுக்குத் தன் பங்களிப்பை அளிக்கத் தொடங்கினார்.

புரட்சிகர வாழ்க்கை என்றால் பெயர் தெரியாத ஒரு துப்பாக்கியை தோளில் மாட்டிக்கொண்டு ஆளில்லா இடம் ஒன்றில் உட்கார்ந்து புத்தகம் ஒன்றைப் படிப்பது, குறிப்பேட்டில் கவிதை எழுதுவது என்ற ஒரு சித்திரம் என்னைப் போன்றவர்களுக்குள் பதிவாக்கப்பட்டிருந்ததை இன்று அதிக வருத்தம் இன்றி நினைவுகூர முடிகிறது. ஆனால் இவை கடந்து பல கேள்விகளை நாம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்ற உளைச்சல் எனக்குள் இருந்துகொண்டே இருந்தது.

உலகமயமான கண்காணிப்பு அமைப்பின் கொடும் பிடியில் சிக்கிய நம்காலத்தில் மக்கள் அரசியலின் இடம் என்ன, அதில் ஒரு தனிமனிதரின் இடம் என்ன? விடுதலைக்கான ஒற்றைக் கோட்பாடு என எதுவும் இருக்கமுடியாது என்ற நிலையில் தற்கால விடுதலைக் கருத்தியல்களின் பெறுமதி என்ன? போர் இயந்திரங்களின் முன் தனிமனிதர்கள் தம்மை ஒப்படைத்து விட்டு மூச்சுவிடப் பயந்து வாழும் நிலையில் எழுத்து-சிந்தனை-கருத்தியல் என்பவற்றின் இன்றைய செயல்தேவை என்ன? என்பது போன்ற மிக அடிப்படையான கேள்விகளில் இருந்துதான் எனது இடையீடுகளையும் மாற்றுப்பார்வைகளையும் முன் வைத்தேன்.

 இந்த நிலையில்தான் “கொலை மற்றும் தற்கொலை” என்ற ஒரு அரசியல் உருவகம், ஒரு உளவியல் குறியமைப்பு எனக்குள் உருவாகி எழுத்துக்களில் பொங்கிவழிந்து கொண்டிருந்தது என்பது உங்களுக்குத் தெரியும். நிறப்பிரிகையில் நான் எழுதிய முதல் கட்டுரையே “புரட்சியை நோக்கி சில உளவியல் பிரச்சினைகள்”.  நீண்ட அந்தக் கட்டுரை இதழின் பக்கங்கள் கருதி தற்போதுள்ள அளவில் சுருக்கப்பட்டது. வில்ஹெம் ரீச், மிஷெல் ஃப்பூகோ என்ற பெயர்களை முன்வைத்து நான் உருவாக்கிய உரையாடல்களின் வழியாக எனது சிந்தனை மையத்தைக் கலைத்துக் கொண்டிருந்த கருத்துக்களையே முன்வைத்துக் கொண்டிருந்தேன்.

குற்றவியல் வழியான  அரசியல் இடையீடு, விளிம்புநிலை எதிர்ப்புச் சொல்லாடல், பெண்ணியக் கலகம், எதிர்க்கலாச்சாரம், நுண்ணரசியல் என நான் மாய்ந்து மாய்ந்து பேசியவற்றை, விளக்கியவற்றைத் தொடக்க நிலையில் கடுங்கோபத்துடன் எதிர்த்தவர்கள் பின்னாட்களில் அவற்றில் ஏதாவது ஒன்றை எடுத்துக் கொண்டு தமக்கான அடையாளச் செயல்பாடுகளை உருவாக்கிக் கொண்டுள்ளனர்.

நிறப்பிரிகை என்ற இதழியல் செயல்பாடு- கருத்தியல்களுக்கான உரையாடல்களம் பற்றி  நான் இதுவரை பேசியதில்லை. எனது எழுத்துக்களை தொடர்ந்து வாசித்தும் விவாதித்தும் வரும் நண்பர்களும் தோழர்களும் பலமுறை அது பற்றி எழுதும்படி கேட்டும் அந்த காலகட்டத்தைப் பற்றி நான் அதிகம் பேசுவதைத் தவிர்த்து வந்திருக்கிறேன்.  நிறப்பிரிகை பற்றித் தற்போது பேச ஐந்து பேர் இருக்கிறோம். ரவிக்குமார், அ.மார்க்ஸ், பொ.வேலுச்சாமி, பொதியவெற்பன் மற்றும் நான். ஒவ்வொருவருக்கும் அது பற்றிச் சொல்ல அவர்களை மையமாக வைத்து ஒரு கதையிருக்கும் என்பது புனைகதையாளன் என்ற வகையில் எனக்கும் தெரியும்.

கிரணம்  வெளிவந்திருந்த  காலகட்டம்  ரவிக்குமார் அவர்களுடன் சந்திப்பு, நீண்ட நாள் பழகியது போன்ற மனதுகந்த நட்பு, எனக்கும் அவருக்கும் பிடித்த புரட்சிகர மாற்று அரசியல்,  நேரம் காலம் போவது தெரியாத உரையாடல், எழுதுவதை அலசி, படிப்பதைப் பேசி, பேசுவதற்காகப் படித்து, பலரைக்கூட்டி உரையாடி, உரையாடலையே ஒரு அரசியல் செயல்பாடாக்கி, தமிழில்  மாற்று அரசியலுக்கான களங்களை ஆய்வு செய்து, அதனைக் கருத்தியல் தளங்களாக விரிவாக்கம் செய்ய ஒரு பத்திரிகை வேண்டும் என்று  திட்டமிட்டு, நிறப்பிரிகை என்ற பத்திரிகை மற்றும் கலந்துரையாடல் களத்தை உருவாக்கி, அதில் எழுதுவது முதல் அச்சகத்தில் இருந்து சுமந்து வந்து அஞ்சல் உறையில் இட்டு அனுப்புவது, அடுத்த கலந்துரையாடல்கள திட்டமிடுவது வரை அனைத்தும் அடுத்த வேளை உணவுக்கு உறுதியற்ற ஒரு காலத்தில் நான் செய்தவை. எழுத்தும் படிப்பும் என் வாழ்க்கையும் அரசியலும் என்பது என் உள்ளும் வெளியுமாக படிந்து போன நிலையில் பெயரைப் பற்றிக் கவலைப் படாமல் நான் செய்தவை.  பெயர் பதிவு செய்துகொண்ட பெரியோர்கள் பின்பு என் பெயரை முழுமையாக இல்லாமலாக்க செய்த முயற்சிகள் பற்றி எப்பொழுதும் இயங்கிக்கொண்டிருக்கும் எழுதுக்கலைஞன் என்ற வகையில் நான் அதிகம் கவலைப்பட்டதும் இல்லை, கவலைப்படத் தேவையும் இல்லை.  ஆனால் பெயர் நீக்க அரசியல் பற்றிய கவனம் நமக்குத் தேவை.

பாலரசியல், உடலரசியல், நுண்ணரசியல், பெண்ணிய அரசியல் என்ற தளத்தில் நான் முன் வைத்த கேள்விகள், அவற்றையே பேசிய என் எழுத்துக்கள்தான் அவர்களை பெயரழிப்பு, பெயர்மறைப்பு உத்திகளைக் கைக்கொள்ள வைத்ததாக நான் பின்பு உணர்ந்திருக்கிறேன்.  இன்று தனித்தனியாக அவர்களுக்கும் எனக்கும் அரசியல்- எழுத்து-அடையாளம் என்பவை அமைந்துள்ள நிலையில் தலித் அரசியல்-மாற்று அரசியல் பற்றிப் பல ஒத்த கருத்துக்கள் உள்ளன என்றாலும் நான் வேறுபட்ட இடங்கள் அப்படியே தொடர்கின்றன.

 “புதுச்சேரி கலகச் சிந்தனை” என்ற ஒரு தொடரைப் பலர் வெறுப்புடன் குறிப்பிட்டதைக் கேட்டிருக்கிறேன், பின்னாட்களில் புதுச்சேரி கலகச்சிந்தனைக் குழுவில் தாம் இல்லை என்று மறுத்து பலர் பொதுவெளியில் “உபநயனம்” பெற்றதையும் நான்  பார்த்திருக்கிறேன்.  இங்கு தோழர் அ.மார்க்ஸ் பற்றிக் குறிப்பிட வேண்டும், தொடக்கத்தில் பின்நவீனத்துவம், நுண் அரசியல், பெண்ணிய இடையீடு, புரட்சிகர உளவியல் என்பது பற்றி நான் பேசியவற்றை, எழுதியவற்றை  கடுமையாக மறுத்தவர் அவர். தொடர்ந்து எனது கருத்தியல் இடையீடுகள்மீது அவருக்குக் கோபம் இருந்தது. விவாதங்கள் பல கசப்பாக மாறியுள்ளன. “செயல் அதுவே சிறந்த சொல்” என்ற ஜோஸ் மார்ட்டியின் வாசகத்தை நிறப்பிரிகையில் பதிவு செய்திருந்த நிலையில் “சொல் அதுவே முதல் செயல்” என்றும் “சொல் அதுவும் ஒரு செயல்”, “சொல்லப்படாத செயல்கள் நிகழாதவைகளாகவே எஞ்சும்” என்பது போல நான் சில சந்திப்புகளில், உரையாடல்களில் குறிப்பிடும் போது அவருக்கும் நிறப்பிரிகை சார்ந்த இரண்டொரு நண்பர்களுக்கும் முகம் இறுகிப்போகும். இலக்கியம், கலை, அழகியல் பற்றிய அவர்களின் பயிற்சியின்மை, பழக்கமின்மை காரணமாக என்மீதும் என் புனைவெழுத்துகள் மீதும் கசப்பும் வெறுப்பும் கொள்வதை தவிர்க்கயியலாமல் இருந்தது… நிறப்பிரிகை வட்டம் உடைந்து சில ஆண்டுகள் கழித்து பின்நவீனத்துவம் பற்றிய அறிமுக நூல் ஒன்றை  அ.மார்க்ஸ் வெளியிட்டபோது அந்நிகழ்வில் நான் பேசியிருக்கிறேன்… அவரிடம் ஏற்பட்டுள்ள மாற்றம் விரும்பத்தக்கது என்றும் இனி அவர் என்னிடம் அன்பாக இருக்கவியலும் என்றெல்லாம்கூட குறிப்பிட்டிருக்கிறேன்… பிறகு நடந்தவை பற்றி உங்களுக்குத் தெரியும்தானே…

இவற்றைக் கூறுவதற்குக் காரணம்  “பார்த்தா! என்னை எல்லாப் பொருளுக்குள்ளும் அனாதியான வித்து என்று அறி, புத்திமான்களின் புத்தியும் வீரமுடையவர்களின் வீரமும் நானே ஆகின்றேன்.” என்று கீதோபதேசம் செய்வதற்காககோ,  “நானே சத்தியமும் வழியுமாக இருக்கிறேன்” என்று அறிவிப்பதற்காகவோ இல்லை. நான் 1985 தொடங்கி இன்ற வரை தமிழ்ச் சிந்தனையின் அதிக குழப்பமும், சிக்கலும் கொண்ட பகுதிகளில் உழன்றுகொண்டும், உளைந்து கொண்டும் இருக்கிறேன் என்பதை மிகைப்படுத்தல் ஏதும் இன்றி நினைவு படுத்துவதற்காகத்தான்.

அம்பேத்கரிய, தலித்திய, பெண்ணிய அரசியல் தமிழில் தளம் கொண்ட பிறகுதான் அதிக வலியின்றி, தினவாழ்வு அரசியலில் ஈடுபட என்னால் முடிந்தது. தலித் கூட்டமைப்பு, அம்பேத்கர்-அயோத்திதாசர் படிப்பு வட்டம், தலித் கலைப்பண்பாட்டு பயிற்சி முகாம்கள், மண்ணுரிமைக்கூட்டமைப்பு என்பவைதான் என்னை உடலியல் வகையில் ஒருங்கிணைத்த செயல்பாடுகள். இவை என்னை தற்காலம் சார்ந்தும் எதிர்காலம் சார்ந்தும் இயங்க-இருக்க வைத்த செயல்பாடுகள். அதிக நேரத்தை, ஆற்றலை அவற்றில் நான் செலவிட்டிருக்கிறேன். என் மகள் பிறந்த அன்று, தேதி குறிக்கப்பட்ட  ஒடுக்கப்பட்டோர் எழுச்சி மாநாடு ஒன்றில் நிகழ இருந்த “மண்ணிலிருந்து” என்ற நாடகத்தின் பயிற்சிக்காக 40 இளைஞர்கள் காத்திருக்கிறார்கள் என்பதால் அதனை நிறுத்தாமல் பாதிநாள் கடந்து மருத்துவமனைக்குச் செல்லவேண்டிய சூழலில் நான் இருந்திருக்கிறேன். தலித் போராளி, தமிழினக் காவலன் என்று பட்டம் பெறுவதற்காக நான் இதனைச் சொல்லவில்லை… ஒரு சிந்தனையாளனாக, ஒரு எழுத்தாளனாக  அரசியல் என்பது எனது எளிய வாழ்க்கையின் எல்லாமுமாக இருந்து வருகிறது என்பதை எனக்கு நானே நினைவூட்டிக்கொள்வதற்காவே.

இந்த வரிகளூடாக உங்களுக்குச் சில நிகழ்வுகள் புரியவந்திருக்கும்… பின்நவீனத்துவம், பெண்ணியம், தலித்தியம் என அனைத்தின் வழியாகவும் நான் மாற்று அரசியல்-அறவியல்-அழகியல் என்பதைப் பற்றித்தான் தொடர்ந்து எழுதியும் பேசியும் வருகிறேன். நான் இக்கேள்விகளைக் கையாளத்  தொடங்கிய காலகட்டத்தில் புரியவில்லை, குழப்பமானது என்ற பேச்சுகள் இருந்தன… இன்று அப்படியில்லை. விளிம்பு நிலை அரசியல், அதற்கான தர்க்கவியலுடன் சொல்லாடல் வடிவுடன்  தனக்கான  இடத்தை உருவாக்கிக் கொண்டுள்ளது.

இலக்கிய வகைமை என்ற வகையில் பன்மைக் கதையாடல்கள் என்பது பற்றி மிக விரிவாக நான் விவாதங்களில், உரையாடல்களில் விளக்கியிருக்கிறேன். இன்று கதையாடலின் சில வகைமைகள் புழக்கத்தில் வந்துள்ளன. ஆனால் அரசியல் நீக்கம் மிக அதிகமாக நடந்துள்ளது.

இலக்கிய வடிவம், கதைசொல்முறை, புனைவைக் கட்டமைத்தல் என்ற வகையில் கிரணம் எழுத்து அதுவரை தமிழில் இருந்து வந்த தேக்கத்தை உடைத்து பன்மைப்படுத்தியது என்பது உங்களுக்குத் தெரியும். புது எழுத்து என்றும் தொன்மைக்கதையாடல் என்றும் விளிம்புநிலைக்கதையாடல் என்றும் அவை பல வடிவங்களில் வெளிப்பட்டன. அதுவரை ஊர்க்கதை, உறவுக்கதை சொல்லுவது மட்டும்தான்  புரட்சிகர எழுத்து,  சனாதன மறுப்பு எழுத்து என்று பிடிவாதமாக நம்பி வந்த பலர் தம் கதைசொல்லுதல் முறையை மாற்றிக் கொள்ளத் தொடங்கினர்.  சொல்லப்படாதன சொல்லுதல், அச்சம் தவிர்த்த அடையாள வெளிப்பாட்டு முறை, எழுத்துருவாக்கும் எழுத்து முறை, நுண்கதைச் சொல்முறை, தொன்மம் படிந்த வரலாற்றுக் கதையாடல், பாலரசியல் கதையாடல் எனப் பலவற்றை கிரணம் எழுத்துக்குப் பின்னான விவாதங்கள், விதண்டாவாதங்கள், உரையாடல், ஊர்க்கூட்டங்கள் அடையாளம் காட்டி, அறிமுகப்படுத்தி விரிவு படுத்தியுள்ளன. எனது ஒவ்வொரு புனைகதை எழுத்தும் ஒரு புதிய கட்டமைப்பை உருவாக்கிக் காட்டுவது. அவை பின்பு பலரால் கையாளப்படுவதாக மாறும். கோணங்கி, கௌதம சித்தார்த்தன் என்ற நண்பர்கள் தம் அடிப்படை எழுத்து முறையையே மாற்றிக் கொண்டுள்ளனர். தலித் இலக்கியம், பெண்ணிய எழுத்து, தொன்மக் கவிதையியல் என இன்றைய இலக்கியத் தளங்களில் கிரணம் எழுத்துக்கள் மற்றும் எனது புனைவுக் கட்டமைப்பு வடிவங்கள் ஊடாடி உள்ளன. இதனை நான் மாற்றிலக்கிய வரலாறு, பின்நவீன தமிழ் இலக்கிய வரலாறு பற்றி அறிய, ஆய்வு செய்ய விரும்பும் இளைஞர்களுக்கு நினைவூட்ட அசைப்படுகிறேன். “பதிவுகள் இலக்கியச் சந்திப்புகளில்“ ஒவ்வொரு முறையும் நான் முன்வைத்த விவாதங்கள், இடையீடுகள் தமிழில் அதுவரை பேசப்படாதனவற்றை பேசின. பலர் அவற்றால் தாக்கம் பெற்றனர். தமிழவன், நாகார்ச்சுனன் போன்ற நண்பர்கள் அமைப்பியல், பின் அமைப்பியல் பற்றிய கட்டுரைகளை எழுதி வந்தபோதும் இலக்கிய, கவிதை மொழியூடான எனது புத்தாக்க முறை தமிழ் எழுத்தியக்கத்தில் வலிமையான தாக்கத்தை, மாறுதல்களை உருவாக்கியது. கோட்பாடு, அரசியலடைந்த எழுத்து என்பதில் எனது ஒவ்வொரு கட்டுரையும் பலருக்கு பத்தாண்டுகளுக்கான எழுது பொருளை அளித்துள்ளன.  ஆனால் எனது பெயரை, எழுத்தைக் குறிப்பிட்டுத் தம் பேச்சைத் தொடர பலருக்குத் தயக்கம் இருந்தது. பலர் எனது தாக்கமும், பங்களிப்பும் தனது எழுத்தில் இல்லை என்பதை நிருபிப்பதற்காவே என் மீதான ஒரு பகைச்சொல்லாடலை உருவாக்கிக் கொண்டுள்ளனர். என் கட்டுரையின் ஒரே ஒரு கருதுகோளை எடுத்து முழுக் கட்டுரையாகவும், முழு நூலாகவும் விரிவுபடுத்திக் கொண்டவர்கள்கூட ஒரு கருணை அடிப்படையில்கூட எனது பெயரைக் குறிப்பிடாமல் சாதனைகளைப் படைத்துள்ளனர். இதற்கான காரணத்தைப் புரிந்து கொள்ள  முடியாமல் நான் நீண்ட காலம் குழம்பியிருக்கிறேன். பின்பு அதனைத் தோழர்கள் சிலர் சிறுகச்சிறுக விளக்கியுள்ளனர்.

முதல் கட்டத்தில் என்னைப் பெயர் மறைப்பு செய்தவர்கள் அதற்கு முன்பே எழுதி அறிஞர்களாகத் தம்மை அடையாளப்படுத்திக் கொண்டவர்கள், வயதிலும் வசதியிலும் என்னைவிடப் பெரியவர்கள், பேராசிரியர்கள், பேச்சாளர்கள். அவர்கள் என் எழுத்து மற்றும் பேச்சின் வழி தம் அடிப்படைகளை மாற்றிக் கொள்ள வேண்டி வரும் போது உள்ளூடான ஒரு கசப்புணர்வை அடைய நேர்ந்திருக்கிறது. இந்தச் சின்னப் பையன் நம் அடிப்படைகளை எப்படி கேள்விக்குள்ளாக்க முடிகிறது என அவர்கள் சீற்றம் அடைந்து, பின் என்னதான் சொல்கிறான் பார்க்கலாம் என உரையாடலைத் தொடர்கின்றனர். புதியவற்றைப் படிக்கவும் அதற்கேற்ப தம் எழுத்து சிந்தனை முறைகளை மாற்றிக் கொள்ளவும் தேவை ஏற்படுகிறது.  ஏற்கனவே எழுத்தின் வழி தம்மை ஓரளவு நிருவிக் கொண்டுள்ள அவர்களுக்கு அந்த மாற்றம் தானாகத் தம் உழைப்பால் உருவானதாக பதிவு செய்து கொள்வது வசதியாக இருப்பதுடன் என் இருப்பு ஒரு தொந்தரவாகவும் மாறுகிறது.  என் பெயரையோ, கட்டுரையையோ  குறிப்பிட்டால் தம் “வினையின் நீங்கிய விளங்கிய அறிவின்”  பெருமைக்குப் பங்கம் என்று உணர்ந்து  என்னை தொலைதூரத்திற்கு நகர்த்தி வைக்க முயற்சிக்கிறார்கள். இதுவரை எழுதியதெல்லாம் பழசா இருக்கு… இப்ப என்ன எழுதறது… எப்படி எழுதுறது என்று தெரியல என வருத்தப்பட்ட அன்றைய நண்பர் ரவிக்குமார், நான் சொல்லச் சொல்ல எழுதி சில கட்டுரைகளை வெளியிட்டுத் தன் இரண்டாம் கட்ட எழுத்தைத் தொடங்கிய பின் ஒரு கூட்டத்தில் கேட்டார் “எந்த பிரேம்… அப்படியாரையும் எனக்கு ஞாபகம் இல்லையே…”. நல்லது அவருக்குத் தெரிந்த பிரேமாக நான் அதிககாலம் இருக்க முடியாதுதான்.

அடுத்து நேர்ந்த ஒரு அழித்தொழிப்புக் காலகட்டம் இப்படித் தொடங்கியது. அதுவரை தீவிர இலக்கியம் என்ற பெயரில் இயங்கியும், இயங்காமலும் தம்மைப் பெரும் சிந்தனையாளர்கள் என்று நிறுவிக் கொண்டவர்கள் ஆன்டிகம்யூனிசம், ஆன்மிகம், உள்ளொளி, தரிசனம், வாழ்வின் இருண்ட ஆழம், அறிந்தினின்றும் விடுதலை, அறியாதவர்களே பெருந்தலை எனப் பேசி அரசியல் மறுப்பு செய்தவர்கள். மார்க்சியத்தை, புரட்சிகர உளவியலை படைப்புக்கும் இலக்கியத்தன்மைக்கும் எதிரானவை என்று ஒரு புரளியைக் கிளப்பிவிட்டு “வரலாறு முக்கியம் அமைச்சரே” என்று வரைபடங்களை உருவாக்கிக் கொண்டிருந்தனர். அரசியல் மறுப்பே மேல் நோக்கிய பயணம் மற்றதெல்லாம் கீழ் நோக்கிய பயணம் என்று கேளி பேசிக் கொண்டிருந்தனர். அந்த நிலையில் புரட்சிகர உளவியல், நுண் அரசியல், மார்க்சிய உளவியல்புடன் கூடிய மாற்று அடையாடம் என்பதுடன் கவிதையின் நுண்மொழியும் இணைந்த எனது எழுத்தும் செயல்பாடும் அவர்களின் தளத்தைத் தகர்ப்பதாக இருந்தது. பெயர் மறைப்பும் உருத்திரிப்பும் தொடர்கதையானது…

இடதுசாரிகளுக்கு எனது நுண் அரசியலும், பாலரசியலும் முகச்சுளிப்பை ஏற்படுத்தின, மொழி அடையாள அரசியல் பற்றாளர்களுக்கு எனது பெண்ணிய மொழி, விளிம்புநிலைக்கருத்தியல், தலித் அரசியல் என்பன சீற்றத்தை உருவாக்கின. லத்தீன் அமெரிக்க இலக்கியத்தை என்னுடன் பேசிக் களித்த நண்பர்களுக்கு எனது வைதீக-பிராமண மறுப்பு நகக்கண்ணில் ஊசியாகக் குடைந்தன.  பின் நவீனத்துவம் பேசி பிறவியைத் தேற்றலாம் என்று என்னுடன் தொடர்பு கொண்ட நண்பர்களை என் களச்செயல்பாட்டு சார்பு நிலையும், அம்பேத்கர்-அயோத்திதாசர் பற்றும் தொற்று நோய் கொண்டவனிடம் இருந்து தப்பிப்பது போல பதுங்கச்  செய்தன. கலக இலக்கியம் என்ற பெயரில் தம் மனைவிகளின் கடிதங்களைக் கூட்டிக் குறைத்துக் கதை எழுதி அவர்களை அவமதிக்க நினைவுடன் என்னிடம் முன்னுரை கேட்டவர்கள் எனது பெண்ணிய வாசிப்பைப் பிற்போக்குத்தனம் என்று பிய்த்து எரிந்தனர்.

என் புனைகதைகளைப் படித்த நட்பார்ந்த களச் செயல்பாட்டாளர்களோ “பிரேம் நாலு முறை படிச்சும் எனக்கே ஒன்றும் விளங்கல, அரசியல் எழுதுறீங்க மக்களுக்குப் போய்ச்சேரணுமில்ல” என்று வருத்தப்பட்டனர். என் புனைகதைகளை வாரம் ஒருமுறை படித்துப் பார்த்து வியப்பு கொள்ளும் பாசத்திற்குரிய சில நண்பர்கள் “இந்த அரசியல், பெண்ணியம், தலித் ஆய்வு எல்லாவற்றையும் மறந்துவிட்டு மாதம் ஒரு கதையை மட்டும் எழுதுங்க பிரேம், கதையா அதெல்லாம் ஒவ்வொன்னும் ஒரு வகைமாதிரி இல்லையா?” என்ற ஆதங்கப்படுகின்றனர். என் சாதியை வைத்து பெருமை கொண்டாட விரும்பும் நண்பர்கள் சிலர் “என்னங்க பிரேம் நீங்க செஞ்சிருக்கிறது எவ்வளவு பெரிய வேல, நீங்க சரின்னு சொல்லுங்க உலக அளவுல உங்களக் கொண்டு போறோம்…” என உணர்ச்சி வசப்படுவதுண்டு.  என் எழுத்தின் அடிப்படையே சுயசாதி மறுப்பு என்பதை புரிந்து கொண்டால் உலக அளவுக்குக் கொண்டு போவதாகச் சொல்லும் அவர்கள் என்னை உலகத்துக்கு வெளியே கொண்டு போவார்களோ என்னவோ!

நான் மிக மதிக்கும் எம் அரசியல் தலைவர் தோழர். தொல். திருமாவளவன் என் நூல்களில் ஒன்றைப் படித்துக்கொண்டிருக்கும் போது  ஒரு முறை சொன்னார் “நான் எழுதுவதையே தோழர்கள் புரியவில்லை என்று சொல்லி வருத்தப்படுகிறார்கள் தோழர். நீங்கள் எழுதுவதை அவர்கள் எப்போது படித்துப் புரிந்து கொள்வது… நிறைய படித்த பின்தான் இதற்குள் வரமுடியும் இல்லையா… கடினமான உழைப்புதான்…” நான் அவருக்கு ஒரு உறுதிமொழி அளித்திருக்கிறேன் “தலித் அரசியல், சூழலியல் அரசியல் பற்றுள்ள ஒவ்வொருவரும் கட்டினமின்றிப் புரிந்துகொள்ளும் படி நான் சில நூல்களை எழுதுவேன், சில காலம் ஆகும்”.

எவை எப்படியிருந்த போதும் இலக்கியம், எழுத்து என்ற தளத்தில் நான் முன்வைத்த, எழுதி, பேசி வந்த இனவரைவியல் கதையாடல்,  சிறுமரபுக்கதையாடல், தொன்மக் கவிதையியல், சிதைவுறும் சொல்லாடல், பாலினக் கலப்பு மொழி என்பவை இன்று தமிழில் பலரால் கையாளப்படும் எழுத்து முறைகளாக உள்ளன, இது நிகழ்வியல் உண்மை.  இவற்றை மாற்றம், வளர்ச்சி என்ற தளத்தில் பார்க்காமல் இன்றைக்கான அரசியல்-அழகியல் தேவைகளை அவை எந்த வகையில் நிறைவேற்றுகின்றன என்றுதான் பார்க்க வேண்டும்.

எழுத்து கொண்டாட்டமாக அமைய வேண்டும் என்று ஒரு கும்பல் உருவாகி தமிழினப்படுகொலை பற்றி நகைச்சுவை துணுக்குகள் எழுதும் அளவுக்கு வலிமையடைந்துள்ளனர். ஆன்மிகமே இலக்கியம் என்று ஒரு பெருங்கூட்டம் வார வழிபாட்டு மன்றங்களை உருவாக்கி வியாசவியாபாரம் செய்து  பெருமிதமடைந்து கொண்டுள்ளது. அன்பைத் தேடும் நெடும்பயணம்தான்  எனது எழுத்து என அறிவுமறுப்பை பெருமிதமாக அறிவித்துச் செயல்படும் ஒருவரும் அவரது தொண்டர்களும் ஒருபுறம். பன்மை வடிவங்களின் பெருக்கம்தான் இது… பாலகுமாரனின் முன்று முகங்கள் இன்று தமிழ் இலக்கியத்தின் முப்பெரும் தேவர்களாக தனித்தனி அவதாரம் பெற்று மூன்று மடங்களைத் தொடங்கியுள்ளன… விளிம்புநிலைச் சமூகம் ஒன்றின் ஆன்மா நானே என அறிவித்துக் கொண்ட ஒரு எழுத்தாளர் சாகித்ய அகாடமி விருது பெறுவதற்காக இனத்துடைத்தழிப்பு அரசியல் அதிகாரத்தை கைகொண்டுள்ள ஒரு கட்சியைக் குறிப்பிட்டு அதுதான் இனி இந்தியாவைக் காக்கமுடியும் என்று  அறிவிக்கிறார். நாங்களே தூய பின்நவீனத்துவாதிகள் என்று அடையாளப்படுத்திக்கொண்ட சிலர் புலிகளை அழிப்பதற்கான புகழ்மிகு போரில் மாண்ட சிங்கள ராணவத்தினரின் தியாகத்தின் நினைவாகத்தான்   மாவீரர் தினம் கொண்டாடப்பட வேண்டும் என்று கலகச் சொல்லாடலைக் கட்டமைத்துக் கொண்டுள்ளனர்… ஊடகப்பெருக்கம் உடலைக் கிழித்துக் கொண்டு பாய்ந்து கொண்டுள்ள நிலையில் இன்று எழுத்து, இலக்கியம்  செய்ய வேண்டியது என்ன…

தற்பொழுது எழுத வரும் ஒருவர் இந்த அழிவரசியல் பெருக்கத்திலிருந்து தன்னை வெளியே வைத்துக் கொள்ள கடினமான பயிற்சி தேவைப்படுகிறது… அரசியல் நீக்கம் செய்யப்பட்ட இந்த எழுத்துக்களை, இவை உருவாக்கும் சமூக உளவியலை அரசியல் செறிந்த கதையாடல்களால்தான்  எதிர்க்க முடியும். தற்காலத்தின் உடனடித் தேவை இதுதான்…

உரையாடல்: 2 : 1

படைப்பாளி என்ற முரண் அடையாளம் – பிரேம்

உரையாடல்:1 படைப்பாளி என்ற முரண் அடையாளம்

 

கேள்வி

தமிழ்ச்  சூழலில்  மார்க்ஸிய, பெண்ணிய, தலித்திய, நோக்கில் செயல்படும் அறிவுலவாதிகள் வெகு சிலரில் குறிப்பிடத் தக்கவராகவும், நவீன பின்நவீன, இலக்கியப் படைப்பாளியாகவும் இயங்கி வரும் நீங்கள் உங்களை எவ்வாறு முதன்மையாக அடையாளப்படுத்த  விரும்புகிறீர்கள்?

எழுத்துலகிற்கு வந்த தொடக்க காலத்திலிருந்து உங்கள் அடையாள நோக்கில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்துக் கூறுங்கள்.  

[ ராஜகாந்தன், அசோக்ராஜ், கருணாகரன்]

பதில்

பிரேம்

படைப்பாளி என்ற முரண் அடையாளம்:

நவீன, பின்நவீன இலக்கியப் படைப்பாளி எனக் குறிப்பிடுவதற்கு அரைமனதுடன் தான் நான் நன்றி சொல்ல முடியும். ஏனென்றால் அப்படிக் குறிப்பிடுவதன் மூலமே படைப்பாளி எனக் குறிப்பிட்டு அடையாளப் படுத்திக்கொண்டு ஒரு பண்பாட்டு  முதன்மைப் பாத்திரத்தை எடுத்துக்கொள்வதிலிருந்து என்னைத் தடுத்து விடுகிறீர்கள். நல்லது, ஒரு முன் நவீன- எதிர் நவீன படைப்பாளியாக நான் இருந்திருந்தால்  கதைப்பேரரசு, காவியப் பாவலன், கருத்துக் காவலன் என்று ஏதாவது ஒரு மொழிமுடி சூட்டிக் கொண்டு உங்கள் முன் நான் பேசமுடியும்.     எழுதுதல், அதற்காகச் சிந்தித்தல், முன்புள்ள பல்வேறு எழுத்துக்களில் இருந்து அடுத்து ஒரு  எழுத்தை  உருவாக்க முனைதல், முன்புள்ள  எழுத்துக்களுக்குள் அது முழுமையாக மறைந்து போகாமல் இருக்க அதன் வடிவத்தைத்  திருகுதல் என்பது ஒரு தொழில் நுட்ப பாத்திரம்தான் என்பதை நம்பும் ஒரு எழுத்துக்காரன் என்ற வகையில் அச்சியந்திரம் உருவாக்கிய ஒரு படலம் போல நான் உணர்கிறேன்.  நவீன-பின்நவீன படைப்பாளியாக இருக்கிறேன் என்பதை விட நவீன-பின்நவீன நிலையில்  படைப்பாளியாக இருப்பது என்ற முரண் அடையாளத்தைத் தமிழில் நான் நிகழ்த்திக் காட்டிக்கொண்டிருக்கிறேன்.  

இலக்கியவாதி, படைப்பாளி, இலக்கியக் கர்த்தா, கவிஞன் என்னும் அடையாளங்கள் தொன்மையான  அறிதல் முறையால் உருவானவை. அவற்றின் பொருள் இன்று நவீன-பின்நவீன நிலையில் முற்றிலும் வேறு என்று அறிந்து கொண்ட பின் எழுதுதல் என்பதை வாழ்வு, இருப்பு இரண்டுக்குமான செயலடையாளமாகத் தேர்ந்தெடுத்துக்கொண்ட நான் தமிழில் எழுதும் எழுத்துக்கலைஞனாகவே ஒவ்வொருநிலையிலும்  செயல்பட இயலும்.

ஒரு இசைக்கலைஞனாவது பற்றிய கனவு எனது பிள்ளைப் பருவம் முதல் இருந்துவரும் ஒன்று, ஆனால் அது ஒரு கனவு மட்டுமே. இன்றும் கூட எனது கனவுகளில் விதவிதமான, வினோதமான இசைக்கருவிகளை வாசிப்பவனாக, பெரும் இசைக்கோலங்களைப் புனைந்து எழுதுபவனாக நான் உருவம் பெருவதுண்டு. எனது கனவுகள் ஒவ்வொன்றும் இசையுடன் அமைந்த திரைப்படம்போல இருந்து பல நேரங்களில் என்னைக் கூச்சமடைய வைப்பதுண்டு. கனவில் கூட நான் ஒரு போதும் பாடுகிறவானாக உருவமடைந்ததில்லை. இதனைச் சொல்வதற்கான காரணம் எனது அடையாளம் ஒருவகைப்பட்டதில்லை என்பதை விளக்குவதற்காகத்தான். இசையை இழந்து எழுத்துக்கு வந்தவன்தான் நீ என்று பலநேரங்களில் என் காதோரம் ஒருகுரல் ஒலிப்பதைக் கேட்டிருக்கிறேன்.  ஆனால் எனது இயல்பு, எனது பயிற்சி, எனது திறனென அனைத்தும் எழுத்து வடிவாக அமைந்து  விட்டபின் நான் கவிதையைத் தேர்ந்தெடுத்தேன், அதற்குக் காரணம் மரபான கூட்டு நினைவிலியும் நினைவும்தான்.

மொழி, எழுத்து, பேச்சு என்பன கவிதைவழியாகச் சமயத் தன்மை கொண்ட போதையூட்டும் தன்மையை அடைகின்றன. கவிதை என்பது குடிமரபு, குலமரபுச் சமூகங்களில் மந்திரம், சடங்கு, வழிபாடு என்பவற்றுடன் உறவுடைய பூசகத்தன்மை வாய்ந்த ஒரு நிகழ்வு. கூட்டுச் சமூகங்கள், நவீனச் சமூகங்களிலும்கூட கவிதைகள் சமய, மத, சடங்குத் தன்மையுடன் இயங்கும். கவிதையைத் தேர்ந்தெடுக்கும் ஒரு தனிமனிதர் சடங்குத் தன்மையின், கூட்டுப் போதைத்தன்மையின் கவர்ச்சியினூடாக இழுத்துச் செல்லப்படுகிறார். ஒரு குலமரபின் பூசகர், குறிகாரர், மயக்கமூட்டும் நிகழ்த்துக் கலைஞர் போன்ற ஒரு தன்னடையாளத்தை எடுத்துக் கொள்கிறார்.

நவீன அமைப்பின் எந்திரவியல் ஊடுருவிய, கலப்புத் தமிழ் மரபு கொண்ட சமூகம் ஒன்றில் பிறக்க நேர்ந்து, எதிர்காலம் பற்றிய பாதுகாப்பின்மையின் அச்சத்துடன் வளர நேர்ந்த ஒரு சிறுவனாக இருந்த எனக்கும் அந்த நிலைமாற்றத் தன்னடையாளம் விருப்பமுடையதாக இருந்தது. எளிய, ஒதுக்கப்பட்ட ஒரு அடையாளத்திலிருந்து வெளியேறும் முயற்சியில் கவிதை என் முதல் தன்னுருவாக்கச் செயல்பாடாக இருந்தது.

“மறையா அழகே, மறையின் பொருளே குறையா ஒளியே  குறைதீர்த்தீர்த்தருளே”  என்பது போன்ற உருக்கமான பக்திப் பாடல்களை எழுதுவதில் தொடங்கி “நீ ஒரு காவியம் உன் விழிகளோ பாவிகம்” என்பது போன்ற நாடகப்பாடல்கள் வழி நான் உருமாற்றமடைந்திருக்கிறேன். ஆனால் அது ஒரு தொடக்கம் மட்டுமே.

கவிதை எல்லாம் கலந்த ஒரு அடையாளச் செயல்பாடு என்ற வகையில்  மிகச் சிறுவயதில் அது என்னை அரசியல் செயல்பாட்டை நோக்கி இழுத்துச் சென்றது. சாதி, குடும்பம், மரபு என்பவற்றின் வன்முறைகளை, கட்சி அரசியலின் வன்மங்களை  நினைவு தெரிந்த நாளிலிருந்து அச்சத்துடன் கவனித்து வந்த எனக்கு  மாற்று அரசியல் மிக இயல்பாகப் பொருந்தியது. இரண்டு வயதிலிருந்து எழுத்துக்கூட்டி வாசிக்கப் பழக்கப்படுத்தப்பட்டவன் நான், வாசித்துக் காட்டுவதை வித்தைபோலச் செய்து காட்டவைத்து “இந்தக் குட்டிச்சாத்தன் இந்த வயசுல என்னமா படிக்குது பாருங்க” என்று புளகிப்பார் என் தாத்தா.  தினத்தந்தியை அர்த்தம் தெரியாமல் பெரியவர்கள் மத்தியில் உட்கார்ந்து வாசித்துச் சொல்வது, அக்கா, சித்தி, அத்தைமார்களுக்கு சினிமா பாட்டுப் புத்தகம் கதைவசனம் வாசித்துச் சொல்லி செல்லம் பெறுவது, பாலர் பள்ளியில் அக்கா சொல்லித்தரும் வசனங்களைத் தவறின்றி மேடையில் பேசிநடித்து குழந்தைக் கலைஞனாக் ககைதட்டலும் பரிசும் பெற்றதென நினைவாற்றலும் மொழியும் சார்ந்த ஒரு பழகுமுறை எனக்குள் படிந்து போனது. ஊரில் பெரியவர்களுக்காகப் படித்துக்காட்டிய செய்தித்தாள்கள் வழி தெரிந்து  கொள்ள வேண்டியவை, தெரிந்து கொள்ளக் கூடாதவை எனப் பலவற்றை வயதை மீறி நினைவுகள் பதிவு செய்து கொண்டிருந்தன. அண்ணாதுரை மறைவு, பாகிஸ்தானுடன்போர், வியட்நாம் யுத்தம், தந்தை பெரியாரின் நெருப்பு மிதிக்கும் பிரச்சாரம் என ஏதேதோ என் மூளைக்குள் பதிவாகிப் பயமுறுத்திய போதும் வாசிப்புப் பழக்கம் எனக்கு மயக்கமும் லயமும் தருவாதாக மாறியிருந்தது.

தாத்தாவின் மளிகைக்கடையில் ஒவ்வொரு முறை வந்து சேரும் பழைய புத்தகக் கட்டுகளைப் பிரித்து அடுக்கி பிடித்த புத்தகங்களைப் பதுக்கி வைப்பதும்,  அடுத்த கட்டு வந்து சேரும் வெள்ளிக்கிழமைகளுக்காக பெரும் கிளர்ச்சியுடன் காத்திருப்பதும், பின் நானே கடையில் வேலை செய்த அண்ணன்மாருடன் சென்று புத்தகங்களை வாங்கி வருவதும் இன்பம்சார் உளவியலில் விளக்கமுடியாத பகுதிகள். அணில் அண்ணா, அம்புலிமாமாவில் தொடங்கிய படிப்புநோய் கலைக்களைஞ்சியம், சோவியத் நாடு, யுனஸ்கோ கூரியர் என வண்ணமும் எழுத்தும் கலந்த உலகைத் தேடியலைந்தது. கல்கி, அகிலன், ந.பார்த்தசாரதி, ஜெயகாந்தன், மர்க்சிம் கார்க்கி என தாவிச் சென்று மாஸ்கோ முன்னேற்றப்பதிப்பகத்தின் வாசலை அடைந்த பொழுது எனக்கு 11-12 வயதுதான். உலக அரசியல் பற்றிப் பேசுவதில் தொடங்கி வாசிப்பு என்னை எழுத்து, விவாதம் என இழுத்துச் சென்றது.

 சக்தி (வாலை) வழிபாடு கைவந்த ஒரு சித்த மருத்துவனாக என்னை உருவாக்கி விடவேண்டும் என்று விரும்பிய என் தாய்வழிப் பாட்டனார் பழக்கிய வாசிப்பும், மனப்பாடமும் தேவாரம், திருவாசகம், அருணகிரிநாதர், வள்ளலார், சித்தர் பாடல்கள், பாரதக்கதைகளைத் தாண்டியபோது அரசியல் உரையாடல்களுக்குள் என்னை மிக இலகுவாக இயங்க வைத்தது. பன்னிரண்டு வயதில் (1977 வாக்கில்) சில மூத்த தமிழ் இனப் பற்றாளர்களுடன்  இணைந்து சுவர் எழுத்து எழுதியதற்காக காவல்துறையைச் சேர்ந்த இருவர் என்னைப் பள்ளித் தலைமை ஆசிரியர் அறையில் வைத்து எச்சரித்து மிரட்டிப் “போராளியாக” மாற்றிய நிகழ்வை நண்பர்கள் நடத்திய ஒரு நாடகத்தில் இடைச்செருகலாகச் சேர்த்திருக்கிறேன்.

பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டிகளில் எராளமான பரிசுகளைக் குவித்திருக்கிறேன்.   நெற்றியில் திருநீறும் சந்தனப்பொட்டும் பளிச்சிட மேடையில் மழலைப் பேச்சாளனாக “கடவுள் என்பது பொய் கல்வி அறிவே மெய்”  என்ற தலைப்பில் பேசி முடிவில் “எனது நெற்றியில் உள்ள திருநீறு பெரியவர்கள் கட்டாயத்தால் அணிந்திருப்பது, அதுவும் இன்னும் சில நாட்களுக்கு” என்ற உருக்கமான பின்குறிப்பால் சிலரைக் கண் கலங்க வைத்திருக்கிறேன். சில ஆண்டுகள் மேடைகளில் புரட்சிக் கவிதைகளின் புயலாய் வீசியிருக்கிறேன், இன்றைய இளம் சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை அமைப்பாளர் நண்பர் பொதினிவளவன் என்னைத் தன் பாசத்திற்குரிய நண்பனாக பார்க்கத் தொடங்கியது அந்தக் கவிதைகளின் காலத்தில்தான், அவரும் என்னைப் போல அன்று தினம் ஒரு கவிதை எழுதும் பழக்கமுடையவர். என் கவிதைகள் கையெழுத்துப் படியாகவே பலரின் வியப்புணர்வாக படிந்திருந்தது.   இவை எல்லாம் எனது பிள்ளை விளையாட்டுகள் மட்டும் அல்ல அரசியல் உருவாக்கத்திற்கான போராட்டங்கள்.

எனது ஒவ்வொரு நகர்விலும் மாற்றத்திலும் எதிர்ப்பை, ஒதுக்குதலை, வெறுப்பைச் சந்தித்து வெளியேறிக் கொண்டே இருந்திருக்கிறேன். கடவுள்,  சாதி, வர்க்க ஒடுக்குதல், ஆணதிகாரம் என்பவற்றை மறுப்பதும் எதிர்ப்பதும் தின  வாழ்வில் தொடர் தண்டனையை பெற்றுத் தரும் என்பது மாற்று அரசியல், விடுதலை அரசியல் பழகிய அனைவருக்கும் தெரிந்த நடப்பியல் உண்மை. இதனைச் சொல்லும் இன்று இந்த தண்டனைகளை ஏற்று அதுதான் எனது மாற்று இருப்பு என வாழ்வதுதான் எனது அடையாளம்.

இந்த இடத்தில்… நான் சொல்ல வருவது புரியும் என்று நினைக்கிறேன். எழுத்தை, சிந்தனையை  வாழ்வியலாகக் கொண்ட மாற்று அரசியல் செயல்பாட்டாளன் என்பதுதான் எனது எளிய அடையாளம்.

தமிழின் “எழுத்துலகம்” அல்லது இலக்கியக் களம் என்பதற்குள் வருவது என்றால்… எனது  எழுத்துக்கள் பதிப்பிக்கப்படுவது, அவை சிலரால்  படிக்கப்படுவது, சிலரால் அவை விவாதிக்கப்படுவது, பலரால் தாக்குதலுக்கு உள்ளாவது, ஒரு எழுத்தாளனாக நான் அறியப்படுவது என்ற சில படிநிலைகள் இதில் உண்டு. எனது எழுத்துக்கள் அச்சானது ஒரு திட்டமிடப்பட்ட விபத்து, வேறு சிலரின் திட்டமிடுதலால் நான் எதிர்கொண்ட விபத்து.  நானாக எனது எழுத்துக்களை வெளியிடுவதாக இருந்திருந்தால் சில ஆண்டுகள் கழித்து வேறு ஒரு  நெடும் படைப்பு வழி வெளிவந்திருப்பேன். சிலவற்றை  எழுதுவது சில மாதங்கள் வைத்திருந்து அவற்றை எரித்து விடுவது என்ற ஒரு பழக்கம் எனக்கு இருந்து வந்தது. இதற்கிடையில் சிலர் அவற்றைப் படிப்பதும் உண்டு.

அப்படி ஒரு முறை எனது சில நெடுங்கவிதைகளைப் (எதிர்க்கவிதை) படித்த எனது அன்றைய நண்பர் முனியாண்டி தன் வாழ்வின் புனிதப் பணியாகக் கொண்டு அவற்றை அச்சாக்கும் முயற்சியை மேற்கொண்டார். அவர் அப்போது சிறுபத்திரிகைகள், இலக்கிய பத்திரிகைகள் என்று அறியப்பட்ட வட்டத்தில் தன் வசைக் கடிதங்கள் மூலம் வெறுக்கப்பட்ட ஒருவராக, சிலரால் ஒதுக்கப்பட்ட ஒருவராக இருந்தார். புதுச்சேரியில் பணியிட மாற்றம், நீண்டகால விடுப்பு, அச்சகம் தொடங்கும் முயற்சி இவற்றிற்கிடையில் தமிழ் இலக்கிய உலகின் பழமைவாதத்தை, பிற்போக்குத்தனத்தை எதிர்க்கவும்  பிற்போக்கு-முற்போக்கு இரண்டின் மரபுத்திமிரை ஒடுக்கவும் ஒரு பத்திரிகை வேண்டும், தன்னை ஒதுக்கிய அனைவரையும் அதிர்ச்சியடைய வைக்கும் எழுத்துக்களை அதில் வெளியிட வேண்டும் என்றெல்லாம் இரவு பகலாக என்னுடன் இணைந்து திட்டமிட்ட அவர் எனது எழுத்தில் இடம்பெறும் “கிரணம்” என்ற பத்திரிகை ஒன்றின் பெயரையே வைத்து பத்திரிகையைத் தொடங்கினார். அது பத்திரிகை அல்ல பத்திரிகை வடிவில் வந்த எனது நெடுங்கவிதைகள். நான்கு வெளியீடுகள் வந்தன. 1983 முதல் 1986 வரை எழுதப்பட்ட நெடுங்கவிதைகள். 18 வயது முதல் 21 வயது வரை எழுதப்பட்ட எனது நெடுங்கவிதைகளில் நான் எரித்தவை போக மிஞ்சியவற்றில் சில படைப்புகள் அதில் வெளிவந்தன. முன்னாள் நண்பர் முனியாண்டி தன் வாழ்வில் செய்த மிகப்பெரிய தவறுகளில் ஒன்று என்று அதனைக் குறிப்பிடுவதாகப் பின் நண்பர் ஆபிதீன் வழி அறிந்தேன். அவர் தவறு செய்வதை பெருமையுடன் சொல்லிக்கொள்ளும் பழக்கம் உடையவர். நான் செய்த பெரிய தவறுகளில் ஒன்று எனது எழுத்துக்களை அவரிடம் தந்தது என்று நானும் கூறலாம், தவறுகள் வழிதானே கற்கிறோம். ஆனால் அப்போது நான் அவருக்கு ஒரு கருத்தியல் போராளி. அவரிடம் வாதம், விவாதம் என யார் வந்தாலும் “வாங்கய்யா பிரேம் கிட்ட பேசி நீங்க செயிச்சா நான் உங்களுக்கு அடிமையா இருக்கேன்” எனச் சவால் விட்டுப் பல களங்களைக் கண்டவர் அவர். அதற்காக அவருடைய நூலகத்தை எனக்குத் திறந்து விட்டவர், ஒரு அச்சகம் தொடங்கி தமிழின் எழுத்து மரபையே மாற்றிவிடலாம் என்ற கனவுடன் என் சைக்கிளில் பின்னால் அமர்ந்து ஒரு ஆண்டு முழுக்க அலைந்தவர் அவர், பசிக்கும் பொழுது மாட்டுக்கறியும் இட்லியும் வாங்கித்தந்து இரவு பகல் பாராது பேசச் சொல்லிக் கேட்டவர். அவரிடம் எப்போதும் ஒரு குறிப்பேடு இருக்கும், சுருக்கெழுத்து அறிந்த அவரால் வேகமாகக் குறிப்பெடுக்கவும் முடியும். என் முன்னுரை இல்லாமல் தன் முதல் கதை நூல் வெளிவராது எனச் சொல்லிக் காத்திருந்தவர் இப்படி எத்தனையோ நிகழ்வுகள்… அரசியல் செயல்தேக்கமும் தோழர்களின் மறைவுகளும் என்னைக் குழப்பி அலைக்கழித்த நிலையில்தான் நான் அன்று “பிரேதா” என்ற பெயரில் அறியப்பட்டிருந்தேன். நான் அன்று மார்க்சியப் பற்றுள்ள (பற்று என்பது அனைத்துப் பொருளிலும்)  ஒரு சர்ரியலிச எதிர்க்கவிதையாளன், எதிர்க்கலாச்சாரம், பெண்ணியம் என்பவை எனது உளவியல்புகளாகப் படிந்து போயிருந்தன.

இந்தத் தளத்தில்தான் நான் நுண்ணரசியல், உடல்சார் அரசியல் பற்றிய இடையீடுகளுடன் எனது எழுத்துக்களை, விவாதங்களை முன்வைக்கத் தொடங்கினேன். “கிரணம்” பகுக்கப்பட்டு அது முன்வைத்த அரசியல்-அழகியல் இனி ஆய்வு செய்யப்பட வேண்டும் என்ற எண்ணத்துடன் “நிறப்பிரிகை” என்ற பெயரை ஒரு பத்திரிகைக்கு அளித்து குழுவாக இணைந்து செயல்படத் தொடங்கினேன். மாற்று அரசியல், விடுதலைக் கருத்தியல்கள் என நான் அடையாளப்படுத்தும் சிந்தனைத் தொகுப்புக்கான முயற்சிகளாகவே அவை இருந்தன. மாற்று அரசியலுக்கான குழுக்களுடன் தொடர்ந்த உரையாடலும், இயக்கம் கட்டுவதற்கான முயற்சிகளும் அவ்வப்பொழுது முடிவதும், தொடருவதுமாக இருந்து வருவது எனது எழுத்துக்களை அறிந்த யாருக்கும் தெரிந்த ஒன்று.

பெண்ணிய, தலித்திய, சூழலியல் அரசியல் என்பவற்றின் கூறுகளைப் புரிந்து ஏற்ற மாற்று அரசியல் தளத்தில் இயங்கக்கூடிய  மார்க்சிய அறிவுக்களத்தை பன்மை நவீனத்துவம் என நான் இன்று அடையாளப்படுத்துகிறேன். இதில் விளிம்பு நிலை அரசியல், இனவிடுதலை அரசியல், அடையாள அரசியல், மனித உரிமை அரசியல், என்பவை செயல் வடிவில் இணைந்துள்ளன. எழுத்து ஒரு நுண்ணரசியல் செயல்பாடாக மட்டுமின்றி அது அறிவுருவாக்க அரசியலாக, அரசியல் மையங்களையும், மையஅறிவுகளைகளையும் உடைக்கும் செயலாக உள்ளது என்ற பின்நவீனத்துவப் புரிதல் உள்ளதால் எனது எழுத்துக்களும், ஆய்வுகளும்  அரசியல் செயல்பாட்டின் பகுதிகள் என நம்புகிறேன்.

இதற்குப் பிறகும் நீங்கள் ஒரு வரியில் சொல்லச் சொன்னால் “அரசியல் செறிந்த புனைகதையாளன்” என்ற அடையாளம்தான் எனக்குள் மிக இயல்பாகவும், இலகுவாகவும் பதிவாகியுள்ளது.  

 உரையாடல்:1:1 

உரையாடல்: 1:2

(பொதினிவளவன் பகிர்ந்தது)

உரையாடல் -பிரேம்

 எழுதுபவரின் அரசியல்  

 எழுத்துக்களின் அரசியல்

எழுதப்பட வேண்டிய அரசியல்

 

எழுத்தாளர்  பிரேம் அவர்களுடன் ஒரு தொடர் உரையாடல்

WRITER PREM

 

[கேள்விகள்:  ராஜகாந்தன், அசோக்ராஜ், கருணாகரன்]

 

அறிமுகம்                                             

ராஜகாந்தன்

 

தமிழ்நாட்டில் வாழும்  தமிழ் மக்களை மட்டும் நாம்  கணக்கில்  கொண்டாலும் மக்கள்தொகை ஏழு கோடிக்கும் அதிகம். இது உலகிலுள்ள நூற்று எண்பது நாடுகளின் மக்கள் தொகையைக் காட்டிலும் அதிகம். ஃபிரான்ஸில் வசிக்கும் ஃப்ரெஞ்சுக்காரர்களை விடவும், இங்கிலாந்தில் வசிக்கும் ஆங்கிலேயர்களை விடவும், இத்தாலி மற்றும் தென்கொரிய நாடுகளின் குடிமக்களை விடவும் தமிழர்களின் எண்ணிக்கையானது அதிகம்.

இப்பெருந்திரளான மக்கள் அரசியல், சமூகம், பொருளாதாரம், பண்பாடு, வாழ்வியல் இன்ன பிற தளங்களில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ளவும், அவற்றை விளக்கவும், அது தொடர்பான உரையாடல்களைத் தொடர்ந்து நிகழ்த்தவும் அவற்றில் நிகழ வேண்டிய மாற்றங்கள் குறித்துச் சிந்திக்கவும் அவற்றை அறிவுத்தளத்தில் முன்னெடுக்கவும் தம்மை ஈடுபடுத்திக்கொண்ட  சீரிய, சார்பற்ற கடப்பாடுடைய அறிவுச் செயல்பாட்டாளர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் கணிசமாக இருக்கவேண்டும். ஆனால் நடப்புச் சூழலில் இப்படியான அறிவுத் தளத்தில் செயல்படுபவர்களின் எண்ணிக்கை தமிழில் ஆகக்  குறைந்த அளவே உள்ளதை நாம் அறிவோம். இது அளவு ரீதியான குறைபாடு, அத்துடன் தமிழ்ச் சமூகத்தின் அரசியல் பண்பை மிக அதிகமாகப் பாதிக்கும் குறைபாடு.

காலனிய காலத்தில் நாட்டின் விடுதலைக்கான போராட்டங்கள் நடந்தபோது  தேசிய  உணர்வு, தேச விடுதலை தொடர்பான கருத்தாக்கங்கள் முன்னிலை வகித்தன. சமூகக்கேடுகள் மற்றும் அவற்றிற்கெதிரான சீர்திருத்தங்கள் குறித்த தீவிர செயல்பாடுகள் அக்காலத்திய சிந்தனையாளர்களின் எண்ணங்களைக் கட்டமைத்தது, அதுவே அவர்களின் செயல்களுக்கான உந்து சக்தியாகவும் இருந்து வந்தது.

இந்திய விடுதலைக்குப் பின்னான பத்திருபது ஆண்டுகளில் விடுதலை தொடர்பான இலட்சியவாதக் கனவுகள் பொய்த்தப் பின், பொதுவுடைமைக் கருத்தாக்கமும், மொழி, இனம் சார்ந்த தன்னுணர்வுகளும் அக்காலத்தியச் சிந்தனாவாதிகளை ஆக்கிரமித்ததாகக் கொள்ளலாம். இதனைத் தொடர்ந்து நிகழ்ந்த களப்போராட்டங்கள் கடுமையான ஒடுக்குதல்களுக்கு உள்ளான பிறகு அச்சிந்தனைகளைத் தொடர்ந்து  முன்னெடுப்பதில் ஒரு சோர்வு ஏற்பட்டிருந்தாலும் முழுமையாக அணைக்க முடியாத நெருப்பு போல சமூகச் செயல்பாடுகளின்  உந்து சக்தியாக, சமூக உணர்வுகளின் சல்லி வேர்களாக இருந்து வருகிறதெனலாம்.

தொண்ணூறுகளில் பொதுவுடமை நாடுகளில் அரசுகளின் வீழ்ச்சிக்குப் பின் பொதுவுடைமைச் சிந்தனைகள் வலுவிழந்து, உலக வர்த்தக மயமாக்கம் நிகழத் தொடங்கியது. அதற்குப்பின் உருவான கடுமையான ஏற்றத் தாழ்வுடன் கூடிய பொருளாதார வளர்ச்சியால் நுகர்வுக் கலாச்சாரமும், பொருள்குவிப்பு மனோபாவம் மக்களிடையே பெருகியது. அதன் தொடர்ச்சியாக சமூக மதிப்பீடுகளின் பெரும் வீழ்ச்சியும் ஏற்பட்டது. அப்போதிலிருந்து சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளும் தத்தமது குழு சார்ந்த, சாதி சார்ந்த இருப்பை உறுதி செய்துகொள்ள முனைந்தன. அறிவார்ந்த செயல்பாடுகள் மதிப்பிழந்து விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டது போன்றதான ஒரு தோற்றம் தற்போது ஏற்பட்டுள்ளது. இது அறிவுச்செயல்பாட்டிற்கான சமூக இடம்மற்றும் அறிவுச் செயல்பாட்டின் இருப்பு சார்ந்த  சிக்கலாகவும் தோன்றுகிறது.

பெரும் பொருளாதார, அரசியல், ஊடகச் சக்திகள் தம் நுட்பமான கருத்தாடல்கள் மூலம் வெகுமக்கள் சிந்தனையை மழுங்கடித்து சுரண்டலுக்குத் துணை போகும் சமூக மனவியலை உருவாக்குவதைக் கண்டுணர்ந்து புலப்படுத்தி, மக்களின் சார்பாக நின்று அதிகார செயல்பாடுகளை கேள்விக்குள்ளாக்க வேண்டிய சிந்தனையாளர்கள் தற்போது ஏதாவதொரு அதிகாரம் சார்ந்த நிறுவனங்களோடு தொடர்புடையவர்களாக மாறியுள்ளதால் இத்தகையச் செயல்பாட்டில் ஒரு உள்ளார்ந்த  முரணியக்கம் ஏற்பட்டுள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை வெகுஜன ஊடகங்களைக் கடுமையாகச் சாடிவந்த தமிழ்ப் படைப்பாளிகள், அறிவுசார் செயல்பாட்டாளர்கள்  தற்போது அவற்றில் தமக்கு அங்கீகாரம் கிடைத்தவுடன் தங்களுடைய நிலைப்- பாடுகளையும் பெருமளவுக்குச் சமரசத்துக்கு           உட்படுத்திக் கொண்டதோடு மட்டுமல்லாமல் வெகு  மக்களை மூளைச்சலவை செய்யும் பெரு  நிறுவனங்களின் செயல்பாடுகளில்  பங்காளர்களாகவும் மாறியுள்ளனர்.   இது அறிவுசார் செயல்பாட்டாளர்களின் அரசியல் நிலைப்பாடு, நம்பகத்தன்மை போன்றவற்றில் ஏற்பட்டுள்ள மாபெரும் வீழ்ச்சியாக உள்ளது.

இப்பெரும் தமிழ்ச் சமூகத்தில் அறிவுக் கூர்மையுடையவர்கள்அறிவுத் தரகர்கள், அறிவுவியாபாரிகள், தொழில் நுட்பவாதிகள், பெரும் கலை யிலக்கிய படைப்பாளிகள், கேளிக்கை யாளர்கள் அனைவரும் ஆளும்வர்க்க நலன் சார்ந்தவர் களாகவே இருப்பார்களெனினும் இதற்கு மாறாக சமரசமற்றவர்  களாக, மக்கள்  சார்புள்ள அறிவுத்திறன் கொண்ட செயல்பாட்டாளர் களாக இயங்கும் சிலருக்கான இடம் உறுதி செய்யப்பட வேண்டியது அவசியமானது. இது தமிழ்ச் சமூகம் தன் இன்றைய வீழ்ச்சிகளிலிருந்து மீள்வதற்கும், உயிர்ப்புடன் கூடிய அறிவார்ந்த உரையாடல்களை உருவாக்கித் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கும்  முக்கிய  தேவையாக உள்ளது.

இன்று உருவாகியுள்ள கருத்தியல் சிக்கல்கள், ஊடக வன்முறைகள் பற்றி அரசியல் பின்புலத்தில் விளக்கம் பெற நாம் மாற்று அரசியல் இயக்கச் செயல்பாட்டாளர்கள் சிலரை அணுகலாம். அவர்கள் களச்செயல்பாடு சார்ந்த அனுபவங்களின் அடிப்படையில் சில விளக்கங்களைத் தருவார்கள். ஆனால் இன்று தமிழ்ச் சமூகத்தை அதிகம் பாதிக்கும் திரைப்படம், இலக்கியம், கலைகள், ஊடகவியல் சார்ந்தும்  கோட்பாடுகள் சார்ந்தும் விளக்க இயலாதவர்களாக உள்ளனர், இது வருத்தத்திற்குரிய நிலைஆனால் கோட்பாடுகளின் தேவை பற்றி, தமக்கு ஏற்பட்டுள்ள கருத்தியல் சிக்கல்கள் பற்றி இவர்கள் வெளிப்படையாக விவாதிக்காத வரை இன்றைய தேக்க நிலையை நாம் கடக்க இயலாது.

இலக்கியம், கலைகள், திரைப்படங்கள் பற்றி  எழுதித் தம்மை ஆளுமைகள் என நிருவிக்கொண்ட பலர் மக்கள் அரசியல், மக்கள் வரலாறு பற்றித் திட்டமிட்ட திரிபுகளைப் பரப்பி வருகின்றனர். இவர்களிடமிருந்து நாம் தமிழ்ச் சமூகத்தின் இன்றைக்கான அரசியல், கருத்தியல் சிக்கல்கள் பற்றித் தெரிந்து கொள்ள  முயற்சிப்பது பயனற்றது.   

படைப்பிலக்கியம் செய்யும் இலக்கியவாதிகளில் பலர் இலக்கியப் புனிதம் பேசுவதன் மூலம் எழுத்து அதிகாரத்தை நிறுவி பண்பாட்டு பெருமுதலாளித்துவத்தை பலப்படுத்துபவர்களாக  செயல்படுகின்றனர். விளிம்பு நிலையில் உள்ள அரசியல் இயக்கச்  செயல்பாடுகளில் தம்மை உறவுபடுத்திக் கொண்டவர்கள் கலை– இலக்கியம் என்பதெல்லாம் ஒன்றும் இல்லையென மறுப்பதன் மூலம் சமூக அறிவியலின் அடிப்படைகளை  மறைத்து  விடுகின்றர்.

இந்நிலையில் மக்களுக்கான சிந்தனைகளை, மாற்றுக் கருத்தியல்களைத் தமிழில் பேசும் குழுக்கள் தமக்குள் உரையாடல் இல்லாமல் தனித்தனியாகத் தம் கருத்துகளை முன்வைத்து வருகின்றனர். மார்க்சியம், தலித்தியம், அம்பேத்கரியம், பெரியாரியம், பெண்ணியம் பற்றி பேசுகிற பலர் ஒன்றை மற்றதிலிருந்து முரண்பட்டதாக விளக்கி வருவதால், அல்லது ஏதாவதொரு கருத்தியலை எல்லாவற்றுக்கும் தீர்வாக முன்வைப்பதால் புதிதாக அறிவுத் தளத்தில் இயங்க முன்வரும் தலைமுறையினர் தவறான குழப்பங்களுக்கு உள்ளாவதுடன் விரைவில் அரசியல் அற்ற எழுத்தாளார்களின், ஊடகம் வழிபடும்  பக்தர்களாக மாறிவிடுகின்றனர்.

இதிலிருந்து மாறுபட்டு நவீனத்துவம், பின்நவீனத்துவம் பற்றிய மிகவிரிவான உரையாடல்களை முன் வைப்பதுடன் தலித்தியம், பெண்ணியம், சுற்றுச்சூழல், அடையாள  அரசியல் சார்ந்த கருத்தியல்களின் தேவைகளை வலியுறுத்தி  மார்க்சியம்,  அம்பேத்கரியம், பெரியாரியம், காந்தியம் அனைத்திலும் உள்ள மக்கள் சார்ந்த மாற்றுச் சிந்தனைகளை அடையாளம் கண்டு இனியான மாற்றுக் கருத்தியல்களை நாம் உருவாக்க வேண்டும் என விளக்கி வரும் எழுத்தாளராக, சிந்தனையாளராக இயங்கி வரும் பிரேம் கடந்த முப்பதாண்டுகளில் உருவாக்கியுள்ள உரையாடல்கள், பிரச்சினைப்பாடுகள்   முக்கியத்துவம் பெறுகின்றன.

படைப்பாளியின் இடம் தனித்த இடம் இல்லை அது அரசியலின் ஒரு பகுதி, படைப்பாளி என்ற அடையாளத்தின் வழி அதிக சமூகத் தன்மை அடைகிறேன் என்றும் எழுத்தை நான் உருவாக்குகிறேன் என்பதை விட எழுத்து என்னை உருவாக்கித் தருகிறது என்றும் அறிவித்து இயங்கிவரும் பிரேம் அறிவார்ந்த, அரசியல் செறிந்த தளங்களில் தீவிரமாக செயல்பட்டுவரும் படைப்பாளி. அரசியல் இயக்கம், புனைவெழுத்து இரண்டிலும்  பன்மைத் தன்மை, மாறும் கட்டமைப்பு பற்றித் தொடர்ந்து வலியுறுத்தி வருபவர். இலக்கியம், அரசியல், கருத்தியல் என எந்த ஒரு தளத்திலும் மையவாதமும் பிம்ப உருவாக்கமும் வன்முறையென்று தொடர்ந்து விளக்கிவிளிம்புநிலைகளின் அரசியலை உரையாடலாக முன் வைத்துவரும் அவருடன் ஒரு உரையாடலை முன்வைக்கிறோம்.

நவீனத்துவம், பின்நவீனத்துவம் கடந்து தமிழில் பன்மை நவீனத்துவம் உருவாக வேண்டும் என்று எழுதி வரும் அவர் முன்வைக்கும் சமூக-தனிமனித அரசியல், அழகியல், அறவியல் பற்றிய பதில்கள் உங்கள் பங்களிப்புடனும் இடையீடுகளுடனும் உரையாடலாக, விவாதமாக விரிவடைய உள்ளது.  

(உரையாடலில் கருத்து பதிவு செய்யவும், கேள்விகளை அனுப்பவும் மின்னஞ்சல்: panmeyithazh@gmail.com)   

பன்மை நவீனத்துவம் நோக்கி: தமிழின் கோட்பாடுகளும் எழுத்துக்களும் – பிரேம்

தமிழில் கோட்பாடுகள் பற்றிய உரையாடல்கள், விவாதங்கள், ஒப்பீட்டு ஆய்வுகள் என்பவை நெடிய வரலாற்றைக் கொண்டவை. மெய்யியல் மரபுகளும், அறிவுருவாக்க மரபுகளும் இலக்கிய மரபுகளோடு இணைத்தே அறியப்படும் நிலையும் இலக்கிய ஆய்வுகள் என்பவை பலவகையான தத்துவ மரபுகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து மறு உறுதிசெய்வது என்ற நிலையும் தொடர்ந்து இருந்து வருகிறது.

அழகியல், கவிதையியல், அணியியல், காப்பியமரபுகள், இலக்கிய உருவாக்க மரபுகள் என்பவை  நேரடியாக ஒரு தத்துவ மரபைச் சுட்டித் தம்மை நிலைப்படுத்திக் கொள்வதும், ஒரு தத்துவ மரபு தனக்கான தர்க்கங்களையும் தரவுகளையும்  இலக்கியப் பாடங்களில் இருந்து பெற்றுக் கொள்வதும் இணையாக நிகழும் செயல்பாடுகள். இராமாயணம், மகாபாரதம் போன்ற பெருங்கதைமரபுகள் பண்பாடு, அரசியல், சமயச் சடங்குகள், நிகழ்கலைகள் என்பவற்றுக்குள் ஊடுருவி அமைந்திருப்பது போலவே இந்தியத் தத்துவ, மெய்காண்முறைகளின் களங்களாகவும் தொடர்ந்து இருந்துவருகின்றன. இதன் தொடர்ச்சியாக இந்திய தத்துவ மரபுகளும் காவிய-காப்பிய மரபுகளும் பிரிதறிய முடியாத அளவுக்குப் பின்னிப் பிணைந்து செயல்படுவதும் அமைகிறது.

தமிழின் காப்பிய மரபுகளும், பக்தி இலக்கிய மரபுகளும் தனித்தனியே தமக்கான கோட்பாட்டு, அறிவுருவாக்க செயல்பாடுகளைக் கொண்டுள்ளவை.  ‘இலக்கியம், தத்துவம், கோட்பாட்டு உருவாக்கம் என்பவை ஒரே தளத்தில் நிகழும் உள்ளிணைப்பு கொண்ட செயல்பாடுகளாக அமைவன’ என்பது ஒரு அடிப்படைப் புரிதல். தொன்மங்கள், சடங்குமுறைகள், இலக்கியச் சொல்லாடல்கள் அனைத்தும் வெவ்வேறு விகிதத்தில் இணைந்து சமூக நடத்தையியலை, சமூக உளவியலை, வாழ்வியல் விதிகளை உருவாக்கித் தருகின்றன. இந்திய மரபுகளில் வேதமையத் தன்மை கொண்ட மரபுகள், வேதமறுப்புத் தன்மை கொண்ட மரபுகள், தொல்குடி மரபுகள் இவற்றிற்கிடையில்  நிகழ்ந்த நெடிய போராட்டங்களை நாம் இலக்கியப் பிரதிகள் ஊடாகவும், தொன்ம உருவாக்கங்கள் ஊடாகவும் சான்றுகளுடன் அறிந்துகொள்ள முடிகிறது.

அறிவுருவாக்க மரபுகளுக்கிடையிலான நெடிய போராட்ட வரலாற்றின் தடயங்களாக இலக்கியப் படிகளை, பனுவல்களை வாசிக்க வேண்டிய தேவையை உணர்ந்து  கொள்ளும்  அதே   நிலையில்  புதிய கோட்பாடு ஒன்று உருவாகும்போது அதுவரையிலான இலக்கிய தொன்மச் சொல்லாடல்களை பொருள்படுத்துவதற்கான புதிய முறையியலும் அதனுடன் சேர்ந்து உருவாக வேண்டிய தேவை உள்ளது என்பதையும் நாம் புரிந்து கொள்கிறோம். அறிவுருவாக்க மரபின் (Epsitemologoy) மிக அடிப்படையான செயல்பாடாக அமைவது அறிவை பொருள்படுத்தும் முறையியல் அல்லது அறிவறிதல் நெறியியல் (Hermenutics), இந்த இரு செயல்பாடுகளின்  இணைப்பைக் கொண்டுள்ள இலக்கியச் செயல்பாடு அவ்வகையில் எப்போதும் கோட்பாட்டு உரையாடல்கள், ஊடாட்டங்கள், மற்றும் போராட்டங்களின் களமாக இருந்துவருகிறது.

தமிழின் நவீன இலக்கியச் சொல்லாடல்களும், செயல்பாடுகளும் மிகச் செறிவான கோட்பாட்டு முரண்களின் தொகுதியாக அமைந்ததுள்ளன. அதே சமயத்தில் தம் கோட்பாட்டு உருவாக்கத்தை மறைக்கும் உத்தியையும் கொண்டுள்ளன. அழகியல், கலைநுட்பம் என்ற இலக்கியக் குறியியல் செயல்பாடுகளையும் கதையாடல், கதைநிகழ்வு என்ற இலக்கியக் கட்டமைப்புச் செயல்பாடுகளையும் முன்களமாக மாற்றி கோட்பாட்டு-அரசியல் நீக்கம் செய்யப்பட்ட ஒரு  இலக்கிய அறிதல் முறை, இலக்கியப் பொருள்கோள் முறை நவீன இலக்கியத்  தளத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இது உண்மையில் ஒரு உள்ளீடற்ற தோற்ற  மாயையே தவிர நிகழ்வு மெய்மை அல்ல. நவீன இலக்கியம் முன்னெப்போதும்  இல்லாத அளவுக்கு அரசியல் அழுத்தமும் கோட்பாட்டாக்க முனைப்பும் கொண்டது. முரண்கள், மோதல்கள், போராட்டங்கள், மாறுபாடுகள், வேறுபாடுகள் என்பவற்றின் தெளிவான வெளிப்பாடுகளாக அமைந்தது நவீன இலக்கியம் என்ற தொகுப்பு.

உலகமயமான நவீனத்துவம் என்பதை முன் களமாக வைத்து இந்திய மொழிகள் தமக்கான நவீனத்துவத்தை உருவாக்கிக் கொண்டபோது அந்தந்த மொழியிலும் சில மேற்பரப்புகள் உருவாகி நவீனத்துவம், நவீன நிலை என்பதை பிரதிநிதித்துவம் செய்தன. அவை பின் அந்த மொழிகளின் நவீன வடிவங்களாக, நவீனத்துவத்தின் மையங்களாக மாறி பொதுநவீனத்தன்மைக்கான அடையாளங்களாகக் கட்டமைக்கப்பட்டன. தமிழில் இந்த நிகழ்வு  இந்துமையத் தேசியம், பிராமண மைய அடையாளம், பிராமண எதிர்ப்பு அடையாளம், முற்போக்கு தேசியம், முதலாளியத் தேசியம் போன்ற சில வடிவங்களில் நிகழ்ந்தன. இவை அறிவுருவாக்க, அரசியல் தளத்தில் அடிப்படையான முரண்பாடுகளை, வேறுபாடுகளைக் கொண்டவை. ஆனால் நவீனத் தேசியம் என்ற பொதுக்களத்தில் தமக்கான இடத்தை அவை உருவாக்கிக்  கொள்கின்றன. நவீன தமிழிலக்கிய- கோட்பாட்டுத் துறை  இவற்றிற்கிடையிலான மோதல்களையும் முரண்களையும் பொதுப் போக்குகளாக அனுமதித்து  தன்களத்தை உருவாக்கிக் கொண்டுள்ளது. தமிழின் நவீனத்துவம் முரண்களாலும் மோதல்களாலும் அமைந்தது, கருத்தியல் தளத்தில், கோட்பாட்டுத் தளத்தில் இவை மறைக்கப்படுவதன் மூலம் உருவாக்கப்பட்டதுதான் நம் காலத்திய பொது அடையாளங்கள் என்பதை உடைத்துக் காட்டிய நிகழ்வுதான் தமிழின் பின்நவீன அறிதல் முறையின் தொடக்கமாக அமைந்தது. தமிழின் பொதுநவீன உரையாடல் இதனை எதிர் கொண்ட விதம் மிகுந்த கவனத்திற்குரியது. தலித் இலக்கியம், பெண்ணிய இலக்கியம் என்ற இரு இயக்கப் போக்குகளை தமிழின் நவீனத்துவம்  தனித்து அடையாளப் படுத்தியதற்குக் காரணம் இவை இரண்டும் கோட்பாட்டு அடிப்படையில் மட்டுமின்றி அறிதல்முறை, மொழிபுமுறை, அறிவுருவாக்க முறை, வரலாறு மொழிதல் எனப் பல களங்களில் அடிப்படை மாற்றங்களை முன் வைப்பவை. சாதி, பாலரசியல் என்ற இரு தொன்மையான இந்தியச் சிக்கலை நவீனக் களத்தில் வைத்து ஆய்வு செய்வதன் வழியாக நம் காலத்தின் இந்த இருபெரும் மாற்று மரபுகளும் தமக்கேயான இருவகை அறிவுருவாக்க, அறிவறிதல் முறையியலை உருவாக்கித் தந்துள்ளன.

 பெண்ணியம், தலித்தியம் (ஒடுக்கப்பட்டோர் விடுதலையியல்) என்ற இரு மாற்றுச் சிந்தனைமுறைகளும் உலகியல், வாழ்வியல், உளவியல் தொடங்கி அரசியல் வரையிலான அனைத்து அறிவு மற்றும் செயல்களங்களிலும் தமக்கான மாறுபட்ட அணுகுமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளன. தமிழில் இவ்விரு சிந்தனைப் பள்ளிகளும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்த போதும் மிகமிகக் குறைவாகவே விவாதிக்கப்படுகின்றன. இவை பின்நவீனச் சூழலில் அமைந்த வெறும் கோட்பாட்டு உரையாடல்களாக மட்டும் இன்றி அடிப்படையான மாற்றத்தை முன்வைக்கும் அரசியல் இயக்கச் செயல்திட்டங்களாகவும் உள்ளதால் ஆண்மையத் தன்மை கொண்ட இலக்கிய, அறிவுத்துறையும் தீண்டாமைப் படிநிலையை மறுக்காத அழகியல் பார்வைகளும் இவை பற்றிய அமைதியை, உருமறைப்பை இயற்கையான ஒரு விளைவுபோல தம்போக்கில் கடந்து சென்று விடுகின்றன.

இந்த வகையான மறதி, மறைப்பு என்ற உருவழிக்கும் உத்திகளை  நாம் எவ்வாறு எதிர் கொள்வது. அம்பேத்கர் உருவாக்கித் தந்துள்ள சமூக-வரலாற்று-அரசியல் பார்வைகளை விரிவுபடுத்தித் தற்கால அரசியல்-பொருளாதார நிலைகளை ஆய்வுக்கு உள்ளாக்குவதுடன் நேரடியான அரசியல் செயல்பாடுகள் வழியாகத் தலித் அரசியல், தலித் விடுதலை கோட்பாடுகளை  செயல்பாடு கொண்ட அறிவுக்களமாக உருவாக்க இயலும்.  தலித் அரசியலை ஏற்பது என்பது  தலித் அல்லாத சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தம்மை  விடுதலைக் கருத்தியல் கொண்டவர்களாக உருவாக்கிக் கொள்வதற்கான அடிப்படைத் தேவை என்பதை ஏற்றுக்கொள்ளும் ஒருவருக்கு அது ஒரு கருத்தியல் நோய்நீக்கம் என்பதும் புரியவரும். அதாவது தலித் அரசியல் என்பது ஒடுக்கப்பட்ட சமூகத்தை விடுதலை செய்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசியல் சமத்துவத்தைப் பெறுவதற்கான அரசியல் மட்டுமல்ல இந்தியச் சமூகத்தை மனிதநிலை கொண்ட அறிவு-அறம் சார்ந்த சமூகமாக மாற்றியமைப்பதற்கான பலகட்ட செயல்திட்டம் என்பது பற்றிய புரிதல் இது.

இதே போன்ற நிலைமாற்றத் தன்மை கொண்ட ஒரு அரசியல் பெண்ணிய அரசியல். பெண்ணிய அறிவுருவாக்க மரபு உலக அளவில் மனிதநிலை பற்றிய சொல்லாடலையும் கருத்தமைவுகளையும் முழுமையாக மாற்றியமைத்துள்ளது.  ஆனால் தமிழில் பெண்ணிய உரையாடலும், பெண்ணியச் சொல்லாடல்களும் பெற்றுள்ள இடம் மிகமிகக் குறைவானது.  ஆண்மைய அறிவுருவாக்கம், ஆண்மைய பொருளுரைப்பு முறைகளின் அடிப்படைகளைத் தகர்ப்பதற்கான கருத்தியல் கருவிகள் தமிழில் தேவையான அளவுக்கு பயன்படுத்தப்படவில்லை என்பது இதற்கான காரணங்களில் ஒன்று. இதன் தொடர்ச்சியாக பன்மை அடையாள அரசியல், பசுமை அரசியல் போன்ற மாற்று அரசியல் கருத்தியல்களும் தமிழில் விளிம்பு நிலையில் குறுக்கப்பட்டுள்ளன. இவை பற்றிய உரையாடலை விரிவுபடுத்த இலக்கியம்-கோட்பாடு என்ற இரண்டு தளத்திலும் செறிவான, செயல்பாடு கொண்ட ஆய்வுகள் தேவை.

அயோத்திதாசரை மறைத்து பாரதி, புதுமைப்பித்தன் என்ற இருவரை நவீனத் தமிழின் ‘துன்பியல் நாயகர்களாக’ வைத்து உருவாக்கப்பட்டுள்ள நவீன இலக்கிய உரையாடல் கோட்பாட்டு மறைப்பின் உத்தியைக் கொண்டது. இதனைத் திட்டமிட்டு யார் செய்தது என்ற கேள்விக்கு இடமில்லை. இது ஒரு வரலாற்று நிகழ்வு, மையப்படுத்தப்பட்ட அறிவுருவாக்கத்தின் தொடர்ச்சி, சாதிவழிக் கருத்துருவத்தின் நவீன வடிவம். திராவிட-பிற்பட்டோர் அடையாள அரசியலும், அழகியலும் இதற்கு இணையாக அமைந்த மாற்றம் மறுக்கும் தீண்டாமையைத் திணிக்கும் வன்கொடுமைகளாக இறுக்கமடைந்துள்ள நிலையில் தமிழ் அடையாளம் என்பதன் கோட்பாட்டுச் சிக்கல்கள்  மேற்பரப்பிற்கு வந்துள்ளன. இந்த வரலாற்று மோதல்களைக் கோட்பாட்டாக்கம் செய்வதன் வழியாகத் தன்னை விளக்கிக் கொள்ள முனையும் தமிழின் நவீனத்துவ உரையாடல் இனி  பின்நவீனத்துவ, பன்மை நவீனத்துவ அறிவுருவாக்கத்தின் பகுதியாக மாறிவிடும்.   இந்தத் தளத்தில் கோட்பாட்டு உரையாடலைத் தவிர்க்க முனையும் இலக்கியச் செயல்பாடு அரசியல் நீக்கத்திற்கான உத்தி என்பதையும், இலக்கியச் செயல்பாட்டை  அரசியல் பங்காற்றாத ஒன்றாக ஒதுக்க முனையும்  கோட்பாட்டுச் செயல்பாடு  மாற்று அரசியலை ஏற்காத அதிகார அரசியலின் வன்முறை என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.  இலக்கியம், கோட்பாடு இரண்டுமே அறிவுருவாக்க அரசியலின் இருபெரும் களங்கள் என்ற புரிதலுடன் அமைந்த ஒரு உரையாடலுக்கான தொடக்கமாக வைக்கப்படுகிறது இந்த கட்டுரை.

 1.

இலக்கியம் என்பது அறிவுத்துறைகளில் ஒன்று, அறிவுத்துறைகள் அனைத்துடனும் தொடர்ந்து ஊடாட்டம் நிகழ்த்தும் ஒன்று. அறிவுருவாக்கச் செயல்பாட்டிற்கு முன்கட்டச் செயல்பாடான அழகியலை அடிப்படையாகக் கொண்டிருப்பதால் இலக்கியம் ஒரு சமூகத்தின் நடத்தையியலுடன் நெருங்கிய தொடர்புடையது. அழகியல் கூறுகளை அடிப்படையாகக் கொண்டே ஒரு சமூகத்தின் அறவியல் வடிவமைக்கப்படுகிறது. ஒரு சமூகத்தின் அறவியல் நெறிகள் அனைத்தும் இணைந்து அச்சமூகத்தின் அரசியல் கோட்பாட்டினை வடிவமைக்கின்றன. அழகியல், அறவியல், அரசியல் என்னும் தொடர் இணைப்பில் நிகழும் இயைபுகள்-முரண்கள், இடைவெளிகள்-சிக்கல்கள் என்பவையே சமூகவாழ்வின் மொத்தமான இருப்பையும் இயக்கத்தையும் வடிவமைத்துத் தருபவை. தனிமனிதர் என்னும் நிலையைச் சமூகமனிதராக வடிவமைப்பதில் மொழிக்கு உள்ள பங்கு விரிவான தளத்தில் இலக்கியத்திற்கும் உண்டு. அவ்வகையில் சமயத்திற்கும் இலக்கியத்திற்குமான உறவு நெருக்கமானது, இரண்டும் மனித இருப்பைப் பொருள்படுத்தும் மிக நுட்பமான செயலைக் கையாள்பவை. இவை இரண்டும் அவ்வகையில் கோட்பாட்டு உருவாக்கத்தின் இணை அமைப்புகளாகச் செயல்படுகின்றவை, இன்பம்-துன்பம் என்னும் உளவியல் இருமைகளைப் பிற புலன் உணர்வுகளுடன் உறவுபடுத்தி வாழ்தல் என்னும் செயல்பாட்டில் நன்மை-தீமை, ஏற்கக்கூடியன-ஏற்கக்கூடாதன எனும் மதிப்பீட்டு அறிதலை இவை உருவாக்கித் தருகின்றன. மனித வாழ்வின் பொருள் மற்றும் இலக்கு என்பவற்றை வரையறுத்தல், விளக்குதல் என்னும் இருவகைச் செயல்பாட்டிலும் கலை இலக்கியம், சமயம் என்னும் இணைப்பு கூடுதல் நெருக்கம் உடையது. அழகுணர்வு மற்றும் இன்புறுதல் என்னும் கூறுகளைக் கையாள்வதன் மூலம் மனித உளவியலை இயக்கும் ஆற்றல் இவற்றிற்கு அமைந்துவிடுகிறது. இந்த உளவியல் தளத்தில் இலக்கியம் நிகழ்த்தும் செயல்களில் முதன்மையானது கோட்பாட்டு உருவாக்கம். கோட்பாட்டு உருவாக்கம் இல்லாத இலக்கியப் படைப்பு என்பது இருக்க இயலும் என்றால் அது கோட்பாடுகளை மறுக்கும் இலக்கியமாகி மேலதிக கோட்பாட்டுச் சொல்லாடலாகவே அமையும். கோட்பாடுகளின் முன் அறிதலுடன் தொடங்கி அவற்றில் நிகழும் சிக்கல்கள், சிடுக்குகள் குறித்து விவாதித்து பின் ஒரு கோட்பாட்டாக்கத்துடன் முடியும் இலக்கிய ஆக்கம் எப்போதும் அரசியல் செயல்பாடுகளில் ஒன்றாகவே இருந்து வருகிறது.

வரிமொழி மரபுகளில் மற்றுமின்றி வாய்மொழி மரபிலும் இந்த நிகழ்வு எப்போதும் உள்ள ஒன்று. வாழ்வின் ஒவ்வொரு தளத்திலும் வாய்மொழி மரபு கற்பித்துக்கொண்டே இருக்கிறது, ஒவ்வொரு சூழலிலும் அது தன் கதையைக் கூறிக்கொண்டே இருக்கிறது. அது தொடர்ந்து தனிமனிதரை சமூக மனிதராக, மரபு இயைந்த மனிதராக உருவாக்கிக்கொண்டே இருக்கிறது. இந்தியத் துணைக்கண்டத்தின் பெருங்கதைகளான மகாபாரதம், ராமாயணம் என்னும் இரு மரபுகளும் ஒரே சமயத்தில் வாய்மொழி மரபுகளிலும் காவிய மரபுகளிலும் தொடர்ந்து வருவதற்கு அவற்றின் கோட்பாட்டுக் கட்டமைப்புகளே அடிப்படையாக அமைந்துள்ளன. இக்கதைப்பரப்பிற்கு வெளியே உள்ள சமூகங்களும் கூட இக்கதைகளைத் கூறித் தொடர்வதற்கு அவை தமக்குள் கொண்டுள்ள கோட்பாட்டு உறவுகளே அடிப்படையாக அமைந்துள்ளன. தனது சமூக-அரசியல் கோட்பாட்டுத் தொகுதிக்குள் பொருந்தாத எந்த கதைக்கூறலையும் ஒரு சமூகம் தனது மரபுக்குள் அனுமதிப்பதில்லை, மற்றொரு வகையில் அப்படியொன்று உருவாகும் சாத்தியம் ஒற்றைத் தன்மையான சமூக அமைப்பில் ஏற்படுவதும் இல்லை. ‘மரபுநிலை திரிதல் செய்யுட்கு இல்லை, மரபுநிலை திரியின் பிறிது பிறிது ஆகும்’ என்பது தொல்காப்பிய கோட்பாடு. ஆனால் பன்மையான, கூட்டிணைப்பான சமூக அமைப்புகளில் கதைகளும் எதிர்க்கதைகளும் உருவாகியபடி இருக்கும். அக்கதைகளுக்கிடையிலான முரண்களும் மோதல்களும் கோட்பாட்டாக்கம் பெறும்பொழுது பல்வேறு இணைமரபுகள் தோன்றி வளர்ந்து ஒன்றுடன் ஒன்று மோதியும் உரையாடியும் தம்மைத் தகவமைத்துக்கொள்ளும் போராட்டத்தில் ஈடுபடும். தமிழின் இலக்கியவரலாறும் அதன் பன்மைப்பொருளில் இவ்வகையான கோட்பாட்டுப் போராட்டங்கள், மோதல்களின் வரலாறாக அமைந்து ஒரு கட்டத்தில் தமிழ் என்னும் ஒற்றை அடையாளத்தின் வழியே பொதுமரபாக மறுவடிவம் பெற்றுள்ளது. இப்பொதுமரபு இதற்கு முன்பு தனித்தும், விலகியும், முரண்பட்டும், மறுத்தும் இயங்கிவந்த பல்வேறு மரபுகளுக்கிடையில் ஏற்பட்ட ஒரு கோட்பாட்டு இணக்கத்தின் அடிப்படையில் கட்டப்பட்ட ஒன்று.

நாம் இப்போது அறிந்து பயின்று வரும் தமிழ்மொழி, தமிழ் மரபு, தமிழ் வரலாறு என்னும் அனைத்தும் மொழித்தேசம் மற்றும் மொழியினம் என்ற கோட்பாடுகளினால் கட்டப்பட்டவை. தமிழ் என்பதே அவ்வகையில் ஒரு பண்பாட்டு அடையாளமாகவும் அதன் தொடர்ச்சியாக ஒரு கோட்பாடாகவும் இருந்து நம்மை இயக்கிக்கொண்டிருக்கிறது. இதனைத் தமிழின் நவீன வடிவம் என்று நாம் புரிந்துகொள்ளும் போதுதான் தமிழ் எழுத்து மற்றும் தமிழ் இலக்கியம் என்பதன் கோட்பாட்டு அரசியலையும் நாம் புரிந்துகொள்ள இயலும். இல்லையெனில் நமது இன்றைய எழுத்து மற்றும் இலக்கியச் செயல்பாடுகளை மாறுதல் அடையாத ஒரு நெடிய மரபின் மீட்டுருவாக்கம் என்று பொருள்படுத்திக்கொண்டு எந்தவித புத்துருவாக்கத்தையும் மறுத்தும் எதிர்த்தும் செயல்படுகிறவர்களாகி கோட்பாட்டு வெறுமை கொண்டவர்களாகத் தேங்கி நலிந்துபோக நேரும். நாம் நம்மைப் புதிதாக வரையறுத்தும் பொருள்படுத்தியுமே ஒரு நவீன வடிவத்தை அடைந்திருக்கிறோம். இது ஒரு புத்துருவாக்கம், இது உலகின் எல்லாச் சமூகங்களுக்கும் நேர்ந்திருக்கிறது. நம் சமூகம் இதுவரை இதுபோன்ற ஒரு அரசியல்-பொருளாதார-சமூகக் கருத்துருவங்களுடன் வாழ்ந்திருக்கவில்லை என்பதே நமது நினைவில் இன்னும் ஒரு கோட்பாடாகப் பதிவாகவில்லை என்பதால்தான் நெடிய மாற்றம் அடையாத, நிலைத்த அடையாளம் ஒன்றை மையமாக வைத்து நமது அணுகுமுறைகளை, சமூக உளவியலைக் கட்டிக்கொண்டிருக்கிறோம். நமது சமூக இயங்கு தளம் அதன் பொருள் கட்டுமானம், அரசியல் அனைத்தும் வேறு ஒரு வடிவம் பெற்றுவிட்டது என்பது இன்னும் நமது பொது உளவியல்பில் பதிவாகவில்லை என்பதால்தான் மக்கள்மைய அரசியல் அறம் (Democratic Ethics) ஒரு பண்பாட்டு அடிப்படையாக நம்மிடையே உருவாவதில் சிக்கல் இருந்துகொண்டிருக்கிறது.

 2.

இந்தியச் சமூகவரலாற்றில் மறுசீரமைப்பு, புத்துருவாக்கம் என்பவை வலிமையான கோட்பாட்டு இடையீடுகளால் நிகழ்த்தப்பட்டவை. பௌத்த-சமண சீரமைப்பு மரபுகள் இந்தியச் சமூக-அரசியலின் அடிப்படைகளை மாற்றி அமைக்க முயற்சித்துப் பின் விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்டதன் விளைவுகளை நாம் ஒவ்வொரு காலகட்டத்திலும் வெவ்வேறுவிதமாக சந்தித்து வந்திருக்கிறோம். சமூகச் சமத்துவமின்மை, சாதி ஒடுக்குமுறை, தீண்டாமை வன்கொடுமை என்பவற்றின் நெடிய வரலாற்றில் மாற்று வழிமுறைகள் அழிக்கப்பட்டதன் அடையாளங்களாக இந்த விளிம்புநிலை மரபுகள் மீந்து நின்றன. மாற்றங்களை மறுக்கும் இந்தியச் சமூக அமைப்பில் காலனிய-நவீனத்துவம் ஏற்படுத்திய அடிப்படை உடைப்புகள் நம்மை மாற்றுகளையும் மறுசீரமைப்புகளையும் புத்துருவாக்கங்களையும் நோக்கித் தள்ளியபோதுதான் நாம் மீண்டும் கோட்பாட்டு கட்டமைப்புகளின் தேவையைப் புரிந்துகொள்ள நேர்ந்தது. காலனிய-நவீனத்துவம் இந்தியப் பெருமரபுகளின் வன்முறைகளை, இந்தியச் சமய மரபுகளின் மக்கள் மறுப்பு விதிமுறைகளை, இந்திய ஆட்சியதிகாரத்தின் ஒடுக்குமுறை வடிவங்களை கேள்விக்கு உட்படுத்திய பின்பே நாம் நம்மை மறுபரிசீலனைக்கு உட்படுத்திக்கொண்டோம். இன்றுள்ள வடிவத்தில் இந்தியச் சமயங்களும் கூடத் தமது புறக்கட்டமைப்புகளை மாற்றிக்கொள்ளவேண்டிய தேவை ஏற்பட்டது. காலனிய அரசியல் நம்மை தேசிய மயப்படுத்தியது, தேசம் என்பதை அடையாளம் காட்டியது, அதன் தொடர்ச்சியாகவே இந்திய மொழித்தேசியங்களும் உருவாக முடிந்தது. நவீன இயந்திரத்தொழில் நுட்பம் இந்திய வாழ்முறையின் அடிப்படைகளை மாற்றி அமைத்தது போல மேற்கின் எடுத்துரைப்பு முறையும் தகவல் பரப்பு முறையும் இந்தியக் கதையாடல் முறைகளை மாற்றியமைத்தன. தமிழின் நவீன உரைநடை என்பது வெறும் வாக்கிய அமைப்பில் ஏற்பட்ட மாற்றம் அல்ல, அது ஒரு கருத்தியல் மாற்றம், அடிப்படையில் ஒரு கோட்பாட்டு மாற்றம். உரையாடல் என்பது சமூகச் செயலின் ஒரு வடிவம் ஆனால் அது ஒரு இலக்கிய மொழியாக, இலக்கிய எடுத்துரைப்பு வடிவமாக மாற நமக்குப் பல நூற்றாண்டுகள் தேவைப்பட்டது. இந்த எடுத்துரைப்பு முறை, கதைகூறுமுறை ஒரேசமயத்தில் கோட்பாடுகளைப் புரிந்துகொள்வது, கோட்பாடுகளைத் தன்வயப்படுத்துவது, கோட்பாடுகளை உருவாக்குவது, கோட்பாடுகளைத் தேர்ந்தெடுப்பது, சில கோட்பாடுகளை மறைப்பது என்பவற்றை உள்ளடக்கும் ஒன்று.

3.

தமிழின் தொடக்ககால உரைநடைகள் கிறித்துவ இறைப்பணியாளர்களால் உருவாக்கப்பட்டது என்பது தமிழ்ச்சிந்தனையின் நவீன வடிவத்திற்குள் ஏற்பட்ட ஒரு உள்ளீடான முரண்பாட்டைத் தொடங்கி வைத்தது. அதாவது நவீன சொல்லாடல் மற்றும் எடுத்துரைப்பு முறை என்பது வெளியிலிருந்து பேசும் குரலாக தொடக்கம் பெற்றது. மற்றொருவராக இருந்து, மற்றொரு கோட்பாட்டின் வழியே தமிழ்ச்சமூகத்தைப் பார்த்தல், அதே சமயம் தமிழ்ச் சமூகத்தை மற்றொன்றாக மாற்றுவதற்காகப் பேசுதல், மற்றொரு அணுகுமுறையின் வழியே தமிழ்ச் சமூகத்தின் மீது விமர்சனம் வைத்தல் என மற்றொரு அறிவு மரபுக்கும் தமிழ் மரபுக்கும் இடையிலான ஊடாட்டக் களமாக தமிழின் முன் நவீன எழுத்துருவாக்கம் அமைந்திருந்தது. பௌத்த-சமண மரபுகளின் கோட்பாட்டுச் சொல்லாடல்கள் தொல்தமிழகத்தில் ஏற்படுத்திய அதேவகை அழுத்தத்தை இந்த முன்நவீன எடுத்துரைப்புகள் ஏற்படுத்தின. ஐரோப்பிய அறிவொளி மரபும், புரட்சிகளின் புதிய கோட்பாடுகளும் தமிழின் அறிதல் முறையில் அடிப்படைக் கேள்விகளை உருவாக்க முடிந்தது. கிறித்துவத்தின் நிறுவனம் சார்ந்த நடைமுறைகள் தமிழ் மரபின் சமூகச் சொல்லாடலின் போதாமைகளை புலப்படுத்திக் காட்டின. இந்த உலகமயமான பின்புலத்தில்தான் தமிழின் மறுவரையறுப்பு முயற்சிகள் தொடக்கம் கொள்கின்றன. தமிழின் பொது நினைவின் கூட்டுருவாக்கம் என்பது ‘உலகமயமான’ கோட்பாடுகளின் பின்புலத்தில் இவ்வகையாகப் புத்துருவாக்கம் பெறுகிறது.

தமிழின் தொடக்க கட்ட இலக்கிய, கோட்பாட்டுச் சொல்லாடல்கள் அனைத்தும் இருவகையான குரல்களின் இணைப்பு: ஒன்று தமிழாக இருந்து தமிழுடன் பேசும் குரல், மற்றது தமிழாக இருந்து உலக அறிவுடன் பேசும் குரல். உலக அறிவு என்பது காலனிய அறிவு தன்னைப் பொருத்திக்கொண்ட விரிந்த தளம், இங்கு உலகம் என்பது ஐரோப்பிய மையத்தன்மை உடைய ஒரு கருதுகோள். இதன் முன் நம்மை அடையாளப்படுத்திக்கொள்ள நாம் அதன் மொழியில் பேசவேண்டும் இல்லையெனில் நாம் மொழியும் அடையாளமும் அற்றவர்கள் என ஒப்புக்கொண்டு உருவற்றவர்களாக மாறவேண்டும். அவ்வகையாக உருவழிந்து போவதிலிருந்து நம்மைத் தடுத்துக்கொள்ளும் முயற்சிகள் எல்லா தளங்களிலும் நிகழ்ந்துள்ளன.

தமிழின் மொழிக்குடும்பத்தை அடையாளம் காணுதல், தமிழகத்தின் நிலவியல்-வடிவியல்களைப் பதிவுசெய்தல், தமிழக அரசுகளின் வரலாற்றை நேர்கோட்டுக் கால வரிசையில் எழுதுதல், தமிழகத்தின் சாதி-குல வரலாறுகளையும் வழக்காறுகளையும் தொகுத்தல், அதுவரை பொதுச்சமூகத்திற்குப் புலப்படாமல் மறைந்து கிடந்த தமிழ் நூல்களைப் பதிப்பித்தல், பழந்தமிழ் மொழியைத் தற்காலத் தமிழுக்குள் பதிவுசெய்தல் என அறிவுருவாக்க, ஆவண உருவாக்க செயல்பாடுகளாக  இவை விரிவடைந்துள்ளன. அத்துடன் தமிழின் வேறுபட்ட மரபுகளையும், பன்மையான வழக்காறுகளையும் உள்ளடக்கிய ஒரு பொது அடையாளத்தை உருவாக்கி அதற்குள் ஒரு செவ்வியல் மரபை மையப்படுத்துல் எனும் பண்பாட்டு அரசியல், அடையாள அரசியல் உருவாக்கம் என்னும் மிகுந்த முக்கியத்துவமுடைய செயல்பாடும் நிகழ்கிறது. இவை அனைத்திலும் ஒரு பிரதிமையத்தன்மை, பனுவல் மையத்தன்மை உள்ளுடி இருக்கிறது என்பதை இங்கு நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். 1835-க்குப் பிறகு இந்தியர்கள் அச்சுப்படிகளை, நூல்களை உருவாக்கும் உரிமை பெற்ற பிறகான நிகழ்வுகள் இவை, ஆனால் இவை அனைத்தையும் தொடங்கிவைத்தவர்கள் ஐரோப்பிய சமயப்பணியாளர்களும் கிழக்கிந்தியக் கம்பெனியின் நிபுணர்களும். அவர்களின் ஆவணங்களும் ஆய்வுகளும் தமிழக-இந்திய அறிவைத் தன்வயப்படுத்தி மேலாதிக்கத்தை விரிவுபடுத்துவதற்கான உத்தி. அதே ஆவணங்களும் ஆய்வுத் தரவுகளும் தமிழ் சார்ந்த அறிவுருவாக்கத்தின் அடிப்படைகளாக அமைகின்றன. இந்தத் தளமாற்றம் தமிழ் அறிவு என்பது ஒட்டுருவத் தன்மையை, கலப்புத்தன்மையை ஏற்று தனக்கான கோட்பாட்டுருவாக்கத்தை நிகழ்த்தியதன் தொடர்ச்சியாக நிகழ்ந்தது. இதற்குப் பின்னான தமிழ்ச்சொல்லாடல்களின் அனைத்துத் தளங்களிலும் தொடர்ச்சியாக கோட்பாட்டாக்கம் என்பது மையமான இடத்தைப் பெறுகிறது.

வாய்மொழி வடிவங்கள், நிகழ்த்துக் கலைகள், எழுத்து உருவாக்கங்கள் அனைத்திலும் ஒன்றுக்கு மேற்பட்ட கோட்பாடு சார்ந்த உரையாடல்கள் உள்ளடக்கப்பட்டன. கோபாலகிருஷ்ண பாரதியின் நந்தனார் சரித்திர கீர்த்தனை கிருத்தவம் ஏற்படுத்திய தீண்டாமை குறித்த கேள்வியைக் கையாள்வதன் மூலம் இந்து மதத்திற்குள் ஒரு கோட்பாட்டு இடையீட்டைச் செய்ய முயல்கிறது. இராமலிங்க அடிகள் உலகமயமான பின்னணியில் ‘சமரச சன்மார்க்கம’; என்பதை கோட்பாடாக்கம் செய்வதுடன் நிறுவனம் சார்ந்த முறையியல்களையும் உருவாக்குகிறார், அவருக்குப் பாடல், உரைநடை, பேச்சு அனைத்தும் தனது கருத்துருவாக்கச் செயல்பாட்டின் பகுதிகளாக அமைகின்றன. பாரதிக்கு நவீனத்துவம் என்பது சீர்திருத்தம் பெற்ற இந்து மதம், விடுதலை பெற்ற தாய்நாடு என்பவற்றுடன் இணைகிறது, அவரது பாடல்களும் எழுத்துக்களும் நவீனத்துவத்தைத் தன்வயப்படுத்தும் முயற்சிகளாகின்றன. அயோத்திதாசப் பண்டிதர், பெரியார் ஈ.வெ.ரா இருவரும் தமிழ் அரசியல், தமிழ் அறிவு, தமிழ் அடையாளம் என்பவற்றின் அடிப்படைகளையே கேள்விக்குட்படுத்தியதன் மூலம் புதிய கோட்பாட்டு, கருத்துருவ அமைப்பை உருவாக்குகின்றனர்.

தேசியம், தேச உருவாக்கம் என்பவை மறுசீரமைக்கப்பட்ட இந்து அடையாளத்துடன் தமிழின் ஒரு முக்கியச் சொல்லாடலாகிறது, திராவிட அரசியல் சொல்லாடல் என்பது பகுத்தறிவின் அடிப்படையிலான சமூகநீதியின் உருவகமாகிறது. இடதுசாரி சிந்தனைகள் உலக அளவிலான விடுதலையின் குறியீடாகத் தமிழ் வெகுசன உளவியலில் பதிவாகிவிட்டதுடன் இலக்கிய, கோட்பாட்டுச் சொல்லாடலின் புலப்படாத உள்ளடக்கமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. தமிழின் வெகுமக்கள் அரசியல் பேச்சுச்செயலின் பிரிக்கமுடியாத பகுதியாக ஒரு தொன்மத்தின் தன்மையுடன் இடதுசாரி கருத்தியலின் தொடர்கள் பதிந்துபோய் உள்ளன. இவற்றைக் கடந்து புரட்சித்தலைவர்களின் தொன்மங்களும், துயர்த்தீர்க்கும் அன்னை படிமங்களும், தமிழினத் தலைவர்களின் பொற்காலக் கனவுகளும் எனத்தொடரும் நீண்ட அரசியல் மொழிப்பெருக்கத்தில் நவீன தமிழ் எழுத்து எந்த கோட்பாடுகளின் அடிப்படையில் தன்னைத் தொடர்கிறது, எந்தக் கோட்பாடுகளை எழுத்தாக்குகிறது, தன்னைத்தான் எவ்வகையில் கோட்பாட்டாக்கம் செய்கிறது என்பது வெறும் எழுத்து குறித்தான கேள்வி மட்டுமல்ல. இன்று நிகழ்ந்துள்ள இரண்டாம் கட்ட உலகமயமாதலுக்குப்பின், சர்வதேச மூலதன ஏகாதிபத்திய உருவாக்கத்தின் பின், உயர்தொழில்நுட்ப சர்வாதிகாரத்திற்குப் பின் இந்தக்கேள்விகள் இனி நாம் வாழ்வதற்கான கனவுகள் குறித்தானவை, நம்மை அரசியல் உயிரிகளாக வைத்துக்கொள்வதற்கான நம்பிக்கைகள் தொடர்பானவை.

 4.

தமிழில் கோட்பாடுசார்ந்த எழுத்துக்கள், எழுத்து சார்ந்த கோட்பாடுகள் என்ற இரண்டு தளங்களிலும் நாம் கடுமையான சிக்கலை அடைந்திருக்கிறோம். ஏனெனில் இதுவரை நாம் வைத்திருந்த நம்பிக்கைகள், நமக்குக் கிடைத்து வந்த தரவுகள் அனைத்தும் அடிப்படையில் நம்மைக் கைவிட்டிருக்கின்றன. தமிழ்ச் சமூகத்தைப் புரிந்து கொள்வதற்கு நாம் இதுவரை கையாண்டு வந்த அறிதல்கருவிகள் போதுமானதாக இல்லாததுடன் நமக்கு மிகக்கேடான புரிதல்களையும் அவை அளித்து வந்திருக்கின்றன. தமிழ் என்னும் ஒற்றை அடையாளத்திற்குள் ஒரு பண்பாட்டு மையம் இருப்பதாக நாம் நம்பி வந்ததை சாதியின் இன்றைய இறுக்கம் குறித்த புரிதல் உடைத்துப் போடுகிறது. தமிழில் ஒரு நவீனத்துவ- பகுத்தறிவு மரபு உருவாகி வந்ததாக நாம் நம்பிவந்ததை இந்துமைய சடங்குப் பெருக்கம் பொய்யாக்கிவிடுகிறது. தமிழ்ச் சமூகத்திற்கு இயற்கை சார்ந்த வாழ்வியல் பழகிய ஒன்று என்ற நம்பிக்கையை இயற்கை நாசத்தைச் சிறிதும் பொறுப்பற்று பெருமையுடன் செய்து கொண்டிருப்பதுடன் அணுவுலைகளை மனிதகுலத்தைக் காக்க வந்த மாமருந்து என்று நாம் கொண்டாடிக்கொண்டிருப்பது மொத்தமாக அழித்துவிடுகிறது. தமிழில் தொடர்ச்சியான ஒரு அரசியல் சொல்லாடல் இருந்து வருவதாகச் சொல்லப்பட்டு வந்தது வெறும் ஆளும் கட்சி, எதிர்க் கட்சி மற்றும் துணைக் கட்சிகளின் படைபல அணிவகுப்பு என்பதன் மூலம் பொய்யாக்கப்பட்டுவிட்டது. தமிழின் இன-மொழி-பண்பாட்டு அடையாள அரசியல் பற்றிய கட்டுக் கதைகளை இலங்கை மண்ணில் தமிழினப் படுகொலை நிகழ்ந்து கொண்டிருந்தபோது தமிழ்கூறும் நல்லுலகெங்கும் தடையின்றி நடந்துகொண்டிருந்த தேர்தல் கள நாடகப் பேச்சுகள் எரித்து இல்லாமலாக்கிவிட்டன. இன-மொழி-அடையாளம் சார்ந்த விடுதலை மற்றும் தன்னுரிமைப் போராட்டங்கள் என்பது பின் நவினத்தவத்துவத் தளத்தில் பொருளற்றவை என்பது போன்ற பேச்சுகள் ஒருபுறம் பரப்பப்படுகின்றன.

அப்படியெனில் தமிழில் அரசியலாக்கம் எங்கு தொடங்கி எங்கு முடிகிறது என்பதைப்பற்றிய கேள்விகள் மீண்டும் வேறொரு தளத்திலிருந்து தொடங்கப்பட வேண்டிய தேவை இருக்கிறது. தமிழின் அறிவுத்துறையும், எழுத்தும் பெருங்கதையாடல்களின் வழிபாட்டு மன்றங்களாகிவிட்டதால் இவை அரசியல் நீக்கத்தை உறுத்தலின்றிச் செய்து வருகின்றன. இந்தியா போன்ற பன்மை மரபும் பழமை மரபும் இறுக்கம் பெற்ற நாட்டில் அரசியல் நீக்கப்பட்ட தனிமனிதர்களும், சமூகக்குழுக்களும் மக்கள்மைய அரசியலின் அடிப்படை அறங்களை அழிக்கும் புராதன வன்முறையின் கருவிகளாகிவிடுவதைத் தவிர வேறுவழி இல்லை. இந்திய அரசியல் அமைப்பும் நவீன மனிதஉரிமை கோட்பாடுகளும் இந்தியாவின் பண்பாட்டில் படியாமல் விலகி இருப்பதற்கான காரணம் இங்கு கவிந்திருக்கும் அரசியல் நீக்கம் செய்யப்பட்ட சமூக உளவியல். இந்த உளவியல் விடுதலைக் கோட்பாடுகளால் வழிநடத்கப்படும் நவீன ஜனநாயக அரசியல் உருவாக்கத்தை அழித்து அடிப்படைவாத வன்முறை ஆட்சி அதிகாரத்தையே உருவாக்கும். அப்படியெனில் அரசியலாக்கத்தை தொடர்ந்து செய்யும் கலை-இலக்கியங்கள் நமது இன்றைய தேவை.

இதுவரை இருந்த அரசியலாக்கம் மற்றும் கோட்பாட்டாக்க முறையில் என்ன கெடுதி நேர்ந்தது என்ற கேள்வி எழும். அவற்றின் பன்மை மறுக்கும் அறிதல் முறைகளே அவற்றின் அடிப்படைக் கெடுதிகள். உலக அளவிலான விடுதலைக் கருத்தியல்களில் ஒன்றை அறிவியல் பூர்வமாக முன்வைத்த பேரறிஞர் அம்பேத்கரின் சிந்தனைகள் தமிழின் பொதுச் சிந்தனைக் களத்தில் இன்றுவரை விளிம்புநிலையிலேயே வைக்கப்பட்டிருப்பதை இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம். தலித் அரசியல், தலித் கருத்தியல் குறித்த தமிழ் எழுத்தாளர்கள், அறிவுத்துறையினரின் இழிவான புறம்தள்ளும் பார்வை இவர்கள் எந்த நாளும் விடுதலை அரசியலுக்கு ஆதரவானவர்கள் இல்லை என்பதற்கான அடையாளம். தலித் இலக்கியம் ஏதோ தலித்துகள் எழுதி தலித்துகள் படித்துக்கொள்ளவேண்டியது என்பது போலவும் அவை தமிழ் இலக்கியத்திலோ, சிந்தனைத் தளத்திலோ சேரமுடியாதவை என்பது போலவுமான ஒரு போக்கை தமிழ்ப் பொதுக்களம் பழகி வைத்திருப்பது இதன் அறிவு மறுப்புக்கு மற்றொரு உதாரணம்.

தமிழில் பெண்ணியச் சொல்லாடலும், பெண்ணிய கோட்பாடுகளும் எதிர்கொள்ளப்படும் முறையை வைத்தே தமிழ்ச்சிந்தனை நவீன தன்மையை அடையவில்லை, அது மனித உரிமைகளை மறுக்கும், அறிவியல் பார்வையற்ற நிலையில்தான் இன்னும் இருக்கிறது, அதிலேயே அது பெருமை கொள்கிறது என்பது புலப்பட்டுவிடும். பெரியார் தமிழில் இடஒதுக்கீட்டு அரசியல் தவிர மற்றவற்றில் வெளியேற்றப்பட்ட ஒரு சிந்தனையாளர் என்பது புரியவரும். ஒரு மரபுச் சமூகம் பொதுப்புத்தியில் பெண்ணிய மறுப்பு, பெண் சமத்துவ எதிர்ப்பைக் கொண்டிருந்தால் அதற்கான போராட்ட முறை வேறு. இங்கு நவீன சிந்தனை, நவீன இலக்கியம் என்ற தளத்தில் அவை நியாயப்படுத்தப்படுவதன் ஒரே பின்னணி இதுவரை இந்தத் தளங்கள் நவீனப்படவில்லை, விடுதலைக் கருத்தியல்களை ஏற்கவில்லை இவற்றின் அறிவார்த்தம் என்பது வெறும் நடிப்பு என்பதுதான். பெண்ணியம் மற்றும் பெண் சமத்துவம் என்பதை ஒவ்வொரு இழையிலும் அவமானப்படுத்தும் தமிழின் காட்சி ஊடகங்கள் மற்றும் திரைத்துறை என்னும் அறிவுமறுப்பு, விடுதலை மறுப்பு நிறுவனங்களுக்கு இவர்கள் அளித்துவரும் திறன் சார்ந்த பங்களிப்புகள் குறித்து இவர்களுக்கு எந்த அவமான உணர்வும் ஏற்படுவதில்லை, மாறாக அதுவே இவர்களின் வீடுபேறாக இருக்கிறது. ஆனால் இவர்களே சமூக அறம், நுண்ணுணர்வுகள் என்று பேசித்திரியும்போது தமிழின் மாற்றுச் சிந்தனைகளுக்கான இடத்தையும் அழித்துவிடுகிறார்கள்.

தமிழில் விளிப்புநிலைச் சமூகங்கள், விளிம்புநிலை அரசியல் குறித்த கனத்த அமைதி பாதுகாக்கப்படுகிறது. தற்போது தமிழில் பதிவாகும் சிறுமரபுகள் குறித்த கதையாடல்கள் புதிய ஒரு தளத்தை அடைந்துள்ளன. இவை இதுவரையிலான கோட்பாட்டாக்கங்களின் போதமையை உணர்த்துகின்றன. இனக்குழு வாழ்க்கைக் கதைகள், இனவரைவியல் கதைகள் அடிப்படையில் மாற்று அரசியலின் கோட்பாடு மற்றும் செயல்பாடுகளின் தொடக்கமாக அமைகின்றவை. தமிழில் இவ்வகை எழுத்துக்கள் ஒரே தளத்தில் படைப்பிலக்கிலக்கியங்களாகவும் கோட்பாட்டு உருவாக்கமாகவும் பதிவாகத் தொடங்கியுள்ளன. சூழலியல் அரசியல் தமிழின் அதிக விளிம்பு நிலைப்படுத்தபட்ட ஒன்று. இது இலக்கியச் சொல்லாடலிலும், கோட்பாட்டுச் சொல்லாடலிலும் மறதிக்குட்பட்டதாகத் தொடர்கிறது. அழகை நேசித்தல் என்னும் ஒரு உணர்வுத் தளத்தில் தமிழில் அதிகம் பேசப்படும் இயற்கை அடிப்படை உலக அரசியலில் ஒன்றாகும்போது மறதிக்குட்பட்டதாக மாறிவிடுகிறது. தமிழில் எண்பதுகளில் தொடங்கப்பட்ட மார்க்சியத்திற்கான நெருக்கடிகள் குறித்த விவாதங்கள் தொடங்கி, பெரியாரியச் சிந்தனைகளை தற்காலப்படுத்துவது, அம்பேத்கரியத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தியச் சமூகத்தைப் புரிந்துகொள்வது, பெண்ணியக் கேள்விகளின் வழி அனைத்து அறிவுத்தளங்களையும் மறுஆக்கம் செய்வது, தலித் அரசியலை ஜனநாயக அரசியலின் முன் நிபந்தனையாக ஏற்பது, இவற்றுடன் நுண்ணரசியல், உடலரசியல், அடையாள அரசியல் என்பவற்றையும் உள்ளடக்கிய பொதுக்களம் உருவாக்கப்படும் போதுதான் விடுதலைக் கருத்தியல்கள் சார்ந்த, ஆதிக்கத்தை மறுக்கும் பன்மை அரசியல் சொல்லாடல்கள் தமிழில் உருவாக முடியும்.

இவை அனைத்தையும் ஒன்றாகத் தரும் எந்த ஒரு தனித்த கோட்பாட்டுத் தொகுதியும் தற்போது இல்லை என்பதால் இவை கலப்புத் தன்மை-இணைப்புத் தன்மை கொண்டதாகவே இருக்கும். இந்த கலப்பு நிலையை, இணைப்பு நிலையை, ஒற்றைத் தன்மை அற்ற நிலையைத் தொடர்ந்து நினைவில் பதிவு செய்யவும் பெருங்கதையாடல்களால் மறைக்கப்படுகிறவைகளைத் தொடர்ந்து புலப்படுத்தவுமான தமிழின் எழுத்துக்கள் கோட்பாட்டு அடிப்படைகளுடன்தான் அமையும், இந்த எழுத்துக்களைப் புரிந்து கொள்ளவும் கோட்பாடுகள் வேண்டும்.

 5.

 கோட்பாட்டாக்கம் என்பது ஒரு அரசியல் செயல் என்பதால் கோட்பாட்டு நீக்கம் என்பது அரசியல் மறுப்புச் செயலாகிறது. ஒரு கோட்பாடு தன்னை காலத்திற்கும் நிகழும் சூழலுக்கும் ஏற்ப புதுப்பித்துக்கொள்ளாதபோது அது நம்பிக்கை என்ற நிலையை அடைந்து பின் தொன்ம வடிவம் பெற்று இறுகி அடிமைகொள்ளும் கட்டளைகளில் ஒன்றாக மாறிவிடும். இந்தச் சடங்கு நிலைக்கு மாற்றாக கோட்பாடுகளைப் புதுப்பித்தலையும் அவற்றை இயங்கும் நிலையில் வைப்பதையும் நாம் தொடர்ந்து செய்துகொண்டிருக்கவேண்டும். கோட்பாட்டுச் செயல் என்றவுடன் ஏதாவது ஒரு கருத்தாக்கத்தை மையப்படுத்தி அதுவே அனைத்தையும் உள்ளடக்கிவிட்டதாக நிறுவுவது கோட்பாட்டுக் கொடுங்கோன்மையின் அடிப்படை. இந்த வகை மையப்பட்ட கோட்பாடுகள் தமது கோட்பாட்டு நிலையை இழந்து ஆதிக்கக் கருத்தியல்களாகவும் அதிகாரப் பெருங்கதையாடல்களாகவும் மாறிவிடும். தமிழ்-திராவிட அடையாள அரசியல் என்றால் அதுவே அனைத்தையும் உள்ளடக்கிவிட்டதாகவும் அதற்குள் தலித் அடையாளம், பெண்ணிய அடையாளம், விளிம்புநிலை மக்கள் மற்றும் இனக்குழு அடையாளங்கள், பாலரசியல் அடையாளங்கள் என எதுவும் தனித்தனியே இருக்கமுடியாது என்பது உண்மையில் தன்னடையாளங்களின் அரசியல் இருப்பை அழிப்பதாகவே இருக்கும். இடதுசாரி சிந்தனைத் தளத்திலும் இதேபோல் பாலரசியல், சூழலியல் அரசியல், பண்பாட்டு-அடையாள அரசியல், மண்ணுரிமை அரசியல், தன்னாட்சி அரசியல், இனவிடுதலை அரசியல் என எல்லாம் அடங்கிவிட்டதாக உரிமை கோருவது அவற்றை மௌனத்தில் புதைத்து உருவழிக்கும் அழித்தொழிப்பு உத்தியாகவே இருக்கும். அப்படியெனில் வேறுபட்ட அடையாளங்களை மொழிப்படுத்துவதும் அந்த அடையாளங்கள் தம்மை கோட்பாட்டாக்கம் செய்யும்பொழுது அவற்றை பதிவுசெய்வதும் இன்றைய எழுத்துக்களின் முதல்கட்டச் செயல்பாடாக அமைகிறது.

உலக மேலாதிக்க அரசியலின் வெளிப்படையான நடவடிக்கைகள் ஒருபுறம், சர்வதேச மூலதன ஆதிக்கத்தின் சதிவலைப்பின்னல்கள் ஒருபுறம் என மக்கள் அழிப்புச் செயல்கள் விரிவடைந்துகொண்டிருக்கும் நம் காலகட்டத்தின் எழுத்துக்கள் அவற்றின் கோட்பாட்டு உருவாக்க பங்களிப்பைக் கொண்டே தம்மை நியாயப்படுத்திக்கொள்கின்றன. தமிழின் இதுவரையான தனித்தனியான கோட்பாடு சார்ந்த எழுத்துக்கள் தமது இட-செயல் எல்லைகளைப் புரிந்து ஏற்று தனித்து மாறுபடும் கோட்பாட்டுச் சொல்லாடல்களுடன் தம்மை இணை-இருப்பாக்கிக்கொள்ளும் பொழுதே நம்காலத்திற்கான உலகமயச்சூழலில் பொருந்திய தமிழ் வாழ்வுக்கான கோட்பாட்டுத் தளங்கள் உருவாகமுடியும்.

 ——————————————–

குறிப்பு:

1. இக்கட்டுரையில் கோட்பாடு என்ற சொல் concept, ideology, doctrine, theory என்னும் சொற்களுக்கு நெருக்கமாக ஒரு வசதி கருதி பயன்படுத்தப்பட்டுள்ளது அதற்கான அரசியல் பொருளில். Conceptualizing- Deconceptualizing, Politicization-Depoliticization என்ற கருதுகோள்கள் கோட்பாட்டாக்கம்-கோட்பாட்டுநீக்கம், அரசியலாக்கம்-அரசியல் நீக்கம் எனக் கையாளப்பட்டுள்ளன.

 2. அரசியலாக்கம், அரசியல்நீக்கம் என்னும் கருத்தாக்கங்களை விளக்க பின்வரும் மேற்கோள் பயன்படலாம்:

Politics proper thus always involves a kind of short circuit between the universal and the particular; it involves the paradox of a singular that appears as a stand-in for the universal, destabilizing the “natural” functional order of relations in the social body.

The political struggle proper is therefore never simply a rational debate between multiple interests but, simultaneously, the struggle for one’s voice to be heard and recognized as that of a legitimate partner.

In this precise sense, politics and democracy are synonymous: the basic aim of antidemocratic politics always and by definition is and was de-politicization, that is, the unconditional demand that things should return to normal, with each individual doing his or her particular job.

[Slavoj Žižek , A Leftist Plea for “Eurocentrism”. Critical Inquiry, Vol. 24, No. 4 (Summer, 1998)  The University of Chicago Press]